விநீதனுக்கும் ஜான்வியின் மனம் புரிந்துதான் இருந்தது. ஆனால் ,அவளாக சொல்லவேண்டும். துருவிக்கேட்டாலும் சொல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்?என்று அவளை தன் பார்வை வட்டத்துக்குள் நிறுத்தி பார்த்துக்கொண்டான். அவனால் இப்போதைக்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அதேசமயம் அவனது பெற்றோருக்கும் அவன் பதில் சொல்லியாக வேண்டும்.
இன்னமும் ஜான்வியுடன் தொடர்பில் இருப்பது அவனது வீட்டில் யாருக்கும் தெரியாது. ஏற்கனவே அவளுடன் சேர்ந்து இருந்த பொழுதே அவனது வீட்டில் பெரிய பிரச்சனை ஆகிப்போனது. அவன் அம்மா அழுது தீர்த்துவிட்டார். அதற்குப் பிறகும் அவனால் ஜான்வியை விட முடியாமல் தவித்தவன், தங்கள் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான்.
ஆணும்-பெண்ணுமாக ஒருவருக்கொருவர் ஈர்ப்புடன் வாழ்வதுதான் கல்யாண உறவை உயிருடன் வைத்திருக்கும் என்று அவன் தீர்மானமாக நம்புகிறான். அந்த ஈர்ப்பு அவனுடன் இருக்கும் பெண் மீது மட்டும் இருக்கிறது என்பதை அவனும் உணர்ந்து கொண்டானே!பிறகு எப்படி அவனது மனம் கவர்ந்தவளை தனியே விட முடியும்?
எப்படியாவது ஜான்விக்கும் சாகேத்துக்குமான உறவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு பெண்ணை சீக்கிரம் கரம் பிடிக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக்கொண்டான். ஜான்வி வீட்டிலிருந்து மட்டும் இல்லை,அவனது வீட்டிலிருந்தும் சம்மதம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை அவன் அறிவான்.
லிவ் -இன் உறவில் இருந்த பெண்,பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஒரு வாழ்க்கையை ஏறத்தாழ இரண்டு வருஷங்களுக்கும் மேலாக வாழ்ந்தவள். மீண்டும் ஏற்கனவே காதலித்தவுடன் ஒரு வாழ்க்கை,அவனுடன் திருமணம்.இதை எப்படி சொன்னாலும் சரியாக இருக்காது. கேட்பவர்கள் அருவருப்பில் முகம் கூட சுளிக்கக் கூடும்.ஆனால், காதல்? அதைப்பற்றி யோசிப்பவர்கள் யாருண்டு?என்று யோசித்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. இந்த திருமணம் முடிந்த பிறகு எத்தனை பேருக்கு பதில் சொல்லியாக வேண்டும்?
சமூகத்தை ,அதன் பழக்க வழக்கங்களை மாற்றுவது அவ்வளவு சுலபம் கிடையாது.அவனும் ஜான்வியும் திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருமாக நிறைய எதிர்கொண்டாக வேண்டும்.அதற்க்கு அதீத மனோ திடம் வேண்டும். இருவரும் ஒன்றாக,ஒற்றுமையாக இருந்தாலொழிய இந்த நிலைமையை கடந்து வரமுடியாது என்று கண்மூடி யோசித்துக் கொண்டிருந்தான் விநீதன்.
இந்த நிலைமையில் யாரைக் குறை சொல்ல முடியும் என்று தெரியவில்லை. கணவன் மனைவி உறவில் தாம்பத்திய உறவு என்பது வெறும் மனம் சார்ந்து மட்டும் வருவதில்லை. திருமணம் முடிந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பல வருஷங்கள் ஆகிறது. அதற்க்கு மேலும், ஓருயிர் ஈருடலாய் வாழ்பவர்கள் வெகு சிலர்தான்.
தம்பதிகளை முதலில் இணைப்பது உடல் சார்ந்த தேவை ,அதை ஏற்கும்,தீர்த்து வைக்கும் கலவி. அதில் திருப்தி அடைந்தவர்கள் வாழ்க்கை ஓரளவுக்கு சண்டை பூசல் இல்லாமல் சென்று விடும்.அதற்கு பிறகு குழந்தை,அதை சுற்றியொரு வாழ்க்கை. அதை இருவருமாக சேர்ந்து அனுபவிக்கும் சுகங்கள்,துக்கங்கள்.இப்படித்தானே இயல்பாக வாழ்க்கை செல்லும்?
திருமணத்திற்கு முன்னே ஜான்வியுடைய வாழ்க்கை முறை பற்றி எதுவும் கருத்து சொல்லும் பக்குவம் எனக்கு கிடையாது. ஆனால் , சாகேத், அவனுக்கு திருமகளைத் தவிர வேறு எந்த பெண்ணிடமும் ஈர்ப்பு வரவில்லை என்றால் ஏதேதோ கணக்குகளை போட்டு ஜான்வியை திருமணம் முடித்திருக்க கூடாது.இந்த கதைக்கு அவன் நாயகன் என்பதால் அவன் செய்யும் தவறுகளை சரி என்று சொல்லிவிட நான் தயாராக இல்லை. சாகேத் சரியாக இருந்திருந்தால் நிச்சயம் ஜான்வி வேறொரு பாதையை தெரிவு செய்திருப்பாளா?என்று எனது மனம் கேள்வி கேட்கிறது. இந்த நிகழ்வுகளை படிப்பவர்களுக்கும் இது போன்ற கேள்விகள் மனதில் எழலாம். என்னிடம் இதற்கு பதில் இல்லை.
சாகேத் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தான்.வீடே இருளில் மூழ்கி இருந்தது.வாசலில் ஒரு வாரத்தின் செய்தித் தாள்கள் குவிந்து இருக்க, பால் பையில் எடுக்கப் படாத நந்தினி பால் பாக்கெட்டுகள் . முதலில் இவற்றை கண்டவனுக்குள் மெல்லிய அதிர்ச்சி. ஜான்வி எங்கே போய் விட்டாள் என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தான். ஒரு வாரமாய் புழங்காத வீடு ஒரு மெல்லிய வாடை வீசியது. அவன் மனதில் ஜான்வி எங்கே போயிட்டாள் என்ற கேள்வி நண்டு போல் குடைந்தது. உள்ளே இருக்கும் எல் இடி லைட்டை ஆன் செய்தவன் உள்ளே பரவிய வெளிச்சத்தை ரசிக்க தவறவில்லை. புழுக்கத்தை உணர்ந்தவன் ஹாலில் உள்ள ஏசியை ஆன் செய்தான்.
சோஃபாவில் அமர்ந்தவனுக்கு சூடாக காபி குடிக்கும் எண்ணம் வரவே வாசலில் இருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.அன்றைய திகதியில் இருக்கும் பால் பாக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தான். அடுக்களை படுபயங்கரமாக காட்சியளிக்க எல்லாவற்றையும் சரி செய்து பால் காய்ச்ச பதினைந்து நிமிஷங்கள் கரைந்தது.
காபி கலந்து கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தவனுக்கு ,மனம் ஒன்றும் பதறவில்லை.தானும் ஊரில் இல்லாத சமயத்தில் தனியாக இருப்பதற்கு தோழிகள் யார் வீட்டிலாவது தங்க சென்றிருப்பாள் என்று சமாதானம் செய்துகொண்டு தனது அறைக்குள் சென்றான். குளித்து தயாராகி வந்தவனுக்கு மனமோ,”இன்னிக்கும் அவுட் சைடு புட் தான் “என்று முணுமுணுத்துக்கொண்டே அலுவலகம் கிளம்பினான்.
அலுவலகம் சென்ற பிறகு ஜான்விக்கு அழைத்து பேசவேண்டும். திரும்ப கிளம்பி வர சொல்ல வேண்டும் என்று யோசித்துக்கொண்டே கிளம்பியவனுக்கு யோசனையுடன் கிளம்பியதாலோ என்னவோ நிலைப்படியில் தலை இடித்து லேசாக இரத்தம் வந்தது.
காரில் இருக்கும் பஸ்ட் எய்ட் பாக்ஸில் மருந்து இருக்கும்,போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தவாறே கதவை பூட்டிக்கொண்டு வந்தவனுக்கு ஏனோ காலை உணவு சாப்பிட பிடிக்கவில்லை. அலுவலகம் சென்றவனுக்கு ஜான்விக்கு அழைக்க நேரம் கிடைக்கவில்லை.
மதிய உணவு இடைவெளியின் போது ஜான்விக்கு அழைத்துப்பார்க்க அவளது எண் நோட் ரீச்சபிள் என்று வந்தது. மாலை அலுவலகம் முடியும் நேரத்தில் ஜானவியே அவனுக்கு அழைத்தாள்.
“இரவு இருவரும் ஒன்றாக டின்னெர் சாப்பிடலாம்னு யோசிச்சேன் பத்ரீ .உன்னால வரமுடியுமா,இல்லே வேற ஏதாச்சும் வேலை இருக்கா?” என்று மெல்லிய குரலில் தயங்கியபடிக்கு கேட்ட ஜான்வி சாகேத்துக்கு புதியதாக தெரிந்தாள் .
ஆனாலும் பெரியதாக அவன் அலட்டிக்கொள்ளவில்லை. இன்று வருகிறாளா?அல்லது எப்போது வருகிறாள் என்று கேட்கவேண்டும்.ஒருவேளை இன்றே வருவதாக இருந்தால் என்னுடனே அழைத்துக்கொண்டு வந்து விடலாம் என்ற யோசனையில் இரவு அவள் அழைத்திருந்த நேரத்திற்கு சரியாக அந்த உணவகத்துக்குள் நுழைந்தவனுக்குள் ஏனோ ஒரு தயக்கம் வந்துவிட்டிருந்தது.
உள்ளே அவர் ரெசெர்வ் செய்து வைத்திருந்த டேபிளில் போய் அமர்ந்திருந்தவனுக்கு அவள் ஜான்வி எப்போது வருவாள் என்று இருக்க சுற்றி தனது பார்வையை சுழலவிட்டான். ஜானவி வருவதற்கு இன்னும் பத்து நிமிஷங்கள் அதிகமாக தாமதமானது. அவளுடன் விநீதன் வந்தான். ஜான்வியின் முகத்தில் மெல்லிய படபடப்பு. அவளால் தனது கணவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
எப்படி என்னவென்று சாகேத்திடம் பேசுவது என்ற தயக்கம் அவளுள். அவளால் வேகமாக நடக்க முடியாமல் அருகே உடன் வந்த வினீதனின் கைச்சாந்தை பிடித்துக்கொண்டாள். சாகேத் அருகே வந்த பிறகும் அவளால் வினீதனிடமிருந்து கைகளை அகற்ற முடியவில்லை. விழுந்து விடுவாள் போல் உணர்ந்தவள் அவனை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
விநீதனுக்கு அவளை புரிந்தது. அவளை அவனும் விடவில்லை. இருவரும் வரும் நிலைமையை பார்த்த சாகேத்துக்கு முதன்முறையாக ஏதோ ஏமாற்ற உணர்வு ஆக்கிரமிப்பு செய்துகொண்டது.ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தான் ஏதாவது தவறாக ஊகித்து நிலைமையை இன்னமும் சிக்கலாக்கிக்கொள்ள அவனுக்கு இஷ்டமில்லை.
அதனாலேயே வார்த்தைகளை வெளியே விடாமல் அமைதியாக இருந்தான்.அவன் முகத்தில் இறுக்கமோ ,தவிப்போ இல்லை.ஒட்டவைத்த புன்னகை முகமாகவே இருவரையும் வரவேற்றான். ஆனாலும் மனது கேட்காமல்,”ஜான்வி, டின்னெர் நம்ம ரெண்டு பேருக்குமான்னு நினைச்சேன். பட், இவரு .. ம்ஹும்..உன்னோட பாஸ் தானே? ” அவன் கேட்டது சாதாரமணமாக கேட்க்கும் கேள்விதான்.ஆனால் அவளிடம் இருக்கும் பதில்தான் சிக்கலானது.
விநீதன் சாகேத்திடம் வெறும் ஹாய் சொன்னதுடன் சரி.அதற்குப்பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் நுழைந்து பேச அவன் விரும்பவில்லை. இத்துடன் எல்லாவற்றையும் முடித்துவிடுவது சரி என்று சொன்னது அவன் உள்ளுணர்வு.
மூவருமாக எதுவும் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே இரவு உணவை முடித்துக்கொள்ள, ஜான்வி தயங்கியவாறே,”எனக்கு உன்னோட பேசணும் சாகெத்பத்ரி .உன்னோட பிளாட்டுக்கு போகலாமா? நான் இங்கேயே பேசலாம்னு முதல்லே நினச்சேன். இப்போ தோணுது.நம்ம விஷயத்தை அவுட் சைடுல வச்சு பேசமுடியாது. ஸோ நீ உன்னோட கார்ல பிளாட்டுக்கு போய்டு .நா விநீதனுடைய கார்ல வந்துடறேன்.”
ஜான்வி சொல்ல வருவது எதைப்பற்றி என்பதாக ஒரு ஊகத்தை மறைமுகமாக சாகேத்தின் மனதில் விதைத்துவிட்டாள் . தெரிந்தேதான்! வீட்டுக்குள் செல்வதற்குள் அவன் விஷயத்தை ஊகம் செய்துகொள்வதுடன் அதை ஜீரணிக்கவும் அவகாசம் நிச்சயம் தேவை எண்டு யோசித்தது பெண். எச் ஆரில் பெரிய பதவியில் இருப்பவனுக்கு அவளது மொழியா புரியாது போகும்?
“ம்ஹும்..தென் ஓகே. நா இப்போவே கிளம்பறேன். நீங்க ரெண்டு பேரும் பின்னால வாங்க. அண்ட் நீ என்னோட வீட்டுக்கு வருவேன்னு நினைச்சேன்.உன்னோட முடிவு வேறயா இருக்கு. இட்ஸ் ஓகேய். சீக்கிரம் வரப்பாரு “என்று அவளது முயற்சிகளைப் புரிந்துகொண்டவனாக பதில் சொன்னவன் வினீதனை அடிபட்ட பார்வை பார்த்து சென்றான்.
ஒரு ஆணாக சாகேத்தின் வலி விநீதனுக்கு புரியாமல் இல்லை.அதற்க்காக தம் வாழ்க்கை என்று வரும்பொழுது பிறரை யோசிப்பது எப்படி என்றது அவன் மனம். ஜான்வி கிளம்பாமல் அங்கேயே அமர்ந்துவிட்டாள் .அவளிடம் ஒரு கிளாஸ் நீரை எடுத்துக்கொடுத்தான் விநீதன். அவளால் சமநிலைக்கு மனதை கொண்டு வரமுடியவில்லை.கழிவிரக்கம் வேறு. கடைசியில் அவள் காதல் தோல்வியில் முடிந்தது என்று கண்ணீர் வந்தது. மனமோ,காதல் மட்டும் போதுமென்றால் எதற்கு இப்படி முடிவு செய்தாய் என்று அவளிடமே கேட்டது.அதற்கு அவளிடம் பதில் ஏது ?
தான் செய்வது சரியா ?தவறா? என்று இன்னமும் குழம்பிப் போனாள் . அருகில் அவள் முகத்தையே அவதானித்துக்கொண்டிருந்த விநீதன் தான்,”இன்னமும் நேரம் கடக்கல ஜானும்மா. நல்லா யோசி.உன்னோட மனசுல இருக்குறதையும்,நம்ம ரிலேஷன்ஷிப் பற்றியும் உன் கணவர்கிட்டே சொல்லு. அவருக்கு புரியும். நீ திரும்பவும் அவர்கிட்டேயே போகறதுன்னு முடிவு எடுத்தா எனக்கும் சம்மதம்தான்” வினீதனின் குரலில் இருந்த கரகரப்பு அவனது மனதை பெண்ணுக்கு அப்பட்டமாய் சொல்ல, அவன் மனதை காயப்படுத்துவதற்கு அவளுக்கு இஷ்டமில்லை.
“இல்லே விநீதன். என்னோட முடிவை இதுக்குமேல போஸ்ட்மார்ட்டம் செய்து பாக்க என்னால முடியாது. எஸ்.நா எடுக்குற முடிவு நிறைய சிக்கலைகளை உண்டுபண்ணும்.ஐ க்நொவ். எல்லாத்தையும் விட வாழ்க்கை பெருசு. அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க என்னால நிச்சயம் முடியாது”என்று தெளிவுடன் எழுந்து விட்டாள்.
ஜானவி என்ன சொல்லப் போகிறாள் என்று தெரியாவிட்டாலும்,சாகேத்துக்கு உடம்பு நடுங்கியது. ஏதோ ஒன்றை இழக்கப் போகிறேன் என்று அவன் மூளை அவனுக்கு எடுத்துச்சொல்ல பெரிய மனப் போராட்டத்துடன்தான் காரை ஓடிக்கொண்டுவந்தான். மனம் மரத்துப்போனதும் , மூளை மந்தித்துப்போனதும் ஒரே சமயத்தில் நிகழ,விளைவு காரை எப்படியோ கஷ்டப்பட்டுதான் ஒட்டிக்கொண்டு வந்தான்.பெங்களூரு டிராபிக் வேறு அவனை துவைத்துப் போட்டது.
வீட்டுக்கு செல்லும்பாதை மறந்து போனதாய் உணர்ந்தான். ஜி பி எஸில் வீட்டு முகவரியை தெரிவுசெய்து அது காட்டும் வழியில் வீட்டுக்கு அவன் வந்து சேரும்பொழுது இரவு மணி பதினொன்றை கடந்தது. வாசலில் ஜானவியும் விநீதனும் நின்றிருந்தார்கள்.