தன்னை இறுக்கமாக அனைத்திருந்தவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் “உண்மையிலே நான் தொடுறது உனக்கு வெறுப்பா இருக்கா திலோ” என்க.
‘என்ன கேட்க்கிறான்’ என்று புரியாமல் அவனை பார்த்திருந்தாள் அவள்.
“உன்ன பிடிக்கல நீ தொடுறது பிடிக்கலைனு அன்னைக்கு…” என்றவனை முடிக்கவிடாமல் அவன் இதழ்களில் தன் கரத்தை வைத்தவள் ‘இல்லை’ என்ற மறுப்போடு அவன் மார்பில் முகத்தை புதைத்தாள்.
“நான் என்ன பண்ணேன் என்ன பேசினேன் ஒண்ணுமே எனக்கு தெரியல, நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க… எவ்ளோ வலிக்குது தெரியுமா” என்றவள் வலியை அவனால் உணர முடிந்தது.
“எனக்குன்னு யார் இருக்கா? யாருமே இல்ல எனக்கு எல்லாமுமா நீங்க இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டேன், ஏன் என்கிட்டே அதை சொன்னீங்க” என்றவளுக்கு அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.
தன்னை நல்லவன் என்று கட்டிக்கொண்டு அவளை அவன் ஏமாற்றவில்லை, காதலிக்க சொல்லி பின்னே திரியவில்லை, திலோவிற்கு அவனை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது.
தங்கையை அவன் பார்த்துக்கொள்ளும் விதத்தை பார்த்து அந்த அன்பும் அரவணைப்பும் தனக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உருவான நேசமது, அவனை பற்றி அவளே வளர்த்துக்கொண்ட பிம்பம் இதில் அவனை குற்றம் சொல்ல இயலாதே.
“திலோ நான்…” என்றவன் ஏதோ கூற வர “வேண்டாம் ப்ளீஸ் எனக்கு எதுவும் தெரியவேண்டாம் அதை கேக்குற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல, நீங்க எனக்கானவர் அதுமட்டும்தான் உண்மை உங்க லைஃப்ல வேற யாரும் இல்லை” என்றவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “அப்படித்தானே” என்றாள் ஏக்கத்தோடு.
“ஆம்” என்று சொல்லிவிடு என்ற வேண்டுதல் அவள் விழிகளில்.
“ஆமாம்” என்றவன் அவளை தன்னுள் பொதிந்துகொண்டான்.
இருவருக்கும் இடையில் அதன்பிறகு பேச்சுக்கள் இல்லை, நன்றாக இருட்டியிருந்தது கடந்து சென்ற ஏதோ ஒரு வாகனத்தின் ஹாரன் சத்தத்தில் உணர்விற்கு வந்தனர் இருவரும்.
அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தவள் முகம் இப்பொழுது கொஞ்சம் தெளிந்திருந்தது, நேரத்தை பார்த்தான் இரவு எட்டுமணியை கடந்திருக்க “சாப்பிடுறியா…” என்றவனின் விரல்கள் அவள் கன்னத்தை மெல்ல வருடின.
“வேண்டாம்” என்றாள் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர் வீட்டை அடையும்போது நேரம் ஒன்பது முப்பது கேட் திறந்தே இருக்க வீட்டை பூட்டிக்கொண்டிருந்தார் மங்கா.
வண்டி சத்தத்தில் திரும்பி பார்த்தவர் அதை அப்படியே விட்டுவிட்டு படிகள் இறங்கி வண்டியின் அருகில் வந்தார் “நேரமாச்சே இனிமே வரமாட்டியோன்னு நெனச்சேன் பாப்பா அதான் வீட்டுக்கு போகலாம்னு கிளம்பினேன்” என்றவர் “சாப்டியா இல்ல தோசை ஊத்தவா” என்க.
வண்டியில் இருந்து கீழிறங்கியவள் “இல்ல நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என்க அவர் அவளையும் சேனாவையும் மாறி மாறி பார்த்து நின்றார்.
“இல்ல பாப்பா தனியா எப்படி தூங்குவ நான் இருக்கேன்” என்றவர் விழிகள் சேனாவின் மீதே இருக்க, அவன் படிகள் ஏறி வீட்டின் உள் நுழைந்தான்.
“ஒன்னும் பயமில்லை நான் பாத்துக்குறேன் நீங்க போங்க” என்றாள் திலோ, மனதில்லாமல் இரண்டடி முன்னே நடந்தவர் “சொல்ல மறந்துட்டேன் உங்க அப்பா நீ வந்தவுடனே அவருக்கு சொல்லணும்னு சொன்னாரு நான் இன்னும் சொல்லல நாளைக்கு காலைல போன் போட்டு சொல்லிடுறேன் இல்லனா என்னை ரொம்ப திட்டுவாங்க” என்க.
“ஹ்ம்ம் சொல்லுங்க… நைட் தான் வந்தேன்னு சொல்லுங்க” என்றவள் வீட்டிற்குள் நுழைய மங்கா சில நொடிகள் அங்கேயே நின்றுவிட்டு பிறகு கேட்டை அடைத்துவிட்டு சென்றார்.
உள்ளே நுழைந்தவளை பார்த்து “உன்மேல ரொம்ப அக்கறை அவங்களுக்கு என்கூட உன்னை தனியா விட்டுட்டு போக பயப்படுறாங்க” என்றவன் விழிகளில் குறும்பு மின்னியது.
சிரித்துக்கொண்டே அவன் அருகில் சென்றவள் “பசிக்குதா ஏதாவது செய்யவா” என்க.
அவளை பிடித்து தன் அருகில் அமர்த்தியவன் “ஒன்னும் வேண்டாம் நீ என்ன சாப்பிடுவ, தனியா இருந்துப்பியா” என்றான்.
“ரெஸ்ட் ரூம் எங்க” என்றவனுக்கு தாத்தாவின் அறையை திறந்துகொடுத்தவள் புதிய டவல் ஒன்றும் கொடுத்துவிட்டு “ஒருநிமிஷம்” என்று அடுக்கலைக்குள் சென்று அவனுக்கு மணக்க மணக்க காப்பி போட்டு எடுத்துவந்தாள்.
ஏதோ யோசனையோடே அதை குடித்துமுடித்தவன் “அப்போ நான் கிளம்பவா” என்று எழுந்து நிற்க அவள் முகத்தில் ஏமாற்றம்.
கப்பை அவள் கையில் கொடுத்தவன் “காபி சூப்பர் உன்னமாதிரியே” என்று அவளின் உச்சியில் முத்தம்பதிக்க முகம் மீண்டும் பிரகாசித்தது திலோத்தமாவிற்கு.
அவள் இதழ்கள் புன்னகையில் விரிய அந்த தெத்துப்பல்லில் அவன் விழிகள் சிக்கிக்கொண்டது, அவளை இன்னும் நெருங்கியன் இதழ்கள் அவள் உதடுகளை மெல்ல தீண்ட இமைகளை மூடிக்கொண்டவள் கரங்கள் அவன் சட்டையை இறுக்கமாக பற்றிய நொடி சேனாவின் புலன்கள் விழித்துக்கொண்டது.
சட்டென்று அவளிடம் இருந்து விலகியவன் “பத்திரமா இரு” என்றுவிட்டு விலகப்பார்க்க அவளின் பிடி இறுகியது, அவன் முதுகோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
அவன் கால்கள் நகர மறுத்து நின்றுவிட்டது “என்கூட இருங்க ப்ளீஸ்” என்றவள் குரல் அவனின் உணர்வுகளை கூறுபோட்டது, சட்டென்று திரும்பியவன் அவளை தன்னோடு சேர்த்தனைத்தான், காதுமடலில் தொடங்கி அவள் கழுத்துவலைவில் பற்தடங்கள் பதித்தவன் கன்னத்தை நனைத்தது அவளின் விழிநீர்.
நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான் அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவள் “ஐ.லவ்.யு… என்னை விட்டுட்டு போகாதீங்க, எனக்கு நீங்க வேணும் உங்ககூட இருக்கணும் எனக்கு” என்றவளை தள்ளி நிறுத்தியவன் கதவை அடைத்துவிட்டு அவளை அப்படியே இடையோடு அனைத்து தூக்கிக்கொண்டு படுக்கையறை சென்றான்.
குழந்தையை போல அவளை தன் மார்பில் போட்டுக்கொண்டவன் “எங்கேயேயும் போகல தூங்கு”
என்றவனை ஆச்சர்யமாக பார்த்தாள் திலோத்தமா, அவள் இதழில் முத்தமிட்டவன் “எனக்கு கட்டிபுடிக்க கூட பத்தலை டி நீ” என்று அவளை அள்ளி தன் மேல் போட்டுக்கொண்டான்.
அவன் அணைப்பில் அத்தனை சுகமான உறக்கம் திலோத்தமாவிற்கு, முதன்முதலாக அவனை பார்த்தபோது இந்த அணைப்பில் தனக்கும் இடம்வேண்டும் என்றுதானே ஆசைகொண்டாள் இப்பொழுது அது அவளுக்கு மட்டும் சொந்தமாக காதல் அங்கே நிறைந்து தளும்பியது.
‘அடுத்து என்ன’ என்ற சிந்தனையிலே விழித்துக்கிடந்தான், என்ன செய்யவேண்டும் எப்படி என்ற முடிவுகளில் தெளிவு வந்த பிறகே அவனை உறக்கம் தழுகியது.
காலை அழைப்புமணி ஓசையில் அடித்துபிடித்து எழுந்தாள் திலோத்தமா, அவளை பார்த்துக்கொண்டே எழுந்தவன் “என்னாச்சு” என்க.
“யாரோ பெல் அடிக்கிறாங்க”.
“சரி அதுக்கென்ன, நீ இரு நான் போய் பாக்குறேன்” என்றவன் எழுந்து செல்ல.
“ஏதே!…” என்று அவன் பின்னே ஓடியவள் “நீங்க போகக்கூடாது” என்று அவன் வழியை மறித்து நின்றாள்.
கையை கட்டிக்கொண்டு அவளை பார்த்தவன் “ஏன்!” என்க.
“உங்கள பாத்துட்டா?” என்றாள் விழிகளை விரித்து.
“பாத்தா என்ன… நைட் ரெண்டு பெரும் ஒண்ணா இருந்தோம்னு தெரிஞ்சிக்கிட்டும் நமக்கும் பேசி புரியவெக்குற வேலை கம்மி” என்றான் அவளை தன் அணைப்பில் வைத்துக்கொண்டு.
மீண்டும் அழைப்புமணி ஓசை கேட்க அவளுக்கு முன்னே சென்று கதவை திறந்தான், வெளியில் நின்றிருந்த மங்காவின் விழிகள் இப்பொழுது அதிர்ச்சியில் விரிந்தது.
“வாங்க” என்றவன் “ஒரு காபி கிடைக்குமா நைட் சரியா தூங்கலை தலை வலிக்குது” என்று சோபாவில் அமர இப்பொழுது வாயை பிளந்துவிட்டார் மங்கா.
திலோத்தமா அதிர்ச்சியோடு அவனை திரும்பி பார்க்க அவளை பார்த்து கண்ணடித்தான்.
மங்கா தன்னை கேள்வியாய் பார்ப்பதை கவனிக்காததை போல அறைக்குள் நுழைந்துகொண்டாள், மங்காவிற்கு இப்பொழுது என்ன செய்ய என்றே தெரியவில்லை அவர் உறுதியாக நம்பினார் தப்பு நடந்துவிட்டது என்று.
‘ஐயோ அய்யாவுக்கு தெரிஞ்சா என்னைத்தானே சொல்லுவாங்க பாப்பா இப்படி பண்ணிடுச்சே, கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பில்லையா’ என்ற மன குழப்பத்தோடு சமையல்கட்டிற்குள் நுழைந்தார்.
அவர் காபியை எடுத்துக்கொண்டு அவனிடம் வந்தபோது யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் “அரைமணி நேரத்துல வேணும் சக்தி சீக்கிரம் அனுப்பு” என்றவன் அலைபேசியை வைத்துவிட்டு “தேங்க்ஸ்” என்றுகூறி எடுத்துக்கொண்டான்.
வெளியில் சென்றால் தன்னிடம் ஏதாவது கேட்ப்பாரோ என்ற தயக்கத்தல் உள்ளேயே நின்றாள் திலோத்தமா “ரூமை கிளீன் பண்ணட்டுமா திலோமா” என்று உள்ளே நுழைந்தார் மங்கா.
“ஹா… பண்ணுங்கக்கா” என்றவள் தலையை துவட்டிக்கொண்டே வெளியில் வந்து அவனுடன் அமர்ந்துகொண்டாள்.
இதழ்களை கடித்து புன்னகையை அடக்கியவனை பார்த்தவள் “என்ன? ஏன் சிரிக்கிறீங்க” என்க.
“இல்ல… உன் மங்காக்கா ஏன் இப்போ ரூமுக்குள்ள போயிருக்காங்க தெரியுமா” என்றவனை புரியாமல் பார்த்தவள் “கிளீன் பண்ண” என்க.
அவளை தன் அருகில் இழுத்து அமர்த்தியவன் “நேத்து நைட் தப்பு நடந்துச்சா இல்லையானு கண்டுபிடிக்க போயிருக்காங்க” என்றவனின் சிரிப்பில் வெக்கம் சூழ்ந்துகொள்ள “அச்சோ…” என்று முகத்தை மூடிக்கொண்டவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான்.
அவனுடைய சத்தமான சிரிப்பொலியில் அவசரமாக வெளியில் வந்து பார்த்தார் மங்கா “என்ன” என்றவனின் புருவமுயர்த்தலில் “ஒண்ணுமில்ல” என்று மறுபடியும் அறைக்குள் நுழைந்துகொண்டார்.
சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தது அவனுக்கான துணிகள்.
“இந்தக் காலை வேளையில் எந்தக் கடையும் திறந்திருக்காதே” என்றாள் திலோ ஆச்சர்யமாக.
“ஹ்ம்ம் ஆமாம் ஆனா நமக்குத் திறக்கும்” என்றவன் பிரபலமான துணிக்கடையின் பெயர்சொல்லி “அதோட ஓனர் சக்தி நம்ம தோஸ்து” என்றான்.
அவனைப் பின்தொடர்ந்தே சென்றுகொண்டிருந்தது திலோவின் விழிகள், அவன் அருகாமையை அந்த நொடிகளை இழக்க அவள் விரும்பவில்லை, அவளை இங்கே விட்டுச்செல்ல அவனுக்கும் துளிகூட விருப்பமில்லை.
திலோ” என்ற அழைப்பின் ஓசை அடங்கும் முன் அவன் முன்னில் வந்துவிட்டாள்.
“என் மேல இருந்த கோபத்துலதானே எடப்பள்ளி போய் ஒளிஞ்சுக்கிட்ட இப்போ கோபம் இல்லைதானே” என்றான் அவளை நெருங்கி நின்று.
மனதிற்கு மிக மிக நிறைவான நொடிகள் என்றாலும் “ஒருவாரம் மட்டும் போய் இருக்கட்டுமா அங்க யார்கிட்டயும் சொல்லலையே, நான் தனியா இருந்தப்போ ரொம்ப அன்பா என்னைப் பாத்துக்கிட்டாங்க” என்றாள் என்ன சொல்லுவானோ என்ற எதிர்பார்ப்போடு.
“ஹ்ம்ம் அதுவும் சரிதான் ஒன்னும் பிரச்சனையில்ல எவ்ளோ நாள் வேணுமோ இருந்துக்கோ நான் பாண்டியம்மாவை உன்கூட தங்க சொல்றேன்” என்றான்.
அவளுக்கும் அதில் சம்மதமே “மங்கா இங்கேயே இருக்கட்டும், கீர்த்தியை அவ புகுந்த வீட்டில விடப் போகணும் டூ டேய்ஸ்ல வந்துடுவேன் நானே வந்து கூட்டிட்டு போறேன், அதுவரைக்கும் இங்கேயே இரு” என்றான்.
அதில் அவளுக்கு அத்தனை சந்தோஷம், அவனுடன் செல்லப்போகிறோம் என்று, திருமணத்திற்கு வரும்போது இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவிலும் எண்ணவில்லையே.
“யாரும் உன்னைக் கேள்வி கேட்க இங்க வரமாட்டாங்க, நான் பாத்துக்குறேன்” என்றவன் “பத்திரமா இரு” என்று அவளின் நெற்றில் முத்தம் பதித்து அவளை விட்டு விலகினான், ஏனோ அதற்குமேல் போகமுடியவில்லை.
சட்டென்று திரும்பியவன் “ப்ளீஸ்” என்று அவள் கன்னத்தை அழுந்தப் பற்றி இதழோடு இதழ் பதித்தான், அவளை விட்டு விலகியபோது இதழ்களுக்கு இணையாக முகமும் சிவந்திருந்தது.
“பாத்துக்கோங்க ரெண்டுநாள்ல திரும்பி வந்துடுவேன் அதுவரைக்கும் இங்கேயே தங்கிக்கோங்க” என்றான் மங்காவிடம், அவன் ஜீப் பார்வையிலிருந்து மறையும்வரை வாயலிலே நின்றிருந்தாள் திலோத்தமா.
அவன் நேரே சென்றது கரணின் வீட்டிற்கு, திலோத்தமாவை பார்த்துப் பேசுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள் இருவரும் சேனாவை பார்த்ததும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.
அவர்கள் அனுமதிக்கு காத்திருக்காமல் உள்ளே சென்று அமர்ந்தவன் “திலோவை பாக்க நீங்கப் போகவேண்டிய அவசியம் இல்லை, உங்கள பாக்க அவ விரும்பல” என்றான் தோரணையாக அமர்ந்துகொண்டு.
“அதெப்படி? அவ என் பொண்ணு அவளைப் பாக்க கூடாதுன்னு நீ எப்படி சொல்லலாம்” என்று எகிறிய கரணை விழி இடுக்கி பார்த்தவன்.
“உங்க பொண்ணா!… அப்படி ஒருநாளாவது நீயோ உன் மனைவியோ நடந்துக்கிட்டிங்களா, இப்போ மட்டும் உரிமை உணர்வு பொங்கி வழியுது” என்றவன் “விஷயம் இவ்ளோதான் எனக்கு அவளைப் பிடிச்சுருக்கு கல்யாணம் செஞ்சுக்க போறேன், என் வீட்டில இருந்து பெரியவங்க வந்து பேசுவாங்க சம்மதனு சொல்லித் தட்டை மாத்துறது மட்டும்தான் உங்க வேலை அது இதுனு ஏதாவது குடைச்சல் குடுத்த கடைசிவரைக்கும் சொத்துல சல்லிக்காசு கிடைக்காது, இருக்குற தொழிலையும் மொத்தமா மூட வெச்சுடுவேன்”.
“ஹ்ம் அப்புறம் முக்கியமா என் வீட்டாளுங்க வரும்போது மரியாதையா நடந்துக்கணும், நீயும் உன் முதல் மனைவியும் முன்ன நின்னு முறைப்படி எல்லாத்தயும் செய்யணும் என்ன செய்வியோ எனக்குத் தெரியாது அடுத்தவாரம் திலோவோட அம்மா இங்க இருக்கணும்” என்றவன் முடிந்தது என்பதாக எழுந்துகொண்டான்.
வாயில்வரை சென்றவன் திரும்பி அவர்களைப் பார்த்து “அந்த வீட்டு பக்கம் யாரும் போகக் கூடாது நீங்க யாரவது போனீங்க அவளை மிரட்டுனீங்கன்னு என் காதுக்கு வந்துச்சு அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை” என்று அங்கிருந்து புறப்பட்டான்.
விஷயம் தெரிந்தததில் கீர்த்திக்குத்தான் அத்தனை துள்ளல் “என்கிட்டே சொல்லவேயில்லை… பொண்ணு பாக்க நானும் வருவேன், கல்யாணம் உடனே வைங்கம்மா” என்று ஒரே ஆர்ப்பாட்டம்.
வெண்மதிக்கு மனம் நிறைந்துவிட்டது எப்படியோ மகன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான் அவன் மீண்டும் மனம் மாறுவதற்க்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.
அவருக்குத் தெரியவில்லையே மகன் இப்பொழுது அவள்மீது கிறுக்காகி கிடக்குறான் என்று, இந்தவாரமே போய்ப் பேசிடலாம் என்றார் வெண்மதி, அனைவரும் அதையே விரும்பினர் என்றாலும் சேனா மறுத்துவிட்டான் “திலோவோட அம்மா வரட்டும் அதுக்கப்புறம் பேசலாம்” என்றுவிட்டான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்து அவளை அழைத்துச்சென்றான், இந்தமுறை ஒவ்வொரு இடமாக நிறுத்தி ரசித்துக் கதைகள் பேசி என்று சென்று சேரவே மாலை ஆகிவிட்டது, வீட்டிற்கு வந்தவுடனே பாண்டியம்மாவிற்கு அழைத்தவன் மறுநாள் காலையே இங்கே வந்துவிடுங்கள் என்று கூறிவிட்டான் அவள் இங்கிருக்கும் நாட்கள் அவளுடன்தான் அவர் தங்குவார்.
“நான் ஹால்ல படுத்துக்குறேன்” என்றவனை பார்த்துச் சிரித்தவள் “உள்ள இடம் இருக்கு அங்கேயே தூங்கலாம்” என்க.
“போடி மனுஷனை கடுப்பேத்திக்கிட்டு” என்று அவளை அறைக்குள் தள்ளிக் கதைவடைத்தான்.
இடையில் ஒருமுறை அறைக்குச் சென்று பார்க்க அவன் சட்டையைப் போட்டுக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் திலோ, மெல்ல அவளை நெருங்கியவன் தன் மார்போடு அவளைப் பொதிந்துகொண்டான்.