“கமலி… கமலி… கமலி…” என்ற பெயரின் ஒலி அப்பெரும் விளையாட்டு மைதானம் முழுவதும் எதிரொலித்தது.
இறுதி பந்து… ஆறு ரன்கள் எடுக்க வேண்டும்.
மட்டையினை இரு கைகளாலும் இறுக்கி பிடித்து, தரையில் தட்டியவளின் நெற்றியில் திரண்ட வியர்வைத்துளி மூக்கின் நுனி வழிந்து துளியாய் பூமியில் சிதறியது.
ஒருபக்கம் அவளின் பெயரின் ஒலி. மறுபக்கம் அவள் அடித்துவிட வேண்டுமென்கிற பதட்டம், ஆர்வம். அரங்கில் திரண்டிருந்த அனைவரும் சீட்டின் நுனியிலும், எழுந்து நின்றும் கமலியையும்… எதிரணியில் பந்தினை சுழற்றியபடி ஓடி வரும் பெண்ணின் மீதே மாற்றி மாற்றி பார்வையை பதிந்திருந்தனர்.
வேக வீச்சுடன் எறிந்த பந்து கமலியை நோக்கி பறந்து வர, அதிக விசையுடன் மட்டையால் தட்டி தூக்கியெறிந்தாள். ஸ்டேடியத்தை தாண்டி பார்வையாளர் பகுதியில் விழுந்து சிக்ஸ்சினை உறுதி செய்தது.
அம்பையர் இரு கைகளையும் தூக்கி காட்டிட… அரங்கம் அதிர கரகோஷம் உயர்ந்தது. கமலி என்ற பெயர் விண்ணைத் தொட்டது.
மைதானத்தின் நடுவில் மட்டையை ஒரு கையால் வானோக்கி தூக்கி பிடித்து துள்ளி குதித்த கமலி,
ஆவென்று அலறி துடித்தாள்.
பயத்தில் மூடிய கண்களை திறந்திட, மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்தவள் தரையில் விழுந்தது அப்போதுதான் தெரிந்தது.
“இப்படியே கனவு கண்டுட்டே இருக்காமல், எழுந்து கிளம்புற வழியை பாரு. நீ இப்படியே கனவு, மட்டை பந்துன்னு இரு. உன்னை எவனுக்காவது பிடிச்சி கட்டி வைக்கப்போறாங்க” என்ற தங்கையின் பேச்சு பழக்கப்பட்ட ஒன்றென்று நிதானமாக எழுந்து மெத்தையில் அமர்ந்தாள் கமலி.
*******
அவனின் பைக் சத்தத்திற்கே அவ்விடம் அதீத சுறுசுறுப்பை பிரதிபலித்தது.
ஆங்காங்கே அமர்ந்தும், நடந்தும் பேசிக் கொண்டிருந்தவர்கள்… மைதானத்தை சுற்றி ஓடுவதும், மட்டையினை பிடித்து, பந்தினை எறிந்து, உடற் பயிற்சி செய்வது போலவும் நிமிடத்தில் தங்களின் செயல்களில் மாற்றம் பெற்றிருந்தனர்.
பைக்கினை அதற்குரிய தருப்பிடத்தில் நிறுத்தி இறங்கினான் அதிரூபன். வண்டியின் முன் வைத்திருந்த தன்னுடைய கிட் பேக்கினை எடுத்து அங்கிருந்த கல் மேடையில் வைத்தவன், கண்களில் அணிந்திருந்த கூலர்ஸை கழட்டி பேக்கின் மேல் வைத்து, அருகில் அமர்ந்தான்.
மைதானத்தை சுற்றி பார்வையை சுழற்றினான்.
அவனின் சுழலும் பார்வைக்கு, அங்கு பயிற்சி செய்து கொண்டிருந்த ஒவ்வொருவரின் தொண்டைக்குழியும் பயத்தில் சுழன்றது.
“இன்னைக்கு யார் மாட்டுனான்னுதெரியலையே?” ஓடிக்கொண்டிருந்த இருவரில் ஒருத்தி முணுமுணுக்க…
“வழக்கம்போல் கமலி தான்.இன்னும் வரலையே!” என்று மற்றொருத்தி சொல்லி முடிக்கவில்லை,
“எருமை… எருமை…” என்ற அதியின் ஏசும் வார்த்தைகள் அவ்விடத்தை நிரப்பிட…
“வந்துட்டாடி” என்று இணைந்து கூறிய பெண்கள் ஓடுவதை நிறுத்திவிட்டு அதி அமர்ந்திருந்த இடத்தை நோக்கினர். மைதானத்தில் இருந்தோரின் பார்வை முழுவதும் அங்கு தான்.
“சாரி கோச்… லேட்டாகிருச்சு.” கமலி முடிக்கும் முன் அவளின் தலையில் நங்கென்று கொட்டியிருந்தான் அதிரூபன்.
“வலிக்குது கோச்…”
“கனவு இருக்கவங்களுக்கு… சாதிக்கணும் என்கிற எண்ணத்தில் இருக்கும் வலியைவிட இந்த வலியெல்லாம் பெரிதாக தெரியாது” என்று மீண்டும் அவளின் தலையில் கொட்டினான்.
“ஒரு நாளாவது டைமுக்கு வந்திருக்கியாடி… இதுல சாதிக்கப்போறேன், சருக்கப்போறேன்னு கிளம்பி வந்துட்ட. கனவுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம்” என்று கடுகடுத்தான்.
“முழு கிரவுண்டையும் இருபது முறை சுத்திட்டு வா” என்றவன் அவளை நிற்கக்கூட விடாது “ஓடு ஓடு” என்று விரட்டினான்.
“அய்யோ கடவுளே என்னை இவன்கிட்ட கோர்த்துவிட்டு வேடிக்கை பாக்குறியே” என்று மேல் நோக்கி புலம்பியவளாக ஓடத் துவங்கியவளுக்கு தெரிந்திருக்கவில்லை, காலம் முழுக்க அவன் எடுக்கும் ட்ரில்லிற்கு தான் ஓடப்போகிறோம் என்று.