திலோத்தமாவின் அலைபேசி விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது, எப்பொழுதோ அறியாமல் கண் அசந்திருந்தவன் அந்த ஓசையில் கண்விழித்து பார்த்தான், எங்கும் இருள்… சில நொடிகள் தேவைப்பட்டது இருக்கும் இடம் பிடிபட.
காரின் உள்ளே லைட் ஆன் செய்தவன் திரும்பிப் பார்க்கச் சுகமான நித்திரையில் இருந்தாள் திலோத்தமா, மீண்டும் கைபேசி ஒலியெழுப்ப அவள் பேகிலிருந்து தேடிப்பிடித்து அதை எடுத்தான்.
“எம்.ஒண்” என்று மிளிர்ந்தது எடுப்பதா வேண்டாமா என்ற யோசனை முதலில் ஓடியது, அவளை எழுப்பி எடுக்கச் சொல்லலாம் ஒருவேளை வீட்டிலிருந்து வரும் அழைப்பாக இருக்கலாம் என்ற எண்ணி அவளை அழைக்க விழைந்தவன் கைகள் அப்படியே நின்றது.
அவள் உறக்கத்தை கெடுக்க ஏனோ மனம் வரவில்லை சிலநொடிகளில் மீண்டும் அழைப்பு வரச் சட்டென்று அழைப்பை ஏற்றுவிட்டான்.
“திலோ எங்க இருக்க? போய்ட்டியா இல்லையா? அந்த ஆள் பாட்டுக்கு டூர் போய்ட்டாரு நீ இப்போ எங்க இருக்க” என்றாள் திலோவின் தாய் ஸ்வாதி, இவன் அமைதியாகவே இருந்தான் தகவல் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மட்டுமே மற்றபடிமகளின் மீதான அன்பின் வெளிப்பாடாகத் தெரியவில்லை.
“இன்னும் எவ்ளோ வருஷம்தான் என்கிட்டே பேசாம இருப்ப, உன் அப்பாகிட்ட பேசுற என்கிட்டே மட்டும் ஏன் பேச மாட்ர” என்றதும் அவன் விழிகள் மீண்டும் திலோத்தமாவில் பதிந்தது தாயுடன் பேசுவதில்லை என்பது புரிய அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
எத்தனை வயதிலிருந்து இப்படி தனிமையில் இருக்கிறாள் என்ற யோசனையில் இருந்தவனை மீண்டும் கலைத்தது ஓசை “பச்” என்று சலித்தவன் பார்க்க இப்பொழுது “டி.ஒண்” என்று மிளிர்ந்தது.
“எம்.ஒண், மதர் ஒண் இது யாருப்பா டி.ஒண்” என்ற யோசனையோடு எடுக்க.
“திலோ இன்னும் வீட்டுக்கு வரலன்னு அன்னம்மா சொல்றா எங்க இருக்க ஏன் இவ்ளோ நேரம்? எனக்கு ஏன் இன்போர்ம் பண்ணல” என்று பதட்டப்பட்டது ஒரு குரல்.
“நா சேனாபதி பாண்டியன்” என்க.
“திலோ எங்க? அவ போன் ஏன் உங்ககிட்ட அவளைப் பேசச் சொல்லுங்க, இவ்ளோ நேரமா என் பொண்ணு ஏன் வீட்டுக்குப் போகல” என்றார் திலோத்தமவின் தந்தை கரண்.
“ஒகே டாடிக்கு தான் டி.ஒண்ணா…” என்று தலையை ஆட்டிக்கொண்டவன் “கொஞ்சம் பொறுமையா இருங்க உங்க பொண்ணு தூங்கிட்டு இருக்கா இன்னைக்கு வரமுடியாத சூழல் வழியில மாட்டிக்கிட்டோம் நாளைக்கு பிரச்னை முடிஞ்சதும் கெளம்பிடுவோம், ஷி இஸ் சேப்” என்றவன் கூற.
மனதிற்குள் அவரை அர்ச்சனை செய்தவன் “ஹலோ என் போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா?” என்க.
“அதுஎதுக்கு எனக்கு” என்றார் கரண்.
எரிச்சலுடன் “யோவ் நானும் பொறுமையா பேசிட்டு இருக்கேன் ரொம்ப துள்ளுற பொண்ணை யாரு கூட்டிட்டு வராங்க அவன் பேர் என்ன போன் நம்பர் என்ன ஒன்னும் தெரியல, பொறுப்பைப் பத்தி நீ பேசுறியா அவ்ளோ பாசமான அப்பனா இருந்தா என் நம்பர் கண்டுபிடிச்சு எனக்கு அடி அப்போ பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்து அவள் அலைபேசியை ஸ்விச் ஆப் செய்தான்.
இரு துருவங்களாக இருக்கும் இவர்களுடன் என்ன மாதிரி ஒரு வாழ்வை இவள் வாழ்ந்திருப்பாள் என்ற சிந்தனை நிரம்பியது மனதில்.
இப்படியொரு செயலையும் பதிலையும் கரண் எதிர்ப்பார்க்கவில்லை மீண்டும் மகளின் எண்ணிற்கு அழைத்துப்பார்க்க அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
வெங்கடேசனுக்கு மட்டுமே சேனாபதி எண் தெரியும் இந்த அர்த்த ராத்திரியில் அவரை எப்படி அழைக்க என்று தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் அழைத்துப் பார்த்தார், வயதான மனிதர் தூக்க மாதிரி சாப்பிட்டு உறங்கும் மனிதர் எத்தனையோ முறை அழைத்தும் எடுக்கவில்லை.
தன்னையே நொந்துகொண்டு அமர்ந்துவிட்டார் கரண், அவனிடம் கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருக்கலாம் என்று நேரம் கடந்து ஞானோதியம் பிறந்தது.
அதன்பிறகு உறக்கம் வரவில்லை வண்டியிலிருந்து இறங்கி சுற்றிலும் பார்த்தான் மொத்தமாக இருட்டில் குளித்துக்கிடந்தது அந்த ஊர், ஒரு தெருவிளக்கு கூட இல்லை, தூரே நெடுஞ்சாலையில் மெல்லிய வெளிச்சம் தெரிந்தது.
கதிரவன் கடையின் வெளியேசுருண்டு படுத்திருந்தான் வண்டியை லாக் செய்தவன் சாலையை நோக்கி நடந்தான், நெடுஞ்சாலையைத் தொட்டபோது மிகவும் அமைதியாக இருந்தது சரக்கு வண்டிகள் கூடக் கடந்துபோகவில்லை.
நிலைமை சீராகவில்லை போல என்று நினைத்தவன் வெகுநேரம் காத்திருந்தும் வாகனங்களைக் காணவில்லை மீண்டும் தன்னுடைய வண்டியின் அருகில் வந்தவன், அவள் உறங்குவதை பார்த்துவிட்டுக் கடையின் முன்னில் சென்று அமர்ந்துகொண்டான் எப்பொழுதோ உறக்கம் கண்களைச் சுழற்ற அறியாமல் உறங்கியும் போனான்.
அவனுடைய அலைப்பேசி அழைப்பிலே விழிப்பு வந்தது புதிய எண்ணிலிருந்து அழைப்பு எடுத்தவுடனே “ஹலோ சாரி நேத்து அப்படி பேசியிருக்கக் கூடாது திலோத்தமா எப்படி இருக்கா நா என் பொண்ணுகிட்ட பேசணும்” என்றார் கரண்.
“இருங்க கொடுக்குறேன்” என்றவன் வண்டியின் கண்ணாடியைத் தட்ட சத்தத்தில் மெல்ல விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள் அவள்.
“எப்படி இருக்க? பிரச்சனை ஆயிடுச்சுன்னா எனக்குக் கால் பண்ணி சொல்லலாம்ல இப்போ எங்க இருக்க நா ஆபிஸ்ல இருந்து யாரையாவது அனுப்பவா, நியூஸ்ல பாத்துதான் அங்க நடக்கிறதே தெரிஞ்சது அந்த ஆள் எப்படி? உன்கிட்ட எப்படி நடந்துக்குறான் நீ எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு, அவன் பேச்சே சரியில்ல” என்று அவர் அடுக்கிக்கொண்டே செல்லத் திலோத்தமாவின் விழிகள் சேனாபதியில் பதிந்தது.
“உங்ககூட இருக்குறதைவிட ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்” என்றாள் மகள் “வீட்டுக்கு வந்ததும் உங்களுக்குத் தகவல் வரும்” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அவனுடைய கைப்பேசியின் திரையில் மிளிர்ந்தது தியானத்தில் அமர்ந்திருக்கும் ஹனுமானின் சித்திரம் ‘ஆண்டவா ஹனுமான் பக்த்தனா! அப்போ என் காதல்’ என்று அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் நங்கை.
அவள் அருகில் நெருங்கியவன் “ரெப்ரெஷ் பண்ணிக்கோ குடிக்க எதுவும் கிடைக்குமான்னு பாக்குறேன்” என்று விலகி நடக்க.
“அவர் என்ன சொன்னாருன்னு நீங்கக் கேக்கவே இல்லையே” என்றாள் அவனைப் பார்த்து.
“பெத்த பொண்ணை யார் கூட அனுப்பியிருக்கோம்னு கூடத் தெரியாத அப்பணைப்பத்தியெல்லாம் எனக்குக் கவலை இல்லை, என்ன நம்பி குடுத்த பொறுப்பை எப்படி சரியா செய்யணும்னு எனக்குத் தெரியும் அதை யாருக்கும் நிரூப்பிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றவன்.
“என்ன நம்பிக்கைல என் கூட உன் வீட்ல அனுப்பினாங்க” என்றான் அவளைப் பார்த்துக் கோபத்தை அடக்கி.
“ரெண்டுதடவ கேட்டும் ஒத்துக்காத நான் இந்தத்தடவ எதிர்ப்பு சொல்லாம சரி சொன்னதால இருக்கலாம்” என்றாள் மெல்லிய புன்னகையோடு.
அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ இனம் புரியா வலியொன்று முணுக்கென்றது, இரண்டு முறை பார்த்த மாப்பிளை பிடிக்கவில்லை இந்தமுறை பார்த்தவனை பிடித்திருக்கும் அதனால் மறுப்பு சொல்லாமல் வருகிறாள் போல”.
“அந்த நிம்மதியில் அவர்களும் விட்டு விட்டார்களா என்றாலும் மகளைப் பற்றி அக்கறை வேண்டாமா? அவள் பெண்பார்க்க சம்மதம் சொன்னவுடனே மற்றது மறந்துவிடுமா, அப்படி என்ன மகளை உடனே திருமணம் செய்து அனுப்ப வேண்டும்” என்று நொடியில் அனைத்தும் ஜெட் வேகத்தில் ஓடியது அவன் மனதில்.
அவனிடம் எந்தப் பதிலும் இல்லை என்பதை கவனித்தவள் “ரெண்டுதடவையும் ட்ரைவரை அனுப்பினாங்க அதனால போகல” என்றவள் கதிர் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை எடுத்துக்கொண்டு முகம் கழுக சென்றாள்.
“என்ன சொல்கிறாள் இவள், வேலைக்காரர்களை அனுப்பியதால் போக விரும்பவில்லை என்கிறாளா, அல்லது நீ என்பதால் வர ஒப்புக்கொண்டேன் என்கிறாளா” என்ற சிந்தனையோடு அவளைப் பின்தொடர்ந்தது அவன் விழிகள்.
“அண்ணா நான் போய்க் கடை ஏதாவது இருக்கான்னு ஊருக்குள்ள பாத்துட்டு வரேன், தலை வலிக்குது ஒரு டீயாவது கிடைக்குதா பாக்கலாம்” என்றான் கதிர்.
அவன் சென்றபிறகு மீண்டும் சேனாபதியின் விழிகள் அவளில் பதிந்ததது கடையின் வாயிலில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மெல்ல அவளின் அருகில் சென்றவன் “என்னாச்சு” என்க.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் வாடி இருந்தது “இப்போ வெளிச்சம் வந்துடுச்சு எப்படி பாத்ரூம் போக ரொம்ப அனீஸியா இருக்கு” என்றாள்.
அவளின் நிலை புரிந்தது இப்பொழுது என்ன செய்ய என்று யோசித்து நின்றான், கதிரவன் போனதுபோலவே திரும்பி வந்தான் “ஊருக்கு வெளியே அந்தப் பக்கம்தான் கடைகள் இருக்குமாம்” என்றான் சோர்வாக.
மண்டை வெடிப்பதை போல இருந்தது சேனாபதிக்கு இந்த நேரம்பார்த்து வண்டியும் பழுதாகிவிட்டது, சட்டென்று மனதில் மின்னல் வெட்ட உதவிக்கு ஆள் வந்துடனும் என்று மனதில் வேண்டிக்கொண்டவன் ரபிடோ ஆப்பை டவுன்லோட் செய்தான்.
பதினைந்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு ஒருவன் வருவதாகக் காட்டியது, சேனாபதியை அழைத்தவன் எங்கிருக்கிறான் என்ற சரியான இடத்தைக் கேட்டுவிட்டு “அது ரொம்ப தூரம் சார் அவ்ளோ தூரம் வருவது கஷ்டம்” என்றான்.
“இங்கபாருங்க ஜஸ்ட் ஒன் ரைட், டபுள் அமௌன்ட் தரேன்” என்றவன் “ஆயிரம் ருபாய் தரேன் உடனே வாங்க” என்க, அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தான் அவன்.
“கொஞ்சநேரம் வெயிட் பன்னு வந்துடுறேன்” என்றுதிலோத்தமாவிடம் கூறி சென்றான், முதலில் மெக்கானிக்கை கண்டுபிடித்தான் ரபிடோவை அனுப்பிவிட்டு மெக்கானிக்குடன் வண்டியிருக்கும் இடம் சென்றான்.
ஒரு வழியாக வண்டியைச் சரிசெய்துகொண்டு புயல் வேகத்தில் புறப்பட்டான் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை, சிறிது நேர பயணத்தில் உயர்தர சைவ உணவகம் ஒன்று திறந்திருந்தது உள்ளே சென்றார்கள்.
“சார் கொஞ்சம் நேரம் ஆகும் ஒரு அரைமணி நேரம்” என்று அவர்கள் கூற “பரவாயில்ல இப்போதைக்கு காபி மட்டும் குடுங்க” என்றவன்.
“ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கலாமா” என்க.
“சரி” என்றனர்.
அதன் பிறகு எளிமையான காலை உணவை முடித்துக்கொண்டு அவர்கள் பயணம் மீண்டும் தொடங்கியது, பெரிதாகப் பிரச்சனைகள் இல்லை இப்பொழுது வாகனங்கள் செல்லத் தொடங்கி இருந்தது.
“நான் ஓட்டறேண்ணா” என்றான் கதிர்.
“இல்ல வேண்டாம் நானே ஓட்டறேன் சீக்கிரமா போகணும்” என்றவனை வேதனையோடு பார்த்திருந்தாள் திலோத்தமா, இன்னும் சில மணி துளிகளில் அவளை அவள் வீட்டில் விட்டுச் சென்றுவிடுவான் அந்த நினைவே வலித்தது.