ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் ஏறிவிட்டாள் உள்ளுக்குள்ளே இதயம் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது, தெரிந்தால் என்ன சொல்லுவான் எப்படி நடந்துகொள்வான் ஒன்றும் தெரியவில்லை சிந்தனையில் நேரம் கழிய இடையில் எங்கேயோ நிறுத்தி உணவுண்டனர் இருவரும்.
நல்ல பசி என்றாலும் வெளியில் செல்ல முடியாதே எட்டி எட்டி பார்த்திருக்க அரைமணி நேரத்தில் திரும்பி வந்தனர், மீண்டும் பயணம் தொடர்ந்தது ஒரு கட்டத்தில் அவளால் அப்படியே அமர முடியவில்லை.
வெகுநேரமாகக் குறுகி படுத்திருந்தது உடல்வலியை தந்தது கைகளை அசைக்க முடியவில்லை முயன்று எழுந்து சீட்டில் அமர்ந்து உடலை அசைக்கச் சடடென் பிரேக் அடித்தான் சேனாபதி மிரரில் தெரிந்த உருவத்தில் அதிர்ந்து.
“ஆத்தாடி” என்று முன்னில் வரை சென்று மீண்டு வந்தான் கதிர், சீட்பெல்ட் அவன் கபாலத்தை காப்பாற்றியது ஆனால் பாவம் திலோத்தமா மீண்டும் நெற்றியை கொண்டுபோய் முட்டிக்கொண்டாள்.
“என்னண்ணே!” என்ற கதிரவன் “அவுச்” என்ற பெண்குரலில் திரும்பிப் பார்த்து “ஆத்தி!” என்று வாயில் கையை வைத்துக்கொண்டான்.
“இங்க என்ன பண்ற? எப்படி வந்த!” என்றான் அதிர்ச்சி விலகாமல், நெற்றியை தடவிக்கொண்டே அவள் சேனாபதியை பார்க்க, வேகமாக இறங்கியவன் சுற்றிவந்து கதவைத் திறந்து அவளைப் பிடித்து வெளியில் இறக்கினான்.
அவனின் முரட்டுப்பிடியில் அந்த இடமே கன்றிவிட்டது அவளுக்கு, வலியில் அவள் முகம் கன்ற “அண்ணே பொறுமையா” என்ற கதிரவனை எரித்துவிடுவதை போல அவன் பார்த்த பார்வையில் அமைதியாகிவிட்டான்.
“அப்படியே இழுத்து ஒன்னு விட்டேன்னா தெரியும், அறிவிருக்கா உனக்கு? முட்டாள் முட்டாள் மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லையா, என்ன தைரியத்துல இந்த வண்டியில ஏறுன, எங்களப்பத்தி என்ன தெரியும் உனக்கு”.
“எங்க போறோம் எதுக்கு போறோம் ஏதாவது தெரியுமா? உன்னைக் கூட்டிட்டு வரும்போது ஏதோ கொஞ்சம் நல்லவிதமா நடந்துக்கிட்டா உடனே நீயே நெனச்சுப்பியா நாங்க இப்படிதான்னு” என்றவனை அவள் அதிர்ச்சியோடு பார்த்திருக்க.
“குன்னூர் போறோம்னு தெரியும் எதுக்கு போறோம்னு உனக்குத் தெரியுமா” என்க.
“ஏய் நீ என்ன லூசா? நேத்து ஒருநாள் தான் என்னைப் பாத்த மத்தபடி என்ன தெரியும் உனக்கு, எங்க வீட்ல கூட யாருக்கும் தெரியாது அவங்ககிட்ட சொல்லாம இருக்கேன்னா அவங்க என்கூட கடைசிவரைக்கும் இருக்கபோறவங்க மனசு கஷ்டப்படவேணாம்னு தெரியாம பாத்துக்குறேன்”.
“ஆனா நீ எனக்கு யாருமேயில்லை உனக்குத் தெரிஞ்சாலும் எனக்குப் பிரச்னையில்லை புரிஞ்சுதா, முன்னபின்ன தெரியாதவன் கூட உங்கவீட்டில தான் பொறுப்பே இல்லாம அனுப்புறாங்கன்னா உனக்கும் புத்தி இல்ல” என்றான் எரிச்சலோடு.
உடல் நடுங்கியது திலோத்தமாவிற்கு ‘ஏமாற்றமா மீண்டுமா… தன்னுடைய காதல் பொய்த்துப்போய்விட்டதா, இது பொய் என்று கூறிவிட மாட்டானா” என்று அவள் விழிகள் கதிரவனின் மீது படிய அவன் இயலாமையோடு தலையைக் குனிந்துகொண்டான்.
மனம் விட்டுப்போனது திலோவிற்கு “ச்ச என்னோட நாளே வீணாப்போச்சு, இப்போ இவளை என்னாடா பண்றது? திரும்பக் காரைக்குடி போகணும்னா நாலு மணிநேரம் ஆகும் ஏதாவது வண்டி வெச்சு அனுப்பலாம்னா சேப் இல்ல” என்றவன் மணி பார்க்க நேரம் நள்ளிரவு ஒன்று முப்பது.
“ஏய்! என்ன பிளான் உனக்கு” என்று திரும்பிப் பார்க்க அவளைக் காணவில்லை.
“எங்கடா போனா!” என்றான் சேனாபதி.
‘இந்தப் பெண் ஏன் தங்களுடன் வந்தாள் இப்பொழுது இவளிடம் இவர் இதையெல்லாம் சொல்லக் காரணம் என்ன’ என்று பலவாறாகச் சிந்தனையில் இருந்த கதிரவனும் அவள் சென்றதை கவனிக்கவில்லை.
வெங்கிட்டுபாளையத்தை நெருங்கியியிருந்தனர் அங்கிருந்து அரைமணி நேரத்தில் சூர்யநல்லூர் வந்துவிடும், தூரப்பயணம் செல்வோர் சரக்கு வாகனம் ஓட்டுபவர்கள் ஓய்வெடுக்க சூர்யநல்லூரில் சில இடங்கள் உண்டு இவர்களும் அங்கே சிறிதுநேரம் உறங்கி எழுந்து போகலாம் என்றுதான் முடிவு செய்திருந்தனர்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க அவள் இருளில் தெரிந்த வயலை நோக்கி நடந்தாள், இலக்கெல்லாம் ஒன்றுமில்லை ஆறு, கிணறு… போதும் தற்சமயம் அவளுக்கு.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை சாலையில் அவளைக் காணவில்லை இருவரின் விழிகளும் சரிவில் இருக்கும் விளைநிலத்தில் பதிந்தது சேனாபதி அவசரமாகக் கீழிறங்க கதிரவன் வண்டியைக் கொஞ்சம் ஒதுக்கி நிறுத்திப் பூட்டினான்.
அவனும் வேகமாகக் கீழிறங்கி போன் வெளிச்சத்தில் தேடி செல்ல மொத்தமாக நனைந்து மரத்தின் மீது சாய்ந்தமர்ந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள் திலோத்தமா, அவளுக்கு எதிர்ப்பக்கம் கோபம் தலைக்கேறி கண்கள் சிவந்து நின்றிருந்தான் சேனாபதி.
“என் உயிரை எடுக்கவே வந்திருக்கியா” என்று அவளை நோக்கி நகர்ந்தவனை முன்னில் வந்து தடுத்த கதிரவன் “ப்ளீஸ்ண்ணே நான் பேசுறேன்” என்றுவிட்டு.
“என்னம்மா நீ! இப்படி பண்ற யோசிக்காம இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு செய்யலாமா, முதல்ல வீட்ல என்ன சொல்லிட்டு வந்த தேடமாட்டங்களா” என்க, சேனாவின் விழிகள் அவளைக் கூர்மையாகப்பார்த்தது.
“வீட்ல வேலை செய்ற அக்காகிட்ட, நான் உங்ககூட வந்தது யாருக்கும் தெரியாது”.
“ஆனா அவங்க நீ குளிக்கறதா சொன்னாங்க!” என்றான் கதிரவன் சந்தேகமாக.
“வீட்டு பொண்ணைப்பத்தி வந்தவங்ககிட்ட எப்படி தப்பா சொல்ல அதனால அப்படி சொல்லிட்டாங்க” என்றவள் “நீங்கப் போலாம் என் வழியை நான் பாத்துக்குறேன்” என்றாள்.
“எப்படி? அடுத்த கிணறு எங்கேயிருக்குன்னு தேடிப்போகப்போறியா, உனக்கு என்ன பைத்தியமா எதுக்குடி இப்போ கிணத்துல குதிச்ச” என்றான் சேனா அவளை நெருங்கி.
“ஏன் இப்படி செஞ்சீங்க” என்றாள் மெல்லிய தேம்பலோடு அந்த இருளில் அவள் கண்ணீரை காண முடியவில்லை என்றாலும் அந்த விழிகள் நிறைவதை உணர முடிந்தது “என்னோட லைப் என் இஷ்டம்” என்றவன் அவளிடமிருந்து விலகி நின்றான்.
“என்னனு கேளுடா” என்றான் கதிரிடம்.
“திலோ ஏன்மா இப்படிலாம் பண்ற” என்ற கதிருக்கு இப்பொழுதுதான் அவளின் மனநிலை புரிந்தது, சேனாவை விரும்புகிறாள் அதனாலே அவன் கூறிய வார்த்தைகளை அவளால் ஜீரணிக்கமுடியவில்லை என்பதும் புரிந்தது, என்றாலும் ஒரே நாளில் எப்படி இது சாத்தயம் என்ற கேள்விக்கு மட்டும் அவனுக்கு விடை தெரியவில்லை.
அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லையே இது நான்கு வருட காதல் என்று.
“இங்க பாரு எதா இருந்தாலும் பேசலாம் இப்படி யோசிக்காம எந்த விஷயமும் செய்யக் கூடாது, இப்படி கிணத்துல குதிக்கவா உங்க தாத்தா உன்னை இவ்ளோ கஷ்டப்பட்டு வளத்தாரு, அவர் ஆத்மா வருத்தப்படாதா” என்றவன் அவள் குளிரில் நடுங்குவதை பார்த்து.
“வேற துணி எடுத்துட்டு வந்துருக்கியா” என்றான்.
“ஹ்ம்ம்” என்றாள் மெல்ல.
“சரி இரு நான் பொய் பேக் எடுத்துட்டு வரேன்” என்று திரும்பி நடக்க “கதிர் என்னோட ட்ரெஸ்ஸும் எடுத்துட்டுவா” என்றான் அவனிடம் சேனா.
மீண்டும் மேலேறி வண்டியிலிருந்து அவளின் பையை எடுத்தவன் சேனாவின் பேகிலிருந்து அவனுக்குத் துணிகளையும் எடுத்துவந்தான், வெட்டவெளியில் எங்கு உடைமாற்ற இரண்டு இடங்களில் சிறிய வெளிச்சம் தெரிந்தது, மோட்டார் அறை என்று புரிய அதன் அருகில் நெருங்கிப் பார்த்தனர்.
கதவு பூட்டப்பட்டிருந்தது மெதுவாக இழுத்ததற்க்கே அவன் கையேடு வந்துவிட்டது பூட்டு ஒருமுறை நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் உள்ளே சென்று உடையை மாற்றிக்கொண்டாள் ஆண்கள் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்றிருந்தனர்.
கதிருக்குச் சேனாபதியிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது எப்படி கேட்க என்று தயங்கி நின்றான், இதுவரை யாரிடமும் சொல்லாத அவனின் சில ரகசியங்களை எதற்க்காகத் திலோத்தமாவிடம் கூறினான் என்ற கேள்வி அவன் மண்டையை குடைந்துகொண்டே இருந்தது, ஒருவேளை அண்ணனுக்கும் திலோவின் மேல் விருப்பம் இருக்குமோ என்ற யோசனையில் நின்றிருந்தான்.
உடைமாற்றி வந்தவள் அவர்களின் பின்னே வந்து நின்றாள் சேனாவும் சென்று உடைமாற்றி வந்தான் “என்ன பன்றதா இருக்க” என்றான் சேனாபதி அவளைப் பார்த்து.
“அடிச்சேன்னா பாரு” என்று கை ஓங்கி அவளை நெருங்கினான் சேனாபதி, அவள் மிரண்டு பின்னில் செல்ல இறுக்கமாக அவள் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து நிறுத்தினான்.
அவன் மார்பில் முட்டி நின்றவள் சட்டென்று விலகி நின்றாள், பிடித்த பிடியை விடாமல் அவளை இழுத்துச்சென்றான் சேனா “விடுங்க விடுங்க நானே போய்க்கிறேன்” என்று கையை விடுவிக்கப் பார்த்தாள் திலோத்தமா.
அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது “எடுக்கச் சொல்லுடா” என்றான் சேனா.
“எடுமா வீட்டில இருந்து கூப்பிட போறாங்க” என்றான் கதிர்.
“திலோத்தமா… திலோ…” என்ற தந்தையின் அலறலில் “சொல்லுங்க” என்றாள் மெல்ல.
“என்ன சொல்லணும் என்ன நெனச்சுட்டு இருக்க மனசுல” என்றார் கரண்.
“என் மனசுல நெறய இருக்கு அதைப் பத்திலாம் உங்களுக்குக் கவலை இல்லையே”.
“ரெண்டு வருஷமா உனக்கு மாப்ள பாக்குறேன் ஒருதடவை கூட எந்த மாப்பிளை போட்டோவும் பாக்கல, சரி இந்தத் தடவ நேர்லயே வரியேன்னு சந்தோஷப்பட்டா இப்படி இவ்ளோ தூரம் வந்துட்டு யார்கிட்டயும் சொல்லாம போயிட்ட, அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல, நீ வரேன்னு சொன்னதாலதான் அவங்கள வரச் சொன்னேன் இப்படி செஞ்சா என்ன அர்த்தம்”-கரண்.
“என்ன அர்த்தம் நீங்கப் பாக்குற எந்த மாப்பிள்ளையும் பிடிக்கலன்னு அர்த்தம்.
“நீயும் உன் அம்மா மாதிரி அவ குணம் தானே உனக்கும் வரும் உன் இஷ்டத்துக்கு ஊர் சுத்துற” என்று கரண் கூற திலோத்தமாவின் பொறுமை அனைத்தும் பறந்தது.
“அவங்க அப்படினு தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க, உங்க அம்மாவைக் காப்பாத்த உங்களுக்கு அவங்க காசுத் தேவை பட்டுச்சு, உங்க தேவை தீர்ந்ததும் எல்லாத்தயும் தூக்கி வீசியாச்சு இந்தச் சொத்து இல்லனா என்னையும் எப்போவோ தெருவுல வீசியிருப்பீங்க, ஐ ஹெட் யு, ஐ ஹெட் யு” என்றவள் அலைபேசியை எடுத்து எறிந்தாள் அது எதிரில் பாய்ந்து வந்த டேங்கர் லாரியின் டயரில் நசுங்கி சிதறியது.
மொத்தத்தில் வெறிபிடித்தவள் போல் நின்றவளை கதிர் அதிர்ச்சியோடு பார்த்து நிற்க, அவளை நெருங்கிக் கையைப் பிடித்தான் சேனாபதி “விடு என்னை எனக்கு யாரும் வேண்டாம் ஐ ஹேட் யு” என்று அவனைத் தள்ளிவிடப் பார்க்கக் கல்போல் நின்றிருந்தான்.
அவள் பெரிதாக அழத்தொடங்க திலோத்தமாவை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வண்டியை நோக்கி நடந்தான்.