காஞ்சனா.. ‘நிஜமாத்தாண்ணி.. அதிலும் அந்த அரவிந்தன் நம்ம ஆதியை ஆதிக்கான்னு கூப்பிட்டான் பாரு.. என்னால நம்பவே முடியல.. நான் கூட கணேசண்ணா பையன் வந்திருப்பான் போல.. அதான் பயந்துட்டு நம்மகிட்ட மரியாதையா நடந்துக்கிறானோனு பார்த்தா ரூபனும் வரல..” என நம்ப முடியாத வியப்போடு சொல்லி..
இளங்கோவிடம்.. ’இதுல கிளம்பும்போது இரண்டு நாள் இருந்துட்டு போன்னு மாதவிம்மா சொன்னாங்க பாரு இளங்கோ.. எனக்கு மூச்சே நிக்கிறமாதிரி ஆகிடுச்சி..” என தன் தந்தையின் பதினாறாம் நாள் காரியத்திற்கு சென்று வந்த காஞ்சனா ஆச்சர்யம் தாளாமல் ஆர்பரித்துக்கொண்டிருந்தார்
‘நா.. நான் என்ன சொல்றது மாமா..?” என திணறி.. ‘எல்லாமும்தான் அம்மா சொல்லிட்டாங்களே.. இருங்க டிரெஸ் சேன்ஜ் செய்துட்டு டீ போட்டுட்டு வரேன்..” என அவசரமாய் உள்ளே சென்றாள்.
காஞ்சனா.. ‘என்னாலயே அங்க நடந்ததை நம்ப முடியல.. ஆதி என்ன செய்வா..? அதான் தடுமாறுறா..” என்றார் இயல்பாக.
‘டீ வேணாம் ஆதி.. டிரெஸ் மாத்திட்டு கொஞ்சம் தண்ணி கொண்டு வா..” என்றான் கர்ணன்.
‘இரு கர்ணா நான் எடுத்துட்டு வரேன்..” என காஞ்சனா எழவும்.. ‘உக்காருங்கத்தை.. ஆதியை வர வைக்கத்தான் தண்ணி கேட்டேன்.. இன்னும் ஒரு வாரத்துல நான் கிளம்பிடுவேன்.. அதுக்குள்ள ஆதி கல்யாணம் பத்தி முடிவெடுக்கனும்..” என்றான்.
இத்தனை நாள் திருமணத்திற்கு தயாராய் இருந்த ஆதிரைக்கு தற்போது மனம் பெரிதாய் படபடத்தது. அச்சோ கர்ணா மாமாக்கு என்ன பதில் சொல்றது.? என யோசித்திருக்க..
‘அந்த அதிரூபன் என்ன தொழில் பண்றான்த்த..?”
‘ஆம்புலன்ஸ் ஓட்டுறான் கர்ணா.. சொந்தமா மூனு ஆம்புலன்ஸ் வச்சிருக்கானாம்.. ஏன் கேக்குற.?”என்றார்.
‘அன்னைக்கு ஒத்த ஆளா அத்தனை பேரை அடிச்சான்.. உடம்பும் ரொம்ப ஃபிட்டா வச்சிருக்கான்.. இருக்கிற உயரத்துக்கும் அவன் கோபத்துக்கும் போலீசா இருப்பானோன்னு நினைச்சேன்..” என ஆதிரைக்கும் கேட்கும்படி சொன்னவன்.. ‘குழந்தை மட்டும் இல்லன்னா ஆதியை அவனுக்கே கொடுத்திடலாம்.. ரொம்ப நல்ல குணமா தெரியறான்..” என்றான் சற்று சத்தம் குறைத்து.
‘ஆதிக்கு கேட்டுட போகுது கர்ணா.. ஏற்கனவே அவங்கப்பா இல்லாததால இரண்டாந்தாரமா கேக்குறாங்கனு குறைபட்டா.. நீயே இப்படி சொன்னா ரொம்ப வருந்துவா..” என்றார்.
நான் நினைச்சது சரிதான்.. உங்களுக்கு ஆதியை புரியலைத்தை என மனதில் நினைத்தவன்.. ‘ம்..” என தலையசைத்து.. ‘ஆதி.. தண்ணி எங்க.?” என குரலுயர்த்தினான்.
‘இதோ மாமா..” என தண்ணீரோடு வெளியே வர.. வாங்கியவன்.. ‘அப்படி உக்காரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”
அத்தனை படபடப்போடு திண்ணையில் அமர்ந்தாள் ஆதிரை.
‘அரவிந்தன் உன்கிட்ட என்ன பேசினான்.? என்னவோ பயந்துட்டே பேசினமாதிரி தெரிஞ்சது..?” என்றான்.
‘நம்ம எல்லார் முன்னவும் பேசினதுதான கர்ணா.?” என கர்ணனிடம் கேட்க.. கர்ணன் ஆதிரையின் முகம் பார்க்க செய்கை செய்ய.. சந்தேகித்த காஞ்சனா ‘உன்கிட்ட தனியா பேசினானா.?” என்றார் மகளிடம்.
ஆமாம் என தலையசைத்தாள் ஆதிரை. ஆச்சர்யப்பட்ட காஞ்சனா.. ‘என்ன பேசினான்..?” என்றார் ஆவலோடு.
ஆதிரை அமைதிகாக்க.. ‘ம்.. அத்தை கேக்குறாங்கள்ல.? சொல்லு ஆதி.. ரூபன் காதல் சொன்னதெல்லாம் சமத்தா அத்தைகிட்ட சொன்னதான.? இவன் பேசினதை சொல்ல எதுக்கு இத்தனை தயக்கம்.?” என ஊக்கினான் கர்ணன்.
காஞ்சனா.. ‘அவ சொல்லலைன்னா போறா.. உனக்கு தெரியுமா கர்ணா.? உன் முன்னதான் பேசினானா.? நான் எங்க போயிருந்தேன்..?”
கர்ணன்.. ‘அவன் பேசினது தெரியும்த்த.. ஆனா என்ன பேசினான்னு தெரியாது.. நான் மரத்தடியில உக்கார்ந்திருந்தேன்.. நீங்க உங்கப்பாக்கு கும்பிட தேவையானதை எடுத்து வச்சிட்டிருந்திங்க.. அபி கடைக்கு போயிருந்தான்..” என்றான்.
ஆதிரையும் அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என கவனித்தாள்தான், ஆனால் அந்த கடையில் அபிமன்யு கேட்ட குளிர்பானம் இல்லாததால் உடனே திரும்பியன்.. சற்று தள்ளியிருக்கும் சுவர் மறைவிலிருந்து அரவிந்தன் ஆதிரையிடம் பேசியதை கவனித்ததும்.. அதை கர்ணனிடம் சொன்னதும் ஆதிரைக்கு தெரியாது.
மகளின் தவிப்பான முகம் கண்ட காஞ்சனா.. ‘சொல்லு ஆதி.. அரவிந்தன் எதாவது தப்பா பேசினானா.? சண்டை வரும்னு ஏது அமைதியா இருந்திட்டியா.?” என்றார் பதைப்பாக.
‘இல்லம்மா.. அவன் தப்பா பேசுல..” என அவசரமாய் மறுக்க.. ‘அப்போ என்ன பேசினான்.? நீ ஏன் இவ்வளோ டென்சனா இருக்க.?” என்றார் சற்று குரலுயர்த்தி.
‘தாத்தாக்கு முப்பது கும்பிட.. திதி குடுக்கன்னு இனி எல்லாத்துக்கும் வந்திடுங்க.. நானும் பாட்டியும் உங்களை ஒன்னும் சொல்லமாட்டேன்னு சொன்னான் ம்மா..” என நிறுத்த..
‘அவ்வளோதானா ஆதி.? பத்து நிமிசம் பக்கம் பேசினானே..?” என்றான் கர்ணன்.
கர்ணன் கேட்கும் த்வணியிலேயே அனைத்தும் தெரிந்துகொண்டுதான் கேட்கிறார் என புரிந்த ஆதிரை.. இதற்குமேல் மறைக்க வேணாம் என நினைத்து.. ‘நம்மகிட்ட சண்டை போட்டாலோ.. இல்ல நம்மளை மரியாதை குறைவா நடத்துனாலோ.. சும்மா அடிதடிலாம் கிடையாது.. கைய கால உடைச்சி கோர்ட்ல கேஸ் போட்டு மொத்த சொத்தையும் நமக்கு வாங்கி கொடுத்துடுவேன்னு அந்த.. அ.. அதிரூபன் மிரட்டியிருக்கான்.. அதான் அரவிந்தனும் அவங்க பாட்டியும் இன்னைக்கு அடங்கியிருந்திருக்காங்க..” என முடித்து கர்ணனை பார்க்க.. அவ்வளவுதானா என கர்ணனும் பார்க்க..
‘அப்புறம்..” என துப்பட்டாவை நெருக்கி பிடித்தவள்.. ‘நான் அங்கிருந்து வர வரைக்கும் என்னை கவனிக்கிறதை தவிர வேற ஒன்னும் செய்ய கூடாதுன்னு அரவிந்தனை மிரட்டியிருக்கான்..” என்றாள் தலைகுனிந்தவாறு.
எத்தனை ஒதுங்கிப்போனாலும் எதற்கு இப்படி அக்கறை காட்டுகிறான் என சிறு கோபத்தோடு சங்கடமாய் உணர்ந்த காஞ்சனா.. ‘அன்னைக்கு சாவு வீட்ல மாதிரி ஆகிடக்கூடாதேன்னு என் மேல உள்ள பாசத்துல கணேசண்ணாவும் மாரி அப்பாவும் அவன்கிட்ட சொல்லி மிரட்ட சொல்லியிருப்பாங்க..” என சமாளித்தார்.
வார்த்தைக்கு வார்த்தை அதிரூபனை மாமா என சொன்னதும்.. எதாவது தவறிருந்தால் என்கிட்ட சொல்லுங்க.. மாமாக்கு ஃபோன் செய்திடாதிங்க என அரவிந்தன் கெஞ்சியதாகவும் அபிமன்யு கர்ணனிடம் சொல்லியிருக்க, ஆதிரை அதை சொல்லாமல் மறைத்ததால் மீண்டும்.. ‘அவ்வளோதான ஆதி.?” என்றான் கர்ணன்.
‘வழவழன்னு இன்னும் என்னென்னவோ சொல்லிட்டிருந்தான் மாமா.. எனக்கு மறந்துடுச்சி..” என்றாள் தலைகுனிந்தவாறு.
‘போகட்டும் விடு..” என நம்பாத்தன்மையோடு சொன்னவன்.. ‘அத்தை.. நம்ம அபியோட படிச்ச பையனோட அண்ணனுக்கு பொண்ணு பார்த்திட்டிருக்காங்க.. நான் நம்ம ஆதியை சொல்லியிருக்கேன்.. உங்கப்பா சாவுக்கும் முன்னவே ஆதியை பார்க்க வரன்னாங்க.. இப்படி ஆகவும் நான்தான் காரியம் முடிட்டும்னு சொல்லியிருந்தேன்.. அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்பிடுவேன்.. அதுக்குள்ள வரவச்சி முடிவு செய்துக்கலாம்.. கல்யாணம் நாலஞ்சி மாசம் கழிச்சி செய்துக்கலாம்..” என்றான் ஆதிரையை பார்த்தவாறு.
ஆதிரையின் முகம் பதட்டத்திற்குள்ளாக.. ‘என்ன கர்ணா கல்யாணம் வரைக்கும் முடிவெடுத்திட்ட.? நம்ம ஆதியை அந்த பையனுக்கு பிடிக்கனும்.. ஆதிக்கு அவனை பிடிக்கனும்.. இப்படி நிறைய இருக்குல்ல.?“ என்றார் காஞ்சனா.
கர்ணன்.. ‘பையனை நான் பார்த்துருக்கேன் அத்தை.. நல்ல பர்சனாலிட்டியா இருப்பான்.. அருமையான குடும்பம்.. கண்டிப்பா ஆதிக்கு பிடிக்கும்.. அப்புறம் நம்ம ஆதிம்மாவை பிடிக்கலன்னு சொல்றதுக்கும் ஆளிருக்கா.?” என பெருமையாக சொல்லி..
‘ஒருவேளை ஆதிக்கு பிடிக்கலன்னா வேற இடம் பார்க்கலாம்.. கைவசம் ஆறேழு பசங்க இருக்காங்க.. இந்த பையனுக்காக அவங்களை வெய்ட் லிஸ்ட்ல வச்சிருக்கேன்..” என்றான்.
‘சரி கர்ணனா உன் இஷ்டம் போல செய்..” என காஞ்சனா சொல்ல.. பதறிய மனதை சமன்செய்ய போராடிக்கொண்டிருந்தாள் ஆதிரை.
‘நாளைக்கு வர சொல்லிடறேன்த்த.. நானும் அபியும் கிளம்பறதுக்குள்ள ஆதிக்கு மாப்பிள்ளை உறுதி செய்தாகனும்..” என்றான் முடிவுபோல்.
‘மா.. மாமா.. கொஞ்ச நாள் போகட்டுமே..” என ஆதிரை பதற..
‘இல்லயில்ல.. இனி அப்படி சொல்லமாட்டேன்..” என்றாள் அவசரமாக.
‘முன்னாடி சொன்னது சொன்னதுதான.? என்னவோ உன்னை தவிக்கவிட்டு போனமாதிரி அப்படி அழுத.? இப்போ என்னாச்சு.? நாளைக்கு மாப்பிள்ளை வீடு வருவாங்க..” என அதட்டியவன்..
காஞ்சனாவிடம்.. ‘எல்லாம் சரிவந்தா ஒரே வாரத்துல கல்யாணத்தையும் கூட முடிச்சிடலாம்த்த..” என்றான்.
அந்த நேரம் இளங்கோ வரவும்.. விசயத்தை சொன்ன கர்ணன்.. ‘நாளைக்கு வேலைக்கு போகாதிங்க மாமா.. அந்த பையனை கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.. ஆதி போட்டோவை வாட்ஸ்ஆப்ல அனுப்பினேன்.. போட்டோ பார்த்ததும் ஆதியை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.. அவங்கப்பாம்மாவும் அந்த பையன் இஷ்டம்தான்னுட்டாங்களாம்.. எல்லாரும் இருந்தோம்னா கல்யாணம் முடிவு செய்ய வசதியாயிருக்கும்..” என அதிர வைத்தான் ஆதிரையை.
இந்தளவுக்கு பேசி முடிச்சிட்டாங்களா என பேரதிர்ச்சியானாள் ஆதிரை. ‘ஏன் கர்ணா இவ்வளோ அவசரம்.? ஒரு வாரத்துல எப்படி ஏற்பாடு செய்ய முடியும்.?” என்றார் காஞ்சனா.
அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் வீட்டினுள் ஓடியவள் அறையில் புகுந்து கதவடைத்துக்கொண்டாள்.
‘இத்தனை அவசரம் எதுக்கு கர்ணா.? கல்யாண விசயம் எதவாது ஏடாகுடமாகிடுச்சினா திருப்பி அமைச்சிக்க முடியுமா..?” என இளங்கோ எடுத்துரைக்கவும்.. ‘அத்தை.. உங்ககிட்ட பேசனும்.. ஆதி இன்னும் கொஞ்ச நேரத்துக்கு வெளில வரமாட்டா.. வாங்க எல்லாரும் மாமா வீட்டுக்கு போலாம்..” என கர்ணன் சொல்ல அனைவரும் அருகிருக்கும் இளங்கோ வீட்டிற்கு சென்றனர்.
‘ம்..” என மூச்சிழுத்து.. ‘அத்தை.. நம்ம ஆதி அந்த அதிரூபனை விரும்புறா..” என கர்ணன் சொல்ல.. ‘இருக்கவே இருக்காது..” என திடமாய் மறுத்தார் காஞ்சனா.
கர்ணன் சொன்னால் மிகச்சரியாய்தான் இருக்கும்.. ஆனாலும் அந்த பையனுக்கு கேட்கும்போது இரண்டாம்தாரம் என ஆதிரை அழுதது நினைவு வர குழப்பமானார் இளங்கோ.
‘உங்க குழப்பம் புரியுது மாமா.. ரூபனுக்கு பொண்ணு கேட்டப்போ ஆதிக்கு இப்படி எண்ணம் இருக்கல.. ஆனா இப்போ விரும்புறா.. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல.. சாவு வீட்லன்னு நமக்காக சண்டை போட்டதுல மனசு மாறிட்டா..” என்றான் உறுதியாக.
‘அப்போ ஆதிகிட்டயே கேட்டுருக்கலாமே கர்ணா.. ஆதி முடிவு தெரியாம மாப்பிள்ளையை வேற நாளைக்கு வர சொல்லியிருக்க.. அவங்களுக்கு என்ன பதில் சொல்றது.? எனக்கு ஒன்னும் புரியல போ..” என புலம்பினார் இளங்கோ.
காஞ்சனா.. ‘நிச்சயம் ஆதி அவனை விரும்பமாட்டா கர்ணா.. நீ எதோ தப்பா புரிஞ்சிருக்கன்னு நினைக்கிறேன்.. ஒருவேளை நீ சொல்ற மாதிரியா இருந்தா என்கிட்ட கண்டிப்பா சொல்லிருப்பா..” என்றார் நம்பிக்கையாக.
ஆனாலும் தீர தெரிஞ்சிக்காம எதையும் தப்பா யோசிக்க கூடாதுன்னு அன்னைக்கு அமைதியானேன்.. உங்கப்பா சாவுக்கப்புறம் இந்த பதினைஞ்சி நாளா ஆதி முகமே சரியில்ல.. உங்கப்பா வீட்டுக்கு இன்னைக்கு ரூபன் வருவானான்னு அவ முகத்துல ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. நிச்சயம் இது காதல்தான்..
அவ வாயாலயே அதை வரவைக்கத்தான் இன்னைக்கு கல்யாணம் பத்தி பேசினேன்.. நாளைக்கு மாப்பிள்ளை பார்க்க வராங்கன்னு பொய்தான் சொன்னேன்.. அப்பவாவது அவ மனசை திறப்பாளான்னு பார்த்தா அழுத்தமா உக்கார்ந்திட்டிருந்தா.. அதான் ஒரே வாரத்துல கல்யாணம்னு சொன்னேன்.. பதறிட்டு உள்ள ஓடிட்டா.. நீங்க பொறுமையா கேட்டு பாருங்கத்த..” என்றான்.