இவன் கனவை நினைத்து பரிதவித்து, மனதோடு மல்லுகட்டிக்கொண்டு இருக்க
“இந்தாடி, இங்க நா பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், உன் மவன பார்த்தியா, இன்னமும் கனா கண்டுட்டு இருக்குறத, புள்ளயவா பெத்து வச்சிருக்க நீ” சமரசு ஏகத்துக்கும் எகிற
“ஆமா, அப்பன் எப்படியோ, புள்ளயும் அப்படி. நீர் மட்டுந்தேன், இவனை நினச்சு கவல படுதீரு, நான் அப்படியே சந்தோஷ கப்பல்ல மெதக்குறேன் பாரு” என பதிலுக்கு நாச்சியும் எகிற
“ஆமாமாம்.. உங்கொப்பன் வாங்கி விட்ருக்கான்ல.. கப்பல்ல மட்டுமா மெதப்ப, என்னயவே கடல்ல தூக்கி போட்டு, கட்டுமரமாக்கி அதுலையும் மெதப்படி நீ” நாச்சி எட்டடி பாய்ந்தால் சமரசு எண்பதடி பாய, இருவரும் எலியும் பூனையுமாய் சிலிர்த்து கொண்டு களத்தில் இறங்கினர்.
“இந்தா, ஆரம்பிச்சிட்டாக இரண்டு பேரும்.. காலம்போன காலத்துல கபடி ஆடிக்கிட்டு.. அதுவும் வாயாலையே” தலையில் அடித்துகொண்டான் செல்லப்பாண்டி
‘லேய், செல்லபாண்டி.. அவுகல விடுல.. விக்ராவை பாருடா.. ஏண்டா இவன் பேய் புடிச்ச மாதிரி இருக்கான்’ வீர பாண்டி கேட்டு முடிக்கும் முன், “பேய ஓட்டிட்டா போச்சு” பேச்சு பேச்சாக இருக்கும் போதே, விக்ராவின் பிடறியில் ‘பொடீர்’ என ஒன்று வைத்தான் செல்லபாண்டி
“அடங்.. கோ…” விக்ரவாண்டி என்ன சொல்ல வந்தானோ, அதற்கு முன் அவன் வாயை அடைத்த, செல்லபாண்டி, எதிரில் இருந்த பெரியவர்களை கண் ஜாடை காட்ட, சொல்ல வந்த வார்த்தைகள் அப்படியே தொண்டை குழிக்குள் இறங்கி கொள்ள, அதற்குள் நாச்சியுடன் இட்ட வாய் தகறாரு, வழக்கம் போல் வாரிக்கொண்டு சென்றுவிட, மனைவியிடம் தோற்ற கோபம், மகனிடம் வெற்றிகரமாய் திரும்பியதில் “ஏலே.. விக்ரவாண்டி” சமரசு உறும
தன் வாயிலிருந்த செல்லத்தின் கையை தட்டிவிட்டதோடு, “சொல்லுங்க சமரசபாண்டி” நேற்று அவரிடம் வகையாய் வாங்கிய அடி, அவன் வார்த்தைகளில் நக்கலாய் தெறித்தது.
“அடி செருப்பால.. பேர் சொல்லியா கூப்புடுத!”
“பேர் சொல்லி கூப்டா.. செருப்பால அடிப்பியோ தாடி, அப்போ நீ மட்டும் பேர் சொல்லி கூப்டலாமோ”
“ஆமாம் இவன் பெரிய வெண்ண, மரியாதை கொடுத்து கூப்ட.. முதல்ல அப்பான்னு கூப்பிட்டு பழகு, டாடி, தாடின்னுட்டு.. ச்சீ” என முகம் சுளிக்க
“இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை! ஏன் தூங்குற என்னை டார்ச்சர், பண்ணிட்டு, இருக்க? தாடின்னு கூப்டுறதான் பிரச்சனையா? இனி கூப்பிடலை சரியா”
“என்ன பிரச்சனையா?” “நீ தான்டா பிரச்சனை, நீ மட்டும் தான் பிரச்சனை, உயிரோட இருக்குற என் ஆத்தாளுக்கு செத்து போய்ட்டானு எதுக்குவே பேனர் கட்டுன”
“அப்ப இன்னும் அது சாவலையா, பேனருக்கு இழைச்ச காசெல்லாம் தெண்டமா? பொட்டு தூக்கமில்லாமல் நானே டிசைன் பண்ணினதெல்லாம் வேஸ்ட்டா?” இவன் புலம்ப
“ஏலே, என் ஆத்தா உசுரும், பேதில போற பேனரும் ஒன்னாவே..? எட்டி மிதிச்சன்னு வையி” காலை தூக்கி கொண்டு இவன் பக்கம் வர
“யம்மாஆஆஆ” அலறிக்கொண்டு, நாச்சியின் பின் மறைந்ததோடு “பாருமா உன் புருஷனை, காலை ஓங்கிகிட்டு எங்க வராருன்னு.. எனக்குனு இருக்குறது ஒன்னே ஒன்னு, அதையும் இல்லாம ஆக்க போறாரு.. அப்புறம் உனக்கு பேரன் எப்படி வருவான்.. பேத்தி எப்படி வருவா?”
“ஆமால.. ஏய்யா.. உமக்கு அறிவிருக்கா இல்லையா..! எங்க ஏறி மிதிக்க வாரீரு புள்ளைய?”
“எனக்கு நிறையா தான் இருக்கு, உனக்கும் உம்மவனுக்கும் தான் இல்லாமல் போச்சு போல.. ஆத்தாளும், மகனும் பேசுற பேச்சை பாரு, பேரனாம், பேத்தியாம்”
“ஏண்டா, உனக்கு மட்டும் தான் ஒன்னு இருக்கு, மத்தவனுக்கெல்லாம் ஐஞ்சாறு இருக்கு பாரு.. ஏலேய் நீ இப்படியே பேசிட்டு கிட.. இருக்குற அந்த ஒன்னையும் களைய புடுங்கி எறியுற மாதிரி எறிஞ்சிடுறேன்”
“புல்லுகட்டோ, புண்ணாக்கோ, அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ பண்ற வேலைக்கு அடுத்து அதை தான் செய்ய போறேன். எங்காத்தா, அதுபாட்டுக்கு குடுக்குறத தின்னுபுட்டு ஒரு மூலையில் செவனேன்னு கிடக்கு, அது சாகுறதுல உனக்கென்னவே சந்தோஷம்?”
“சந்தோஷமா.. சந்தோஷம்லா இல்ல தாடி, நிம்மதி தாடி, நிம்மதி. நிம்மதியா, ஹைத்ராபாத்ல வேலை பார்க்குற என்னை ‘ஏலேய், உன் அப்பத்தா முடியாம கிடக்குடா.. கடைசியா உன்னைய பார்கனும்டா, உடனே கிளம்பி வாடா, பால் ஊத்த வாடா, பெருமாள் கோவில் தீர்த்தம் ஊத்த வாடா ன்னு என் உயிரை எடுக்க மாட்டிங்கல்ல, அதுக்கு தான் பேனர் கட்டுனேன்”
“ஏண்டா.. அதுக்காக என் ஆத்தாளை சாக சொல்றியா?”
“சும்மா மனுசன நிம்மதியா இருக்க விடாமல் செஞ்சா, நான் ஏடாகூடமா இப்படி தான் பண்ணுவேன்”
“உன் ஆத்தா கூட தான் என்னைய நிம்மதியா இருக்க விட மாட்றா.. நீ என் ஆத்தாளுக்கு பேனர் கட்டுனல்ல, இரு நான் உன் ஆத்தாளுக்கு பேனர் கட்டுறேன்” சொல்லி முடிக்கும் முன், அலறிவிட்டார் நாச்சியா.
“ஏன்யா.. வாழ வேண்டிய வயசில என்னைய எதுக்குய்யா சாக சொல்லுத” எங்கே பேனர் கட்டிவிடுவாறோ என்ற பீதி நாச்சியிடம்.
“ஆமா, ஐம்பத்திமூனு வயசு உனக்கு வாழ வேண்டிய வயசா? நீயே சாக யோசிக்க, என் ஆத்தா உன்ன விட இருபது வயசு தான் மூத்தது அது வாழறதுல என்னடி தப்பு..” நாச்சியிடம் காய்ந்தவர்,
விக்ரா பக்கம் திரும்பி
“ஏவே நீ ஐதராபாத் போ.. இல்லை அலிபாபா குகைக்கே போ.. எங்க வேணா போவே, இனி என் அத்தாளுக்கு கொள்ளி கூட வைக்க நீ வர வேணாம், நீ இல்லனா, இங்க ஒரு மயிரையும் புடுங்க முடியாதுன்னு நினைச்சியாவே. இனி கனவுல கூட நினைச்சு பார்த்துடாத என் ஆத்தாளுக்கு கொள்ளி நான் வச்சுப்பேன்.. இனி உன்னை கூப்புட்டா என்னை செருப்பால அடிவே” என்றவர்
“உன்னை ஐதராபாத்துக்கும், பெரம்பலூர்க்கும் அலைய விடறதுக்காக பேனர் கட்டுன மாதிரி தெரியல.. நேத்து உன்னையை அடிச்சதுக்கு, எங்கத்தாளை வச்சு பழி தீர்க்குற, அப்படி தானே”
‘ஐய்யய்யோ சரியா கண்டு பிடிச்சுட்டாரே’ இவன் திருதிருக்க
“நேத்து நைட் ஊருக்கு வந்த உன்னை ‘நேரமாகியும் ஆளக் காணலை, போய் என்னாச்சு, ஏதாச்சுன்னு பார்த்துட்டு வாடா, என் ராசுவ’..ன்னு என் ஆத்தா தாண்டா பார்த்துட்டு வர சொல்லுச்சு. வந்து பார்த்த அப்புறம் தான்டா உன் பவுசியெல்லாம் தெரிஞ்சது” நேற்றைய கோபத்தின் ஜூவாலை இன்னமும் சமரசுவின் கண்களில் தெறித்து கொண்டிருக்க, அப்படியே தாயின் பின்பக்கமாய் ஒதுங்கினான் விக்ரா.
பேனர் வைத்ததற்கு தான் இத்தனை கோபமென நினைத்து “ஏண்டா, இவரு இப்படி கோபப்படுற அளவுக்கு, அப்படி என்னடா பேனர் வச்ச, என்கிட்ட காட்டவே இல்லை. எங்க வச்சிருக்குற, சொல்லு.. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரேன்” கண்கள் மின்ன, நாச்சியா இவன் கதை கடிக்க,
“ஏண்டி.. நீ பார்த்துட்டு மட்டுமா வருவ? பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமாவுல வருவ! மாமியர் செத்தா மருமகளுக்கு கொண்டாட்டம் தான! ச்சை இதெல்லாம் ஒரு அல்ப ஆசை, த்தூ” ஏக கடுப்பு இன்னமும் அவரிடம் மிச்சமிருக்க
அதற்குள், தன் மொபைலை தேடி எடுத்து வந்து, கேலரியில் கிடந்த போட்டோவை எடுத்து, மெத்தனமாய் சமரசுவை ஒரு லுக் விட்டபடி “நீ ஏன் ம்மோவ், பேனரை பார்க்க அங்க வர போகனும்.. உனக்காகவே போட்டோவ எடுத்து வச்சிருக்கேன் மா.. பாரு இங்க இருந்தே நல்லா பாரு” விக்ரா, நாச்சியின் பக்கமாய் போனை கொடுக்க, அதை பார்க்கும் முன் ‘சுளீர்’ என விக்ராவின் பின்புறம் விருந்தது பலமாய் அடி,
“யோவ் தாடி.. திருப்பி அடிக்க மாட்டேன்னு தைரியத்துல ஆடுறியா? உனக்கு இருக்குயா ஒரு நாள்” வலியில் முகம் சுருக்கி, வார்த்தைகளை இவன் விட
“ஒரு நாளா? ஏன் அந்த ஒரு நாளில் என்ன புடுங்கி தள்ளிடுவியாம்? அதையும் பார்க்குறேன்” கையில் இருந்த குச்சியை தூக்கி போட்டு விட்டு இவர் குறையா கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் போனதும் அத்தனை பேருக்கும் நிம்மதி பெருமூச்சு கிளம்ப
பின்புறம் வலி போக தோய்த்து கொண்டிருந்தவனிடம் “உனக்கெல்லம் இன்னும் நாழு அடி சேர்த்து வைக்கனும், ஏண்டா, ஊரே வீட்டு வாசல்ல! ஒரு பத்து பேரு உன் ரூம் வாசல்ல! பத்தாததுக்கு பயர் சர்வீஸ் ஆளுக வேற.. இத்தனை பேரும் கிடந்து கத்தா கத்துறோம், அது கூட காதில் விழுகாத அளவுக்கு அப்படி என்னாடா தூக்கம் வேண்டி கிடக்கு” வீரபாண்டி அடுத்ததாய் ஆரம்பிக்க
பிறகு தேய்த்து கொள்ளலாம் என அலர்ட் ஆனவன் ‘டேய் விக்ரா, இவனுக உன் வாயை கிண்டுதானுக, சிக்கிறாத.. அதுவும் தாலிகட்டுற சீனெல்லாம் இவனுக காதுக்கு போச்சு, மானம் கோமனம் அளவுக்கு கூட மிஞ்சாதுவே’
‘ம்.. எல்லாம் பாக்கானுவ.. கெத்த விடாதவே.. சொங்கி மாதிரி பார்க்காதவே.. ம்.. அப்படி தான்.. புருவத்தை தூக்கி, முகத்தை இறுக்கி, கொஞ்சமும் சிரிக்காம நில்லுடா’ அப்போ தான் ஒரு ஹீரோ தோரணை வரும், என இவன் மெனக்கெட
“இவன் ஏண்டா இப்போ, வேட்டிக்குள்ள ஓணான் புகுந்த மாதிரி நிக்குறான்” என நாச்சியார் கேட்கவும்
ஙே என விழித்தவன் “ச்சீ, நீயெல்லாம் ஒரு தாயா? என்னை அசிங்க படுத்த வேற யாரும் வர வேணாம்.. நீ மட்டும் போதும். அசிங்கபடுத்தி ஆறடி குழியில் போட்டு மூடுறதுக்கு” ஹீரோவை ஜீரோவாக்கிய கடுப்பு அவனிடம்..
“டேய், இவன் இவ்வளவு கோப படுறானா, அப்போ தூக்கத்திலேயே ஏதொ சம்பவம் பண்ணிருக்காண்டா இவன்” வீரபாண்டி போட்டுவாங்க
“நேத்து பண்ணினதே பெரிய சம்பவம் இதுக்கு மேல இவன் வேற எதுவும் பண்ணனுமா என்ன?” செல்லபாண்டி சிரிக்க
“டேய், புரியற மாதிரி பேசி தொலைங்களேண்டா” நாச்சியா் எறிந்து விழ
“தெளிவா சொல்றேன் கேளும்மா” என விக்ரா தடுக்க தடுக்க பிளாஸ்பேக்கை ஓடவிட்டான் செல்லம்.
வேலை பார்க்கும் இடத்தில் விக்ரவாண்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறை விட்டிருந்தனர்.
அதோடு கோதையம்மாளின் உடல் நிலை சரியல்லையென, அவனது தந்தை நான்காவது முறையாய் போன்வழியாக கூறி இருக்க, கிளம்பி நேற்று பெரம்பலூர்க்கு வந்துவிட, பஸ் ஸ்டாண்டில் இருந்து விக்ராவை அழைத்து செல்ல, செல்லபாண்டி சைக்கிளை எடுத்து கொண்டு வந்திருந்தான்.
கையில் ஒரு லெதர் பேக்கும், தோளில் ஒரு லெதர் பேக்கும் சுமந்தபடி “ஏண்டா, ஊருக்குள்ள அவ்வளவு தூரம் போகனும் டூவிலர் எடுத்துட்டு வந்திருக்கலாம்ல” என விக்ரா கேட்க
அந்நேரம், இவர்கள் முன் சடன்பிரேக் அடித்து நின்றது பாக்ஸர் பைக், அதோடு பைக்கை உரும விட்டபடி, விக்ராவின் முகத்திற்கு நேராக ஹெட்லைட்டை அடிக்க,
முகத்திற்கு நேராய் விழுந்த வெளிச்சத்தை கை வைத்து மறைத்து, அந்த இடைவெளியில் பைக்கில் இருந்த வீரா, சங்கர் இருவரையும் கண்டு கொண்டவன் “ஏண்டா ஒருத்தன் வந்தா பத்தாதா? ஏண்டா அத்தனை பேரும் கிளம்பி வந்திருக்கீங்க” விக்ரா கேட்க
“டேய், நம்ப தாய்கிழவிக்கு தெரிஞ்சா விளக்கமாறு பிஞ்சுடும்ல.. ஒளிச்சு வைல.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்ற விக்ராவை, நயமாய் பேசி, ஆசைகாட்டி இழுத்து கொண்டு சென்றனர்.
மெயின் ரோட்டில் இருந்து பிரிந்த ஒற்றயடி பாதை கொண்ட சற்று உள் அடர்ந்த கருவேலமரங்கள் சூழ்ந்த பகுதி அது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக வீற்றிருந்த போஸ்ட் லைட்களின் உதவியால் வெகுவாய் இருட்டு இல்லை. ஆனால் அதிலும் இரண்டு மூன்று போஸ்ட் கம்பங்களில் இருந்த லைட்டுகள் பழுதாகி எறியாததால் சில இடங்களில் மட்டும் கருமையுடன் பீதி கொள்ள வைக்கும் இருட்டு சூழ்ந்திருந்தது.
சற்று வெளிச்சம் குறைந்த பகுதியாய் தேர்ந்தெடுத்து, மரத்தடியில் கும்பலாய் வட்டம் கட்டி அமர்ந்து முட்ட முட்ட குடித்துவிட்டு, செல்ல சண்டைகளும், சில்மிச பேச்சுகளுமாய் இளவட்டங்கள் எந்தவொரு கட்டுபாடுகளுமின்றி கும்மாளமிட்டனர் வெகு நேரமாய்.
பாட்டில் தீர்ந்ததும், உடல் உறக்கத்தை வேண்டவும் தான் அவ்விடம் விட்டு அகன்றனர் நால்வரும்.
செல்லபாண்டி சைக்கிளின் முன்னால் அமர்ந்து பெடல் போட, பின்பக்கம் இரு கால்களையும் பக்கத்திற்கொன்றாய் தொங்க போட்ட படி கைகள் இரண்டையும் செல்லத்தின் இடையில் போட்டு இறுக்கியபடி சங்கர் அமர்ந்திருக்க, அவர்கள் பின் பாக்ஸரில், வீரபாண்டியை பின்னால் அமர்த்தி, சைக்கிளின் பின் கால் வைத்தபடி விக்ரவாண்டி வண்டி ஓட்ட, பெடல் போடாமலேயே சைக்கிள் தன்னாலேயே சென்றது.
குடி போதை, வெகு நாள் பிரிவு என நால்வரும் குதூகலமாய் பேசிக்கொண்டும் கும்மாளமிட்டு கொண்டும், அந்த நிசப்த இடத்தை சிரிப்பால் நிறைத்தபடி அவர்களோடு அவர்களது இரு சக்கர வாகனங்களையும் உலட்டி கொண்டே சென்றனர்.
அவர்களது பேச்சும் சிரிப்பும் அந்த அத்துவான ஒத்தயடி பாதையில் எதிரொலித்து கொண்டிருக்க, முதல் ஆளாய் சைக்கிளை செலுத்தி கொண்டிருந்த செல்லாவிற்கு, கண்ணில் விழுந்த காட்சிகள் கருத்திலும் பதிந்தது.
போஸ்ட் லைட்டுகள் ஆங்காங்கே இருந்தாலும் ஆள்நடமாட்டமில்லாத அவ்விடம், விர்விர்ரென அடித்து ‘வ்வோய்ங்’ என காதை கிழித்து சென்ற காற்று, கிழியை பறப்பும் பேயிருட்டு, கூடவே இவர்களது சிரிப்பு என செல்லத்திற்கு லேசாய் வயிற்றை கலக்கியது.
“ஏலே.. நாம சிரிக்குற சத்தம் எக்கோவடிச்சு மறுபடியும் நம்ப காதுலயே விழும் போது பேய் சிரிக்கிற மாதிரி இருக்குடா.. ஊருக்குள்ள போற வரைக்கும் கொஞ்சம் சிரிக்காமல் வாங்கடா” செல்லம் சொல்ல
“நாமளே பெரிய பேய்.. அதுவும் நாழு பேய், நாம இருக்குற இடத்துல எப்படிடா பேய் வரும்” சங்கர் உளற
“ஏய் வர்றது தான் வர சொல்ற, நாழு பேயா வர சொல்லு.. ஆளுக்கு ஒன்னொன்னு” வீரபாண்டி குளற
“ஏய் ஐஞ்சா வர சொல்றா.. எனக்கு மட்டும் இரண்டாக்கும்” ஒற்றை கையில் வண்டியை பிடித்துகொண்டு, மறு கையில் சட்டை காலரை தூக்கி விட்டு விக்ரா சிலுப்ப
காடே அதிர்ந்தது அவர்களது சிரிப்பு சத்தத்தில்.
“மெத சிரிக்கிறத விட, இப்போ நீங்க சிரிக்கிறத பார்த்தா எனக்கே பயமா இருக்குடா, சிரிச்சு தொலைக்காதீங்கடா, காத்து வேற விர் விர்னு அடிக்கி, மனசு வேற படபடன்னு துடிக்கி” சொல்லி முடித்த நொடி, முழு வெள்ளையில் ஒரு உருவம் மின்னலென இவர்களை கடக்க
“யம்மே…ஏ…ஏ….” அலறிய செல்லத்திற்கு சைக்கிளை கட்டுபடுத்த முடியா அளவிற்கு நரம்புகள் இழுபட,
பிரேக் பிடித்து அழுத்த வேண்டிய கைகளுக்கு பதில் பெடலை வேகவேகமாய் கால்கள் அழுத்த, ஏற்கனவே பைக் சென்ற அதே வேகத்தோடு இவன் பெடல் போட்டது சேர்ந்து சைக்கிளின் வேகம் இன்னுமே அதிகரிக்க,
கிடுகிடுவென அவனோடு சைக்கிளும் நடுங்க ஆக மொத்தம், சாலையை விட்டு சைடில் இருந்த பள்ளத்தில் பயணித்து,
பெடல் போட்டவன் பட படவென பெல்ட்டி அடித்து சரிவில் சரிய, பின்னால் அமர்ந்து வந்த சங்கரபாண்டியோ, செல்லபாண்டியின் தலைக்கு மேல் தாண்டி கொண்டு பறந்து போய் மண்ரோட்டில் ‘அய்யோ.. ஆத்தா’ என அலறிகொண்டு விழ
இவர்கள் இருவர் செய்த அழிசாட்டியத்தில், விக்ரா சடன் பிரெக் அடித்து பாக்ஸரை நிறுத்த, பிடிமானம் இல்லாத வீரபாண்டியோஅ ‘கிர்’ ரென பறந்து ‘கிருட்டு கிருட்டு’ என சுழன்று, ஏற்கனவே எழமுடியாமல் தவழ்ந்து கொண்டிருந்த சங்கரபாண்டியின் மீது போய் ‘பொத்’ என விழ, ‘யாத்தே’ என இவன் அலறிய அலறலில் காடே கிடுகிடுத்தது.
தப்பி நின்றது விக்ரா மட்டும் தான். பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் நேரத்தில்,
தட்டு தடுமாறி எழுந்து நின்ற மூவரும், எதனால்? யாரால்? யார் யார் மீது விழுந்து வாரி இருக்கின்றனர்? என யோசிக்க துவங்கிய கனம், ‘டங்’ கென அவர்கள் முன் குதித்து நின்றது ஒரு உருவம்.
கல்லறையில் வெள்ளை துணி கொண்டு கட்டி புதைக்கபட்ட ஒரு உருவம் அவர்கள் முன் ‘ஜங்’ என குதித்து நிற்க,
‘எம்மா எங்கம்மா இருக்க.. என்னைய காப்பாத்தும்மா’ செல்லபாண்டி எடுத்தானே ஒரு ஓட்டம் தலை தெறிக்க,
மறுபக்கம் சங்கரபாண்டி ஓட்டம் எடுக்க எத்தனிக்க, காற்றில் சர்ரென பறந்து வந்த இரத்தம் கன்றி,குருதி வழிந்து, சதைகள் தோய்ந்த ஒரு உடல் அவன் மேலேயே வந்து விழ,
மேலும் அலறினான் சங்கரபாண்டி, தன் மேல் விழுந்த அழுகிய உடலை உருட்டி தள்ளுகிறேன் என அந்த உடலோடு உருண்டு பிரண்டு எழுந்து செல்லத்தை விட அதி ஓட்டமெடுத்து, அவனுக்கு முன்பாய் ஓடியிருந்தான் சங்கர்.
முழு வெள்ளையில் காற்றில் பறந்த உடை, இடைவரை கோரைபுற்களாய் வளர்ந்த கூந்தல் என தனக்கு முதுகு காட்டி நின்றிருந்த அந்த உருவத்தை, பைக்கை ஸ்டாண்ட் போட்டபடி பார்த்திருந்தான் விக்ரவாண்டி.
‘ஒருத்தன் உயிர் போற மாதிரி அலறிக்கிட்டு ஓடுறான், இன்னொருத்தன் உயிரே போய்ட்டா மாதிரி பறந்துகிட்டு போறான்.
இவன் என்னடான்னா, பேயை சைட் அடிச்சிட்டு இருக்கான். சைட் அடிக்கிறனாலும் ஒரு நியாயம் வேணாமாடா?
“லேய் விக்ரா.. விக்ரா..” அவனது கையை சுரண்ட
“என்னடா..” இவன் சலித்து கொள்ள
“லேய்.. வாவே ஓடிடலாம்” முதுகு காட்டி நின்ற உருவம் எப்போது தன் கோர முகத்தை காட்டுமே, தங்களை ஒரு காட்டு காட்டுமோ? என வீரா பயத்தில் நைசாக இவன் கையை மீண்டும் சுரண்ட,
விக்ரவாண்டியோ “சும்மா தான் இரேண்டா” இவனிடம் எரிச்சலில் கத்த,
தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த கோர உருவத்தை வைத்த கண் வங்காமல் பீதியோடு பார்த்திருந்த, வீராவிற்கோ ஈரக்கொலையே நடுங்கியது.
அந்த பேய் விக்ராவை நோக்கி ஒவ்வொரு அடியாய் நெருங்கி வர, இவனோ அதை விட இருமடங்கு வேகத்தோடு அதை நெருங்க போக
நெருங்க விடாது அவன் கையை பிடித்து தடுத்து
“லேய் விக்ரா.. என்னடா, பேய்கிட்ட போற”
“பெண்ணு தான் சிக்கலை..”
“அ..ஆ…துக்கு”
“பேய் சிக்கிருக்கு..”
“அ..ஆ..துக்கு?”
“ இருடா ஒரே ஒரு தடவை”
“ஒரே … ஒரு தடவை”
“ச்சை .. நீ ஒரு இம்சடா.. அதை என் வாயால வேற சொல்லுமா.. நீ எதை நினைக்கிறியோ அதை தான் செய்ய போறேன்” சொன்ன நொடி, இவன் பிளந்ததை விட, அந்த கோர உருவம் வாய் பிளந்து நிற்க
அந்த கேப்பில் அவ்வுருவத்தை நான்கே எட்டில் அணுகி, அதன் கைபிடித்து இழுக்க, இம்முறை அலறிக்கொண்டு ஓடுவது பேயின் முறை ஆக,
வைத்திருந்த விக்கும், வெள்ளை உடையும் ஓடிய ஓட்டத்தில் அது அது பக்கத்திற்கு ஒன்றாக பறந்தோட, பேய்க்கு பதில் ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தாள்.
பேயையே விடாதவன் விக்ரவாண்டி, பெண்ணை விடுவானா? பின்னோடு துரத்தி கொண்டு ஓட,..இருவருக்கும் இடையே இருந்த ஒரு ஆறடி தூரத்தை கணக்கிட்டு, ‘ம்ஹூம் இது ஆவுறதுக்கில்லை’ என ஓரே பாய்ச்சலில் தாவ, இவன் நேரம் அந்த பேய் விலகிட, எதிரே திருதிருவென இவனையே பார்த்து கொண்டிருந்த சமரசபாண்டியின் மீது பாய்ந்தான் விக்ரா.
“செத்தாண்டா சமரச பாண்டி” வீரா வாய் விட்டே கூறினான்.
‘இந்த விக்ரா பயல கூப்ட போன மூனு பாண்டி பயலுகளையும் காணோம்’ இன்னும் என்ன பண்றானுங்க’ என நான்கு பாண்டிகளையும் தேடி வந்த சமரசுவிற்கு விக்ரா ஒரு பெண்ணை துரத்தி கொண்டு வருகிறான் என்பது மட்டும் உறைக்க, ‘அடப்பாவி பயலே, பொம்பள புள்ளைய துரத்துற’ வாய்பிளந்து நின்ற நொடி, அந்த பெண் விலகியதில், அவ்விடத்தில் நின்றிருந்த சமரசுவின் மேல் நச்சென மோதி, அவரின் மேலேயே விழுந்து உருள, கரும்பு மெசிஷினிற்குள் மாட்டினாற்போல் ஆனார் சமரசு.
பிளாஸ்பேக் முடியும் முன் கேட்டு கொண்டிருந்த அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்க, “அப்புறம்” என நாச்சி சிரிப்பினுடேயே இழுக்க
“அப்புறம் என்ன? ‘முளைச்சு மூனு இலை விடலை அதுக்குள்ள பொண்ணு கேக்குதா உனக்கு, அதுவும் யாரு எவருன்னு தெரியாத புள்ளயை தொரத்தி தொரத்தி பாய்றன்னு, சித்தப்பு கைக்கு கிடச்ச கம்ப எடுத்து அடி விளாசிபுடுச்சு” என வீரா விளக்க
“ம் நான் அந்த பொண்ணு மேல பாய்ச்சதில் கடுப்பில்லை.. அவரால பாய முடியலேன்னு கடுப்பு” விக்ராவும் சேர்ந்து கொள்ள சிரிப்பின் ஒலி அந்த வீட்டையே நிறைத்தது.