அவனிடம் கேட்க கேள்விகள் ஆயிரமிருந்தும், முகத்திலறைந்து கேட்கும் துணிவு தான் வந்தபாடில்லை. நெஞ்சில் குத்தும் எதிரியை கேட்கலாம், முதுகில் குத்தும் நண்பனை எப்படி கேட்பது.
வெகு நேரமாய் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையே பார்த்திருந்தவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது.
“எனக்கு புடிச்ச வாழ்க்கையை இல்லாமல் பண்ணிட்டல்ல” அழுகையோடு வந்தது அவளது வார்த்தைகள்.
அதற்காகவே காத்திருந்தாற்ப்போல் “ம்.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை, அதை நான் இல்லாமல் பண்ணிட்டேன். உனக்கு பிடிச்சது மட்டும் நடந்தா போதும்ல.. அடுத்தவனுக்கு அது புடிக்குதா இல்லையான்னு கூட யோசிக்க மாட்டல்ல” அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவனின் குரல் அந்த அறையை நிசப்தமாக்கிகொண்டு ஒலிக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் லாவா.
“நீ மட்டும் புடிச்சவனோட வாழனும், அது சரி, அதுக்காக நீ எந்த லெவலுக்கு வேணும்னாலும் போவ, அதுவும் சரி.. ஆனால் அதை மத்தவங்க பண்ணினால் மட்டும் தப்போ”
“என்னை உனக்கு பிடிக்கும்னு தெரியும்” இவன் சொன்ன கனம், புழுவை பார்ப்பது போல் இவள் பார்த்து வைக்க
“ஹ..” என இதழ் வளைத்தவன் “ஆனால் கல்யாணம் செஞ்சுகிற அளவுக்கு என்னை பிடிக்காதுன்னும் தெரியும்” இவன் சேர்த்தே சொன்னான்
“இப்போ உன் கழுத்தில் தாலி கட்டி சரியா பத்து நிமிஷம் தான் ஆகுது. ஒரு பத்து நிமிஷம் கூட, என்னை புருஷனா ஏத்துக்க முடியலை, இத்தனைக்கும் நீயும் நானும் நகமும் சதையும் மாதிரி” விரக்தியாய் சிரித்தான்.
“விஜயும் நீயும், உன்னை, என்னை மாதிரி தான். பிரண்ட்லியா உன்னை பிடிக்கும், கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பிடிக்காது. உயிருக்குயிரா மகாவை காதலிச்சிட்டு உன்னோட எப்படி வாழ்வான்.
பத்து நிமிஷம் கூட நீ பொறுக்க மாட்ட, வாழ் நாள் முழுக்க அவன் பொறுத்துக்கனுமா?” அடுத்தடுத்த கேள்விகளில் அதிர வைத்தான் அவளை.
தனது போனை எடுத்து உயர்த்தி பிடித்து, “நிமிர்ந்து பாரு” என கரகரத்த குரலில் கூற.. இவளும் நிமிர, அடுத்த கனம் கேமரா பட்டனை அடுத்தடுத்து தட்ட, படபடவென ஐந்தாறு படங்களை அடித்து தள்ளி்யது அந்த போன்.
“விஜய் லைப்பில் அவன் நிம்மதியை கெடுக்குற மாதிரி ஏதாவது வேலை பார்த்தன்னு வை.. அடுத்த நிமிஷம்.. நீ என் பொண்டாட்டி தான்! என்னை ஒரு பத்து நிமிஷம் கூட புருஷனா நினைக்க முடியலை.. அந்த தண்டனையை வாழ் நாள் முழுசுக்கும் அனுபவிக்க வைச்சிருவேன் நியாபகம் வச்சுக்கோ” என கதவை திறந்து கொண்டு இவன் வெளியேற
பிரம்மை பிடித்தாற்ப்போல் நின்றுவிட்டாள் லாவா. ஆனாலும் அழுகை நின்றபாடில்லை.
அழுதுகொண்டு அங்கேயே இருப்பது இன்னமும் அசிங்கமாய் பட, அழுத விழிகளை அழுத்தமாய் துடைத்து கொண்டு, அறையை விட்டு வெளியே வந்து மண்டபத்தை கடந்து தன் ஸ்கூட்டியை தேடி வந்தாள்.
“ஏய்.. லாவன்யா.. எங்க போற தனியா” எதிரில் இலைகட்டுகளோடு வந்த செல்லபாண்டி கேட்க,
“தலைவலி செல்லம் அதான் வீட்டுக்கு போறேன்” என
“ம்.. ஒன்னு குடுத்துட்டு குடிக்கனும், இல்ல கொஞ்சமா குடிக்கனும்.. இல்லைன்ன தலைவலி மட்டுமா வருமா, சில நேரம் வாந்தி பேதி கூட வரும், அவன்கூட சேர்ந்துகிட்டு கொஞ்ச நஞ்சமா ஆடுனா..” என நக்கலாய் கூறியவனை விழிகளாலேயே பொசுக்க, பதிலுக்கு பார்வையாலேயே எரித்தவளிடம் அடுத்து வாங்கி கட்டும் முன்பு அங்கிருந்து மறைந்தான் செல்லம்.
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து தன் வீட்டிற்கு விட்டாள் படு வேகமாக.
அவளது நிலை சொல்லில் அடங்காததாய் இருந்தது.
முகத்தில் மின்னி மறையும் உணர்வுகள் கூட வார்த்தைகளால் வடிக்க முடியாததாய் இருந்தது.
தோன்றியது ஒன்றே ஒன்று தான். அது விக்ரா தனக்கு துரோகம் இழைத்து விட்டான் என. அதுவும் நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டான் என.
நேற்று காலை இதே நேரம் மூக்குமுட்ட குடித்துவிட்டு இதே ஸ்கூட்டியில் கதைகள் ஆயிரம் பேசியபடி சந்தோஷம் முழுவதையும் அவளுக்கே என பட்டா போட்டு எழுதியதை போல், தன்னுடன் வளைய வந்த விக்ரா மண்டைக்குள்ளும், ஒட்டுமொத்த தவறும் உன் மேல் தான் என பழி சுமத்தி அதோடு தாலி எனும் தண்டனையையும் கொடுத்து சென்ற அதே விக்ரா மனதினுள்ளும் உலா போனான்.
அதற்குள் அவளது வீடும் வந்துவிட, இடபக்கமாய் ஓட்டி சென்றவள், வலப்புறமிருந்த தன் வீட்டிற்கு வண்டியை ஒடித்து திருப்ப, வேகம் குறைப்பதற்கு பதில் கூட்டி விட, ஸ்கூட்டியோ ரோட்டை தாண்டி இருந்த பெரிய சாக்கடைக்குள் போய் மடார் என விழ, கூடவே இவளும் போய் விழுந்தாள்.
ஒரு கால் உள்ளே ஒரு கால் வெளியே, இதில் சேலை வேறு எழக்கூட திராணி அற்றவளாய் அப்படியே கிடக்க, அருகில் இருந்த மளிகை கடையில் இருந்த ஆண்களும் பெண்களும் வந்து உதவ, ஸ்கூட்டி வீட்டிற்கு வெளியேயும், லாவா வீட்டிற்கு உள்ளேயும் வந்து சேர்ந்தனர் கைத்தாங்காலாக.
ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டதில் உடல் எரிய, கண்ணாடியில் தெரிந்த உருவம் அதை விட அவள் கழுத்தில் கிடந்த தாலி அவளுடலை எரிய வைத்தது.
விடிகாலையில் பார்த்து பார்த்து செய்த அலங்காரங்கள் யாவும் அவளை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது. ஆத்திரம், கோபம், இயலாமை என அனைத்தும் ஒன்றையொன்று முண்டி அடித்துக்கொண்டு, நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு வெளிப்பட, வேக வேகமாக கலைந்தாள் தன் தலையில் இருந்த கேர்பின் முதல், காலில் கிடந்த கொலுசு வரை.
எஞ்சி நின்ற தாலியை கையில ஏந்தினாள். வேக வேகமாய் ஓடி மறைந்தது விக்ரா தனக்கிழைத்த கொடுமையும், அதன் வீரியமும்.
கண் மூடி நின்றாள், இமைகளினூடே இரண்டு சொட்டு நீர் ஓடி விழுந்தது. அடுத்த நொடி சிறிதும் யோசிக்கவில்லை. கழற்றி விசிறி அடித்தாள் தாலியை.
————–
“என்னத்தை… அதுக்குள்ள வீட்டுக்கு போகனுமாக்கும். சொந்தபந்தமெல்லாம் இருக்கும் போது வீட்டுக்கு போய் நீங்க என்ன செய்ய போறீங்க” மீனா வீட்டிற்கு கிளம்புகிறேன் என விக்ராவிடம் வந்து நின்றதில் இவனும் கேட்க
“எல்லாம் நான் பெத்துவச்சிருக்கனே, மகன்ற பேரில் ஒருத்தியை அவளுக்காக தான், பந்தி ஆரம்பிச்சாச்சு, பசி தாங்க மாட்டான்னு தேடுனா ‘அவள் அப்போவே ஸ்கூட்டியை எடுத்துட்டு தலைவலின்னு வீட்டுக்கு போய்ட்டா..’ ன்னு செல்லபாண்டி செல்லுதான். அவளை அங்க விட்டுட்டு, நான் மட்டும் எப்புடி இங்க இருக்க?”
நெற்றி சுருங்கியது விக்ராவிற்கு, அவளுக்கும் தனக்குமான விவாதம் முடிந்து பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி வீட்டிற்குள் போனாள்? என யோசித்தவன்,
“நான் போய் என்னன்னு பார்க்கேன்த்தை, நீங்க இங்க இருங்க” என உறுதியாய் சொல்லவும், சுற்றி இருக்கும் சொந்த பந்தங்களை நோட்டம் விட்டவர், சரியென்றுவிட, விக்ரா வீரபாண்டியின் பைக்கை வாங்கி கொண்டு லாவாவிடம் விரைந்தான்.
வாசலில், லாவாவின் பைக்கை ஒட்டி, தன் பைக்கை நிறுத்தியவனுக்கு, மூச்சடைத்தது, சாக்கடையில் குளித்திருந்த அவளது ஸ்கூட்டியின் முன்பகுதியை கண்டு.
கேட்டை திறந்து கொண்டு வேக வேகமாய் உள்ளே சென்றான். இதயம் படபடவென அடித்து கொள்ள, கதவை தட்டுவதற்காக கைவைக்க, இவன் கைபட்டு கதவோ பட்டென திறந்து கொண்டது.
மற்ற நேரமாக இருந்தால் “லாவா, லாவ்ஸ்” என கெஞ்சல், கொஞ்சலில் அழைக்க ஆரம்பித்து, “எவ்ளோ நேரம் கத்துறது, காது கேட்கலையாடி வெண்ண மவளே” என கோபத்தில் அழைத்து திட்டி முடித்திருப்பான்.
இப்போதோ அவள் முகம் பார்க்க கூட பயமாய் இருந்தது இதில் எங்கிருந்து அழைப்பது.
அவள் மேல் உரிமையில்லாதபோது இருந்த உரிமை, உரிமை வந்தபிறகு உரிமையே இல்லாதது போல உணர்ந்தான்.
இருந்தும் அவளுக்கு என்னானதோ என அடித்து கொண்ட இதயத்தோடு, வீட்டினுள்ளே வந்தவன் ஹாலை கடந்து அவளது அறைக்குள் எட்டி பார்த்தான்.
அவள் அணிந்திருந்த பட்டுபுடவை ஒரு புறம் குவிந்து கிடக்க, ஆபரணங்கள் அத்தனையையும் அவிழ்த்து வீசியிருந்தாள்.
கழற்றி வைப்பதற்கும் அவிழ்த்து வீசுவதற்கும் தான் வித்யாசம் இருக்கிறதே! ஜிமிக்கி, வளையல், சோக்கர், நெற்றிசுட்டி, கொலுசு, வாடாமல் வாசம் வீசய பூ என அவள் அவிழ்த்து வீசியிருந்த ஒவ்வொன்றின் மீதும் வலம் வந்த அவன் விழிகள், இறுதியாய் வீசப்பட்டு கிடந்த பொன்தாலியின் மீது படிந்து விழிகள் அகண்டது.
விழிகள் உள்வாங்கியதை மனம் ஏற்க மறுத்து, அவனின் கால்கள் தாலியை நோக்கி விரைய, கைகளோ அதைவிட விரைவாய் டேபிளில் கிடந்த தாலியை கையில் ஏந்தியது.
தண்ணீர் விழும் சத்தம் கொடுத்த குளியலறையின் பக்கம் போனது இவன் பார்வை. ‘கழற்றி வீசிவிட்டாளா?’ இன்னுமே நம்பமுடியவில்லை அவனால்.
சற்று முன் ‘என்னை ஒரு பத்து நிமிஷம் கூட புருஷனா நினைக்க முடியலை.. அந்த தண்டனையை வாழ் நாள் முழுசுக்கும் அனுபவிக்க வைச்சிருவேன் நியாபகம் வச்சுக்கோ’ என வீராப்பாய் சொல்லிவிட்டு வந்ததெல்லாம், காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்துவிட்டிருக்க, மனம் முழுதும் கவலை வந்து அப்பிகொண்டது.
மூன்று பவுன் தாலி ஏனோ முப்பது கிலோவாக கனத்து போனாற்போல் கைகள் அதை நழுவ விட, எங்கிருந்து எடுக்கபட்டதோ அங்கேயே போய் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது தாலி.
தாலியை அவள் கழுத்தில் போட்டதை எளிதாய் ஏற்க முடிந்தவனுக்கு, அதே தாலி அவள் கழுத்தை விட்டு இறங்கியதை, அவளே இறக்கிவிட்டதை அத்தனை எளிதாய் ஏற்கமுடியாது போனது அவனுக்கு.
ஆக மொத்தம் கட்டும் போது அவனுக்கும் கழற்றி எறியும் போது அவளுக்கும் தாலி ஒரு ஆபரணமாக தான் தெரிந்திருந்தது.
அது ஆபரணமில்லை என கழற்றி எறியபட்ட கனம் இவனுக்கு புரிந்து போனது. ஆனால் அவளுக்கு புரிவது எப்போது?
அதே நேரம் உள்ளே குளியலறைகதவின் தாழ்பாள் நீக்கும் சத்தம் கேட்க, விருட்டென வெளியே வந்து சோபாவில் அமர்ந்தவனுக்கு அலைபாய்ந்தது மனது இறுகிபோன முகத்துடன்.
சில நிமிடங்களின் பின், அறையை விட்டு வெளியே வந்தவளை கண்டு அரண்டே போனான் என்றால் இவளோ அதிர்ந்து போய் மீண்டும் அறையினுள்ளே அடைந்தாள்.
ஆம், தொடை வரையிலான சிறிய டிரவுசரும், சிறிய சட்டையுமாய் வர, கண்டவன் அதிர, இவனை கண்டவளோ மேலும் அதிர்ந்தாள்.
அவளது அங்கங்ககளுக்கு பதிலாய், முழங்காலின் மேலும் கீழும் என இரத்தத்தோடு உராய்ந்த தடங்கள் மட்டுமே அதிர்வை உருவாக்க, ‘அய்யோ இதென்ன இப்படி சிராச்சிருக்கு, இதோடவா குளிச்சா? சலம் வைக்குமே? சட்டென பதற்றம் தொற்றி கொண்டது.
வெளியே நின்ற ஸ்கூட்டி பாதி கதையை கூறியது என்றால், இதோ காயம் கண்ட அவளுடல் முழுகதையை கூறியது. சாக்கடையில் விழுந்து வாரியிருக்கிறாள் என.
அறைக்குள் சென்றவளோ, கண் மூடி கதவில் சாய்ந்து நின்றாள். அவனை அங்கு எதிர்பார்த்திருக்க வேண்டுமே? அத்தனை எளிதாய் தாலியை கட்டிவிட்டு அப்படியே விடுபவனா இவன்? எண்ணியிருக்க வேண்டுமே? எண்ணியிருந்தால் அதற்கு தக்கவாறு மனதை தயார் செய்திருக்கலாமே? இப்போது எப்படி இவனை எதிர்கொள்ள? சமாளிக்க? திமு திமுவென அடித்து கொண்டது இதயம்.
சமாளிக்க தான் வேண்டும், எத்தனை நாள் ஒளிந்து ஓடுவது. முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, பீரோவில் இருந்த லாங் ஸ்கர்ட் ஒன்றை தன் இடைக்கு மேல் போட்டு கொண்டு வெளியே வந்தாள் மிக நிதானமாக.
மீண்டும் முகத்தை ஏறிட்டவனுக்கு, ‘ஏன் காயம், எதற்கு காயம்?’ என கேட்க துடித்தது மனது. ஆனால் அது அத்தனைக்கும் தான் தான் காரணம் எனும் போது? கேள்வி எங்கிருந்து வரும்.
“வீட்டில யாரும் இல்லை. எதுவா இருந்தாலும் அம்மா வந்த பிறகு வாங்க.. இப்போ கிளம்புறீங்களா?” முதல் பாலிலேயே அடித்தாள் சிக்ஸர், ‘உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை’ என
இதே வீட்டில் இருவர் மட்டுமே தனியாய் இருந்து எத்தனையோ பகல்களும் இரவுகளும் அடித்த கொட்டங்கள் யாவும் போன ஜென்மமோ என எண்ணும் வகையில் இருந்தது அவளது புறகணிப்பு.
சத்தியமாய் இப்படி ஒரு ஒதுக்கத்தை எதிர்பார்க்கவில்லை என அவன் முகமே காட்டி கொடுக்க, அது அவளுக்கும் நியாபகம் வந்ததோ என்னவோ, அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் இவளும் பார்வையை திருப்பி கொண்டாள்.
“நா.. நா..ன் உன்னை பார்க்க தான் வந்தேன்.. உன் அம்மாவை இல்லை” திணறி இவன் பேச
“எதுக்கு பார்க்கனும்? இன்னும் நிறைவேத்திக்க எதுவும் பிளான் இருக்கா என்ன?” “ஓ.. தாலி கட்டியாச்சு, அடுத்து பர்ஸ்ட்நைட்க்கு பிளானா? அதுக்காக தான் என்னை பார்க்க வந்திங்களா?” கொஞ்சமும் பாவம் பாராது சொல்லாலேயே இவள் அடிக்க,
அடுத்த நொடி “ஏய்..” உறுமிக்கொண்டு அவள் கழுத்தை பிடித்த அவன் கைகள், அவளது அந்த மீளா விழிகளில் மிரட்சியை கண்டு, பிடித்த பிடி அப்படியே தளர்ந்தது.
“அதுக்கு இல்லைனா.. வேற எதுக்கு வந்தீங்க?” விடுதலை கிடைத்த கழுத்தை தடவியபடியே இவள் கேட்க
‘வாங்க, போங்க என வார்த்தை இன்னமுமே அவன் மனதை ரணமாக்க, அவன் செய்து வைத்த செயலின் வீரியம் மலையளவு உயர்ந்து நின்று அவனை கண்டு எக்காளமிட்டு சிரித்தது.
“தாலிய எங்க?” உள்ளே எரியும் ரணத்தை மறைத்து வெறுமையான அவள் கழுத்தை பார்த்து கேட்டான்.
“ஓ.. தாலியா?” அதை அப்போவே கழட்டி எறிஞ்சிட்டேனே!” அசால்ட்டாய் இவள் பேச
இவனோ இப்படிபட்ட எடுத்தெறிந்த பேச்சுவார்த்தைகளை சமாளிக்க முடியாது விழி பிதுங்க,
அதை உள்ளுக்குள்ளே ரசித்த லாவன்யாவோ “ஏன் தாலியை ஏறின உடனே, கத்தி கதறி அழுது தீர்த்துட்டு, நீ் செய்ததை எல்லாத்தையும் மறந்துட்டு, தொங்க தொங்க அதை கழுத்தில் போட்டுகிட்டு, நீங்க தான் எனக்கு எல்லாமேன்னு உங்க பின்னாடியே வந்துடுவேன்னு நினச்சீங்களா?” கூர்மையாய் கேட்டு அவனை அதிர வைத்தவள் “எந்த ஒரு நிலை வந்தாலும் உங்க பின்னாடி வரவே மாட்டேன்” அவளது உறுதியில் ஆடி தான் போனான் விக்ரா.
“என்ன பேசுற நீ? அப்போ நம்ப கல்யாணத்தை மறைக்க செல்றியா?” அவள் கொடுத்த அதிர்ச்சி சிறிதும்
குறையாதவனாய் கேட்டான்.
“ஆமா, நூறு பேர் பார்க்க, ஊர் மொத்தமும் கூட்டி தாலி கட்டின பாரு.. பண்ணினது திருட்டு கல்யாணம், எந்த மூஞ்ச வச்சிகிட்டு சொல்ல சொல்றீங்க” எக்காளமாய் பதிலடி கொடுத்தவள்
ஒரு வார்த்தை கூட பேசாது நின்றிருந்தான் விக்ரவாண்டி “பதில் பேசுங்க மிஸ்டர் விக்ரபாண்டி..?” இவனை தூண்ட
“நீ எதுவும் சொல்ல வேண்டாம், நான் சொல்லிக்கிறேன், உங்கவீட்டில், எங்க வீட்டில் நானே சொல்லிக்கிறேன். எல்லா தப்பும் செய்தது நான் தானே.. அவங்க எதுவும் தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துகிறேன். நம்ப கல்யாணத்தை மறைக்க வேண்டாம்”
“ஹல்லோ… இங்க தண்டனை கொடுக்க வேண்டியது நான் தான்.. உங்க குடும்பமோ என் குடும்பமோ இல்லை. இதுக்கு பேரு கல்யாணம்னு நீங்க தான் சொல்லிகனும். வெளியில சொல்லிடாதீங்க.. நான் கம்ளைண்ட் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை, போக்ஸோ ல தூக்கி உள்ள வச்சிடுவாங்க” வெகு எளிதாய் இவளிடம் இருந்து வரும் வார்த்தைகள் யாவும் தேள் கொடுக்காய் இவனை கொட்டி சென்றது.
“நீ தண்டனை கொடுத்தாலும், கம்ளைண்ட் கொடுத்தாலும் நான் ஏத்துப்பேன், ஆனால் என்கூட என் வீட்டுக்கு வந்துடு”
“அதுக்கு முதலில் நான் உங்களை புருஷனா ஏத்துக்கனுமே? முன்னையாவது ஃபிரண்டா நினைச்சிட்டு இருந்தேன், இப்போ மனுஷனா கூட மதிக்கலை, இதில் நான் உங்களை புருஷனா ஏத்துகிடனுமாக்கும்.. நல்ல கனவு தான்” பேசிய வார்த்தைகள் அவளிடமிருந்து எளிதாய் வந்தாலும், எதிரில் நின்று அதை உள்வாங்கியவனுக்கு, செத்துவிடலாம் போல் இருந்தது. அவசரபட்டுவிட்டோம்.. புத்தி கெட்டு பெரும் பிரச்சனையை இழுத்துவிட்டு விட்டோம், நினைத்து நினைத்து நொந்து போனான்.
“என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு லாவன்யா.. வாய் இருக்குனு பேசிட்டே போகாத? பதிலுக்கு நான் பேசுனா நீ தாங்க மாட்ட? வாய மூடிட்டு இரு அது தான் உனக்கு நல்லது?”
பல்லை கடித்துக்கொண்டு இவன் பேச
அத்தனை வார்த்தைகளில் ‘லாவன்யா’ எனும் வார்த்தை மட்டும் கூர் ஈட்டியாய் அவள் நெஞ்சை பதம் பார்த்தது. இது நாள் வரை லாவா, லாவ்ஸ், என அழைத்து அழைத்தே வசியம் செய்திருந்தவனிடத்தில் நன்றாகவே தெரிந்தது ஒதுக்கம்.
அது இன்னமும் இவள் கோபத்தை கிளறி விட
“நல்லதா? எது நான் பேசாமல் இருக்குறதா? அதென்னவோ நூத்துல ஒரு வார்த்தை.. உன்கிட்ட பேசாமல் தான் இருந்திருக்கனும், விஜய பத்தி, என்னோட காதலை பத்தி, என்னோட அத்தனை பர்சனல் பத்தியும் பேசாமல் இருந்திருக்கனும்.. அது தான் ரொம்ப நல்லதா இருந்திருக்கும். உன்கிட்ட ஒன்னுவிடாமல் பேசினேன்ல.. அதான் உன்னால் எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவைவும் செஞ்சிட்ட, என்னோட காதலை, வாழ்க்கையை உடச்சிட்ட, நடிச்சு ஏமாத்திட்ட!” இவள் கதற
“மெண்டல், மெண்டல் மாதிரி பேசாத.. ஏற்கனவே லவ் பண்ணிட்டு இருக்குற லவ்வர்ஸை பிரிச்சிவிட்டுட்டு, அதில் நீ வாழனும்னு நினைக்கிற, அது தான் உன் காதலா? அது தான் உன் வாழ்க்கையா?
அப்புறம் என்ன சொன்ன? நடிச்சனா? ஆமா நடிச்சேன், நடிச்சு ஏமாத்தினேன் தான்! ஏன் தெரியுமா?
விஜய் – மகா காதலிக்கிறதை பார்த்துட்டு, மகாவை பிரிக்கனும், அதுக்கு பதிலா நான் அவன்கூட சேரனும்னு சொல்லிட்டே இருப்ப.. முதலில் நீ ஏதோ ஆதங்கத்துல என்கிட்ட புலம்புற, சரி புலம்பட்டும், பிறகு சரியாகிடும்ன்னு அப்படியே விட்டா.. நாளாக நாளாக நீ பண்ற ஆராத்துலாம் ஓவரா போய்ட்டு இருந்தது.
நான் காது கொடுத்து கேட்கலைன்னா? நீ சொல்றது எல்லாத்துக்கும் தலையாட்டிட்டே இருக்கலைன்னா? எனக்கு தெரியாமல் ஏதாவது செஞ்சு வப்ப, அதான் நீ சொல்ற எல்லாத்தையும் கேட்குற மாதிரி நானும் நடிச்சேன்?” எவ்வளவு நேரம் இவள் கொட்டுவதை வாங்கி கொண்டே இருப்பான்? திருப்பியும் கொடுத்தான்.
அதில் இவள் இதழ்கள் இயலாமையில், விரக்தியில் வளைய, “நான் விஜய லவ் பண்றதா தானே நீ் நினைச்சிட்டு இருக்க, இல்லை அவனும் என்னை லவ் பண்ணினான்” என போட்டு உடைக்க, இதென்ன புதுகதை, என இவன் அதிர, அதை வாய்விட்டும் கேட்டுவிட்டான்.
“புது கதைலாம் இல்லை, பழைய கதை தான். நான் தான் உங்கிட்ட சொல்லலை. சில நிகழ்வுலாம் நமக்குள்ளேயே இருந்தா தான், மனசுக்குள்ளேயே அதை திரும்ப திரும்ப ஓடவிட்டு, அசை போட்டு ரசிக்க முடியும், அப்படிபட்டது தான் விஜயோட சம்பந்தபட்டதும்.
அதை உங்கிட்ட சொன்னா அதுக்கு பிறகு அதில் இருக்குற கிக்கு போய்டுமோன்னு தான் இதுவரை நான் சொன்னதே இல்லை.
விஜய் மகாவை பார்க்குறதுக்கு முன்னாடி என்னை தான் பார்த்தான். அடிக்கடி பார்த்து சிரிப்பான், என்கிட்ட பர்ஸ்ட் டைம் பேச எவ்வளவோ சிரம பட்டான் தெரியுமா? ஆனால் அதையும் உடச்சிக்கிட்டு வந்து என் முன்னாடி வந்து நின்னான்.
நீ ரொம்ப அழகா இருக்க, உன் கண் அவ்வளவு அழகு, முடி அத விட அழகு, உன் டிரஸ்ஸிங் சென்ஸ் லாம் வாவ் சொல்ல வைக்குது.. இப்படி இப்படி நிறையசொல்லிட்டே போகலாம்.
இத்தனைக்கும் நானும் அவனும் மீட் பண்ணினது மூனு, நாழு முறை தான். ஆனால் என் கண்ணை பார்த்துட்டே பேசுற அவன் கண்ணில் காதலை நான் பார்த்து இருக்கேன்.
அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு தான் என்னை பார்க்குறதையே விட்டான். நானா போய் பேசினால் கூட பார்க்காத மாதிரியே போய்டுவான். அதுக்கு பிறகு தான் மகா வந்தா.
இப்போ சொல்லு அவனுக்கு பர்ஸ்ட் லவ் நான் தானே? இடையில் தான் ஏதோ நடந்திருக்கு, எனக்கென்னவோ மகா மேல் சந்தேகம். அவள் தான் ஏதோ வேலை பார்த்திருக்கனும்.
ஏன்னா என்னோட காதல் தெரிஞ்ச இரண்டாவது ஆளு அவ தான். ஆபிஸில் அவனை பத்தியே பேசிட்டு இருப்பேன், அவள் ஏற்கனவே இருந்த ஏரியாவை விட்டுட்டு, இங்க என் வீட்டுக்கு பின்னாடி குடி வந்தாள். வந்த அதுக்கு பிறகு தான் அவங்க லவ் கூட எனக்கு தெரிய வந்தது.
ஆனால் மகாவோட ஒவ்வொரு முறையும் என்னை பார்க்கும் போதெல்லாம் விஜயோட கண்ணில் அதே காதலை பார்த்திருக்கேன். அதை அவனும் சொல்லலை, நானும் அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சுகனும்னு நினைக்கலை.
அதான் அவனுக்கே தெரியாமல் மகாவை கடத்த பிளான் போட்டேன். மகாவிற்கு பதிலா நான் மணமேடையில் போய் உக்கார்ந்திருந்தா கூட அவன் சந்தோஷமா என் கழுத்தில் தாலி கட்டி இருப்பான். சந்தோஷமா என்னை ஏத்துகிட்டு இருந்திருப்பான்” விரக்தியுடனேயே இவள் சொல்லி முடிக்க
அத்தனையையும் கேட்டவனுக்கோ மலைப்பு.. இவ்வளவா நடந்திருக்கிறது என? இருந்தும் அவள் கடைசியாய் சொன்ன செய்தியில் இவனுள் கேள்வி எழ அதை அவளிடம் அப்படியே கேட்டும் விட்டான்.
“ஏன் லாவன்யா, மகாவை அம்போன்னு விட்டுட்டு உன்கிட்ட வர தயாரா இருக்குறவன், நாளைக்கு வேற பொண்ணு பின்னாடி போக மாட்டான்னு என்ன நிச்சயம்” நீ பேசியது போதும், இனி நான் தான் பேசுவேன் என ஆரம்பிக்க, இவளது விழிகளோ சாசராய் விரிந்தது.
“சரி நீ சொல்ற மாதிரி அவன் உன்னைய தான் முதலில் லவ் பண்ணினான்னு வச்சுக்க, அது உண்மையான லவ்வா இருந்தா, நல்லா கேட்டுக்க உண்மையான லவ்வா இருந்தா, மகா இல்லை உலக அழகியே வந்தா கூட ஏறெடுத்து பார்க்க மாட்டான். உன்னை விட மகா அழகா தெரிஞ்சிருக்கலாம், உனக்கு பதில் அவ பெட்டரா தெரிஞ்சிருக்கலாம், ஏதோ ஒரு வகையில நீ வேணாம்னு அவன் முடிவு பண்ணிட்டான். அவனை போய் இன்னமும் வேணும்னு சொல்லிட்டு திரியுற, அசிங்கமா இல்லையா” அப்படி ஒரு கோபம் தெரித்தது அவன் வார்த்தைகளில்.
அசிங்கமாக தான் இருந்தது, அதையும் தன் நண்பனின் வாய் வழியாய் கேட்கையில் இன்னும் நாரசாரமாய் இருந்தது. இருந்தும் முதல் காதல் அவளை முழுதாய் மூழ்கடித்திருக்க, தெளியவில்லை அவள் புத்தி. தலைக்கேறிய போதையாய் உச்சியில் அமர்ந்திருந்தது.
அவளையே பார்த்திருந்தவன் “நான் உனக்கு அன்னைக்கே அட்வைஸே பண்ணேன்.. இல்லைன்னு எங்கே என் கண்ண பார்த்து சொல்லு.. விஜய் உனக்கு வேணாம் விட்டுடுனு, நீ கேட்டியா? அன்னைக்கே கேட்டிருந்தா நானும் இப்படி புத்தி கெட்டு போய் இருந்திருக்க மாட்டேன்” என
“ஆமா சொன்னதான்.. அட்வைஸ் பண்ண தான். லவ்வர்ஸை பிரிக்காத பிரிக்காதன்னு, அதை மட்டும் தான சொன்ன? அதையும் மீறி பிரிச்சா ‘நான் உன் கழுத்தில் தாலி கட்ட வேண்டிவரும்னு சொன்னியா?’
“அப்போ, விஜய் உன் கழுத்தில் தாலி கட்டாமல் போனதில் கவலையில்லை, நான் உன் கழுத்தில் தாலி கட்டுனது தான் பிரிச்சனை” அப்படி தானே என பார்க்க
மறுக்கவுமில்லை, ஏற்கவுமில்லை இவள் அமைதியுடன் அப்படியே நின்றிருக்க,
“இனி விஜய் – மகா சாப்டரை மறந்திடு, நம்பளை பத்தி மட்டும் யோசி” நம்பளை பத்தி மட்டும் தான் யோசிக்கனும், என அழுத்தம் கொடுத்து பேசி “நம்ப கல்யாணத்தை பத்தி இரண்டு பேரோட வீட்லையும் நான் பேசுறேன், மறைச்சு வச்சு வேற எதுவும் பிரச்சனை கிளம்புனா அது இன்னமும் தலைவலி” இவன் முடிக்கும் முன்
“நமக்கு நடந்தது கல்யாணமே இல்லைங்கறேன், பின்ன எப்படி அதை வெளியே சொல்ல முடியும். நீயும் சொல்லாத அது தான் நல்லது. இது தான் என் முடிவும் கூட” இறுதியாய் இவள் கூற
“அப்போ நானும், நான் கட்டுன தாலிக்கும் என்ன பதில் சொல்ல போற”
“எதுவும் சொல்ல போறதில்லை, சொல்ற நிலையிலும் நான் இல்லை, நெஞ்சை நிமித்தி சொல்லிகிற நிலையில் நீயும் வைக்கலை” விழியோடு விழி நோக்கி இவள் கூற
எதையும் அசால்ட்டாய், விளையாட்டாய் சமாளிப்பவனுக்கு, முழு விளையாட்டு தனம் நிறைந்த தன்னவளின் உறுதியை உடைக்கும் வழியறியாது நின்றான் விக்ரபாண்டி.
மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால…….