உமையாள் இன்னுமே மோன நிலையில் இருக்க, இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்க, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்த கிருஷ்ணா, அவளை மென்மையாக பக்கவாட்டில் அணைத்தவாறு,
“சரி அப்புறம் என்ன ஆச்சு” என்று கேட்க, அவ்ளோ “திரு திரு” வென முழிக்க, அவளை அள்ளிக்கொள்ள துடித்த கைகளை, அவளை அணைத்து சமாதான படுத்தியவன், மீண்டும்,
“அதான் நீ என்ன லவ் பண்றனு கண்டுபிடிச்சிட்ட, அப்புறம்” என்று விளக்க, ஒரு அளவுக்கு இயல்புக்கு வந்திருந்த உமையாள், கரகரத்த தன் குரலை சரி செய்து,
“அப்புறம் என்ன, வாழ்க்கை உங்க கூட தான்னு முடிவு பண்ணிட்டேன், அதே சமயம் என்னை மாதிரி நீங்களும் காதலை, நீங்களாவே உணரணும்னு நினைச்சேன், அதான் கரன் கிட்ட கூட என் காதலை சொல்லல, இங்க வந்தப்போ உங்க கிட்ட பேசி, பழகனும்னு நினைச்சேன், ஆனா நீங்க தான் என்னை உங்க கிட்டவே வரவிடலை”
என்று சற்று கோவத்துடனே சொல்ல, கிருஷ்ணாவோ அன்றைய தன் மனநிலையை நினைத்து, அவள் அறியாமல் சிரித்து கொள்ள, உமையாளோ தொடர்ந்து,
“அன்னைக்கு நாம எல்லாரும் மாலுக்கு போனோம் இல்ல, அப்போ எதிரில் இருக்கிற உங்களை நிமிர்ந்து பார்த்தேனா, என்னை மறந்து உங்க கண்ணையே பார்த்து கிட்டு இருந்துட்டேன், அதை கரன் பார்த்துட்டான், அவன் என்னனு கேட்க, என்னத்த சொல்றது அவன் கிட்ட, ஒன்னும் இல்லைனு சொல்லி குனிஞ்சிட்டேன்”
என்று வசமாக தான் மாட்டிக் கொண்ட கதையை சொல்ல, கிருஷ்ணாவோ,
“அன்னைக்கு நீ என்னை பார்த்ததை நானும் உணர்ந்தேன் உமை, மூளை அவ உன்னை தான் பார்க்குறானு சொல்ல, மனசோ அவ எப்படி உன்னை பார்ப்பானு சொல்ல, ஒரே போராட்டம் தான் எனக்கு, நீ என்னை பார்த்து இருப்பனு என்னால நினைக்க கூட முடியல”
என்று சொல்ல, இப்போது உமையாள் அவனை கேள்வியாய் பார்க்க,
“உன்னை கிட்ட நெருங்க விடலைன்னு சொன்ன இல்ல, அது அப்படி இல்லை உமை, எல்லாரையும் விட, ஏன் யாருமே நெருங்காத அளவுக்கு, நீ என்னை நெருங்கிட்ட உமை, நானே முயன்று உன் கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு முயற்சி பண்ணிகிட்டு இருந்த நேரம் அது”
என்று சொல்லவும், உமையாள் அவனை முறைக்க, கிருஷ்ணாவோ அவளை கெஞ்சலாக பார்த்தவன்,
“அப்போ எனக்கு உன்னோட காதல் தெரியாது உமை, நீ அன்னைக்கு மால் வச்சி பார்த்த பார்வையை தவிர, காதலை எப்பவுமே, எந்த விதத்திலும் நீ வெளிப்படுத்தவே இல்லை”
என்று தன் தரப்பை அவன் விளக்க, அவனை இன்னும் அதிகமாக முறைத்த உமையளோ,
“எனக்கு ஆசை பாருங்க, ஏற்கனவே பேச மாட்றிங்க, இதுல நான் காதலா பார்த்து வச்சி, என் கிட்ட இருந்து சுத்தமா ஒதுங்கிட்டா என்ன பண்றதுன்ற பயம் தான் எனக்கு, மனசு முழுக்க காதலை வச்சி கிட்டு, அதை பார்வையிலோ, இல்ல செயலிலோ வெளிப்படுத்தாம இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா”
என்று நிஜமான வலியுடன் சொல்ல, கிருஷ்ணாவுக்கும் அது புரிந்து தான் இருந்துது. அந்த வலியை அவனும் அனுபவித்தவன் தானே.
ஒரு பெருமூச்சை விட்ட கிருஷ்ணா, அடுத்த நிமிடம், முழுக்க, முழுக்க காதல் நிரம்பி வழியும் பார்வையால் அவளை வருடியவாறே,
“நீ வந்ததுக்கு அப்புறம், உன்னோட சிரிப்பை பார்த்ததுக்கு அப்புறம் தான், நான் என்னோட வாழ்க்கையே திரும்பி பார்த்தேன் தெரியுமா, என்னடா இது வாழ்க்கைனு வெறுப்பு தான் வந்துச்சு”
என அந்நாள் நினைவில் விரக்தியுடன் சொல்லியவன், தொடர்ந்து,
“நான், உங்களை மாதிரி, வாய்விட்டு சிரிச்ச நியாபகமே இல்லை, உன்னை, பாலாவை பார்த்து எப்படி சிரிக்கணும்னு கத்துக்க கூட நினைச்சேன்”
என்று அவன் சாதரணமாக சொல்ல, உமையாளுக்கு தான் கண்கள் குளம் கட்டியது, அவனோ தொடர்ந்து,
“ஆனா நீ தான் ரொம்ப இயல்பா எனக்கு சிரிப்பை அறிமுக படுத்தின, அன்னைக்கு நீ பரிமாறி சாப்பிட்டேன் தெரியுமா, அன்னைக்கு மாதிரி, அதுவரைக்கும் என் வாழ்க்கையில் நான் திருப்தியா சாப்பிட்டதே இல்லை உமை”
என்று வலியுடன் சொல்ல, அவன் அனுபவித்த வலிகளில், அணைக்கட்டி தடுத்த கண்ணீர், இமை தாண்டி இறங்க, உமையாள் அவன் அறியாமல் அதை துடைத்து கொள்ள, கிருஷ்ணாவோ,
“இத்தனை வருஷமா நானே தான் பரிமாறி சாப்பிட்டுகிட்டு இருந்தேன், இருக்கேன், ஆனா அன்னைக்கு அப்புறம், அப்படி சாப்பிட எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா”
என்று சொல்லியவன், ஏதோ நினைவு வந்தவனாக சற்றே கோவம் துளிர்த்த குரலில்,
“ஆமா அன்னைக்கு ஆபிஸ்ல பாலா, கரன் இரண்டு பேருக்கும் சாக்லேட் கொடுத்த இல்ல, எனக்கு மட்டும் ஏன் கொடுக்கல”
என்று கேட்க, அவனின் கேள்வியில் அந்த நாள் நினைவில் ஒரு சிறு புன்னகை உதயமாக, உமையாள்,
“அன்னைக்கு தான் நான் உங்களை காதலோடு பார்த்த நாள், அதுக்காக தான் அவங்களுக்கு சாக்லேட் கொடுத்தேன், உங்களுக்கும் கொடுக்கணும்னு தான் ஆசை, ஆனா நீங்க வேண்டாம் சொல்லிட்டா, நான் கண்டிப்பா ஹர்ட் ஆகிடுவேன், அன்னைக்கு ரிஸ்க் எடுக்க விரும்பல, அதான் உங்களுக்கு கொடுக்கல, ஆனா நீங்களாவே என் கிட்ட சாக்லேட் கேட்டபோ, எனக்கு அவ்ளோ சந்தோஷம் தெரியுமா”
என்று அந்நாள் நினைவில் மகிழ்ச்சியாக சொல்ல, கிருஷ்ணாவோ வருத்ததுடன்,
“எனக்கு தெரியாம நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் இல்ல, இதுக்கு தான் நான் பயந்தேன் உமை”
என்று சொல்லி நிறுத்தியவன், அவள் எதோ பேச வரவும் அவளை தடுத்துவிட்டு, தானே தொடர்ந்து,
“உமை எனக்கு ஒரு வாக்கு கொடு, என்னோட அம்மா மாதிரி நீ எல்லாத்தையும் உனக்குள்ளே வச்சிக்க கூடாது, அன்னைக்கு சரண்யா அப்பா வந்த அப்போ, நான் அவரை “வாங்க”னு சொல்லலைனு, என்னை அவரை கூப்பிட சொன்ன இல்ல, அந்த மாதிரி நான் பண்றது ஏதாவது தப்புனா சொல்லு, நான் திருத்திக்கிறேன், நீ என் கூட கடைசி வரைக்கும் வேணும் உமை ”
என்று சொல்ல, அவனின் பயத்தை, அது தந்த வலியை புரிந்து கொண்ட உமையாள், அவன் சொல்லிய விதத்தில், அடைத்த தொண்டையை சரி செய்து கொண்டு, விளையாட்டு போலவே,
“தப்பு பண்ணா, பனிஷ்மென்ட் எல்லாம் பயங்கரமா இருக்கும் பார்த்துக்கோங்க”
என்று சொல்ல, அவளின் முயற்சி புரிந்து, ஒரு இளநகையை வலிந்து அதரங்களில் சூடி கொண்டவன், அவளிடம் தன் மன உணர்வுகளை மொத்தமாக இன்றே பகிர்ந்து கொள்ள எண்ணியவன் போல , மீண்டும் தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து,
“கரனுக்கு உன் மேல இருக்கிறது பாசம்னு எனக்கு தெரியும், ஆனா அது காதலா மாற வாய்ப்பு இருக்கானு எனக்கு தெரில, என்னை விட அவன் தான் உனக்கு பொருத்தம்னு வேற தோணுச்சு, என்னை விட அவன் உன்னை நல்லா பார்த்துப்பானும் தோணுச்சி”
என்று சொல்ல, தலைவனின் கூற்றில், அவனுடன் ஊடல் கொண்ட தலைவி, அவனின் அணைப்பில் இருந்து வெளிவர முயல, அதை இலாவகமாக முறியடித்த தலைவன்,
“பிளீஸ் புரிஞ்சிக்கோ உமை, அப்போ நான் உன்னை விட்டு விலகி இருக்க காரணம் தேடிக்கிட்டு இருந்த நேரம் அது”
என்று விளக்க, அவனுக்காக அவள் அமைதியாய் இருந்தாலும், அவளின் கோவத்தை, அவளின் உடல் மொழியிலே புரிந்து கொண்ட கிருஷ்ணா தொடர்ந்து,
“அன்னைக்கு ஸ்டீவ் உன்கிட்ட பேசும் போது தான் கரன் முகத்தை பார்த்தேன், முன்ன பின்ன தெரியாத ஒருத்தன், தன்னோட தங்கச்சி கிட்ட, அதிக உரிமை எடுத்துக்கும் போது, ஒரு அண்ணனா “என்னது இது, இதை எல்லாம் எதுக்கு அலோ பண்ற” என்னும் விதமாக, கரன் உன்னை முறைப்பதை பார்த்தேன், அப்போ தான் கரனுக்கு உன் மேல என்ன விதமான பாசம்னு புரிஞ்சது”
என்று சொல்ல, அவனின் மனபோராட்டத்தை புரிந்து கொள்ள முயன்றவாறே உமையாள் அமைதியாய் இருக்க, கிருஷ்ணா தொடர்ந்து,
“எனக்கு இருந்த இன்னும் ஒரு முக்கியமான பிரச்சனை, என்னோட பயம் மட்டும் தான். அதையும் உன்கிட்டேயே சொல்லி, ஐடியா கேட்கலாம்னு தான் அன்னைக்கு எல்லாதையும் உன் கிட்ட சொன்னேன், அதுக்கு நீ சொன்ன பதிலில் தான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையே வந்துச்சு”
என்று சொல்லி நிறுத்த, உமையாளோ அதீத கோவத்தில் முயன்று, அவனின் அணைப்பில் இருந்து வெளி வந்தவள், அவனின் தோளில் சிறு, சிறு அடிகளை கொடுத்தவாறு,
“அன்னைக்கு உங்க பாஸ்ட், பயம், தயக்கம் பத்தி எல்லாம் சொல்லும் போது, மனசு முழுக்க காதலை வச்சிக்கிட்டு, உங்களை அணைத்து ஆறுதல் சொல்ல முடியாம, உங்க கண்ணீரை துடைக்க முடியாம, நான் எப்படி தவிச்சேன் தெரியுமா”
என்று அந்நாளின் நினைவில், அவனுடைய துன்பத்தை நேரில் இரண்டடி தூரத்தில் நின்று மூன்றாம் மனிதர் போல, கை கட்டி பார்த்து கொண்டிருந்த வேதனையில், குரல் கரகரக்க பேசினால் உமையாள்.
அவளின் மன வருத்ததை புரிந்து கொண்ட கிருஷ்ணா, மீண்டும் அவளை தன் அணைப்பில் கொண்டு வந்து, தன் அணைப்பையே அவளுக்கு மருந்தாக்கினான்.
எதுவும் பேசாமல், அவனின் அணைப்பில் அடங்கிய உமையாளுக்கும், மனதிற்குள் ஒரு இனம் புரியா இதம் பரவ, இன்னும் வாகாக அவனுள் அடங்க, கிருஷ்ணா தொடர்ந்து,
“நீ பேசுனதுக்கு அப்புறம், என்னோட காதலை உன் கிட்ட சொல்லணும்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள அப்பா உடம்பு சரி இல்லாம போய், அவர் கட்டாயத்தில், உனக்கு தாலி கட்டும் போது, உன் கண்ணுல இருந்து வந்த ஒரு துளி கண்ணீர்ல, நான் மொத்தமா நொறுங்கி போய்ட்டேன் உமை”
என்று வருத்தத்துடன் சொல்ல, அவனின் பயத்தை, காயங்களை, கல்யாணத்தின் மீதான வெறுப்பை, முற்றும் அறிந்தவள் என்பதால், அன்று அந்த கண்ணீர், அவனை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கும் என்பது புரிய, உமையாள்,
“இங்க பாருங்க கிருஷ்ணா, கண்ணீர் எல்லாமே வருத்தத்தோட வடிவம் இல்லை, வலது கண்ணுல இருந்து வரும் கண்ணீர், அதிகமான சந்தோஷத்தின் வெளிப்பாடு”
என்று சொல்ல, கிருஷ்ணாவின் அணைப்பு இன்னும் இறுக, உமையாளோ,
“அன்னைக்கு நீங்க உங்க அப்பா சொன்னதுக்காக தான் தாலி கட்டுனிங்கனாலும், எனக்கு என்னோட இத்தனை வருட காதல் கல்யாணத்தில் என் கை சேர்ந்த நாள் அது”
என்று உணர்வுபூர்வமாக சொல்ல, கிருஷ்ணா ஏதோ சொல்ல வர, அவனை தடுத்த உமையாள்,
“இப்போ புரியுது, நீங்க அன்னைக்கு எனக்காக யோசிச்சி இருக்கீங்கனு, ஆனா அப்போ அது தெரியாது இல்ல”
என்று சொல்லி நிறுத்த, இருவருமே மற்றவரின் அருகாமையில் கரைந்து போக, மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தது.
ஏதோ நினைவு வந்தவளாக உமையாள், கிருஷ்ணாவை பார்த்து,
“என்னோட மருதாணி இருக்கிற ஷர்ட், உங்க போன்ல இருக்கிற போட்டோனு எல்லாமே என்ன குழப்ப தான் செஞ்சது, என்னால அதை வச்சி ஒரு முடிவுக்கு வர முடில, எனக்கு மட்டும் உங்க காதல் தெரிஞ்சி இருந்தா, அன்னைக்கே வந்து உங்க கிட்ட என்னோட காதலை சொல்லி இருப்பேன்”
என்று சொல்லி அவனை முறைக்க, கிருஷ்ணாவோ ஒரு அழகான புன்னகை உதிர்க்க, மீண்டும் உமையாளே,
“ஆமா என்னோட லவ் உங்களுக்கு எப்படி தெரியும்”
என்று கேட்க, கிருஷ்ணா அவளின் ஓவிய புத்தகத்தை பற்றி சொல்ல, இன்னும் பல கதைகளை பேச, வெளியே கிழக்கு வெளுக்க ஆரம்பித்து இருந்தது.
சாரீர சங்கமம் மட்டும் தான் அந்த இரவுக்கான அர்த்தமா, மனங்களின் சங்கமம் அதை விட உன்னதம் இல்லையா…………
காதல் கொள்வோம்……..