இரவு உறங்கும் வரை வசீகரன் உடன் இருந்து இருந்தாலும், உடலின் அசதியிலும், அலுப்பிலும் உறங்கினாலும் கூட, கொஞ்ச நேரத்திலேயே உமையாளின் உறக்கம் கலைந்து விட்டது.
அர்த்த சாமத்தில், உடன் உறங்கும் அத்தைக்கு விழிப்பு தட்டா வண்ணம் எழுந்தவள், முன்பு தான் தங்கி இருந்த அறையில் தான் இப்போதும் இருக்க, அது அவளுக்கு வசதியாய் போய் விட்டது.
அரவம் எழுப்பாமல், விளக்கை போடாமல், பால்கனிக்கு சென்றவள், பனியில் நின்று, முடிவிலா அந்தகாரத்தை வெறித்து பார்க்க ஆரம்பித்தாள்.
இடது கை சூல் கொண்ட மணி வயிறை தாங்கி கொண்டிருக்க, வலது கையோ கழுத்தில் இருந்த, மெல்லிய சங்கியுடன் உறவாடி கொண்டிருக்க, மனமோ தன்னவன் இந்த சங்கிலியை, அளித்த அந்த பொன் மாலை பொழுதில் மூழ்கி இருந்தது.
இவர்களின் வரவேற்பு முடிந்த பிறகு, ஒரு நாள் மாலை, உமையாள் அவர்களின் வழக்கமாக, நீச்சல் குளத்தில் குதி கால் நனைய அமர்ந்து, அவளவனுக்காக காத்திருந்தாள்.
இவளை முன்னால் செல்ல சொல்லிவிட்டு, சற்று நேரம் கழித்து வந்த கிருஷ்ணாவோ, அவளை போலவே, அதே நேரம் அவளை ஒட்டி அமர்ந்தவன், அவளிடம் ஒரு பெட்டியை நீட்டினான்.
தன்னவனிடம் இருந்து கிடைக்கும் முதல் பரிசு, உமையாளின் முகம் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் சரிவிகிதமாக சூடி கொள்ள, அவனிடம் இருந்து அதை பெற்று கொண்டாள்.
அந்த பெட்டியை திறக்க, உள்ளே பிளாட்டினத்தால் ஆன மெல்லிய தங்க சங்கிலி, அதில் கோர்க்கப்பட்டிருந்த டாலரின் நடுவில், பெரிய வெண்முத்து பதிக்கப்பட்டு இருக்க, அதை சுற்றி பொறிக்கபட்டு இருந்த பொடி வைரங்கள் கண்ணை பறித்தன.
அந்த ரம்யமான பொன் மாலை பொழுதில், பொன்னிற ஒளிப்பட்டு, அவளின் கையில் இருந்த சங்கிலியின் வைரங்கள் மின்ன, அதன் நேர்த்தியும், பாந்தமும் அவளை கவர, முகம் விகசிக்க அவனை பார்த்து,
“சிம்ப்ளி சூப்பவ் கிருஷ்ணா”
என்று கண்ணம் குழைய சிரிக்க, அவளின் சிரிப்பில் கவரப்பட்டவனுக்கும், அதரங்களில் ஒரு புன்னகை உதயமாக, அந்த சங்கிலியை அவளுக்கு அவனே அணிவித்தான்.
உமையாளில் கைகளை மென்மையாக பற்றி கொண்ட கிருஷ்ணா, பட்டினும் மென்மையான குரலில்,
“அந்த ஒரு நாள் தவிர, இதுவரைக்கும் நான் எப்பவுமே பிளைட் மிஸ் பண்ணதே இல்லை”
என்று சொல்ல, “அந்நாள்” எந்நாள் என்று புரிய, அந்நாள் நினைவில் அவள் முகம் கலக்கம் கொள்ள, அவளின் கைகளில் அழுத்தத்தை கூட்டியவன்,
“அன்னைக்கு நான், ஏன், எப்படி பிளைட் அஹ மிஸ் பண்ணேன்னு தெரியுமா”
என்று கேட்க, உமையாள் அந்த நாளின் கணத்தில் கண்களில் கண்ணீர் நிரம்ப, “இல்லை” என்று தலையாட்ட, கிருஷ்ணா தொடர்ந்து,
“இங்க இருந்து கிளம்பும் போது தான் உன்னோட லவ் எனக்கு தெரிஞ்சது, உன் கிட்ட நிறைய, நிறைய பேசனும்னு நினைச்சி இருந்தேன்”
என்று சொல்லியவன் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு,
“உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணும்னு தோணுச்சி, எதுமே யோசிக்காமல் பக்கத்துல இருந்த மாலுக்கு போனேன், உனக்கு பொருத்தமா பார்த்து, பார்த்து செலக்ட் பண்ணி, இந்த செயின் அஹ வாங்கிட்டு, டைம் பார்த்தா பிளைட்கு நேரம் அகிடுச்சு, அப்புறம் அவசர, அவசரமாக கிளப்பி ஏர்போர்ட் போன, பிளைட் எனக்கு முன்னாடியே போயிடுச்சு”
என்று கதை போல சொல்ல, உமையாளின் கைகள் அவளின் கழுத்தில், சற்று முன்பு அவன் அணிவித்த சங்கியை கெட்டியாய் பற்றி கொண்டது. என்னவோ அது தான் அவனின் உயிரை காப்பாற்றியது போல.
அவளின் எண்ணத்தை அறிந்தவன் போல, ஒரு வசீகர புன்னகையை சிந்திய கிருஷ்ணா, அவளை மெதுவாக அணைத்து கொண்டு,
“என்னை சேவ் பண்ணது அந்த செயின் இல்ல உமை, உன்னோட காதல், நம்மோட காதல், நான் அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன், எனக்கு உன் கூட திகட்ட, திகட்ட வாழனும், இந்த உலகத்தில் நீ இருக்க வரைக்கும், நிட்சயம் நானும் இருப்பேன் உமை”
என்று சொல்லிய அவனின் குரலும், அதன் பாவமும், அவனின் கண்களில் இருந்த கரைக்காணா காதலும், அவனின் அணைப்பில் அவள் உணர்ந்த அவனின் உடலின் குளுமையும், இப்போதும் உமையாள் உணர்ந்தாள்.
அன்று எது அவனை பேச உந்தியதோ அவள் அறியாள். ஆனால் இன்று அதை மட்டுமே பற்றாக கொண்டு தான், இவள் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறாள் என்பது, இவள் மட்டுமே அறிந்த இரகசியம்.
தலைவனின் நிலை அறிந்து வர சொல்லி,
காற்றை தூது அனுப்புவோமா !!!!
இல்லை
மேகத்தை தான் தூது அனுப்புவோமா !!!!!
என சங்ககால தலைவி போல தீவிர சிந்தனையில் இருந்தாள் உமையாள்.
மனமோ வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மன்னவனின் நலம் அறிய பேராவல் கொண்டது.
ஆம் கிருஷ்ணா இப்போது இருக்கும் இடத்தில், பெய்த தொடர் மழையால், வெள்ளம் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது. இப்போது தான் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்து இருக்கிறது என்ற செய்தி கிடைத்து இருக்கிறது.
அந்த நாட்டின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்க பட்டு இருக்க, அவனை தொடர்பு கொண்டு, அவனின் நலனை உறுதி செய்து கொள்ள முடியாத நிலை.
உமையாளின் நிலை புரிந்து, வசீகரனும், பாலாவும் அவர்களால் ஆன மட்டும் முயன்று பார்த்து விட்டார்கள்.
ஆனால் அவர்களால், கிருஷ்ணாவையோ, அவனுடன் சென்ற குழுவையோ தொடர்பு கொள்ள முடியவே இல்லை.
நண்பர்கள் உலகவில் பெயர் பெற்ற, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும், ஆப்பிரிக்கவின் குறிப்பிட்ட இனமக்களின் நலனுக்காக, அத்தியாவச மருந்துகளை, அவர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்து இருந்தனர்.
அந்த நிறுவனம் அங்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து இருக்க, மருந்துகளின் தேவையை குறித்து கொள்ள, ஆலோசனைகள் வழங்க என இவர்களையும் உடன் அழைத்தது.
இது முழுக்க முழுக்க உதவும் மனப்பான்மையில் செய்வது தான் என்றாலும், இதன் மூலம் இவர்களின் நிறுவனத்திற்கு நல்ல புகழும், விளம்பரமும், அடையாளமும் கிடைக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.
வசீகரனுக்கும், கிருஷ்ணாவுக்கும் மட்டுமே இதை பற்றி முழு தகவல் தெரிந்து இருக்க, புதிதாக திருமணம் ஆன வசீகரனை அனுப்ப மனம் இல்லாமல், கிருஷ்ணா தான் செல்வதாக சொல்லிவிட்டான்.
உமையாளின் பிரசவத்திற்கு, மருத்துவர் குறித்து கொடுத்த நாளுக்கு, ஒரு மாதத்திற்கும் மேல் இருக்க, அங்கு வேலையும் ஒரு வாரம் மட்டுமே என்பதால், நண்பனுக்காக அங்கு செல்வதென முடிவு எடுத்தான் கிருஷ்ணா.
உமையாளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி, அவன் விமானம் ஏற, அவன் கிளம்பிய அடுத்த நொடியே இவளுக்கு அவனை அனுப்பி இருக்க கூடாதோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது.
இவர்கள் இருவருமே கூட, ஒரு முறை அமெரிக்கா சென்று, உமையாளின் தந்தையை பார்த்து விட்டு, அவர்களுடன் சில நாட்கள் தங்கி விட்டு வந்தனர்.
ஆனால் இம்முறை, கிருஷ்ணா மட்டும் தனியாக செல்வதினாலோ என்னவோ, உமையாளின் மனம் கடந்த முறை நடந்த நிகழ்வை நினைத்து மறுக ஆரம்பித்தது.
இவளின் மனது புரிந்து கிருஷ்ணாவும், அங்கு சென்று சேர்த்ததில் இருந்து, நேரம் கிடைக்கும் போது எல்லாம், ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறையேனும் இவளுடன் பேசி விடுவான்.
உமையாளும் இது வீணான பயம் என்று ஒதுக்கி தள்ள முனைந்து கொண்டிருக்க, அந்நேரத்தில் தான் அவளின் பயம் வேறு விதத்தில் உருப்பெற்றது.
கிருஷ்ணாவின் குழு வேலைகளை முடித்து, நாளை கிளம்பலாம் என முடிவு செய்து, அதற்கான ஆயுத்தங்களில் ஈடுபட, அப்போது ஆரம்பித்தது அந்த பொல்லாத மழை.
அந்நாட்டை பற்றி அறியாத அவர்கள், மழையை பெரிதாக எடுத்து கொள்ளாமல் போக, மறுநாள் சாலைகள் இருந்த தடையமே இல்லாமல், எங்கும் வெள்ள காடு தான்.
அந்த பெரு வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை பறித்ததோடு, பல உயிர்களையும் பறித்து கொண்டது.
இதை எல்லாம், மறுநாள் செய்தியில் பார்த்த மொத்த குடும்பமும் ஆடி தான் போய் விட்டது. ஜெயவர்மர் மற்றும் உமையாளின் நிலையோ மிகவும் மோசம்.
ஜெயவர்மரின் நிலை உணர்ந்து, உமையாள், பாலா, வசீகரன் என ஒருவர் மாற்றி ஒருவர் அவருடன் இருக்குமாறு பார்த்து கொண்டனர்.
மழைக்கு முதல் நாள் இரவு, கிருஷ்ணா உற்சாக ஊற்றாக, உமையாளிடம், “நாளை வந்து விடுவேன்” என பேசியது தான்.
அதன் பிறகு, முழுதாக இரண்டு வாரம் கடந்த நிலையிலும், இவர்களால் இன்னும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை
அதுவும் அவர்கள் குழு சென்றது மிகவும் பின் தங்கிய கிராமம் என்பதால், அவர்களின் நிலை என்னவென்றும் இன்னமும் சரிவர தெரியவில்லை.
அவன் அங்கு செல்லும் போது, அவள் உணர்ந்த இனம் புரியாத பயத்தை போல, இப்போது மனதின் ஓரம், அஸ்திவாரமும் இல்லா ஒரு நம்பிக்கையும் இருந்தது அவளுக்கு, “தன்னவனுக்கு எதுவும் ஆகி இருக்காது” என்று.
தன் தலைவனின் நினைவில், அவளையும் அறியாமல் கண்கள் கலங்க, “அழாதா உமை, உன்னோட வசீக்கு ஒன்னும் இல்ல” என்று தன்னை தானே தேற்றியும் கொண்டாள் அவள்.
இவ்வளவு நேரம் நின்றதன் விளைவாக, கால்கள் வலியெடுக்க ஆரம்பிக்க, வந்து படுக்கையில் படுத்து கொண்டாள்.
பல எண்ணங்கள் அவளை அலைக்கழிக்க, அவள் உறங்க ஆரம்பிக்கும் போது நேரம் அதிகாலையை நெருங்கி இருந்தது.
காலை பொறுமையாக எழுந்து, குளித்து முடித்து அவள் வெளியே வரும் போது, வசீகரன், அவனின் அப்பா, நிலவழகி, என எல்லாரும் அலுவலகம் சென்று இருந்தனர்.
இந்த இரண்டு வாரமும், இயந்திர கதியில் உண்டு, நடந்து, பேசி என வெளியில் தன்னை இயல்பு போலவே காட்டிக்கொள்ள, முயன்று கொண்டு இருந்தாள் உமையாள்.
அது வெறும் முயற்சி என்று புரிந்தாலுமே, ஜெயந்தி அம்மா, பாலா, வசீகரன் என அனைவருமே, அவளுடன் ஏதாவது பேசி கொண்டு, அவளை முடிந்த வரை எதையும் பற்றியும் யோசிக்க விடாமல் செய்து கொண்டிருந்தார்.
என்ன தான் ஒருவருக்காக, ஒருவர் தைரியமாக இருப்பதாக வெளியே காட்டி கொண்டாலும், நாட்கள் நீள, நீள அது அனைவரின் மனதிலும் ஒரு பயத்தை விதைக்க தவறவில்லை.
அன்று அலுவலத்தில் இருந்து வந்த வசீகரன் மற்றும் அழகியின் முகம் சற்று தெளிவாக இருப்பது போல தோன்ற, ஜெயந்தி அம்மா அவர்களை ஆராய்ச்சியாய் பார்த்து கொண்டிருந்தார்.
தன் எண்ணங்களில் மூழ்கி இருந்த உமையாளோ இதை எல்லாம் கவனிக்க கூட இல்லை. தன் அம்மாவை தனியே அழைத்த வசீகரன், அவரிடம் விஷயத்தை சொல்ல, அவருக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
வெறும் இரண்டு வாரம் தான் என்றாலும், தன் பெறா மகளின் ஜீவன் இல்லா முகத்தை பார்த்து எப்படி தவித்து இருப்பார் அவர். அவளின் தவிப்புக்கு ஒரு முடிவு வந்ததில் அவருக்கு ஏக மகழ்ச்சி.
வசீகரன் இன்னும் சிலவற்றையும் சொல்ல, அதை கவனமாக கேட்டு கொண்டவர், தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு உமையாளிடம் சென்று விட்டார்.
அன்றும் வசீகரன், உமையளிடம் பேசி அவளை அவளின் அறையில் உறங்க வைத்தவன், கதவை மெதுவாக சாத்தி விட்டு வெளியே வந்தான்.
வரவேற்பறையில் வசீகரனின் பெற்றோர், ஜெயவர்மர், பாலா, அழகி அனைவரும் இருக்க, இவன் நிலைகொள்ளாமல் குறுக்கும், நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான்.
வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்ட அடுத்த நொடி, பாலாவும், வசீகரனும் வாசல் நோக்கி பாய்ந்து இருந்தனர். அதே வேகத்தில், காரில் இருந்து இறங்கிய கிருஷ்ணாவை ஆர தழுவியும் கொண்டனர்.
அவர்களின் அணைப்பே அவர்களின் பயத்தை கூற, நிற்க சிரமப்பட்ட கிருஷ்ணாவும் சமாளித்து அவர்களை அணைத்து கொண்டான்.
இதே மாதிரி இருவரும் அன்று மும்பையில் இருந்து வந்த அன்று அணைத்தது நினைவு வர, அதோடு சேர்த்து, அன்று அவனின் மனம் கவர்ந்தவள் பட்ட துன்பங்களும் நினைவு வர, அக்கணமே மனம் அவளை பார்க்க பரபரத்தது.
அவனை விட்டு சற்று விலகிய இருவரும், அப்போது தான் அவனின் நிலை உணர்ந்து, அவனை இரண்டு பக்கம் அணைவாக பிடித்து உள்ளே அழைத்து சென்றானர்.
கம்பீரமாக இருக்கும் அவனை இப்படி பார்த்த அனைவருமே சற்று கலங்கி தான் போய் விட்டனர்.
மற்றவரே இப்படி என்றால் உமையாள் பற்றி யோசிக்க கூட முடியவில்லை கிருஷ்ணாவால்.
அதனால் தான், அவன் வரும் தகவலை அவளுக்கு சொல்ல வேண்டாம் என கிருஷ்ணா கண்டிப்புடன் வசீகரனிடம் சொல்லி விட்டான்.
அவள் இருக்கும் நிலைமையில், எந்த விதமான ரிஸ்க் எடுக்கவும் கிருஷ்ணா தயாராக இல்லை.
கிருஷ்ணாவை பார்த்த, ஜெயவர்மர் அவனை கண்களால் நிறைத்து கொள்ள, ஆறுதலாக அவரை அணைத்து கொண்ட கிருஷ்ணா, மற்றவரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தான்.
கிருஷ்ணாவின் கண்களில் இருந்த தேடலை மிக சரியாக புரிந்து கொண்ட வசீகரன், ஜெயவர்மரை பாலாவுடன் அனுப்பியவன், அவனை அவருக்கு துணைக்கு, அங்கேயே தங்கவும் சொல்லி விட்டான்.
தன் பெற்றோரிடமும், அவனுக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்லியவன் அவர்களையும் அனுப்பி வைத்து விட்டு, உமையளின் அறைக்கு கிருஷ்ணாவை அழைத்து சென்றான்.
அழகிக்கு இன்னுமே கிருஷ்ணாவிடம் சற்று பயம் தான். தயங்கி தயங்கி அவனின் நலம் விசாரிக்க, கிருஷ்ணாவும் பதில் அளிக்க, அடுத்த சில நிமிடங்களில், அழகி அவளின் அறைக்கு பறந்து விட்டாள்.
வசீகரனோ கிருஷ்ணா தடுத்தும் கேட்டாமல், அவனுக்கு உடை மாற்ற உதவி, அவன் கட்டிலில் அமர உதவி விட்டு தான், கதவை சாற்றி கொண்டு கிளம்பினான்.
கொஞ்ச நேரம், உமையாளை கண்களால் நிரப்பி கொள்ள நினைத்து கிருஷ்ணா அவளை பார்க்க, அவளின் முகம் அவளின் அலைப்புறுதலை அப்பட்டமாய் காட்டியது.
உறங்கும் போதும் இவனின் நினைவில், அவள் வருந்துவது புரிய, மெதுவாக நகர்ந்து, அவளை பின்புறமாக அணைத்து கொண்டான் கிருஷ்ணா.
அவனின் அணைப்பில், அவனின் அருகாமையில் சஞ்சலங்கள், அலைப்புறுதல் எல்லாம் கரைய, உமையாள் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பிறகு ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள்.
காலையில் உறக்கம் கலைந்த உமையாளுக்கு, தன்னை அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்த கணவனின் அண்மை புரிய, ஒரு நிமிடம் குழம்பி தான் போய்விட்டாள், இது கனவா இல்லை நிஜமா என…..
கனவு எனில் கண்களை திறந்தால், மறைந்து விடும் என்று அச்சம் கொண்ட காரிகை, கண்களை இறுக்க மூடி கொண்டாள்.
ஆனால் ஏ.சியை மீறி தன்னை அணைத்து இருக்கும், தன்னவனின் குளுமை இவளுள் இறங்க, அப்போது தான் புரிந்தது இது கனவு இல்லை என.
அவனின் அணைப்பில் இருந்தபடியே, அவனை நோக்கி திரும்பியவள், நடுங்கும் கரங்களால்
அவனின் முகத்தை வருடி, பின் அவனின் தலை கோத, உறக்கத்திலே அவனின் முகத்தில் ஒரு புன்னகை உதயமாக, இவளின் கண்களிலோ நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
இவளின் கண்ணீர் அவனின் மார்பை நனைக்க, கண் விழித்த கிருஷ்ணா, “உமை” என்று அழைக்க, அவளோ அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தவள், அதோடு,
“ஏன்டா இப்படி பண்ற, நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா, தெரியுமா”
என்று என்னமோ எல்லாவற்றுக்கும் அவன் தான் காரணம் என்பது போல அவனை அடி வெளுக்க, கிருஷ்ணாவோ எதுவுமே பேசாமல், அமைதியாய் அவளின் அடிகளை வாங்கி கொண்டான்.
இது எல்லாமே படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளாமல், ஒருவர் மற்றவரின் அணைப்பில் இருந்த படியே நடக்க, ஓர் அளவுக்கு இயல்புக்கு திரும்பிய உமையாள், தன் பெரிய வயிறை வைத்து கொண்டு, மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
அவளை பின்பற்றி எழ முற்பட்ட கிருஷ்ணாவின் முகம் வலியில் கசங்க, அவனின் வலிக்கான காரணம் புரியாமல், அவன் மேல் இருந்த போர்வையாய் விளங்க, அவனின் கணுக்காலில் இருந்த கட்டு, அவளை பார்த்து பல்லிலித்து கொண்டிருந்தது.
மிகவும் தைரியமான பெண் தான் உமையாள். இன்றோ முனுக்கென கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.
ஒரு வேளை அது அவளின் கர்ப்பகால ஹார்மோன்களின் விளைவாக இருக்கலாம்,
அல்லது அவளவனின் மீது கொண்ட மேவிய காதலாகவும் இருக்கலாம்.
காலில் இருந்த கட்டு நினைவு இல்லாமல், காலை சற்று ஊன்றி விட்ட கிருஷ்ணா, வலியை பொறுத்து கொண்டு, கட்டிலிலே சாய்ந்து அமர்ந்தவன், அவளின் கண்களை துடைத்து விட்டு, மீண்டும் அவளை அணைத்து கொண்டவன்,
“நான் தான் வந்துட்டேன் இல்ல, எதுக்கு இப்போ அழுகை”
என்று கேட்க, அவனை உக்கிரமாக முறைத்த அவளோ,
“உனக்கு இதே வேலையா போச்சு, இனிமே நீ நான் இல்லாம எங்கயேயாவது கிளம்பு, அப்புறம் இருக்கு உனக்கு”
என்று சொல்லி மீண்டும் அடிக்க ஆரம்பிக்க, அவளின் மனநிலை புரிய, இனிமே ஒரு போதும் இப்படி ஒரு துன்பத்தை அவளுக்கு கொடுக்க கூடாது என்று முடிவு எடுத்து கொண்டான் கிருஷ்ணா.
அன்று கிருஷ்ணா அவளை பலதும் பேசி சமாதனப்படுத்தினாலும், அதற்கு அடுத்த அடுத்த நாட்கள், உமையாள் வெகுவாக கிருஷ்ணாவின் அண்மையை நாடினாள்.
என்ன தான் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது என்று நம்பினாலும், அவனை நேரில் பார்க்கும் வரை, அவள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள் என்று கிருஷ்ணாவுக்கு நன்கு புரிந்தது.
அதுவும் நிறை மாதமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்த உணர்வுகளின் போராட்டம் அவளை வெகுவாக பாதித்து இருப்பது புரிய, கிருஷ்ணாவும் தன் நேரத்தை எல்லாம் அவளுடனே செலவிட்டான்.
ஒரு நல்ல நாளில் ஒரு அழகான பெண் மகவை சுக பிரசவத்தில் பெற்று, கிருஷ்ணாவை மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போக வைத்தாள் உமையாள்.
அவனின் நேரத்தை எல்லாம், அவனின் மனையாளும், மகளும் திருடி கொள்ள, அவனும் விரும்பியே, அவர்களிடமே தன்னை முழுதும் ஒப்புக்கொடுத்து விட்டான் கிருஷ்ணா.
ஒரு வருடம் கழித்து………
அந்த திருமண மண்டபம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிய, பாலா மற்றும் பிரியாவின் திருமணதிற்கான ஏற்பாடுகள் படு ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
அம்பியாக இருந்த பாலா அதிரடியாக ரெமோ அவதாரம் எடுத்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவனின் ரியாவை காதலித்து, இப்போது தான் திருமணம் வாழ்க்கையில் நுழைய போகிறான்.
எல்லாவற்றிற்கும் ஆள் வைத்து இருந்தாலும், எல்லாம் சரியா நடக்கிறதா என பார்க்க, வசீகரன், கிருஷ்ணா, அழகி, உமையாள், என எல்லாருக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்தது.
எங்கு இருந்த போதிலும், வசீகரனின் கண்கள், தன் வாரிசை சுமந்து இருக்கும், தன் நிலா பெண்ணை சுற்றி கொண்டிருக்க, பெண்ணவளுக்கு ஏக மகிழ்ச்சி தான்.
பிடிவாதமாக நின்று, தனக்கும், தன் வீட்டினருக்கும் தன் காதலை உணர்த்தி மணந்து கொண்டவனின் காதல், அவளை அவளை சுகமாக தாலட்டியது.
வசீகரனின் தன் மீதான காதல் நாளுக்கு, நாள், அதிகரிப்பதும், அதற்கு இணையாக தான் அவன் மேல் கொண்டுள்ள பித்தும், புரிந்து தான் இருந்தது அவளுக்கு.
தான் பயந்த ஏற்ற, தாழ்வுகள் எல்லாம் அவனின் காதலில் கரைந்து காணமலே போக, அவளின் பயம் அர்த்தமற்றது என்று தன் காதலினால் புரிய வைத்து இருந்தான் வசீகரன்.
இங்கு கிருஷ்ணாவோ, அவனின் ஒரு வயது மகளை கைகளில் வைத்து கொண்டும், மனைவியின் மீது ஒரு கண்ணை வைத்து கொண்டும் சுற்றி கொண்டிருந்தான்.
திவ்ய வர்ஷினி, உமையாள் மற்றும் வம்சி கிருஷ்ணாவின் காதலின் உன்னதம். தன் தாயை போல, தந்தையின் குழல் மீது அலாதி பிரியம் கொண்ட பெண்ணரசி. அவளின் கைகள் எப்போதும் தந்தையின் நீண்ட முடியில் தான்.
எந்த காதல் அவனின் வாழ்க்கையில் பல காயங்களை பரிசளித்தோ, அவனின் புன்னகையை திருடி அவனை உணர்வுகள் அற்றதாக வலம் வர வைத்ததோ, அதே காதல் இன்று அவனின் வாழ்க்கையை மலர்ந்து மணம் வீச வைத்திருக்கிறது.
பாலா நிறைந்த சபையில், எல்லாரும் புடை சூழ, மங்களநாண் அணிவித்து பிரியாவை தன்னுடைய சரிபாதியாக ஏற்று கொண்டான்.
சொந்த பந்தங்கள் எல்லாம் புகைப்படம் எடுத்து முடிக்க, நண்பர்கள் தம் தம் துணைவிகளுடன் மேடை ஏறினர்.
வசீகரன், அவனின் நிலா பெண்
பாலா அவனின் காதல் மனைவி ரியா
வம்சி கிருஷ்ணா அவனின் உமை, அவர்களின் வர்ஷினி
புகைப்பட காரர் “சீஸ்” என்று சொல்லி புகைப்படம் எடுக்க, எல்லோர் முகமும் அளவில்லா காதலிலும், அது தந்த நிறைவிலும் மின்ன, உதடுகள் அழகாக, இயல்பான புன்னகையை சூடி கொள்ள, மிக மிக அழகான புகைப்படம் தான் அது.
இந்த மகிழ்ச்சியும், நிறைவும் என்றும் அவர்களின்
வாழ்வில் நிலைத்திருக்க வாழ்த்தி நாமும் விடைபெறுவோம் மக்களே.
காதல் கொள்வோம்…………