Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-8

அத்தியாயம்-8

நிகழ்காலம்:

ஆதி வலியில் துடிப்பதைப் பார்த்த மதி பதறிப்போனாள். சட்டென்று அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து,



Advertisement

“சார், என்ன ஆச்சு உங்களுக்கு? உங்க பேரண்ட்ஸை எழுப்பவா?” என்று கவலையும் அவசரமுகமாக கேட்டாள்,அவள் கண்கள் கலங்கின.

ஆதி வேகமாக அவளைத் தடுத்தான்.

“வேண்டா.. அவங்க டென்ஷன் ஆகிடுவாங்க.. என் ரூம்ல பெட்டுக்கு பக்கத்துல ஃபர்ஸ்ட் டிராயர்ல மெடிசின் பாக்ஸ் இருக்கும், எடுத்துட்டு வா,” என்றான் வலியைப் பல்லைக்கடித்து சகித்தபடி,

Advertisement

அவள் ஓடிச் சென்று மாத்திரையை எடுத்து வந்தாள், அதை வாங்கி உள்ளேயிருந்து ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டவன் அப்படியே தலையைப்பிடித்தபடி தரையிலேயே அமர்ந்திருந்தான்.

Advertisement

சிறிது நேரத்தில் அவனது வலி குறைந்தது. முகம் வியர்த்து களைத்திருந்தது. கொஞ்சம் தேறியதும்,

“பயமா இருக்கா?” என்று அவளைப் பார்த்து கேலியாகக் கேட்டான்.

அவள் அவனது ஏளனத்தை பொருட்படுத்தாது,

Advertisement

“இப்போ எப்படி இருக்கு சார்? ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வரவா?” என்றாள் கரிசனத்துடன்.

“ம்ம்..” என்று அவன் தலையசைக்க..

அவள் கிச்சனுக்குச் சென்று அதையும் இதையும் உருட்டி ஒருவழியாக காஃபி தயாரித்தவள், வழக்கம்போல சர்க்கரை பார்க்க ஒரு சிப் குடித்துவிட்டு அவனிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.

கப்பை வாங்கியவன் ஒரு கணம் அவளை ஊடுருவிப்பார்க்க, அனிச்சையாக வாயைத் துடைத்தாள், ஆனால் காஃபி தடம் எதுவும் தெரியவில்லை.

ஆதி அந்த கப்பில் ஒட்டியிருந்த லிப்ஸ்டிக்  கரையைப் பார்த்தான். அவள் குடித்துப்பார்த்திருப்பது அப்பட்டமாக தெரிந்தது, ஆனாலும் அவன் முகம் சுளிக்கவில்லை, கோபம் வரவில்லை, அந்த காஃபியை மறுக்கத் தோன்றவில்லை, தன்னுடைய இந்த விசித்திர நடத்தைக்கான காரணத்தை ஆராய்ந்து மீண்டும் தலைவலியை இழுத்துக்கொள்ளவும் அவன் தயாரில்லை.

ஒரு பெருமூச்சுடன், தெரிந்தோ தெரியாமலோ அதே இடத்திலேயே வாய்வைத்து அருந்தினான்.. அந்த காஃபி அவனது நீண்ட நாள் தாகத்தைத் தீர்த்தது போல இருக்க, இனம்புரியா அமைதி உள்ளத்தில் குடிகொண்டது.

“குட் நைட் மதி,” என்று சொல்லிவிட்டு அவன் தூங்கப்போனான்.

நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டு மதி தூக்கம் வராமல் தவித்தாள்.

திறந்திருந்த ஜன்னலின் வழியே குளிர்ந்த காற்றுவீச திடுமென காற்றில் திரைச்சீலைகள் படபடத்தது..

அப்போது, ‘ஜல்..ஜல்..’ என்று கொலுசு சத்தம் கேட்க மதிக்கு ஒருகணம்  தூக்கிவாரிப்போட்டது,

என்ன சத்தம் இது? என்று கலவரம் அடையும் போதே, ‘மதி தைரியமா இரு, ஒன்னும் இல்லை.’ என்று அறிவு திடமூட்டியது.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த சத்தம் விடாமல் கேட்க,

படபடக்கும் இதயத்துடன் லேசாக கண்திறந்து பார்த்தாள்.

அறையின் கும்மிருட்டு ஒருவித  அமானுஷ்ய உணர்வை தர அடிவயிற்றை பயம் கவ்விப்பிடித்தது, மெல்ல கண்கள் இருட்டுக்குப் பழகியதும், பார்வையை அறைமுழுவதும் ஓட்டினாள்.

ஜன்னலின் மேல்

சுவரில் ஒரு சிறு உருவம் தலைவிரிகோலமாகத் தொங்க.. மதியின் இதயம் தொண்டைக்குவந்து துடித்தது.அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

மாடிக்கு ஓடிச்சென்று ஆதியின் அறைக்கதவை டொம்மென்று பலமாகத்தட்டினாள்.

பின்னால் தன்னை யாரோ துரத்துவது போன்ற உள்ளுணர்வில் பதறிப்போய், அவன் கதவைத் திறப்பதற்கு காத்திராமல் கைப்பிடியை திருக அது திறந்து கொண்டது,வேகமாக உள்ளே ஓடியவள்,

சத்தம் கேட்டு விழித்து எழுந்துகொண்டிருந்த ஆதித்யாவின் மீது பாய்ந்து அவன் கழுத்தை சுற்றி கெட்டியாகக் கட்டிக்கொண்டாள்.

தூக்கக்கலக்கத்தில் தன் மீது பலமாக வந்து மோதிய விசையில் சற்றுத்தடுமாறி சுதாரித்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை,

ஆனாலும் அனிச்சையாக அவளை விழாமல் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

“மதி..??”

“சா.. சார்.. அங்க பே..பேய்ய்.” என்றாள் திக்கியபடி..

அவனுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, ஆனால் அவள் உடல் வெடவெடப்பதை உணர்ந்தவன், அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டு,அவள் முதுகை வருடி,

“ஷ்.. ஒன்னுல்ல..இட்ஸ் ஓகே.. காம் டவுன்..” என்று காதில் கிசுகிசுத்தான்.

கொஞ்ச நேரத்தில் அவள் நடுக்கம் நின்றதும், அவளைத் தன்னிடமிருந்து விலகி நிறுத்தினான்.

“என்னாச்சி தண்மதி..?”

“சார் அந்த ரூம்ல பேய் இருக்கு..” என்றாள் அப்போதும் பயத்தில் உதடு நடுங்க..

“வாட்..? என்ன உளறுற?”

“இல்ல சார்.. காட் ப்ராமிஸ் நான் என் கண்ணால பார்த்தேன்..”

“அப்படியா எனக்கு தெரியாம போச்சே .. தெரிஞ்சிருந்தா பேய்கிட்ட வாடகை வசூல் பண்ணியிருப்பேனே..” என்றான் ஏளனமாக,

“சார் நீங்க என்ன நம்பல இல்ல? நீங்களே போய் பாருங்க அப்பதான் நம்புவீங்க..” என்றாள்.

“சரி இரு நான் பார்த்துட்டு வரேன்..” என்று அவன் கிளம்ப,

அங்கே தனித்து இருக்கவும் பயந்து அவளும் அவன் பின்னாலேயே சென்றாள்.

ஆதி அந்த அறையின் விளக்கைப்போட,

“அங்க பாருங்க..” என்று மதி காட்டிய திசையில்,

அங்கே சுவரில் தொங்கிய ஒரு ‘கிரேஸி கேர்ள்’ (Crazy girl) பொம்மையின் முடி காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

மதி திகைத்துத் தடுமாறி பேச்சிழந்து போனாள்.

அவன் ஏளனப்பார்வையை எதிர்கொள்ள  முடியாமல் ஒருகணம் வெட்கத்தில் குன்றிப் போனவள், மறுகணம் விலுக்கென்று நிமிர்ந்து,

“கொலுசு சத்தம்லாம் கேட்டது சார்..பக்கா ப்ராமிஸ்..” என்று வாதாடினாள்.

“ப்ச்.. அது ஜன்னல் ஸ்கிரீன்ல தொங்குற அலங்கார மணி சத்தம்.. காத்துல ஆடியிருக்கு..!” என்று ஆதி எரிச்சலில் கண்ணை உருட்டினான்.

“பேய் கீய்லாம் ஒன்னும் இல்ல,நிம்மதியா தூங்கு, விண்டோவ க்ளோஸ் பண்ணிட்டு ஏசி போட்டுக்கோ ஒரு சத்தமும் கேக்காது,”

அப்போதும் அவள் தயங்கியபடி

“சார்..” என்று இழுக்க,

பொறுமையிழந்த வேக மூச்சுடன்

“இன்னும் என்ன.. ?” என்று எரிந்துவிழுந்தான்.

அவள் உதட்டைப்பிதுக்கி கோபமும் பாவமுமான முகத்துடன் அவனைப்பார்க்க..

ஒரு பெருமூச்சுடன்,

“லைட்ட ஆன்லயே வச்சிட்டு தூங்கு.. சரியா?” என்றான் முடிந்த அளவு தணிவாக,

அப்போதும் அவள் முகம் சமாதானம் ஆகாததைக்கண்டு.

“இப்ப என்ன உன்னை தாலாட்டுப்பாடி தூங்க வைக்கனுமா?” என்றான் கடுப்புடன்,

உடனே ரோஷப்பட்டவள்,

“உங்கள தொல்லைப்பண்ணதுக்கு சாரி சார்.. நானே சமாளிச்சிருக்கனும், உங்கள கூப்ட்டது தப்புதான்.. ரொம்ப சாரி..” என்று கம்மிய குரலில் கூறியவளின் கண்கள் நீர்த்திரையிட்டிருந்தது.

அவள் கண்கலங்குவதும் அவனைக்குத் தாங்கவில்லை.

“என்ன படுத்துறாளே..” என்று மனதில் நினைத்தவன்,

அங்கே இருந்த சேரில் அமர்ந்தான்,அருகே ஒரு மோடாவை தூக்கிப்போட்டு, தன் காலை நீட்டி அதன் மேல் வைத்து இன்னும் வசதியாக அமர்ந்துகொண்டு,

“மதி, நீ தூங்கற வரைக்கும் நான் இங்கயே இருக்கேன் போதுமா.. நீ இப்ப தூங்கு..” என்றான் கனிவான குரலில்.

ஒருகணம் தயங்கியவள் பின்னர் கட்டிலில் படுத்துக்கொண்டு கழுத்துவரை போர்த்திக்கொண்டாள்,

அவனை சிலகணங்கள் விழிவிரித்துப்பார்த்தவள் , பின் கண்களை மூடி அப்படியே தூங்கிப்போனாள்.

ஆனால் ஆதித்யா எந்த வித சலனமும் இல்லாமல் தூங்கும் தண்மதியின் முகத்தையே பார்த்தபடி நெடுநேரம் விழித்திருந்தான்.

மறுநாள், ஆதிக்கு விழிப்பு வந்தபோது, அவன் முதுகு அசைக்கமுடியாமல் இறுகிப்போயிருந்தது., கால்கள் மரக்கட்டைப்போல் அசைவின்றி இருந்தது கழுத்து சுளுக்கியது போல் வலித்தது, அவன் சேரில் அமர்ந்தபடியே கோளாறான கோணத்தில் உறங்கியதால் வந்த வினை, ஆனால் கண்விழித்ததும்,

ஒரு ரோஜாப்பூப்போல  தலைசாய்த்துப் உறங்கும் மதியின் மென்மையான  முகத்தைப்பார்த்ததும், அவன் மனம் ஏதோ இனம் புரியா மென்மையில் நிறைந்தது.

பல நாட்களுக்குப்பிறகு கனவில்லா நிம்மதியான உறக்கம் தந்த புத்துணர்ச்சியுடன் எழுந்து வெளியேபோனான்.

சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க, முகத்தில் புன்னகையுடன் அந்த பக்கம் போனான்.

“குட் மார்னிங் மா..” என்றான் உற்சாகமாக,

“குட் மார்னிங் கண்ணா..நேத்து நைட் ரொம்ப லேட்டா வந்த போல? நான் தூங்கப் போகும்போதே மணி 11..”

“ஆமாம்மா.. 11:30-க்கு தான் வந்தேன்..”

“அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்த? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே?” என்று அக்கறையுடன் கேட்டார்.

“பரவாயில்லம்மா..நான் இப்போ ரொம்ப ஃபிரெஷ்ஷாதான்  இருக்கேன்..”

அவர் முகத்தில் குறு நகையுடன்  பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து,.

“எதுக்குமா சிரிக்கிறீங்க..?” என்றான்.

“எப்பவும் சொல்லுவியே.. ஏன் இவ்வளவு சாதம் வைக்கிறீங்கன்னு… இப்போ பாரு உனக்கு நல்ல பசி போல, அதான்  முழுசா காலி ஆகிடுச்சு.. அம்மா எது செஞ்சாலும் அது கரெக்டா தான் இருக்கும்.. இப்பவாவது உன்னோட தோல்வியை ஒத்துக்கோ…” என்றார்  வெற்றிக் குரலில்,

“சான்ஸே இல்லம்மா.. இந்தத் தடவையும் நான்தான் ஜெயிச்சேன்… எப்பவும் போல இப்பவும் நீங்க அவுட் தான்.. நீங்க செஞ்ச சாப்பாடு ஒருத்தரோட வயித்தை மட்டும் இல்ல, ரெண்டு பேரோட வயித்தை நிரப்புற அளவுக்கு அதிகமாவே இருந்தது..”

“என்னடா சொல்ற?” என்று அவர் குழப்பத்துடன் கேட்டார்.

“என்னோட கொலீக் ஒருத்தங்கள கூட்டிட்டு வந்தேன் மா, நம்ம வீட்ல தங்கறதுக்கு..”

“என்னடா இது புதுசா ? வழக்கமா நீ யாரையுமே வீட்டுக்கு கூட்டிட்டு வரமாட்டியே..”

“அது ஒரு எதிர்பாராத சூழ்நிலை மா.. அவளால ஹாஸ்டல் ரூமுக்கு போக முடியாத நிலைமை.. அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்..”

“அவளா?” அவனது அம்மா ஆச்சரியத்தில் கண்களை விரித்து ஆர்வமாகினார்.

“நோ மா.. உடனே  உங்க கற்பனை குதிரையை  தட்டிவிடாதீங்க.. அவ என் ஜூனியர்.. சின்ன பொண்ணு… வேலையில சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகல..”

“அதனால என்ன… ராமருக்கும் சீதைக்கும் ஒரு பார்வை போதலையா? ‘அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்’..”

“அம்மா ப்ளீஸ்.. உங்க கவிதை திறமையை காட்டுறதுக்கு நான் ஆள் கிடையாது.. இப்படிலாம் பேசி அந்தப் பொண்ணை பயந்து ஓட வச்சிடாதீங்க.. அவ ஏற்கனவே கொஞ்சம் பயப்படுற டைப் வேற…”

“ஓ.. அதுக்குள்ள அவளோட குணாதிசயங்கள் எல்லாம் கூட தெரிஞ்சாச்சா..?”

“அம்மா.. நீங்க இருக்கீங்களே.. ஆளை காலி பண்ணாம விடமாட்டீங்களே..”

“சரி இப்போ அவ எங்கடா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

அவர் கேட்டதுக்கு பதிலே என்பதுபோல,

“மாலா ஆன்ட்டி..” என்று ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டாள் தண்மதி.

அவரும் எதிர்பாரா மகிழ்ச்சியில் முகம் மலர்ந்து

“ராஜாத்தி.. எப்படிடா இருக்க..? எவ்ளோ நாள் ஆச்சி உன்னைப்பார்த்து..” என்றார் அவளைப் பாசமாக அணைத்தபடி,

“போங்க ஆன்ட்டி.. நான் உங்க கூட டூ.. சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டீங்க.. அப்புறமா ஒரு மெசேஜ் கூட இல்லை.. நான் உங்க மேல கோபமா இருக்கேன்..” என்று ஒரு பள்ளிச் சிறுமியைப் போல மாலா ஆன்ட்டியிடம் புகார் செய்தாள்.

ஆதித்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.. இப்படி ஒரு திருப்பத்தை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“அம்மா.. உங்களுக்கு தண்மதியை முன்னாடியே தெரியுமா?”

ஆதித்யாவின் குரலில் இருந்த அதிர்ச்சியைக் கண்ட மாலா ஆன்ட்டி, சூழ்நிலையை உணர்ந்து நிதானமடைந்தாள்.

“அது வந்து.. நாங்க பெங்களூர்ல இருந்தப்போ.. மதி எங்க பக்கத்து வீட்டுல இருந்தா..”

ஆதி ஒரு நிமிடம் புருவத்தைச் சுருக்கினான், பின் அவனது முகம் உணர்ச்சியற்றதாக மாறியது.

“ஓ..” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் தன் தினசரி உடற்பயிற்சிக்காக மாடிக்குச் சென்றான்.

“ஆன்ட்டி நல்லவேளை.. நீங்களாவது என்னை தெரியும்னு ஒத்துக்கிட்டீங்களே.. அதுவரைக்கும் நிம்மதி.. ஆதி சார் தான் என்னை யாருன்னே தெரியாதுன்னு சாதிக்கிறாரு..” என்று சிணுங்கிக் கொண்டே சொன்னாள் மதி

“மதி.. நீ ஃபிரஷ் அப் ஆகிட்டு இரு, நான் உனக்கு காபி கொண்டு வர்றேன்.. அப்புறமா நம்ம பேசலாம்..” என்று பேச்சை பாதியிலேயே கத்தரித்தார் மாலா.

அவரை யோசனையுடன் பார்த்துவிட்டு, சரி என்பது போல தலையசைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள் மதி.

சிறிது நேரம் கழித்து, ஆவி பறக்கும் காபியுடன் மாலா ஆன்ட்டி அவள் அறைக்கு வந்தார்.

இருவரும் அமைதியாக காபியைப் பருகினார்கள். மதி அவரைத் கேள்வியால் துளைக்கும் கண்களுடன்  பார்த்தாள். மாலா ஆன்ட்டியின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருந்தன.

“மதி.. உனக்குள்ள பல கேள்விகள் ஓடிக்கிட்டு இருக்கும்னு எனக்குத் தெரியும்.. அதுக்கெல்லாம் எப்படி பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியல.. எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னும் எனக்குப் புரியல..” அவர் குரலில் வேதனையின் சாயல் தெரிந்தது.

“ஆன்ட்டி.. ரொம்ப கஷ்டமா இருந்தா விட்டுடுங்க.. பரவாயில்லை.. நீங்க போட்டு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க..” என்று மென்மையான குரலில் சொன்னாள் மதி.

ஆதித்யாவின் விசித்திரமான நடவடிக்கையின் காரணத்தைத் தெரிந்துகொள்ள அவள் துடித்துக்கொண்டிருந்தாலும், மாலா ஆன்ட்டி கஷ்டப்படுவதும் அவளுக்குத் தாங்கவில்லை.

“இல்ல மா.. சொல்லிதான் ஆகணும்.. எனக்கும் இதையெல்லாம் மனசுக்குள்ளேயே பூட்டி வச்சு.. நெஞ்சு அடைச்சுப் போயிருக்கு. உன்கிட்ட சொன்னா ஒரு வடிகாலாவாவது இருக்கும்..

உன்னோட முதல் கேள்வி…ஆதி ஏன் உன்னை அடையாளம் தெரியாத மாதிரி நடந்துக்கறான், அதானே..?”

அவள் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள்.

“ரெண்டாவது கேள்வி.. அவன் ஏன் என்னை ‘அம்மா’ன்னு கூப்பிடுறான்னு.. இல்லையா?”

“ரெண்டுக்கும் ஒரே பதில்தான்… ஆக்சிடெண்ட்!”

“ஆக்சிடெண்ட்டா?”

“ஆமா ஆக்சிடெண்ட்.. அதுதான் அந்த குழந்தையோட வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சு..”

ஆதித்யாவிற்கு என்ன நடந்தது என்பதை மாலா ஆன்ட்டி விவரிக்கத் தொடங்கினார்.. அதைக் கேட்ட மதி, காலடியில் பூமி நழுவுவது போல உணர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!