“ஜவுளிக்கடை சுந்தரம் புது அட்டைக்கு மாடல் தரேன்னு வர சொல்லிருக்காரு… நம்ம ஏற்கனவே செஞ்ச சாம்பிளையும் கொண்டு வந்து தரேன்னு சொல்லிருக்கேன் இன்னைக்கு”
காலையிலேயே அன்பழகனின் முன்வந்து நின்ற மனோகர் இப்படி சொல்ல, “மணி எட்டு தானே ஆகுது?” என்று கடிகாரத்தை பார்த்தார் அவர்.
“அவரை பார்த்து பேசிட்டு கயிறு பேக்டரி போனும்! சில கணக்கு சரிபார்த்து ஆடிட்டருக்கு தரனும்!” அவன் குரலே எதிராளி மறுத்து சோள முடியாதபடி பிடிவாதமாய் இருந்தது.
அன்பழகன் யோசனையோடே, “அட்டைபெட்டி எல்லாம் எடுத்துட்டு அப்பறம் போறதா?” என்று பயணவிவரம் கேட்க, “வாட்ச்மேன் கிட்ட குடுத்து விட சொல்லிருந்தேன்! வீட்டு வாசல்ல தான் இருக்கு” என்றான்.
இதற்குமேல் அவர் என்ன சொல்ல? கார் சாவியை எடுத்து நீட்டினார்.
கௌசி தன் பள்ளிபையுடன் வந்தவள், “வரேன்ப்பா!” என்றாள். முன்புபோல துறுதுறுப்பு இல்லை என்றாலும் மனோ சொன்னதற்காகவே இயல்பாய் இருப்பதை போல காட்டிக்கொண்டாள். அவள் மாற்றத்தை ஊன்றி கவனிக்கும் அளவுக்கு வீட்டில் யாரும் அவள் மீது பற்றாய் இல்லை. அவர்கள் கவனமெல்லாம் வீட்டின் தற்போதைய கதாநாயகி ‘ஆர்த்தி’ மீது தான்!
இல்லாத வேலையை இருப்பதாய் காட்டிக்கொண்டு மனோகர் காலையில் வந்து நிற்பதே கௌசியை அழைத்துப்போக தான்! அதற்கு தகுந்தார் போல, “போற வழில கௌசியை ஸ்கூல்ல விட்டுடு மனோ” என்றார் அன்பழகன்.
“ஏண்டா அவன் வேலையை பார்ப்பானா? இல்ல இவளை பள்ளிக்கூடத்துல கொண்டி விடுவானா?” எப்போதும்போல தனபாக்கியம் ஆஜர் ஆக, “வேலைக்காரன் தானே? டிரைவர் வேலை செஞ்சா தப்பொன்னும் இல்லை” என்று வந்து நின்றார் புவனா.
இதையெல்லாம் கேட்க அவன் இருந்தால் தானே? சாவி கைக்கு வந்ததுமே வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
மாமியாரும் மருமகளும் கொஞ்சிக்கொள்வது வெளிகேட் வரை கேட்டது.
காருக்குள் இருவர் இருந்தும், இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள நிறைய இருந்தும், வழி நெடுக மௌனம்… நிசம்ப்தம்… அமைதி… இவை மட்டுமே!
பள்ளியின் அருகே வண்டியை நிறுத்தி, “சாயங்காலம் நானே வந்து அழைச்சுட்டு போறேன்… இங்கேயே நில்லு” என்றவன் சொன்னது போலவே செய்தான்.
அடுத்து வந்த நாட்களும் அன்பழகனிடம் ஏதேதோ காரணங்களை அடுக்கி கார் சாவியை பெற்றுக்கொண்டான். காலையில் கௌசியை பள்ளியில் விடுவதும், மாலையானால் மீண்டும் அழைத்து வருவதுமே தன் தலையாய் கடமை என்பதை போல செய்துக்கொண்டிருந்தான் மனோ.
ஆர்த்தி இல்லாமல் ஒத்தையில் அவள் சென்று வருவதற்கு இது நல்லது தானே என்று யாரும் எதுவும் சொல்லவில்லை.
‘வேலைக்காரன்’தானே செய்யட்டும் என்று புவனாவும் கண்டுக்கொள்ளவில்லை.
இறுதி தேர்வுகள் நெருங்குவதால் ஆர்த்தி தன் விடுமுறை முடிந்து இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் பள்ளிக்கு செல்வதாக இருந்தபோது, மாலை நெருங்கும் வேளை, அன்பழகனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
மறுபுறம் பேசியவர் என்ன சொன்னாரோ? அன்பழகனின் ரத்த நாளங்கள் எல்லாம் புடைக்குமளவு ஆத்திரத்துடன் கடிந்த பற்களில் தன் ஆங்காரத்தை அடக்கிக்கொண்டு, ஒரு கண்ணில் கடிகாரத்தையும் மறுக்கண்ணில் வாயிலையும் வெறித்துக்கொண்டிருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் வெளி கதவு திறக்கப்பட்டு கார் உள்நுழையும் சப்தம் கேட்டது. இறுகிய முகத்துடன் அடுத்த நொடிகளுக்காக காத்திருந்தார்.
குனிந்த தலையுடன் உள்ளே வந்துக்கொண்டிருந்தாள் கௌசி. அவள் பின்னே மனோகரன்.
“நில்லு….”
மாடிப்படியில் கால் வைத்தவள் தந்தையின் சொல்லில் அப்படியே நின்றாள்.
அவளை ‘நில்’ என்றவர், மனோகரிடம், “ஏன் லேட் இன்னைக்கு?” என்றிட,
“வழில ப்ரேக் டவுன் ஆகிடுச்சு! சரி செஞ்சுட்டு அப்பறம் ஸ்கூலுக்கு போய் அழைச்சுட்டு வந்தேன்” என்றான். அவன் மனம் லேசாக மணியடித்தது, ஏதோ சூழ்நிலை சரியில்லை என்று.
இப்போது அவர் முழுக்க கௌசியின் புறம் திரும்பினார்.
“சொல்லு… எங்க போன?” மெலிதான குரலில் என்றாலும் அத்தனை கடுமை அதில்.
கௌசியின் மனம் ‘திக்’கென்று அதிர்ந்துப்போனது.
அவளை நெருங்கியவர், “எங்க போனன்னு கேட்குறேன்ல?” என்க, சற்று திணறி தான் என்றாலும், “ஸ்…ஸ்கூல்…க்கு” என்று அவள் சொல்லிமுடித்த மறுகணம், அவள் இடப்பக்க காதும், கபாலமும் அதிரும்படி அன்பழகன் அடித்த அடியில் வாய் விட்டு கத்தக்கூட திராணியற்று சுருண்ட புழுவென தரையில் விழுந்தாள் கௌசி.
அருகே நின்ற மனோகரே இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை எனும்போது, அங்கே இல்லாத மற்றவர்கள்?
அடித்துப்பிடித்துக்கொண்டு வந்து நின்றனர்.
மகள் சரிந்துக்கிடப்பதை கண்டதும், ஓடி சென்று அள்ளி தன் மடியில் கிடத்திக்கொண்டார் புவனா. அன்பழகன் அடியில் அவள் காது மடல்கள் எல்லாம் சிவந்து போய் இருந்தன.
“தோளுக்கொசந்த புள்ளையை எதுக்குடா அடிச்ச? அதென்ன பொம்பளப்புள்ளையை கை நீட்டுற பழக்கம்?” என்று தனப்பாக்கியம் அதட்ட,
“எதுக்குங்க இவளை அடிக்குறீங்க? உங்க ஒரு அடி தாங்குவாளா? பச்சை புள்ளைங்க!” என்று கண்ணீர் கரையிட புவனா,
“ப்பா! என்னப்பா செஞ்சா இவ?” என்று மதன், என எவர் பேசும் அன்பழகனின் காதில் விழவில்லை.
கீழே விழுந்து கிடந்தவளின் ரிப்பன் கட்டிய ஜடையை பிடித்து கொத்தாக மேலே தூக்கியவர், “எங்க போன?” என்றார் மீண்டும்.
அதற்குமேல் மனோவால் தள்ளி நிற்க முடியவில்லை. இரண்டே எட்டில் பாய்ந்து வந்து இருவரையும் தடுத்து பிடித்தான்.
“நான் தான் சொல்றேன்ல! என்னால தான் இன்னைக்கு வர லேட் ஆச்சு! அவ மேல எந்த தப்பும் இல்ல” தாமதமாய் வந்ததற்க்கு தான் பேசுகிறாரோ என்று நினைத்து அவன் சொல்ல, அவனை ஏறெடுத்தும் பாராதவர், பார்வையை கௌசியை விட்டு நீக்கவில்லை.
“என்கிட்டே பொய்… பொய் பேசுறியா?” ஆங்காரமாய் கேட்டுக்கொண்டே, தடுத்து பிடித்த மனோகரை கூட தள்ளிவிட்டுவிட்டு அவளை அடிக்க அவர் செல்ல, நடுவே மற்ற மூவர் வந்து தடுத்தும் கூட அன்பழகனை நிறுத்த முடியவில்லை. அத்தனை ரௌத்திரம்… அது கொடுத்த வேகம் அவரிடத்தில்…!!
“உங்களுக்கென்ன பைத்தியமா?” இதுதான் முதன்முதலாய் மனோகர், அன்பழகனை எதிர்த்து பேசியது.
தன்னை அதட்டுபவனை பார்த்து முறைத்தவர், “அவ எங்க போனான்னு கேட்டு சொல்லு எனக்கு!” என்றார்.
கௌசியிடம் கேட்காமலே, “அதான் ஸ்கூலுக்கு போனான்னு சொல்றால்ல? நான் லேட்டா போனதால தான் எப்போதும் வர நேரத்துக்கு வர முடில! அதுக்கேன் இப்படி சம்பந்தம் இல்லாம கோவப்பட்டுட்டு இருக்கீங்க?” என்று அவன் குரல் உயர்த்த, அப்படி முகத்துக்கு நேரே கேட்கும் அவனை புதிதாய் பார்த்தனர் மற்றவர்கள்.
அன்பழகனும் அப்படி தான் பார்த்தார்.
‘என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா?’ என்ற எண்ணம் அந்த நொடி உள்ளே ஓடினாலும், அதை விட மகள் விஷயம் முக்கியமாய் போனது.
“நான் சம்பந்தம் இல்லாம கோவப்படல! கடைசியா கேட்குறேன், அவ எங்க போயிட்டு வரான்னு உண்மையை மட்டும் சொல்ல சொல்லு!” முடிந்த மட்டும் பொறுமையுடன் கேட்டார்.
மனோகருக்கு அலுத்துப்போனது, ‘என்னடா இது’ என்று!
“அவ ஸ்கூலுக்கு தான் போனா! எனக்கு தெரியும்! நான் தானே கொண்டு போய் விட்டேன்!” கௌசியிடம் பார்வையை கூட செலுத்தாது அவளுக்காக அவன் பேச,
“ஓ! பள்ளிக்கூடம் எல்லாம் இப்போ ஐஸ்கிரீம் கடைல நடக்குதோ?” என்று அகசியமாய் [ஏளனம்] கேட்க,
“எதையாவது தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசாதீங்க! ஒரு அரை மணி லேட்டா வந்ததுக்கா இவ்வளவு அக்கப்போரு?” அங்கலாய்த்தான்.
“நீ என்ன என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்க? சம்பந்தப்பட்டவளே மறுத்து பேசாம நிக்குறா! நீ என்னவோ சும்மா சப்போர்ட்டுக்கு வந்து குதிக்குற?” அன்பழகன் அப்படி சொன்ன பிறகு தான் திரும்பி கௌசியை பார்த்தான் மனோகர்.
கன்னங்களில் உறைந்த கண்ணீருடன், முகம் முழுக்க திகில் பரவ நின்றிருந்தவளை கண்டதும், புருவம் சுருக்கினான்.
அதற்குள், “சொல்லு! எங்க போயிட்டு வர? யாரு அவன்?” என்று அன்பழகன் விசாரிக்க, அருகே இருந்தவளின் முதுகில் ‘சுரீர்’ரென்று அடித்தார் புவனா.
தனப்பாக்கியம், “என்ன ஏது ன்னு கேட்காம கை வைக்காத!”
“இன்னும் என்ன கேட்க இருக்கு? இது உண்மை இல்லன்னா உடனே மறுத்து சொல்லிருக்கனும்ல இவ? கல்ல முழுங்குனவளாட்டம் நிக்குறதுலையே தெரியலையா?” என்றவருக்கு இன்னும் அவளை அடித்துப்போட தான் வந்தது.
மனோகர் கௌசியின் முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘அவள் ஏன் மறுத்து சொல்லாமல் நிற்கிறாள்?’
மதன், “உங்களுக்கு யாருப்பா சொன்னது?”
“உன் சின்ன மாமன் தான் போன் போட்டான்! கையோட இழுத்து வரவான்னு கேட்டான்! அப்போ மனோகர் கார் வந்து நிக்குறதா சொல்லவும், ‘விட்டுடு வீட்டுக்கு வரட்டும்’ன்னு சொல்லிட்டேன்! அவன் கண்ணுல விழுந்த மாறி இன்னும் எத்தனை பேர் கண்ணுல விழுந்து குடும்ப மானத்தை வாங்கி வச்சுருக்காளோ தெரியல!”
மதன், “இதுக்கு தான் அவ்ளோ தூரத்துல கொண்டு போய் சேர்க்காதீங்கன்னு அப்போவே சொன்னேன்! என் பேச்சை கேட்டா தானே!” என்று முடித்துவிட்டான்.
தனப்பாக்கியத்துக்கு இன்னமும் இதையெல்லாம் நம்ப முடியவில்லை.
“ஏன்டி இவ்வளவு பேசுறாங்களே? வாயை தொறந்து ஆமா, இல்லன்னு சொல்லி தொலைவேன்! அப்படியே சிலை கணக்கா நிக்குற?” என்று அவர் பங்குக்கு கத்த,
“போனியா இல்லையா நீ?” என்று கையை ஓங்கிக்கொண்டு அன்பழகன் அவளை நெருங்கும்போது,
யார் அடிக்கவில்லை என்ற கணக்கின்றி ஆளாளுக்கு பிடித்துக்கொண்டனர் அவளை.
அவள் மேல் கை வைக்காமல் ஒதுங்கி நின்றது ஆர்த்தியும், மனோகரும் தான்!
ஆர்த்தி மிரண்டு போய் ஓரத்தில் நின்றிருக்க, மனோகருக்கோ என்னவென்றே சொல்ல முடியாத உணர்வு…!
‘நான் பேசக்கூடாதுன்னு சொல்லியும் போயிட்டாளா?’ என்ற சிறு துணுக்கு அவனை என்னவோ செய்தது.
அவள் தன் பேச்சை மீறியிருப்பாள் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
‘என்னை நம்பலையா அவ?’
‘இப்படி எதுவும் நடந்துடக்கூடாதுன்னு தானே நான் பயந்தேன்!’
ஆளாளுக்கு அவளை அடிப்பதை காணசகிக்காது, அதை தடுக்கும் வழியும் அறியாது தொய்ந்துப்போய் வெளியேறினான்.
அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் கௌசிக்கு நரகத்தில் வாழ்வதை போன்ற உணர்வை தான் கொடுத்தது.
அவள் அறையை விட்டு வெளியே வர கூட அவளுக்கு அனுமதி இல்லை. அறைக்குள் கிடப்பவளை வந்து பார்க்கவும் நாதியில்லை. உணவு மட்டும் வேலையாட்கள் மூலம் அவ்வப்போது அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது.
அன்பழகன் விசாரித்தவரையில் ‘அந்த பையன்’ வேற்று சாதி என்பதே அவர் கொதிப்பை கூட்ட போதுமானதாக இருந்தது. ஜாதிசங்க தலைவர் வீட்டிலேயே வேற்று இனத்தவரோடு காதல் என்று ஊருக்கு தெரிந்தால் எத்தனை தலை குனிவு!?
இதில் தந்தையை இழந்த அவனை நம்பி தான் தாயும் தங்கையும் இருக்கின்றனர், பிழைப்புக்கு வழிதேடி ஒன்றுவிட்ட அண்ணன் கடையில் எடுபுடி வேலையில் இருக்கிறான் என்று தெரிந்துபோது….
அவர் கையில் மட்டும் அந்நேரம் சிக்கியிருந்தான் எனில் இந்நேரம் அவனுக்கு காரியமே நடந்திருக்கும்!!!
பெண்ணின் விஷயம் வெளியே கசிய கூடாதே என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்தார் அன்பழகன்.
கௌசிக்கு மனோகரனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. தனக்காக அத்தனை பேரிடமும் பரிந்து பேசியவரின் பேச்சை தான் தட்டிவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவளை வதைக்க, ‘தான் அங்கே சென்றதன் காரணத்தை’ சொல்லிவிட, அன்றிரவு யாரும் அறியாமல் அவனை காண மாடி ஏறினாள்.
அவன் அறைகதவு திறந்துதான் இருந்தது.
கையை தலைக்கடியில் கொடுத்து கண் மூடி படுத்திருந்தவன் நிச்சயமாய் உறங்கவில்லை என்று தோன்ற, “மா…மா” என்றாள் மெல்லிய குரலில்.
சிறு குரலுக்கே படக்கென எழுந்தவன், சில நொடிகள் அவளை பார்த்திருந்தான். அவள் பேச வாயெடுக்கும் நேரம் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டவன், “போ இங்கிருந்து…” என்றுவிட்டான்.
“மாமா! நீங்களாவது நான் சொல்றதை கேளுங்க மாமா! நான் ஒன்னும் சிரிச்சு பேச போகல” அவள் ஆரம்பிக்கும்போதே,
குரல் உயர, “எதுக்காகவும் போயிருக்கக்கூடாது!” என்றான் முகம் சிவந்து.
அவனது அந்த குரல் அவளை மேற்கொண்டு பேசவிடாமல் நிறுத்திவிட்டது.
“அவனை பாக்கவோ பேசவோ கூடாதுன்னு சொன்னேன் தானே? எதுக்கு சொன்னேன்னு நினைச்ச? இப்படி மாட்டை அடிக்குற மாதிரி குடும்பமே சேர்ந்து அடிக்குதே! தேள் கொட்டுறதை விட மோசமா எல்லார் நாக்கும் உன்னை வசைப்பாடுதே! இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னு தான்!!!
எல்லோரிடமும் திட்டு மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தாலும், இவன் திட்டுவது அவளுக்கு வலிக்கவில்லை. மாறாக, ‘எனக்காக தானே? என்மீதுள்ள அக்கறையினால் தானே?’ என்ற எண்ணமே இதமாய் இருந்தது.
“மிஞ்சிப்போனா எதுக்கு போயிருப்ப? என் மாமா கிட்ட நான் எல்லா உண்மையும் சொல்லிட்டேன்! அவர் நம்ம விஷயத்தை பார்த்துப்பாரு! அதனால அதுவரைக்கும் நம்ம பாக்கவோ பேசவோ வேண்டாம்ன்னு சொல்ல போயிருப்ப! சரியா?” என்று கேட்க, ஸ்தம்பித்தாள்.
அதானே… அதேதானே நடந்ததும்!!!
“மா…மா” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
வாய்விட்டு சொல்வதை கூட புரிந்துக்கொள்ளாதவர்கள் மத்தியில் தான் சொல்லாமலே தன்னை உணர்ந்துக்கொள்ளும் ஒரு ஜீவனை பார்க்கையில் கண்ணீர் தான் கொட்டியது.
“தப்பு செய்யும்முன்னே ஆயிரம் முறை யோசிக்கணும்! செஞ்ச பிறகு ‘ஐயோ தப்பு நடந்துடுச்சே’ன்னு வருத்தப்பட்டு ஒத்த பைசாக்கு பிரயோஜனம் இல்ல தெரிஞ்சுகோ!” என்றான் சூடாக.
“செஞ்சதை எப்படி சரி செய்யலாம்ன்னு யோசி! அதவிட்டுட்டு எந்நேரமும் அழுது வடிஞ்சு உடம்பை கெடுத்துக்காத!!!” கண்டிப்புடன் அவன் சொல்ல, கண்களை துடைத்துக்கொண்டு தலையாட்டியவள் அமைதியாக வந்தவழி சென்றுவிட்டாள்.
அடுத்து வந்த சில நாட்கள் மாற்றமின்றி நகர, ஓர் நாள் இரவு கௌசிக்கு உணவு கொண்டு சென்ற வேலையாள் பதற்றத்துடன் திரும்பி வந்து,