“அதுசரி…” என்று சொல்லியபடி லட்சுமியை எப்போதும் அவள் படுக்கும் இடத்தில் கிடத்தியவன் அவனிடத்தில் படுக்க,
“ஹா… தள்ளி படுங்க…. எனக்கு இடமேயில்ல….” என்றாள் இன்னும் அவனை நகட்டி..
‘இன்னிக்கு இவளுக்கு என்னாச்சு… எப்போவும் மதில முட்டிட்டு படுத்திருப்பா.. இப்படி நெருக்குறா…’ என்று பார்த்தவன் கொஞ்சம் தள்ளிப் படுக்க, இன்னும் தள்ளினால் அவன் கீழே தான் விழ வேண்டும்.
கீழே பார்த்தவன், விழுந்திடாமல் இருக்க இன்னும் கொஞ்சமாய் உள்ளே தள்ள,
“ஹா… தள்ளுங்க…” என்றாள் மீண்டும்.
‘அய்யோ ஏன் டி இப்படி பண்ற…’ என்று பார்க்க, அப்போது தான் தெரிந்தது அரைகுறை தூக்கத்தில் அவளுக்கே தான் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை என்று…
முடியெல்லாம் விரித்து அவள் முகத்தை பாதி மறைத்திருக்க, என்றைக்கும் இல்லாமல் ஈசனை நெருங்கி வந்து படுத்திருந்தாள். அவள் உறக்கத்தின் பிடியில் இதெல்லாம் செய்ய ஈசனுக்குத் தான் உறக்கம் போனது.. சரி அவளே மேலே படுக்கட்டும் நாம் கீழே படுப்போம் என்று எழப் போக, இன்னும் அவன் பனியனில் தான் லட்சுமியின் பிடி இருந்தது.
‘ஈசா உன்னை ரொம்ப சோதிக்கிறா…’ என்று சொல்லிக்கொண்டவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.
இதேது லட்சுமி தெளிவாய் இருந்திருந்தால் அவளை கண்களிலேயே எரித்திருப்பாள்.. இந்நேரம் சரிக்கு சரியாய் மல்லுக்கு நின்று ஒருவழி செய்திருப்பாள் என்று தோன்ற, இப்போதும் கூட அவளை பார்க்கையில் ஆச்சர்யமாக, புரியாத புதிராக தான் இருந்தது.. மெல்ல அவள் கைகளை பிரித்தவன், கீழே இறங்கப் போக,
“ஐயோ நான் விழுந்திடுவேன்…” என்ற லட்சுமியின் குரலில் வேகமாய் திரும்பிப் பார்த்தான்.. அவள் தான் மீண்டும் அவனை பிடித்திருக்க, “நா விழுந்திடுவேன்…” என்றாள் மீண்டும்..
“இவ்வளோ பெரிய பெட்ல நீ விழமாட்ட லஷ்மி… தூங்கு…” என்று மெல்ல அவளை தட்டிக்கொடுக்க,
“ம்ம்…” என்று அவனை இன்னும் நெருக்கிப் படுத்தவள் முகத்தை முழுவதுமாய் அவள் முடி மறைத்துக்கொள்ள,
‘ஸ்ஸ்ஸ்.. இன்னிக்கு உனக்கு சிவராத்திரி தான்டா ஈசா…’ என்று அவனுக்கு தோன்ற, இன்னும் ஈசனது புன்னகை விரிய, அவள் முடியை மெல்ல ஒதுக்கினான்…
அவள் தூக்கம் கலையாமல் தான் ஈசன் செய்தான், இருந்தாலும் அவனுக்கு அத்தனை மென்மையாய் எல்லாம் செய்திட வரவில்லை. பாதி முடி கழுத்தோடு சேர்த்து சுத்திக்கொள்ள, அவள் தலையை மெல்ல நிமிர்த்தி மொத்த முடியையும் எடுத்து பக்கவாட்டில் போட்டான்..
அவன் லேசாய் அவளை நிமிர்த்தியதில் மீண்டும் கண்களை பாதி திறந்து, “ஐயோ என் கொண்டை…. போச்சு போச்சு…” என்று இன்னும் லட்சுமி சிணுங்க,
“ஓய் பேசாம தூங்கு டி…” என்று ஒரு அரட்டல் போட்டுவிட்டான். அவன் போட்ட அரட்டலில் இதழ்களை வளைத்து அடுத்து என்னவோ சொல்லப் போக,
“இப்போ நீ தூங்காட்டி தூக்கி தொட்டிக்குள்ள போட்டிருவேன்..” என்று மிரட்ட,
“ஹா…” என்றவள் அப்படியே கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
பின்னே அவனும் தான் என்ன செய்வான்.. எத்தனை நேரத்துக்குத் தான் பொறுமையாய் இருப்பது.. அவனும் மனிதன் தானே.. உறங்கும் நேரத்தில் இவள் இப்படியெல்லாம் செய்தாள் அவன் வேறென்ன செய்ய முடியும்.
“தூங்கு லஷ்மி…” என்று மீண்டும் தட்ட….
“ம்ம்…” என்று மட்டும் சொன்னவள் அப்படியே உறங்கியும் போனாள்..
கட்டிலின் நுனியில் ஈசன் அமர்ந்திருக்க, அவனை பிடித்தவாக்கிலேயே லட்சுமி உறங்க, அவனால் கீழே இறங்கவும் முடியவில்லை, அவளைத் தாண்டி அந்தப்பக்கமும் செல்ல முடியவில்லை.
ஈசனுக்கும் உறக்கம் கண்களை சொருகியது.. எத்தனை நேரத்திற்கு அப்படியே அமர்ந்திருக்க முடியும்.. மணியை பார்த்தான், நள்ளிரவு ஒன்று என்று காட்டியது.. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பண்ணைக்கு கிளம்ப வேண்டும்.. நான்கு மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் அவனால் அடுத்த நாள் வேலைகளை கொஞ்சம் உற்சாகமாய் செய்ய முடியும்.. இல்லையா தூங்கி தான் வழியவேண்டும்.
‘என்னடா செய்றது…’ என்பது போல் பார்க்க, லட்சுமி மெல்ல புரண்டு படுப்பது போல் தெரிய, இது தான் சாக்கென்று வேகமாய் அவனும் கட்டிலில் படுத்துக்கொண்டான்..
கொஞ்ச இடம் தான் ஆனாலும் எப்படியோ படுக்க இடம் விட்டாளே என்று நினைத்துகொண்டு தூங்க, புரண்டு படுத்தவள் மீண்டும் இவன் மீது முட்டிக்கொண்டு படுத்தாள்..
‘அடியேய் லஷ்மி…..’ என்று கத்த வேண்டும்போல் இருக்க, லட்சுமியை மொத்தமாய் இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு அவளை இறுக கட்டி இன்னும் நன்றாய் அவனும் கொஞ்சம் உள்ளேத் தள்ளி படுத்துக்கொண்டான்.
பல நாட்களுக்கு பிறகான லட்சுமியின் ஸ்பரிசம், அவளது வாசம், அவளது நெருக்கம் எல்லாம் சேர்ந்து ஈசனுக்கு ஒரு புதுவித மயக்கத்தை கொடுக்கவும் செய்தது.. இன்னும் அவளை இறுக்க, அவளோ அவன் மீது படுத்திருக்கிறோம் என்றெல்லாம் புரியாமல் ஈசனது கழுத்தில் நன்றாய் முகத்தை வைத்துக்கொண்டு உறங்க, அவளது கேசம் முழுவதும் அவன் முகத்தை மறைத்து..
“டி லஷ்மி….” என்று பல்லைக் கடித்தாலும், அவன் விலகவும் இல்லை, அவளை விலக்கவும் இல்லை.. அப்படியே தான் படுத்திருந்தான்.
ஆனால் என்ன வந்த உறக்கம் போய்விட்டது… அவனும் லட்சுமியும் பின்வீட்டில் இருக்கையில் அடித்த லூட்டிகள் எல்லாம் நினைவு வர இன்னும் இன்னும் லட்சுமியின் அருகாமைக்காக ஈசனது மனமும் உடலும் ஏங்கியது..
அடுத்த நிமிடம் அவனுக்கே ‘நானா இப்படி???’ என்றுத் தோன்ற, அப்போதும் அவன் ஏக்கங்கள் தீர்ந்தபாடில்லை..
லட்சுமி அவனைவிட்டு தள்ளி போக போக தான் ஈசனுக்கு அவளை தன்னிடம் நெருக்கமாய் வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் தோன்ற, அதிலும் அவள் அவனைவிட்டு வீட்டில் இருக்கும் மற்ற அனைவர்க்கும் முன்னுரிமை கொடுப்பது இன்னும் அவனுக்கு பொறாமையை உண்டுபண்ணியது தான் உண்மை..
முதலில் ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவனுக்கு நாட்கள் போக போக ‘அப்படிதான்…’ என்று ஒத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது.
‘மிஸ் யூ லஷ்மி…’ என்று எத்தனையோ நாள் அவள் தள்ளிப் போய் உறங்கும் நேரங்களில் நினைத்திருக்கிறான்.. ஆனால் சொல்லவில்லை..
ஆனால் இப்போது அவளது நெருக்கமும், அதன் பின்னான அவன் உணர்வுகளும் ஈசனுக்கே அவனை புதிதாய் காட்டியது..
‘என்னை என்ன பாடு படுத்துறா.. ராட்சசி…’ என்று நினைக்கையில், அவளை ‘என்ன பொண்ணுடா இவ…’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை..
இப்படியே சிந்தித்தபடியே படுத்திருந்தவனுக்கு கொஞ்சம் சிரமப்பட்டே உறக்கம் வர, ஐந்து மணிக்கு எழ வேண்டும் என்பதெல்லாம் மறந்து போய், இருவருமே கண் விழிக்கையில் காலை எட்டரை மணி.. அதுவும் மரகதம் விடாது கீழிருந்து இருவரது அலைப்பேசிக்கும் அழைப்பு விடுத்தபின்னே தான் விழித்தனர்..
அதுவரைக்கும் அப்படியே தான் படுத்திருக்க, ஈசனது கைகள் மரத்துப் போனது.. லட்சுமியோ முதலில் எழுந்தவள், அவன் மீது படுத்திருந்தது புரிய,
‘எப்படி இப்படி…???’ என்று குழப்பமாய் பார்க்க, ஈசனோ அவளையே பார்த்தபடி கைகளை மெல்ல அசைத்துப் பார்த்துகொண்டு இருந்தான்..
“யப்பா என்னா வெய்ட்…” என்று வேண்டுமென்றே அவள் காது படவே சொல்ல, என்னவோ லட்சுமிக்கு அந்நேரம் அவனோடு சண்டையிடும் எண்ணமோ , முகம் திருப்பும் எண்ணமோ வரவில்லை.. அவளுக்கும் ஒரேநிலையில் படுத்திருந்தது எப்படியோ இருக்க, ஈசனை தாண்டி இறங்கவும் முடியவில்லை, அப்படியே அமர்ந்திருக்கவும் முடியவில்லை..
மீண்டும் மரகதம் அழைப்பு விடுக்க, “இதோ வந்திடுவோம் அத்தை..” என்று சொல்லியபடி கடிகாரம் பார்க்க, அது காட்டிய நேரத்தை பார்த்தவள்,
“ஐயோ இவ்வளோ நேரமா.. பஸ் போயிடும்…” என்று வேகமாய் அவனை தாண்டி கீழே இறங்க,
“லஷ்மி மெல்ல…” என்று சொல்லியபடி அவனும் எந்திரிக்க, இருவரும் மோதிக்கொள்ள, ‘ஆ..’ என்று தலையை தேய்த்தவள்,
“பார்த்து வாங்க…” என்று சொல்லிக்கொண்டே, “நேரமாச்சு… எழுப்பிருக்கலாம்ல பஸ் போயிடும்…” என்றபடி பாத்ரூமை நோக்கி ஓட, ஈசனும் வேறொரு அறையில் குளிக்கச் சென்றான்..
அடுத்து எல்லாமே வேகம் தான். வேக வேகமாய் குளித்து, வேக வேகமாய் தயாராகி, வேக வேகமாய் உண்டு என்று லட்சுமி அனைவரையும் ஒரு பாடு படுத்தி எடுத்துவிட்டாள்.
“மெல்ல சாப்பிடு லட்சுமி… நேத்து இருமிட்டு இருந்த.. இருமல் மருந்து குடிச்சியா…” என்று மரகதம் கேட்க,
“நேத்து குடிச்சிட்டு தான் தூங்கினேன் அத்தை…” என்றவளுக்கு நேற்று நடந்த எதுவும் நினைவில் இல்லை..
அடுத்து மரகதம் என்ன சொன்னாலும் என்ன கேட்டாலும் ‘பஸ் போயிடும்…’ என்பது மட்டுமே அவள் பதிலாய் வர, ஈசன் அவளையே பார்த்திருந்தவன்
‘அப்போ நேத்து இருமல் டானிக் பண்ண வேலையா…’ என்று நினைக்க, பின் என்ன நினைத்தானோ கிளம்பி வெளியே சென்றுவிட்டான்..
சீக்கிரம் சாப்பிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு “அத்தை நான் போய்ட்டு வர்றேன்…” என்று சொல்லிக்கொண்டே வாசலில் இறங்க, ஈசன் காரை எடுத்துக்கொண்டு வந்து சரட்டென்று நிறுத்தினான்..
ஒருநொடி லட்சுமி திடுக்கிட்டு பார்க்க, உள்ளிருந்தபடியே ஈசன் மறுப்பக்க கதவை திறந்தவன் “ஏறு லஷ்மி…” என, அவளோ “ஹா….” என்று வாய் பிளந்து தான் பார்த்தாள்..