“வீட்டுல வயசு பொண்ணு இருக்கும்போது ஆம்பளைபயலுக்கு இப்போ என்ன அவசரங்குறேன்?” வயது மூத்த பெண்ணொருத்தி புவனாவிடம் இதையே தான் வந்தது முதல் கேட்டுக்கொண்டிருந்தார்.
இன்னும் சற்று நேரத்தில் சொந்தபந்தம், அங்காளி பங்காளி முன்னிலையில் நிச்சய தாம்பூலம் மாற்றப்பட இருக்கும் நேரத்தில், மண்டபம் சூழ ஆட்களை வைத்துக்கொண்டு இவர் இப்படி கேட்டுக்கொண்டே இருப்பது புவனாவிற்கு எரிச்சலை உண்டாக்கியது.
“உண்மையை சொல்லு தப்புத்தண்டா எதுவும் நடந்து போச்சா?” ரகசியம் போல கேட்டாலும் அவரது கணீர் குரல் அங்கிருந்தவர்களையும் எட்டிவிட, கூட்டமாய் ஒரு அசட்டு சிரிப்பு கிளம்பியது.
முகத்துக்கு நேரே எதையும் சொல்லிவிடலாம் என்றாலோ, கேட்பவர் தனபாக்கியத்துக்கு அக்காள் முறையில் இருப்பவர்.
மாமியார் முறையை முறைத்துக்கொண்டு நின்றால் அதன் விளைவு அனுமார் வால் போல சுற்றிக்கொண்டே அன்பழகன் முன்னே தன்னை நிறுத்தும் என தெரிந்ததால், கடுப்பை விழுங்கிக்கொண்டு,
“ரெண்டு பேருக்கும் பிடிச்சுருந்துச்சு! பொண்ணு நம்ம சாதிசனம் தான்! வீடும் நமக்கு தக்கன பெரிய இடம்! இதை விட வேறென்ன கிடைச்சுட போதுன்னு தான் சரின்னு சொல்லிட்டோம்!
“இதை மட்டும் ஏன் விட்டுட்ட? பொண்ணோட அப்பன் அரசியல்வாதி! நல்ல பசையுள்ள இடம்! வேலைவெட்டிக்கு போகாத மவன், அந்த வீட்டுக்கு மருமவனா போய்ட்டா, ராஜாக்கு கூஜாத்தூக்கியே பொழைச்சுக்கலாம்! அதுவும் தானே காரணம்?” இன்னொரு கிழவி எந்தவித தாட்சண்யமும் பாராமல் நக்கலாய் மெய்யை உரைக்க, மறுபடியும் அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.
புவனாவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. வெளியில் வேலை இருப்பதாக சொல்லி நகர்ந்து விட்டார்.
“மாமியாக்காரி செத்ததும் போதும், இந்த சீமை சித்தராங்கி ஆட்டம் அதிகமா தான் இருக்கு அந்த வீட்ல” புவனா சென்ற பின்னும் அவர் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டு தான் இருந்தது.
அன்பழகன் தன் சம்பந்தியாரை விட்டு இம்மியும் விலகவில்லை. வருபவர்களில் பாதிக்கு மேல் அரசியல்வாதிகளாகவே இருக்க, அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தும் சம்பந்தியை விட்டு நகர தோன்றவில்லை அவருக்கு. ஒரே நாளில் தான் இருந்த நிலையில் இருந்து நூறு மடங்கு உயர்ந்ததை போல உணர்ந்தார் அவர்.
இத்தனைக்கும் ஊரில் மிகப்பெரிய பேர். ஜாதிசங்க தலைவர். தனக்கு கீழே நூத்துக்கணக்கில் ஆட்கள் வைத்து வேலை வாங்குபவர். பாரம்பரியமான குடும்பம்!
அத்தனையும் இருந்தும் இந்த அரசியல்வாதி முன்னே தான் சற்று தாழ்ந்து இருப்பதை போல தான் தோன்றியது அவருக்கு.
அதெல்லாம் அன்று காலை வரை தான்!
முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு ஒட்டாத்தன்மையில் சுற்றியவரை எப்போது இழுத்து அருகே வைத்துக்கொண்டு வருபவர்களிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தாரோ, அப்போதிருந்து தேர்தலில் நிற்கும் வேட்பாளர் போல சிரித்த முகமும் வணங்கிய கரமும் இறங்கிய பாடில்லை.
வாசலில் வந்து நின்ற காரை கண்டதுமே, “சம்பந்தி இப்போ வரது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ…! ரொம்ப முக்கியமான ஆளு! எம்.பி போஸ்ட்க்கு இந்தாள் பேரும் போயிருக்கு! அவனால நமக்கு ஏகப்பட்ட ஆதாயம் இருக்கு! அந்தாளு இங்கிருந்து போறவரைக்கும் எந்த குறையும் இல்லாம அமோகமா கவனிக்கணும் சொல்லிட்டேன்! முழுக்க முழுக்க உங்க பொறுப்பு!” அன்பழகன் காதில் கடகடவென சொல்லிவிட்டவர், சிரித்த முகமாய் விரித்த கைகளுடன் வந்தவரை வரவேற்க வாசலுக்கே ஓடினார்.
சம்பந்தி பேச்சில் ஒரு நொடி யோசித்த அன்பழகன், மறாவது வினாடி மனோகர் எங்கே என்று தான் தேடினார்.
விருந்துக்காக வந்திறங்கிக்கொண்டிருந்த பொருட்களை வண்டியில் இருந்து இறக்க உதவி செய்துக்கொண்டே வேலையாட்களிடம் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.
விரைந்து சென்று அவன் முன் நின்றவர், “பொருளை இப்போ இறக்கி எப்போ விருந்து சமைக்குறது?” என்று கடுகடுக்க,
அவர் முகத்தை கூட நிமிர்ந்து பாராதவன், “எல்லாம் எங்களுக்கு தெரியும்! நீங்க வந்தவங்களை போய் பாருங்க” என்றுவிட்டான்.
அன்பழகனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
‘என்கிட்ட கைக்கட்டி சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு இருந்தவன், இப்போ எப்படி எடுத்தெறிஞ்சு பேசுறான் பாரு!’
அதற்குள் அன்பழகனுக்கு சம்பந்தியிடம் இருந்து அழைப்பு வர, கடுப்பை தூக்கிப்போட்டவர், “இங்கப்பாரு மனோ, திருச்சி எம்.எல்.ஏ வந்துருக்காராம்! சம்பந்தி ரொம்ப நல்லா கவனிச்சுக்கனும்ன்னு சொல்லிருக்காரு! நீதான் அதுக்கு பொறுப்பு! ஒரு குறை இல்லாம கவனிச்சுக்கோ!” என்றார்.
“ம்ம்ம்!” என்றவன், ஒரு மூட்டையை தூக்கிக்கொண்டு பின்பக்கமாய் செல்ல போக, “உன்னை நம்பி தான் இருக்கேன் மனோகரா! நல்லா கவனிச்சுக்கோ என்ன?” என்று மீண்டும் கேட்டிட, மூட்டையுடன் திரும்பியவன், “அவர என் இடுப்புல கூட தூக்கி வச்சுக்குறேன்! போதுமா?” என்றான்.
இவருக்கு தான் தலையில் அடித்துக்கொள்ளலாமா என்றிருந்தது.
இவனை பகைக்கவும் முடியாதே! அவரது அத்தனை தொழில்களிலும் அவன் பங்களிப்பு இன்றியமையாததாகி போயிருந்தது. இதோ இன்று, விழாவுக்கு கூட ஆதி முதல் அந்தம் வரை அத்தனை வேலைகளும் அவனே!!!
திருமணம் பெண்வீட்டார் செய்ய இருப்பதால் நிச்சயம் முழுக்க முழுக்க பையன் வீட்டாட்கள் தலையில் தான்!!!
சற்று நேரத்தில் ஐயர் லக்ன பத்திரிக்கை வாசிக்க, ஊரார் முன் இருவீட்டாரும் நிட்சய தாம்பூலம் மாற்றி திருமணத்தை உறுதி செய்தனர். அடுத்த மூன்று மாதங்களில் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.
மதனின் கண்கள் தன்னவளை ரசிக்க, அவளது விழிகள் நாணத்துடன் நிலம் நோக்க, அதே போன்றதொரு காட்சியை எதிர்ப்பார்த்து அசோக்கின் விழிகள் கௌசியை தேடியது. எங்கும் அவள் இல்லாது போக, அவன் எதிர்ப்பார்த்த நாணத்துடன் ஓரக்கண்ணில் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி. சலிப்பாய் வந்தது அவனுக்கு.
மதனின் நிச்சயத்திற்கு வந்த சொந்தங்களில் கிட்டத்தட்ட அனைவருமே சொல்லி வைத்தார் போல, “பொண்ணுக்கு எப்போ கல்யாணம்?” என்று தான் கேட்டு வைத்தனர்.
இந்த நேரிடை கேள்வியில் புவனாவும் அன்பழகனும் திண்டாடி தான் போயினர். ஏதேதோ சொல்லி சமாளித்து வழியனுப்புவதற்குள் பிறந்தநாள் கண்டது இருவருக்கும்.
ஒருவழியாய் விழா சீரும் சிறப்புமாய் நடந்து முடிந்திருக்க, வீடு நோக்கி ஆனந்த அலுப்புடன் புறப்பட்டனர் எல்லோரும்.
மண்டபத்தை காலி செய்து குடுக்க வேண்டிய பொறுப்பில் மனோகர் அங்கிருக்க, அவன் கண்ப்பார்க்க வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது.
“எல்லாம் ஏறக்கட்டி வண்டில ஏத்திடுங்க! ஒரு கரண்டி கூட கணக்குல தொலைஞ்சுடக்கூடாது சொல்லிட்டேன்! நீங்க கடைல இறக்கிப்போட்டுட்டு போய்டுங்க! நான் செட்டில் பண்ணிக்குறேன்!”
இன்னும் சில உத்தரவுகளை இட்டவன், எல்லாம் எடுத்தாயிற்றா என்று அறிந்துக்கொள்ள மண்டபத்தின் அறைகளை பார்வையிட சென்றான்.
கீழே பார்த்து முடித்தவன் மாடிக்கு போக, அங்கே ஓரறையில் மட்டும் யாரோ இருப்பதை போல தோன்றியது.
உள்ளே செல்லாமல், திறந்திருந்த கதவை படபடவென இருமுறை தட்டியவன், “யாரு?” என்றான்.
சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள் கௌசி. தூக்க கலக்கத்தில் கூட அவனது குறலை கண்டுக்கொண்டவள், “மாமா” என்று விளிக்க, அவள் குரல் கேட்டதுமே உள்ளே சென்றிருந்தான் மனோ.
“என்ன செய்யுற இங்க? வீட்டுக்கு போலையா?”
அவன் கேட்டதும் மலங்க மலங்க விழித்தவள், “ஓ! பங்க்ஷன் முடிஞ்சுடுச்சா?” என்றாள்.
“முடிஞ்சுடுச்சாவா? அப்போ நீ கீழேயே போலையா?”
“கீழ தான் இருந்தேன் மாமா! எல்லாரும் சும்மா எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்’ன்னு தொல்லை! அதுமில்லாம….” அசோக்கின் பார்வையை சொல்ல வந்தவளுக்கு வார்த்தை எழவில்லை.
அதை மேற்கொண்டு கிளறாமல், “சரி புடவையை சரி பண்ணிக்கோ! அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடலாம்” என்றவன் சென்றுவிட்டான்.
அவன் சொன்ன பிறகே தன்னை கவனித்தவளுக்கு, நலுங்கி கிடந்த புடவையை கண்டதும் முகம் சுருங்கியது.
அவளோ, “உங்களுக்கு என்னை பிடிக்காதா மாமா?” என்று கேட்க, அவள் திடீர் கேள்வியில், அதிலும் இப்படியொரு கேள்வியில் பேச்சற்று போனான் மனோ.
_______
அறைக்குள் இருந்த அன்பழகன், “வர வர இந்த மனோ பய போக்கே சரியில்ல!” என்றார்.
அதைக்கேட்டு முகத்தை சுழித்த புவனா, “இதே கருமத்தை தான் இந்த வீட்டுக்குள்ள அவன் வந்த நாள் முதலா நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! யாரு காதுல கேட்டுச்சு? உங்க அம்மா இருந்தவரை உங்களுக்கு பொண்டாட்டி பேச்சு கேட்கல! அவங்க போய் சேந்த பிறகு காது கேட்டும் பிரயோஜனம் இல்லாம போய்டுச்சு!” என்றார்.
“ப்ச்! சும்மா கத்தாத புவனா! அவன் இருக்குறவாசி தான் நான் எந்த டென்ஷனும் இல்லாம நிம்மதியா இருக்கேன்!”
“ஏன் அவனை விட்டா உங்களுக்கு வேலை செய்ய ஆளா கிடைக்காம போய்ட போவுது?”
“காசுக்கு மாறடிக்குறவன் எப்போ காலை வாருவான், குழி நோன்டுவான்னு அவன்மேல ஒரு கண்ணு வச்சமேனியா இருக்கணும்! மனோ அப்படியா சொல்லு?” என்றவர்,
“பெத்த தண்டம் சுள்ளாப்பா இருந்தா நான் ஏன் இன்னொருத்தனை நம்பிக்கிட்டு இருக்கணும்? வேலை வெட்டி செய்ய துப்பில்ல, காதோல் பண்ணிட்டு வந்து நிக்குறான் தடிமாடு” என்றார் ஆத்திரமாய்.
மகனை சொன்னதுமே, “ஏன் அவன் பிடிச்ச இடத்துக்கு என்ன குறை வந்து போச்சாம்? நீங்களே தலையால தண்ணி குடிச்சாலும் இப்படி ஒரு சம்பந்தம் அமைஞ்சுருக்குமா?” என்று புவனா பொரிய, அது உண்மைதான் என்பதால் சற்று அமைதியானார் அன்பழகன்.
சம்பந்தி பேச்சு வந்ததுமே அன்று மண்டத்தில் வைத்து சம்பந்தியம்மா பேசியது புவனாவிற்கு நினைவுக்கு வந்தது.
அதை கணவரிடம் சொல்லும் பொருட்டு, “ஏங்க, நம்ம மருமகளோட அண்ணன் அசோக்க பார்த்தீங்களா?” என்றார்.
“பாத்தேனே! நல்ல சூட்டிகையான பையன்! என்கிட்ட அத்தனை மரியாதையா பேசுனான்!”
“அந்த பையனுக்கும் வரன் பாக்குறாங்க போல!”
“அடடே! அருமையான பையன்! யாருக்கு குடுத்து வச்சுருக்கோ!!?” மனதில் எதுவும் இன்றி எதார்த்தமாய் சொல்ல,
“உங்களை தான் மாமா கேட்குறேன், என்னை பிடிக்காதா உங்களுக்கு?” தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம் மீண்டுமாய் கேட்டாள் கௌசி.
“எதுக்கு இந்த கேள்வி?”
“சொல்லுங்க மாமா”
“உனக்கு என்ன தோணுதோ அதையே என் பதிலா வச்சுக்கோ!!” விட்டேத்தியாய் சொன்னான்.
“பிடிக்கும்ன்னு தான் நினைக்குறேன்!” தயங்கித்தயங்கி அவள் சொல்ல, “அப்போ அதான் என் பதில்” என்றான்.
“பிடிக்கும்ன்னா ஏன் என்னை பாக்கவே வரல? நாலு வருஷத்துல ஒரு நாள், ஒரு பொழுது கூடவா என்னை பாக்க உங்களுக்கு தோணவே இல்ல” என்று கேட்கும்போதே அவள் கண்கள் உடைப்பெடுக்க ஆரம்பித்தது.
அவள் கண்கள் கலங்க ஆரம்பித்ததுமே, “கண்ணைத்துடை மொதோ” என்றான் அதிகாரமாய்.
வேகமாய் அவள் விரல்கள் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்துக்கொள்ள, “நான் எதுக்கு உன்னை வந்து பாக்கணும்?” என்றான் அவன்.
‘எதுக்கா?’ பேச்சின்றி வெறித்தாள் அவனை.
“படிக்க தானே அனுப்பி வச்சோம்? நீயும் படிக்க தானே போன? அந்த வேலையை சரியா செஞ்சியா?”
“ம்ம்ம்…”
“படிப்பு முடிஞ்சும் உன்னை அங்கயேவா விட்டு வச்சோம்! திரும்ப கூட்டிட்டு வந்துட்டோம்ல? நான் தானே உன்னை கூப்பிட வந்தேன்!?” சிறு பிள்ளையிடம் கேட்பதை போல கேட்டுக்கொண்டிருந்தான்.
“ப்ச்! எல்லாம் நம்ம கௌசியை தான் பொண்ணு கேட்டாங்க! நானும் வீட்ல கலந்து பேசிட்டு நல்ல முடிவா சொல்றேன்னு சொல்லிருக்கேன்” என்று சொல்ல, படுக்கையில் இருந்து எழுந்தே விட்டார் அன்பழகன்.
“உனக்கு என்ன பைத்தியமா? எத்தன தடவ டி கல்யாணம் பண்ணுவ அவளுக்கு?” அன்பழகன் கேட்டதும் தான் தாமதம், கலைந்து கிடந்த கூந்தலை வாரி கொண்டையிட்டுக்கொண்டே,
“ஓ! உங்க மனசுல அந்த போக்கத்தவன் தான் மருமவங்குற நினைப்பு இருக்கோ?” என ஆங்காரமாய் கத்தினார் புவனா.
அன்பழகனுக்கு ‘ஆம்’ ‘இல்லை’ என எதுவுமே சொல்ல வரவில்லை.
“திடுதிப்புன்னு ஒரு நாள் ராத்திரி தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இவன் தான் மாப்பிள்ளைன்னு காட்டுனீங்க! அன்னைக்கே நான் தெளிவா சொன்னேனா இல்லையா? என் பொண்ணு செத்தே போனாலும் சரி, இந்த கல்யாணத்தை மட்டும் நான் ஏத்துக்கவே மாட்டேன்னு!
கழுத்துல கடந்ததை கூட அறுத்து வீசுனேன் அப்போவே! அன்னையோட எல்லாம் தொலைஞ்சுதுன்னு நினைச்சா இன்னமும் உங்களுக்கு அதே நினைப்பு தான் இருக்கும் போலயே!?
ஹும்! என்ன இருந்தாலும் மொதோ பொண்டாட்டி உறவுல! கசக்கவா செய்யும்?”
இதற்கு மேல் விட்டால் புவனா பேச்சுக்கு தடா’ போடவே முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்,
“கொஞ்சமாவது புரிஞ்சு தான் பேசுறியா நீ? உன் மவ லட்சணம் அந்த வீட்டாளுங்க காதுக்கு போனா, நமக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா? அதுக்கு பிறகு உன் மவன் கல்யாணம் கூட நடக்குமோ நடக்காதோ?!”
“ச்ச..ச்ச… அதெல்லாம் இருக்காது! அவ சூடு கண்ட பூனை! நான் சொல்றது இந்த கல்யாணத்தை பத்தி… ஒருவேளை அவ இன்னும் அந்த கல்யாணத்தை… அதாவது மனோ கூட நடந்ததை…” மனைவிடம் திட்டு விழுமே என்ற பதட்டதோடே அவர் சொல்ல,
“ஹும்! உங்களை மாறியே எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்காதீங்க! அவளுக்கு இந்த தாலி கீலி எல்லாம் மறந்தே போயிருக்கும்! நாளைக்கு சம்பந்தியம்மா பேசும்போது எங்களுக்கு முழு சம்மதம், பையன் கல்யாணத்துலையே இவங்க நிச்சயத்தை வச்சுடலாம்ன்னு சொல்லிட போறேன்!” என்றவர் அதற்குமேல் பேச்சில்லை என்பதை போல இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட, மனம் குழம்பிய குட்டையாய் இருந்தாலும் என்னவோ நடக்கட்டும் என படுத்துவிட்டார் அன்பழகன்.
_____________
‘ஒன்னே ஒன்னு மட்டும் கேட்கணும்’ என்றவளை சற்று திடுக்கிடலுடன் தான் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
“சீக்கிரம் கேளு!”
அவன் சொன்னதும், தன் கழுத்தில் இருந்த சங்கலியை விரல் பிடித்து வெளியே இழுத்து,
“இதுக்கு என்ன அர்த்தம் மாமா?” என்றாள்.
சங்கலியில் கோர்க்கப்பட்டிருந்த அச்சிறு பொன்தாலியை கண்டதும், அவன் விழிகள் விரிந்து நிலைகுத்திப்போனது.
‘இது எப்படி? அவன் கண்முன்னே தானே அதை அறுத்து வீசினர்?’ மூளை நினைவடுக்கை புரட்ட, கண்கள் இமைக்கக்கூட மறந்து போயிருந்தது.
“இந்த நாலு வருஷமா, இதை கழுத்துல மாட்டிக்கிட்டு நீங்க தான் என் புருஷங்குற நினைப்போட இருந்துட்டேன்! அந்த நினைப்புல தான் நீங்க ஏன் என்னை பாக்க வரலன்னு கேட்டேன்!
அசையாது இருந்தவனின் கரத்தின் மீது தன் கரம் வைத்தவள், “இதுக்கு அர்த்தம் இருக்கோ?! இல்லையோ!? தெரியாது! ஆனா இது தான் நான் இத்தனை நாள் ஒரு பிடிமானத்தோட வாழறதுக்கு துணையா இருந்துச்சு!
திரும்ப இங்க வரும்போது இனி உங்க மனைவியா இருக்கப்போறேன்னு தான் நினைச்சேன்! ஆனா இங்க வந்து பாத்தோன்ன தான் தெரிஞ்சுது, எதுவுமே மாறல!” என்றவள்,