வேலூரில் அமைந்திருந்த கார் ஷோரூம் காலை நேர பரபரப்பிற்கு பஞ்சமின்றி இயங்கி கொண்டிருந்தது.. அவர்கள் ஷோரூமின் ஐம்பதாவது வருட கொண்டாட்டம் நடைபெற்று வருவதால் பல சிறப்பு சலுகைகளை முன்னிட்டு கடந்த இருவாரங்களாகவே மக்களின் வரத்து அதிகரித்து இருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாடிக்கையாளர்களை வரவேற்பதும் சலுகைகள் குறித்து விவரிப்பதும், கார்களின் சிறப்பம்சங்களை எடுத்தது சொல்வது, டெஸ்ட் ட்ரைவ் அழைத்து செல்வது, டெலிவரிக்கான பேப்பர்களை சரி பார்ப்பது என்று நிற்க நேரமின்றி இயங்கி கொண்டிருந்தனர்.
அன்று காலை நேரம் சில கார்கள் டெலிவரிக்கு இருப்பதால் மூத்த பணியாளர்கள் அதில் பிஸியாக இருக்க அந்நேரம் ஷோரூமின் காம்பவுண்டினுள் நுழைந்தது உதயாதித்தனின் கார். அம்பலவாணன் ஜெகதீஸ்வரியின் ஒரே மகன். மூன்று பிள்ளைகளில் மூத்தவள் சுஜிதாவிற்கு பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவன்.
காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு எதிர்ப்பட்ட பணியாளர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டே உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த சூழலை உள்வாங்கியவாறே வழக்கம் போல ஒரு சுற்று வந்து அனைத்தும் பக்காவா நடைபெறுவதில் திருப்தி கொண்டவனாக ஒர்க்ஷாப் சென்று மீண்டும் பக்கவாட்டு கதவின் வழியே நுழைய அங்கே ஒரு தம்பதியர் ஷோ ரூமின் வாயிலில் நின்றிருந்தனர்.
பணியாளர்கள் அனைவரும் பிஸியாக இருந்ததில் இவர்களை கவனிக்காமல் போகவும் தன் அறைக்கு செல்லவிருந்தவன் தன் நடையை நிறுத்தி “வெல்கம் சார் வெல்கம் மேடம்” என்று அவர்களை வரவேற்று இருக்கையில் அமர்த்தியதை கண்ட பணியாளர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.. இது வழக்கம் என்பது போல தம் போக்கில் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
தம்பதியருக்கு குளிர்பானம் கொடுத்தவன் கையோடு கொண்டு வந்திருந்த கேட்லாக்கை கொடுத்து, “எந்த மாதிரி வண்டி பாக்கறீங்க பெட்ரோலா இல்ல டீசலா..?” என்றான்.
“நாங்க இப்போதான் முதல்முறை கார் வாங்க போறோம் எது நல்லா இருக்கும் சொல்லுங்க” என்று அவனிடமே கேட்க “உங்களுடைய பட்ஜெட் என்ன..?” என்று கேட்டு தெரிந்துகொண்டவன் குறிப்பிட்ட காரின் முன் அவர்களைக் கொண்டு நிறுத்தியவன்,
“இது பேசிக் மாடல் உங்க பட்ஜெட்ல வரும், ஆன்ரோட் ப்ரைஸ் ஆறு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரமாகும்.. இதுல உங்களுக்கு வண்டியோட விலை, த்ரீ இயர்ஸ் இன்ஷுரன்ஸ், ஒன் இயற் பம்பர் டூ பம்பர் கேஷ்லெஸ் க்ளைம் இன்க்லூட்டாகும் வித் தேர்ட் பார்டி இன்ஷுரன்ஸ்.. பிப்டீன் இயர்ஸ் லைஃப் டேக்ஸ் ஆப்ஷன் , அக்ஸசரீஸ் அண்ட் வாரண்டி இன்க்லூட்டாகும்… ஏசி, பவர் ஸ்டேரிங், ஹீட்டர், பவர் விண்டோ, பார்க்கிங் சென்சார், ஏர்பேக், மேனுவல் சென்டர்லாக் ஆப்ஷன் இருக்கும்..” என்றவன் காரில் உள்ள வசதிகளை அவர்களுக்கு புரியும்படி விளக்க கேட்டுக்கொண்ட தம்பதிகளின் முகத்தில் மகிழ்ச்சி.
“அங்கிருக்க காருக்கும் இதுக்கும் என்ன தம்பி வித்யாசம்” என்று சற்று தள்ளி நிறுத்தியிருந்த காரை சுட்டி காண்பித்து கேட்க
இரண்டிற்குமான ஒற்றுமையையும் வித்தியாசங்களையும் விளங்கியவன் “இதுலே நமக்கு நாலு வேரியன்ட்ஸ் இருக்கு இங்கிருக்கிறது டிஸ்ப்ளே பீஸ் என்றவன் தன் கைபேசியை திறந்து அவைலபிள் கலர்ஸ் மொத்தம் நாலு நீங்க எது வேணும்னு சொன்னா ஆர்டர் எடுத்துப்போம்” என்று உதயாதித்தன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த செல்வம்,
“ஸார் .. ஸாரி ஸார் ஒரு முக்கியமான ஃபோன் கால் அட்டென்ட் பண்ண போயிட்டேன் நீங்க போங்க ஸார் நான் பார்த்துக்குறேன்” என்றதும்,
“நோ ப்ராப்ளம் செல்வா இதெல்லாம் எனக்கு பழக்கப்பட்டது தான்.. உங்களோட கால் முடிஞ்சதா..?”
“எஸ் ஸார் நேத்து வந்து போன பார்ட்டி தான்! அவங்களோட சேர்ந்து இன்னும் இரண்டு பேர் வாங்கற ஐடியால இருக்காங்களாம் எந்தளவுக்கு செய்ய முடியும்னு கேட்டுட்டு இருந்தாங்க, நீங்க நேரில் வாங்க பேசிக்கலாம்னு சொன்னாலும் கேட்கலை அவங்க ரிலேட்டிவ் யாரோ ஒருத்தர் கிட்ட கொடுத்து நிறைய டவுட்ஸ் கேட்டுட்டு இருந்தாங்க அவாய்ட் பண்ண முடியலை அதனால டிலே ஆகிடுச்சு “என்று சிறு குற்ற உணர்வோடு உதயனை பார்க்க,
“இட்ஸ் ஓகே! நோ இஷ்யூஸ்.. பை தி வே கஸ்டமர்ஸ் கிட்ட இன்டெராக்ட் பண்றது நான் விரும்பி செய்யக்கூடியது.. ஸோ எதுவும் யோசிக்காம அடுத்த கஸ்டமரை பாருங்க” என்ற உதயனின் வார்த்தைகள் அத்தனையும் நிஜம்.
உதயாதித்தனின் தாத்தா தொடங்கிய ஷோ ரூம் இது! அவன் தந்தையின் பொறுப்பில் வந்த பிறகு சிறுவயது தொட்டே இங்கு வளர்ந்தவனுக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம்.. உதயனும் அவன் உயிர்த்தோழனான ராகவனும் பள்ளி காலத்தில் மட்டுமல்ல இன்ஜினியரிங் சேர்ந்த பின்னரும் மாலை வேளைகளில் இங்கே வந்துவிடுவர்.
வொர்க் ஷாப்பில் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் குறித்து கற்றுக்கொள்வதில் தொடங்கிய ஆர்வமும் ஈடுபாடும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது
கார் ஷோ ரூம் மட்டுமல்லாது பல தொழில்களில் கால் பதித்திருக்கும் அம்பலவாணனுக்கு மகன் ஷோ ரூமில் காட்டிய ஆர்வத்திலும் படிக்கையிலேயே பார்ட் டைமாக நண்பனுடன் வேலை செய்தவன் பேச்சு திறமையில் கார்களில் விற்பனையை அதிகரிக்க செய்ததிலும் ஆசுவாச மூச்சு. பின்னே அவருக்கும் வயதாகிறதே அத்தனையும் ஒற்றை ஆளாக கட்டிக்காப்பாற்றுவது எளிதல்லவே மகன் கல்லூரி முடித்து பாரம் குறைத்து விட்டான்.
புதுக்கார்கள் மட்டுமல்லாது செக்கென்டஸ் கார்களை கைமாற்றி கொடுப்பது என்று படிக்கும் வயதிலேயே சம்பாதிக்க தொடங்கிவிட்டான். கல்லூரி முடித்த பின்னர் அதுவரை கார்களை கைமாற்றியவன் அதன்பின் தானே கார்களை வாங்கி விற்கவும் செய்தவன் சிறிய அளவில் செக்கென்டஸ் கார்களுக்கான ஷோ ரூமையும் திறந்துவிட்டான்.
இத்தனை வருட அனுபவத்தில் நண்பனுடன் சேர்ந்து தொழிலை விரிவாக்கியவன் வங்கியில் லோன் போட்டு ராணிப்பேட்டையில் மற்றொரு கிளை தொடங்குவதற்கான பணிகளில் பாதியை நிறைவு செய்துவிட்டான்.
ஆம் ஷோ ரூம் கட்டிடம் முதல் தளம் முடிந்து அடுத்த தளத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன . சிறுவயது தோழர்கள் என்பதால் இருவருக்கும் இடையில் அத்தனை புரிதல் அதுவே ராகவனை தன் தங்கைக்கு துணையாய் தேர்ந்தெடுக்க வைத்தது.
சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்த நிவியின் மீது ராகவனுக்கு பிடித்தம் உண்டு.. ராகவனுக்கு மட்டுமல்ல நிவிக்குமே பிடித்தம் இருந்தது ஆனால் இருவரும் வேறு ஜாதியினர் என்பதால் வெளிக்காட்டாமல் மனதினுள் வைத்து கொண்டவள் ராகவனிடமே அதை சொன்னதில்லை.. ஆனால் ராகவன் நிவேதாவின் மனதை கண்டுகொண்டான்! அதனாலேயே நிவேதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் செய்தி கேட்ட பின்னர் தைரியமாக தன் மனதை மறையாமல் நண்பனிடம் வெளிப்படுத்திவிட்டான்.
நட்பிற்கு இடையில் வராத ஜாதி திருமணம் என்றபோது இடைப்புக தந்தையோடு சேர்ந்து அதை அழகாக கையாண்டு ராகவனுக்கு தங்கையை மணமுடித்திருந்தான் உதயாதித்தன். அம்பலவாணனும் உதயதித்தனும் தந்தை மகன் என்பதை விட சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம் அதுவே தளிர் மீதான அவன் பிடித்தத்தை தயக்கமின்றி அவரிடம் தெரிவிக்க செய்திருந்தது.
ராகவன் மீட்டிங்கிற்காக டெல்லிக்கு சென்றிருக்க உதயனுக்கு வேலைகள் இரட்டிப்பாகி போனது. தன் அறைக்கு சென்றவன் முக்கிய கோப்புகளை சரி பார்த்து கையெழுத்திட்டு ராகவனின் பார்வைக்கு அனுப்பி வைத்தான். மதிய உணவையும் வரவழைத்து உண்டுவிட்டு அன்றைய வேலைகளை முடித்து ஷோ ரூமை விட்டு வெளியேறி தன் கார் நோக்கி நடக்கவும் கைபேசி ஒலித்தது.
**********************************
எடுத்து பார்க்க சுஜியின் எண், “ஹலோ சொல்லுக்கா..” என்றதும் மறுபுறம் இருந்து ‘மாமா’ என்ற கூச்சல்.
குழந்தைகளின் ஆர்பரிப்பில் கைப்பேசியை சற்று விளக்கி பிடித்தவன், அவர்கள் குரல் அடங்கவும் காதில் வைத்தான்.
“ஹலோ மாமா” என்று இப்போ வைஷ்ணவியின் குரல்
“சொல்லுடா வைஷும்மா..”
“மாமா நா அம்மா, கௌஷிக், தாத்தா பாட்டி பெரிய பாட்டி சித்தி, குட்டி பையன் எல்லாரும் எவ்னிங் எங்க போறோம் கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்ற குதூகலமான குரலில்,
“நாங்க எல்லாரும் தளிர் மேம்க்கு ஜூவெல் எடுக்க போறோம் மாமா“
“மேம்மா ? எத்தனை முறை சொல்றது மாமி சொல்லணும்… புரிஞ்சுதா..?”
“நான் என்ன செய்ய மாமா அவங்க எனக்கு முதல்ல மேம் அப்புறம் தான் மாமி.. சட்டுனு கூப்பிட வரலை” என்ற வைஷ்ணவியின் மூலமாக தான் தளிர் உதயாதித்தனுக்கு பரிட்சயம்..
வைஷ்ணவியின் பள்ளியில் தளிர் மிகவும் பிரபலம், அவளை பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள்.. அவள் ஒரு வகுப்புக்கு சாப்ஸ்டியூஷன் சென்ற மாணவர்களும் ‘எங்க மேம்’ என்று கொண்டாடுவார்கள் என்றால் இரு வருடங்களாக அவள் வகுப்பு மாணவியாக இருக்கும் வைஷ்ணவியை பற்றி சொல்லவும் வேண்டுமோ..?
வைஷ்ணவிக்கு தளிர் என்றால் உயிர்! எப்போதும் வீட்டில் அவளை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கும்.
மேம் க்ராமர் சூப்பரா சொல்லி கொடுப்பாங்க எல்லாருக்கும் அவ்ளோ அழகா புரியும் போம் நடத்தும் போது ஆக்ஷனோட சொல்லுவாங்க அவங்க எக்ஸ்பிரஷன் சிரிப்பு எல்லாமே ரொம்ப அழகா இருக்கும் எங்க மேம் மாதிரி யாருமே அழகில்லை தெரியுமா? மற்ற மேம் யாருமே இவ்ளோ ஜாலியா இருக்க மாட்டாங்க ஆனா எங்க தளிர் மேம் கோபமே பட மாட்டாங்க சிரிச்ச முகமா இருப்பாங்க..
பிரேக் டைம்ல கூட நான் ஒர்க்ஷீட் ஃபில் பண்ணுவோம் லன்ச் டைம்ல மேம் கிட்ட கொடுப்போம் அவங்க உடனே கரெக்ட் பண்ணி கொடுத்துடுவாங்க தெரியுமா..? மற்ற மேம் எல்லாம் அந்த டைம் டிஸ்டர்ப் பண்ணகூடாதுன்னு திட்டிடுவாங்க தளிர் மேம் திட்டவே மாட்டாங்க, நாம குட் மார்னிங் சொன்னா மேம் உடனே ‘ஹாய் டியர் ஹாப்பி மார்னிங்ன்னு’ சிரிச்சுட்டே சொல்லுவாங்க.. என்பவளின் பேச்சுக்களை நிறுத்தி படிக்க வைப்பதற்குள் சுஜிக்கு போதும் போதுமென்றாகி விடும்.
ம்மாஆ தளிர் மேம் நிற்கும் போது அழகு பேசும்போது என்று ‘நீ நடந்தால் நடையழகு நீ சிரித்தால் சிரிப்பழகு’ என்று தளிரை வருணித்து பாடாதது மட்டுமே குறை! அந்தளவு வீட்டிற்கு வந்த பின்பும் தளிரின் புகழைப் பாடிக்கொண்டிருப்பாள் வைஷு.
ஓரிரு முறை காதில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் சென்ற உதயன் அன்று தளிர் வைஷுவின் கன்னம் கிள்ளி பாராட்டியதில் வழக்கத்திற்கு அதிகமாகவே அவள் புகழ் பாடிக்கொண்டிருக்கவும் ‘அப்படி என்ன உங்க அப்பாடக்கர் மேம் ஸ்பெஷல்னு நான் நேர்லயே பார்த்து தெரிஞ்சுக்குறேன்’ என்று வைஷு வோடு பள்ளிக்கு சென்ற போது அவள் வார்த்தைகள் எத்தனை நிஜம் என்பதை கண்கூடாக தெரிந்து கொண்டான்.
அன்று காலை வைஷுவோடு உதயாதித்தன் பள்ளிக்கு சென்றபோது பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்வதால் ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள்கள், இத்யாதியுடன் அவரவர் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அதேநேரம் நேர்த்தியாக கட்டியிருந்த காட்டன் புடவை கழுத்திலும் காதிலும் மெல்லிய தங்க நகைகள் கைகளில் புடவை நிறத்திற்கு ஏற்ப வலக்கரத்தில் கண்ணாடி வளையல்கள் இடக்கரத்தில் வாட்ச், தளர பின்னபட்டிருந்த கூந்தலில் ஒற்றை ரோஜாவும் புருவ மத்தியில் சிறு பொட்டுடன் சந்தன கீற்று என்று சாந்தமே உருவாய் தன் வகுப்பறையில் அமர்ந்திருந்த இளந்தளிரிடம் அத்தகைய பரபரப்பு இல்லை..
என்றுமே இத்தகைய சந்திப்புகளில் அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுபவள் தன் தயாரிப்புகளை முடித்துவிட்டு ஒவ்வொரு மாணவனின் பெற்றோரிடம் பேச வேண்டியவைகளை தனியாக பட்டிலிட்டு விடுவாள்..
பேச வேண்டியது என்றால் அவர்களை பற்றிய குறைகளை அல்ல அவர்களிடமிருக்கும் நிறைகளை அதனோடு அவர்களை மேம்படுத்த தேவையான குறிப்புகள்.. குறையைகூட பக்குவமாக எடுத்து சொல்வதாலேயே மாணவர்கள் மத்தியில் இளந்தளிர் அத்தனை பிரபலம்.. ஒரு பாடத்தை பிடித்து படிக்கும் மாணவர்களுக்கு குறைவில்லாமல் இருப்பார்கள் பிடித்த ஆசிரியருக்காக அப்பாடத்தை படிக்கும் மாணவர்கள்.. இங்கு இளந்தளிரை பிடித்த காரணத்தாலேயே அவள் எடுக்கும் பாடங்களை விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐந்தாம் வகுப்பின் வகுப்பாசிரியையாக இருப்பவள் தன் வகுப்பில் சென்றமர பெற்றோர்களின் வருகை துவங்கியது.
வைஷ்ணவியின் வகுப்பறை இருந்த தளத்தை உதயாதித்தன் அடைந்த போது அவளுக்கு முன்னிருந்த மாணவனின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தாள் இளந்தளிர்.
மாணவன் சரியாக படிக்காதவன் விளையாட்டு பிள்ளை எப்போதும் சீண்டி பெண்களிடம் வம்பு வளர்ப்பவன் என்று வைஷு சொல்லிக்கொண்டிருக்க அங்கே அறையில் இருந்த தளிரோ அவன் குறைகளை கூட எத்தனை அழகாய் குழந்தையின் மனமும் பெற்றவர்களின் மனமும் காயப்படாத வகையில் எடுத்து சொல்லிக்கொண்டிருந்தவள் அவர்களிடம் புன்னகை முகமாய் விடை கொடுத்தாள்.
அவன் முறை வந்த போதும் புன்னகையோடு வரவேற்று அமர்த்தியவள் பேப்பர் கட்டை அவனிடம் கொடுத்துவிட்டு வைஷுவிடம் ஆங்கிலத்தில் உரையாடிட உதயனின் கண்கள் விடைத்தாளை பார்வையிட்ட போதும் செவிகள் என்னவோ அவள் குரலிலும் ஆங்கில புலமையிலும் லயித்தது கிடந்தது.. குழந்தையோடு குழந்தையாக அவள் பேசும் வார்த்தையில் எத்தனை மென்மை அதைவிட அவள் குரலின் இனிமை, மொழி ஆளுமை என்று சந்தித்த ஒருமணி நேரத்திற்குள்ளாகவே மொத்தமாக அவனை கொள்ளை கொண்டுவிட்டாள்.
உதயன் விடைத்தாளை பார்வையிட்டு முடித்ததும் “வைஷுவோட பேரன்ட்ஸ் வரலைங்களா ஸார்..?” என்ற தளிர் தன் பேச்சை தொடங்கி அடுத்த பத்து நிமிடத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து வைஷுவை பற்றி பேசி முடித்து விடை கொடுக்கவும் முடிவு செய்துவிட்டான் அவள் தான் தன் வாழ்க்கை துணை என்று !!
“எப்படி மாமா நான் சொன்னது போல எங்க தளிர் மேம் ஸ்வீட் தானே! உங்களுக்கு பிடிச்சிருக்கா..?” என்று கேட்க..,
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குடாம்மா” என்றவன் அக்கா மகளை கூட்டிக்கொண்டு அன்று முழுக்க ஊர் சுற்றி அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து என்று தளிரை சந்தித்த மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்தான்.
சென்ற வருடமே உதயனின் கல்யாண பேச்சு வீட்டில் கிளம்பிய போது முதலில் தங்கைக்கு முடித்துவிட்டு தான் தனக்கு என்று தீர்மானமாக சொல்லிவிட்டான். அதற்கேற்ப நண்பனும் தங்கையை மணக்க கேட்க நிவிக்கு திருமணத்தை விரைவாக நடத்தி முடிக்க குழந்தையும் பிறந்துவிட்டது. திருமணபேச்சை தொடங்கிய தந்தையிடம் தளிர் மீதான பிடித்தத்தை கூறவும் அடுத்த மூன்றாம் நாளே தளிரை பெண் கேட்டு சென்றுவிட்டார் அம்பலவாணன்.
வைஷுவிடம் பேசிக்கொண்டிருந்தவன் தன்போக்கில் தளிரை சந்தித்த தினத்தை அசைபோடவும் மறுபுறம் ., “மாமா மாமா நான் பேசுறது கேட்குதா..?” என்று கத்திக்கொண்டிருந்தாள் வைஷு.
“கேட்குதுடாம்மா, சரி நீங்க மாமிக்கு ஜூவல் செலெக்ட் பண்ணுங்க நான் என் வைஷுகுட்டிக்கு பிடிச்ச கிபிட் வாங்கிட்டு வரேன் ஓகேவா” என்றதும் சரி மாமா.. என்றவள் அழைப்பை துண்டிக்கவும் காரை கிளப்பிக்கொண்டு ராணிப்பேட்டை ரோட்டில் பயணித்தான்.
************************************
வேலூரின் புகழ்பெற்ற நகைகடையின் முன் அம்பலவாணனின் கார் நின்றது.. பிரபல தொழிலதிபர் என்பதால் கடை முதலாளி முகம்கொள்ளா புன்னகையோடு வாசலுக்கே வந்து வரவேற்றார்.
அம்பலவானனின் கையில் அவரது இரண்டரை வயது பேரன் இருக்க ஒருபுறம் பெரிய மகள் சுஜிதா பேத்தி வைஷ்ணவி மறுபுறம் இளையமகள் நிவேதா அவளது ஒருமாத குழந்தையோடு நடக்க அவர் பின்னே அம்பலவாணனின் மனைவி ஜகதீஸ்வரி அவரது தமக்கை ராஜேஸ்வரி தொடர்ந்தனர்.
“கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுதுங்க ஐயா..” என்றவாறே அவருக்கு நாற்காலியை எடுத்து போட்டு பணியாள் கொண்டு வந்த பழச்சாரை கொடுத்தவர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து “இது நம்ம பாப்பாங்களுக்காகவே கல்யாணத்துக்குன்னு புதுசா தருவிச்சதுங்க” என்று கண்ணை பறிக்கும் வகையில் ஆன்டிக் டிசைன்ஸில் தொடங்கி லேட்டஸ்ட் டிசைன்ஸ் வரையிலான நகைகளை அவர்முன் வைத்தார்.
அப்புறம் இது நம்ம தம்பிக்கு நீங்க கேட்ட மாதிரி பிளாட்டினம்ல லேட்டஸ்ட் என்று ரகரகமாய் அவர் முன்னே வரிசையாக அடுக்கியவர் இறுதியாக இது கல்யாண பெண்ணுக்கானது என்று கழுத்தாரம், அட்டிகை, கம்மல் ஜிமிக்கி, வளையல், நெத்திசூடி என்று தங்கத்திலும் வைரத்திலுமாக பலலட்சம் பெறுமானமுள்ள நகைகளை எடுத்து வைக்க அவர் மகள்கள் இருவரும் இயல்பாக பார்வையிட தொடங்கினர்.
“அப்பா அண்ணிக்கு நைட் ரிசெப்ஷன்க்கு டையமண்ட் கிரான்ட் லுக் கொடுக்கும்ப்பா மார்னிங் மேரேஜ்க்கு கோல்ட்ல ஆன்ட்டிக் டிசைன் எடுத்துடலாம் .. அது கொஞ்சம் ஹெவியா இருந்தாலும் கல்யாணத்தப்போ கிராண்ட் லுக் கொடுக்கும்ப்பா என்னக்கா நான் சொல்றது..?” என்று வரப்போகும் அண்ணிக்காக குதுகலமாக நகையை தேர்ந்தெடுத்த நிவேதா சுஜியை பார்க்க,
“சரியா சொன்ன நிவி. அப்புறம் தளிர்க்கு மேரேஜ் முடிஞ்ச பிறகு போட கொஞ்சம் சிம்பிளா லேட்டஸ்ட் டிசைன்ஸும் சேர்த்து எடுக்கிறோம் உங்களுக்கு ஓகே தானேப்பா” என்ற சுஜிதாவிற்கு தளிரோடு நல்ல பரிச்சயம் இருப்பதால் அவளுக்கு அதிக கனமில்லாத மெல்லிய நகைகள் அழகாக இருக்கும் என்ற எண்ணம்.
“எனக்கு என்னடாம்மா தெரியும் ? வழக்கம் போல உங்களுக்கு பிடிச்சதை பாருங்க தளிருக்கு எது சரியா இருக்கும்னு உங்க அம்மாவை இல்ல அண்ணனை கேட்டுக்கோங்க”
“அண்ணா தான் சைட்டுக்கு போயிருக்காரே அக்கா பேசியபோது ராணிப்பேட்டையில இருந்து வர எப்படியும் நைட் ஆகிடும் சொல்லியிருக்கார். சரி விடுங்க நாங்களே பார்க்கிறோம்” என்ற நிவி முதலில் ரிசெப்ஷனுக்கு வைர அட்டிகையை தேர்ந்தெடுக்க,
“இது தளிர்க்கு சூட் ஆகாது நிவி! இதோபார் இதுதான் நாம் எடுத்திருக்க லெஹெங்காவுக்கு பொருத்தமா இருக்கும்” என்று சுஜா கூறவும்,
“ப்ச் நாம அண்ணியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இருக்கா பேசாம நான் அண்ணிக்கு வீடியோ கால் பண்றேன் அவங்களே செலெக்ட் பண்ணட்டும்” என்று கைபேசியை எடுக்கவும்..,
“என்ன பண்ற நிவி.. இது தளிருக்கு நம்மோட சர்ப்ரைஸ் கிஃப்ட் இப்படிதான் போட்டு உடைப்பியா..?”
“அச்சோ ஆமால்லக்கா.. நிச்சயத்துல சாதாரண நகையிலேயே அண்ணி அவ்ளோ அழகா இருக்கவும் கல்யாணத்துல எப்படி இருப்பாங்கன்னு எக்சைட்மென்ட்ல மறந்துட்டேன்..” என்றிட அம்பலவாணனின் பின்னே அமர்ந்திருந்த ராஜி மெல்ல தங்கையின் கையை சுரண்டி,
“என்ன ஜகா இது அந்த பெண்ணோட தகுதிக்கு தங்கமே அதிகம் ஏதோ போனா போகுதுன்னு ஐஞ்சாறு சவரன்ல நகை போடாம எக்கச்சக்கமா எடுத்திருக்காங்க இதுல வைரம் வேறயா…? உன் வீட்டுக்காரர் என்ன இப்படி பண்றார், எவ்வளவு போட்டாலும் மகளும் மருமகளும் ஒன்னாகிட முடியுமா…? இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லடி எப்பவும் நம்ம ஸ்டேடஸ்க்கு பெண் எடுத்தாதான் நமக்கு மதிப்பு ஆனா இவர் என்னடான்னு நீ அவ்ளோ சொல்லியும் உன் பேச்சை கேட்காம அவர் இஷ்டத்துக்கு பெண்ணை தான் தேர்ந்தெடுத்தார்னு பார்த்தா இப்போ நகையும் அப்படியே!!”
“எனக்கென்னமோ இது சரியாபடல ஜகா மருமகள் வர நேரம் வீட்ல உன்னோட மதிப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட்டு போறமாதிரி தெரியுது.. அப்படியென்ன அவ ரம்பையா ஊர்வசியா அவளை விட்டா வேற பெண்ணா கிடைக்காது.. சரி அதையெல்லாம் விடு அங்க நமக்கு ஏத்த ஸ்டேடஸ் தான் இல்லைன்னு பார்த்தா கல்யாணத்தை எடுத்த செய்ய ஒத்த ஆம்பளை இல்லாத வீடுடி அது !! செலவே இல்லாம அந்தம்மா பெண்ணை தள்ளிவிட பார்க்குது இவரும் பெருந்தன்மையா பெண்ணை மட்டும் கொடுங்கன்னு சொல்றார்..”
நிச்சயத்தையும் செலவே இல்லாம நம்ம பார்ட்டி ஹால்லயே நடத்திக்கிட்டாங்க என்ற ராஜிக்கு தெரியாத விஷயம் அம்பலவாணன் மறுத்தபோதும் விடாமல், ‘எங்க பக்கத்துல நிச்சயம் நாங்கதான் ண்ணா செய்யணும், என் பெண்ணுக்கு செய்யாம வேற யார்க்கு செய்யபோறேன்’ என்ற சீதாலக்ஷ்மி நிச்சயத்திற்கான செலவு முழுவதையும் கொடுத்துவிட்டார்.
“நான் என்னக்கா செய்ய அவர் இஷ்டத்துக்கு நடத்துறார் கேட்டா பணத்தைவிட குணம் முக்கியம் என் மருமகள் குணத்துக்கு எதுவுமே ஈடில்லைன்னு என்னென்னமோ பேசி என் வாயை அடைச்சிடுறார்.. ஆதியும் இவர் ஆட்டத்துக்கு தான் ஆடுறான் என் பேச்சு அவன்கிட்ட எடுபடலை.. ஏன் இப்படி உங்க தகுதிக்கு குறைவா பெண் எடுக்குறீங்கன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலக்கா..”
“அதேதான்டி நானும் சொல்றேன் வழக்கமா மருமக வந்தா மகனை தான் நம்மகிட்ட இருந்து பிரிப்பாங்க இங்க உன் மருமக உன் மகன், மகள்கள், புருஷன்னு எல்லாரையும் இப்பவே கைக்குள்ள போட்டுகிட்டா.. அங்க பாரு நிவியும் சுஜியும் தனக்கு எடுக்காம உன் மருமகளுக்கு பார்க்கிறதை..”
“அவங்க என்னைக்கு என் பேச்சு கேட்டிருக்காங்க எப்பவும் அப்பா செல்லம். என் பையன் மட்டும்தான் கொஞ்சம் என் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பான் ஆனா எப்போ இந்த பெண் விஷயம் வந்ததோ அப்போத்துல இருந்து அவனுமே மாறிட்டான்” என்ற குரல் கரகரக்க கூறிய ஜகதீஸ்வரியும் ராஜேஸ்வரியும் உடன்பிறந்தோர்..
மூத்தவரான ராஜிக்கு திருமணமாகி பத்து வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் அவர் கணவர் இவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பெற்றோரும் காலமாகிவிட்ட நிலையில் தனியாக இருந்த தமக்கையின் மீது பேரன்பு கொண்ட ஜகா கணவரிடம் ராஜியை தங்கள் வீட்டோடு வைத்துகொள்ள கேட்கவும் அம்பலவாணனும் மனைவி மீதான காதலில் அவர் விருப்பத்தை ஏற்றுகொண்டார்.
அதன் விளைவு கடந்த இருபது வருடங்களாகவே தங்கை வீட்டோடு தங்கிவிட்ட ராஜிக்கு தங்கை, அவள் பிள்ளைகள் மீது கொள்ளை பிரியம் இருந்தாலும் கணவரை விட்டு பிரிந்த வந்த பின்னர் பிறந்த உதயாதித்தனை ராஜியே பலநேரம் அன்னையாக மடி தாங்கியிருந்தார். என்ன ஒன்று தங்கையின் வீட்டோடு ஒன்றியவர் பின்வந்த நாட்களில் அதை தன் வீடாகவே நினைத்துகொண்டு அதிகமாக குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிட்டார். அதன் விளைவாக அக்காவின் வார்த்தையை தட்டமுடியாத ஜகா சிலநேரம் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு எதிராக நிற்க துவங்கிவிட்டார்.
மனைவியின் மாற்றத்தை கவனித்துவிட்ட அம்பலவாணனும் ஜாடைமாடையாக சுட்டிகாட்டிய போதும் சகோதரிகளின் பிணைப்பு குறையாமல் கூடிகொண்டே போனது.
“இப்படியே சொன்னா எப்படி ஜகா நாளைக்கு கல்யாணமான பிறகு நம்ம பிள்ளை எப்படி அங்க போக வர இருப்பன்னுகூட யோசிக்கமாட்டாரா..? நம்ம வீட்டு ஹாலைவிட அவங்க வீடு சின்னதுடி கண்ணு சரி அதெல்லாம் விடு எப்பவும் ஏசியில இருந்து பழக்கபட்ட நம்ம பிள்ளை அந்த வீட்ல எப்படி சமாளிப்பாங்கிற யோசனை வேண்டாம்..”
“அக்கா ஆதி சரின்னு சொன்னபிறகு நான் என்ன பேச..?”
“இப்பவே உன் பேச்சுக்கு மதிப்பில்ல நீயும் அவங்க தாளத்துக்கு ஆடினா நாளைக்கு வரபோறவ மட்டும் உன்னை எப்படி மதிப்பா? கடைசியில நீ இந்த வீட்ல செல்லா காசு தான் பார்த்துக்கோ.., மாமியாரா உன் ஸ்தானத்தை விட்டுகொடுக்காத இப்பவே பிள்ளைங்க உங்கை நழுவி போயிருச்சுங்க மருமகளையாவது உன் பிடியில வைக்கிறது உனக்கு நல்லது அவ்ளோதான் சொல்லுவேன்”
ஜகா பதில் சொல்லும் முன்னே “ராஜிம்மா இது அண்ணிக்கு நல்லா இருக்கும்தானே..?” என்று நிவி கேட்க..
“அம்சமா இருக்கும் கண்ணு” என்றவர் நகையை வாங்கி பார்க்க ஜகாவோ ராஜி சொன்னதை அசைபோட தொடங்கினார்.