தளிர் இரவு உணவை முடிக்கவும் அவள் கைபேசி ஒளிர்ந்தது அதில் கஜபதியின் மகன் ஜீவாவின் அழைப்பு. நேற்றிலிருந்தே பலமுறை அழைத்தும் ஏற்காமல் போனவர் இப்போது தானே அழைக்கவும் உடனே ஏற்ற தளிர் “சொல்லுங்கண்ணா எப்போ வரீங்க…?” என்று உற்சாகமாக கேட்டிட மறுபுறம் ஏதோ சொல்லப்படவும் தளிரின் முகம் மெல்ல மெல்ல பொலிவிழந்தது.
ஒருகட்டத்தில் “அண்ணா பெரிம்மாவையாவது அனுப்புங்க நானே வந்து பிக்கப் பண்ணி திரும்ப அவங்களை பத்திரமா அனுப்பி வைக்கிறேன்” என்றவள் மேலும் சில நிமிடங்கள் பேசி முடிக்க மற்றவர்கள் பார்வை அவள் மீதே..,
“ம்மா அண்ணி வீட்டு பக்கம் ஏதோ பிரச்சனையாம் அதனால அவங்க யாரும் புடவை எடுக்க வரமுடியாது நம்மளையே பார்த்துக்க சொன்னாங்கம்மா..”
“அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே க்கா நான் சொன்னா யார் கேட்கிறா..? அம்மா நேர்ல சொல்லிட்டு வந்ததுமில்லாம அவங்களுக்கு இதோட பத்து காலுக்கு மேல பேசியிருப்பாங்க ஆனா கடைசியில காலை வாரிட்டாங்க. அவங்க ஒன்னும் வரத் தேவையில்லை நாமலே செலெக்ட் பண்ணிக்கலாம்”
“தென்றல் என்ன பேச்சு இது..? அமைதியா இரு” என்ற தளிர், “இப்போ என்னம்மா செய்யறது..?” என்றாள்.
“இந்த பதில் வரும்னு நான் எதிர்பார்க்கலைடா.. எனக்காக இல்லைன்னாலும் உனக்காக வருவாங்கன்னு நினைச்சேன் அம்மூ..!” என்றவரின் மனதில் ஏதோ பாரம் அழுத்தவும் தண்ணீர் குடித்து தன்னை நிலைபடுத்தியவர்,
“இன்னொருமுறை கால் பண்ணிகொடும்மா நான் பேசிப்பார்க்கிறேன்..” என்று சீதா சொல்லவும் நேரடியாக கஜபதிக்கே அழைத்தாள் ஆனால் நான்குமுறையும் முழு அழைப்பு அடித்து ஓய்ந்தது ஆனால் அவர் ஏற்கவில்லை.
“வேற என்ன செய்ய..? நான் என்னோட வேலை செய்யறவங்களையும் நம்ம அக்கம் பக்கம் சிலரையும் கூப்பிட்டிருக்கேன் அவங்களோட போயிட்டு வந்துடலாம்..”
“ம்மா நீங்க கஷ்டபடாதீங்க நான் வேணும்னா இன்னொருமுறை அண்ணனுக்கே ட்ரை பண்ணி பெரிப்பாகிட்ட பேசி பார்க்கட்டுமா…?” என்றாள் தாயின் நிலையை உணர்ந்த மகளாக.
“அக்கா அம்மா சொல்லியே வராதவர் நீ சொன்னா மட்டும் வந்துடுவாரா..? நம்மளை ஒதுக்கணும்னு நினைக்கிறவங்க கண்ணிருந்தும் குருடா காதிருந்தும் செவிடா வாயிருந்தும் ஊமையா தான் இருப்பாங்களே தவிர மனசாட்சியோட நடந்துக்க மாட்டாங்க.. உனக்கு நிச்சயமானது கல்யாணம் ஆகபோறது எல்லாமே அவங்களுக்கு தெரியும் தானே..!! பாசம் இருந்தா அன்னைக்கு அம்மா சொன்ன மாதிரி ஆம்பளை இல்லாத வீடு தனியா என்ன பண்ணுவாங்கன்னு அவங்களாவே தேடி வந்திருப்பாங்க.. அதைவிட்டுட்டு நம்மளை ஒவ்வொரு முறையும் அவங்களை தேடி போய் கெஞ்ச விடுறது எல்லாம் மனுஷதன்மையே இல்லாத செயல்.. ஏன் அவர் பசங்களுக்கு கல்யாணம் பண்ணினவருக்கு அவங்களோட ப்ரெசென்ஸ் இங்க எவ்ளோ முக்கியம்ன்னு தெரியாதா..? நம்ம கஷ்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து சந்தோஷபடறது என்ன மாதிரி ஆட்டிடியூட் சரியான சாடிஸ்ட்” என்று ஆற்றாமையில் பேசிய தென்றலிடம்,
“அம்மூ பெரியவங்கள அப்படி பேசகூடாது” என்ற சீதாவின் வார்த்தைகள் எல்லாம் எடுபடவில்லை.
“நான் அன்னைக்கே சொல்லிட்டேன் அவர் பெரிய மனுஷனா நடந்துக்கல நானும் அப்படி இருக்க மாட்டேன்.. நீங்களே சொல்லுங்கம்மா அப்படி என்ன அவர் அந்தஸ்த்துக்கு நாம குறைஞ்சு போயிட்டோம்..?” என்று கேட்க சீதாவின் நினைப்போ மகளின் முகூர்த்த புடவையை மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகள் சேர்ந்து தான் வாங்க வேண்டும்.. மாப்பிள்ளை வீட்டார் சார்பாக பலர் இருக்க பெண் வீட்டு சார்பாக இருக்கும் ஒரே நெருங்கிய சொந்தமான கஜபதியின் மனைவி மற்றும் மருமகள் இருக்க வேண்டுமே இப்போது அவர்கள் இல்லையென்றால் யாரை கேட்பது என்பதில் மட்டும் தான் இருந்தது.
“நம்மை புரிஞ்சுகிட்டு நமக்காக தேடி வரவங்க இரண்டே பேரா இருந்தாலும் போதும்.. வேணும்னு நம்மளை அலைக்கழிக்க நினைக்கிறவங்க எப்பேற்பட்ட ஆளா இருந்தாலும் தேவையே இல்லை திரும்ப திரும்ப அவங்களை கெஞ்சனும்னு நமக்கு என்ன அவசியம்..? அவங்களை மாதிரி ஆள்களை எல்லாம் தூக்கி சுமக்கனும்னு நினைச்சா நாம எந்திரிக்கவே முடியாது புரிஞ்சுக்கோக்கா..”
“தென்றல் அவசரப்பட்டு பேசாத.. நானும் எதையும் மறுக்கலை ஆனா மத்தவங்களை விட அம்மா முக்கியம்..”
“இல்லைன்னு சொல்லலை அதுக்காக சுயமரியாதையை விட்டுட முடியாதுக்கா.. நம்மோட ஸெல்ஃப் ரெஸ்பெக்ட்டை தகுதியே இல்லாதவங்க கிட்ட இழந்துடகூடாது நீ நேர்லயே போய் நின்னாலும் அந்தாளு வரப்போறது இல்லை திரும்ப கால் பண்ணி அவரோட ஈகோவை ஸாட்டிஸ்ஃபை பண்ணபோறியா..? ஏன் அம்மாவோட வொர்க் பண்ற ஆன்டிங்களை பார்த்தா உனக்கு மனுஷங்களா தெரியலையா..? அவங்க சேர்ந்து வந்து செய்தா உன் கல்யாணம் நடக்காதா..?”
“என்னை முக்கியமா நினைக்காத நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போ.. நம்மை மதிக்காதவங்களை நாம மதிக்கணுன்னு ஒன்னும் அவசியமில்லன்னு சொல்லி கொடுத்ததே நீதான் க்கா ஆனா இப்போ என்னாச்சு உனக்கு..? ஏன் இப்படி நடந்துக்குற..? உனக்கு வேற வேலை இல்லைன்னா போய் அத்தானோட பேசு அவர் உன்னை ரொம்ப மிஸ் பண்றார் அதைவிட்டுட்டு தேவையில்லாத ஆணியை பிடுங்கிட்டு இருக்க..” என்ற தென்றல் கோபமாக எழுந்து செல்ல சுவரில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த சீதாவின் மனமெங்கும் வலி..!
“தென்றல் நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியாம இல்லடி.. நான் அப்படி சொல்ல வரலை ஆனா கொஞ்சம் அம்மாவை யோசிச்சு பாரு..” என்று தங்கையின் பின்னே சென்ற தளிர் பல நிமிடங்களுக்கு பின் போராடி அவளை சமாதானபடுத்திவிட்டு வெளியில் வர அங்கே சீதாலக்ஷ்மி கணவரின் புகைப்படத்தின் முன் மெளனமாக அமர்ந்திருந்தார்.
எப்போதும் போலவே கண்ணீர் இன்றி, வார்த்தைகள் இன்றி தந்தையுடன் மனதார அவர் மன்றாடல்கள் இருக்கும் என்பதை உணர்ந்த தளிர் சீதா தன்னை திரும்பி பார்க்கவும்,
“அம்மா நான் அவருக்கு பேசிட்டு வரேன்..” என்று மாடியறைக்கு சென்று உதய்க்கு அழைத்துவிட்டாள்.
“வாவ் வாட் எ சர்ப்ரைஸ்!! மேடம் அதிசயமா எனக்கு கால் பண்ணியிருக்கீங்க..? என்ன இன்னைக்கு எந்த ப்ரிபரேஷனும் இல்லையா..?”
“இருக்குங்க ஆனா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..? நீங்க ஃப்ரீயா இருந்தா இப்போ பேசலாமா..?” என்று தளிர் நேரடியாக விஷயத்திற்கு வர அவள் குரலில் இருந்த தீவிரத்தில்,
“இதென்ன கேள்வி தளிர்..? நீ எப்போ பேச நினைச்சாலும் என்னை நான் ஃப்ரீ பண்ணிப்பேன் சொல்லும்மா என்ன விஷயம்..?” என்றான்.
“கல்யாணத்துக்கு பிறகும் நான் வேலைக்கு போகணும் என்னால விடமுடியாது, அதுல உங்களுக்கு ஏதாவது…” என்று அவள் முடிக்கும் முன்னமே..,
“தாராளமா போகலாமே, யார் உன்னை வேண்டாம் சொன்னா..? நாம முதல்முறை இதைப்பற்றி பேசும்போதே நீ வேலைக்கு போகவும் உன்னோட சம்பளத்தை அத்தைக்கு கொடுக்கவும் ஓகே சொன்னதா எனக்கு நியாபகம் ஏன் திரும்ப கேட்கிற..?”
“இல்ல ஒருவேளை இன்னைக்கு ஸ்கூல்ல நான்.. நமக்குள்ள..” என்றவளுக்கு தன் வகுப்பறையை விட்டு சென்றபோது ஒருநொடி உதயனின் பார்வை வளையல்கள் மீது அழுத்தமாக படிந்தது நினைவில் எழவும்,
“ஐம் ஸாரி நீங்க.. ஐ மீன் என்மேல கோபமா இருக்கிறதால வேண்டாம் சொல்லிடுவீங்கன்னு நினைச்சேன்…” என்று ஒருவழியாக சொல்லி முடித்தாள்.
“கோபமா..?” என்று ஒருநொடி நிதானித்தவன்..,
“தளிர் எப்பவும் நான் என்னோட முடிவுகளை அவ்ளோ சீக்கிரம் எடுக்கமாட்டேன் அப்படி எடுத்தா அதுல இருந்து எப்பவும், எதுக்காகவும் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன். இன்னும் நமக்குள்ள சரியா பேசிக்கவே முடியாத நிலையில் நிச்சயம் சின்ன சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டான்டிங் வரத்தான் செய்யும்.. அதுக்காக கோபபட்டா அது அந்த மொமென்ட்டோட ரியாக்ஷன் அவ்ளோதான்.. அதையே நாள் முழுக்க தூக்கிட்டு சுமப்பாங்களா என்ன..?” என்று கேட்க இல்லை என்றாள்.
“தட்ஸ் இட்! நத்திங் ஈஸ் பர்மனென்ட் ஜஸ்ட் லிவ் தி மொமென்ட்.. உன்கிட்ட சொன்னா சொன்னது தான் நிச்சயம் அதுல மாற்றம் இருக்காது… யூ கேன் ட்ரஸ்ட் மீ” என்றதில் சற்று ஆசுவாசம் கொண்டவள்.,
“அப்புறம் இன்னொரு விஷயம் கேட்கணும்..”
“கேளு..”
“நான் இன்னும் லீவ் அப்ளை பண்ணலை.. நம்ம கல்யாணத்துக்கு எவ்ளோ நாள் எடுக்கட்டும் சொல்லுங்க..”
“உனக்கு எவ்ளோ நாள் வேணுமோ அவ்ளோ நாள் போட்டுக்கோ..”
“இல்ல உங்களுக்கு எப்படி..? கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது ப்ளான் வச்சிருக்கீங்களா..? நீங்க சொல்லுங்க நாம் டிஸைட் பண்ணிட்டு அதன்படி எடுத்துக்குறேன்..”
“என்ன ப்ளான்..? நான்தான் உன்னிஷ்ட்டம்..” என்று பேசிக்கொண்டே சென்றவனுக்கு அவள் கேள்வி புரிய.., “ஓஹ் நீ நம்ம ஹனிமூன் ட்ரிப் பற்றி கேட்கிறியா தளிர்..?” என்றவனின் முகத்தில் இளம்முறுவல்..
‘….’
“ஆமாவா தளிர்..?”
“இல்ல குழந்தைகளுக்கு எக்ஸாம் இருக்கு அதிகநாள் முடியாது நான் உடனே ஜாயின் பண்ணனும்..”
“பண்ணிக்கோ..! கன்ஸ்ட்ரக்ஷன் இன்னும் முடியாததால நானும் ஹனிமூன் பற்றி எதுவும் ப்ளான் பண்ணலை அவசரமா கிளம்பனும்னு இல்லை நிதானமா போகலாம் நோ ப்ராப்ளம்.. உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா இல்லைன்னா சொல்லு அப்ளை பண்ணிடலாம்..”
“இருக்குங்க, நான் எப்போ ஜாயின் பண்ணினாலும் உங்களுக்கு ஓகேதானே..?”
“டபுள் ஓகே”
“அப்போ நான் வைக்கட்டா..”
“ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் பேச நேரம் கிடைச்சிருக்கு நீ பேசு தளிர் கேட்கணும் போல இருக்கு..”
‘…..’
“என்ன அமைதியாகிட்ட..?” என்று உதய் கேட்க அவளுக்கோ இவனிடம் பேசிவிட்டு தந்தையின் முன் அமர்ந்திருந்த அன்னையை பார்க்கும் அவசரம்.. ஆனால் அதை சொன்னால் இன்னுமே கோபம் கொள்வானோ என்று அமைதியாக இருந்தாள்.
“உப்ஸ்…” என்று மூச்சை எடுத்துவிட்டவன், “எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும் ஆனா நான் ஏதாவது ஆரம்பிச்சா டைவர்ட் பண்ணி விட்டுடுற நீ ..? என்னோட பேசணும்னா நான் என்ன செய்யணும் சொல்லு செய்யறேன்..”
“எனக்கும் பேசணும் ஆனா எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இப்போ நீங்க ஏதாவது கேளுங்க நான் சொல்றேன்”
“ஓகே ஹனிமூன்க்கு எந்த ஸ்பாட்ன்னு நீயே செலெக்ட் பண்ணி சொல்லு தளிர்” என்று கேட்க சட்டென பதில் சொல்ல முடியாதவளிடம் மீண்டும் அமைதி.
“திரும்ப என்னை டைவர்ட் பண்ற நீ..? என்று புன்னகைத்தவன் ஓகே ஃபைன் பர்சேஸ்க்கு இன்னொரு நாள் போகலாம் பட் நாளைக்கு ஸ்கூல் முடிஞ்சபிறகு வெளில போகலாமா..? என் பிரெண்ட்ஸ் ஃபாமிலி உன்னை மீட் பண்ணனும் சொல்லிட்டு இருந்தாங்க..”
“எனக்கு அகெடமி கிளாசஸ் இருக்குங்க.. எக்ஸாம் டேட் அனொன்ஸ் பண்ணிட்டாங்க ஒருநாள் கூட டைம் வேஸ்ட்..”
“ஓகே யூ கேரி ஆன்..” என்று உதய் உடனே கத்தரித்துவிட ‘ச்சோ என்ன பேசிட்டு இருக்க தளிர்.. யோசிக்காம இப்படிதான் டக்குன்னு பதில் சொல்லுவியா..?’ என்று தன்னையே கடிந்து கொண்டவள் கீழிறங்கி தன் அறைக்கு வந்து மேஜையின் முன் அமர்ந்தாள்.
தன் போக்கில் பேப்பர் பண்டிலை எடுத்து வைத்துவிட்டாலும் தளிரின் பார்வை என்னவோ கைப்பேசியிலேயே இருந்தது. உதய்யின் ஏக்கம் சுமந்த வார்த்தைகளை கேட்டபின்னர் தளிரால் அடுத்து எதையும் செய்ய முடியவில்லை. ஏனோ இப்படியே பழகிவிட்டவளுக்கு திடிரென்ற இம்மாற்றங்களை கையாள தெரியவில்லை, அவன் ஏக்கம் புரிந்தாலும் உடனே அதற்கு இசைந்துவிட முடியாது தத்தளித்து கொண்டிருந்தாள்.
**************************************
ஒருமுடிவோடு கைபேசியை திறந்து ‘சடன்னா லீவ் எடுக்க முடியாது உதய்.. நாளைக்கு இல்லைனாலும் இன்னொரு நாள் யாரையாவது ஆல்டர் பண்ண ட்ரை பண்றேன்..’ என்று அனுப்பிட மறுபுறம் அவள் மெசேஜை பார்த்தவன் ‘போடி’ என்பதாக அமர்ந்திருக்க அடுத்த குறுஞ்செய்தி வந்தது..
“உங்களுக்கு எந்த இடம் பிடிக்குமோ அங்கேயே நாம போகலாம்” என்று புன்னகைக்கும் பொம்மையையும் சேர்த்து அனுப்பியிருந்தாள்.
அதில் அவன் கோபம் சற்று குறைந்தாலும் விடாமல் இழுத்து வைத்து கொண்டவன்.. ‘எதுக்கு போகணும்..?’ என்று சற்று கோபமாகவே வாய்ஸ் நோட் அனுப்பினான்.
தளிர் திறந்து பார்த்ததற்கான அறிகுறி தெரிந்த இருநிமிடங்களுக்கு பின்பும் எந்த பதிலும் இல்லாது போனதில் கடுப்பானவன், ‘போடி பெருசா மெசேஜ் பண்ண வந்துட்டா’ என்று கைபேசியை மெத்தையில் எரிய மீண்டும் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டபோதும் உதய் எடுக்கவே இல்லை.
சில நொடிகளுக்கு பின் மீண்டும் ஒரு மெசேஜ் அதில் தேன் மற்றும் நிலவின் எமொஜியை சேர்த்து அனுப்பியிருந்தாள்…இப்போதும் அவன் எதையும் திறந்து பார்க்காமல் இருக்க தளிர் உடனே அவனுக்கு அழைத்துவிட்டாள் ஆனால் மறுபுறம் அவளது தொடர் அழைப்புகள் எதுவும் ஏற்கபடவே இல்லை.
“என்னக்கா பேப்பர் பண்டில் எடுத்து வச்சுட்டு ஃபோனை பார்த்துட்டு இருக்க நான் ஹெல்ப் பண்ணட்டா..?” என்று தென்றல் பேப்பர் கட்டை பிரிக்கவும்,
“ஒருநிமிஷம் உன் ஃபோன் கொடு” என்று வாங்கிக்கொண்டவள் “ஏன்க்கா உன்னோடதுல பேலன்ஸ் இல்லையா..?” என்ற தங்கையின் கேள்விக்கு பதிலளிக்காது மற்றொரு அறைக்குள் நுழைந்து உதய்க்கு அழைத்தாள்.
முதல் அழைப்பு முடியும் முன்னமே அழைப்பை ஏற்றவன் “சொல்லு ப்ரீஸீ சாப்ட்டியா..? தூங்காம என்ன இந்நேரத்துக்கு ஃபோன்..?” என்றான்.
“உதய் நம்மோட ஹனிமூனுக்கு எனக்கு எந்த இடமா இருந்தாலும் ஓகே”
“இதை சொல்ல இவ்வளவு யோசனையா..? உனக்கு என்கிட்டே என்ன தயக்கம் தளிர் எதுவா இருந்தாலும் சொல்லு நான் புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்..” என்று சற்று காட்டமாகவே கேட்கவும்,
“இல்ல அப்படி எதுவுமில்ல..” என்றவளுக்கு அவனை போல இயல்பாக பேச்சு வரவில்லை. பேச எத்தனையோ இருந்தாலும் அவளிருக்கும் மனநிலையில் அவையெல்லாம் தொண்டையோடு அமிழ்ந்து போனது.
“வேற என்ன தான்டி பிரச்சனை உனக்கு..? லிசன் தளிர் அகடெமில வேணும்னா நான் பேசுறேன் நீ அதிக ஸ்ட்ரெஸ் எடுக்காத அதுவும் கல்யாணத்தை பக்கம் வச்சிக்கிட்டு.. அண்ட் தேர் ஈஸ் எ ஆல்டர்னேட்டிவ் ஆப்ஷன் ஆல்வேஸ்..”
“இல்லைங்க அப்படி எதுவுமில்லை”
“அப்படியா..? நீ எனக்கு கால் பண்ணி இந்த நொடியோட பதினேழு நிமிஷம் முடிஞ்சது.. இதுவரை ஒன்னு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன இல்லை உனக்கு வேண்டிய விஷயத்தை கேட்டு தெரிஞ்சுகிட்ட அவ்ளோதான்.. இன்னும் நீ நான் சாப்ட்டேனான்னு கூட கேட்கலை ஏன் தளிர் இப்படி..? உனக்கு நிஜமாவே என்னை கேட்கணும்னு தோணலையாடி..?” என்று குரல் கரகரக்க கேட்டவன் அவள் பதில் சொல்லும்முன் கைபேசியை அணைத்துவிட்டான்.
உதய் அழைப்பை துண்டிக்கவும் சிலகணங்கள் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு தந்தையை அதிகம் தேட செய்தது.. வலி கொண்ட விழிகளோடு அதே அறையில் நான்கு சட்டத்திற்குள் அடைக்கபட்டிருந்த ரகுபதியின் முகத்தையே பார்த்தவாறு மெளனமாக அமர்ந்துவிட்டாள்.
‘நீங்க ஏன்ப்பா எங்களை விட்டு போனீங்க..? அப்படி என்ன அவசரம்..?’ என்று மனதார தந்தையை கேட்டவளின் கண்களில் மெல்ல நீர் திரள “எனக்கு என்னைவிட அம்மாவை நினைச்சு தான்ப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு தென்றல் புரியாம பேசிட்டு இருக்கா.. என்னோட முகூர்த்த புடவையை தன்னால வாங்க முடியாம போனாலும் அது ஒரு குறையா தெரியாம இருக்கவும் யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னும் தான் அம்மா பெரிம்மா பெரிப்பாவை எதிர்பார்க்கிறாங்க…’
‘அம்மா பெருசா எங்ககிட்ட சொல்லலைனாலும் என்னோட கல்யாணம் அம்மாவை கஷ்டப்படுத்துறது எனக்கு கஷ்டமா இருக்குப்பா.. கல்யாணம் நல்லபடியா நடந்து முடியனுங்கிறது தவிர வேற எதையும் யோசிக்க முடியுமான்னு தெரியலை… அவரோட ஆசை புரிஞ்சாலும் எனக்கு நிஜமா.. நான், ப்ச் என்னை அறியாமலே அவரை கோபபடுத்திட்டு இருக்கேன்.. நீங்க அம்மாகூட இருக்கீங்கன்னு அவங்க ரொம்ப நம்பறாங்க ஆனாலும் ஏன்ப்பா இப்படி அவங்களை கஷ்டப்படவிடறீங்க..? ப்ளீஸ் ஏதாவது செய்ங்க..’ என்றவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது..
“இத்தனை நாள் எனக்கு பெருசா தோணலைன்னாலும் இப்போ அதிகமாவே நீங்க என்கூட இருக்கணும் போல இருக்குப்பா..” என்று தன் மனதில் இருப்பதை எல்லாம் தந்தையிடம் கொட்டி ஒருமூச்சு அழுது முடித்தவள் மெல்ல தன்னை மீட்டுக்கொண்டு வெளியில் வர அடுத்த நாள் சமையலுக்கான முன்தயாரிப்புகளை முடித்துவிட்டு அவளுக்காக காத்திருந்த சீதா, “மாப்பிள்ளை என்ன சொன்னார் அம்மூ” என்று சாதாரணமாக கேட்டிட அவளும் முடிந்ததை கிளறாமல் பதில் சொன்னாள்.
“ஒண்ணுமில்லம்மா எப்போயிருந்து லீவ் போடட்டும்ன்னு கேட்டேன் என் விருப்பபடி போட்டுக்க சொல்லிட்டார்.. நீங்க சொல்லுங்கம்மா எத்தனை நாள் எடுக்கட்டும்..?”
“மாப்பிள்ளை வீட்டு பழக்கமெல்லாம் உனக்கு பழகனுமில்லையா கல்யாணத்துக்கு ஒருவாரத்துல இருந்து அதன்பிறகு ஒரு இருபது நாளாவது எடுத்துக்கோ தளிர்..”
‘அவ்ளோநாளா..?’ என்று ஒருநொடி திகைத்தாலும், “சரிம்மா ஆனா அகெடமி க்ளாசஸ் மட்டும் போர்ஷன்ஸ் முடிக்கணும் அதனால் போயிட்டு வந்துடட்டுமா..?”
“அகடெமியா..? அது இங்கிருந்து ரொம்ப தூரமாச்சேடா கல்யாணத்தை கிட்ட வச்சுகிட்டு அவ்ளோதூரம் போயிட்டு வரது நல்லா இருக்காது, ஸ்கூல் பக்கத்துல இருக்கிறதால பிரச்சனை இல்ல ஆனா..” என்றவரிடம்,
“ம்மா சொல்ல மறந்துட்டேனே மாமா இன்னைக்கு என்னை கூப்பிட்டு பேசினார்”
“அண்ணனா..? என்னம்மா சொன்னார்”
“உங்ககிட்ட ஏற்கனவே நமக்கு கார் அனுப்புறது பற்றி பேசினாராமே நீங்க ஓகே சொல்லிட்டதால நாளைக்கு டிரைவரோட கார் இங்க வந்துடும் கூடவே ஒரு அம்மாவை நமக்கு துணையா அனுப்பி வைக்கிறேன் சொன்னாரும்மா, நான் அகெடமிக்கு கார்ல போயிட்டு வந்துடட்டுமா..? உங்களுக்கு ஓகேவா..?”
“ஆமாமா அண்ணன் ஏற்கனவே பேசினார்.. நான்தான் மறந்தே போயிட்டேன் இதுவும் நல்ல யோசனை தான்.. சரிம்மா உனக்கு போர்ஷன்ஸ் முடிச்சு கொடுக்க எவ்ளோ நாள் தேவைப்படும்..?”
“ம்மா எப்படியும் கல்யாணத்துக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி முடிச்சுட்டு ரிலீவ் ஆகிடுவேன், நீங்க சொன்ன மாதிரி ஸ்கூல்ல லீவ் அப்பளை பண்ணிடுறேன்”
“சரிடா நீ போய் படு நேரமாச்சு” என்றதும் தன்னறைக்கு வந்தவள் அங்கே தென்றல் மேஜையில் தலை கவிழ்த்து அமர்ந்த வாக்கிலேயே உறங்கிவிட்டிருக்க அவளை எழுப்பி படுக்க வைத்தவள் தானும் அவளருகே படுத்த பலநிமிடங்களுக்கு மனமெங்கும் உதய்யின் முகமே வியாபிக்க அவனை மீறி தளிரை தழுவ முடியாது உறக்கம் கண்ணாமூச்சி ஆடியது.
கைபேசியை எடுத்து வாட்ஸப்பை திறக்க உதய் இன்னும் ஆன்லைனில் இருப்பதாக காட்டவும் உடனே அவனுக்கு செய்தி அனுப்ப தொடங்கினாள்.