நிவி சுஜியை கண்டதுமே கைபேசியை கீழே வைத்த சீதா “வாங்கம்மா..” என்று மெல்லிய குரலில் அழைக்க, வெளியில் நின்றிருந்தவர்களின் முகத்தில் எப்போதுமே நிறைத்திருக்கும் புன்னகையும் உற்சாகமும் இன்று தொலைந்து அதற்கு பதில் சங்கடம் குடிகொண்டிருந்தது.
“ஏன் அங்கேயே நிற்கிறீங்க..? உள்ள வாங்க அண்ணி.. வா நிவி..” என்று தளிரும் அவர்களை வரவேற்க உள்ளே வந்தவர்கள் நெஞ்சமோ சீதாவின் முகம் கண்டு வெகுவாக கசங்கி போனது. பின்னே கடையில் அத்தனை பேர் எதிரில் எதுவும் பேசமுடியாமல் திரண்டுவிட்ட கண்ணீர் உகுக்காமல் மௌனமாக நின்றவரின் மனம் பட்டபாட்டை நேரில் பார்த்தவர்களுக்கு இப்போது அதன் நீட்சியை கண்டதில் அத்தனை வலி..
“உட்காருங்க..” என்று தளிர் சொன்னபோதும் அமராமல் சீதாவின் முன் வந்த நின்ற இருவரும் அவர்முன் கைகூப்பி,
“மன்னிச்சிடுங்க அத்தை” என்று ஒருமித்த குரலில் சொல்லவும்,
“என்னம்மா இது நீங்க என்ன செய்தீங்க..? எதுக்கு மன்னிப்பு முதல்ல கையை இறக்குங்க..” என்று அவர்கள் கையை சீதா பிடிக்கவும்,
“தப்பே செய்யாத நீங்க மன்னிப்பு கேட்கிறப்போ எங்க பக்கம் இருக்க தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்காம போனா பெரிய தப்பாகிடும் அத்தை.. நிச்சயமா எங்க பெரியம்மா பேசினதை நியாபடுத்த நாங்க வரலை முழுக்க முழுக்க அவங்க பேசினது தப்பு.. ஆனா அங்க அத்தனை பேர் முன்னாடி நாங்க அவங்க தப்பை சுட்டிகாட்டி இருந்தா நிச்சயம் அவங்க கோபம் அதிகமாகி தென்றலை இன்னும் அனாவசியமா பேசியிருப்பாங்க அப்படி ஒரு சூழல் வந்துடகூடாதுன்னு தான் அமைதியா இருந்தோம்.. அதுக்காக அவங்களை நியாயபடுத்..” என்ற சுஜியின் பேச்சை கைநீட்டி தடுத்த சீதா,
“வேண்டாம்மா எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம், இனியும் இந்த கல்யாணத்தை நடத்தி என் பெண்ணை நானே அசிங்கபடுத்த விரும்பலை… இது சரிபட்டு வராது விட்டுடுங்க நான் அண்ணன் கிட்ட பேசுறேன்…” என்ற சீதாவை நிவி, சுஜிதா மட்டுமல்லாது தளிருமே அதிர்ந்து போய் பார்த்தாள்..
நிவி, சுஜியின் வரவை உணர்ந்தாலும் அவர்களை எப்படி சந்திப்பது என்ற தயக்கத்தோடு அறையினுள்ளே இருந்து கொண்ட தென்றலின் செவிகளில் சீதாவின் வார்த்தைகள் விழவும் அவள் கையிலிருந்த பேனா நழுவி கீழே விழ கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் மேஜையிலிருந்த புத்தகத்தின் வரிகளை நிறைத்தது. சீதாவின் கோபம் பற்றி தெரிந்த தென்றல் பயந்திருந்ததே இதற்கு தானே..!
எது நடக்க கூடாது என்று ஆயிரம் வேண்டுதல் வைத்து கொண்டிருந்தாளோ அவையெல்லாம் ஒன்றுமற்றதாகி இதோ இப்போது திருமணம் நிற்க தான் காரணமாகி போனோமே என்ற எண்ணமே அவளை சிதைக்க, விம்மும் மனதோடு எழுந்த கேவலை வாயை பொத்தி கட்டுபடுத்திய தென்றல் உடலில் அப்படியொரு நடுக்கம்.
“அத்தை என்னத்தை பேசுறீங்க..? நீங்க பெரியவங்க ஏன் இப்படி ஒரு அவசர முடிவு..”
“இன்னைக்கு என் பெண்ணை நோக்கி வந்த வார்த்தைகள் எதுவும் சாதாரணமானது இல்லை, அவ சின்ன பொண்ணு! தளிரும் தென்றலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுத்து அடுத்தவங்க முகத்துல சிரிப்பை கொண்டு வருவாங்களே தவிர நீங்க சொல்ற மாதிரி அவளுக்கு அக்காவோட வாழ்க்கையை அவளுக்கு தட்டி பறிக்க தெரியாது என் பெண்களை நான் அப்படி வளர்க்கவுமில்லை.. என் பொண்ணு மனசு என்ன பாடுபடும்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. நீங்க நினைக்கிற மாதிரி தென்றல் இல்லம்மா ..” என்றதுமே பதறிப்போன நிவி,
“அத்தை என்ன பேசுறீங்க..? நாங்க போய் தென்றலை தப்பா நினைப்போமா..? இன்னைக்கு நடந்ததை வச்சு எதையும் முடிவு பண்ணாதீங்க ப்ளீஸ்..”
“இல்லமா இன்னைக்கு விழுந்த விதை எப்போ, எப்படி, எங்க முளைக்கும்னு கணிக்கமுடியாது.. நாளைபின்ன தளிரோட கூட வரபோற சொந்தத்தை தென்றலும் சந்திக்கணும், பேசணும், உறவடனும்.. ஆனா இப்போ உங்களயே பார்க்க முடியாம என் பொண்ணு ரூமோட அடைஞ்சு இருக்கா நாளைக்கு இந்த கல்யாணம் நடந்தா உங்க வீட்ல என் பெண்ணோட இடம் என்ன..? எனக்கு என் ரெண்டு பெண்களுமே முக்கியம்..” என்ற சீதாவை கலக்கத்துடன் பார்த்த சுஜிக்கு எப்படி அவரை சமாதானபடுத்துவது என்று புரியவில்லை..
“ப்ளீஸ் அத்தை எனக்கு உங்க ஆதங்கம் புரியுது. ஆனா கோபத்துலயும் வேதனையிலும் நாம எடுக்கிற முடிவு பெரும்பாலும் சரியா இருக்காது கொஞ்சம் ஆறப்போடுங்க.. மூட்டை பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டையே கொளுத்துவாங்களா..? நீங்க கொஞ்சம் நான் பேசுறதை கேளுங்க அப்புறம் முடிவு பண்ணுங்க” என்ற சுஜியின் வார்த்தையில் மெல்ல மட்டுப்பட்டார் சீதா.
“அத்தை நான் தான் சொன்னேனே அவங்களை நியாபடுத்த வரல.., அவங்களை ஈஸியா மாத்தவும் முடியாது அவங்களா திருந்தினா தான் உண்டு..! இன்னைக்குன்னு கிடையாது எப்பவுமே அவங்க இப்படிதான், எதையும் யோசிக்காம பட்டுன்னு பேசிடுவாங்க அதுவும் உதய் விஷயம்ன்னு வந்துட்டா அவங்களை கட்டுபடுத்தவே முடியாது… அவங்களுக்கு குழந்தை இல்லாததால உதய்யை அவங்களோட சொந்த குழந்தையா நினைச்சு வளர்க்க ஆரம்பிச்சுட்டவங்களுக்கு எங்களை விட அவன் மேல அதிகபாசம்.. அவனுக்காகவே ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்வாங்க சமையல் கூட எப்பவும் அவனுக்காகவே தனியா அவனுக்கு பிடிச்சதை செய்து கொடுப்பாங்க.. உதய்யை யாரும் ஒரு வாரத்தை சொல்ல விட மாட்டாங்க..” என்று சுஜி விளக்கம் கொடுக்க அவளை தொடர்ந்த நிவி,
“அத்தை என் வீட்டுக்காரர் அண்ணாவோட ஃபிரெண்ட். உங்களுக்கு தெரியுமா தெரியலை ஆனா எங்களோடது கலப்பு கல்யாணம்.. தாத்தா லேசுல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலை அவர் வீட்டுலயும் எதிர்ப்பு.. அப்பாவும் அண்ணாவும் தான் இரண்டு பக்கமும் சரிகட்டி எங்க கல்யாணத்தை நடத்தினாங்க… என் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து அண்ணா ரொம்பவே டென்ஷனா சுத்திட்டு இருந்தாங்க.. எங்க கல்யாணம் முடியற வரை அண்ணா ஒருநிமிஷம் கூட நிம்மதியா உட்காரலை.. எங்கப்பாவை பற்றி உங்களுக்கு தெரியாது இப்போ இதெல்லாம் தெரிஞ்சா வீட்ல திரும்ப ஒரு பிரச்சனை வரும் அதை தொடர்ந்து அண்ணாவோட நிம்மதி போகும் அதனால் தான் அவங்களுக்கு சொல்லாம நாங்களே மன்னிப்பு கேட்டு ப்ராப்ளம் சால்வ் பண்ண வந்தோம்.. ஆனா நீங்க.. ” என்று நிவி தயக்கமாக சீதாவை பார்க்க,
“உதய்க்கு தளிரை ரொம்பவே பிடிக்கும் அத்தை.. அதேபோல தான் தளிருக்கும் என் தம்பியை பிடிச்சிருக்கு.. காலம் முழுக்க சேர்ந்து வாழப்போறது அவங்க தான்..! ஒருவேளை அவங்களுக்கு இடையில் ஏதாவது மனஸ்தாபம் இருந்தா நீங்க மேற்கொண்ட தொடருவதை பற்றி யோசிக்கலாம் ஆனா… ப்ளீஸ் அத்தை நீங்க பெரியவங்க ஒரு கல்யாணத்துல எவ்ளோ சிக்கல் வரும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்ல” என்ற சுஜி அவர் வலக்கையை பிடித்து அதில் தன் கையை வைத்து,
“நாங்க என்னைக்கும் தளிரையும் தென்றலையும் பிரிச்சு பார்த்ததில்லை அதுவும் இன்னைக்கு நடந்த இன்சிடென்ட்க்கு அப்புறம் இனி தென்றலுக்கு நாங்க முழு பொறுப்பு..” என்று கூற சீதாவின் முகத்தில் ஆச்சார்யபாவம் கூடவே அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.
பின்னே அன்று ரகுபதி சீதாவிற்கு மீனாக்ஷி துணை இருந்தது போல இன்று தன் மகள்களுக்கு நாத்தனார்கள் துணை இருக்கிறேன் எனும் போது அவர் ஏன் திருமணத்தை நிறுத்த வேண்டும்..? சில காலமே ஆனாலும் நிறைவான வாழ்வை வாழ்ந்தவருக்கு சுஜிதா சொன்னது போல ராஜிக்கு பயந்து உதய் தளிரை பிரிப்பதில் உடன்பாடில்லை..
“நிஜமாத்தை தளிர் மட்டுமில்ல தென்றலும் எங்க வீட்டு பொண்ணு தான்..! அவளுக்கு இன்னொரு அவமானம் நடக்க நாங்க விடமாட்டோம் எங்களை நம்புங்க… நீங்க கல்யாணத்தை நிறுத்துற அளவு இது சின்ன விஷயம்னு சொல்லமாட்டேன் ஆனா யாருக்காகவோ நமக்கு நடக்க கூடிய நல்லதை நாமலே நிறுத்தனுமான்னு ஒருமுறை யோசிச்சுகோங்கத்தை. இத்தனை வருஷ அனுபவத்துல நீங்க பார்க்காத மனுஷங்க இல்லை எல்லாரையும் ஒரே போல எதிர்பார்க்க முடியாது இல்லையா..? ப்ளீஸ் அத்தை கடையில நடந்ததை மறந்துடுங்க..” என்று கூற சீதாவிற்கு மனம் வெகுவாக நெகிழ்ந்து போனது.
“நிச்சயம் இனி நடக்க போகும் எந்த விசெஷத்துலயும் உங்களுக்கோ தென்றல் தளிருக்கோ இன்னொரு அவமானம் நடக்க நாங்க விடமாட்டோம்.. தென்றல் சின்ன பொண்ணு எதார்த்தமா பேசிட்டா ஆனா ராஜிம்மா இப்படி ரியாக்ட் பண்ணினது ரொம்பவே தப்பு..! அதுவும்…” என்று தொடங்கிவிட்ட சுஜிக்கு தென்றலை பேசிய வார்த்தைகளை உச்சரிக்ககூட பிடிக்காது போக..
“இதெல்லாம் தெரிஞ்சா என் தம்பி கல்யாணத்துல அவனால சந்தோஷமா கலந்துக்க முடியாம போயிடும்.. அவங்க பேசினதுக்கு நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறோம்” என்று நிவியும் சுஜியும் சீதாவிடம் மீண்டும் கைகூப்பி மன்னிப்பு கேட்க சீதாவிற்கு தான் மனம் தாளவில்லை.
“ப்ச் எதுக்கும்மா வேண்டாம் இன்னொருமுறை இந்த வார்த்தையை சொல்லாதீங்க .. சரி ஏன் இன்னும் நின்னுட்டு இருக்கீங்க முதல்ல உட்காருங்க” என்று அவர்களை சோபாவில் அமர்த்தினார்.
“அத்தை எங்களை மன்னிச்சுட்டீங்களா..?” என்று நிவி கலக்கத்துடனே கேட்க அவள் தலையை ஆதூரமாக வருடிய சீதா ‘ஆம்’ என்பதாக கண்களை மூடி திறக்க,
“தேங்க்ஸ் அத்தை நான் தென்றலை பார்த்துட்டு வரேன்” என்று அறைக்குள் ஓடிய நிவி கண்ணீரில் கரைந்திருந்த தென்றலை கட்டிக்கொண்டு பேசியவள் இறுதியாக தென்றலின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்த பின்னரே தன் பேச்சை நிறுத்தியிருந்தாள்.
அமைதியாக நின்றிருந்த தளிரை நெருங்கிய சுஜிதா, “என்ன தளிர் இது நீயே இப்படி கண்கலங்கினா எப்படி..? பிரச்சனை இல்லாத குடும்பமா..? நாம நினைச்ச மாதிரியே வாழ்க்கை இருந்துட்டா அதுல என்ன பெரிய சுவாரசியம் இருந்திட போகுது.. நாம எதிர்பாரா நேரத்துல வரக்கூடிய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாமே ஃபேஸ் பண்ணி அதுல இருந்து கத்துக்கறது தானே வாழ்க்கை பாடம்.. இதெல்லாம் மீட்டிங் வந்தப்போ நான் வைஷுவை லோ மார்க்ஸ் எடுத்தான்னு கவலை பட்டத்துக்கு நீ சொன்னது தான்..!! இப்போ உனக்கு நான் சொல்லிட்டு இருக்கேன் பார்த்தியா..? என்று புன்னகைத்தவர்,
“நீ புத்திசாலி உனக்கு நான் பெருசா சொல்ல வேண்டியது இல்லை.. எத்தனை குழந்தைங்க அவங்க பேரன்ட்ஸ்ன்னு எல்லாரையும் அழகா கையாள கூடிய பக்குவம் இருக்க உனக்கு நான் சொல்லிட்டு இருக்கேன் பாரு” என்று தன் நெற்றியை தட்டிகொண்டவர்,
“எங்க வீட்டு மனுஷங்க ஒன்னும் நீ நினைக்கிற அளவுக்கு பயங்கரமானவங்க இல்லை.. அதைவிட உதய் உன் பக்கம் இருக்கப்போ நீ யாரைப்பற்றியும் கவலைபட தேவையில்லை..” என்றதில் தளிரின் விழிகள் ஆச்சர்யமாக விரிய.,
“நிஜம் தான் தளிர் கொண்டவன் துணை இருந்தால் எந்த பிரச்சனையையும் அசால்ட்டா ஊதி தள்ளிடலாம்.. கூடபிறந்த எங்களையே யார்கிட்டயும் விட்டுகொடுக்காத உதய் உன்னை மட்டும் விட்டுகொடுத்திடவா போறான்..? ஒரு லைஃப் தளிர்! அதுல கல்யாணம் ஒருமுறை தான் தேவையில்லாததை மனசுல போட்டு கஷ்டபடுத்திக்காத சந்தோஷமா இரு.. மாமியார் வீட்டுல இருக்கிற சேலஞ்சஸ நாங்களே சமாளிக்கறப்போ உன்னால சமாளிக்க முடியாதா என்ன..?” என்று கேட்ட சுஜிக்கு தானே ஒவ்வொரு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போதும் வெவ்வேறு மனநிலையில் வரும் பெற்றோரையும் குழந்தைகளையும் சமாளித்து, தேற்றி, உற்சாகபடுத்தி அனுப்பும் அவளின் திறன் குறித்து.
“எங்கப்பா நாங்க எல்லாருமே உன்னோட இருக்கோம் .. அதேசமயம் பெரிம்மா பேசினது மட்டும் அப்பாக்கு தெரிஞ்சா அப்பாக்கும் அம்மாக்கும் இடையில பெரிய சிக்கலாகிடும்.. அதைவிட அந்த கோபமும் சேர்ந்து உன்மேல தான் பாயும் அதனால இன்னும் கஷ்டமாகிடும்னு உனக்கு புரியுதா..? அவங்களால அடிக்கடி ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும்.. அப்போல்லாம் அப்பாவோ உதய்யோ ஒரு வார்த்தை குரல் உசத்தினா போதும் அடுத்த நாலு மாசத்துக்கு வாயே திறக்க மாட்டாங்க என்ன அதுக்கப்புறம் திரும்பவும் பழைய குருடி கதைவை திருடின்னு ஆரம்பிச்சுடுவாங்க” என்று புன்னகைக்க..,
“என்ன பார்த்துட்டு இருக்க தளிர் வீட்டுக்கு வந்தவங்களுக்கு முதல்ல தண்ணீர் கொண்டு வா” என்றவர் அங்கே வந்த இளைய மகளிடம், தென்றல் நீ போய் சாப்பாடு எடுத்து வைடா..” என்று வேலைகளை ஏவ, “நம்ம வீட்ல எதுக்கு அத்தை இந்த பார்மாலிட்டி.. நீங்க பேசிட்டு இருங்கண்ணி” என்ற நிவி தளிரை ஹாலில் இருத்திவிட்டு தென்றலோடு சென்று உணவை கொண்டு வந்து வைத்தாள்.
சீதாவிடம் சென்ற சுஜி, “அத்தை நாம வேலை செய்யற இடத்துல குடியிருக்க இடத்துலன்னு நாம புழங்குற எல்லா இடத்துலயும் மனுஷங்களோட நிறம் வேற வேறயா தான் இருக்கும் அதுக்காக பயந்து நம்ம வாழ்க்கையை நாம வாழாம இருந்திட முடியுமா..? எங்க பெரிம்மா சத்தமெல்லாம் அப்பா இல்லாத இடத்துல தான் பலமா இருக்கும்.. அதே அவங்களை எங்கப்பா முன்னாடி பேச சொல்லி பாருங்க வாயே திறக்க மாட்டாங்க..” என்று சுஜி சொல்ல மற்றவர்களின் முகத்தில் மென்னகை.
“ம்மா எல்லாருக்கும் இட்லி போதாது நீங்க பேசிட்டு இருங்க நான் தோசை போட்டுட்டு வரேன்” என்று தளிர் கிளம்பவும், அனைவருக்கும் தட்டில் இட்லி வைத்து கொண்டிருந்த நிவி, “அப்பா மட்டுமில்லத்தை அண்ணன் மேலயும் அவங்களுக்கு அந்த பயம் இருக்கு… ஒருமுறை வீட்ல வேலை செய்யறவங்களை இப்படிதான் அவமரியாதையா பேசவும் அண்ணா அவங்க எதிர்லயே பெரிம்மாவை சத்தம் போட்டுட்டார் அதுல இருந்து ஆள் நாலு மாசம் வாய் திறந்தது சாப்பிட மட்டும் தான்னா பார்த்துக்கோங்க..” என்று சொல்லி சிரிக்க தென்றலின் முகத்திலும் புன்னகை.
“என்னண்ணி சொல்றீங்க அத்தானுக்கு கோபப்பட தெரியுமா..?” என்று தென்றல் அதிசயிக்க சமையலறையில் இருந்த தளிருக்கு இன்னுமே பள்ளியில் அவள் கண்ட அவன் கோபமுகம் மனதில் எழுந்து அச்சுறுத்தியது… நல்லவேளை அவனிடம் அவள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை ஒருவேளை பேசியிருந்தால் வீட்டில் பிரளயமே ஏற்பட்டிருக்கும் போல.., சுஜிதா சொல்வது போல தளிரின் மீது இன்னுமே அதிருப்தி ஏற்பட்டிருக்கும் என்று நிம்மதி மூச்சுவிட்டாள்.
“என்ன கேள்வி தென்றல் மனுஷனா இருந்தா கோபம் வரத்தானே செய்யும்..? ஆனா என் தம்பி சட்டுன்னு கண்மூடிதனமா கோபபடமாட்டான்.. அப்படி இருந்தான்னா அவன் கோபத்துல நிச்சயம் நியாயம் இருக்கும்” என்று தம்பியை பற்றி சொல்லிகொண்டிருந்தவர் மீண்டும் ஏதோ ஒரு இடத்தில் ராஜி குறித்து பேசவும்,
“தட்டுல சாப்பாடு வச்சுட்டு பேசக்கூடாது எல்லாரும் அமைதியா சாப்பிடுங்க” என்று அதட்டிய சீதாவின் முகம் பெரும் நிம்மதி கொள்ள தளிரிடம் இருந்து தோசைகளை கொண்டு வந்து அவரே பரிமாறினார்.
“நானும் ஒரு பெண்ணுக்கு அம்மா அத்தை.. ஒரு கவளம் உள்ள இறங்க முடியாம உங்க மனசு அத்தனை பாடுபடும் போது எனக்கு மட்டும் எப்படி சாப்பாடு இறங்கும் சொல்லுங்க..?” என்று கேட்க ஆனந்தகண்ணீரோடு சுஜியை அணைத்து உச்சியில் முத்தமிட்டவரின் மனதில் அப்படி ஒரு பரவசம்.