‘எத்தனை சாதாரணமாக சொல்லிவிட்டான்..?’ என்று இன்னுமே குறையாத படபடப்புடன் நின்றிருந்த தளிரின் பார்வை உதய்யை தவிர்க்க வேண்டி தோட்டத்தில் நிலைகொள்ள அவனோ இன்னும் வசதியாக சுவரோரம் சாய்ந்து அவளில் லயித்து கிடந்தான்.
இத்தனை நாள்கள் வெறும் காட்டன் புடவையில் வளம் வந்தவளின் மொத்த அழகையும் அவள் உடுத்தியிருந்த பட்டுசேலை எடுத்து காட்டிக்கொண்டு இருப்பதாகவே அவனுக்கு தோன்றியது. நிச்சயதார்த்தம் அவசரமாக முடிந்துவிட அதன் பின்பான சந்திப்புகளில் பெரிதாக அவள் அழகை ரசிக்க நேரமில்லாது கிடந்தவனுக்கு இப்போது வாய்ப்பு வசதியாக கிடக்க அவன் விழிகள் மொத்தமாக அவளில் மையல் கொண்டுவிட்டது.
கூந்தல் அலைபாய, கழுத்திலும் காதிலும் வழக்கத்திற்கு மாறாக கிடந்த வைரநகைகள், கைகளை நிறைத்திருந்த கண்ணாடி வளையல்கள், மெல்லிய உதட்டுசாயத்தோடு கூடிய அளவான ஒப்பனை என்று மணமகளுக்கே உரித்தான சோபையோடு நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு நொடிக்கு நொடி தித்திப்பு கூடியது.
‘க்க்கும்’ என்று குரலை செருமியவன் “எவ்ளோ நேரம்டி அந்த மரத்தையே முறைச்சு பார்ப்ப..? பார்த்தது வரை போதும் சரி இதுக்காவது என்ன அர்த்தம்னு சொல்லு..?” ஒற்றையாய் விடபட்டிருந்த அவள் புடவை முந்தானையை பிடித்து லேசாக இழுத்து உதய் ஆராய்ந்திட அவன் செவியில் நிவி இப்புடவை குறித்து கொடுத்த விளக்கம் சுழன்றது.
அவன் இழுப்பில் திரும்பியவள் உதய்யின் கையிலிருந்த சேலையை பிடித்துகொண்டு, “ஏன் இது சாரீன்னு உங்களுக்கு தெரியாதா..?” என்றாள்.
“எனக்கு தெரியும்! ஆனா இதுக்கும் உனக்கு அர்த்தம் தெரியாது அப்படிதானே..?” என்றவனின் பார்வையே அவளை தழுவியிருந்த சேலையாக தானே உருமாறும் பேராவலை எடுத்து சொல்லியதில் தளிரின் முகத்தில் உருவமில்லா உணர்வுகளின் படையெடுப்பு..
“சொல்லு தளிர்” என்றவனின் பார்வை அவளை பருகிகொண்டிருக்க அவன் உரிமையை தடுக்க முடியாதவள் மீண்டும் பார்வையை திருப்பி விரல்களை கூந்தலில் நுழைத்துக்கொண்டாள்.
மருதாணியிட்ட தளிர் விரல்கள் அவள் கூந்தலுக்குள் நுழைந்து வெளிவரும் இடைவெளிகளில் ஒருவித லயத்தோடு அவள் வளையல்கள் இசை எழுப்ப மெளனமாக அதை ரசித்திருந்தவன் மெல்ல அவள் பின்னோடு நெருங்கி கூந்தலை ஒதுக்கி, “நீ அழகின்னு தெரியும் ஆனா இவ்ளோ அழகா..?” என்ற உதய்யின் அனல் மூச்சு தளிரை சுட்டு பொசுக்கியது.
தளிர் அவன்புறம் திரும்பாமல் இருக்க அவன் கரமோ மீண்டும் கூந்தலில் நுழைய முயன்ற அவள் வலக்கரத்தை தடுத்துபிடித்திட அவனிட்ட வளையல்கள் மீது அவன் அதரங்கள் அழுத்தமாக முத்தமிட்டது.
“இதை நான் எதிர்பார்க்கவே இல்லை தெரியுமா..? ஐ ஆம் வெரி மச் ஸர்ப்ரைஸ்ட்” என்றிட இனியும் தாமதிப்பது ஆபத்து என்பதால் “உதய் நேரமாச்சு எல்லாரும் நம்மை தேடுவாங்க வாங்க போகலாம்” என்று அவன்புறம் திரும்பியவள் உதய்யின் பார்வையில் ஸ்தம்பித்து போனாள்.
“தேடிட்டு போகட்டும் விடுடி” என்றவனின் கரம் சிவந்திருந்த அவள் கன்னத்தை மென்மையாய் வருடியது. அவனை தடுக்க முடியாது நின்றவளுக்கு அவனிடமிருந்து தப்பிக்கும் மார்க்கமும் புரியாது போக இறுதியில் உதய்யிடமிருந்து தப்பிக்க அவனையே சரணாகதி அடைவது போல தளிரின் வலக்கரம் இடக்கரத்தின் மணிக்கட்டை அழுத்திபிடித்தது.
அவள் உணர்வுகளை அவதானித்திருந்த உதய் விழிகளில் அவள் கரம் விழவும், “மூச்சு முட்டுதுடி! இவ்ளோ இறுக்கமா பிடிக்காத, ஐ ஆம் லிட்ரலி ஸஃப்போகேட்டிங்” என்றான் கிறங்கிய குரலில்.
“வாட்..? என்ன சொல்றீங்க நான் எங்க உங்களை பிடிச்சேன்..?” என்றதும் தான் தாமதம் சட்டென அவள் வலக்கரத்தை உதய் உயர்த்த அதன் மணிக்கட்டை பிடித்திருந்த இடக்கரமும் சேர்ந்தே உயர்ந்தது.
“ஏற்கனவே வளையலை போட்டு எனக்கு காத்து கிடைக்காம பண்ணிட்ட இப்போ அதுக்கு மேல இப்படி இறுக்கி பிடிச்சா மூச்சு முட்டாதா..?” என்று கேட்கவும் சட்டென சிரித்துவிட்ட தளிர், “எங்கிருந்து இப்படி பேச கத்துக்கிட்டீங்க..?” என்றாள்.
“ஏன்டி இதுக்கெல்லாம் கிளாஸ்க்கு போவாங்களா..? உன்னை பார்த்ததும் அதுவா தோணுது நான் என்ன செய்ய..? ஒரு காம்ப்ளிமென்ட் கொடுத்தா அதை ரசிக்காம சிரிக்கவா செய்யற நீ..?” என்று அவள் காதை மெல்லமாக பிடித்திழுத்தவனும் அவள் சிரிப்பில் இணைந்திருந்தான்.
“இது காம்ப்ளிமென்ட்டா..?” என்றவளுக்கு இன்னுமே சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
“வேற என்ன..?”
“ஏன் உங்களுக்கு தெரியாதா..?”
“தெரியல நீயே சொல்லு..!”
“இதுக்கு பேர் flirt”
“அப்படியா..? இருந்துட்டு போகட்டுமே என்ன பேரா இருந்தா என்ன..? நான் கொஞ்சம் இங்க்லீஷ்ல வீக்! தெரியாம இங்க்லீஷ் டீச்சரை கல்யாணம் செய்ய முடிவு பண்ணிட்டேன்.. மேடம் பெரிய மனசு பண்ணி கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் சிலபஸ் கையில எடுத்த மாதிரி சீக்கிரமே ரொமான்ஸ் சிலபசையும் எடுத்து ஃப்ளேர்ட்டிங் மட்டுமில்லாம கிஸ்ஸிங், ஸ்மூச்சிங், ஹக்..” என்று உதய் தலைப்புகளை அடுக்கிகொண்டே போக, தளிரின் விரல்கள் அவசரமாக அவன் அதரங்களை அழுத்தமாக மூடிவிட்டது.
“என்ன..?” என்று சிரிப்போடு அவள் விரல்களை பிடிக்க..,
“இதென்ன பேச்சு..? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அது நியாபகமிருக்கட்டும்” என்று ஒற்றை விரலால் அவனை தள்ளி நிறுத்தினாலும் முகத்தின் செம்மையை மறைக்க தளிர் போராடியதன் மூலம் உதயாதித்தனை மொத்தமாக பேதலிக்க செய்திருந்தாள்.
“நாளைக்கு கல்யாணம் அது உனக்கு நியாபகம் இருக்கட்டும், இந்த மெயின் எக்ஸாம்க்கு முன்னாடி மாடல் எக்ஸாம் எழுதறது இல்லையா அப்படிதான் இதுவும்..” என்றான் புன்னகையோடு.
“அதெல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு.. உங்களுக்கு தான் எங்க இருக்கோம் அக்கம்பக்கம் யார் இருக்கான்னுகூட நியாபகம் இல்லாம போகுது”
“இங்க யாருடி இருக்கா..? நான் தான் டோர் லாக் பண்ணிட்டேனே..?”
“டோர் லாக் பண்ணினீங்களா..? யாரை கேட்டு செய்தீங்க அண்ணி வருவாங்க” என்று அவள் பதறிக்கொண்டு உள்ளே செல்ல,
“ஹே நில்லு யாரும் வரமாட்டாங்க ராகவ்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம்.., நீ ஏதோ சொல்லிட்டு இருந்தியே என்ன..?” என்று கேட்கவும் வளையலிடும் போது அவன் நடந்து கொண்ட விதத்தை சொல்லியவள் “உங்களுக்கு சுத்தி யார் இருக்கானு தெரியாதா..? கீழ அத்தனை பேர் எதிர்ல கிஸ் பண்ண பார்த்தீங்க..?”
“இல்லடி நிஜமா எனக்கு நீ மட்டும் தான் தெரிஞ்ச.. இத்தனை நாள் ஏதேதோ யோசனையில இருந்தவனுக்கு கை முழுக்க என் பேரை பார்க்கவும் ஒன்னும் புரியல.. அது ஒரு தனி ஃபீல்.. உனக்கு சொன்னா புரியாது..”
“ஆனா நான் அவ்ளோதூரம் சொல்லியும் எதுக்கு எல்லார் எதிர்ல காலை பிடிச்சீங்க..? அத்தை மாமா எல்லாம் என்ன நினைச்சிருப்பாங்க..”
“ஏன்டி காலை பிடிச்சா என்ன..? நிச்சயதார்த்தம் முடிஞ்சாலே பாதி பொண்டாட்டின்னு சொல்லுவாங்க நாளைக்கு இந்நேரம் என் தாலியோட பக்கத்துல இருக்கபோற உன்னோட காலை மட்டுமில்ல எங்கயும் பிடிக்கிற உரிமை எனக்கு இருக்கு..” என்றவனின் கரம் அவளிடை வளைத்தது.
***********************
அதை சற்றும் எதிர்பாராதவள் “என்னதிது..? அதுதான் இன்னும் ஒருநாள் இருக்கே..? ப்ளீஸ் கையை எடுங்க..” என்று ஆர்பரித்த கூச்சத்தோடு அவன் கரத்தை அகற்ற முற்பட்டாள்.
அவனோ உடும்பு பிடியாய் பிடித்துக்கொண்டு, “உனக்கென்னடி ஈசியா ஒரு நாள்ன்னு சொல்லிட்ட..? ஆனா இன்னும் முப்பத்து இரண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கு..” என்று அவன் பெருமூச்செறிய..,
“நான் சொன்னது நம்மோட சாந்தி முகூர்த்தத்துக்கு..” என்று உதய் கண்சிமிட்ட சட்டென பூத்த நாணப்பூக்கள் அவள் முகமெங்கும் மலர்ந்து வாசம் வீச அதை முகர்ந்துகொண்டே, “இன்னும் சரியா சொல்லணும்ன்னா ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நிமிஷம் , ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் வினாடிகளுக்கும் மேலங்கிறது சாதாரணம் இல்ல தளிர்.. நிஜமாவே எப்படி சமாளிப்பேன்னு இருக்கு..” என்று தளிரின் செவிமடலோடு அவனது தகிக்கும் அதரங்கள் உறவாடியது.
“உதய் ப்ளீஸ் நாம கீழ போகலாம் இனி இங்க இருக்க வேண்டாம்” என்று திரும்பியவள் இமைக்கும் நொடியில் உதயாதித்தனின் இறுகிய அணைப்பில் அடங்கிட “ஜஸ்ட் எ ஹக்! அதுக்கு மேல எதுவுமில்ல பயப்படாத..” என்றவனின் ஏக்கங்கள் கனன்று அவள் கழுத்து வளைவை பொசுக்கி கொண்டிருந்தது.
நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்ததே தவிர உதயனின் அணைப்பு முடிவில்லாது போகவும், “உதய் ப்ளீஸ் எல்லாரும் வைட் பண்ணிட்டு இருப்பாங்க நாம கீழ போகலாம் வாங்க” என்று திணறலோடு சொல்லி முடிக்க அவனிடம் மாற்றமில்லை.
“யூ க்நொவ் லிட்ரலி ஐ’ம் ஸஃப்பகேட்டிங்..” என்று இருவருக்கிடையில் சிக்கியிருந்த இளந்தளிரின் மருதாணியிட்ட தளிர் விரல்களை உயர்த்தி அழுத்தமாக தன் அதரங்களை புதைத்த உதய் “இங்க பிடிச்சுக்கோ அப்போதான் என்னால மூச்சு விடமுடியும்” என்று அவள் கைகளை தன் கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டவன் மீண்டும் சுகமாக தன் அணைப்பை இறுகிக்கொண்டே செல்ல அதன் விளைவாய் இறுதியில் தளிருக்கு தான் மூச்சு முட்டிபோனது.
இக்காட்சியை கீழே தோட்டத்திலிருந்து பார்த்திருந்த ராஜி முகச்சுளிப்போடு தங்கைக்கு அழைத்திட, “சொல்லுக்கா..” என்று பேத்தி குறித்த நகைச்சுவையில் எழுந்த சிரிப்போடு கேட்டார் ஜெகா.
“ஏய் ஜெகா இங்க என்ன கூத்து நடக்குதுன்னு தெரியாம நீ சிரிச்சுட்டு இருக்க..? ச்சை நல்ல குடும்பத்து பொண்ணு எவளாவது இப்படி செய்வாளா..? நான்தான் சொன்னேனே இவ சரியான வித்தைக்காரின்னு! முதல்ல இங்க வந்து பாருடி இல்ல உன் குடும்பமானம் சிரிப்பா சிரிச்சு போகும்” என்றவர் ஜெகா வரும்வரை கூட காத்திருக்காமல் இருவரும் கட்டிபிடித்து கொண்டிருக்கும் காட்சியை புகைப்படம் எடுத்தார்.
“ஏன்க்கா என்னாச்சு எங்க இருக்க நீ..?” என்ற ஜெகா அழைப்பை துண்டித்து வெளியில் சென்றார்.
“உதய் எனக்கு மூச்சு விடமுடியலை” என்ற பின்னரே அவளிடம் இருந்து பிரிந்தவன் “யூ ஆர் லிட்ரலி ட்ரைவிங் மீ கிரேஸீ!” என்று புன்னகையோடு அவளை பார்த்தவண்ணம் தலையை கோதியவாறே உதய் மெல்ல பின்னே நகர பூந்தொட்டியில் கால் இடறி விழ போனான்.
“உதய் பார்த்து” என்று பாய்ந்து சென்ற தளிர் சட்டென உதய்யின் சட்டையை பிடித்திழுத்து நிறுத்திட அவனும் வாகாக அவளை ஒட்டிக்கொண்டு, “ப்ளீஸ் தளிர் டோன்ட் சே நோ..” என்றவன் கோரிக்கையை என்னவென்று உணர்ந்து தளிர் அதை அங்கிகரிக்கும் முன்னமே அவள் இதழ்களை அழுத்தமாக சேர்ந்து முத்தமிட தொடங்கிவிட்டான்.
கீழே இருந்த ராஜியின் விழிகளில் தவறாமல் இக்காட்சி விழுந்தது.
உதய் வசம் சென்ற இதழ்களின் சுதந்திரம் முழுதாக பறிக்க பட்டுவிட தளிர் மறுப்பதற்கும் வாய்ப்பின்றி போனது. நிமிடத்திற்கும் மேலாக நீடித்த முத்தத்தை ஒருவழியாக முடிவிற்கு கொண்டு வந்தவன், “ஐ.. ஐ ஜஸ்ட் லாஸ்ட் மைசெல்ஃப்! ப்ளீஸ் இங்கிருந்து போயிடு நான் அப்புறம் வரேன்..” என்றவாறே முகத்தை மூடி பால்கனியின் கைபிடியில் அமர்ந்துவிட்டான்.
தங்கையிடம் பேசி முடித்துவிட்டு ‘ச்சை ஃபோன் பண்ணி வரவச்சதே ஆதியை வளைச்சு போடன்னு இப்பதானே தெரியுது.. நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு அப்படி என்ன அவசரமோ..?’ என்று சொல்லிக்கொண்ட ராஜியின் விழிகளில் தளிர் உதய்யின் சட்டையை பிடித்திழுத்து முத்தமிடுவது விழவும் அதிர்ந்து போனவர், “ச்சீச்சீய் கருமம்.. இப்படியுமா ஒரு பொம்பளை வெட்கம் கெட்டு அலைவா..?” என்று தலையிலடித்து கொண்டு தங்கையை தேடி செல்ல அவசரமாக வெளியில் வந்த ஜெகதீஸ்வரி,
“என்னக்கா ஆச்சு எதுக்கு அப்படி சொன்ன..?” என்று கேட்கவும் அவள் கையை பிடித்து, “வாடி வந்து நீயே அந்த கருமத்தை பாரு” என்றவர் அங்கே செல்ல அதற்குள் உதய்யும் தளிரும் அறையினுள் சென்றிருந்தனர். “அக்கா என்னக்கா..?” என்று பால்கனியை பார்த்திருந்த ராஜியை கேட்க நடந்ததை ஜெகாவிடம் சொல்லி புகைப்படத்தையும் காட்டினார்.
“நான் சொன்னா யார் நம்பறா அதுதான் போட்டோ எடுத்தேன்.. பார்த்தியா உன் வீட்டுக்கு வரப்போற மகராசியோட லட்சணத்தை..! இப்படி பட்டபகல்ல வெட்டவெளியில கூச்சமே இல்லாம் நிற்கிறதை அக்கம் பக்கம் வீடுங்க இருக்கு அடுத்தவங்க வீட்டுக்கு வந்து இப்படி சல்லாபம் பண்றது கொஞ்சமும் சரியில்ல ஜெகா.. இதையெல்லாம் முதல்லயே தட்டி வைக்கணும் இல்ல நம்ம மானம் போகும்…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்தார் அம்பலவாணன்.
“என்ன பண்ற ஈஸ்வரி..” என்று கேட்டாலும் பார்வை ராஜி மீதிருந்தது.
“சும்மா அக்காகூட பேசிட்டு இருந்தேன்ங்க..” என்ற மனைவியை அவரும் வந்தது முதலே கவனித்து கொண்டு தானே இருக்கிறார்.. இங்கு வைத்து எதுவும் பேச வேண்டாம் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்த பிறகு பேசிக்கொள்ளாம் என்று முடிவு செய்துகொண்டார்.
“அதுக்கு கூட உனக்கு நேரமிருக்கா..? நீங்க இரண்டு பேரும் முதல்ல கிளம்பி போய் மண்டபத்துக்கு தேவையான பொருளெல்லாம் சரி பார்த்துடுங்க எதுவும் விட்டு போககூடாது”
“நீங்க வரலையா..?”
“இல்ல நான் தளிரை வீட்ல விட்டுட்டு மண்டபத்துக்கு போயிட்டு வரேன் நீங்க கிளம்புங்க” என்றவர் வீட்டினுள் செல்ல ஒருவர் பின் ஒருவராக தளிரும் உதய்யும் கீழே வந்திருந்தனர்.
இருவரையும் ஒன்றாக அமரவைத்து சுஜி பரிமாறி முடிக்கவும் மீண்டும் அனைவரிடமும் ஆசி பெற்ற தம்பதி அம்பலவாணனுடன் இளந்தளிரின் வீட்டிற்கு கிளம்பினர்.
*******************************
“இந்த கல்யாணம் நடக்காது” என்று சபையில் நிறைந்திருப்போரிடம் தீர்க்கமான குரலில் சொல்லிய உதய் இறுகிய முகத்தோடு கழுத்திலிருந்த மாலையை கழற்றிட அதை கண்ட சீதாலக்ஷ்மி இத்தனை நேரம் கொண்டிருந்த நூலிழை நம்பிக்கையும் அறுபட்டதில் மொத்தமாய் உருக்குலைந்து போனார். உதய்யின் வார்த்தையில் திகைத்த தென்றல் இடிந்து போய் அமர்ந்த சீதாவிடம் கண்ணீரோடு செல்ல மறுபுறம் இருந்த சுஜியும், நிவியும் உதய்யின் வார்த்தைகளில் உச்சகட்ட அதிர்வோடு அவனை பார்த்தனர்.
திகைப்போடு மகனை பார்த்த அம்பலவாணன் மறுநொடி தளிரை பார்க்க சர்வலங்காரத்தோடு இருந்தவளோ முழுதான உறை நிலைக்கு சென்றிருந்தாள். சிறு அசைவின்றி நின்றிருந்த தளிரின் விழிகள் உதய்யை பார்த்தவண்ணம் இமை சிமிட்டவும் மறந்திருக்க அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் மட்டுமே அவள் உயிர்ப்போடிருப்பதை உறுதிபடுத்தியது.
மறுபக்கம் ராஜியின் முகம் மகிழ்ச்சியில் கூத்தாட அவளருகே இருந்த ஜெகாவும் நிம்மதி மூச்செடுத்தவராக மகனை பார்த்தார்.
திருமணம் நடைபெறாது என்று உதய் சொன்ன அடுத்த சில நிமிடங்களுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கும் மேலாக நிறைந்திருந்த அப்பெரிய திருமண மண்டபத்தில் அப்படியொரு நிசப்தம் குடிகொள்ள அதை உடைத்தது வைஷுவின் அழுகுரல்.