மண்வாசம் : 9
வேட்டைக்காரன் புதூர் அரசுப் பள்ளி!
வகுப்பறைக்குள் இங்கும் அங்குமாய் நடைபயின்று கொண்டிருந்தாள் அருந்தமிழ் தேவி.
நேற்றைய பொழுதில் இருந்து நன்மாறனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே அவள் சிந்தையில். ஒரே ஒரு மன்னிப்பு! அதை அவனிடம் கேட்டுவிட்டால் அவள் அகம் கொஞ்சம் அமைதியடைய வாய்ப்புள்ளது. அதற்காக அவன் வரவை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறாள்.
அவளை மேலும் காக்க வைக்காது பள்ளிக்கூடத்தின் வாயிலில் வந்து நின்றது அவனது ஜீப்.
அருந்தமிழ் தன் பார்வையை அவன் புறம் வைக்க, சிறார்களை இறக்கி விட்டவன் அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்படியே திரும்பிச் செல்ல,
“மிஸ்டர். கட்டவண்டி” என்று அழைத்தபடி தாமதிக்காது வாயிலுக்கு விரைந்திருந்தாள்.
“ஏன் இவ்வளவு பதட்டமா வர்றீங்க டீச்சர்?” என்று வண்டியில் இருந்து இறங்கி அவளருகில் வந்து நின்றான்.
“நீங்க யாருன்னு தெரியாம நான் தான் தப்பா நெனச்சுட்டேன், நீங்களாவது சொல்லி இருக்கலாமில்லங்க” என லேசான மூச்சிரைப்புடன் அவனைப் பார்க்க,
“ஒருவேளை நான் சொல்லியிருந்தா நீங்க இவ்வளவு இயல்பா என்ர கிட்ட பேசியிருக்கமாட்டீங்க டீச்சர்” என்றான் புன்னகையுடன்.
அருந்தமிழ் அவனையே தான் பார்த்திருந்தாள். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
நான் ஏன் உன்னோடு இயல்பாய் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறாய் என்று நினைத்தால்? நினைப்பதோடு அல்லாமல் அவனிடம் அதைக் கேட்டும்விட்டால்?
நான் உன்னை விரும்புகிறேன். இன்றல்ல, கடந்த சில வருடங்களாகவே. என்னையும் என் மனதையும் நீ வென்றது போல் உன் மனதை வென்று, உன்னையும் வெல்லும் பொன் நாளிற்காக பல நாளாய் காத்திருக்கிறேன் என்றா கூறமுடியும்?
‘மாறா! நிக்காம கெளம்பிக்கோ. டீச்சரம்மா உன்னையவே குறுகுறுன்னு பாக்குறாங்க’ என்று மூளை கட்டளையிட,
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குங் டீச்சர். அப்பறம் பாக்கலாம்” என்று பிரியா விடைகொடுத்து, அவளிடமிருந்து பார்வையை பிரித்தெடுத்து தன் வண்டியில் ஏறிக்கொண்டான். அவன் கிளம்பும் நேரத்தில்,
“உங்க பேரு…….?” என்றிருந்தாள்.
அதில் அவள் புறம் திரும்பியவன்,
“நீங்க எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பிடுங்க டீச்சர்” என்றுவிட்டு கிளம்பிக் கொண்டான். நாம் எப்படிக் கூப்பிடுவோம் என்று யோசித்தவளுக்கு ‘கட்டவண்டி’ என நினைவில் வர, இதழ்களில் ஒரு கீற்றுப் புன்னகை உதயமானது.
அதனோடு அவள் வகுப்பறைக்குச் செல்லத் திரும்பிய வேளையில்,
“டீச்சர்! எங்கண்ணன் பேரு…” என்று இழுத்துவிட்டு, நான் தான் சொல்லுவேன் என்று அவர்களுக்குள் சிறு சண்டை போட்டு, அவளை காக்க வைத்துவிட்டு இறுதியில் பெரிய மனது செய்து,
“நன்மாறன்” என்றனர் மூன்று முத்துக்களும்.
‘நன்…மாறன்’ என்று மனதில் சொல்லிப்பார்த்தவள், ‘அழகான தமிழ் பெயர்’ என்று நினைத்துவிட்டு தன்னையே பார்க்கும் தன் மாணாக்கரிடம்,
“பாடத்துல கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்லிறாதீங்கடா, கேட்காத கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க. போங்கடா உள்ள” என்று குரல் கொடுக்க, தோல்பையைத் தூக்கிக்கொண்டு வகுப்பறைக்குள் ஓட்டமெடுத்தனர்.
சிங்காநல்லூரில் ஒலிக்கப்பட்ட தம்பட்ட இசைக்கு ஊர் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடினர்.
முக்கிய நிகழ்வுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க, தம்பட்டம் அடித்தபடி தெருத்தெருவாக ஆட்கள் தகவல் தெரிவித்துச் செல்வது வழக்கம்.
இதனால் சகலமானோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா, நிகழும் மங்களகரமான விகாரி வருடம் மாசி மாதம் இருபதாம் நாள் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கி, குண்டம் மற்றும் தேரோட்டத்துடன் சனிக்கிழமை முடிய நடைபெற உள்ளது. அதுசமயம் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு அம்மனின் அருள்பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஆட்கள் ஒவ்வொரு தெருவாகச் சென்று நோன்பு சாட்டுதலை மக்களுக்கு தெரிவித்துச் சென்றனர்.
பதினைந்து நாள் சாட்டுதல் எனப் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, எட்டாம் நாளில் கொடியேற்றம் துவங்கி, பதினைந்தாம் நாளில் திருவிழா என்று குறிக்கப்பட்டது.
தெய்வங்கள் உறையும் மாடங்கள் தோறும் செப்பம் செய்து புதிப்பிக்கப்படுவது, தெருக்களை ஒழுங்கு செய்வது, பொது இடங்களைத் தூய்மைப் படுத்துவது, ஊருணி தெப்பக்குளம் போன்றவற்றை மராமரத்து செய்வது என அனைத்தையும் மேற்கொள்ளத்தான் இடைப்பட்ட பதினைந்து நாட்கள்.
மேல்மாடியின் பால்கனியில் இருந்தபடி நோன்பு சாட்டுதலை கேட்டுக் கொண்டிருந்தாள் அரசி. திருவிழா என்றதுமே முதல் நாள் அடியளந்து கும்பிடுவது தான் அவளுக்கு நினைவு வந்தது.
அதிகாலையில் எழுந்து ஊர் கிணற்றில் தண்ணீர் இறைத்து, தலை முதல் கால் வரையில் உடலை நனைத்து, இரு கையிலும் வேப்பிலைக் கொத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஈரம் சொட்டச் சொட்ட ஒவ்வொரு அடிக்கும் காலால் அளந்தபடி கோவிலை சுற்றிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது.
ஒவ்வொரு வருடமும் அரசியை அடியளந்து கும்பிட அழைத்துச் செல்வதற்குள் நாயகியின் பாடு திண்டாட்டமாய் தான் இருக்கும்.
அவளுக்கு பதினாறு வயதிருக்கும் போது நடந்த திருவிழாவில் அரும்போடு சேர்ந்து பிரகாரத்தைச் சுற்றியது நினைவில் வந்து போக, இதழ்கள் அழகாய் விரிந்து மலர்ந்தது.
“நம்மூரு பொம்பளைக ஒட்டுமொத்த கெணத்தையும் காலி பண்ணாம போக மாட்டாங்லோட்டிருக்குது. அட ஓரியாடாம வரிசையா வாங்கம்மா. எல்லாத்து மேலையும் தண்ணி ஊத்துறோம்” என்று புலம்பியபடி வருவோர் அனைவருக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுத்தனர் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த ஆண்கள்.
ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தை முதல் வயதில் முதிர்ந்தோர் வரை அனைவரும் அடியளந்து கொடுக்க வருவதுண்டு. சிலர் அந்நேரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதுமுண்டு.
தூக்கக் கலக்கத்தில் இருந்த அரசியின் மீது தண்ணீரை ஊற்றியதும் குளிரில் தூக்கி வாரிப்போட்டது அவள் உடல். இதழ்கள் இரண்டும் தந்தியடிக்க நாயகியோடு கோவில் வாசலில் வந்து நின்றாள். அவளருகில் வேப்பிலைக் கொத்தோடு நடுங்கிக்கொண்டு நின்றிருந்தாள் அரும்பு.
“அட அரும்பு நீயும் வந்துட்டையா?”
“பின்ன, பரிச்சையில பாசாகோணுமே” என்றதில் புன்னகைத்து
“ஓம் சக்தி” என அரசி சொல்ல, அவளைத் தொடர்ந்து
“பராசக்தி” என்றாள் அரும்பு.
முத்துலட்சுமி, மரகதவள்ளி, அருந்தமிழ் தேவி எல்லாம் ரங்கநாயகியோடு அடியளந்து கும்பிடத் துவங்கியிருக்க, அரசியும் அரும்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விழச்சென்ற வேளையில் அவர்கள் கண்களில் பட்டனர் அவ்விருவர்.
காவி வேட்டியும் வெள்ளை பனியனுமாய் நின்றிருந்த பாண்டியர்கள்.
‘இவங்க எங்க இங்க?’ என்பது தான் பெண்கள் இருவரது கேள்வியுமாய் இருந்தது.
“வேண்டுதல் பண்ண வந்த எடத்துல என்ன வேடிக்கை வேண்டிக் கெடக்கு. வாங்க புள்ளைகளா சீக்கிரம்” என்று நாயகி குரல் கொடுக்கவும், இருவரும் பின் வரிசையில் விழுந்து எழ ஆரம்பித்தனர்.
சில நிமிடங்களில் இருவருக்கும் கால்கள் நகர மறுக்க, மூச்சிரைக்கத் தள்ளாடியபடி ஒவ்வொரு சந்நிதி முன்பும் விழுந்து எழுந்தனர்.
“ஏய் எலி புலி அக்கட்டால போங்க” என்றுவிட்டு குலசேகரன் அவர்களைத் தாண்டிச் செல்ல, விக்ரமன் அவர்களை ஒரு பார்வை பார்த்துச் செல்ல,
“நாங்க பத்தாவதுல பாஸ் ஆகோனும்னு வந்து கோவில் வாசல்ல விழுறோம் சரி, நீங்க ரெண்டு பேரும் எதுக்கு விழுறீங்க? ரேக்ளாவுல ஜெயிக்கோணும்னா” என்று அவர்களிடம் கேட்டாள் அரசி.
“இல்ல எங்களுக்கு நல்ல பொண்டாட்டி அமையோணும்னு” என்றான் குலசேகரன் விளையாட்டாய். அதில் கிளுக் என்று சிரித்த அரும்பு,
“நம்ம பொன்னுச்சாமி அண்ணன் கடையில நல்ல போண்டா டீ கிடைக்கோணும்னு வேண்டுற ஆளுக எல்லாம் நல்ல பொண்டாட்டி கிடைக்கோணும்னு வேண்டுறாங்கலாம்” என்றாள்.
‘சிக்கல் எல்லாந் தீரோணும்னு கோவிலுக்கு வந்தா இந்த ரெண்டு சிக்கலை கொண்டாந்து என்ர வழியில விடுறையே கடவுளே’ என நினைத்த குலசேகரன்,
“வந்த வேலைய மட்டும் பாக்கோணும். இல்ல தெய்வ குத்தம் ஆகிப்போடும். பத்தாவதுல புட்டுக்கும்டி எலி, பயபக்தியோட சாமி கும்புட்டுட்டு கெளம்பு” என்று சொல்லி அவர்களை ஓவர் டேக் எடுத்துச் சென்றான்.
“நல்ல புத்திய கொடுக்கோணும்னு வேண்டிக்கோ” என விக்ரமன் அரசியைப் பார்த்து சொல்ல,
“யாரு உங்களுக்கா?” என்றதில் தலையில் அடித்துக்கொண்டு முன்னேறிச் சென்றுவிட்டான்.
“ஆம்பள பசங்க அவனுகளே சட்டுன்னு அடியளந்து கும்பிட்டுட்டு போறானுக. இவளுக என்னமோ நீட்டி நெளிக்குறாளுக. வயசுப் புள்ளைகன்னு தான் பேரு ஆனா வீட்டுல ஒரு துரும்பையும் அசைக்குறது இல்ல. இப்போ இடுப்பு வளையுதா பாரு? மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேண்டியதுதேன்” என நாயகி புலம்ப,
“அப்பத்தோவ்! சாமிய நெனச்சு முன்னாடி மட்டும் பாத்து விழுங்க. அதை விட்டுப்புட்டு பின்னால நாங்க விழுறமா இல்லையானு திரும்பி திரும்பி பார்த்துட்டு வந்தா அதுக்கு பேரு பக்தியா” என்றதில் அவளை முறைத்துவிட்டு அருந்தமிழோடு சென்றார் நாயகி.
கோவிலைச் சுற்றி வந்ததும் கையிலிருந்த வேப்பிலையை கொடிமரத்தின் முன்பு குவித்துப் போட்டுவிட்டு வரிசையில் நகர்ந்து சென்றனர். ஐயர் மூன்று முறை முகத்தில் நீரை வாரி இறைத்தபின் அம்மனை வணங்கி வீடு திரும்பினர்.
“அரசி கண்ணு! வேடிக்கை பாத்தது போதும் கீழ வா” என்ற நாயகியின் குரலில் கடந்தகால நினைவுகளில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தவள் மெல்ல படியிறங்கி கீழே வந்து அவரிடம் சென்று நிற்க,
“தலைக்கு மேல வேலை கெடக்குது. பலகாரம் செய்யோணும் காப்பு கட்டுறதுக்குள்ள வீட்டை சுத்தம் பண்ணி வெள்ளை அடிக்கோணும்” என பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்தார் நாயகி.
“அதுக்கு இன்னும் பதினஞ்சு நாள் கெடக்குதுங் ஆத்தா. இப்போவே என்ன அவசரம்ங்?” என அரசி கேட்க,
“நாள் சீக்கிரம் ஓடிப் போயிரும் கண்ணு. இப்பவே மொல்ல வேலையை ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்” என்றவர் மங்கம்மாளை அழைத்து, ஒட்டறை குச்சியை அவர் கையில் திணித்து அரண்மனையை, இல்லை இல்லை.. அவர்களது வீட்டை சுத்தம் செய்யச் சொன்னார்.
விழிபிதுங்கிப் போன மங்கம்மா தன்னை நிதானப் படுத்திக்கொண்டு ஒவ்வொரு அறைக்காய் ஒட்டறை குச்சியோடு சென்றார். அரசியும் அவள் பங்கிற்கு உதவிகள் புரிய, காலையில் ஆரம்பித்த வேலையானது மாலை அருந்தமிழ் திரும்பி வரும் வரையிலுமே தொடர்ந்தது. இதற்கும் இரண்டே அறைகளைத் தான் சுத்தம் செய்திருந்தனர்.
“வெளிய போட்டிருக்குற மட்டையைக் கலச்சு ஓர்சலா ஒரு கோட்டுல இருந்து அடுக்கு மாடசாமி” என்று நாயகி கட்டளையிட,
“செரிங் பெரியாத்தோவ்” என்று குரல் கொடுத்தபடி வேலையை ஆரம்பித்தார்.
அரசி தன் அக்காவிற்கு தேநீர் எடுத்து வந்து கொடுக்க,
“பரவால்லையே என்ர தங்கச்சி அதுக்குள்ள டீ போடவெல்லாம் கத்துகிட்டாளே” என்று கேலி செய்து அரசியிடம் முறைப்பை பெற்றுகொண்டாள் அருந்தமிழ்.
“அரசி கண்ணு! அந்த பித்தளை அண்டாவை எடுத்து வெய்க்க சொன்னனே வெச்சியா?” என்று நாயகி கேட்க,
“ஆத்தோவ்! இதுக்கு மேல என்ரனால முடியாது. எதுவா இருந்தாலும் மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம். இனி கம்ப்ளீட் ரெஸ்ட் எனக்கு” என்று நாயகியிடம் தெரிவித்துவிட்டு அவளறைக்குச் சென்றாள்.
மேலே வந்த அரசி சில நிமிடங்களில் குளிர்ந்த நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்து தலை துவட்டிக் கொண்டிருக்க, வெளியிருந்து வந்த அருந்தமிழின் அலறலில் வேகமாய் ஜென்னலின் வழியே கீழே எட்டிப் பார்த்தாள்.
“நம்ம பெரியய்யா ஊட்டுல பாம்பு புகுந்திருச்சாமா வெரசலா ஓடியாங்கடா” என ஒருவர் சத்தமிடுவது கேட்டதும் அவள் கண்கள் பெரிதாய் விரிந்தது.
“எங்க பாம்பு.. எங்க பாம்பு.. எங்காத்தா பாம்பு?” என்று ஆளாளுக்கு கையில் கம்போடு வந்து குரல் கொடுத்தபடி நாயகியைப் பார்த்திருக்க,
“அட இங்க நின்னு என்ர மூஞ்சிய ஏன்டா பாத்துக்கிட்டு இருக்குறீங்க? உள்ளார போய் தேடி பாத்து பாம்ப அடிங்க” என்று பதிலுக்கு குரல் கொடுத்தார் அவர்.
அதற்குள் திருவிழா வேலைகள் தொடர்பாக ஆறுச்சாமியிடம் கலந்தாலோசிக்க குலசேகரனும், விக்ரமனும் அவரை சந்திக்க வந்திருந்தனர். கையில் கம்போடு ஆட்கள் அங்குமிங்கும் எதையோ தேடுவதைக் கண்டு இருவரும் புரியாது பார்த்திருக்க. அருந்தமிழின் பதற்றமான தோற்றம் கண்டு,
“என்னாச்சு தமிழ்?” என்று விக்ரமன் வினவ,
“பாம்பு வந்திருச்சுங் மச்சா” என்று திக்கித் திணறி சொல்லி முடித்தாள்.
“அட நம்ம மாடசாமி மட்டையை கலைச்சு போட்டு சுத்தம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கான். உள்ளிருந்து சாரை பாம்பொன்னு ஊரிட்டு போயிருக்குது. அதை நம்ம தமிழு பாத்துப்போட்டு பயந்துட்டா” என்று அவர்களிடம் கூறிய நாயகி தன் பெரிய பேத்தியிடம் திரும்பி,
“நீ பயப்படாத கண்ணு. அப்பத்தா நானிருக்கறனல்லோ! தகுரியமா இரு. இதுக்கெல்லாமா பயப்படுறது? அந்தக்காலத்துல அப்பத்தா எப்படி இருந்தேன் தெரியுமா” என்று ஆரம்பிக்க,
“நீங் சரோஜா தேவியோட்டம் இருந்திருப்பீங், அப்பாரு எம்.ஜி.யாரோட்டம் இருந்திருப்பாரு, ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா வேட்டைக்கு கிளம்புவீங். இங்க மாட்டியிருக்குற மான் கொம்பெல்லாம் நீங்க வேட்டையாடி கொண்டாந்ததுதேன். இந்தக் கதையவே எத்தன நாளைக்கு தான் சொல்லுவீங் ஆத்தா?” என்றபடி அவரருகில் வந்தான் குலசேகரன்.
அதற்கு கலகலவென சிரித்த நாயகி, அவன் ஆத்தா என்று கூறியதை கவனித்து,
“நான் உனக்கு அத்தை ஆகுது டா” என்று உறவுமுறையில் திருத்தம் செய்ய, அவரை ஆழமாய் பார்த்தவனோ,
“அவ்வளவு இளமையா எல்லாம் உங்களைய கூப்பிட முடியாதுங் ஆத்தோவ். விக்ரமன் எப்படி சொல்லுறானோ அதுதான் எனக்கும் மொறை” என்றுவிட, அதற்கும் கலகலவென சிரித்தார் நாயகி.
அவர் சிரிப்பதைப் பார்த்தவனோ,
“இந்த தமிழு புள்ள பாம்பை பாத்தெல்லாம் பயந்திருக்காது. உம்மட சிரிப்பை பாத்து தான் பயந்திருக்கும். தயவ செஞ்சு இனி பல்லு தெரியுறமாறி சிரிக்காதீங் ஆத்தா” என்றான் பயந்தவன் போல்.
“என்ரா தங்காத்தா மவனே! என்ரகிட்டயே உன்ர எகத்தாளத்த காட்டுறியா. வெரசல போய் பாம்பை அடிடா” என விரட்ட,
“உம்மட கிட்ட காட்ட முடியுமாங் ஆத்தா! நீங் புலிய முரத்தால அடிச்சு வெரட்டுன வீர வம்சமல்லோ” என்றபடியே அங்கிருந்த ஒரு தடியை எடுத்துக்கொண்டு,
“மாப்ள இதப் புடி” என விக்ரமனிடம் ஒன்றை தூக்கிப்போட்டபடி உள்ளே சென்றான்.
எல்லா இடத்திலும் பாம்பைத் தேடியவர்கள் அடுத்து வெளிவாசலுக்கு அருகிலிருந்த சமையல் அறைக்குள் செல்ல, அங்கு கையில் ஊறுகாய் ஜாடியோடு நின்றிருக்கும் அரசியைக் கண்டனர்.
“சார பாம்பு வந்திருச்சுன்னு உங்கக்கா கத்தி ஊரையே கூட்டுறா. நீ என்னடானா உள்ளார இருந்து ஊறுகா சப்பிட்டு வர்ற” என்று குலசேகரன் கேட்க,
“பாம்பெல்லாம் அடிச்சாச்சு. அய்யனாரு கணக்கா நிக்காம எங்கூட்டு தடியை இங்கயே போட்டுப்போட்டு நீங்க ரெண்டு பேரும் வந்த வழியை பாத்துட்டு கெளம்புங்க” என்றாள் கேட்டவனை விட்டுவிட்டு அருகிலிருந்த விக்ரமனைப் பார்த்து.
“உங்கூட்டு தடிய வெச்சு நாங்கென்ன தங்கமா தோண்டி எடுக்கப் போறோம். அடிச்சாச்சுனா அந்த பாம்பெங்க?” என்று குலசேகரன் நம்பமாட்டாமல் கேட்க,
“இதோ இங்க” என குனிந்து கீழிருந்த சாக்கை விலக்கி அதை எடுத்து அவன் முகத்திற்கு முன் நீட்ட,
“அடங்கொன்னியா” என தடியை அங்கேயே போட்டுவிட்டு வாசலுக்கே ஓடியிருந்தான் அவன். ஆறடிக்கும் நீளமாய் இருந்தது அந்தப் பாம்பு.
‘நீயா அடிச்ச’ என்பதுபோல் விக்ரமன் வேங்கையை பார்க்க,
“நம்ப முடியலையாங் மச்சா? வேணும்னா எப்படி அடிச்சேன்னு உங்களை அடிச்சு காட்டட்டுமா” என்று அவன் கையிலிருந்த தடியை ஒரு நொடியில் அவள் பறித்து ஓங்கியிருக்க, சிறு புன்னகையுடன் மீசையை முறுக்கியபடி நகராது நின்றிருந்தான்.
“அடிக்க மாட்டேன்னு நெனச்சீங்களா?” என்றாள் புருவத்தை உயர்த்தி.
‘நீ செஞ்சாலும் செய்வடி கட்டக்காரி’ என்று மனதில் நினைத்து அடுத்த நொடியே அவள் கையிலிருந்த தடியை அவன் பறித்துக் கொண்டான்.
அப்போது தான் வீடு திரும்பிய ஆறுச்சாமி, விசயமறிந்து உள்ளே விரைந்து வந்திருந்தார். சமையல் அறை வாயிலில் விக்ரமனோடு அரசியைக் கண்டவர்,
“உனக்கு ஒன்னுமில்லையே?” என்று கொஞ்சம் பதற்றத்தோடு கேட்க, அவர் பின்னால் வந்த குலசேகரனோ,
“பாம்புக்கு ஒன்னுமில்லையான்னு பாருங் மாமா. அரசி போட்ட போட்டுக்கு அது உயிர் பொழைக்குறது கஷ்டந்தேன். வீட்டுக்குள்ளையே வீராங்கனைய வெச்சுகிட்டு வெளியாலுக உதவி இனி உங்களுக்கு எதுக்கு?” என்று சொல்ல, ஆறுச்சாமியோ பாம்பையும் தன் பெண்ணையும் மாற்றி மாற்றிப் பார்த்திருந்தார்.
“அட நம்ம பெரியய்யா மவ ஒத்தையாளா நின்னு பாம்ப அடிச்சுப்போடுச்சு டோய்” என்றொருவர் குரல் கொடுக்க, அச்செய்தி காற்று வாக்கில் வீதிக்கே பரவியது.
தங்களுக்குள் பேசியபடியே ஊர்சனம் அங்கிருந்து நகர, அருந்தமிழ் தேவி இன்னும் அதிர்ச்சி குறையாது அப்படியே நின்றிருந்தாள்.
“நாகாத்தம்மாஆஆ.. நான் உனக்கு வெள்ளிக்கிழமை தவறாம வந்து பால் ஊத்துறேன். என்ர பேத்திக்கு நாக தோஷம் புடிச்சிராம நீதேன் காப்பாத்தோணும்” என்று பலமாய் வேண்டிக் கொண்டிருந்தார் ரங்கநாயகி.
சிறிது நேரத்தில் அனைவரும் அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட, ஆறுச்சாமியோடு சேர்ந்து திருவிழா நடத்துவது குறித்தும் யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் அளிப்பது என்பது குறித்தெல்லாம் பேசி முடிவெடுத்த பின்னர், விக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும் அங்கிருந்து சென்று கொண்டனர்.
ஐந்து வருடம் கழித்து தான் கலந்துகொள்ளப் போகும் ஊர்த் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள் வேங்கையரசி.
வாசம் வீசும்…!