மண்வாசம் 12 :
இரவெல்லாம் எரிகரும்பு கொழுந்து விட்டு எரிந்து அதன் தணல் மட்டுமே பாதையில் படிந்திருக்க, ஜோதிவடிவான தெய்வத்தை மனதில் நிறுத்தி பூக்குழியில் இறங்கி வந்துகொண்டிருந்தனர் பக்தர்கள்.
ஓம் சக்தி.. பராசக்தி.. என்ற அம்பாளின் திருநாமங்களே எட்டு திக்கிலும் ஒலித்தது.
குண்டம் திருவிழா இனிதே நிறைவடைந்து தேரோட்டம் நடைபெற, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டத் தேரில் செல்லாண்டியம்மன் பவனி வர, ஊர்கூடி வடம் பிடித்து தேரிழுத்தனர்.
அந்த பிரம்மாண்ட தேர் சக்கரத்திற்கு மஞ்சள் நீரும், தண்ணீரும், எண்ணையும், கல்லுப்பும் இட்டுக் கொண்டிருந்தனர் ஊரார்கள்.
“அந்த தேங்காயி, வாழப்பழம், சக்கரை அவுலு எல்லாத்தையும் எடுத்துட்டு மடாருனு வா கண்ணு. தேரு நம்மூட்டுக் கிட்ட வந்திருச்சு போல. பாட்டாசு சத்தம் கேக்குது பாரு” என நாயகி குரல் கொடுக்க, அனைத்தையும் தயார் நிலையில் வைத்துவிட்டு இனிப்பு அவுலை கலந்துவிட்டுக் கொண்டிருந்த அருந்தமிழ் தேவி அதை முடித்துவிட்டு தன் கைகளை நீரில் கழுவினாள்.
அவள் கைகளை அலங்கரித்திருந்த தங்க வளையல்கள் அவள் அசைவிற்கேற்ப முன்னும் பின்னுமாய் ஆட, அதை வருடியவளின் இதழ்களில் ஒரு மென்னகை வந்து அமர்ந்துகொண்டது.
மனதில் சாரதா வந்து அமர்ந்து கொண்டார்.
“ஏது தமிழ் இந்த வளையல்?” என்று நேற்று நாயகி கேட்கவும், முதலில் என்ன சொல்வதென்று திருத்திருத்தவள் பின் ஒருவாராக விசயத்தை தெரிவிக்க,
“சாரதா கொடுத்தாளா? அவளுக்கு பொம்பள புள்ளை இல்லைன்னு ரொம்பவே வெசனம். உன்ர அம்மா வள்ளியம்மாளும் அவளும் சின்ன வயசுல ஒன்னா படிச்சவங்களாமா. நீ பொறந்தப்போ உன்னைய பாக்க நம்மூட்டுக்கு வந்திருக்கா கண்ணு. பழக்க வழக்கத்துல உன்ர அம்மாள மாதிரியே தான். தங்கமான குணம் அவளுக்கு” என்று சொல்ல, தன் அன்னைக்குத் தோழி என்றதிலேயே அவர் மனதில் ஆழமானதொரு இடத்தைப் பிடித்தார் சாரதா. அவர் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது அருந்தமிழுக்கு.
“நான் அவங்களை இதுவரைக்கும் பாத்ததே இல்லைங் ஆத்தா” என்று சொல்ல,
“பாத்திருப்ப கண்ணு. ஆனா ஆரு என்ன வெவரம்ன்னு சரியா தெரிஞ்சிருக்காது. இப்போ கொஞ்ச வருசமாத்தானே கந்தசாமி அந்த ஊர் தலைவரா இருகாப்படி” என்ற நாயகி,
“இப்படி பொசுக்குன்னு தங்க வளையலை கழட்டி கொடுத்திருக்கா. நீ வேண்டாம்ணு சொல்லி இருக்கலாமல்லோ?” என்று கேட்கவும்,
“நான் வேண்டாம்னு தான் சொன்னங் ஆத்தா. உன்ர அம்மா கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு சொல்லவும் தான் நான் மறுக்கலை. நான் வேணும்னா திருப்பி கொடுத்திறட்டாங் ஆத்தா?” என்றாள் தமிழ்.
“வேண்டாங் கண்ணு. அவ ஒரு பிரியத்துல கொடுத்திருப்பா, நாம திருப்பி கொடுத்தா தப்பாயிடும். நாளபின்ன அவ வீட்டு விசேஷத்துக்கு உங்கப்பன் கிட்ட சொல்லி ரெண்டு மடங்கா செஞ்சுடுவோம் விடு” என்று சொல்லவும் புன்னகையுடன் தலையசைத்தாள்.
அவளுக்குமே அதை திருப்பித் தர மனமில்லை. மனதிற்கு நெருக்கமானதொரு உணர்வை உணர்ந்தாள். எதற்கும் ஆசைப் படாதவளுக்குமே வளையலை தன்னிடமே வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை இருந்தது. தன் அன்னையை அவரில் கண்டதும் இன்னும் இன்னும் பிடித்துப் போனது தமிழுக்கு.
[the_ad id=”6605″]
அவரை மட்டுமா என்றால் நிச்சயம் இல்லை.
மாறன்.. அவனையும் தான்.
தன்னை யாரென்று வெளிக்காண்பித்துக் கொள்ளாது அவன் அவளோடு பேசியது, வம்பு செய்தது அவளையும் அவனிடம் இயல்பாய் பேசவைத்தது என்று அனைத்தையும் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க மனம் அவா கொள்ளும்.
அவனது ‘டீச்சர்’ என்ற அழைப்பு தென்றலென மென்மையாய் மனதை வருடிச் செல்ல, ‘கட்டவண்டி’ என்பதுவே அவனது பெயராகிப் போனது அவளுக்கு.
காலை நேர ‘கட்டவண்டி’ தரிசனத்திற்காக தவம் இருக்கத் தொடங்கிவிட்டாள்.
இது என்னவோ? ஏதோ? எம்மாதிரியான உணர்வோ? என்று எல்லாம் அவள் தினம் தினம் தூக்கம் தொலைத்து சிந்தனையில் ஆழ்ந்து தவித்திருக்க, முதல் நாள் திருவிழாவின் போது செல்லாண்டியம்மனின் சந்நிதியில் அவளுக்கான பதில் கிட்டியிருந்தது.
மணவாழ்வை எண்ணி மனதார வேண்டிக்கொண்டு கண்திறந்த வேளையில் மணாளனின் முகமாக மாறனின் முகமல்லவா தெரிந்தது! அதை எண்ணி இப்போதும் ஒரு சிலிர்ப்பு அவளுள்.
“தமிழு! இன்னும் உள்ளாரா என்ன பண்ணுற? வெரசலா வா சாமி தேரு வந்திருச்சு” என்ற நாயகியின் குரலில் சிந்தனை கலைந்தவள் தேங்காய் பழத்தட்டையும், அவுலையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.
“இந்த சின்னக் குட்டி எங்க?” என்று அவளிடம் கேட்க, அதற்குள் அரசியே வந்திருந்தாள்.
“இத்தன நேரமா உள்ளாரா என்னதான் பண்ணிக்கிட்டு இருந்த? தேரு கூட வெரசலா வந்திருச்சு நீயென்னமோ ஆடி அசஞ்சு வர்ற. சட்டுன்னு வா சாமி” என்று நாயகி குரல்கொடுக்க,
“அப்பத்தோவ்! உங்க பேச்சை கேட்டு அரைமணி நேரமா வாசல்லையே நின்னு நின்னு கால் வலிக்குதேன்னு ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளார போய்ட்டு வந்தேன். அதுக்கு இந்த அக்கப்போரா. நம்மூட்டு தேரை நீங்களே இழுத்து தெருவுல விடாம போய் அந்த தேரை இழுங்க” என,
“இந்தக் காலத்து புள்ளைகளை ஒன்னும் சொல்லிக்க வேண்டாம். நிக்க நாலு நிமிஷம் நடக்க நாலு நிமிஷம்னு இருக்குதுக. நாளைக்கு போற வீட்டுல மாமியாக்காரி மண்டைலையே ஒரு கொட்டு வெச்சா தான் சரிப்பட்டு வரும்” என்று ஒரு குரல் வரவும்,
‘ஓஹ் சூப் கடையும் இங்கதான் இருக்கா’ என நாயகியின் அருகில் இருந்த சுப்பாத்தாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் அரசி.
“உன்ர வயசுல நானெல்லாம் சலுப்பே தெரியாம சுறுசுறுப்பா சுத்திக்கிட்டு இருந்தவ. என்ர மாமியா கிட்டையே பாராட்டு வாங்குனவளாக்கும். அது அம்புட்டு லேசில்ல கண்ணு. எள்ளுனா எண்ணெய்யா வந்து நிக்கோணும். எலிப் புழக்கையா வந்து நிக்கக் கூடாது” என்று இலவச அறிவுரைகளை வாரி வழங்க,
‘இந்த சூப்பு கடை எதோ ப்ரெசிடென்ட் கையால பத்மஸ்ரீ அவார்ட் வாங்குனதடோட்டமில்ல பேசிட்டு கெடக்கு’ என எதையும் கண்டுகொள்ளது தேரை வேடிக்கை பார்த்திருந்தாள் அரசி.
தேர் நெருங்கியிருக்க, தேர் சக்கரத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய் உடைத்து, வடம் பிடிப்போருக்கு பிரசாதம் வழங்கிவிட்டு, அம்மனையும் தரிசித்துவிட்டு, மற்றவர்களோடு சிறிது தூரம் தேரை இழுத்துவிட்டு இல்லம் திரும்பினர்.
சுப்பாத்தாவும் உள்ளே வந்து நாயகியோடு பேசிக் கொண்டிருந்தார். பொதுவான விசயங்களைப் பேசிய பின் அவர் பார்வை மெல்ல அருந்தமிழை ஆராய்ந்தது.
“என்ன நாயகி நம்ம தமிழுக்கு இன்னுமே வரன் பாக்க ஆரம்பிக்காம இருக்குற? அவளுக்கு அடுத்து சின்னவளும் இருக்கா. வயசுவந்த புள்ளைகள எத்தன நாளைக்குத்தேன் இப்படி உன்ர கூடயே வெச்சிருப்ப? அதுக அம்மா இருந்திருந்தா இந்நேரம் நல்லது நடத்திப் பாத்திருப்பான்னு ஒரு சொல்லு வந்திறக்கூடாதல்லோ” என்று சொல்லவும் நாயகிக்கு சட்டென முகம் மாறியது.
“நீயும் எத்தன நாளைக்குத்தேன் அடிமடியில நெருப்ப கட்டிக்கிட்டு அலையுவ நாயகி. தமிழு கூட படிச்ச நம்ம பாக்கியம்மா பேத்தி இடுப்புல ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்கா. நம்ம தமிழுக்கு ஏதோ குறையுன்னு அதான் இன்னும் கண்ணாலம் கூடலைன்னு ஊருக்குள்ள காத்துவாக்குல பொரளி பரவிடக் கூடாதல்லோ” என்று சொல்லவும் அருந்தமிழுக்கு உள்ளுக்குள் முள் தைத்தது போல் இருந்தது.
அடுத்து சுப்பாத்தா பேச வாயெடுக்க,
“ஏன்ங் ஆத்தா, உங்க கூட இருந்தாங்களே அந்த லட்சுமாத்தா அப்பறம் நீங்க இப்போ சொன்ன பாக்கியமா பாட்டி, அவங்க எல்லாரும் எப்பவோ மேல போய் சேர்ந்துட்டாங்க. நீங்க எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?” என அரசி கேட்க,
ஆவென அவளைப் பார்த்திருந்தார் சுப்பாத்தா.
“இப்படி கேட்டுட்டேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எல்லாருக்கும் ஒரு விஷயம் நடந்தா அது உடனே நமக்கும் நடக்கோணும்னு அவசியம் இல்லைங் ஆத்தா. நமக்கு நடக்க வேண்டிய நேரத்துல அது கண்டிப்பா நடக்கும்” என்றவள் தன் அக்காவைப் பார்த்துக்கொண்டே,
“என்ர அக்கா வயசுக்கு மூணு டிகிரி முடிச்சு சுயமா வேலைக்கு போய் அவ சொந்தக் காலுல நிக்குறா. வாழ்க்கைல யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்ல அவளுக்கு. ஆனா நீங்க சொன்ன பாக்கியம்மா பேத்திக்கு பன்னெண்டாவது முடிஞ்சதுமே கலியாணம் செஞ்சு வெச்சு என்ன சாதனையைக் கண்டீங்க? இடுப்புல ஒன்னு வயித்துல ஒன்னு வாங்கினது தான் சாதனையா?” என, அருந்தமிழுக்கு தங்கையின் பேச்சில் அகம் நிறைந்து போனது.
“அப்பறம் எங்க ஆத்தா எங்களுக்கு அப்பத்தா மட்டுமில்ல. அம்மாவும் அவங்க தான். எங்களுக்கு எந்த நேரத்துல எதை செய்யோணும்னு எங்க அப்பாவுக்கும் எங்க அப்பத்தாளுக்கும் நல்லா தெரியும். ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுறதுக்கு எல்லாம் நாங்க பொறுப்பாக முடியாது. ஊர் வாய நாம மூட முடியுமாங் ஆத்தா?” என்று கேட்டு அவர் வாயை நன்கு மூடியிருந்தாள்.
அரசியின் இந்தப் பேச்சில் ரங்கநாயகிக்கு கண்கள் கலங்கிப்போய் அவளையே இமைக்காது பார்த்திருந்தார்.
“படிச்ச புள்ள அதான் வெவரமா பேசுது. அது சொல்லுறதும் சரித்தேன். அப்போ நான் வர்றேன் நாயகி” என்று அதற்கு மேல் அங்கிருக்காது அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார் சுப்பாத்தா.
அதன் பின் அரசியும் அருந்தமிழும் அவர்களது அறைக்குள் சென்று கொள்ள, நாயகியால் இயல்பாய் இருக்க முடியவில்லை. அன்னையை கவனித்து அவர் அறைக்கு வந்தார் ஆறுச்சாமி.
“என்னாச்சுங் ம்மா உங்க மொகமே செரியில்ல?” என்று கேட்க,
சுப்பாத்தாளோடு நடந்த உரையாடலைச் சொன்னவர்,
“நான் உன்ரகிட்ட அன்னிக்கே சொன்னேன். நீதேன் சின்னவ வந்ததும் பாத்துக்கலாம்னு சொல்லிப்புட்ட. இப்பத்தேன் சின்னவளும் வந்துட்டாளல்லோ. நாள் போய்கிட்டே கெடக்குது காலாகாலத்துல நம்ம தானே நல்லது பாத்து பண்ணி வைக்கோணும்” என்றார் கண்கலங்க,
“நான் என்னிக்கோ முடிவு பண்ணிட்டனுங் ம்மா. திருவிழா முடியட்டும்ங்” என்று தன் முடிவு என்னவென்று ஆறுச்சாமி சொல்ல, அகம் மகிழ்ந்து போனார் ரங்கநாயகி.
மனம் லேசாய் இருக்க அதன் பின் உறக்கமானது சுகமாய் தழுவியது.
திருவிழா முடிவில் திருத்தேர்நிலை சேர்த்தல் முடிந்ததும் மஞ்சள் நீராட்டம் துவங்கியிருக்க, கன்னியர்கள் எல்லாம் மஞ்சள் பூக்களாய் மாறி இருக்க, காளையர்களின் வெள்ளை வேட்டி சட்டை எங்கும் மஞ்சள் மயமாய் மாற்றி இருந்தனர்.
திருவிழா கொண்டாடிய மக்கள் மனம் கண்டு, மனம் குளிர்ந்த அம்மன் தன் அருள் கொண்டு மாரியையும் பொழிவிக்க, ஆனந்தக் கூத்து அரங்கேறியது.
குலசேகர பாண்டியனின் வீட்டுக் கதவுகள் தட்டப்பட, வந்திருப்பது யாரெனக் கண்டுகொண்டவன் கதவைத் திறவாதிருந்தான்.
“மாமா! தட்டி தட்டி கை வலிக்குது கதவத் தொறங்க” என்று அரும்பு குரல் கொடுக்க,
“நீ என்ன தட்டுனாலும் இந்தக் கதவு தொறக்காது” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான்.
“இப்படி எனக்கு பயந்துட்டு வீட்டுக்கு உள்ளாரையே இருக்கியே. உனக்கு அசிங்கமா இல்லையா மாமா?”
“எலிக்குட்டி! ரொம்ப வாய் பேசுனா அப்பறம் நீதான் அனுபவிக்கோணும். பேசமா கெளம்பிரு. அதான் உனக்கு நல்லது”
அவள் கொலுசொலி எழுப்பி அங்கிருந்து நகர்வது போல் காட்டிக்கொண்டு மெல்ல வந்து தூணின் பின்னால் மறைந்தாள். ஒன்றல்ல இரண்டல்ல அடுத்து பத்து நிமிடங்கள் கழித்தே கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் குலசேகரன். வெள்ளையன் அவனைப் பார்த்து குறைக்க, இல்லை வார்னிங் கொடுக்க,
“என்னடா வெள்ளையா எலி போய்ட்டாளா?” என்று அவனிடம் கேட்க, வெள்ளையன் இப்போது தூணைப் பார்த்து குறைத்தான். குலசேகரன் அத்திசையை நோக்கி மெல்லத் திரும்பியதும் தன் கையில் வைத்திருந்த சொம்பில் இருந்த மஞ்சள் நீரை முழுவதுமாய் அவன் முகத்தில் ஊற்றியிருந்தாள் அரும்பு.
வாயிலிருந்த நீரைத் துப்பிவிட்டு ஒரு கையால் முகத்தை வழித்து வழிந்தோடிய நீரைத் துடைத்தெரிந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, மஞ்சள் நிறப் புடவையில் மஞ்சள் மேகமாய் நின்றிருந்தவளோ கலகலவென சிரித்துக் கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
அடுத்து அவள் சுதாரிப்பதற்குள் தன் அருகிலிருந்த அண்டாவை எடுத்து அவள் தலை மேல் கவிழ்த்திருந்தான். தண்ணீர் வெள்ளம் தலை முதல் கால்வரை பாய, மழையில் நனைந்த மஞ்சள் மலரானாள் அரும்பு.
“மாமாஆஆ..” என்று சிணுங்க,
உள்ளே சென்று ஒரு துண்டை எடுத்து வந்தவன் அவள் கைகளில் திணித்து,
“இந்தா துண்டு. தொடச்சுக்கிட்டே கெளம்பு” என்று விட்டு மஞ்சள் கரை படிந்த தன் சட்டையை கழற்றிக் கொண்டிருக்க, துண்டை அவன் மீதே வீசிவிட்டு கால்களை தொம் தொம்மென்று உதைத்து நடந்தபடி, அவனை திரும்பி முறைத்துக் கொண்டே சென்றாள்.
‘போடி போ மூஞ்சிலையா மஞ்சத்தண்ணி ஊத்துற’ என நினைத்தபடி அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான்.
மஞ்சள் நீர் மண்ணை நனைத்ததாலோ என்னவோ போட்டிபோட்டுக் கொண்டு மழையும் மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது. மழையின் முத்தங்களைப் பெற்ற மண் மனம் மகிழ்ந்து சுகந்தம் பரப்ப, மண்வாசத்தை நாசியில் நிரப்பியபடி வந்து கொண்டிருந்தான் விக்ரம பாண்டியன்.
தன் வீட்டிற்குள் நுழையவுமே உள்ளிருந்து வந்த பேச்சு சத்தமானது அரசியின் வருகையை அவனுக்கு உணர்த்தியது.
“தனியாவா வந்த கண்ணு? வீதிக்கு வீதி மஞ்சநீராட்டம் போய்ட்டு இருக்குமே எப்படி உன்ர நாயகி ஆத்தா உன்னைய தனியா அனுப்புனாங்க? ஒரு போன் பண்ணியிருந்தா விக்ரமனை வரச் சொல்லியிருப்பனல்லோ. நீ என்னத்துக்கு தனியா வந்த” என முத்துலட்சுமி கேட்க,
“இதுக்கெல்லாம் அன்னாடும் தொணைக்கு ஆளை கூட்டியாறனுமாங் அத்த. நம்மூருக்குள்ள எனக்கென்ன பயமுங்? என்ர மேல ஒருத்தன் மஞ்சநீர் ஊத்திட்டு போய்டுவானா? தொலச்சிட மாட்டேன் தொலச்சு” என்றாள் அரசி.
“அதானே” என்றபடி உள்ளே வந்தான் விக்ரமன்.
“எதானே?” என்று அரசியும் அவனைப் பார்க்க,
“நீங்க தான் புலியடிச்சு பொழச்ச பரம்பரை ஆச்சே. உங்களுக்கு இல்லாத தகுரியமானு சொன்னேன்” என்றான் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.
அரசியின் முன்னோர் காலத்தில் அவர்களுக்கு சொந்தமாய் பல ஏக்கரில் புளியமரம் இருந்தது. புளியங்காய் அடித்ததில் நல்ல லாபம் கண்டு தான் சொத்துக்களை பலமடங்கு பெருக்கினர். அக்காலத்தில் அவர்களே வேட்டை நாய் உதவிகொண்டு வேட்டைக்குச் சென்று வேல்கம்பு கொண்டு புலியை அடித்ததும் உண்டு. ஆநிரைகளை காக்க, காவல் புரியும் பலர், இவ்வீர செய்கையை செய்வதுண்டு. அதன் பின்னர் தான் ஆனைமலை, சேத்துமடை வனச்சரகங்கள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, ஆநிரைகளுக்கும் மக்களுக்கும் காட்டு விலங்குகளிடம் இருந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது.
விக்ரமன் சொன்ன புலி(ளி) எதுவென்று தெரியாது,
“ஆமா நீங்க எந்த புலியை சொல்லுறீங்க?” என அரசி கேட்டதில் முத்துலட்சுமி வாய்விட்டே சிரித்துவிட, விக்ரமனும் சிரிப்போடு மாட்டுத் தொழுவம் சென்றான்.
மழைப் பொழிவு சற்று குறைந்து மென்சாரலாய் தூவிக் கொண்டிருக்க, அவனது வேலனையும் வீரனையும் வெளியே பிடித்துக் கட்டினான். அதுவரை பருத்திக் கொட்டையை ஒரு சுழற்று சுழற்றிக் கொண்டிருந்தவர்கள் விக்ரமனின் பின்னால் பார்த்தபடி காதுகளை அசைத்து ஒரு சேர சத்தம் எழுப்ப,
“என்னடா?” என அவர்களைப் பார்த்திருந்த வேளையில் விக்ரமனின் பின்பக்க வலது தோளின் மீது சில்லிட்டு வழிந்த நீரில் உடனே பக்கவாட்டில் பார்த்தான்.
மறுநொடி பின்னால் திரும்ப, இப்போது நேருக்கு நேர் அவன் நெஞ்சை நனைத்திருந்தது அரசி அவன் மீது ஊற்றிய நீர்.
அந்நீர் வெறும் தண்ணீர் என்றால் அவன் வெள்ளை சட்டை அவ்விடத்தில் மட்டும் வெளிர்மஞ்சளாய் மாறிப் போயிருக்காது.
‘உன் வீட்டிற்கே வந்து உன்மீதே ஊற்றிவிட்டேன் பார்’ என்பதாய் அவள் நின்றிருக்க,
“கட்டக்காரி” என்று கடித்து துப்பிய வார்த்தைகளுடன் சட்டையை சரிசெய்தபடி அவன் இரண்டடி முன்னே எடுத்துவைக்க, சின்ன சிரிப்புடன் அங்கிருந்து உள்ளே ஓடி வந்துகொண்டாள் வேங்கையரசி.
‘எப்படி யோசிக்குறா இவ மட்டும்? என்ர வீட்டு சமையக்கட்டுல இருந்தே மஞ்சப்பொடி எடுத்து அதைய டம்ளர் தண்ணில கலக்கிட்டு வந்திருக்கா. இது தெரியாம அம்மா உள்ளாரா என்னதான் பண்ணிட்டு இருக்காங்களோ’ என்று எண்ணியபடி உள்ளே வந்தவன் அவனறைக்குச் சென்று சட்டையை மாற்றி வந்தான்.
இப்போது அடுப்பைக்குள் லட்சுமியோடு இருந்த அரசியோ அவனைப் பார்த்துக் கொண்டே பால் பணியாரத்தை வாயில் தள்ளிக் கொண்டிருந்தாள். அவளை முறைத்துக்கொண்டே,
“ம்மா நான் தோப்புக்கு கிளம்புறேன்ங்” என விக்ரமன் தன் அன்னையிடம் தெரிவிக்க, அவனை கவனித்தவர்
“என்னாச்சு விக்ரமா ஏன் சட்டையை மாத்திட்டு போற?” என்று கேட்க
“ஒண்ணுமில்லங் ம்மா. காரி மாடு கறை பண்ணிடுச்சு” என்றான் அரசியைப் பார்த்தபடி.
“வரவர இந்த மாடு பண்ணுற அலும்பு தாங்க முடியறதில்ல. நல்ல மூக்கனங்கயிறா போட்டு இழுத்துக் கட்டணும்ப்பா. சும்மாவா பெரியவங்க சொன்னாங்க அடியாத மாடு படியாதுன்னு. நல்லா கால் காலா சாட்ட வாருலையே ஒன்னு கொடுத்தா அமைதியா நிக்கும்” என, அரசி தன் வாயில் அடைக்கச் சென்ற அடுத்த பணியாரமானது உருண்டு கீழே ஓடியது.
அரசியை பார்த்த விக்ரமன் சிரிப்பை அடக்க பெரிதாய் போராடினான். அவனைப் பார்த்தபடியே,
“அத்த! இவரு எங்கயோ பராக்கு பாத்துட்டு நின்னுட்டு இருந்திருப்பாரு அதுக்கு ஏன் அந்த மாட்டை கொறை சொல்லுறீங்க” என்றாள் லட்சுமியிடம்.
“நீ எப்பிருந்து கண்ணு மாட்டுக்கெல்லாம் பரிஞ்சு பேச ஆரம்பிச்ச?”
“அது பாவம் வாயில்லாத ஜீவன்ங் அத்த. அதுக்குன்னு யாரு இருக்கா நம்ம தானே நல்லா பாத்துக்கோணும். அன்புக்கு மட்டும் தான் மாடும் மனுஷனும் அடிபணிவாங்க அத்த. அதிகாரத்துக்கு யாருமே அடிபணிய மாட்டாங்க. அதனால பழைய பழமொழியை தூக்கி தூரப் போட்டுட்டு, மாட்டையும் மனுஷங்களையும் கைநீட்டுற பழக்கத்தை விடுங்க” என்றாள்.
‘வரும்போது நல்லாத்தானே இருந்தா என்னாச்சு இவளுக்கு’ என்பதாய் அவர் பார்க்க,
[the_ad id=”6605″]
“அப்போ நான் வர்றேங்த்தே. நேரம் ஆச்சு” என்று அரசி நழுவிக்கொள்ள, விக்ரமனையே அழைத்துச் சென்று அவள் வீட்டில் விடுமாறு கூறினார் லட்சுமி. அவன் பார்வை அறிந்து தானே சென்று கொள்வதாய் அரசி கூற, அதை மறுத்து அவனோடே அனுப்பி வைத்தார் லட்சுமி.
வீடு வரும்வரை அமைதியாய் வந்த விக்ரமனோ அவள் இறங்கி உள்ளே செல்லும் வேளையில்,
“வேங்கை!” என்றழைக்க, மெல்லத் திரும்பியவள் கேள்வியாய் நோக்கியபடி அவன் அருகில் வர,
“கன்னத்தை தொடச்சிட்டு போ” என்றான்.
புரியாது பார்த்தவள் தன் இரு கன்னங்களையும் துடைக்க..
“அங்க இல்ல.. இங்க” என்று அவனே அவளது கன்னத்தில் தன் கரம் கொண்டு கோடிட்டுவிட்டு அதரங்களில் அரும்பிய மென்னகையுடன் வண்டியை கிளப்பிக்கொண்டு செல்ல, செல்லும் அவனையே இதழ்கள் விரியப் பார்த்திருந்தாள்.
பின் உள்ளே வந்துகொள்ள,
“வந்துட்டியா கண்ணு, லட்சுமி அத்தை என்ன பண்ணுறா?” என்று கேட்டபடி வந்த நாயகி அரசியின் கன்னத்தைப் பார்த்துவிட்டு,
“இதென்ன கன்னத்துல மஞ்சளா இருக்கு?” என்று கேட்க மீண்டும் கன்னத்தை தொட்டுப் பார்த்தவளின் கரத்தில் இப்போது புதிதாய் மஞ்சள் ஒட்ட, உடனே கண்ணாடி முன்பு சென்று பார்த்தாள்.
துடை துடையென அவன் துடைத்துவிட்டு சென்றதை அறிந்து கண்ணாடியில் தன் பிம்பத்தையே பார்த்தபடி சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு அவளறைக்குள் சென்றாள்.
செல்லும் அவளையே புரியாது பார்த்திருந்தார் ரங்கநாயகி.