மண்வாசம் 13 :
அரும்பின் இல்லத்தில் தன் அன்னை சரோஜினியோடு அமர்ந்திருந்தான் தேவராஜன். அவன் பார்வை மொத்தமும் அம்மத்தா மீது தான் இருந்தது.
“இன்னும் கொஞ்ச நாளைக்குத்தேன் கண்ணு. அப்பறம் பாரு உன்ர மாமன் மவளுக்கும் உனக்கும் ஜாம் ஜாம்னு நான் கலியாணம் பண்ணி வைக்குறேன்” என்ற வேலாத்தாவை முறைத்தவன்,
“இதையே தான் அஞ்சு வருசமா சொல்லுற அம்முச்சி. இதுவரைக்கும் நீ என்னத்த நடத்திக் கிழிச்ச?” என்று வெடித்தான்.
“ஆருகிட்ட பேசுறோமுன்னு தெரிஞ்சு பேசோணும் ராஜா. என்னத்த கிழிச்சேன்னா கேக்குற? குலசேகரன்னு ஒருத்தன் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்காததோட்டம் பண்ணியிருக்கேன். அதொன்னு போதாதா?” என்றவாறே மகளிடம் பார்வையை பதிக்க, உடனே தன் மகனை அடக்கினார் சரோஜினி.
“நான் எதையும் மறக்கல அம்முச்சி. நீதேன் அவ படிப்பு முடிஞ்ச கையோட கலியாணம்னு சொன்ன. இப்போ அவ படிப்பு முடிஞ்சே ரெண்டு வருஷம் ஆகப்போகுது. உன்னைய நம்புனதுக்கு அவளை அப்போவே தூக்கிட்டு போய் தாலிய கட்டியிருந்தா இந்நேரம் புள்ள குட்டியே வந்திருக்கும்”
“இப்படி அவரசப்பட்டா எப்படி கண்ணு? கட்டிவெச்சா நீங்க ரெண்டுபேரும் நல்லா வாழோனுமல்லோ. ஜாதகத்துல கட்டம் சரியில்ல கலியாணம் பண்ணுனா அரும்பு உசுருக்கே ஆபத்துனுட்டான் அந்த ஜோசியன். அதுக்குமேல உன்ர மாமன்கிட்ட நான் என்னத்த பேச?” என்று வேலாத்தாள் கேட்க,
‘அவளை கட்டுறதே முத்துச்சாமி மாமான் சொத்துக்காக தான். சொத்து என்ரபேருல மாறுனதுக்கு அப்பறம் அவ இருந்தா என்ன போனா எனக்கென்ன’ என்று நினைத்த தேவராஜன்,
“இங்க நீங்க மாமன்கிட்ட பேசறதுக்கே நல்ல நேரம் பாத்துகிட்டு இருங்க. அங்க அவ குலசேகரன் பின்னால சுத்திட்டு திரியுறா” என,
“என்ன கண்ணு சொல்லுற” என சரோஜினி கேட்க,
“தோப்புல அவ அந்த குலசேகரன் கூட அடிக்குற கூத்தை என்ர கண்ணால பாத்துபோட்டு தான் வர்றேன்” என்றான் எரிச்சலாய்.
சரோஜினியும் வேலாத்தாளும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொள்ள,
“ஒருநாள் இல்ல ஒருநாள் அவ அவனை கூட்டிட்டு ஓடப் போறா. அப்பறம் நீங்க ரெண்டு பேரும் என்ர மானம் போச்சே மருவாத போச்சே சொத்து மொத்தமும் போச்சேன்னு வயித்துல அடிச்சிட்டு கெடங்கப் போறீங்க” என,
“திருவிழா முடியட்டும்னு தான் கண்ணு காத்திருந்தேன். இனி ஆரு நெனச்சாலும் உன்ர கலியாணத்த தடுக்க முடியாது. இன்னிகே உன்ர மாமன் கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்றார் வேலாத்தாள் உறுதியாய்.
அதன் பின்னரே தேவராஜன் அமைதி கொண்டான்.
கையில் கட்டோடு விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தான் கலையரசன்.
[the_ad id=”6605″]
அவன் பெற்றோர் தோட்டத்து வேலை செய்வதால், தினசரி வேலைகளை கவனிப்பதற்கு வசதியாய் அங்கேயே இன்னும் சிலரோடு சேர்த்து அவர்களுக்கும் வீடு அமைத்துக் கொடுத்திருந்தார் கந்தசாமி.
கலையரசனைக் காணவேண்டி சாராதா கிளம்பிக் கொண்டிருக்க, அவரை கவனித்த கந்தசாமி,
“உன்ர கையில இருந்த வளையல் எங்க சாரதா?” என்று கேட்கவும் திடுக்கிட்ட சாரதா உடனே மாறனைப் பார்த்தார். அவனும் அன்னையை தான் பார்த்தான். இருவரையும் கூர்ந்து கவனித்தபடி,
“என்ன அம்மாளும் மகனும் இந்த முழி முழிக்குறீங்க வளையல் எங்க?” என கந்தசாமி மீண்டும் கேட்க,
“அதுங்க.. திருவிழாவுக்கு போனப்போ கூட்ட நெரிசல்ல சிக்கி வளையல் எங்கையோ நழுவிருச்சோட்டம்” என்றார் சாரதா முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு.
“அதெப்படி ரெண்டு கையில இருக்குற வளையலும் ஜோடியா நழுவும்?” என்று கேட்டவர்,
‘இதை விட வேறு ஏதாவது நல்ல கதை சொல்’ என்பதாய் பார்த்தும் வைத்தார். சமாளிப்பாய் புன்னகைத்த சாரதாவோ,
“ஜோடியா செருப்பு தொலயுதில்லங்க அதோட்டந்தேன் ஜோடியா வளையல் தொலஞ்சிடுச்சுங்க” என, அவரை முறைத்தவர்
“அது நம்ம பரம்பரை வளையல் தெரியுமல்லோ?” என்றார்.
“அட அது எனக்கு தெரியும்ங்க, அதுக்கு தெரியாதல்லோ. என்னைய விட பொருத்தமான ஒரு கையைப் பாத்ததும் அங்க போய்டுச்சோட்டம்” என, கந்தசாமி பேச வாயெடுக்கும் முன்
“உங்களுக்கு வந்து பதில் சொல்லுறேன்ங்க. இப்போ எனக்கு நிக்க நேரமில்ல. அந்த அரசனை போய் ஒரெட்டு பாத்துட்டு வந்துர்றேன். பொட்டோட்ட இருக்காம மரத்துல ஏறி கீழ விழுந்து கையில அடிபட்டு நம்ம மாறன் தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் கட்டு போட்டு கூட்டியாந்திருக்கான்” என்று பெரிதாய் புலம்பியவாறே தப்பித்து வெளியே வந்துகொண்டார்.
கந்தசாமி இப்போது தன் மகன் மாறனைப் பார்க்க, அவனோ அப்படியே அசையாது நின்றிருக்க,
“இன்னும் அங்க என்னடா பண்ணிக்கிட்டு கெடக்குற சட்டுன்னு வெளிய வா” என்று சாரதா வெளியில் இருந்து குரல் கொடுக்க,
“இதோ வந்துட்டேனுங் ம்மா” என்று அவனும் வாயிலுக்கு விரைந்தான்.
அவர்கள் கலையரசனின் வீட்டிற்குள் நுழையவும் அங்கிருந்தவளைக் கண்டு இருவரது முகமும் பிரகாசித்தது.
மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் அகிலன் மற்றும் கவினோடு கலையரசனின் வீட்டிற்கு வந்திருந்தாள் அருந்தமிழ் தேவி.
“கண்ணு! நீ எங்க இங்க?” என்றபடி அவளருகில் வந்தார் சாரதா.
“கலையரசனை பாக்க வந்தேங்க” என்று சாரதாவிற்கு பதில் உரைத்தாலும் ஒரு ஓரப் பார்வை கொண்டு மாறனையும் தீண்டி அவனுக்குள் சாரல் மழைப் பொழிவை உண்டாக்கினாள்.
“எங்க பையன் நல்லா படிக்குறானாங் டீச்சர்?” என்று கலையரசனின் பெற்றோர் தமிழிடம் கேட்க, கலையரசனின் தலையை ஆதுரமாய் வருடியவள்
“இவன் தான் சைன்ஸ் பாடத்துல பர்ஸ்ட் மார்க். ரொம்ப நல்லா படிக்குறான்” என்றாள். அதில் கலையரசன் மாறனை கெத்தாய் பார்த்திருந்தான். மாறனும் பெருமிதமாய் புருவத்தை உயர்த்த, சிறியவன் முகத்தில் அத்தனை சந்தோசம்.
சிறிது நேரம் பேசிவிட்டு அருந்தமிழ் அங்கிருந்து கிளம்பச் சென்ற வேளையில் அவளை செல்ல விடாது கைப்பற்றி அவரது இல்லத்திற்கே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் சாரதா. நேரம் ஆனதை உணர்த்து அவள் மறுக்க,
“அதெல்லாம் முடியாது தமிழ். இத்தன தூரம் வந்துட்டு இவடத்திக்கு இருக்குற என்ர ஊட்டுக்கு வராம போலாமா நீ. நேரம் ஆனா நான் மாறனை கொண்டு போய் உன்ர வீட்டுல விடச் சொல்லுறேன். வேணும்னா ஆறுச்சாமி அண்ணன்கிட்ட நான் பேசுறேன்” என்றுவிட்டார்.
மறுக்க முடியாது மாறனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சாரதாவோடு உள்ளே சென்றாள். அந்த சிறிய அரண்மனையை அவளுக்கு சுற்றிக் காட்டிய சாரதா, பழச்சாறு கலந்துகொண்டு வந்து கொடுக்க, வீட்டின் அலங்காரங்களை ரசித்தபடி அதை பருகிக் கொண்டிருந்தாள். மாறனோ அவளைக் கண்களால் பருகிக் கொண்டிருக்க, கந்தசாமி அவர் அறையில் இருந்து வெளிப்பட்டார்.
உடனே அருந்தமிழ் இருக்கையில் இருந்து எழ,
“உக்காரும்மா. நல்லா இருக்கியா?” என்று நலம் விசாரிக்க, அவரோடு இயல்பாய் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சில் சாரதாவும் இணைந்துகொள்ள, மூவருக்கும் மத்தியில் இடைபுகாது பார்வையாளனாய் நின்றிருந்தான் நன்மாறன்.
இதுபோல் உரிமையாய் உறவாய் அவளை தன் வீட்டில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு அப்போது எழுந்தது. அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்றுகூட தோன்றியது. அவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டு நின்றிருக்க, அவனைப் பார்த்த சாரதா கண்களால் ஜாடை செய்தார். புரியாது பார்த்தவனிடம்,
“ஒரு போட்டோ எடு டா” என்று மெல்ல கையையும் இதழையும் அசைத்து தெரிவிக்க, அத்தருணத்தை அழகாய் கைபேசியில் சேமித்துக் கொண்டான். அனைத்தையும் கண்டும் காணாததுபோல் இருந்தார் கந்தசாமி. அருந்தமிழின் கையில் இருந்த சாரதாவின் வளையலையும் தான்.
பின் அருந்தமிழ் விடைபெற்றுக் கொள்ள, அவளது தயக்கம் கண்டு அவர்களுடன் அகிலனையும் கவினையும் அழைத்துக்கொண்டான் மாறன்.
“ஜீப்லையா போறோம்?” என்றாள் லேசாய் வெளிப்பட்ட குழந்தையின் குதூகலத்தில். அவளையே பார்த்தபடி இருந்த மாறன் தன் தலையை இடவலமாய் அசைக்க,
“ஏன் ஜீப்லையே போலாமே” என்றாள் அதை மெல்ல தடவிப் பார்த்து.
“கார்ல தான் போறோம்ங் டீச்சர்” என்றதும் அவள் முகம் லேசாய் சுருங்கியதுபோல் பட்டது அவனுக்கு.
“நீங்க பின்னாடி உக்காருங்க” என்றவன் அகிலனை முன்னால் ஏற்றிக்கொண்டு கவினை அவளருகில் அமர்த்தி வண்டியைக் கிளப்பினான்.
வழியெங்கிலும் சிறார்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். மாறன் ரியர் வியூ மிரர் வழியாக அருந்தமிழைப் பார்க்க, அவள் வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்துகொண்டிருந்தாள்.
“ஏசி வேலை செய்யலையா ண்ணா? காத்தே வரமாட்டிங்குது. இந்நேரம் நம்ம கட்டவண்டில வந்திருந்தா காத்து சும்மா ஜம்முனு வந்திருக்கும். போற வர்றவங்களையும் நல்லா வேடிக்கை பாத்துட்டு வந்திருக்கலாம். அவங்களும் நம்மள வேடிக்கை பாத்துட்டு போவாங்க” என்று அகிலன் சொன்னதும் உடனே தமிழ் மாறனைப் பார்த்தாள்.
ஜீப் வேண்டாம் என்று அவன் சொன்னதன் காரணம் இப்போது புரிந்தது.
“டீச்சர் உங்களுக்கும் கட்டவண்டி பிடிக்குமா இல்ல கார் பிடிக்குமா?” என்று விளையாட்டாய் கவின் கேட்டுவைக்க, சில நொடி மௌனத்திற்கு பின்
“எனக்கும் கட்டவண்டியை தான் பிடிக்கும்” என்றாள் கொஞ்சம் அழுத்தமாய்.
அதில் மாறன் உடனே பிரேக்கை அழுத்தியிருக்க, ஒருநொடி இருவரது பார்வையும் ரியர் வியூ மிரர் வாயிலாக சந்தித்துக் கொள்ள, அதரங்களில் அரும்பிய புன்னைகயுடன் வண்டியை கிளப்பினான்.
அவள் வீட்டை அடைந்ததும் உள்ளே வந்து ஆறுச்சாமியோடும் நாயகியோடும் பேசிவிட்டு அதன் பின்னரே கிளம்பினான்.
[the_ad id=”6605″]
கிளம்பும்போது அவனவளிடம் பார்வையால் விடைபெறத் தவறவில்லை. அவளும் விடைகொடுக்கத் தவறவில்லை.
“யாரு தமிழ் இவரு?” என்ற அரசியின் கேள்வியில் திடுக்கிட்ட தமிழ்,
“அப்பாவுக்கு தெரிஞ்சவரு” என்றுவிட்டு உள்ளே சென்றுகொள்ள, யாராய் இருக்கும் என்று யோசித்த அரசிக்கு திருவிழாவின் போது கோவிலில் வைத்து மாறனைச் சந்தித்தது நினைவில் வர, அவன் அன்னை தமிழுக்கு வளையல் கொடுத்தும் இலவசமாய் நினைவில் வந்தது.
முத்துச்சாமி வீட்டிற்குத் திரும்பியதும் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் வேலாத்தாள்.
அவரோடு சரோஜினியும் தேவராஜனும் காத்திருக்க, அரும்பு அவள் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. மரகதம் அனைவருக்கும் இரவு உணவைத் தயார் செய்துவிட்டு உணவருந்த அழைக்க, உணவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள் அரும்பு. தேவராஜன் வருகையின் போதெல்லாம் இப்படி தன் அறைக்குள்ளேயே அடைந்துகொள்வாள் என்பதால் மரகதமும் மகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிட்டார்.
சிறிது நேரத்தில் மற்ற அனைவரும் உணவருந்த வர,
“அண்ணா! உங்க கிட்ட ஒன்னு கேக்கட்டுமுங்களா?” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தார் சரோஜினி.
“என்ன அம்மணி தயங்காம கேளு” என முத்துச்சாமி சொல்லவும்,
“நான் கேட்டு நீங்க இல்லைன்னு சொல்லிப்புட்டா அதைய என்ரனால தாங்கிக்கவே முடியாதுங்” என்று புதிர் போட்டார்.
[the_ad id=”6605″]
“நீ கேட்டு நான் என்னைக்கு இல்லைன்னு சொல்லிருக்குறேன் அம்மணி” என்றதும்,
“நீங்க இல்லைன்னு சொல்லமாட்டிங்கன்னு தெரியும்ங். இருந்தாலும் சொல்லுறேனுங்ண்ணா. உங்க மகளையே என்ர மருமகளா ஆக்கிக்கோணும்னு அவ பொறந்ததுல இருந்தே நெனச்சுட்டு இருக்குறேன்ங். நமக்குள்ள சொந்தம் விட்டுப் போயிறக்கூடாது பாருங். உன்ர அண்ணன் ஊட்டுல பொண்ணு இருக்கும் போது உன்ர மவனுக்கு வெளியிடத்துல எதுக்கு பொண்ணு தேடுறைன்னு ஊருல நாலு பேரு கேக்குற கேள்விக்கெல்லாம் என்ரகிட்ட பதிலில்லைங். இதப்பத்தி பல தடக்கா உங்ககிட்ட பேசியிருக்கேனுங். நீங்க தான் ஒவ்வொரு வாட்டியும் ஏதாவது காரணம் காட்டி தட்டிக் கழிச்சிடறீங்க. உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைனா நேரடியா சொல்லிப்போடுங் அண்ணா” என கண்ணீர் சிந்த, மரகததிற்கு தூக்கி வாரிப் போட்டது.
“என்ன அம்மணி இப்படிப் பேசுற? அப்போ அரும்புக்கு மேல படிக்கோணும்னு ஆசை. சரி படிப்பு முடியட்டுமேன்னு பாத்தேன். அப்பறம் நேரம் சரியில்லைன்னு சொல்லிட்டாரு நம்ம ஜோசியரு. அதேன் கொஞ்ச நாள் போகட்டுமுன்னு உன்ர கிட்ட சொன்னேன்”
“சரிதானுங் ண்ணா. நானும் உங்க சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தேன் இத்தனை வருஷம் காத்திருந்தேன். ரெண்டு நாள் முன்ன நம்ம குடும்ப ஜோசியர்கிட்ட அரும்பு ஜாதகத்தை காட்டுனேன். கூட்டு திசையெல்லாம் மாறிடுச்சுங்கலாம் இப்போ நேரம் நல்லா இருக்குங்கலாம். தயங்காம நல்ல காரியம் பண்ணலாம்னு சொல்லிட்டாருங். இனி நீங்க தான் உங்க முடிவை சொல்லோணும்” என்று நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தார்.
முத்துச்சாமி தயங்க,
“நான் உங்கள கட்டாயப்படுத்தலைங். என்ர அண்ணன் புள்ளைய என்ர ஊட்டுல பாக்கோணுமுங்கற ஆசைல தான் கேட்டனுங். எதாவது தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங் ண்ணே” என்று சரோஜினி அவரை யோசிக்க விடாது பேச,
“இன்னும் என்ன கண்ணு யோசிக்குற? அவ மருமகளை அவ நல்லா பாத்துக்க மாட்டாளா. என்ர எண்ணமும் நம்ம அரும்பை தேவராஜனுக்கே கொடுக்கணுமுனுதேன். நீ யோசிக்கறதை பாத்தா உனக்கு இதுல விருப்பம் இல்லயோட்டம்” என்றார் வேலாத்தாள்.
மரகதம் பரிதவித்துப்போய் பார்த்திருக்க,
“அட என்னங்கம்மா நீங்க. என்ர மவள என்ர பொறந்தவ வீட்டுக்கு அனுப்ப நான் என்னத்துக்கு தயங்கோணும். சந்தோசமா அனுப்பி வைக்குறேன். நானே ஜோசியரை போய் பாக்கோணும்னு இருந்தேன். அதான் நீயே பாத்துப்போட்டு வந்துட்டயல்லோ அம்மணி, ஒரு நல்ல நாள் பாத்து உறுதி பேசிக்கலாம்” என்றதும் கண்களை துடைத்துக் கொண்ட சரோஜினி,
“ரொம்ப சந்தோசம்ங் ண்ணா. எனக்கு தெரியும் என்ர அண்ணனை பத்தி. வர்ற வெள்ளிக்கிழமையே நாள் நல்லா இருக்குதாமாங். அளவா நம்ம சனம் நாலு பேர்த்த வெச்சு உறுதி பேசிடலாம்ங் ண்ணா. அப்புறம் கல்யாணத்தை வேணும்னா தடபுடலா நடத்திக்கலாம்ங். என்ன சொல்லுறீங்க?” என, அனைத்தும் கைமீறிப் போவது தெரிந்தும் மரகதத்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
“அரும்பு கிட்ட ஒரு தடக்கா கேட்டுப்போட்டு முடிவு பண்ணுங்க” என்றார் மரகதம் முத்துச்சாமியிடம்.
உடனே வேலாத்தாள் தன் மகளைப் பார்க்க, கண்களை அழுந்த மூடித் திறந்த சரோஜினியோ,
“பெத்தவங்க பேச்சுக்கு மறுபேச்சு ஏதுங் அண்ணி. எனக்கெல்லாம் மணமேடைல தான் மாப்பிள்ளை யாருனே தெரிஞ்சிது. அதெல்லாம் பெரியவங்க பாத்து முடிவெடுத்தா போதும். நீங்க என்ன உங்க மகளுக்கு கெடுதலா நெனைக்கப் போறீங்க” என,
“அதெல்லாம் அந்தக் காலம் சரோஜினி. இது என்ர மக வாழ்க்கை. காலம்பூரா வாழப்போறது அவதேன். இதுல அவ விருப்பந்தேன் எங்களுக்கு முக்கியம்” என்றார் மரகதம் அமைதியாய்.
முத்துச்சாமி பெரிதாய் யோசிக்க,
“அரும்பு எல்லாத்துக்குந்தேன் ஆசைப்படுவா. நல்லது கெட்டது அவளுக்கு என்ன தெரியும். நாமதேன் பாத்து முடிவு பண்ணோணும். பரிச்சை எழுத போக வேண்டாம்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் நம்ம பேச்சை மீறி போனவ தான” என வேலாத்தாளும்,
“ஆரு கண்டா உங்களுக்கு உங்க தம்பிய அரும்புக்கு முடிக்கோணும்னு நெனப்பு இருக்குதோ என்னவோ. சொந்த மாமான்னும் பாக்காம எங்கண்ணன் சட்டையை எட்டிப் புடிச்சவன் தானே அந்த சேகரன். அதெல்லாம் லேசுல மறக்க முடியுங்களா? உங்க நெனப்பெல்லாம் இங்க நடக்காதுங் அண்ணி. அந்த வெறும் பயலுக்கு எல்லாம் பொண்ணு தரமாட்டாரு எங்கண்ணன்” என்று சரோஜினியும் மாறி மாறி பேச, முத்துச்சாமியின் முகம் கனன்றது.
மரகதம் ஏதோ பேச ஆரம்பிக்கவும், முத்துச்சாமி பார்த்த பார்வையிலேயே அதற்கு மேல் தன் பேச்சு எடுபதாது என்று புரிந்து போனது.
அனைத்தையும் பார்வையாளனாய் பார்த்திருந்த தேவராஜன், முத்துச்சாமியின் இறுதி முடிவிற்குக் காத்திருந்தான். இருக்கையில் இருந்து எழுந்தவர்,
“மச்சானுக்கு போன் போட்டு வரச் சொல்லு சரோஜினி. நான் ஆகவேண்டிய வேலையை பாக்குறேன். என்ர மக உன்ர மகனுக்குத்தேன்” என்றுவிட்டு நகர, நெஞ்சம் அடைக்க நின்றிருந்தார் மரகதம்.
மரகதத்தின் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டு வர, மற்ற அனைவரது முகத்திலும் சிரிப்பு தவழ்ந்திருந்தது.