மண்வாசம் 19 :
மூன்று நாட்களே திருமணத்திற்கு இருக்க அரும்பின் இல்லத்தில் பந்தக்கால் நடும் வேலைகள் சென்று கொண்டிருந்தன.
இது தாய்மாமன் சடங்கு என்பதால் ஊரார் பேச்சுக்களைத் தவிர்ப்பதற்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து குலசேகரனை அழைத்திருந்தார் முத்துச்சாமி. அவனும் தன் அக்கா மரகதத்தை மட்டுமே மனதில் வைத்து வருகை புரிந்து மஞ்சள் துணியில் காணிக்கை வைத்து பந்தக்கால் உச்சியில் முடிந்து நட்டியிருந்தான்.
கட்டில் நிறைய தங்க ஆபரணங்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்க, கன்னத்தில் கைவைத்தபடி அதையே பார்த்திருந்தார் சாரதா.
“என்னங் ம்மா இது?” என்று மாறன் கேட்க,
“பாத்தா தெரியலையாக்கும் இதெல்லாம் நம்ம பரம்பரை நகைக. அதுகூட நானும் ஒன்னு ரெண்டு சேர்த்து வாங்கி வெச்சது” என்றார் காட்டமாய்.
“அது தெரியுதுங் ம்மா ஆனா எதுக்கு இவ்வளவு? நீங்க ஒட்டியானமெல்லாம் போட்டு நான் பாத்ததே இல்ல”
“ஆமான்டா பேரக் கொழந்தையை எடுத்து இடுப்புல வெச்சு கொஞ்சுற வயசுல என்ர இடுப்புக்கு ஒட்டியானம் கேக்குதாக்கும்? எல்லாம் என்ர வருங்கால மருமகளுக்காக வாங்கி வெச்சிருக்கேன். என்னென்னமோ கனவுல இருந்தேன் ஆனா நீ என்ர நெனப்புல ஒரு லாரி மண்ணள்ளிப் போட்டுப்புட்டு எதுவுமே நடக்காததோட்டம் நிக்குற”
“நான் என்னங் ம்மா பண்ணுனேன்?”
“நீ தான் ஒண்ணுமே பண்ணலையே. ஒருத்திய உசுருக்கு உசுரா விரும்புனா மட்டும் பத்தாதுடா அவளையே கண்ணாலம் கட்டிக் காட்டோணும். அதைய விட்டுப்புட்டு இப்படி தேவதாசோட்டம் தாடி வளத்திட்டு சுத்துற. நீ எல்லாம் என்ர மகனா”
மாறன் விழிக்க,
“என்னடா முழிக்குற. உன்ர அப்பா என்னைய எப்படி கண்ணாலம் பண்ணுனாரு தெரியுமா? கட்டுனா என்னையத்தேன் கட்டுவேன்னு என்ர மாமனாரு கிட்ட ஒத்தக் காலுல நின்னு எங்க வீட்டுலையும் அவரே வந்து பேசி எல்லாரையும் சம்மதிக்க வெச்சு அத்தனையும் கடந்து தான் என்ர கையப் புடிச்சாரு. நீ என்னடான்ன அவரு பேரக் கெடுக்கவே வந்து பொறந்திருக்க”
“அம்மா?????!!!!!”
“அப்படி கூப்பிடாதா. இன்னும் மூணு நாள்ல தமிழுக்கு கலியாணம். இனி என்ன பண்ணுறது? என்ன பண்ண முடியும்? என்னையும் பேச விடாம நீயும் பேசாம இப்படி வந்து நிக்குறையேடா மாறா” என வேதனிக்க, அவர் அருகில் சென்றமர்ந்தவன்,
“இது வாழ்க்கை சம்பந்தப்பட்டதுங் ம்மா. யாரையும் எதுக்கும் வற்புறுத்தக் கூடாதுங். ரெண்டு பேரும் உறுதியான மனநிலையோட முடிவெடுக்கணும். இன்னிக்கு வரைக்கும் நான் உறுதியா இருக்கேன் ஆனா தமிழ் அப்படி இல்லைங்களே. அவங்களுக்கு என்ன வேணும்னு உறுதியா முடிவெடுத்துட்டாங்கனா அவங்களே என்னைய தேடி வருவாங்க” என்று புன்னகைக்க,
“வரலைனா?” என்று கேட்டவர் அவன் பதிலுக்காக காத்திருக்க,
[the_ad id=”6605″]
“வரலைனா என்ர வாழ்க்கைல தமிழை தவற வேற யாருக்கும் இடம் இல்லைங் ம்மா” என்று அழுத்தமாய்க் கூறினான் மாறன்.
“டேய் மாறா” என்று அதிர்ந்துபோய் பார்க்க. அன்னையின் கைப்பற்றியவன்,
“கவலை படாதீங்கம்மா தமிழ் நிச்சயம் வருவாங்க எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றுவிட்டு சென்று கதவைத் திறந்தான்.
அதுவரையில் கதவின் பின்புறம் சாய்ந்து நின்றபடி மாறனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கலையரசன், கவின் மற்றும் அகிலன் மூவரும் கதவு திறந்ததில் ஒருவர் மீது ஒருவர் வந்து அறைக்குள் விழுந்தனர்.
“இங்க என்னடா பண்ணுறீங்க?” என சாரதா கேட்க, மாறனின் காலடியில் கிடந்தபடி அவனை நிமிர்ந்து பாவமாய் பார்த்தனர். மாறன் மூவரையும் கைப்பற்றி மேலே தூக்கிவிட,
“கிரிக்கெட் ஆட அண்ணனையும் கூட்டிட்டு போலாம்னு வந்தோம்ங் ம்மா” என்றான் கவின் பவ்யமாய்.
“அது சரி இந்த வயசுல உங்களோட கிரிக்கெட் ஆடுனா நாலு பேரு என்னைய பாத்து சிரிக்க மாட்டாங்களா” என மாறன் சொல்ல,
“நீ ஏண்ணே அந்த நாலு பேரை பாக்குற நான் போடுற பந்தை மட்டும் பாத்து அடி” என கலையரசன் சொல்ல, சாரதா சிரித்தே விட்டார்.
பின் மூவரும் மாறனை வலுக்கட்டாயமாய் பிடித்து இழுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடச் செல்ல, நகைகளை எல்லாம் எடுத்து பீரோவில் அடுக்கிக் கொண்டிருந்தார் சாரதா. அப்போது அவர் கண்களில் பட்டது அந்தப் பொன்னகை. நேற்று தான் நகை ஆசாரி வந்து அதை சாரதாவின் கையில் ஒப்படைத்துச் சென்றிருந்தார்.
அப்பொன் நகை சேரவேண்டியவளைச் சென்றடையுமா என்ற கவலையோடு அதைக் கையில் வைத்துப் பார்த்திருந்தார்.
ஆறுச்சாமியின் அரண்மனை போன்ற வீட்டின் முகப்பில் பந்தல் போட்டு வீடெங்கிலும் வண்ண விளக்குகள் பொருத்தி தென்னங்கீற்றில் உருவாக்கப்பட்ட அலங்கார தோரணங்கள் அலங்கரிக்க, உற்றார் உறவினர் எல்லாம் ஒரு வாரம் முன்பே வந்து குவிய, அங்காளி பங்காளிகளுக்கு மூன்று வேலையும் விருந்துகள் சென்று கொண்டிருந்தது.
காலையில் இருந்து சப்தமாய் காணப்பட்ட வீடு காரிருள் சூழவும் தான் நிசப்தத்தை தழுவி இருந்தது.
அனைவரும் உறங்கிப் போயிருக்க தன் தாயின் புகைப்படத்தின் முன்பு நின்று அவரையே பார்த்திருந்தாள் அரசி.
இத்தனை ஆண்டுகளில் அவள் எதற்கும் தன் தாயை நாடியதில்லை. இன்று ஏனோ தனக்கு அன்னை இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று ஏக்கமாய் இருந்தது.
“நீங் ஏனுங்மா என்னைய விட்டு போனீங்க?” என ஏக்கங்களால் அவள் எழுதிய கேள்வி இது.
“எங்க கூடவே இருந்திருக்கலாம்” நிதர்சனம் உணர்ந்து தன் ஆசையை மட்டும் உரைத்தாள் இப்பொழுது.
“நீங் இருந்திருக்கணும்ங் மா” என்றவள் தன் மனதில் இருந்ததை எல்லாம் மௌன மொழியில் வெளிப்படுத்த, இவளது எல்லா மொழிகளுக்கும் அவளது அன்னையின் மொழி புன்னகை மட்டுமே.
“வேங்கை” என நிலவிய நிசப்தத்தை விரட்டியபடி வந்தது அந்தக் குரல்.
அவளது தந்தையின் குரல்.
காலையில் இருந்து ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் தன் சின்ன மகளையே தான் கவனித்துக் கொண்டிருந்தார் ஆறுச்சாமி. அனைவரும் உறங்கியிருக்க அரசி உறங்கிவிட்டாளா என்று மெல்ல அவளறைக்குச் சென்று பார்க்க, அவள் இல்லாதது கண்டு தேடிக் கொண்டு வந்திருந்தார்.
எப்போதும் வலம் வரும் அரசி அல்ல அவள் இப்போது. தாயிற்கு ஏங்கிய சிறு பிள்ளையாய் அவர் கண் முன்னே நின்றிருந்தாள்.
“ப்பா” என்று தயக்கமாய் அழைக்க,
“அம்மாகிட்ட என்ன சொல்லோனும்”
அவரை தந்தையாக அல்லாது தாயாக அந்தக் கணம் உணர்ந்தாள். மனதில் இருப்பதை சொல்லவும் முடியாது சொல்லாது இருக்கவும் முடியாது தவிப்போடு அவரைப் பார்க்க,
“இங்கயே இருந்து படிச்சிருக்கலாமல்ல? நாங்க உன்ர படிப்புக்கு தடையா இருப்பமோன்னு நெனச்சு தான் எங்க எல்லாரையும் விட்டுப்புட்டு பெரியத்தை கூட போய்ட்டியா?” என்றார் உள்ளே சென்ற குரலில்.
எத்தனையோ துறை இருக்க இவள் இதை தேர்ந்தெடுத்து படிக்க ஆறுச்சாமி அனுமதித்திருக்க மாட்டார் தான். காரணத்தை அறிந்து ஒருவேளை அவர் அனுமதித்தாலும் இத்துறை பெண்களுக்கு ஏற்றது இல்லை என்று சொல்லியே உறவுகள் தடுத்திருக்கும். அதை எல்லாம் எண்ணித்தான் அரசி லதாராணியோடு கிளம்பி இருந்தாள்.
அரசி அமைதியாய் நின்றிருக்க ஆறுச்சாமி தன் மகளையே பார்த்திருந்தார்.
இன்றைய சூழலிலும் கால்நடை மருத்துவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கின்றனர். அதுவும் கிராமங்களுக்கு தான் அவர்களது சேவை அதிகம் தேவை. தேவை இருக்குமிடத்தில் என்னவோ இன்றளவில் பற்றாக்குறையே இருந்து வருகிறது. அந்நிலையை மாற்ற தன் மகள் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்திருக்கிறாள் என்பதில் அத்தனை பெருமை ஆறுச்சாமிக்கு.
விக்ரமனுக்கு தகுந்த நேரத்தில் அவள் உதவியதை எண்ணிப் பார்க்க கண்கள் கலங்கியது. இது போல் தன் நண்பனுக்கும் தக்க நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் இந்நிலை வந்திருக்காதே என்று நினைத்தார்.
தன் நண்பன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த போது, மருத்துவமனை செல்ல அவசரத்திற்கு ஒரு வண்டி இல்லாது போய்விட்டதே என்ற வருத்தம் ஆறுசாமிக்கு உண்டு. அதற்காகத் தான் காரை வாங்கி வீட்டில் நிறுத்தி இருக்கிறார். அதுவும் அவசரத்திற்கு பல பேருக்கு பயன்பட்டிருக்கிறது. ஆனால் அவர் மகள் என்ன செய்திருக்கிறாள்? கால்நடை மருத்துவராகவே மாறியிருக்கிறாள்.
“எத்தனையோ தடவ உன்னைய சாட்ட வாருல வெளுத்துருக்கேன் கண்ணு. எல்லாம் நீ நல்லா வளரோணும்னுதேன். அம்மா இல்லாத புள்ள அதான் இப்படினு ஊருக்குள்ள ஒருத்தர் சொல்லிடக் கூடாதேன்னு தான் உன்ரகிட்ட கடுமையா நடந்துகிட்டேன் கண்ணு” என அவர் செய்கையை எண்ணி வருந்த,
[the_ad id=”6605″]
“யாராவது வேணும்னு அப்படி பண்ணுவாங்கலாங் ப்பா. நான் பண்ணுறதுக்கு தானே என்ரகிட்ட அப்படி நடந்துகிட்டீங்க உங்கமேல எனக்கு எந்த வருத்தமும் இல்லைங்” என்றாள்.
அதில் சிறு புன்னகை உதிக்க அவள் தலையை வாஞ்சையாய் தடவி,
“நீ படிக்க அவ்வளவு தொல போனா உன்னைய பிரிஞ்சு இருக்கோணுமேன்னு தான் கண்ணு எனக்கு வருத்தம். நீ புடிசாதகமா இருக்கவும் தான் கோவம் வந்துபோட்டுது. நீ போனப்ப இருந்து எங்களுக்கு உன்ர நெனப்பே தான் கண்ணு. திக்கு திக்குன்னு மனசு கெடந்து அடிச்சுகிட்டே இருந்துது. திரும்ப உன்னைய பாத்ததும்தேன் நிம்மதியே வந்தது” என்று சொல்ல,
“இங்க எல்லாருக்குமே கால்நடைகள் தானங் ப்பா வாழ்வாதாரம். அதைய இழந்துட்டு அந்த குடும்பம் அனுபவிக்குற வேதனை என்னன்னு நம்மளவிட வேற யாருக்குங் தெரியும்? அதான் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் என்ர முடிவை மாத்திக்காம கெளம்பி போனேனுங்” என்றாள்.
தூக்கம் வராது அறையில் இருந்து வெளியே வந்த தமிழும் அரசியின் அவ்வுரையடல்களை கேட்டபடி நின்றிருந்தாள். தங்கையை எண்ணி பெருமையாய் இருந்தது.
ஆறுச்சாமிக்கு கண்கள் பனிக்க, அரசி அவரை அன்போடு அழைத்தாள்.
“அப்பா..”
“சொல்லு சாமி”
“நான் உங்க மனசை காயப்படுத்துறதோட்டம் நடந்திருந்தா என்னைய மன்னிச்சிருங் ப்பா” என, அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அவள் கண்களிலும் நீர் பெருக்கு.
“ஆரம்பத்துல நீங்க என்னைய வெறுத்தாலும் முடிவுல புரிஞ்சுப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருந்துதுங் ப்பா. உங்க மனசு வருத்தப்படும்னு நெனச்சு அன்னிக்கு நான் என்ர முடிவுல இருந்து பின்வாங்கி இருந்தா இன்னிக்கு நீங்களும் நானும் இவ்வளவு சந்தோசமா இருந்திருக்க மாட்டோம்ங்” என்றாள். ஆறுச்சாமியும் ஒப்புதலாய் தலையசைக்க, அருந்தமிழின் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்தது அரசியின் அவ்வார்த்தைகள்.
அருந்தமிழ் நிற்பதைப் பார்த்த ஆறுச்சாமி,
“தேவி! நீ இன்னும் தூங்கலையா மா?” என வினவ
“தூ.. தூக்கம் வரலைங் ப்பா” என்றாள் திணறி.
அவளையும் அருகே அழைக்க,
“நான் இங்கயே உங்க கூடையே நம்ம வீட்டுலையே இருந்துக்குறேன்ங் ப்பா” என்றாள் கண்களில் நீரோட்டம்.
“என்னமா சின்னப் புள்ளையோட்டம் பேசுற. என்னிக்கா இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய்த்தானே ஆகோணும். உன்னைய வேலுச்சாமி வீட்டுல பாக்கோணும்னு எத்தனை நாள் கனவு எனக்கு” என பூரிப்பாய் சொல்ல, மௌனமாய் கண்ணீர் வடித்தாள் தமிழ்.
இரு மகள்களையும் அணைத்தவாறு மனையாளது புகைப்படத்தை பார்த்தவர்,
“பாரு வள்ளியம்மா என்ர வளர்ப்பு எப்படின்னு பாரு. நீ மட்டும் இப்போ என்ர கூட இருந்திருந்தா நெம்ப சந்தோசப் பட்டிருப்ப. நம்ம புள்ளைகளாள என்னிக்கும் நமக்கு பெருமைதேன்” என நெகிழ்ச்சியாய்க் கூற, மகள்கள் இருவரது பார்வையும் அன்னையின் மீதே.
இப்போதும் புகைப்படத்தில் இருந்தபடி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் வள்ளியம்மாள்.
விடியல்!
பல பிரச்சனைகளுக்கான தீர்வை தன்னுள் கொண்டு விடிந்தது அந்நாள்.
அரும்பின் இல்லத்தில் தென்னம்பந்தல் போடப்பட்டு முகப்பில் அதைச் சுற்றிலும் சீரியல் செட் லைட்டுகளால் நல்வரவு போர்ட் மின்னிக் கொண்டிருந்தன. வாசல் தோறும் வண்ணக் கோலங்கள் இடம் பெற்றிருக்க கல்யாண வீடு என்று பறை சாற்றியது.
இன்று வரவேற்பு நாளை திருமணம் என்பதால் சொந்த பந்தங்கள் அனைத்தும் மண்டபத்தில் குழுமியிருந்தது.
வரவேற்பில் கஞ்சி மடமடப்புடன் கூடிய வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாய் நின்றிருந்தார் முத்துச்சாமி. வருவோரை எல்லாம் கைகூப்பி வரவேற்றுக் கொண்டிருக்க, முகத்தில் மருந்துக்கும் புன்னகையின்றி அவரருகில் நின்றிருந்தார் மரகதவள்ளி.
அவர்களுக்கு எதிர்முனையில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்றிருந்தார் சரோஜினி. அவரருகில் நடப்பது எதிலும் சிறிதும் விருப்பமின்றி அதை வெளிக்காட்டவும் முடியாமல் அமைதியாய் நின்றிருந்தார் ரத்தினசாமி.
மண்டபத்தின் உள்ளே மாப்பிள்ளைக்கு உருமால் கட்டு சீரெல்லாம் முடிந்து, மணப்பெண்ணுக்கு பொட்டுவைக்கும் நிகழ்வெல்லாம் நடந்து முடிந்தபின் போட்டோகிராபர் தேவராஜனையும் அரும்பையும் ஜோடியாய் படம் பிடிக்கத் தயாராகினர்.
அதைக் கண்ட அரும்போ மெல்ல அவரருகில் சென்று,
“இப்போதிக்கு என்னைய மட்டும் தனியா பிடிங்க நாளைக்கு மாப்ளையோட ஒட்டுக்கா எடுத்துக்கலாம்” என்றாள் ரகசியமாய்.
“அப்போ இவரு மாப்பிள்ளை இல்லீங்ளா அம்மணி?” என சற்று தள்ளி இருந்த தேவராஜனைப் பார்த்தபடி சந்தேகமாய் அவர் வினவ,
“எங்க ஜோடிப் பொருத்தம் நல்லாவா இருக்குதுங்?” என கேள்வியாய் வினவ
“அட அதைய தானுங் அம்மணி நானும் சொல்லிட்டு இருந்தேன். கிளிய வளத்து இப்படி கருங்கொரங்கு கையுல புடிச்சுக் கொடுக்குறாங்களேன்னு” என வீடியோகிராபர் சொல்ல, அரும்பு லேசாய் சிரித்தாள்.
“இவனுக கிட்ட என்ன பேச்சு வேண்டி கெடக்கு உனக்கு” என வேகமாய் அவளருகே வந்த தேவராஜன் புகைப்படக் கலைஞர்களை முறைக்க,
“அது ஒன்னும் இல்லீங் மாமா உங்களையும் என்னையும் நல்லா போட்டோ புடிக்க சொல்லிட்டு இருந்தேன்ங்” என்று உள்ளே எரிச்சல் பொங்க வெளியே புன்னகைத்தாள். அவனோடு இப்படி பேசித் தான் சந்தேகம் வராதவாறு இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள்.
அவள் பேச்சில் ரொமாண்டிக் லுக் விட்ட தேவாரஜனோ,
“சரி வா என்ர பக்கத்துல வந்து நில்லு” என கைப்பிடித்து அழைக்க அரும்பு உள்ளுக்குள் அதிர,
“இந்தாப்பா போட்டோ புடிக்குற தம்பிகளா! என்னையும் நல்லதா ஒரு போட்டோ புடிங்க. என்ர ஊட்டுல பெருசா மாட்டோணும்” என மேடையில் வந்து நின்றார் வேலாத்தாள்.
“விடுங் ஆத்தா அதெல்லாம் பெருசா போட்டோ புடிச்சு கீழ என்னைப்பார் யோகம் வரும்னு எழுதியே கொடுத்திடறோம்” என கேமராமேன் வளைத்து வளைத்து படம் பிடிக்க,
“அரும்பு இங்க வா கண்ணு” என மரகதம் சரியாய் அவளை கீழே அழைக்க தப்பித்தோம் பிழைத்தோம் என கீழே வந்து கொண்டாள் அரும்பு.
நேரம் நகர்ந்திருக்க, அனைத்து சாங்கியங்களும் முடிந்து அனைவரும் முகூர்த்த வேலைகளில் ஈடுபட்டனர். மணவறை அலங்காரம் போய்க் கொண்டிருக்க ஒரு சில உறவுகள் உறங்கச் செல்ல, அரும்போ தன் நிகத்தை கடித்தபடி பதற்றமாய் அமர்ந்திருந்தாள்.
மண்டபத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்துவிட்டாள், குலசேகரன் எங்கும் தட்டுப் படவேயில்லை. இரவு வெகு நேரம் ஆகியும் அவன் இன்னும் வந்திருக்கவில்லை.
“எங்கடி உன்ர மாமனை இன்னும் காணோம்? உங்க ரெண்டு பேரையும் என்ர கையால எடுத்து வளத்துனதுக்கு என்னைய இப்படி பாடா படுத்துறீங்க. நான் பெத்ததுதேன் சரியில்லைன்னு பாத்தா என்ர கூடப் பொறந்ததுமா சரியில்ல? எனக்கு வேற படபடன்னு வருது” என மரகதம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர,
“சும்மா பொலம்பாம இரும்மா. அதெல்லம் மாமா வந்துரும். நாளைக்கு என்ர கழுத்துல அதுதேன் தாலி கட்டும். என்ர மேல சத்தியம் பண்ணி இருந்தாக் கூட நம்பி இருக்க மாட்டேன் உன்ர தம்பி உன்ர மேலையல்லோ சத்தியம் பண்ணிருக்கு” என்று அன்னைக்கு நம்பிக்கை அளித்துவிட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
மொட்டை மாடிக்கு வந்து நின்று வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க,
“எலிக்குட்டி” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.
கைகட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் குலசேகரன்.
“வந்துட்டியா மாமா” என அவனருகே ஓடியவள்
“அந்த கட்டைல போறவன் என்ர கைய புடிச்சுட்டான் தெரியுமா” என எரிச்சலில் புலம்ப,
“அங்கயே அவன் கைய முறிச்சு எறியாம வேடிக்க பாத்துட்டு இருந்தியா” என சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது அரும்பிற்கு.
“ஆமா நீ வந்து வெட்டி முறிப்பைன்னு வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். இங்க தலைக்கு மேல இவ்வளவு வேலை போய்ட்டு இருக்கைல நீ எங்க தான் போய் தொலஞ்ச?” எனக் காய,
“இங்கதேன் உங்கொத்த சரோஜினி கால்ல சக்கரத்தை கட்டிட்டு வேலை பாக்குது, உங்கப்பன் முறுக்கு மீசை ஓடியாடி வேலை பாக்குறாரு, உங்கொப்பத்தா வேலைத்தா விழுந்து விழுந்து வேலை பாக்குது. அப்பறம் நான் என்னத்துக்கு?” என்றான்.
அவள் வேறுபுறம் திரும்பிக் கொள்ள,
“உன்ர காரியத்துலயே கண்ணா இருந்து மத்தவங்கள மறந்துட்டையா? நாளைக்கு நம்ம விக்ரமனுக்கும் கல்யாணம்” என்றதும் தான் நினைவு வந்தது அவளுக்கு.
[the_ad id=”6605″]
அரசியின் உடன் பிறந்த அக்கா கல்யாணம் என்பதினால் அவளால் தன் நிகழ்விற்கு வரமுடியாது போனதில் வருத்தம் தான் அரும்பிற்கு. அவரவர் பிரச்சனைகளில் உழன்று கொண்டு இருவரும் பேசியே பல நாட்கள் ஆகியிருந்தது.
யோசனையோடு குலசேகரன் புறம் திரும்ப,
“விக்ரமனும் வேலுச்சாமி அப்பாவும் இல்லைனா இன்னைக்கு நான் இல்ல. ஒருத்தர் செஞ்ச நன்றியை ஆயுசுக்கும் மறக்கக் கூடாது. அவனுக்கும் என்னைய விட்டா ஆரு இருக்கா? பாவம் ஒருத்தனே அலைஞ்சிட்டு இருந்தான். அதேன் அவனை ஓய்வெடுக்க சொல்லிட்டு நான் கூடமாட இருந்து வேலையெல்லாம் பாத்துட்டு இருந்தேன்” என்று சொல்லவும் அமைதி கொண்டாள்.
“எல்லாம் சரி தான் நாளைக்கு உனக்கும் கல்யாணம் மாமா. அதையும் கொஞ்சம் நியாபகத்துல வெய்யு. விடிஞ்சதும் எப்போவும் போல விக்ரமன் மாமா ஊட்டுக்கு ஓடிராத. நான் உன்னைய தேடிட்டு மண்டபத்துல இருந்து ஓட்டமெடுக்க வேண்டி இருக்கும்” என்றவள்,
“நீ என்ன பண்ணி எங்கப்பா மனசை மாத்தி என்னைய கைப்பிடிக்க போறைனு தெரியல. நினைச்சாலே நடுங்குது. ஏன் மாமா காலைல வரைக்கும் காத்திருக்கறதுக்கு பேசாம ரெண்டு பேரும் இப்போவே இங்கிருந்து ஓடிறலாமா” எனக் கேட்க,
அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தவன்,
“ஊருக்குள்ள உங்கப்பன் எவ்வளவு பெரிய மனுஷன் அவருக்கு அவமானத்தை தேடித்தந்துட்டு ஓடுறாலமா. இதுக்கா நாங்கெடந்து இவ்வளவு கஷ்டப்படுறேன்? ஆயிரந்தேன் அக்கா மகளாவே இருந்தாலும் உங்கப்பன் சம்மதமில்லாம உன்னைய ஏத்துக்க முடியாது அரும்பு” என்றான் திண்ணமாய்.
தகப்பன் சம்மதமின்றி ஏத்துக்க முடியாது என்றதில் அவள் முகம் பேயறைந்தாற்போல் மாற,
“நீ ஓடுறதுக்கு உங்கப்பன் ஓடுனாலாச்சும் கொஞ்சமாவது கொழுப்பும் தொந்தியும் கொறயும். மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கத் தோணும். பேசாம போய் தூங்கு டி. எனக்கு நெறைய வேலை இருக்கு” என கைபேசியை கையில் எடுத்துக் கொண்டு திரும்பி நின்றான் குலசேகரன்.
“பயமா இருக்கு மாமா” என்றாள் அவன் கைப்பிடித்துக் கொண்டு.
“ப்ச் அதான் நான் வந்துட்டனல்ல. இனி நான் பாத்துக்குறேன். நீ போய் நிம்மதியா தூங்கு” என்று அனுப்பி வைத்தான்.
அவள் சென்றதும் மைக் மாரிமுத்துவிற்கு அழைத்து,
“மாப்ள சொன்ன வேலை என்னாச்சு” என்று கேட்க,
“அந்த விசயமா தான் மச்சா பேசிட்டு இருக்கேன். முடிச்சிட்டு கூப்பிடுறேன்” என்று வைத்துவிட, குலசேகரன் பெரிதாய் சிந்தித்தான்.