இப்போதெல்லாம் மஞ்சரியுடன் பேசுவது கூட குறைந்துவிட்டது. அவன் அலுவல்களை முடித்து வருவதே நேரமாகிவிடும். காலையில் எழுந்ததும் சற்று நேரம் பேசுவான்.அதன் பின் இருவருக்குமே வேலைகள் இழுத்துக்கொண்டன. மஞ்சரி வேலையை ராஜினாமா செய்திருந்தாள். ராஜேந்திரனின் அன்றாட அலுவலக மேர்பார்வையை அவள் எடுத்துக்கொண்டு, அவன் தொழிலை மேலும் முன்னெடுத்துச் செல்ல நேரம் அளிப்பதாய் ஏற்பாடு.
கல்யாண மண்டபத்திற்கு இரு குடும்பத்தினரும் பின் மதியம் வந்து சேர்ந்தாலும், மஞ்சரி, சங்கீதாவுடன் பார்லர் சென்றுவிட்டாள். மாலை ஆறு மணி போல அலங்காரப் பதுமையாய் அவள் வந்து இறங்கவும், ஆரத்தி தட்டுடன் பெண்ணை அழைக்க கோமதி அவர்கள் சொந்ததிலில் இருந்த வயதான பெண்மணிகளுடன் வந்து வரவேற்றார்.
கண்கள் ராஜேந்திரனைத் தேடியது. அதைப் பார்த்த கோமதி, அவளை மணப்பெண் அறைக்கு அழைத்துச் சென்றவாறே, “மாப்பிள்ளை அழைக்க பக்கத்துல இருக்க கோவிலுக்கு போயிருக்காங்க மஞ்சு. நானும் போகணும். உன்னை அழைக்கத்தான் காத்திருந்தேன். இன்னும் அரை மணியில ராஜாவோட திரும்பிடுவோம்.”, என்று கூறி, அவளை நெட்டி முறித்து, “அழகா இருக்கேம்மா, என் கண்ணே பட்டிருக்கும்.” என்றார்.
புன்னைகையோடே அவரை விடை கொடுத்தவளிடம், சங்கீதா ஒரு பெருமூச்சுடன், “ பரவாயில்லை, என் மாமியார் மாதிரி இல்லாம, உன் முகத்தை பார்த்தே உன் கேள்விக்கு பதில் சொல்றாங்க. மனசார பாராட்டறாங்க. “ என்றாள்.
‘அவங்களை உரசாத வரைக்கும்’, என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் மஞ்சரி. அதற்குள் அவர்கள் பக்க ஆட்கள் வரவும், பேச்சு அத்துடன் நின்றது.
ஒரு வழியாய் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, பெண் அழைத்து நலங்கு வைத்து இருவரையும் ஜோடியாக மேடை ஏற்றினார்கள். மஞ்சரியைப் பார்த்து ராஜேந்திரன் சொன்ன முதல் வார்த்தைகள் , “தாங்க்ஸ் மஞ்சரி, நான் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ்.”
புன்னகை தவழ “பிடிச்சிருந்ததா ?”, என்று கேட்டாள்.
“ம்ம்… நான் பார்த்து வெச்சிருந்ததை விட புது மாடல். ஆனா அவ்வளவு விலையாச்சே, ஏன் உங்கப்பாவுக்கு செலவு வெச்சே ?”
கேட்டதும் முறைத்தாள் அவனை. அதற்குள், “மேடம், கொஞ்சம் சிரிச்சாப்புல பாருங்க சாரை. காண்டிட் போட்டோஸ் எடுக்கறோம்.”, என்று போட்டோகிராபர் சொல்லவும், அவரை முறைத்தாள்.
“ஹே.ஈசி. அவர் வேலையை பண்றார். என்னைப் பார்த்து லவ் ஃபீலோட ஒரு லுக் விடுமா, கோவமெல்லாம் அப்பறமா பட்டுக்கலாம். நாள பின்ன நம்ம குழந்தைங்க பார்த்தா, காதல் கல்யாணமில்லை இது கட்டாய கல்யாணம்னு சொல்லிடப் போறாங்க. “, என்று கெஞ்சவும் பெரிய மனது பண்ணி கொஞ்சம் சிரித்து வைத்தாள்.
வாழ்த்து சொல்ல வருபவர்கள் கூட்டம் சற்று குறையவும், மெதுவாய் “அப்பத்துலர்ந்து யோசிக்கறேன். என்ன சொன்னேன்னு கோவப்பட்ட மஞ்சரி ? உங்க அப்பாவுக்கு ட்ரபுள் எதுக்குன்னுதானே கேட்டேன் ?”, என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான்.
“அதெப்படி நீங்க அப்பாதான் பணம் கொடுத்தார்ன்னு நெனைக்கலாம் ? இது என்னோட கிஃப்ட். என் சம்பளத்துல நான் வாங்கி குடுத்தேன்.” , புருவம் சுளித்து மெல்லிய குரலில் கடித்தாள்.
“ஹோ… என் தப்புதான். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். எனக்கு பிடிச்சதை ஞாபகமா வாங்கிக் குடுத்ததுக்கு.”, என்றதோடு நிற்காமல், அவன் அணிந்திருந்த பிளேசர், ஷர்ட் கையை இழுத்துவிட்டு, அவள் அளித்திருந்த டாக் ஹாயர் வாட்ச் தெரியும்படி கையை திருப்பி அவள் தோள் மீது வைத்து,
“என் ஃபியான்சி வாங்கிக் குடுத்த வாட்ச் தெரியறா மாதிரி, ஒரு போட்டோ எடுப்பா. “, என்று போட்டோகிராபரையும் ஏற்றி விட்டான். இதை எதிர்ப்பார்க்காத மஞ்சரிதான், “ நம்மாளுக்கு இப்படியெல்லாம் கலாட்டா பண்ணத் தெரியுமா ? நாம பண்ணாலே வேண்டாம்னு கெஞ்சுவாரு.”, என்று முழித்தாள்.
“என்ன ?”, என்று புருவம் உயர்த்தியவனைப் பார்த்து, “யாருப்பா நீ? என் ராஜனை என்ன பண்ண ?” , என்று யோசனையாய் கேட்கவும், அதிர்ந்து சிரித்தவனை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மஞ்சரி.
[the_ad id=”6605″]
கீழிருந்து அவர்களுக்குக் குடிக்க குளிர் பானம் கொண்டுவந்த வேதா, “அண்ணா, அம்மா கல்யாணம் முடியற வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொன்னாங்க. எல்லாரும் இதை அரேன்ஜ்ட் மாரேஜ்ன்னு நெனச்சிட்டு இருக்காங்க. அப்படியே இருக்கணுமாம்.”, என்று கண்ணடித்துச் சொல்லவும், மஞ்சரி சிரிக்க, ராஜேந்திரந்தான் கடுப்பானான்.
“இந்த அம்மா வந்தவங்களை கவனிக்காம என்னை ஏன் பார்த்துட்டு இருக்காங்க. கொஞ்சம் சொல்ல மாட்டியா நீ ?”, என்று தங்கையைக் காய்ந்தான்.
“நானும் சொல்றேன். நீயும் கொஞ்சம் அடக்கி வாசி. “, என்று சொல்லிவிட்டுப் பறந்தாள் வேதா.
“நீ எனக்கு வாட்ச் வாங்கச் சொல்லி அவரை பண்ண அலம்பலையெல்லாம் சொன்ன விக்ரம், பணம் நீ கொடுத்தன்னு சொல்லலை மஞ்சரி. எப்பவோ ஒரு வாட்டி இந்த வாட்ச் பத்தி நாம பேசினது, உனக்கு ஞாபகம் இருந்துச்சா? “
“உங்களுக்கு மட்டும்தான் என்னைப் பத்தின எல்லா விஷயமும் ஞாபகம் இருக்குமா ? எங்களுக்கும் இருக்கும்.”, என்று செல்லமாய் நொடித்து அவனைப் பார்க்கவும், முகம் கனிந்து ராஜேந்திரன் அவளைப் பார்க்க, செவ்வனே அந்த நொடி காமராவில் பதிந்தது. அவர்கள் படுக்கை அறையிலிருந்து அவனின் கைபேசித்திரை வரை அந்தப் புகைப்படமே அலங்கரிக்கப் போகிறது.
மறுநாள் திருமண வைபோகம் இனிதே நடந்தது. மஞ்சரி பிரியப்பட்ட லோட்டஸ் பிங்க் நிற சேலையில் பொருத்தமான மிதமான நகைகளுடன் , விரும்பியவனைக் கைப்பிடித்த சந்தோஷம் முகத்தில் மின்ன ராஜேந்திரன் கண்களுக்கு விருந்தாய் இருந்தாள். முயன்று பார்வையைத் திருப்பினாலும், கள்ளுண்ட வண்டாய் அவளிடமே சுற்றிக்கொண்டிருந்தது அவன் கண்கள்.
திருமணம் முடிந்த கையோடு, ராஜன் அணிவித்திருந்த வைர நெக்லஸ் கவனிக்கப்பட்டது. முதல் ஆளாய் காயத்ரி வேதாவைக் கேட்க, “ இது அப்பா அம்மா போட்டதில்லை அண்ணி, அண்ணா அவங்க மனைவிக்கு வாங்கி குடுத்திருக்காங்க. உங்களுக்கு ரகு அண்ணன் வாங்கிக் குடுத்தது போல”, என்று அவள் போட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினாள். அதற்கு மேல் என்ன பேச ?
[the_ad id=”6605″]
திருமணம் முடிந்த மூன்றாவது நாள் காலை விமானத்தில் டில்லி சென்று, அங்கிருந்து குலு மனாலி செல்வதாய் ஏற்பாடுகள் முடித்திருந்தான். ஒரு வாரம் தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்புவதாய் திட்டம். மஞ்சரியிடம் எங்கே என்று சொல்லாமல், ஒரு வாரம் இல்லை என்பதை வீட்டில் சொல்லிவிடு என்று சொல்லியிருந்தான்.
மறுவீடு, கோவில் என்று முக்கியமான நிகழ்வுகளை முடித்து, கிளம்பியிருந்தார்கள். டில்லி வந்து, அங்கிருந்து இன்னொரு சிறிய விமானத்தில் குலு, பின் மலையோரத்தின் வளைவுகளை ஒட்டி ஒரு கார் பயணம் அதில் ஒரு ட்ராஃபிக் ஜாம் என்று ஒரு வழியாய் ஹோட்டலுக்கு வந்து விழுந்தார்கள்.
ரிசார்ட் சற்று தள்ளியிருக்கவும், சீசன் நெருக்கடியை தவிர்த்து இயற்கையை மட்டுமே காட்டியது. இமய மலை பனி முகடுகளும், ஓடிக்கொண்டிருந்த பீஸ் நதியின் ஒரு கிளையும் , என்று கண்களை நிறைத்துக்கொண்டிருந்தவள், இருள் கவியத் தொடங்க உறைக்க ஆரம்பித்த குளிரை உணர்ந்து அதை சமாளிக்க ராஜேந்திரனின் அணைப்புக்குள் மேலும் ஒன்றியவள்,
“சூப்பர் சாய்ஸ் ராஜன். இவ்ளோ தூரம் ட்ராவல் பண்றது வொர்த்தான். நான் தமிழ் நாடு இல்லை கேரளாதான் இருக்கும்னு நெனச்சேன்.“, என்றாள்.
“ நமக்கு தெரிஞ்ச சொந்தக்காரங்க யாரும் இல்லாத இடமா பார்த்து செலக்ட் செஞ்சேன். அதுக்குதான் நார்த் பக்கமா பார்த்தேன். முக்கால்வாசி இடம் வெயில் வாட்டும் இப்ப, அதான் ஒரு ஃப்ரெண்ட் போயிட்டு வந்து சொல்லவும், உடனே புக் பண்ணிட்டேன்.” , அவள் உச்சந்தலையில் குனிந்து ஒரு முத்தமிட்டவாரே சொன்னான்.
“ஏன், சொந்தக்காரங்க இருந்தா என்ன ?”
“அங்க போகணும், விருந்துக்கு வாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு உன்ன யார் கூடவும் ஷேர் பண்ணவேண்டாம். இதுவரைக்கும் எல்லாரும் நம்மளை படுத்தினதே போறும். “ , அவனின் அணைப்பு மேலும் இறுகியது.