மண்வாசம் 22 :
தன் அம்மச்சி வீடு அடையாளம் தெரியாத அளவில் மாறிப் போயிருந்ததை நம்பமுடியாது பார்த்திருந்தாள் அரும்பு.
“என்னடா புதுசா காம்பௌண்டு எல்லாம் கட்டி இவ்வளவு பெருசா கேட்டெல்லாம் போட்டிருக்க?” தன் தம்பியிடம் ஆச்சர்யமாய் கேட்டார் மரகதவள்ளி.
“இத்தனை நாள் நான் மட்டுந்தேன் இருந்தேன் அதனால மூங்கில் தடுப்பே போதும்னு விட்டுட்டேன். இனியும் அப்படியாக்கா” என்றவன் பார்வை பாவையினோரம்.
“எப்படா இந்த வேலை எல்லாம் பாத்த?”
“நீ கல்யாண வேலைய பாத்த நேரத்துல நான் காம்பௌண்டு வேலைய பாத்தேன் க்கா” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் குலசேகரன். அரும்பு தன் மாமனை மெச்சுதலாய் பார்க்க, இருவரையும் அருகருகே நிற்க வைத்து ஆரத்தி சுற்றினாள் மைக் மாரிமுத்துவின் மனைவி பிரியா.
இருவரும் ஜோடியாய் தத்தம் வலக்கால் எடுத்து வைத்து வீட்டினுள் நுழைய, அகத்தினுள் ஆனந்தமழை பொழியப் பார்த்துக் கொண்டிருந்தார் மரகதவள்ளி.
விளக்கேற்றிய பின்னர் பால் பழ சடங்குகள் எல்லாம் முடிவுற்று அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்படியே நேரம் நகர்ந்ததும் மதிய உணவிற்கான வேலைகளை பிரியாவும் மரகதமும் சென்று பார்க்க, அரும்பு சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்றாள்.
பிரியா உள்ளே சென்றதை உறுதிபடுத்திக் கொண்ட மாரிமுத்து, குடும்பஸ்தன் என்ற முறையில் குலசேகரனுக்கு பல அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தான்.
“மச்சா! குடும்பஸ்தன் ஆனாலே நீ சகலமும் பழகிக்கோணும். ஊருக்கே நீ ஒளி கொடுக்குற வெளக்கானாலும் ஊட்டுக்கு என்னமோ நீ வெளக்குமாறுதேன்”
“நானா??”
“நீயுனா நீ இல்ல மச்சா, நம்ம ஆண் வர்க்கமே” என்றவன் தொடர்ந்தான்,
“நீ என்னதேன் ஊருக்குள்ள கட்டுக்கடங்காத காளையா, கம்பீரமான காட்டு ஆணையா வலம் வந்தாலும் ஊட்டுக்குள்ள உன்ர ஊட்டுக்காரி கரண்டிய கையில எடுத்தா கபக்குன்னு கால்ல விழுந்துபோடு தப்பே இல்ல. ஏன்னா நான் அப்படித்தேன் பண்ணுவேன்” என,
‘அட மானங்கெட்ட மாரிமுத்து’ என்று குலசேகரன் பார்த்திருக்க, கிளுக் என்று கேட்ட சிரிப்பு சத்தத்தில் இருவரும் திரும்ப, அங்கு அரும்பு தன் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
“ஆனாலும் மாப்ள உன்னைய எப்படித்தான் இந்த பிரியா கல்யாணம் கட்டுச்சோ” என வருத்தப்படுவது போல் குலசேகரன் உச் கொட்ட,
“ஒரே ஒரு கவிதை தான் மாப்ள சொன்னேன். அதுக்கே கட்டுனா என்னைய தான் கட்டுவேன்னு பிரியா அவங்கப்பன் கிட்ட ஒத்தக் காலுல நின்னுட்டா” என்றான் மாரிமுத்து.
“அப்படியா! அப்போ அந்த கவிதையை சொல்லுங்க ண்ணா” என்றபடியே அரும்பு வந்து அவர்களோடு அமர்ந்துகொண்டாள்.
[the_ad id=”6605″]
உடனே மாரிமுத்து தன் தொண்டையை செருமிக் கொண்டு,
“பிரியமான பிரியா!
நீ என்ர கூட வரியா
வாங்கித்தாரேன் ஆட்டுக்கறியா
உங்கப்பனுக்கு என்ன வெறியா?
நம்மள பிரிக்குறதுலையே இருக்காரு குறியா
இப்படி கடுதாசிலையே காதல் பண்ணுனா சரியா?
கல்யாணம் கட்டிக்குவோம் மொறையா
பிரியா! பிரியா! பிரியா!
நீ வரியா? வரியா? வரியா?”
என்று முடிக்க, அரும்பு விழுந்து விழுந்து சிரிக்க, சமையல் அறைக்குள் இருந்து கரண்டியோடு எட்டிப் பார்த்தாள் பிரியா. அதில் வாயை இறுக மூடிக்கொண்டான் மாரிமுத்து.
அந்நேரம் பார்த்து சரியாக அவனுக்கு கைபேசி அழைப்பு வர, தப்பித்து வெளியே சென்றுகொண்டான். சில நிமிடங்களில் அவன் தீவிர முகபாவனையோடு உள்ளே வருவது கண்டு,
“என்னாச்சு மாப்ள?” என குலசேகரன் கேட்க, ஊர்த் தலைவர் ஆறுச்சாமியின் இல்லத்தில் நடந்த திருமணம் பற்றி தெரிவித்தான். உடனே குலசேகரனுக்கு மனம் ஆனந்தத்தில் மிதக்க, அரும்போ உள்ளுக்குள் பெரிதாய் அதிர்ந்து போனாள்.
சிறிது நேரத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு மாரிமுத்துவும் பிரியாவும் கிளம்பிவிட, மாலை வரை உடனிருந்த மரகதமும் அதன்பின் கிளம்புவதாய் தெரிவித்தார்.
குலசேகரனும் அரும்பும் அவரை தங்களோடு இருக்கச் சொல்ல மறுத்தவர் அரும்பிற்கு பல அறிவுரைகளை வழங்கிவிட்டு கிளம்பிக் கொண்டார். அதில் முதன்மையானது குலசேகரனை ஒருமையில் அழைக்கக் கூடாது என்பது தான்.
அவர்களைத் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லாது போக, மெல்ல அரும்பின் அருகில் வந்தமர்ந்தான் குலசேகரன்.
அவளோ விடாது தன் கைபேசியில் அரசிக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு முறை கூட அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் கவலையோடு அமர்ந்திருந்தாள்.
“எனக்கு பதினாரு வயசிருக்கும், அப்பிருந்து நான் ஒருத்தனுமேதேன் இந்தூட்டுல இருக்கேன். இப்போ நீ வந்துட்டடி எலிக்குட்டி. இந்த வீடே நெறஞ்சு போனதோட்டம் இருக்குது” என மனம் நிறைந்துபோய் பேசிக்கொண்டிருக்க, அரும்போ அவனை முறைத்து வைத்தாள்.
“இப்போ என்னத்துக்கு இந்த மொற மொறைக்குற?” என,
“அங்க அரசி என்ன பண்ணுறாளோனு ஏது பண்ணுறாளோனு இங்க என்ர மனசு கெடந்து அடிச்சுக்குது. நீ என்னடானா பதினாரு வயதினிலே படம் ஓட்டிட்டு இருக்கற. செத்தநேரம் பொட்டோட்ட உக்காரு” என்று காய, அவளையே பார்த்தவன்
“இந்நேரம் எங்கக்கா மட்டும் இருந்திருந்தா தோசைக் கரண்டிய பழுக்க காய்ச்சி உன்ர வாய் மேலையே சூடு வெச்சிருக்கும்” என்றான்.
உடனே மரியாதை மிஸ்ஸிங் என்று கண்டு கொண்டவள்,
“அதில்லைங் மாமாங். திடுதிப்புன்னுங் அரசியைங் புடிச்சுங் உங்க ப்ரெண்டுக்குங் கட்டி வெச்சாங் பாவம்ங் அவ எப்படிங் அதைய ஏத்துகிட்டுங் இருந்திருப்பாங் மாமங்” என்றாள் சொல்லுக்கு சொல் ‘ங்’ சேர்த்து.
அதில் நெஞ்சை பிடித்துக் கொண்ட குலசேகரன்,
“நீ எப்பையும் போலையே பேசு மா” என்றுவிட்டான்.
“ஏன் மாமா! தமிழ் அக்கா அந்த சேத்துமடை ஊராட்சி தலைவர் மகனை கல்யாணம் பண்ணிக்கவும் தான் நம்ம அரசி நிர்பந்தத்துனால விக்ரமன் மாமாவை கல்யாணம் பண்ணிருப்பாளோ” என கண்களை இப்படியும் அப்படியுமாய் உருட்டிக் கொண்டிருக்க,
“எலிக்குட்டி! ரொம்ப யோசிக்காத. நீ எப்படி என்னைய உத்து உத்து பாப்பியோ அப்படித்தான் புலியும் விக்ரமனை பாக்கும்” என்றான்.
“நான் என்னோ உன்னைய உத்து உத்து பூதக் கண்ணாடிலையா பாத்தேன்” என அரும்பு கேட்டுவைக்க,
“அட கூறுகெட்ட குப்பாத்தா” என்றவன் தான் அறிந்த அவள் அறியா விடயங்களை அவள் காதில் போட்டான். அதன் பின்னரே கண்கள் மின்ன,
“அப்போ சரியாத்தேன் ஜோடி சேர்ந்திருக்கா? எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது மாமா” என அவன் கையைப் பிடித்து உலுக்க,
‘இனி காலம்பூரா இவளுகளை கட்டி மேய்க்குறதுக்கு நானும் விக்ரமனும் நாலஞ்சு எரும மாடுகள கட்டி மேய்சுப்போடலாம்’ என நினைத்துகொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தான் குலசேகரன்.
மரகதம் எந்தவித பயமோ தயக்கமோ இன்றி அவரது இல்லத்தில் அடியெடுத்து வைத்தார்.
முத்துச்சாமி சோகமே உருவாய் நாற்காலியில் சாய்ந்திருக்க,
“காத்திருந்தவ புருசன நேத்து வந்தவ தட்டிட்டு போன கதையோட்டமில்ல இருக்குது. ஆரு சொத்து ஆருக்கு போறது” என்ற வேலாத்தாளின் குரல் மட்டும் வாசல் வரை ஒலித்தது.
இருவரையும் பார்த்தபடி மரகதம் முன்னேறி வர,
“அவடத்திக்கே நில்லு” என்ற வேலாத்தாளின் குரலில் வேகமாய் வாசலைப் பார்த்தார் முத்துச்சாமி.
“உள்ளார அடியெடுத்து வெச்சா கால வெட்டிப்புடுவேன் வெட்டி” என, மாமியாரை பார்த்துக்கொண்டே உள்ளே வந்து நின்றார் மரகதம். முத்துச்சாமியும் எழுந்து அவரருகில் வர,
“அந்த அளவுக்கு ஆகிப்போச்சா? இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகோணும். இந்தூட்டுல ஒன்னு நான் இருக்கோணும் இல்ல இவ இருக்கோணும். நீயே முடிவு பண்ணு முத்துச்சாமி” என்றார் வேலாத்தாள்.
“நான் இந்தூட்டு மருமக. என்னைய இங்கிருந்து போகச் சொல்லுறதுக்கு ஆருக்கும் உரிமையில்ல. ஏன் என்ர ஊட்டுக்காரருக்கே உரிமையில்ல” என மகரதம் பதில் பேச,
“நீ என்ன முத்துச்சாமி பாத்துகிட்டு நிக்குற? மண்டபத்துல இவ பேசுன பேச்செல்லாம் மறந்து கீன போச்சா” என வேலாத்தாள் மகனுக்கு எடுத்துக் கொடுக்க,
“மரகதாஆ..” என மனைவியிடம் குரலை உயர்த்தினார் முத்துச்சாமி.
வேலாத்தாளுக்கு உள்ளுக்குள் ஒரே கொண்டாட்டமாய் இருந்தது. அதற்கு ஆயுள் என்னவோ வெறும் ஓர் நொடிதான். மரகதம் அவரையே பார்க்க,
“தலை வலிக்குது கொஞ்சம் சூடா டீ கொண்டா” என்றிருந்தார் முத்துச்சாமி.
சோர்ந்துபோய் இருந்த அவர் முகத்தைப் பார்க்கவே பாவமாய் இருந்தது மரகதத்திற்கு. அவருக்கு சிறு தலையசைப்பை அளித்துவிட்டு சமையலறைக்குள் சென்றார். அன்னையிடம் வந்த முத்துச்சாமி,
“மரகதா பொறுமைக்கு பேர்போனவங் ம்மா. அவளே இன்னிக்கு மண்டபத்துல அத்தனை பேரு முன்னாலையும் அப்படி பேசியிருக்கான்னா உள்ளுக்குள்ள நெம்ப காயப்பட்டு போயிருக்கா. நாந்தேன் தப்பு பண்ணிப்போட்டேன்” என்றுவிட்டு அவர் அறைக்குள் செல்ல, வாய்மேல் கைவைத்து அதிர்ச்சியாய் நின்றிருந்தார் வேலாத்தாள்.
சமையலறைக்குள் இருந்து எட்டிப் பார்த்த மரகத்தின் இதழ்களில் புன்னகை பூக்க, உடனே இஞ்சி தட்டிப் போட்டு முத்துச்சாமிக்கு தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு சென்றார்.
கருகிப் போயிருந்த தாவரத்தில் புரிதல் என்னும் தளிர்கள் மெல்லத் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.
[the_ad id=”6605″]
இரவு நெருங்கியும் வெள்ளையன் வீடு வராதது கண்டு வாசலையே பார்த்திருந்தாள் அரும்பு.
“எங்க மாமா நம்ம வெள்ளையனை இன்னும் காணோம்?” என்று குலசேகரனிடம் கேட்க,
“அந்த ஆணழகன் எங்க சுத்தப் போயிருக்கானோ. அநேகமா பக்கத்து தெரு கருப்பாத்தா வீட்டு வெள்ளச்சியை பாக்கத்தான் போயிருப்பான். கருப்பாத்தா சீவக்கட்டயாலையே இவன் கால் காலா ரெண்டு போட்டா தன்னப்பாட்டுல வீட்டுக்கு வந்திருவான்” என்றான்.
“ஓஹோ! நாங்கூட நீ வளத்துற நாயாச்சே கடைசி வரைக்கும் தனி மரமாத்தேன் சுத்தப் போகுதுன்னு நெனச்சேன். ஆனா வெள்ளையன் பலே கில்லாடியா இருக்கான்” என்று பெருமையாய் சொல்ல,
“ஒரு நாய இன்னொரு நாயாலதேன் பாராட்ட முடியும்” என்றதில் அரும்பு அவனை முறைக்க,
“இல்லடி எலிக்குட்டி அந்த நாய நீயேன் தேடுற, நமக்கு பேச நெறைய நாயம் இருக்கேன்னு சொன்னேன். ஆமா உனக்கு அந்த பரிச்சை எப்போ வருது?” என்று கேட்க,
“நானே உன்ர கிட்ட இதப்பத்தி பேசோணும்னு இருந்தேன் மாமா. இன்னிக்கு காலைல மண்டபத்துல வெச்சு எல்லார் முன்னாடியும் நம்ம நல்லா வாழ்ந்து காட்டுவோம்னு பேசிட்டு வந்தேன். அதோட்டம் நம்ம முன்னுக்கு வந்து காட்டோணும் மாமா” என, அவளை பெருமையாய் பார்த்திருந்தான் குலசேகரன்.
“இன்னும் ரெண்டே வாரந்தேன் இருக்கு பரிச்சைக்கு. இந்த தடவ டைரெக்ட் இண்டர்வ்யூ போஸ்ட் மாமா. நான் அதுல செலக்ட் ஆகி வேலைக்கும் போய் காட்டோணும். நம்மள அவமானப் படுத்துனவங்க முன்னால நம்ம நல்லா வாழ்ந்து காட்டுறதுதேன் அவங்களுக்கு நம்ம கொடுக்குற பதிலடியா இருக்கும்” என, பௌர்ணமி நிலவாய் பிரகாசித்தான் குலசேகரன்.
அவள் அடுத்து கூறிய விசயத்தில் பௌர்ணமி அமாவாசை ஆனது.
“இதெல்லாம் நடந்தப்பறந்தேன் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கோணும்” என்றிருந்தாள்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அப்பத்தான் நமக்கு ஒரு வெறி வரும். வெறி இருந்தா தான் வாழ்க்கைல முன்னேற முடியும். என்ர கொள்கையயும் நிறைவேத்த முடியும். என்ர கொள்கைக்கு இடையூரா நான் எதையும் வர விடமாட்டேன்”
“என்னையுமா”
“உன்னையுந்தேன். அம்மா நமக்கு சாப்பாடு செஞ்சு வெச்சிட்டுத்தேன் போயிருக்குது. நீ சாப்டுப்போட்டு வந்து வெளிய படுத்துக்கோ” என்றுவிட்டு எழ,
“என்னது வெளிய படுக்குறதா?” என்று அவன் கூறியது கேட்டாலும் கேட்காததுபோல் சென்றாள் அரும்பு.
சிறிது நேரத்தில் இருவரும் இரவு உணவை முடித்துக்கொள்ள, பாய் தலையனையை எடுத்து வந்து குலசேகரனின் கைகளில் திணித்தாள் அரும்பு.
“அப்படியே ஒரு காவி வேட்டியும் கொடுத்தா இப்படியே காசிக்கு போய்டுவேன்” என,
‘கல்யாணம் பண்ணிக்கோன்னு உன்ர பின்னாலையே நாயோட்டம் சுத்துனப்ப எப்படியெல்லாம் என்னைய அலையை விட்டு வேடிக்கை பாத்திருப்ப. போ போ’ என நினைத்து அவனைப் பிடித்துத் தள்ள, அதற்குள் வெள்ளையனின் குரல் கேட்கவும் வெளியே ஓடி வந்து கேட்டை திறந்துவிட்டாள்.
அரும்பைக் கண்டு வெள்ளையனுக்கு கால் தரை படவில்லை. சன்னமாய் கத்திக் கொண்டும் அவளை உரசிக் கொண்டும் அவள் மேல் தொத்திக் கொண்டும் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
“என்னடா வெள்ளையா இப்படி துரும்பா எளச்சுப்போய்ட்ட? விடு நான் வந்துட்டனல்லோ இனி உன்னைய நல்லா பாத்துக்குறேன்” என்று அவன் நெற்றியை நீவிக் கொடுத்து முத்தமிட, அவனும் வாலை ஆட்டிக்கொண்டு அவள் கரத்தை நக்கினான்.
“இதுக்கு நீ இவனையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்” என்றான் குலசேகரன்.
“இவனுக்கு என்ர மேல இருக்குற பாசத்துல கொஞ்சமாச்சும் உனக்கு இருக்கா மாமா? அடுத்த ஜென்மத்துல இவன் நீயா பொறக்கோணும் நீ நாயா பொறக்கோணும் அப்போதான் இந்த அரும்போட அருமை தெரியும்” என அரும்பு சொல்லவும்,
“என்னடி சொன்ன” என அடிக்க ஏதாவது கிடைக்குமா என சுற்றிலும் பார்க்க, அரும்பு உள்ளே ஓட்டமெடுக்க வெள்ளையன் பின்வாசலுக்கு ஓட்டமெடுத்தான்.
உள்ளே ஓடிவந்தவள் விரைந்து கதவை தாழிட்டுக்கொள்ள,
[the_ad id=”6605″]
“கதவை தொறடி” என்று வெளியில் இருந்து குலசேகரன் தட்ட,
“நீ என்ன தட்டுனாலும் இந்தக் கதவு தொறக்காது மாமோவ்” என்றாள் அவன் மஞ்சள் நீராட்டத்தின் போது சொல்லியது போல்.
‘கல்யாணம் ஆன மொதோ நாளே எங்கக்கா மக இப்படி என்னைய நடு வாசல்ல தள்ளிட்டாளே’ எனப் புலம்பியபடி வாசலில் வந்து பாயை விரித்துப் படுத்தான்.
யன்னல் வழியாக அவன் படுத்திருப்பதை பார்த்து சிரித்துவிட்டு அவள் பையிலிருந்த புத்தகத்தை எடுத்து புரட்டத் துவங்கினாள் அரும்பு.
அதுவரையில் சிலுசிலுவென வீசிய காற்று சிறிது நேரத்திலேயே தன் வேகத்தைக் கூட்ட, குலசேகரனின் நிலை கண்டு விண்ணிலிருந்து ஒரு துளி வந்து அவன் முகத்தில் விழுந்தது. அதில் கண்விழித்தவன்,
‘மழை வருமோட்ருக்குது’ என கார்மேகம் சூழ்ந்த வானத்தைப் பார்த்திருந்தான்.