செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 36_2
சூரியன் அஸ்தமித்திருந்தது. இருள் கவ்வ ஆரம்பித்திருக்க, வேலை முடிந்து அவரவர்.. அவரவர் கூட்டில் அடங்கியிருக்க.. இரண்டு பறவைகள் அவர்கள் உலகில்.
இருவாட்சி நன்கு வளர்ந்திருந்தது. சில கொடிகள் மரத்தைப் பற்றிப் பிடித்திருக்க சிலது கீழே பற்றில்லாமல் கிடந்தது. கீழே தரையிலிருந்த கொடியை மரத்தைச் சுற்றி படரவிட்டுக்கொண்டிருந்தவள் முகம் சரியில்லை.
மரத்தைச் சுற்றி திண்டிருக்க, வீட்டினர் அங்கு அமர்ந்திருந்தால் வெளியாட்கள் பார்க்க முடியாத அளவில், அந்த இடத்தை சுற்றி ஆள் உயரத்திற்குப் பனை ஓலை சுவர் எழுப்பியிருந்தான். ஓலை சுவரை ஒட்டி செம்பருத்தி பல நிறங்களில்.
“என்ன துளசி மா? காலையில இருந்தே உன் முகம் சரியே இல்ல. என்ன ஆச்சு என் குட்டி பொண்ணுக்கு?” மூர்த்தியும் எப்படி எல்லாமோ கேட்டுவிட்டான்.. பதில் இல்லை.
“ஒன்னும் இல்ல..” வேலையில் கவனமாயிருப்பது போல் காட்டிக்கொண்டாள்.
“பாரு நம்ம அக்ரிமெண்ட்ட நீ மறந்து போயிட்ட… சொல்லு. என்ன பிரச்சினை உனக்கு?” கையை பிடித்து அவன் முன் நிறுத்திக் கொண்டான்.
“நாளைக்கு என்னை விட்டுட்டு ஊருக்கு போறிங்க…” அழுதுவிடுவாள் போல் தோன்றவும்.. சுற்றும் முற்றும் பார்த்தான். எப்பொழுதும் போல் ஆள் அரவமில்லை. மெல்ல அவள் முகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள..
அதற்குத் தான் காத்திருந்தவள் போல் இறுகக் கட்டிக் கொண்டாள். ஏழு மாதம் பின் இன்று தான் அணைத்திருக்கிறாள்.
“நானும் வாரேன் மூர்த்தி சார். நீங்க இல்லாம நான் இங்க இருக்கல..”
“அங்க மாமி கூட இல்ல. தனியா என்ன பண்ணுவ? ரெண்டு வாரம் தானே.. இங்க இருந்தா நிமிஷமா போயிடும். உன் அடிமை செல்வன் இருக்கான், நீ சொல்லறத எல்லாம் கேக்க. குட்டி பாப்பா இருக்கு கொஞ்ச. பாரதியும் தங்கமும் இருக்காங்க.. உன் வாலு பிடிச்சு நடக்க. அப்புறம் என்ன? நிமிஷமா ரெண்டு வாரம் போயிடும் துளசிமா..”
“நீங்க இல்லாம நிமிஷம் கூட வருஷமா தான் போகும்! நானும் வரேன். (https://nuttyscientists.com/) ” அடம் பிடித்தாள்.
திண்டில் அமர்ந்துகொண்டவன் தோளில் சாய்ந்தே அமர்ந்திருந்தாள். இருந்துவிடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் நாளை சென்றுவிடுவான் என்றதும் உள்ளுக்குள் வெறுமை.
அன்று இரவும் மூர்த்தியின் அணைப்பில் தூங்கியவள், சேவல் கூவும் முன்னமே எழுந்துவிட்டாலும் மூர்த்தி அருகில் இல்லை. தரிசனமும் இல்லை!
ஏனோ தானோ என்று காலைக்கடன்களை முடித்தவள் அடுக்களைக்குள் நுழைந்தாள். கவனம் அடுப்பில் இல்லை. இரண்டு முறை விரலை சுட்டுக் கொள்ளவுமே முத்து கண்டுகொண்டார்.
“போதும் நீ சுட்டுகிட்டது! போய் ஒரு பத்து நிமிஷம் படுத்து வலது பக்கமா எழுந்திரு. போ..” என்று அனுப்பிவிட்டார்.
விடிந்ததும் வாழைத் தோட்டத்துக்கு சென்றவன் வேர்த்த உடலைக் கழுவிவிட்டு ஒன்பது மணியளவில் அறைக்குள் நுழைய.. அவன் எதிர்பார்த்தது போலவே துளசி மெத்தையில் தான் இருந்தாள்.
கண் மூடி படுத்திருந்தவள் கூந்தல் தரையைத் தழுவி இருக்க.. தலை மட்டும் கட்டிலுக்கு வெளியே தொங்கிக்கொண்டு! கேட்டால்.. மூளை சுறுசுறுப்பாகும்.. தலைக்கு ரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்லும் என்று ஏதேனும் கதை கூறுவாள். பலமுறை கேட்டிருக்கிறான், இந்த கதையை.
கதவு திறக்கும் சத்தத்திற்குக் கண் திறந்தாலும்.. பெண் அசையவில்லை.
ஈர வேட்டியை மாற்றி, உடலை துடைத்துக்கொண்டே அவள் அருகில் வந்துகொண்டிருந்தவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள். கண் மட்டும் உருண்டுகொண்டிருக்க, அவன் அருகில் வரவர கண் விரிந்துகொண்டே போனது.
கட்டில் கீழே முட்டி மடித்து, ஒற்றை முழங்காலில் நின்றவன்.. மனைவியின் தலையைக் கையில் ஏந்தினானே ஒழிய ஒன்றும் பேசவில்லை. அவளுக்குக் கோபம்.. வருத்தம். அருகில் கணவனைப் பார்த்ததும் வேறு எதிர்பார்ப்பும் சேர்ந்து கொண்டது.
சூழல் மாறியது. கண்கள் மோதி, யுத்தம் செய்து, தழுவி நின்றது. முதல் முறை இருவர் உணர்வும் ஒன்று போல் பயணிக்க.. வண்டை பார்த்து வெறித்த மலரை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. துளசியின் ஏறி இறங்கும் தொண்டை என்றுமே அவனை ஈர்க்க தவறியது இல்லை. இன்றும் அப்படி தான்.. வா என்றது. சென்றுவிட்டான் அதை நோக்கி.
தொண்டைக் குழியில் புதைந்து போகத் தான் ஆசை.. ஆனால் இதழ் பட்டதா இல்லையா என்று உணரும் முன்னே.. கன்னம் மனைவியின் நாடியில் உரசியதில் பொசுங்கிப் போகும் முன்னே.. மோக தீயில் அவன் வெந்து போகும் முன்னே.. முகத்தை உயர்த்தியவனை உடலும் உள்ளமும் குறுகுறுக்கப் பார்த்தே கிடந்தாள்.
தொங்கிக் கொண்டிருந்த தலையை மெத்தைக்கு நகர்த்திவிட்டு அவன் நகர்ந்துவிட, அவள் பார்வை வட்டத்தில் அவன் இல்லை. உருண்டு புரண்டு அவனைக் காணும்படி வசதியாய் படுத்துக்கொண்டாள்.
இருவருக்கும் புது அனுபவம். கட்டுப்படுத்தத் தெரியாத உணர்வுகள் முட்டிக்கொண்டு முன்வந்தது. ஒரு நொடியில் ஓராயிரம் அலை அடித்துச் சென்றிருந்தது.
நான்கு அடி சென்றவன்.. நின்று திரும்பி பார்க்க.. கண்கொட்டாமல் அவனையே பார்த்திருந்தவள்… தவிப்பெல்லாம் முகத்தில் கொட்டி கிடக்க..
‘என்ன துளசி.. ஏதாவது வேணுமா?’ என்று கேட்க நினைத்துத் தான் மீண்டும் அருகில் வந்தான். ஆனால் உருண்டு புரண்டு படுத்திருந்தவளைப் பார்த்தவனுக்கு வார்த்தை மறந்து போனது.
அவள் கண்… வஞ்சனையில்லாமல் அவனை விழுங்க.. அவளை நோக்கிக் குனிந்தவன் ஒற்றைக் கையால் அவள் கண்களை மூடி… மறு கையை அவளருகில் முட்டு கொடுத்துப் பட்டும் படாமலும் துளசியின் திறந்திருந்த உதட்டை, இதழால் ஒற்றி எடுக்க.. இதழ் தானாய் ‘மூர்த்தி சார்’ என்று முணுமுணுத்தது. பாதி மூடியும் மூடாத கண்கள் அவனை உள்ளும் புறமும் கண்டது. அவள், ‘மூர்த்தி சார்’ அவளை நிறைத்திருந்தான். கண் திறந்திருந்தாலும்.. மூடியிருந்தாலும் அவன் மட்டும் தான் அவளை நிறைத்தான். வேறு எண்ணங்களோ யோசனைகளோ இல்லை.
ஆரம்பித்து.. தவிக்க விட்டுச் சென்றவனை பார்த்தே படுத்திருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே பனியனை போட்டவன், “செக் பண்ணிட்டேன் துளசி. கண்ணாடி பயப்படுற அளவுக்கு இல்ல. பார்த்த வரைக்கும் எல்லாமே அழகா தான் இருக்கு.. பிடிச்சிருக்கு.” கூறியவன் புன்முறுவலோடு மீசையை விரலால் ஏற்றிவிட்டுச் சென்றுவிட, பெண்ணிற்கு நிமிடம் பிடித்தது அர்த்தம் புரிய.
புரியவும், எழுந்து அமர்ந்து கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ செய்தது.
‘அசடு! இப்படியா படுப்ப?’ பின்னந்தலையைத் தட்டிக்கொண்டவள் முகத்தில் செம்மையும்.. சிரிப்பும். வெட்கமா துளசி? அப்படி தான் போலும். உதடு விரிய, ‘போங்க மூர்த்தி சார்’ கண்ணை மூடிக்கொண்டாள். அவள் மனமும், அதில் ஏற்பட்டிருக்கும் புதிய எதிர்பார்ப்பும்.. அவளால் சத்தியமாக நம்ப முடியவில்லை.
உண்மையிலேயே மனம் மூர்த்தியின் அருகாமையைத் தேடுகிறதா? நம்பமுடியவில்லை என்றாலும் அது தான் உண்மை. கணவன் உதடு பட்ட தொண்டையும்.. இதழும் ஆனந்த தாண்டவம் ஆடுகிறதே! ஒற்றை உதடு உடல் முழுவதும் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது உண்மை தானே. இன்னும் வேண்டும் என்று நினைத்ததும் உண்மை தான். காதலோடு காமத்தைக் கலந்துவிட்டானா? முகம் செம்மை பூச ஏகாந்த நிலையில் அமர்ந்துவிட்டாள்.
மூர்த்தி என்ற மனிதன், அவள் காதல் கணவன், காதலோடு அவள் உள்ளுக்குள் முற்றிலுமாக இறங்கி இருந்தான். பழைய நினைவுகள் இல்லை இன்று. இருட்டான இடம் எல்லாம் மூர்த்தி நுழைந்திருக்க, பிரகாசமாய் ஒளிர்ந்தாள்.