இருள் சூழ்ந்த வேளையில் கட்டுத்தரையில் நின்றிருந்தாள் அத்தைக்கருப்பனின் கட்டைக்காரி!
அகலாமலும் அணுகாமலும் இருக்கும் நிலையில் என்ன முயன்றும் அவர்களுக்குள் ஏற்பட்ட அச்சிறு பிளவை சரி செய்ய முடியவில்லை.
நாட்கள் மட்டுமே நகர்கின்றதே தவிர அவர்களுக்குள்ளான நெருக்கம் என்னவோ சிறிதும் கூடி இருக்கவில்லை. வெறுமனே உதட்டளவில் பேசிச் சிரிப்பது எல்லாம் மனதை சென்றடைவதில்லை. அருகாமையில் இருந்த போதும் மனமானது மட்டும் விலகிச் செல்வது வேதனையையே கொடுத்தது.
இருவருமே கடந்த நாட்களைப் பற்றி மனம் விட்டு பேசியிருக்கவில்லை. அதுதான் தவறோ என்று நினைத்தாள் அரசி. இப்படியே பட்டும் படமால் எத்தனை நாட்களைக் கடத்துவது என்ற கேள்வி அவள் மனதைத் துளைக்க, உறக்கம் பிடிக்காது இங்கு வந்து நின்றிருந்தாள்.
வெகுநேரம் ஆகியும் அரசி அறைக்குள் வராதிருப்பது கண்டு அவளைத் தேடி வெளியே வந்தான் விக்ரமன். பின்னால் கட்டுத்தரையில் சிறிய மின்விளக்கு எறிந்திருக்க, அவள் அவளது லட்சுமியின் அருகில் நின்றிருப்பது தெரிந்தது.
விக்ரமன் வந்ததைக் கூட உணராது அவள் இருக்க, தன் வேலனின் அருகில் வந்தவன் அதன் தலையை நீவிக் கொடுத்தபடி
“தூங்கலையா?” என்று அரசியிடம் வினவ, அவள் பதிலளிக்கவில்லை. மாறாக குரல் எழுப்பியது லட்சுமி.
“தூங்காம இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற? எதாவது பிரச்சனையா” என்று மீண்டும் வினவ,
“பிரச்சனையை சொன்னா மட்டும் அப்படியே தீர்த்து வெச்சிருவாரான்னு கேளு வேலா” என வேலனைத் தூதுவிட்டாள் அரசி.
அதில் விக்ரமன் தன் வேலனைப் பார்க்க, தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதாய் கழுத்தில் இருந்த மணி இசைக்க தன் தலையை அசைத்தான்.
“தீர்க்க முடியாத பிரச்சனைன்னு இங்க எதுவும் இல்ல. மொதல்ல என்னன்னு சொல்லச் சொல்லு லட்சுமி” என விக்ரமனும் லட்சுமியை தூது விட,
“எதைய மனசுல வெச்சுட்டு இவரு இத்தனை நாளா கீழ படுத்திருக்காருனு எனக்கு நல்லாவே தெரியும் வேலா” என வேகமாய் ஆரம்பித்தவள்,
“நானும் இன்னிக்கு சரியாகிடும் நாளைக்கு சரியாகிடும்னு பொறுத்து பொறுத்துப் பாத்தேன். ஆனா என்ரனால முடியலை. அதைய எப்படி சரி பண்ணுறதுனும் புரியல” என்றாள் வருத்தத்தோடு.
விக்ரமன் அமைதியாய் இருக்க,
“அன்னிக்கு ஏதோ கோபத்துல வாய் தவறி அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அது என்ர மனசுல இருந்து வந்திருக்காதுன்னு அவருக்கும் நல்லா தெரியும். அப்படியே என்ர மேல கோபம் இருந்தா அதைய அன்னிக்கே காட்டி இருக்க வேண்டியது தானே. அதைய விட்டுட்டு இப்படி மனசுலயே வெச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்றவள்,
“அவரு என்னைய தண்டிக்குறதோட்டம் எனக்கு ஏற்பட்ட மனக்காயங்களுக்கு நானும் அவரை தண்டிக்கணும்னு நெனச்சா அவரு என்ன பண்ணுவாராமா வேலா?” என்றுவிட்டு விக்ரமனை ஆழமாய் பார்த்தாள்.
அவன் அப்போதும் அமைதியாய் நின்றிருப்பது கண்டு அரசி அங்கிருந்து கிளம்ப,
“உனக்கு கட்டக்காரிய தெரியுமா லட்சுமி” என்ற விக்ரமனின் குரலில் அப்படியே நின்றாள்.
“இந்த விக்ரம பாண்டியனையே அடியோட அசைச்சு பாக்குற ஒரே ஆள் அவ தான்” என்றதில் அவன் புறம் திரும்பினாள்.
“எனக்கு உயிர் கொடுத்தவரை இழந்துட்டு நின்னப்போ அவ மொகத்தை பாத்தாச்சு மீண்டு வந்திடலாம்னு நெனச்சேன். ஆனா அவளும் என்னைய விட்டு ரொம்ப தூரம் போய்டா. அஞ்சு வருசமா அவளை நான் பாக்கவே இல்ல. அவளோட ஒரு வார்த்த பேசல. இருந்தாலும் ஒரு நாள் அவ திரும்ப என்ரகிட்டயே வருவான்னு நம்புனேன். அவளும் வந்தா..” என்று அரசியைப் பார்க்க, இரு விழிகளும் ஒன்றில் ஒன்று கலந்திருந்தது.
“ரேக்ளா போட்டி நடந்த அன்னிக்கு அவ மொகத்த சரியா கூட பாக்கலையேனு வருத்தமா இருந்துது. பழசை எல்லாம் மறந்திருப்பாளோனு கூட தோணுச்சு லட்சுமி. ஆனா ஊருக்கு வந்த நாளே மதில் மேல ஏறி உக்காந்திருந்தவளை பாத்ததும் இவ நிச்சயம் எதையும் மறந்திருக்க மாட்டா, என்னையும் மறந்திருக்க மாட்டான்னு அத்தனை சந்தோசம் எனக்கு” என்றான் அதே சந்தோசம் மாறாது.
ஆனால் அந்த சந்தோசம் அரசியிடத்தில் இல்லை. விக்ரமனையே பார்த்தவள்,
“சின்ன வயசுல பேச்சு போட்டில நான் பரிசு வாங்குனதுக்கு இவரு தேன் மிட்டாய் வாங்கித் தந்ததுல இருந்து வேலுச்சாமி மாமா போனப்போ என்ர முன்னால இவரு கண்ணீர் விட்டது வரைக்கும் நான் எதையும் மறக்கல வேலா” என்றவள்,
“இவரு மொகத்துல நெரந்தர சிரிப்பை பாக்கோணும்னு தான் இத்தனை வருசமா தவமிருந்தேன். என்ர கூட இவரு இல்லைனாலும் ஒவ்வொரு நாளும் நான் இவரை நினைக்காம இருந்ததில்ல. ஆனா இவரு தான் என்னைய சுத்தமா மறந்துட்டாரு. அதான் ஒரே வார்த்தைல என்னைய சுயநலவாதினு சொல்லிட்டாரு” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஒரு பெருமூச்சை எடுத்துக் கொண்ட விக்ரமன்,
“அவ எனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கான்னு தெரியாம அவ என்ர மேல கோபத்தை காட்டினதும் நான் அவளை பாத்து அப்படி ஒரு வார்த்தை சொல்லி இருந்திருக்கக் கூடாது லட்சுமி. நான் சொன்ன ஒரு வார்த்தை தான் அவளை அந்த நேரத்துல யோசிக்க விடாம பண்ணிடுச்சு. இல்லைனா அப்போவே என்ர நெலமைய புரிஞ்சிருந்திருப்பா. நான் அவள விட்டுடமாட்டேன்னு நம்பியிருந்திருப்பா” என, அரசி அந்நாளை நினைவு கூர்ந்து பார்த்தாள்.
நான் நிச்சயம் ஏதாவது செய்வேன் அதுவரையில் அமைதியாய் இரு என்று அவன் அன்று மறைமுகமாய் கூறியதன் பொருள் விளங்கியது.
“ஆறுச்சாமி மாமா எங்கப்பாவுக்கு ஒரு வாக்கு கொடுத்திருக்குறதாவும் அந்த வாக்கால தான் எங்கப்பா உயிர் பிரியுற நேரத்திலை நிம்மதியா கண்ணை மூடினார்னு மாமா சொன்னப்போ அதை எப்படியாவது நிறைவேத்தி வெச்சிடணும்னு நெனச்சேன்” என்று விக்ரமன் அரசியைப் பார்க்க, அவளும் அவனைத் தான் இமைக்காது பார்த்திருந்தாள்.
“‘தமிழை கல்யாணம் பண்ணிக்கோ விக்ரமா. இதான் நான் வேலுச்சாமிக்கு கொடுத்த வாக்கு’ன்னு மாமா சொல்லவும் அந்த வாக்கு என்ர வாழ்க்கையவே புரட்டிப் போடப் போகுதுன்னு தெரிஞ்சும் அதை மீற முடியாம நின்னேன்” என்றான்.
மெல்ல அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள் அரசி.
“எப்படியாவது இதுக்கு ஒரு தீர்வு கிடைக்காதானு தேடிட்டு இருந்தேன். நான் விரும்புறவ கண் முன்னாடியே அவ அக்காவோட நிச்சயம் ஆகும்போது அவ போன் விழுந்து சிதறுன மாறி அவ மனசும் சிதறிப் போயிருக்கும்னு தெரிஞ்சும் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாம வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்” என்றபோது அவன் குற்றவுணர்வு அப்பட்டமாய் குரலில் வெளிப்பட்டது.
அவனருகில் வந்து இருவருக்குமான இடைவெளியைக் குறைத்தாள்.
“எல்லாத்தையும் தனக்குள்ள போட்டு பொதச்சிட்டு வெளிய சிரிச்சிட்டு இருந்தவ, கல்யாணத்துக்கு முன்னத்த நாள் எங்கப்பா நினைவிடத்துல அந்த இருட்டுல தன்னந்தனியா உக்காந்து என்னைய நெனச்சு கதறி அழுததை பார்த்தப்போ என்ர உடல்ல உயிரே இல்ல. அவளை அந்த நெலமைக்கு தள்ளுனதை நெனச்சு என்னையவே வெறுத்தேன்” என்றான் குரலில் வேதனை தொனிக்க.
அரசியின் விழியோரம் ஒரு துளி வடிய, அதை தன் கரம் கொண்டு துடைத்தவன்
“நான் சொல்ல வந்ததை அவ ஒரு நிமிஷம் காது கொடுத்து கேட்டிருக்கலாம். அவளுக்காக அவங்க அப்பா வாக்கை மட்டுமில்ல எங்கப்பா கடைசி விருப்பத்தையும் கூட நான் மீற துணிஞ்சேன்னு தெரிஞ்சிருந்தா ஒருவேள அவ மனசு அமைதி ஆகிருக்கும். ஆனா என்னைய உயிரோட கொல்லுறதோட்டம் ஒரு வார்த்தைய சொல்லிட்டு போய்ட்டா லட்சுமி” என்றான் தாளாத வலியில். அது அவளிடமும் பிரதிபலித்தது.
விக்ரமனையே பார்த்திருந்த வேலனும், அரசியையே பார்த்திருந்த லட்சுமியும் கூட அவர்களது வலியை உணர்ந்தனரோ அவர்களது ‘அம்மா’ என்ற அழைப்பும் கூட வலியின் வெளிப்பாடாய் ஒலித்தது.
“இதெல்லாம் என்ரகிட்ட முன்னாலையே சொல்லி இருக்கலாமில்ல வேலா. நானே போய் எங்கப்பா கிட்ட பேசி இருப்பேன். இவரு அமைதியா இருந்ததால தமிழ் வாழ்க்கை பாதிக்குமோன்னு நானும் எதுவும் செய்ய முடியாம போய்டுச்சு” என அரசி சொல்ல,
“மண்டபத்துல வெச்சு தான் எனக்கே தெளிவா தெரிஞ்சுது வேங்கை. தமிழை குறிப்பிட்டு என்ர கிட்ட பேசுனது ஆறுச்சாமி மாமா தப்பா இல்ல தெளிவா விசாரிக்காதது என்ர தப்பானு தெரியல. தமிழ் மாறனை விரும்புறது, உங்கப்பா வாக்கு கொடுத்தது இதெல்லாமே தெரிஞ்சு தான் நீ அமைதியா இருக்கைன்னு நான் நெனைச்சேன்” என்றதும் தான் அரசிக்கு அவன் நினைத்த விதம் புரிந்தது.
“அதனால தான் உன்னைய பத்தி கவலைப்படாம இந்த பிரச்சனையை எப்படி சுமூகமா சொந்தத்துக்குள்ள சிக்கல் வராம முடிக்கலாம்னு மட்டுமே பாத்துட்டு இருந்தேன். ஆனா நீ இப்படி பாதிக்கப் பட்டிருக்கைன்னு கடைசி நிமிசத்துல தான் தெரிஞ்சுது வேங்கை. நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையில பொறுமையா பேசி முடிவெடுக்கற அளவுக்கு நம்ம கிட்டையும் அவகாசமும் இல்ல” என்று லட்சுமியை தூது விடுவதை நிறுத்தி அரசியோடே நேரடியாக பேச ஆரம்பித்திருந்தான் விக்ரமன்.
“ஆனா ஒன்னு வேங்கை, மாறனோ தமிழோ கடைசி வரைக்கும் எந்த முடிவையும் எடுக்காம போயிருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி இருந்திருப்பேன். அதுனால ஆறுச்சாமி மாமாவுக்கும் எனக்கும் மனக்கசப்பே வந்தாலும் உன்னைய யாருக்காகவும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன்” என்று அழுத்தமாய் சொல்லவும், காதலோடு அவனைப் பார்த்திருந்தவள்
“தமிழக்கா மனசுல இப்படி ஒரு விஷயம் இருக்கும்னு எனக்கு தெரியவே இல்லைங் மச்சா. அவளை சொல்லியும் தப்பில்ல. நானாச்சும் உங்களை பத்தி அவகிட்ட சொல்லி இருந்திருக்கோணும். அப்படி சொல்லி இருந்தா அவ அன்னிக்கே பயப்படாம அப்பாகிட்ட பேசி இருந்திருப்பா” என்றாள்.
“இனி நடந்ததை பேசி என்ன ஆகப் போகுது. இந்த ஒரு வாக்கை வெச்சு எல்லாரோட வாழ்க்கைலையும் விளையாடி பாக்கோணும்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்” என்றவன், அவள் வலக் கரத்தை எடுத்து தன்னிரு கரங்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு
“எனக்கு என்ர கட்டக்காரி கெடைச்சதே போதும்” என்று சொல்ல,
“எனக்கு மட்டும் என்னவாம். ஆயுசுக்கும் என்ர அத்தக்கருப்பன் மட்டும் போதும்” என்று அழகாய் புன்னகைத்தாள்.
இருவரும் மனம் விட்டுப் பேசிய நிம்மதியில் இருந்தனர். அரசிக்கு அத்தனை ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் அவன் கரத்தை அழுந்தப் பற்றியவள் அதில் தன் இதழ்களையும் அழுந்தப் பதித்தெடுத்தாள். விக்ரமன் மனம் நிறைந்த புன்னகையோடு நின்றிருக்க, லட்சுமியின் குரல் பெரும் வலியோடு ஒலிக்கத் துவங்கியது.
இருவரும் விரைந்து அதனை கவனிக்க, கன்றின் வருகைக்காக அதன் பின்பக்கம் பனிநீர் வெளியேறத் துவங்கி இருந்தது.
இருக்க இருக்க அதீத வலி அதன் குரலில் வெளிப்பட, முத்துலட்சுமியும் சத்தம் கேட்டு கட்டுத்தரைக்கு வந்தார். முதல் ஈற்று என்பதால் துடி துடித்துக் கொண்டிருந்தது பசுமாடு.
“அட மாடு ஈத்து எடுத்திருச்சா” என முத்துலட்சுமி சாக்கை எடுத்துவந்து அவ்விடத்தில் போட,
“கொஞ்சம் வெந்தண்ணி வெச்சு எடுத்தாங் அத்தை” என்று விட்டு மாட்டின் வயிற்றை மெல்ல பின்னால் தள்ளிக் கொடுத்தாள் அரசி.
“மச்சா! பின்னாடி கன்னு கால் வெளிய தெரிஞ்சா மெல்ல பிடிச்சு இழுங்க” என, சில நொடிகளில் கால் வெளியே வரவும் விக்ரமன் அதை வெளியே இழுத்துக் கொண்டான்.
வெள்ளை நிறத்தில் முன்னங் கால்களை மடக்கிக் கொண்டு பின்னங் கால்களை ஊன்றி எழ முயன்று கொண்டிருந்தது கன்று.
“என்ன கன்னுங் மச்சா” என அரசி கேட்க,
“காளை கன்னு வேங்கை” என்றான்.
“அப்போ குட்டி வேலன்” என, விக்ரமன் அவளை நிமிர்ந்து பார்க்க
“லட்சுமி கத்துறது ஒருபுறம் இருக்கட்டும் நம்ம வேலன் கத்துறதை கவனிச்சீங்களா” அவள் கேட்கவும் தான் கவனித்தான்.
“அதுகளுக்கும் குடும்பம் இருக்கு. உணர்வுகள் இருக்கு. இங்க வலிச்சா அங்கயும் வலிக்கும். ஆனா இப்போ எல்லாம் காளை மாடுகல யாரும் அதிகம் வளக்குறது இல்லை. எல்லாரும் பசுமாட்டுக்கு ஊசி போட்டு தான் உற்பத்தியை பெருக்குறாங்க” என்று பேசிக் கொண்டிருக்க, முத்துலட்சுமி வெந்நீரோடு வந்தார்.
மாட்டை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்துவிட்டு சோளமாவுக் கஞ்சியை அதற்கு கொடுத்துவிட்டு அது நஞ்சை வெளியிடுவதற்கு காத்திருந்தனர். சில மணி நேரங்களில் ஆகியும் நஞ்சு வெளிவராது இருக்க,
“நஞ்சு போட மாட்டிங்குது பாவம் அதுக்கு என்ன பிரச்சனையோ” என முத்துலட்சுமி கவலைப்பட, தன் கைகளுக்கு கையுறைகளை மாட்டிக்கொண்டு கால்நடை மருத்துவராய் அவள் பணியைச் செய்தாள் அரசி.
விக்ரமன் அரசியைத் தான் பார்த்திருந்தான். அவள் ஆற்றிக் கொண்டிருக்கும் பணி அப்பேர்ப்பட்டது. அவள் இல்லாது இருந்தால் இந்நேரத்திற்கு எங்கு சென்று கால்நடை மருத்துவரை அழைத்து வருவது என்று எண்ணவே அதன் சிரமத்தையும் உணர்ந்தான்.
அரசி மாட்டிடம் இருந்து நஞ்சை வெளியே எடுத்துப்போட, அதை அப்புறப் படுத்தி அவ்விடத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து கன்றை மாட்டின் அருகில் விட்டு சுற்றிலும் தடுப்பு வைத்துவிட்டு உள்ளே வந்து கொண்டனர்.
நள்ளிரவே வந்திருந்தது. அரசி யன்னலின் அருகே நின்றிருக்க அறைக் கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தான் விக்ரமன்.
அப்போதும் அவள் அங்கிருந்து நகராதிருக்க,
“என்னாச்சு வேங்கை இன்னும் என்ன யோசனை” என்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
“இருந்தாலும் நீ அந்த சிலையை ஓடச்சிருக்கக் கூடாது வேங்கை” என்று கடுமையாய் சொல்வது போல் சொல்லிவிட்டு நகர,
“அது நான் வேணும்னே ஒடைக்கலைங் மச்சா” என்று அரசி படபடக்க, பீரோவை திறந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்.
‘என்ன’ என்பதாய் பார்க்க, திறந்து பார்க்குமாறு புன்னகையுடன் கண் காண்பித்தான்.
அதைத் திறந்து பார்த்தவளது கண்கள் வியப்பில் விரிந்தது. அதனுள் அவள் பரிசளித்த காளையின் சிலையோடு அவன் பரிசளித்த பசுமாட்டின் சிலை ஜோடியாய் இருந்தது. பசுவின் சிலையை கைகளில் எடுத்துப் பார்த்தாள். உடைந்த இரு பாகங்களை ஒட்டவைத்து சிறு வேலைப்பாடுகள் கொண்டு பிளவை மறைத்திருந்தான் விக்ரமன்.
“ஒடஞ்சு போன இந்த கட்டக்காரிய களிமண்ணால ஒட்ட வெச்சுட்டேன். ஆனா ஒடஞ்சு போன என்ர கட்டக்காரி மனசை என்ர காதலால ஒட்ட வெய்க முடியுமான்னு தெரியல”
அரசிக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.
“என்னைய மன்னிச்சிருங் மச்சா” என்றாள்.
“எதுக்கு வேங்கை” என புரியாது கேட்க,
“எத்தனை நாள் ஆனாலும் மனசு விட்டு பேசாம எதுவும் மாறாது. இதைய பத்தி முன்னாலையே உங்க கிட்ட பேசி இருந்திருக்கணும். பேசாம போனது என்ர தப்பு. அதனால தானே இப்படி” என கீழே விரித்திருந்த பாயை பார்த்தாள். தன் வார்த்தை எந்த அளவிற்கு அவனுள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று புரியாமல் இல்லை.
“வேங்கை! நீ அப்படி பேசுனதுல எனக்கு ஏற்பட்ட காயம் என்னவோ உண்மைதான். அதுக்காக உன்னைய தண்டிக்கணும்னு எல்லாம் நான் நெனைக்கல. நீயா அந்த காயத்துக்கு மருந்திடற வரைக்கும் காத்திருக்கத்தான் நெனச்சேன்” என்றான்.
அவள் அமைதியாய் நின்றிருக்க,
“என்னைய பத்தி மட்டுமே யோசிச்ச நான் என்ரனால உனக்கு ஏற்பட்ட காயத்த கவனிக்காம விட்டுட்டேன். இந்த சுயநலவாதிய நீ தான் மன்னிக்கணும். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்ல. மதிலை தாண்ட சொன்னாக் கூட தாண்டுறேன். ஆனா என்ர புல்லட்டை மட்டும் பஞ்சர் பண்ணிடாத” என்று பாவமாய் சொல்வதுபோல் சொல்ல, லேசாய் புன்னகைத்த அரசி
“இவ்வளவு நாள் தண்டனை கொடுக்காதவ தான் இதுக்கு மேல கொடுக்கப் போறாளாக்கும். இந்த பேச்சுக்கு எல்லாம் ஒண்ணுங்கொறச்சல் இல்ல அத்தக்கருப்பா” என்றாள்.
“என்ர கட்டக்காரிக்கு என்னைய காதலிக்க மட்டும் தான் தெரியும். அவ என்னைய தண்டிக்கணும்னு நெனச்சிருந்தா விக்ரமன்னு ஒருத்தன் இந்நேரம் இருந்திருக்கவே மாட்டான்” என்று மென்மையாய் சொல்லிய மறுநொடி அவனை வன்மையாய் அணைத்திருந்தாள் அரசி.
அகமானது ஆனந்தத்தில் மிதக்க அவளது அத்தைக்கருப்பனை விட்டு விலகத் தோன்றாது நிமிடங்கள் கடக்க அந்நிலையிலேயே நின்றிருந்தாள்.
“கட்டக்காரி” என அவளை மெல்ல தன்னிடம் இருந்து விலக்கியவன்
“இப்படியே நின்னா விடிஞ்சுடும்” என,
“அப்போ போய் படுங்க” என்றுவிட்டு மெத்தையில் சென்று படுத்துக் கொண்டாள்.
“இத்தனை நாளா என்னைய கீழ தரையில தள்ளிட்டு மேடம் மெத்தைல ஜம்முனு படுக்குறாங்க. இதுல நாங்க இவங்களை தண்டிக்குறோமாமா” என,
“உங்களை யாரு மேல வர வேண்டாம்னு சொன்னாங்க” என்று திரும்பிப் படுத்தாள். சில நொடிகளில் அவளது சரிபாதி சரி பாதி இடத்தைப் பிடித்திருந்தான்.
இருவரது மனமும் நிம்மதியில் திளைக்க உறக்கம் எட்ட நின்றது. கடந்த கால நினைவுகள் தான் அவர்களுள் நிரம்பி வழிந்தன. நினைவுகளுக்கும் கூட இன்பத்தை பொழியும் சக்தி இருந்தது. இருவரது இதழ்களும் புன்னகயில் பூத்திருக்க,
“ஏன் வேங்கை நீ சின்ன வயசுல சைக்கிள்லையே ஊர் முழுக்க சுத்துவையே. ஆறுச்சாமி மாமாவுக்கு தெரிஞ்சு அவரு சாட்ட வார கையில எடுத்தா எங்க வீட்டுக்கு ஓடி வந்திடுவையே. நியாபகம் இருக்கா” என,
“மச்சாஆஆ” என பல்லை கடித்தாள்.
“இல்ல மறந்துட்டியோன்னு நெனச்சேன்” என,
“ப்ச் பேசாம தூங்குங்க. காலைல நேரமே வயலுக்கு போகணுமில்ல” என்றவள் தன் தலையை தலையணையில் இருந்து இடம் பெயர்த்து அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
அவள் உச்சியில் தன் அதரங்களைப் பதித்தவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
வாசம் வீசும்..!