மண்வாசம் 24 :
அரசிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் தான் இருந்தாள்.
விவசாயத்திற்கு ஏது விடுமுறை? விக்ரமன் எப்போதும் போல் வயலுக்குச் சென்றிருந்தான்.
அவன் மதிய உணவிற்கு வரும் நேரம் என்பதால் உணவு சமைக்க முத்துலட்சுமிக்கு உதவியவள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, அவரை சற்று நேரம் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு கட்டுத்தரைக்குச் சென்றாள்.
அவள் வளர்ந்த லட்சுமி விரைவில் கன்றை ஈனும் தருவாயில் இருந்தது. அதன் தலையை வாஞ்சையாய் தடவி தீவனங்களை வைத்தவள் அங்கிருந்தபடியே காளைகளை பார்வையிட்டாள். வேலன் மட்டும் அவ்விடத்தையே பார்த்தபடி காதை அசைத்து கத்திக் கொண்டிருந்தான்.
அரசி லேசான புன்னகையுடன் திரும்ப, தனியே புன்னகைத்துக் கொண்டிருப்பவளை வித்தியாசமாய் பார்த்தபடி நின்றிருந்தான் விக்ரமன். உடனே முகத்தை இயல்பாய் வைத்தவள்,
“என்னங் மச்சா?” என,
“அம்மா தூங்குறாங்க. வந்து சாப்பாடு எடுத்து வை” என்றான்.
“முகம் கழுவிட்டு வாங்க” என்றுவிட்டு சென்றுகொள்ள அவனும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உணவருந்த வந்தான்.
சம்மணமிட்டு அமர்ந்திருந்தவனின் அருகில் சமைத்த பாத்திரங்களை ஒவ்வொன்றாய் எடுத்து வந்து வைத்தாள். அதைத் திறந்து பார்த்தவன்,
“என்ன எல்லாத்துலையும் முருங்கக்காயா கெடக்குது?” என்று கேட்க,
“நான் முருங்கக்கா சாம்பார் வெச்சுட்டு பாக்குறேனுங் அத்தையும் முருங்கக்காய்ல கூட்டு பண்ணியிருக்காங்க” என்றாள் ஆச்சர்ய பாவனையில். சிறு தலையசைப்புடன் மற்றொரு மூடியை விலக்கியவன்,
“இதென்ன பச்சையா இருக்குது?” என்றான்.
“இது முருங்கக்கீரை பொரியலுங் மச்சா” என்று சொல்ல,
“ரெண்டு பேரும் சேந்து ரசத்துல போடாம விட்டீங்களே. எனக்கு ரசம் மட்டும் ஊத்து” என அருகிலிருந்த பாத்திரத்தில் கரண்டியைப் போட,
“நாங்க தான் இன்னிக்கு ரசமே வெக்கலையே. நீங்க கரண்டிய போட்டது முருங்கக்கீரை சூப்புக்குள்ளைங் மச்சா” என்றதில் அதிர்ந்து போய் பார்த்தவன் கடைசிக்குத் தயிரை கையில் எடுக்க,
“காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியுமாமா. இதுக்குத்தேன் பாக்கியராஜ் படமா பாக்கக் கூடாதுங்கறது. சட்டுபுட்டுன்னு சாப்டுட்டு எடத்த காலி பண்ணுங்க” என்று சொல்ல, விக்ரமன் பார்த்த பார்வையில் தனக்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்க சிரமப்பட்டாள் அரசி.
“கட்டக்காரி” என பல்லைக் கடித்தவன் சாம்பாரை ஊற்றி உண்ணத் துவங்க, அவள் கைபேசி ஒலிக்க சற்று தள்ளிச் சென்று அழைப்பை ஏற்றாள் அரசி.
விடுமுறை தினங்களிலும் கூட அவசரத் தேவைக்கு யார் அழைத்தாலும் சிகிச்சை அளிக்கச் சென்று கொண்டிருந்தாள். இப்போது கோழிப் பண்ணையில் இருந்து அழைப்பு வர, தெரிந்த இடம் தான் என்பதால் விக்ரமனிடம் சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அரும்பிற்கு ஆனந்தம் பொங்கி வழிந்தது.
இத்தனை நாட்களாய் அவள் மேற்கொண்ட கடுந்தவத்திற்கான பயன் இப்போது அவள் கைகளில் இருந்தது.
வேளாண் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அடுத்து நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுந்திருந்த கடிதத்தை தான் கையில் வைத்துப் பார்த்திருந்தாள்.
இதில் அவளைக் காட்டிலும் குலசேகரனிற்கு தான் அதீத ஆனந்தம், அவன் கனவையும் அவள் சுமப்பதால். தனக்கும் சேர்த்து அரும்பு அவள் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று அவன் கனவு கண்டிருந்தான்.
அனைவரது முன்னிலையிலும் நன்றாய் வாழ்ந்து காட்டுவோம் என்று அன்று சவால் விட்டு வந்தாளே! அப்படி வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவர்கள் இருவரிடமும் இருந்தது.
“எலிக்குட்டி! எவ்வளவு சந்தோசமான சமாச்சாரத்த சொல்லியிருக்க. அந்த மர பீரோவுல இருந்து கொஞ்சம் பணம் எடுத்தா” என்றான் குலசேகரன் அத்தருணத்தைக் கொண்டாட.
“ஒரு பைசா தரமாட்டேன்” என்றதில் அரும்பின் முகம் காண,
“வேலை கெடைக்குற வரைக்கும் எதுவும் உறுதி இல்ல மாமா. நீயும் அனாவசியமா செலவு பண்ணாத. திட்டம் போட்டு செலவு பண்ணுனாத்தேன் நம்ம கடைசி வரைக்கும் யாரையும் எதிர்பார்க்காம இருக்க முடியும். அகலக்கால் வெச்சா ஆபத்துதேன்” என்றாள்.
அதில் லேசாய் புன்னகை கூட அரும்பியது அவனுக்கு. அக்கா மகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான் அவனும். கணக்கு வழக்குகளை மொத்தமாய் அவள் கையில் எடுத்துக் கொண்டாள். வரவுக்கு ஏற்ப செலவு செய்து வருமானத்தில் பாதியை சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.
குலசேகரன் தனக்கு இருக்கும் நிலத்தோடு சேர்த்து அருகில் இருந்த சில நிலங்களையும் குத்தகைக்கு எடுத்திருந்தான். அதில் நாள் முழுக்க உழைப்பைக் கொட்டி பாடுபடுகின்றனர் இருவரும். இருப்பதை வைத்து மகிழ்ச்சிக்கு குறைவில்லாது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
“பீரோவுல என்ர வேட்டிக்கு அடியில ஒரு கவர் இருக்கும் அதைய எடுத்தா” என குலசேகரன் சொல்ல, புரியாமல் பார்த்தவள் உள்ளே சென்று தேடித் பார்த்து அந்த கவரை எடுத்து வந்தாள்.
“பிரிச்சு பாரு” என்றான்.
அவள் அதை பிரித்துப் பார்க்க ஆரஞ்சு வண்ணத்தில் அழகிய பட்டுப் புடவை ஒன்று இருந்தது. கை அதை ஆசையாய் வருடினாலும்,
“என்னைய கேக்காம ஏன் வாங்குன?” என்றாள் கோபமாய் அவனிடம்.
“சிலதெல்லாம் ஊட்டுக்காரிய கேட்டு வாங்கக் கூடாது. வாங்கிட்டு வந்து கூட கேட்டுக்கலாம்” என,
“எப்போ வாங்குன?” என்றாள்.
“நீ பரிச்சை எழுத போகும் போதே வாங்கிட்டேன். எப்படியும் நீ பாஸ் ஆய்டுவின்னு தெரியும்” என, புன்னகைத்தவள் உடனே புருவம் சுருங்க
“ஆமா உனக்கு ஏது பணம்?” என்றதும் குலசேகரன் லேசாய் திணற,
“அப்போ என்ர கிட்ட கணக்கு காட்டாம இத்தன நாளா வேற எங்கையோ பணத்தை பதுக்கிட்டு இருந்திருக்க. சொல்லு மாமா என்ன தில்லாலங்கடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்குற” என்று கேட்க,
‘ஆசையா ஒரு புடவை வாங்கியாந்ததுக்கு நிக்க வெச்சு எத்தனை கேள்விதேன் கேக்குறா’ என நினைத்தவன்
“ஏய் சீக்கிரம் போய் சாப்பாடு எடுத்து வெய்டி எலி. உனக்கு வாங்கியாந்ததுக்கு பக்கத்தூட்டு பத்மினி பாட்டிக்கு வாங்கியாந்திருக்கலாம். வா ராசான்னு உள்ளார கூப்ட்டு படையல் போட்டிருக்கும்” என்றுவிட்டு உள்ளே சென்று கொள்ள,
“குலசேகராஆ” என பல்லைக் கடித்து அவன் பின்னால் நகர்ந்தாள்.
சற்று முன் தனக்கு கைபேசியில் அழைத்த மயில்சாமியின் கோழிப் பண்ணைக்கு வந்திருந்தாள் அரசி.
முன்பெல்லாம் வீடுகளிலும் தெருக்களிலும் வயல் வெளிகளிலும் அங்காங்கு சிதறிக் கிடக்கும் தானியங்களை கொத்தித் தின்றபடி உற்சாகமாய் சுற்றித் திரியும் நாட்டுக் கோழிகளையே காணமுடியும்.
ஆனால் இப்போதோ முட்டையில் இருந்து வெளிவந்த சில நாட்களில் செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு அளவிற்கு அதிகமாய் தீவனத்தை உட்கொண்டு எங்கும் நகர முடியாது பல நோய்களை தன்னுள் வைத்து வாழும் பிராய்லர் கோழிகளையே காணமுடிகிறது.
அரசியும் அதைக் கண்டபடி தான் நின்றிருந்தாள்.
அவை அனைத்தும் சூரிய ஒளியே படாத கூண்டில் ஓடியாடாமல் ஒரே இடத்தில நின்ற நிலையில் இருந்தன. அதில் நோய் வாய்ப்பட்டிருந்த கோழிகளைக் கண்டறிந்து அவற்றை தனி கூண்டில் வைத்து மருத்துவம் பார்த்தவள்,
“கோழிகளை மேய்ச்சல்ல விட்டு வளக்காம இப்படி அடச்சு வெச்சு நம்ம லாபத்துக்காக அதுக சுதந்திரத்தை பறிக்குற மாற இல்லைங்களா?” என மயில்சாமியிடம் கேட்க,
“முன்ன எல்லாம் எங்க பாத்தாலும் மேய்ச்சல் நிலங்களா இருக்குங் கண்ணு. கோழிகள தொறந்து விட்டா அதுகளே மேவுக்கு போய் தானியங்கள கொத்தித் தின்னுபோட்டு பொழுது சாயுறதுக்குள்ள திரும்ப வந்துரும். இப்போ அப்படியா, காலம் மாறி போச்சு பண்ணை போட்டு அடச்சு வெச்சு வளத்துறதோட்டம் தான் இருக்குது. மாச மாசத்திற்கு இதுகளுக்கு தீவனம் வேற கிலோ கணக்குல வாங்கிப்போட வேண்டியிருக்கு” என்று புலம்ப,
“அதுக்கு நீங்க நாட்டுக் கோழிகளையே வளர்க்கலாங்ளே? நூறு கிராம் நாட்டுக் கோழில நாலு கிராம் கொழுப்பு இருந்தா, பிராய்லர்ல இருபத்தி மூணு கிராம் இருக்குது. புரதச்சத்து நாட்டுக்கோழில இருபத்தியோரு கிராம். ஆனா பிராய்லர்ல அது வெறும் பதினாரு கிராம் தான். பிராய்லர் கோழிகனால எத்தனையோ கெடுதல் இருக்குதுங்க. அதனால உங்க குழந்தைகளுக்கும் தானே பாதிப்பு?” என அவருக்கு புரியும்படி தெளிவாய் எடுத்துரைத்தாள்.
“எங்கூட்டுக்கு தனியா ரெண்டு நாட்டுக் கோழிகளை வளக்குறோங் கண்ணு. எங்க புள்ளைகளுக்கு அந்த முட்டைய தான் கொடுக்குறோம். இதுக எல்லாம் வெளிய விக்குறதுக்கு. நாட்டுக்கோழில எல்லாம் அவ்வளவு லாபம் பாக்க முடியாது சாமி. ஆனா இதுக முட்ட பொரிச்ச நாப்பத்தி அஞ்சு நாள்லயே கறிக்கு வித்துப்போடலாம்” என்றார்.
அவரது வணிக நோக்கம் சார்ந்த பேச்சு அரசிக்கு அதிர்ச்சி அளித்தது. நாற்பத்தி ஐந்து நாட்களில் அவையாக வளரவில்லை ஹார்மோன் ஊசிகள் மூலம் இவர்கள் வளர்க்கிறார்கள் என்று புரிய,
“மத்தவங்களுக்கும் நல்லதையே கொடுக்கலாமே. லாபத்துக்காக மத்தவங்க ஆரோக்யத்தோட விளையாடுறதுங்களா?” என்றாள்.
“அதெல்லாம் பாத்தா நம்ம பொழப்ப ஓட்ட முடியுமா கண்ணு? தேவைங்குறனால தானே அவங்களே வந்து வாங்குறாங்க. வாரக் கடைசி ஆனா கறி வாங்க கூட்டம் அலைமோதும். பிராய்லர் கோழிக தான் நல்லா வெலை போகுது. எதைய நெறக்கா வாங்குறாங்களோ அதையத்தானே நாங்களும் விக்க முடியுங் கண்ணு” என, அவரை ஆழமாய் ஒரு பார்வை பார்த்த அரசி வேறெதுவும் பேசாது அவள் பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிக் கொண்டாள்.
நேரம் நகர, இரவு உணவை முடித்துக் கொண்டு என்றும் போல் வாசலில் வந்து பாயை விரித்துப் படுத்தான் குலசேகரன்.
சிறிது நேரத்தில் கொலுசு சத்தம் அவனுக்கு வெகு அருகில் கேட்க மெல்ல கண்விழித்துப் பார்த்தான். அரும்பு தான் அவனருகில் நின்றிருந்தாள்.
“அது.. உள்ளார ஒரே உப்பசமா இருந்துச்சு மாமா. அதான் வெளிய படுக்கலாம்னு வந்தேன்” என்றாள் அவன் கேட்காத தகவலாய்.
‘மழைக்காத்து இந்தப் போடு போடுது இவ என்ன உப்பசம்னு சொல்லுறா’ எனப் பார்த்திருந்தவன் ஏதும் பேசாது திரும்பிப் படுக்க, அவனருகே அமைதியாய் படுத்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் சென்றதும்,
“எங்கப்பாவுக்கு ஏன் மாமா உன்னைய பிடிக்கலை” என்று அரும்பின் குரல் சோகமாய் ஒலிக்க, மெல்ல அவள் புறம் திரும்பிப் படுத்தவன்
“அது ஒண்ணுமில்லடி எலிக்குட்டி, மீசை உனக்கு பிரமாண்டமா பேரு வைக்கலாம்னு இருந்தாரு. நான் குறுக்கால பூந்து அரும்புனு வெச்சுப்போட்டேன்” என்றான்.
“நீ வெச்ச பேரு தானா இது? அதென்ன அரும்பு மொக்கு பூவுன்னு.. ஊருக்குள்ள என்ரனால தல காட்ட முடியலை”
“உங்கப்பன் வெய்க்க இருந்த பேருக்கு இது மோசமில்ல”
“அப்படி என்ன வெய்க்க இருந்தாரு?”
“அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி”
“என்னது பிரமாண்ட நாயகியா” என அவள் அதிர்ச்சியாய் வினவ,
“நான் தான் சொல்லல பிரமாண்டமா பேரு வைக்க இருந்தாருன்னு. ஆராச்சும் உன்ர பேரென்னோனு கேட்டா நீ சொல்ல சிரமப் படுவியேன்னு அப்போவே நான் யோசிச்சு உன்ர காதுல அரும்புனு மூணு தடவ சொல்லிப்போட்டேன். இப்போ சொல்லு, மாமன் உனக்கு நல்லது பண்ணுனேனா இல்ல கெட்டது பண்ணுனேனா?” என புருவத்தை உயர்த்த,
“நல்லது தான் மாமா பண்ணிருக்க. ஆமா உனக்கு யாரு மாமா பேரு வெச்சா?” என்றாள்.
“விக்ரமனுக்கு பேரு வெய்க்க கோயிலுக்கு எடுத்துட்டு போகைல எனக்கும் பேரு வெய்க்க சொல்லி உன்ர அம்முச்சி வேலுச்சாமி அப்பா கையில கொடுத்து போடுச்சாம். அவருதேன் எனக்கு குலசேகர பாண்டியன்னும் அவனுக்கு விக்கிரம பாண்டியன்னும் வெச்சிருக்காரு” என, கேட்டுக் கொண்டவள் சில நொடிகளில்
“மாமா! நான் பொறந்தப்றோம் நீயே தான் என்னைய வெச்சிருப்பியாமா யார்கிட்டையும் தர மாட்டியாமா அம்மா சொன்னாங்க. நெஜமாவா மாமா?” என்று கேட்க,
‘ஆமாம்’ என்று தலையசைக்க
“என்னைய உனக்கு அவ்வளவு பிடிக்குமா மாமா” என்றாள் கண்கள் மின்ன.
“நீ பொறந்தன்னைக்கு கூட உங்கொப்பனுக்கு ஏதோ வெட்டி முறிக்குற வேலைன்னு வெளிய கெளம்பி போய்ட்டாரு. பாருடா உன்ர அக்கா மவளைன்னு உன்னைய கொண்டாந்து என்ர மடியில வெச்சுது உன்ர அம்மத்தா. எலிக்குட்டி மாற இத்துனூண்டு இருந்த. மெல்ல என்ர கைய கொடுக்க ரெண்டே விரலால கெட்டியா பிடிச்சுக்கிட்ட” என்று சொல்லி அவள் வலக்கை விரல்களை வருடி அதில் தன் அதரத்தைப் பதிக்க, உடல் சிலிர்த்தவள் கண்களை மூடிக்கொண்டாள்.
“கண்ண முழிச்சு முழிச்சு பாத்துட்டு பம்பாய் மிட்டாய்க்கு கை தட்டுற பொம்மயோட்டம் இருந்த” என்று அடுத்து அவள் கண்களில் அதரத்தைப் பதிக்க,
“அப்பறம் மாமா” என்றாள் ஓசையே வராமல்.
அவள் கன்னங்களை மென்மையாய் வருடி,
“மேல சொல்லட்டா” என்று கேட்க, கண்திறவாமல் அவள் ஒப்புதல் அளித்தாள். அதில் புன்னகைத்தவன் அவள் முன்நெற்றியில் செல்லமாய் முட்டி,
“அப்பறம் என்ன! நீ மாமா ட்ரௌசரை ஈரம் பண்ணிட்ட. உன்ர அம்மத்தா வந்து உன்னைய தூக்கிட்டு போயிருச்சு” என்று சொல்ல, படக்கென கண்விளித்தவள்
“அட ச்சை. வெளிய வந்து படுத்தேன் பாரு என்னைய சொல்லோணும்” என்று தலையணையால் அவனை ரெண்டு மொத்திவிட்டு எழுந்து செல்ல,
“மேனகையே எங்க முன்னால வந்து ஆட்டம் போட்டாலும் நாங்க எங்க கொள்கைல இருந்து மாற மாட்டோம்டி” என்று சொல்ல, அவளுக்கே சிரிப்பு வந்தது.
‘ஷப்பா கொஞ்ச நேரத்துல எங்கக்கா மக அவ கொள்கைக்கு அவளே வேட்டு வெச்சிருப்பா. இது என்னடா நமக்கு வந்த சோதனை’ என்று எண்ணியவன்
“எலிக்குட்டி நல்லா ஆட்டங்காட்டிட்டு போய்ட்டாளே. இனி நமக்கு தூக்கம் வந்த மாறதேன்” என்று புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.