மண்வாசம் 25 :
முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் இருந்தாள் அருந்தமிழ்.
தினமும் மாறனோடு இருக்கும் வரையில் அவள் அகம் கொண்டிருக்கும் ஆனந்தமும் அமைதியும் அவன் மட்டை மில்லுக்கு கிளம்பிச் சென்றபின் மொத்தமாய் வடிந்துவிடும்.
மனையின் தனிமையும் மனதின் வெறுமையும் அருந்தமிழை பெரிதாய் வாட்டியது.
வீட்டில் தனியாக இருப்பதற்கு தானும் மில்லுக்கு வருவதாய் அருந்தமிழ் தெரிவித்தபோது அதை மறுத்துவிட்டான் மாறன். ஆட்கள் வேலை செய்யும்போது அங்கும் இங்கும் சென்று பலதையும் கவனிக்க வேண்டி இருக்கும். சில நேரங்களில் வெளியே செல்லும்படி இருக்கும். அங்கிருந்து திரும்ப நேரம் ஆகலாம். அப்படிப் போகுமிடம் எல்லாம் தமிழை அழைத்துக் கொண்டு செல்லமுடியாது என்பதால் மறுத்துவிட்டான்.
மனையாளின் மனச்சோர்வை அறிந்ததாலோ என்னவோ இன்று எங்கும் செல்லாது அவளோடே பொழுதைக் கழிக்க எண்ணினான்.
“இன்னிக்கு மில்லுக்கு போகலையாங்க?” என்று தமிழ் கேட்க,
“ஆளுகளே வேலைய பாத்துக்குவாங்க தமிழ். இன்னிக்கு உங்ககூட மட்டுந்தான் இருக்கப் போறேன்” என, அவன் தீர்மானத்தை இன்முகமாய் வரவேற்றாள்.
“இப்படி வந்து உக்காருங்க” என அவளை தன்னருகில் அழைத்தவன்,
“நீங்க ஏன் என்ரகிட்ட எதுவுமே கேக்க மாட்டிங்குறீங்க?” என வினவ,
“நான் உங்க கூட வரட்டுமான்னு கேட்டேன் நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க” என்றாள் குறையாய். அதில் புன்னகைத்தவன்,
“மில்லுக்கு தானங்க வர வேண்டாம்னு சொன்னேன். இப்போ எல்லாம் நீங்க கோவிலுக்கு போற மாற கூட தெரியல” என,
“நீங்களே வெளிய போய்ட்டு சோர்ந்துபோய் வீட்டுக்கு வர்றீங்க. அலைச்சல்ல அசந்து தூங்கிடுறீங்க. நானும் என்ர பங்குக்கு அலைச்சல் கொடுக்க வேண்டாம்னு தான் எங்கயும் கூட்டிட்டு போக சொல்லி கேக்கலைங்க” என்றாள்.
சில நொடிகள் அவளைப் பார்த்தபடி அமைதி காத்த மாறன்,
“நான் தான் தப்பு பண்ணிட்டேன்” என்றான்.
தமிழ் புரியாது பார்க்க,
“நீங்களா கேப்பிங்கன்னு பாத்தா கடைசி வரைக்கும் நீங்க கேக்க மாட்டீங்க. நானா கூட்டிட்டு போயிருக்கணும். சீக்கிரம் ரெடி ஆகி வாங்க நாம இன்னைக்கு கோவிலுக்கு போய்ட்டு அப்படியே ஆழியார் டேமெல்லாம் சுத்தி பார்த்துட்டு வரலாம்” என்றான்.
தமிழ் ஏதோ கூற வர,
“எதுவும் பேசக்கூடாதுங் டீச்சர். இன்னும் பத்தே நிமிசத்துல வெளிய நிக்குற கட்டவண்டில உங்க கட்டவண்டி பக்கத்துல நீங்க உக்காந்திருக்கணும்” என்றுவிட, புன்னகையுடன் தயாராகச் சென்றாள்.
அடுத்த சில நிமிடங்களில் முக்கிய சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது மாறனின் ஜீப்.
“நான் ரொம்ப நாளா உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்னு நெனச்சேங்க. என்னைய எப்போ இருந்து தெரியும் உங்களுக்கு?” என்று திடீரென கேட்டாள் தமிழ்.
‘ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க’ என நினைத்து புன்னகைத்த மாறன்,
“உங்களை நான் முதல் முதல்ல பாத்தப்போ பாவாடை தாவணில கோவில்ல விளக்கேத்திட்டு இருந்தீங்க தமிழ். அப்போ தான் காலேஜ் சேர்ந்திருப்பீங்க போல. நானும் கோயம்புத்தூர்ல ஹாஸ்ட்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தேன். லீவ்ல ஊருக்கு வரும்போதெல்லாம் உங்களை பாக்கறதுக்காகவே ஜீப்ல சுத்துவேன்” என்று மாறன் சொல்ல, ஆச்சர்யமாய் இருந்தது தமிழுக்கு.
“ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க” என அதை சொல்லவும் செய்தாள்.
“எனக்கு வரப்போற மனைவி எப்படி எல்லாம் இருக்கணும்னு மனசுல நெனச்சனோ அதுக்கு உயிர் கொடுத்ததோட்டம் என்ர முன்னால நின்னீங்க நீங்க. இருந்தும் நானா உங்ககிட்ட பேச முயற்சி பண்ணினது இல்லைங்க தமிழ். ஸ்கூல்ல வெச்சு நீங்க தான் என்ர கிட்ட முதல் முதலா பேசுனீங்க. அப்படி இருக்கறப்ப இப்படி ஒருத்தன் உங்களையே நெனச்சிட்டு இருந்ததெல்லாம் தெரிய வரும்போது ஆச்சர்யமாத்தானே இருக்கும்” என்று மாறன் சொல்ல,
“அட அதில்லைங்க” என்றாள் தமிழ்.
அதில் பிரேக்கை அழுத்தியிருந்தான் மாறன். மூச்சு முட்ட தன் காதல் கதையைக் கூறியிருக்க அவள் அதைக் கண்டுகொள்ளாது வேறு எதைப் பற்றி பேசுகிறாள் என்று அவள் புறம் பார்க்க,
“நீங்க காலேஜ் எல்லாம் போனீங்களா?” என்று கேட்டாளே பார்க்கலாம் மாறனுக்கு அதற்குமேல் அவனது கதையை யாரிடமும் சொல்லக் கூடாது என்ற எண்ணம் வலுத்துவிட்டது. அன்று சாரதா தான் கண்டுகொள்ளாது சென்றார் என்றால் தமிழுமா என்று எண்ணியவன், வண்டியைக் கிளப்பி சாலையில் பார்வையை வைத்தவாறே
“நான் என்ன படிச்சிருப்பேன்னு நெனைச்சீங்க?” என்றான்.
“என்ன ஒரு பன்னிரெண்டாவதுனு நெனச்சேங்க. நீங்க டிகிரி எல்லாம் படிச்சீங்களா? எந்த காலேஜ்” என்றாள் ஆச்சர்யம் மாறாது.
அவள் புறம் பார்த்த மாறன்,
“கோயம்புத்தூர்ல இருக்குற தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிடில நான் பி.ஹெட்ச்.டி பண்ணிருக்கேங்க தமிழ்” என வியப்பில் பெரிதாய் விரிந்தது அருந்தமிழின் விழிகள்.
அன்று கந்தசாமி தன் மகனிற்கு மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை அதனால் தானும் கட்டாயப் படுத்தவில்லை என்று சொல்லவும் தமிழ் இப்படி நினைத்துக் கொண்டாள். அதை மாறனிடமும் தெரிவிக்க,
“இதுக்கு மேல என்னத்த படிக்கறதுங்க தமிழ்? அது புரியாம அவரு மேல படிக்கச் சொல்லிட்டு இருந்தாரு” என்றவன்,
“நான் படிக்கும் போதிருந்தே நம்மாழ்வாரோட கொள்கைகள்ல ரொம்ப ஈர்க்கப் பட்டேன்ங்க தமிழ். இயற்கை விவசாயம் செய்யணும்னு தான் எனக்கு விருப்பம். ரசாயன உரங்களை பயன்படுத்துறதுல எனக்கு உடன்பாடு இல்ல. இயற்கை உரங்களை மட்டுந்தான் பயன்படுத்துறேன். இதுல ஆர்வம் இருக்குறவங்களுக்கு உரம் எப்படி தயாரிக்கனும்னு சொல்லியும் தர்றேன். அப்படியே மட்டை மில்லையும் பார்த்துட்டு இருக்கேன். இதுக்கே நேரம் போத மாட்டிங்குதுங்க” என, அவனையே பார்த்திருந்தாள் அருந்தமிழ்.
“படிச்ச படிப்புக்கு நல்ல வேலை கெடச்சிருக்குமே அப்பறம் ஏன் இந்த வேலை பாக்குறேன்னு நினைக்குறீங்களா” என்று மாறன் கேட்ட மறுநொடியே,
“என்னைய பொறுத்த வரைக்கும் இப்போ நீங்க பாத்துக்கிட்டு இருக்குறது தான்ங்க நல்ல வேலை” என்றாள். புன்னகைத்த மாறன்,
“நீங்க எதைய சொல்லுறீங்க? விவசாயம் பாக்குறதையா இல்ல உங்களுக்கு டிரைவர் வேலை பாக்குறதையா” என சீண்ட,
“விளையாடாதீங்க. எனக்கு உங்களை பத்தி எதுவுமே தெயரியலைனு நானே கவலையா இருக்கேன். இத்தனை நாளா நீங்க என்ன பண்ணுறீங்க என்ன படிச்சிருக்கீங்கனு எதுவுமே கேட்டு தெரிஞ்சுக்கலை” என வருத்தமாய் சொல்ல,
“டீச்சர்! இப்போவே எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியணும்னா எப்படி? வாழ்நாள் முழுக்க டைம் இருக்கு. வாழ்ந்து பாத்து மெதுவா தெரிஞ்சுக்கோங்க” என, அழகானதொரு புன்னகை அருந்தமிழிடம்.
சாலையின் இருபுறமும் குடை விரித்த குல்மோகர் மரங்கள் தன் செம்பூக்களை அவர்கள் மேல் தூவியது. மகிழ்ச்சியோடு செல்லும் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு திரும்பப் போவதை முன்னரே அறிந்து தான் மலர்தூவி வாழ்த்தியதோ!
கையடக்கமான இரும்பு உரலில் வெற்றிலை பாக்கை போட்டு இடித்துக் கொண்டிருந்தார் வேலாத்தாள்.
அவர் மனமெங்கும் மகள் சரோஜினியைப் பற்றிய சிந்தனைகளே. இறுதியாக அரும்பின் திருமணத்தில் பார்த்துப் பேசியது. அதன் பின் பேச்சு வார்த்தையே இல்லை. முத்துச்சாமியும் சரோஜினியை பற்றிய பேச்சை எடுக்கவே கூடாது என்று தெரிவித்துவிட, தங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி நொந்து கொண்டிருந்தார் வேலாத்தாள்.
சரியாக முத்துச்சாமி அவரது கைபேசியை கொண்டு வந்து அன்னையிடம் நீட்ட, யோசனையோடு நிமிர்ந்து பார்த்தவர் மறுமுனையில் மகளாய் தான் இருக்கும் என்றெண்ணி கைபேசியை வாங்கி காதிற்கு கொடுத்தார்.
“அம்மா” என்ற குரலில்,
“கண்ணு சரோஜினி! உன்னையத்தேன் நெனச்சுகிட்டு இருந்தேன். உன்ரகோட பேசியே எத்தன நாளாச்சு. எப்படி சாமி இருக்குற?” என மகளிடம் அன்பொழுக நலம் விசாரிக்க, அதற்குமேல் அங்கிருக்காது உள்ளே சென்றார் முத்துச்சாமி.
“ஏதோ இருக்குறேனுங் ம்மா” என மறுமுனையில் சோர்வாய் ஒலித்தது சரோஜினியின் குரல்.
“ஏன் கண்ணு என்னாச்சு? மேலுக்கு (உடம்புக்கு) முடியலையா?”
“அதெல்லாம் இல்லைங் ம்மா. நம்ம முத்து அண்ணனே என்னைய ஒதுக்குனதுதேன் வருத்தமா இருக்குதுங். இப்பக்கோட என்ரகிட்ட ஒருவார்த்த பேசலைங் ம்மா. அரும்பு கலியாணத்துக்கு பொறவு ஒரே அடியா அண்ணி பக்கம் சாஞ்சுட்டாரோட்டைங்”
முத்துச்சாமி சென்றதை உறுதி படுத்திக் கொண்ட வேலாத்தாள் தன் குரலைத் தாழ்த்தி,
“உன்ர நங்கையக்காரி உங்கண்ணனுக்கு ஏதோ வசியம் வெச்சுட்டாலோட்ருக்குது. இந்த பய கீழ கெடக்குற துரும்பக் கூட அசைக்க மாட்டான் இப்போ என்னடான்னா அவளுக்கு கெணத்துல இருந்து தண்ணி எல்லாம் சேந்திக் கொடுக்குறான்” என்றார்.
“எதுக்கும் கொஞ்சம் பாத்து சூதானமாவே நடந்துக்கங் ம்மா. நமக்கு கொடுங்காலம் எடுத்திருச்சோட்டம் அதேன் இப்படி ஆட்டிப் படைக்குது” என நிலையை உணர்ந்து சொல்ல,
“பலபேத்த ஆட்டிப் படைச்சவளாக்கும் இந்த வேலாத்தா. என்ர கிட்ட எவ வேலத்தனமும் நடக்காது. மாமியா சொல்லுக்கு மருமகக்காரி மறுசொல் சொல்லக் கூடாது. மரகதா எல்லாம் நான் நில்லுனா நிப்பா உக்காருனா உக்காருவா” என பெருமை தட்ட,
“அதெல்லாம் ஒரு காலத்துலைங் ம்மா. இனி அண்ணிகிட்ட கைவரிசையை காட்டிப்பாருங்க பொறவு தெரியும். என்ர மருமகக்காரி முழுகாம இருக்குறேங்குற பேருல என்னைய போட்டு நெட்டைய வாங்குறாளுங். மூணு வேலையும் வாய்க்கு வக்கணையாவே வேணும்ங்குறாளுங் ம்மா” என்று அவர் வீட்டு நிலையைக் கூறி புலம்பினார்.
“சீவக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதா. வரும்போதே வயித்துல மூணு மாசத்தோட வந்தவ உன்னையவே அதிகாரம் பண்ணுறாளா? சரியில்ல கண்ணு. இதெல்லாம் மொளைலையே தட்டி வைக்கோணும் இல்லாட்டி உன்ர தலைமேலயே ஏறி உக்காந்துக்குவா”
“அவ நம்ம அரும்போட்ட இல்லைங் ம்மா. வாத்தியார் புள்ளைக்கு வாய்க்கொழுப்பு நெம்பவே இருக்குதுங். தெருநாய்க்கு வந்த வாழ்வைப் பாருன்னு நாஞ்சொன்னா அதுக்கு அவ சொறி நாய்க்கு சேட்டை அதிகம் ஆகிடுச்சு சோத்துல வெசத்த வெய்க்கோணும்கறா”
“அட சீம சிறுக்கி சீரங்க பருப்பி. இப்படியெல்லாம் பேசுறாளா. ஆமா உன்ர ஊட்டுக்காரரு என்னதேன் பண்ணுறாரு?”
“என்ர புருஷன் இத்தனை வருசமா புள்ள பூச்சியோட்டம் இருந்துபோட்டு இப்போ புலியோட்டம் பாஞ்சு பாஞ்சு அடிக்குறாருங் ம்மா. ஊட்டுக்காரியா இருந்த என்னைய இப்போ வேலைக்காரி ஆக்கிப்போட்டாருங்” என மூக்கை உறிஞ்சினர்.
“இந்த தேவராஜன் பயலுமா தட்டி கேக்குறதில்ல?” என்று வினவியவாறே இடித்து வைத்திருந்த வெற்றிலையை வாயில் போட்டுச் சுவைத்தார் வேலாத்தாள்.
“சொத்துல ஒரு பைசா கொடுக்க மாட்டேனு சொல்லி அவனையும் அடக்கி போட்டாருங் என்ர ஊட்டுக்காரரு. அதுக்குமேல இந்த தேவராஜ பய அவன் மாமனாரு கிட்ட முன்னமே அடி கிடி வாங்கி இருப்பானோட்ருக்குதுங். அந்தாள பாத்து பயந்துபோய் என்ர மருமாகக்காரி முந்தானைய புடிச்சிட்டே சுத்திக்கிட்டு கெடக்குறான். சொத்து சொத்துன்னு பாத்து கடைசில எனக்கு சோத்துக்கே வழியில்லாம போய்டுமோட்ருக்குதுங் ம்மா” என்று சரோஜினி மேலும் புலம்பியபடி இருக்க,
“ஒன்னுங் கவலைப்படாத கண்ணு. நீ மொதல்ல அந்த குஸ்தி வாத்தியார் புள்ளைய உன்ர ஊட்டுல இருந்து தொரத்திவுடுற வழிய பாரு. உன்ர அண்ணன் என்னிக்கும் என்ர சொல்ல மீற மாட்டான். அவன் கிட்ட மொல்லப் பேசி அவன் மனச கரைச்சு கூடிய சீக்கிரமே அரும்பை அந்த குலசேகரன் கிட்டிருந்து பிரிச்சு கூட்டியாந்து நம்ம தேவராஜன் கோட சேத்துப் புடலாம். நீ தகுரியமா இரு. நான் என்னத்துக்கு இருக்குறேன்” என்று வேலாத்தாள் சொல்லவும் அவர் எதிரில் முத்துச்சாமி வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.
மறுநொடியே தன் அன்னையிடம் இருந்து கைபேசியை வாங்கியவர்,
“நீ இத்தனை பண்ணியும் என்ர கூடப் பொறந்தவளா போய்ட்ட ஒரே காரணத்துக்காக பொறுமையா இருந்தேன் சரோஜினி. இனி போன் போடுற வேலை எல்லாம் வெச்சுக்காத. பொறவு நான் மனுசனா இருக்க மாட்டேன்” என கர்ஜிக்க, கை கால் வெடவெடக்க அழைப்பை துண்டித்துக் கொண்டார் சரோஜினி.
அதுவரையில் ஊசலாடிக் கொண்டிருந்த அவரது பொறந்த வீட்டு உறவானது அந்நொடியில் இருந்து மொத்தமாய் அறுந்து போனது. தன் மகனை அதிர்ந்து போய் பார்த்திருந்தார் வேலாத்தாள்.
“உங்களையும் சரோஜினியையும் என்ர ரெண்டு கண்ணாத்தேன் பாத்தனுங். இதுநாள் வரைக்கும் உங்களுக்கு எதாச்சும் கொறை வெச்சிருப்பனுங்களா? ஆனா நீங்க ரெண்டு பேரும் சேந்து இப்படி என்ர கண்ணயே குத்திப்போட்டீங்களே” என்ற முத்துச்சாமியின் வழி நிறைந்த கேள்வியில்,
“முத்துச்சாமி” என்று வேலாத்தாள் எழுந்து வர,
“பேசாதீங் ம்மா” என்ற சத்தத்தில் அவர் அமைதியாக, மரகதம் வேகமாய் வெளியே வந்து நின்றார்.
“உங்கள பத்தி ரத்தினசாமி மச்சான் சொல்லும் போதெல்லாம் நான் நம்பலீங் ம்மா. அவரு பையனுக்கு நம்ம அரும்ப தரவேணாம்னு அவரே சொன்னாருங். சரோஜினி மேல நான் வெச்சிருந்த கண்மூடித்தனமான பாசத்துல உங்க மேல நான் வெச்சுருந்த மரியாதைல நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி என்ர புள்ளைய நானே கொண்டு போய் படுகுழில தள்ளப் பாத்தனே” என துக்கம் தொண்டை அடைக்க நின்றிருந்தார்.
“எந்த சாமி புண்ணியமோ எம்புள்ள தப்பிச்சிருச்சு. ஆனா இப்பையும் உங்க மனசுல வேறேதோ நெனப்பு இருக்குதுங்கலோட்டம். உங்க பேத்தி வாழ்க்கைய கெடுக்க கங்கணம் கட்டிட்டு அலையுற அளவுக்கு உங்களுக்கு அப்படி என்ன பண்ணி போட்டாளுங் அரும்பு?” என்று கேட்க, மரகதம் கண்கள் கலங்க அங்கு நடப்பதை பார்த்திருந்தார்.
“அப்படி இல்ல கண்ணு. இந்த குலசேகர பய” என வேலாத்தாள் பேச வர,
“அவன் குணத்துல நம்மள விட ஆயிரம் மடங்கு ஒசந்தவனுங். உங்க பேத்திய அவனெப்படி வெச்சிருக்கான்னு இந்த ஊரே சொல்லுது. சொத்துதேன் வேணும்னா சரோஜினி வந்து என்ரகிட்ட கேட்டிருந்தாலே மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்திருப்பனுங்களே. ஆனா சொந்தந்தேன் வேணும்னு பாசத்த வெச்சு வேசம் போட்டு இப்படி என்ர புள்ள வாழ்க்கைய பணையம் வெச்சுட்டீங்களே” என அவருக்கே கண்களில் நீர் துளித்தது.
“எல்லாம் நீயும் சரோஜினியும் நல்லா இருக்கோணும்னுதேன் கண்ணு” என்ற அன்னையை ஆழமாய் பார்த்தவர்,
“பெத்த புள்ளைக அதுக குடும்பத்தோட நல்லா இருக்கோணும்னு நெனைக்கிறதுதேன் பெத்தவளுக்கு அடையாளம்ங். புள்ளைக தப்பான வழில போனாலும் பெத்தவதேன் அதைய சீர் படுத்தோணும். ஆனா நீங்க இப்படி கூட இருந்தே குடும்பத்தை பிரிக்குற வேலைய பண்ணுவீங்கன்னு நான் நெனச்சும் பார்க்கலைங் ம்மா” என்றார்.
மரகதம் தன் மாமியாரைத் தான் பார்த்திருந்தார். முத்துச்சாமியின் கேள்விகளுக்கு எல்லாம் வேலாத்தாள் மரகதத்தை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
“அப்பா இல்லாம என்னையும் சரோஜினியையும் காட்டு வேலைக்குபோய் கஷ்டப்பட்டு வளத்துனீங்க. உங்க சொல்ல வேதவாக்கா பின் பற்றுனவன் நான். உங்களைய எதுத்து பேசுனாவே ஆரு என்னன்னு பாக்காம கைநீட்டுறவன் நான். அத்தன மரியாத வெச்சிருக்குற நீங்க என்ர குடும்பத்துக்கு துரோகம் பண்ண பாத்தீங்களே. மரகதா மேலையும் அரும்பு மேலையும் அப்படி என்னங் வெறுப்பு உங்களுக்கு?” என ஆவேசமாய் கேட்க,
“இல்ல கண்ணு இவதேன் உன்ர கிட்ட என்னென்னமோ சொல்லி உன்ர மனச கலச்சிருக்கா. என்ர மவனுக்கு என்ன மந்திரம் போட்டாளோ ஒருநாளும் என்னைய எதுத்து பேசாதவன் இப்போ என்னையவே ஆகாதவளா பாக்குறானே” என்று அப்போதும் புரிந்து கொள்ளாது மரகதத்தையே சாட,
“போதுமுங் ம்மா. இதுநாள் வரைக்கும் அரும்போ மரகதமோ உங்கள பத்தி என்ரகிட்ட ஒரு வார்த்த தப்பா பேசுனதில்லைங். நீங்கதேன் இன்னிக்கு வரைக்குமே அவங்களையே குத்தங்கொற சொல்லிட்டு இருக்குறீங்க. அவங்க அமைதியா போற நாலதேன் இன்னிக்கு வரைக்கும் நம்மட குடும்பம் ஓடிட்டு இருக்குது. இல்லனா நம்மட மானம் மருவாதை எல்லாம் எப்பையோ காத்துல பறந்திருக்கும்” என்றுவிட, வாயடைத்துப் போய் நின்றார் வேலாத்தாள்.
“நான் இதுநாள் வரைக்கும் உங்களுக்கு ஒரு நல்ல மகனா சரோஜினிக்கு நல்ல அண்ணனா இருந்திருக்கேனுங். ஆனா மரகதாளுக்கு நல்ல புருசனா அரும்புக்கு நல்ல அப்பனா இருக்க தவறிட்டேன்” என்றவர் மரகதத்திடம் வந்து,
“இத்தனை நாளா உன்ர அருமைய நான் உணராமையே போய்டேன் மரகதா. அன்னிக்கு நீயும் என்னைய விட்டுபுட்டு அரும்பு கூடயே இருந்திருவயோன்னு மொதோ மொறையா ஒரு பயம் வந்துச்சு. நீ என்ர கூட இருக்குறதுக்கும் இல்லாம இருக்குறதுக்கும் உள்ள வித்தியாசம் அன்னிக்குத்தேன் புரிஞ்சுது. நீ மட்டும் பொழுதோட நம்மூட்டுக்கு வராம போயிருந்தா நானே உன்னைய தேடி அங்கயே வந்திருப்பேன். உன்ர சொல்ல மதிக்காம நடந்துகிட்டதுக்கு நல்லாவே அனுபவிச்சுட்டேன். என்னைய மன்னிச்சிரு மரகதா” என்று கைக்கூப்பி நிற்க,
“என்னங்க என்ரகிட்ட போய் மன்னிப்பு கேட்டுகிட்டு. நீங்க எங்களை புரிஞ்சுகிட்டதே போதுமுங்க. அரும்பு கேட்டா நெம்ப சந்தோசப்படுவா” என்று கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டார்.
தன் அன்னையிடம் திரும்பிய முத்துச்சாமி,
“இனியாவது என்ர குடும்பத்துக்காக வாழோணும்னு நெனைக்குறேன்ங் ம்மா. ஆயிரம் இருந்தாலும் அரும்புதேன் உங்க வாரிசு. தேவராஜன் கெடயாது. அப்படி நம்ம பரம்பரை சொத்தை அரும்பு அனுபவிக்குறதுல விருப்பம் இல்லைனா மொத்தமா சரோஜினிக்கே கொடுத்திருங்க. எனக்கும் அது தேவையில்ல. இனியாவது என்ர மகள நிம்மதியா வாழ விடுங்க. அதெல்லாம் என்ர மகளும் மாப்ளையும் நமக்குமேல சொத்து சம்பாரிசுப் போடுவாங்க” என்றார் பெருமிதமாய்.
குலசேகரனை தன் மாப்பிள்ளை என்று அவர் அடையாளப் படுத்தியதில் மரகதத்திற்கு மனம் நிறைந்து போனது.
“மரகதா இங்க இருக்குறது புடிக்கலையா சொல்லுங்க, அவளை கூட்டிட்டு காட்டுச் சாளைக்கு குடி போயிடுறேன். வீட்டையும் சரோஜினிக்கே கொடுத்துடறேன். இனியாவது என்ர பொண்டாட்டி புள்ளைய நிம்மதியா வாழ வைக்கோணும்னு பாக்குறேன்ங்” என்றுவிட்டார் முத்துச்சாமி இறுதியாய்.
அதில் வேலாத்தாள் மொத்தமாய் தளர்ந்துபோய் நின்றிருந்தார். அவர் மனதில் எழுப்பிய கோட்டை எல்லாம் தகர்ந்துபோய் தரை மட்டமாகி இருந்தது. தன் மகனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை கனவிலும் எதிர் பார்த்திருக்கவில்லை. நிர்க்கதியாய் நிற்கும் அளவிற்கு தன் நிலை வந்துவிட்டதை உணர, கண்களில் பெருகிய கண்ணீரோடு அமைதியாய் அவர் அறைக்குள் சென்றார்.
மரகதத்திற்கு இத்தனை ஆண்டுகள் கழித்து அவ்வீட்டில் ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பட்டிருந்தது. மருமகள் என்பவள் குடும்பத்தின் ஒரு அங்கமே தவிர அடிமையல்ல. ஆயிரம் உறவுகள் சூழ இருந்தாலும் மனைவி தான் பிரதானம் என்பதை முத்துச்சாமிக்கு காலம் உணர்த்தி இருந்தது.