கன்னத்தில் கைவைத்து சோகமே உருவாய் அமர்ந்திருந்தார் சாரதா.
என்றும் மட்டை மில்லுக்கு வரும் மகனை அங்கு சுற்றி இங்கு சுற்றி எப்படியாவது ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். இன்று அவன் வந்திருக்கவில்லை. தமிழோடு வெளியே செல்வதாய் தெரிவித்திருந்தான் என்றாலும் எத்தனை நாளைக்கு இப்படியே மகனையும் மருமகளையும் பிரிந்திருப்பதென்ற சோகம் அவர் மனதை வாட்டியது.
ஆயிரம் முறை கைபேசியில் பேசினாலும் அருகாமையைத் தான் நாடுகிறது தாய் மனம்.
“சாரதா! இந்த மாசத்துக்கான தேங்காப் பணம் இந்தா” என்று எப்போதும்போல் வருவாயை சாரதாவிடம் நீட்டினார் கந்தசாமி.
“உங்க சம்பாத்தியம் தானோ நீங்களே கொண்டுபோய் உள்ளார வைங்க” என்றுவிட்டு சோக ராகத்தை தொடர,
“நான் சம்பாரிக்குறதெல்லாம் ஆருக்காம?” என்று கந்தசாமி கேட்க,
“அதுதேன் எனக்கும் சந்தேகமா இருக்குதுங். நமக்கு இருக்குறது ஒத்தப்புள்ள, அங்க அது கெடந்து கஷ்டப்படுது. நீங்க ஆருக்காக இந்த வயசுலயும் இப்படி ஓடியாடி சம்பாரிக்குறீங்க?” என்று விளாச, அதற்குள் அவரது கைபேசி இசைக்க டைனிங் டேபிளின் மீதிருந்த அதை எடுக்கச் சென்றார்.
“அப்படியாஆஆஆ” என்று அதிர்ச்சியாய் ஒலித்த அவரது குரலில் வேகமாய் அங்கு வந்த கந்தசாமி,
“என்னாச்சு சாரதா?” என்று வினவ, அழைப்பைத் துண்டித்த சாரதா
“நம்ம மாறனும் தமிழும் ஆஸ்பத்திரில இருந்து போன் பண்ணுனாங்க” என்றார் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.
“ஆருக்கு என்னாச்சு” என்று கந்தசாமி பதற, அவர் அருகில் வந்தவர் மெல்ல தன் இதழ்களை விரித்து அழகாய் சிரித்து
“நீங்க தாத்தா ஆக போறீங்களாமா” என்று சொல்லி மறுநொடியே கணவரின் கைப்பிடித்து மகிழ்ச்சியில் சுற்ற, ஆனந்தம் ஊற்றாய் பெருகியது கந்தசாமிக்கு.
“பாட்டி ஆகுற வயசுல உனக்கிந்த ஆட்டம் தேவையா சாரதா. நீ ஆடுறதும் இல்லாம ஒரேடியா என்னைய உக்கார வெச்சுறாத தலை சுத்துது” என்றதும் அவர் கையை விட்டவர்,
“எனக்கு இருக்குற சந்தோசத்துல தல கால் புரியலைங்க. இப்போவே போய் மாறனையும் தமிழையும் நம்மூட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம் வாங்க” என அழைக்க, மெல்ல கந்தசாமியின் முகம் மாறியது.
“என்னங்க யோசிக்குறீங்க, வாங்க போலாம். பேரனோ பேத்தியோ அது நம்ம குடும்பத்து வாரிசு. உங்க மகனை தண்டிக்குறதா நெனச்சு நம்ம குடும்பத்து வாரிசை தண்டிச்சு போடதீங்க” என்று சொல்ல,
“ஆறுச்சாமி இன்னும் அவங்கள ஏத்துக்கல சாரதா. அவரு ஏத்துகிட்டா இந்த நிமிசமே மாறன் நம்மூட்டுல கால் வைக்கலாம். அதுக்கு முன்னால என்ர முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என்றுவிட்டு நகர, செல்லும் அவரையே பார்த்திருந்தார் சாரதா.
அரசி மூலம் அருந்தமிழின் விசயத்தை அறிந்த நாயகி வீட்டில் வேலை செய்வோர் அனைவருக்கும் தன் கையால் சமைத்துப் பரிமாறி மகிழ்ந்தார்.
“என்ன விசேசங் பெரியாத்தா” என்று மாடசாமி கேட்க,
“நான் கொள்ளுப்பாட்டி ஆக போறனாக்கும்” என்று சொல்ல, அனைவருக்கு ஆனந்தம் பெருகியது.
“நல்லா சாப்புடு மாடசாமி. எனக்கு மனசு நெறஞ்சுபோய் இருக்குது” என்று அனைவரது வயிறையும் நிரப்பினார் நாயகி. சூப் கடை சுப்பாத்தாள் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க,
“சுப்பத்தா நான் பாட்டியாத்தா ஆகப்போறேன். இந்தா, வெத்தலையும் கொரங்கு பொய்யிலையும் வாங்கி போட்டுக்கோ” என சுருக்குப் பையைத் திறந்து சில்லறைகளை அள்ளிக் கொடுக்க,
“அப்படியா நாயகி நெம்ப சந்தோசம்” என்றவர் கிடைத்தவரை லாபம் என சில்லறைகளை வாங்கி சீலையில் முடிந்துகொண்டு சொக்கலிங்கத்தின் பெட்டிக்கடை நோக்கி நடை போட்டார்.
ஆறுச்சாமிக்கு விசயம் தெரிந்ததும் தன் மன எண்ணங்களை வெளியே காட்டிக்கொள்ளது அமைதியாய் உள்ளே வந்து வள்ளியம்மாளின் புகைப்படத்தின் முன்பு நின்று அவர் முகத்தையே பார்த்திருந்தார். அவர் இந்நேரம் இருந்திருந்தால் ஒரு தாயாக மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால் ஆறுச்சாமிக்கோ பாசமும் கௌரவமும் சரி பங்கு வகித்தது.
தமிழும் அரசியும் ஒன்றாய் இருந்த புகைப்படத்தை கையில் எடுத்துப் பார்த்தார்.
“அப்பா” என்ற அருந்தமிழின் குரல் அவர் செவிகளுக்கு எட்டுவது போல் இருந்தது.
“தேவி மா” என கனிவோடு மகள் முகத்தை புகைப்படத்தில் வருடியவருக்கு,
“எனக்கு இவரை தான் பிடிச்சிருக்குங் ப்பா” என்று மாறனை கைகாண்பித்த தமிழ் நினைவு வரவும், பாசம் என்னும் தராசு கீழே சென்று கௌரவம் மேலே உயர்ந்தது. புகைப்படத்தை அங்கேயே வைத்துவிட்டு நகர்ந்தார்.
அரசியும் விக்ரமனும் அருந்தமிழைக் காண வேண்டி பண்ணை வீட்டிற்கே வந்திருந்தனர்.
அக்காவைக் கண்ட அரசி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஓடிவந்து அருந்தமிழை கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
பதிலுக்கு தமிழும் தங்கையின் கன்னத்தில் முத்தமிட, மாறனும் விக்ரமனும் அவர்களையே புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
அவர்கள் பார்வையை அறிந்து அக்கா தங்கை இருவரும் உள்ளே சென்று மறைந்துகொள்ள, மாறன் விக்ரமனோடு பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தான்.
“வெள்ளாமை எல்லாம் எப்படி இருக்குதுங்க விக்ரமன். தண்ணி சவுரியம் எல்லாம் பரவாயில்லைங்களா”
“ஒற்றை நாற்று நடவு முறைல கெணத்து பாசனத்துல தான் நெல்லு வெதச்சிருக்குங்க. மகசூல் எப்படியும் அதிகம் வரும். நவாய் பூச்சி தாக்குதல் பரவலா இருக்குது. அதுக்கு மட்டும் பூச்சி மருந்து அடிக்கவேண்டி வருமோட்ருக்குங்”
“பூச்சி மருந்து அடிக்குறதுக்கு மூலிகை பூச்சி விரட்டி அடிக்கலாங்களே. மஞ்சள் கரைச்சல், இஞ்சி கரைச்சல், வேம்பு புங்கன் கரைச்சல், சோற்றுக்கற்றாழை பூச்சி விரட்டி, அரப்பு மோர் கரைச்சல்னு இப்படி எத்தனையோ இயற்கை பூச்சி விரட்டி மருந்துகள் இருக்கும்போது ரசாயன பூச்சிக் கொல்லி என்னத்துக்குங் அடிக்கோணும்” என மாறன் சொல்ல,
“வாஸ்தவந்தாங்க ஆனா எனக்கு அதுல உங்க அளவுக்கு எல்லாம் அனுபவம் இல்லைங்க மாறன். எனக்கு பஞ்சகவ்யம் மட்டும் தான் தயாரிக்க தெரியுங்க” என்றான் விக்ரமன்.
“அது போதுங்களே. அதுக்கூட ஆடாதொடை, ஊமத்தை, நொச்சி, வெள்ளை எருக்கு, வேப்பிலை இதுகளோட சாறுகளை சேர்த்தா தசகவ்யம். இதுல ஆர்வம் இருந்தா போதுங்க விக்ரமன். நான் உங்களுக்கு இயற்கையா தயாரிக்க உதவி செய்யுறேன். மண்ணுக்கும் நல்லது பயிருக்கும் நோய் எதிர்ப்பு சத்து கெடைக்கும். மகசூலை விட நம்ம ஆரோக்கியம் தானுங்க முக்கியம்” என, அக்கூற்றை ஒப்புக்கொண்டான் விக்ரமன்.
மாறனோடு உரையாடும் போதுதான் இயற்கை விவசாயத்தில் அவனுக்கு இருக்கும் அறிவாற்றலும் அதன் மூலம் அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற அவனது நல்லெண்ணமும் விக்ரமனுக்கு புலப்பட்டது.
அவர்கள் ஒருபுறம் அளவளாவிக் கொண்டிருக்க, அருந்தமிழின் சோர்வு கண்டு அவளை சற்று நேரம் உறங்கச் சொல்லிய அரசி அவளருகிலேயே அமர்ந்திருந்தாள்.
தாயகப் போகும் ஆனந்தந்ததைத் தாண்டியும் அக்காவின் முகத்தில் இழையோடிய மெல்லிய சோகத்தைக் கண்டு கொண்டாள் தங்கை. அனைவரும் அருகில் இருந்தும் தூரமாய் இருக்கும் தந்தையையே நாடுகிறது அவள் அக்காவின் மனம்.
உறங்கும் அருந்தமிழையே பார்த்திருந்த அரசி, பின் நேரத்தைப் பார்த்து இரவு உணவை தயார் செய்துவைக்க சமையலறைக்குள் வர, முன்னரே சந்தகைக்கு மாவை தயார் செய்து வைத்திருப்பது கண்டு சந்தகை பிழியத் துவங்கினாள்.
இரும்பு சந்தகை மரம் கொண்டு பிழிய முடியாது பிழிந்தெடுக்க,
“நான் புழியுறேன் கொடு” என்று வந்து நின்றான் விக்ரமன்.
இடுப்பை பிடித்துக் கொண்டு நிமிர்ந்தவள்,
“நீங்க போய் மாமாவோட பேசிட்டு இருங்க” என,
“அவரு உங்கக்காவை பாக்க போய்ட்டாரு” என்றான்.
“அதான பாத்தேன். என்னடா காத்து இந்தப்பக்கம் வீசுதேன்னு”
“இத்தனை வருசமா இந்தப்பக்கம் வீசாம வேறெந்த பக்கம் வீசுச்சாம்”
“வேற எந்தப்பக்கம் வீசுனாலும் கண்ணாமுழி ரெண்டையும் தோண்டி போடுவேன் தோண்டி” என விரலை நீட்ட, அதை மடக்கியவன் அவளை ஒரு இடி இடித்து தள்ளிவிட்டு அவனே சந்தகை பிழிந்து கொடுத்தான்.
‘இந்த கல்லுக்குள்ள இப்படி ஒரு கருணையா’ என அவனை சைட் அடிப்பதை முறையாய் செய்து கொண்டிருந்தாள் அரசி. அவன் சில நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு அவளருகே வர,
“வாசல் அந்த பக்கம்” என்றாள்.
‘தெரியும்’ என்பதாய் ஒரு பார்வை பார்த்தபடி அருகில் வர,
“இது நம்ம வீடு இல்லைங் மச்சா” என்றவள் இருவருக்குமான இடைவெளி குறையவும் கண்களை மூடிக்கொள்ள,
“நீ சைட் அடிச்சதை மன்னிச்சிட்டேன். நான் சந்தகை பிழிஞ்சதை எங்காச்சும் வெளிய சொல்லிடாத. அப்பறம் வீட்டுக்காரன் கிட்ட வேலை வாங்குறையான்னு உங்கப்பா வெளுக்க போறாரு” என்று அவள் காதருகே ரகசியமாய் சொல்லிவிட்டு நகர, கண்களைத் திறந்தவள் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
பின் சந்தகையின் ஒருபகுதிக்கு தக்காளியும் மறு பகுதிக்கு எலுமிச்சையும் சேர்த்து இரு வகைகளில் தயார் செய்தாள். பால் கலந்து உண்ண தனியாகவும் எடுத்து வைத்தாள். அப்படியே நேரம் நகர்ந்திருக்க நன்மாறனிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பினர்.
விக்ரமனோடான பயணம்! சொல்லவா வேண்டும் அரசிக்கு. எப்போதும் போல் அவள் வலக்கரம் அவன் தோளை அழுந்தப் பற்றியிருக்க சோர்வில் அவன் மீதே சாய்ந்து கொண்டாள். வரும் வழியெங்கும் மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய,
“என்ன இவ்வளவு அமைதியா வர்ற” என்று கேட்டே விட்டான் விக்ரமன்.
“அதுங் மச்சா நாளைக்கு அக்காவுக்கு கொழந்த பொறந்தா அது தனியா விளையாடுமே கூட சேர்ந்து விளையாட யாரு இருக்கானு யோசிச்சிட்டு வர்றேன்ங்” என்று மெல்ல நிமிர,
“வேணும்னா நீ போய் விளையாடு” என, அரசியின் முகம் போன போக்கை சைட் மிரரில் கண்டவன் கட்டுப்படுத்த முடியாது சிரித்தே விட்டான்.
அடுத்து சரமாரியாக அவன் முதுகில் விழுந்த குத்துக்களில்,
“ஏய் கட்டக்காரி பேசாம வா டி” என குரல் கொடுக்க,
“அமைதியா வந்தா ஏன் அமைதியா வர்றேனு கேக்குறது அப்பறம் நீங்களே அமைதியா வானு சொல்லுறது. திஸ் இஸ் நாட் ஃபேர் அத்தக்கருப்பா” என்றுவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
எவ்வளவு மகிழ்ச்சியாய் இந்நாளைத் துவங்கினானோ இந்நாளின் இறுதியில் அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொண்டிருந்தான் நன்மாறன்.
“தமிழ்! சாப்பிடலாம் வாங்க” என இரவு உணவு உண்பதற்காக அருந்தமிழை அழைத்து வந்தான்.
இருவருக்கும் இன்றைய நாளின் இனிமையான நிகழ்வுகளே மனதில் நின்றது.
ஆழியார் அணையின் அழகோவியத்தை ரசித்தபடி நின்றிருக்க லேசாய் தலை சுற்றுவது போல் இருப்பதாய் தமிழ் தெரிவிக்கவுமே வரும் வழியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கு மருத்துவர் கூறிய நற்செய்தி செவிகளை எட்டியதும் இருவரது மனமும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. உடனே சாரதவிற்கும் அரசிக்கும் அழைத்து விசயத்தை தெரிவித்துவிட்டு வீடு வந்தனர்.
அனைவரது வாழ்த்து மழையில் நனைந்தாலும் இதுவரையில் கந்தசாமியும் ஆறுச்சாமியும் அவர்களுக்கு அழைத்து பேசியிருக்கவில்லை. பெற்றோர் ஆசி கிடைக்காததை எண்ணி வருத்தம் இருந்தாலும் அதை இருவரும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
வெள்ளை சந்தகையில் பாலும் சர்க்கரையும் கலந்த மாறன் அவன் கையால் எடுத்து அருந்தமிழுக்கு நீட்ட, யோசனையோடு பார்த்தவள் பின் புன்னகையுடன்,
“எனக்கு ஊட்டுறீங்களா இல்ல உங்க வாரிசுக்கா?” என்று கேட்க,
“உங்களுக்கு அடுத்து தான் தமிழ் யாரா இருந்தாலும்” என்றான்.
அதில் தமிழுக்கு சிரிப்பும் வந்தது அழுகையும் வந்தது. வாயைத் திறந்து அவனிடம் இருந்து உணவை வாங்கிக் கொள்ள, இனிப்பின் சுவை தித்திப்பாய் உள்ளே இறங்கியது. உணவே சுவையா இல்லை அதை ஊட்டுபவரால் சுவை கூடுகிறதா என்று பார்த்திருந்தவள்
“உங்களுக்கு சந்தோசமாங்க” என்று கேட்டாள் அவன் முகத்தை ரசித்துப் பார்த்து.
“அதைய வார்த்தையால தான் சொல்லணுமாங் தமிழ்” என்றான் மாறன். அவனது ஒவ்வொரு செல்லும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.
“நம்ம வீட்டுல நம்மள ஏத்துப்பாங்களா” என்று ஏக்கமாய் கேட்க, அவள் உதட்டோரம் ஒட்டியிருந்த பருக்கையைத் துடைத்தவன்
“கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்ங்க தமிழ்” என்றான் நம்பிக்கையாய்.
கண்களை துடைத்துக் கொண்டு தலையசைத்த தமிழ் அடுத்த வாய் உணவிற்காக தலையை உயர்த்தி வாயைத் திறக்க, புன்னைகயுடன் தன் முதல் சேய்க்கு தன் சேவையைத் தொடர்ந்தான் நன்மாறன்.
மனதிற்குள் பல ஆசைகளோடு வீடு வந்த விக்ரமனும் அரசியும் அங்கிருந்த லோகநாதனைக் கண்டு புருவங்கள் முடிச்சிட பார்த்திருந்தனர்.
விக்ரமன் வண்டியை நிறுத்த,
“இவன் என்னத்துக்கு இந்த நேரத்துல இங்க வந்திருக்கான்” என லோகநாதனை முறைத்தபடியே வண்டியில் இருந்து இறங்கினாள் அரசி.
மாறாக லோகநாதனின் முகத்தில் அத்தனை பதற்றம் சூழ்ந்திருந்தது. ஏதோ பேருதவியை நாடி வந்தவன் போல் அவர்களைப் பார்த்திருந்தான். இன்னதென்று சொல்வதற்கு தயங்கி நின்றிருக்க,
“என்னாச்சு லோகநாதா. என்ன விஷயம் இந்த நேரத்துல வந்திருக்க?” என விக்ரமன் கேட்க, அவனோ அரசியைத் தான் பார்த்தான். விக்ரமன் அவனை உள்ளே அழைக்க மறுத்தவன்,
“மாட்டுக்கு ரொம்ப முடியல விக்ரமா. கொஞ்சம் அவசரம்” என்றான் அத்தனை தயக்கமாய். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அரசியிடம் உதவியை கேட்பதென்று அவன் நின்றிருக்க, விக்ரமன் இப்போது அரசியைத் தான் பார்த்திருந்தான்.
மறுப்பாளா! மன்னிப்பாளா!
அரசி ஒன்றும் சொல்லாது வேகமாய் வீட்டினுள் சென்றுகொள்ள, லோகநாதனோ விக்ரமன் அருகில் வந்து
“பழசெல்லாம் மனசுல வெச்சுக்காத விக்ரமா. என்ர காளைக்கு ஒன்னுன்னா அதைய என்ரனால தாங்கிக்க முடியாது. அது அங்க சாக பொழைக்க கெடக்குது அரசிய எப்படியாவது வந்து வைத்தியம் பண்ணச் சொல்லு” என்று சொல்ல, போன வேகத்தில் கையில் பையுடன் திரும்ப வந்த அரசி
“மச்சா வண்டிய எடுங்க” என்றாள்.
லோகநாதனை முன்னால் அனுப்பிவிட்டு அரசியை அழைத்துக் கொண்டு சென்றான் விக்ரமன். அங்கு வயிறு உப்பிப்போய் படுத்திருந்தது ஒரு காளை மாடு. பார்த்ததுமே அரசிக்கு தெரிந்தது அதற்கு சாணமிடுவதில் சிக்கல் என்று.
கையுறைகளை மாட்டிக்கொண்டு அதை ஆராய்ந்தாள். வாயில் டார்ச் அடித்து பார்த்தவள் கையை விட்டும் ஆராய, என்னவென்று கண்டுகொண்டாள்.
“என்னாச்சு அரசி” என்று லோகநாதன் பதற்றமாய் கேட்க, அவனை முறைத்தவள்
“மாடு கன்னு மேயுற எடத்துல இப்படி தான் பிளாஸ்டிக் கவருகளை கொட்டுவீங்களா? தீவனத்தோட சேர்ந்து அதுவும் உள்ளார போயிருக்கு. குடல்ல சிக்கி ஜீரணம் ஆகாம சாணம் போட முடியாம வயிறு உப்பிப்போய் சிரமப்படுது” என காய, என்ன சொல்வதென்றே தெரியவில்லை லோகநாதனிற்கு.
“மாதுளம் பிஞ்சும் சப்போட்டா பிஞ்சும் நல்லா அரைச்சு கொண்டாங்க அதைய மாட்டு வாயுல ஊத்தணும்” என கைவைத்தியம் சொல்ல,
“அதைய பண்ணி பாத்துட்டோம் அரசி” என்றான் பாவமாய்.
“ஒரு லிட்டர் வெளக்கெண்ணெய் கொண்டாங்க” என, சில நிமிடங்களில் அது வந்து சேரவும் அதனோடு சில மருந்துகளைக் கலந்தாள். காளை மாட்டின் மூக்கணத்தை இழுத்து விக்ரமனும் லோகநாதனும் பிடித்துக் கொள்ள அதை மெல்ல தடவிக் கொடுத்து அதன் வாயில் எண்ணையை ஊற்றினாள் அரசி.
“இதுக்கு வயித்துல இருக்குறது எல்லாம் அடிச்சிட்டு வந்திறனும். இல்லைனா அறுவை சிகிச்சை பண்ணுறதுக்கு நீங்க மாட்டாஸ்பத்திரி தான் கொண்டு வரணும். அப்படி பண்ணுனாலும் மாடு பிழைக்குறது சிரமந்தான்” என, லோகநாதனிற்கு காளையை காணக் காண மனம் கனத்தது. அது வலியில் கத்துவதை கேட்க அவன் அங்கமெல்லாம் பதறியது.
சில நிமிடங்கள் காத்திருந்தனர். நேரம் கடந்ததே தவிர சிகிச்சை பயனளிக்காது போக, அதற்கு ஒரு ஊசியை செலுத்தினாள் அரசி. மீண்டும் சிறிது நேரம் கடந்து முயற்சி செய்ய, ஒருவழியாக அனைத்தும் வெளியேறியது. அதன் பின்னரே அனைவருக்கும் நிம்மதி.
காளைக்கு க்ளுகோஸ் ஏற்றிவிட்டு,
“இனி பிரச்சனை இல்லை” என்று சொல்ல, லோகநாதனோ தன் காளையையே பார்த்திருந்தான்.
“அன்பு இருந்தா மட்டும் போதாது அக்கறையும் வேணும். அதுக வாயில்லா ஜீவன்க பிரச்சனை இன்னதுனு சொல்லத் தெரியாது. தீவனம் வைக்கைல அதுல கம்பியோ பிளாஸ்டிக் குப்பையோ இருக்கான்னு ஒரு வாட்டி பாத்துட்டு வைங்க. மேய்ச்சல் நிலத்துல கண்ட குப்பையும் கொட்டாதீங்க” என, தலையசைத்த லோகநாதன்
“ரொம்ப நன்றி அரசி. இந்த உதவிய நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்” என்றான்.
இரவு நேரத்தில் அவன் அழைத்ததும் தயங்காது வந்து உதவியது அவனைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய உதவி. அதுவும் அவன் முன்பு செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அவள் வார்த்தைகளால் கூட அவனை காயப்படுத்தி இருக்கவில்லை.
“நான் என்ர கடமையை தான் செஞ்சேன். நாளைக்கும் ஒரு ஊசி போடணும். மாட்டை காத்தார வெளியவே கட்டுங்க” என சில மாத்திரைகளை வழங்கிவிட்டு விக்ரமனோடு கிளம்பினாள்.
ஏகாந்த இரவுப் பொழுதில் நிலவின் பொலிவில் இருபுறமும் தென்னந்தோப்புகள் துணைக்கு வந்து கொண்டே இருக்க, விக்ரமனின் மனமெங்கும் அரசியில் செயல்களே ஆக்கிரமித்திருந்தது.
எப்படிப்பட்டவள் இவள்! இப்படித் தான் என்று ஒரு நிலையில் அவளை அடைத்து விட முடியாது. எந்த நிலை வகித்தாலும் என்றும் அவன் அன்பில் கட்டுண்டு கிடக்கும் அவனது கட்டைக்காரியே அவள்.
“கட்டக்காரி!” என்று மதுரம் சிந்த அழைத்தான் விக்ரமன்.
அவளுக்கு இருந்த சோர்வில் விக்ரமனின் இடையை சுற்றி கைப்போடு அழுந்த பற்றிக்கொண்டு அவன் முதுகில் முகம் புதைத்திருந்தவள்,
“ஹ்ம்ம்” என்று சலுப்பாய் குரல் கொடுத்தாள்.
“ஐ லவ் யூ” என்றான்.
அவளிடமிருந்து பதிலை எதிர் பார்த்தவனுக்கு அவளது கொட்டாவி பதிலாகிட,
“ஏய் தூங்காத டி. அப்பறம் இங்கயே இறக்கி விட்டுட்டு போய்டுவேன்” என்று மிரட்ட, இன்னும் இறுகிப் பிடித்துக்கொண்டு அவன் முதுகில் முகம் புதைத்தாள்.
அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் வேங்கையரசியோடு தன் இனிய பயணத்தைத் தொடந்தான் விக்ரம பாண்டியன்.
வாசம் வீசும்..!