பொழுது விடிந்ததும் விக்ரமனோடு தன் பிறந்த வீட்டை நோக்கிக் கிளம்பி இருந்தாள் வேங்கையரசி.
முன்பொருநாள் அருந்தமிழுக்காக தன் வீட்டில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்று சொல்லிச் சென்றவள் தான் இன்று அதே அக்காவிற்காக அடியெடுத்து வைக்கவும் இருக்கிறாள்.
அரசியின் வருகையைத் தான் நாயகியும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
நேற்றைய பொழுதில் இருந்து நாயகியிடம் பேசுவதையே தவிர்த்திருந்தார் ஆறுச்சாமி. அருந்தமிழை சந்தித்துவிட்டு வந்ததை மறைக்காது மகனிடம் கூறியது தான் அதன் காரணம். அதோடு நில்லாது,
“நீதேன் கொஞ்சம் எறங்கி வந்தா என்னோ ஆறுச்சாமி? தமிழு வாயும் வயிறுமா இருக்குறா நாளைக்கு வளைகாப்பு அது இதுன்னு வந்துட்டா நம்ம புள்ளைய நாம தானோ கூட இருந்து பாக்கோணும். நானும் உன்ர சொல்லுக்கு கட்டுப்பட்டு மனச கல்லாக்கிட்டு இத்தன நாள் தமிழு மொகத்தையே பாக்காம இருந்துட்டனப்பா இனியும் என்ரனால முடியாது” என அவர் மனதில் இருப்பதையும் தெரிவித்தார்.
ஆறுச்சாமியின் அகத்திற்கு அதிர்வை அளித்தது அன்னையின் அச்சொல்.
“அவ செஞ்சது தப்புத்தேன். அதுக்கு நீ இத்தன நாள் ஒதுக்கி வெச்சதே போதுங் கண்ணு. அவளை ஒதுக்கிப் போட்டு நீ மட்டும் என்ன நிம்மதியாவா இருக்குற? இப்படி நீ இங்கயும் அவ அங்கயும் கெடந்து கஷ்டப்பட்டுறதை பாக்குறதுக்கு நான் ஒரேடியா கண்ணை மூடிறலாம். அப்போவாச்சும் அவள இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க விடுவயல்லோ” என உணர்ச்சிவசத்தில் நாயகி பேசிவிட, அன்னையையே பார்த்திருந்தார் ஆறுச்சாமி.
“நீங்களும் என்னைய தனியா விட்டுப்போட்டு போற முடிவுக்கு வந்துட்டீங்க. நெம்ப சந்தோமுங் ம்மா” என்று வருத்தமும் விரக்தியுமாய் சொல்லிவிட்டு அவரறைக்குள் சென்று கொண்டார். இரவு உணவிற்கும் வெளியே வரவில்லை.
இருவரும் அருந்தமிழ் மற்றும் அரசியின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி தூக்கத்தை தியாகம் செய்து இரவெல்லாம் விழித்திருக்க, விடிந்ததும் மனம் கேளாது மன வருத்தத்தோடு தன் மகனிற்கு தேநீர் கலந்து எடுத்துச் சென்றார் நாயகி. மிகவும் சோர்வாய் இருந்தவர் எதுவும் பேசாது அன்னையிடம் இருந்து தேநீரை பெற்றுக்கொண்டார்.
அருந்தமிழிற்கு மட்டுமே அளிக்கப்பட்ட தண்டனை அல்லவே அது. தண்டித்தவரும் தான் அதை அனுச்சனமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு தந்தையின் நிலையில் இருந்து கண்டால் அவரது ஏமாற்றமும் ஏக்கமும் புரியும். இந்நேரம் வள்ளியம்மாள் இருந்திருந்தால் அவருக்கு நல்வழி காட்டி இருப்பாரோ என்னவோ, மனைவியின் ஸ்தானத்தை வேறெந்த உறவாலும் நிரப்ப முடியாதே! ஆறுச்சாமியும் தன் மன வேதனைகளை யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லை.
ஆறுச்சாமியின் வீடு வந்திருக்க விக்ரமன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, அரசியோ தயக்கமாய் வாசலுக்கு வெளியிலேயே நின்றிருந்தாள்.
“வா வேங்கை” என அவன் சொல்லியும் அவள் அசையாது நின்றிருக்க,
“நான் பாத்துக்குறேன் வா” என அவள் கரத்தை பிடித்து அழைத்து வந்தவன்,
“உள்ளார வந்து நீ எதுவும் பேசிற வேண்டாம் வேங்கை. நானே மாமாகிட்ட பேசிக்குறேன்” என்றான் கண்டிப்பாகவே. அரசி பேச ஆரம்பித்தால் பிறகு அவனது ஆறுச்சாமி மாமனை அந்த ஆண்டவனாலும் காப்பற்ற முடியாதென்று அறிவான்.
அவளும் ஒப்புதலாய் தலையசைக்க,
“அரசி கண்ணு! விக்ரமா உள்ளார வாங்க ஏன் அங்கேயே நிக்குறீங்க” என்ற நாயகியின் குரலில் இருவரும் உள்ளே வந்தனர்.
பிரம்பு நாற்காலியில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தார் ஆறுச்சாமி.
“மாமா” என்ற விக்ரமனின் குரலில் மெல்லிய முறுவலோடு எழுந்தவர், அவன் பின்னால் வந்த அரசியைப் பார்த்ததும் பார்வையை விலக்காது அப்படியே நின்றிருந்தார்.
பின் தொண்டையை செருமிக் கொண்டு விரைப்பாய்,
“இந்த வீட்டு படியையே மிதிக்க மாட்டேன்னு போனவ இப்போ என்னத்துக்கு வந்திருக்குறாளாமா” என, அரசி உடனே விக்ரமனைப் பார்த்தாள்.
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசலாம்னு வந்தம்ங் மாமா” என்று நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தான் விக்ரமன்.
வேலாத்தாளைக் காண குலசேகரனும் அரும்பும் கிளம்பி முத்துச்சாமியின் இல்லத்திற்கு வந்திருந்தனர். வீட்டை எட்டியதுமே ஒப்பாரிச் சத்தம் வாசலைத் தாண்டி பலமாய் கேட்க,
“உங்கப்பத்தா அதுக்குள்ள போயிருச்சோட்ருக்குது” என குலசேகரன் அதிர,
“அம்மா அப்பவே சொல்லுச்சு மாமா. அப்பத்தாளுக்கு நெம்ப முடியல நீ ஒருவாட்டி வந்து பாத்துப்போட்டு போயிருன்னு. நாந்தேன் புடிவாதமா இருந்துபோட்டேன்” என்று கண்கலங்கியபடி அவளும் வேகமாய் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்.
பெண்கள் கூடி வேலாத்தாளின் அருமை பெருமைகளை எல்லாம் ஒப்பாரியாய் பாடியபடி அழுதுகொண்டிருக்க, சோர்ந்த முகத்தோடு அன்னையின் அருகில் நின்றிருந்தார் முத்துச்சாமி.
சரோஜினிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க அவரும் ரத்தினசாமியோடு வருகை புரிந்திருந்தார். வேலாத்தாளின் தலைமேட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். நிலைமை அதற்குள் இவ்வளவு தீவிரமாய் செல்லும் என்று அரும்பு எதிர்பார்த்திருக்க வில்லை.
“அப்பத்தா ரெண்டு நாளா உன்னைய பாக்கோணும்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. எங்க வராம போய்டுவயோன்னு நெனச்சேன் நல்லவேள வந்துபோட்ட” என மரகதம் தன் மகளை அழைத்து வர, அரும்பை அழைத்து வந்ததற்காக குலசேகரனை நன்றியோடு நோக்கினார் முத்துச்சாமி.
“ஆத்தா எங்கையோ மனசு விட்டுட்டாங்கலோட்டம். அதேன் ரெண்டே மாசத்துல இப்படி படுத்த படுக்கையாகிட்டாங்க” என்றபடி வந்த மாரிமுத்து,
“டாக்டர் வந்துட்டு இருக்காருங்களாமா. அவரு வந்து சட்டுபுட்டுன்னு சோதிச்சு பாத்துட்டு சொன்னா நம்ம சொந்த பந்தத்துக்கு எல்லாம் சொல்லிப்போடலாங் மாமா” என்று முத்துச்சாமியிடம் கூறிவிட்டுத் திரும்ப, அங்கு நின்றிருந்த குலசேகரனை நம்ப மாட்டாது பார்த்தான்.
“ஆயிரம் பண்ணியிருந்தாலும் அடுத்த நிமிசமே அதைய மறந்துபோட்டு சொந்தந்தேன் முக்கியம்னு வந்து நிக்குற என்ர மச்சான் மனச எப்பத்தேன் புரிஞ்சுக்க போறாங்களோ” என்று அனைவருக்கும் கேட்குமாறு சத்தமாய் சொல்லிவிட்டு குலசேகரனின் அருகில் வந்து நின்றுகொண்டான் மாரிமுத்து.
அரும்பு மெல்ல தன் அப்பத்தாளின் அருகே சென்றாள். பேத்தி வந்திருப்பதை வேலாத்தாளிடம் கூற, அவர் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். அரும்பைக் கண்டதும் அவர் முகத்தில் லேசாய் புன்னகை படர, கண்களில் நீர் கோர்க்க நடுங்கும் கரங்களோடு அவள் கை பற்றத் துடித்தார்.
“ஆத்தாஆஆ” என்று அவரது கைகளைப் பற்றிக்கொண்டு அருகே அமர்ந்தவளிடம் வெடித்தன விம்மல்கள்.
“என்ர ராசாத்தி” என அவள் கன்னத்தை வருடியவர்,
“உனக்கும் உங்கம்மாளுக்கும் பெரிய பாவம் பண்ணிப் போட்டேன் சாமி” என வருந்த, மரகதமும் மாமியாரைத் தான் பார்த்திருந்தார்.
அன்று முத்துச்சாமியின் பேச்சைக் கேட்டு ஆடிப்போய்விட்டார் வேலாத்தாள். மகனே தன்னை வெறுத்து ஒதுக்கும் நிலையை தான் உருவாக்கி வைத்துள்ளோம் என்று புரிய, அவர் ஆணவம் அதிகாரம் அனைத்தும் அவரை விட்டு அகன்றிருந்தது.
தன் நிலை நிற்கதியானால்? அதை நினைத்தும் பார்க்க முடியவில்லை. இறுதி காலத்தில் சொந்தங்கள் மட்டுமே உடன் இருப்பவை, சொத்துக்கள் அல்ல என்று உணர்ந்தார்.
மகன் தன்மீது வைத்திருந்த மதிப்பை இழக்கவும், இனி மருமகளும் தன்னை மரியாதை குறைவாய் நடத்தக் கூடும் என்று அவர் எண்ணியிருக்க, மரகதமோ அவரது நற்பண்புகளை சிறிதும் மாற்றி அமைத்துக் கொள்ளவில்லை. எப்போதும் போல் அவரது பணிவிடைகளைத் தொடர, கூனிக் குறுகித்தான் போனார் வேலாத்தாள்.
புத்தி கெட்டுப் போய் தான் நடந்துகொண்ட விதமெல்லாம் அவரை மெல்ல மெல்ல வதைத்தது. அரும்பிற்கு அநியாயம் இழைத்ததெல்லாம் கண்முன் வர, அவளைக் காண விரும்புவதாய் மரகதத்திடம் சொன்னார். ஆனால் மரகதம் எடுத்துக் கூறியும் அரும்பு வர மறுத்த வருத்தத்தில் ஆரோக்கியம் பாதித்து இன்று இந்நிலையில் இருக்கிறார்.
தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த அனைவரையும் மெல்ல பார்த்த வேலாத்தாள்,
“தேவராஜன் வரலையா சரோஜினி?” என்று மகளிடம் கேட்க,
“நான் அத்தன வாட்டி சொல்லியும் அவன் வரமாட்டினுட்டானுங் ம்மா” என்றார் சோகமாய்.
“நான் உன்ர மவனுக்காக என்னவெல்லாம் பண்ணியிருப்பேன் சரோஜினி. ஆனா அவன் நான் இந்த நெலைமைல கெடந்தும் என்னைய பாக்க வரமாட்டேன்னு சொல்லிப்புட்டான் பாரு. என்ர பேத்திங்காட்டித்தானோ எல்லாத்தையும் மறந்துபோட்டு என்னைய பாக்க ஓடி வந்திருக்குறா. அவ சொன்னதோட்டமே இந்த ஊரு மெச்ச வாழ்ந்து காட்டிட்டா பாரு” என்று அரும்பின் கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டார் வேலாத்தாள்.
“நானும் மொதல்ல புடிவாதமா தானுங் ஆத்தா இருந்தேன். என்ர ஊட்டுக்காரர் தான் என்ர மனச மாத்தி கூட்டியாந்தாரு” என்று அரும்பு சொல்லவும், குலசேகரனையே பார்த்த வேலாத்தாள்
“நாந்தேன் இத்தனை நாளா தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருந்துபோட்டேனுங் மாப்ள” என விழிகளால் மன்னிப்பை யாசிக்க, குலசேகரன் தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“அப்பத்தா உன்னையத்தேன் சொல்லுது மச்சா” என மாரிமுத்து சொல்லவும், தன் கண்ணையே நம்ப முடியாது பார்த்திருந்தான்.
விக்ரமன் எதைப் பற்றி பேசப் போகிறான் என்று அரசியின் வருகையை வைத்தே யூகித்திருந்தார் ஆறுச்சாமி.
ஆனால் அவன் பேசிய விசயமானது அவர் யூகத்திற்கும் அப்பாற்பட்டதாய் அமைந்து அவரோடு சேர்த்து அரசிக்கே அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது.
அரசி மீது அவன் கொண்ட காதலை முன்வைத்திருந்தான்.
அதைத் தொடர்ந்து நிச்சயம் முதல் திருமணம் வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மறைக்காது கூறினான்.
மஞ்சள் நீராட்டம் நடைபெற்ற தினம் அரசியின் கன்னத்தில் இருந்த மஞ்சள் கறை நினைவு வந்தது ரங்கநாயகிக்கு. அருந்தமிழின் நிச்சயத்தின் போது அரசி நடந்துகொண்ட விதம், அது தொடர்பாய் அவள் எழுப்பிய கேள்விகள் என அனைத்தின் காரணமும் புரிய வர, அரசியையே பார்த்திருந்தார்.
மிகவும் வருந்தியிருப்பாள். இருந்தும் வாய் திறக்கவில்லையே! அனைத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டு வலம் வந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்தார். அவள் மட்டுமா! அருந்தமிழும் தானே. மென்மையே உருவான அவள் எப்படி துடி துடித்துப் போயிருப்பாள்.
சாரதா அவளுக்கு வளையல் அணிவித்த போதே தான் இதை கவனித்திருக்க வேண்டும். தான் தூக்கி வளர்த்த இரண்டு பேத்திகளின் மனதையும் அறியாது போனதை எண்ணி பெரிதாய் வருந்தினார்.
ரங்கநாயகியோ கண்கள் கசிய நின்றிருக்க, ஆறுச்சாமியோ அதிர்ந்துபோய் நின்றிருந்தார்.
“நானே கல்யாணத்தை நிறுத்தி இருந்திருப்பேனுங் மாமா. அன்னிக்கு அம்மாவும் இதப்பத்தி உங்ககிட்ட பேசுறதா இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள நம்ம தமிழே மாறனோட வந்து உங்க முன்னாடி நின்னுட்டா. அவ அப்படி செய்யாம இருந்திருந்தா இந்நேரம் அவ உங்களோட இருந்திருப்பா…” என்றவன் அரசியைப் பார்த்தவாறு,
“வேங்கை உங்கள விட்டு பிரிஞ்சிருப்பா” என, அப்படியே தளர்ந்துபோய் நாற்காலியில் சாய்ந்தார் ஆறுச்சாமி.
அன்றொருநாள் வள்ளியம்மாளின் புகைப்படத்திற்கு முன் நின்று அரசி பேசிக் கொண்டிருந்ததெல்லாம் அவர் கண்முன்னே வந்து போனது. வேதனை தாங்காது தான் அப்படி நடந்து கொண்டிருப்பாள் என்றுணர்ந்தார். அருந்தமிழின் கவலையுற்ற முகம் கண்டும் அது தம்மை பிரிவதால் தான் என்று நினைத்துகொண்டு அதன் சரியான காரணத்தை அறியாது போனதை எண்ணி இப்போது வருந்தினார்.
“இதெல்லாம் நான் அன்னிக்கே உங்ககிட்ட சொல்லோணும்னு இருந்தேனுங் மாமா. ஆனா சூழ்நிலை சரியில்லைங். இதைய சொல்லுறதால உங்களுக்கு வெறுப்பும் வேதனையும் தான் அதிகரிக்கும். நீங்க தெரிஞ்சுக்காம இருக்குறதுதான் நல்லதுன்னு நெனச்சேனுங். ஆனா இனியும் நீங்க இதைய தெரிஞ்சுக்காம இருந்தா கடைசி வரைக்குமே தமிழை மன்னிக்காம போயிடுவீங்களோனு கவலையா இருக்குங்” என்றான்.
அவருக்கு அருந்தமிழின் முகமே அகக்கண்ணில் வந்து போனது. மணவறையில் இருந்த போதும் நொடிக்கொரு முறை தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாளே! தலை முழுகி விட்டேன் என்றபோது உடைந்து அழுதாளே!
“என்ரனாலையே உங்க சொல்லை தட்டிப் பேச முடியாம போனப்போ நீங்க கிழிச்ச கோட்டை தாண்டாத தமிழ் எப்படி உங்க முடிவையும் மீறி தன் மனசுல இருக்குறதை வெளிப்படையா சொல்லி இருப்பான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங் மாமா” என்றான் அருந்தமிழின் பக்க நியாயத்தையும்.
தன்னிரு பெண்களின் வாழ்க்கையை தன் கையாலேயே தொலைக்கப் பார்த்தோமே என்று வேதனை பெருகியது ஆறுச்சாமிக்கு. கந்தசாமி சம்பந்தம் பேச வந்தபோதே தமிழை மாறனிற்கு பேசிவிட்டு அரசியை விக்ரமனிற்கு பேசி இருந்தால் இந்நிலை வந்திருக்காதே என்று நினைத்தார்.
“தப்பு தமிழ் மேல மட்டும் இல்லைங் மாமா. எல்லாரு மேலயுந்தானுங். அப்படி இருக்க தமிழு மட்டும் எதுக்குங் தண்டனை அனுபவிக்கோணும்?” என விக்ரமன் இறுதியாய் கேட்க,
“இப்படி அல்லாரும் சேர்ந்து என்னைய ஏமாத்திப் போட்டீங்களே. நீயுமா விக்ரமா?” என்றார் ஆறுச்சாமி. விக்ரமன் பெரிதாய் தவிப்புக்குள்ளாக, இனி அவனால் பேச முடியாதென்று உணர்ந்து
“ஏமாந்து போனது நாங்க தானுங் ப்பா” என்றாள் அரசி. அதில் அவர் மகளைப் பார்க்க,
“என்னிக்கும் பெத்தவங்க விருப்பத்தை பிள்ளைக மேல திணிக்கக் கூடாதுங் ப்பா. எங்களுக்கும் ஒரு விருப்பம் இருக்கும். எங்க மனசுல பட்டதை உங்ககிட்ட தகுரியமா பேசுறதுக்கான சுதந்திரத்தை நீங்க கொடுத்திருந்தா நான் இங்கிருந்தே படிச்சிருப்பேன். அக்கா இப்படி அவளையே வருத்திக்கிட்டு இருந்திருக்க மாட்டா” என,
“நான் உங்க மேல பாசமா இல்லைன்னு சொல்லுறியா” என்றார் குரலை உயர்த்தி.
“வேங்கை” என விக்ரமன் அரசியை அழைக்க, கண்களை அழுந்த மூடித் திறந்தவள்
“அம்மா இல்லாம எங்களைய எப்படி வளத்துனீங்கன்னு எங்களுக்கும் நல்லாத் தெரியும்ங் ப்பா. உங்களுக்கு பாசமில்லைன்னு நான் சொல்லலைங். ஆனா எங்களுக்கு மேல உங்க கௌரவத்தை பாத்தீங்கன்னு சொல்லுறேன்ங்” என சொல்லவும் அவரிடம் விரக்திப் புன்னகை.
அவர் கௌரவத்திற்காகவா இத்தனையும் செய்தார்? மகள் மேல் கொண்ட பாசம் தானே அவரை இவ்வாறு செய்ய வைத்தது. அருந்தமிழ் செய்த செயலை அரசி செய்திருந்தால் இத்தனை விரக்தி இருந்திருக்காதோ இவரிடம்? செய்தது அருந்தமிழ். ஆருயிர் மகள். ஏற்க மறுக்கிறது அடிபட்ட மனம்.
“நாங்க தான் பெருசுனு நீங்க நெனச்சிருந்தா இத்தனை மாசம் கழிச்சு அதுவும் நம்ம குடும்பத்து மொதோ வாரிசை சுமந்தபடி தமிழ் உங்க முன்னாடி வந்து நின்னும் அவ மனசை நோகடிக்குறதோட்டம் பேசி இருந்திருக்க மாட்டீங்க”
அருந்தமிழிடம் அப்படி நடந்துகொண்டதை எண்ணியே வருந்திக் கொண்டிருந்தார் ஆறுச்சாமி. இப்போதும் அரசியும் அதையே எடுத்துரைக்க, நொறுங்கிப் போனார்.
“தமிழ் அங்க ஒரே அழுகை. அவ அழுகுறதை பார்த்து மாறன் மாமா அதுக்குமேல சோகமா இருக்காரு. உங்களுக்கு கோபம் இருக்கலாம் அதுக்காக பெத்த பொண்ணு நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நெனைக்குற அளவுக்கு வந்துட்டீங்களாங் ப்பா?” என,
“போதும் வேங்கை” என்றிருந்தார். விக்ரமன் அமைதியாய் இருக்கும்படி கண் காட்டியும் அவள் அமைதியடையவில்லை.
“இனி அக்காவை ஏத்துக்கறதும் ஏத்துக்காம போறதும் உங்க விருப்பம்ங். இதுக்குமேல நீங்க என்னங் ப்பா அவளை ஒதுக்கறது அவ நம்ம அல்லாரையும் ஒதுக்கி வெச்சுட்டா” என, புரியாது பார்த்தார்.
“ஆறு முடியப் போகுது இனி ஏழாவது மாசத்துல வளைகாப்பு பண்ணோனும்னு யாரோ சொன்னதுக்கு என்னையோட்டம் அநாதைக்கு எல்லாம் அந்த கொடுப்பனை இல்லைன்னு நம்ம தமிழு சொல்லிருக்கா” என்றாள்.
“அநாதைனா சொன்னா??”
பெற்றவர் பதறிப் போனார். பாசம் பதற வைத்தது.
டாக்டர் வரவும் அவரை உள்ளே அழைத்து வந்தனர் குலசேகரனும் மாரிமுத்துவும். அவர் வேலாத்தாளை பரிசோதித்துக் கொண்டிருக்க,
“அப்போ சொந்த பந்தத்துக்கெல்லாம் சொல்லி விட்டுறலாம்ங்களா டாக்டர்” என மாரிமுத்து கேட்க,
“நோ நோ பல்ஸ் நார்மலா தான் இருக்கு. ஒரு பிரச்சனையும் இல்ல. சத்து மாத்திரை மட்டும் கொடுக்குறேன் தினமும் சாப்பாட்டுக்கு அப்பறம் கொடுங்க” என்று சொல்லவும்,
“என்ன மச்சா கெழவி சென்சுரி அடிக்காம போகாது போல” என்று குலசேகரனின் காதைக் கடித்தான் மாரிமுத்து.
“அட சும்மா இரு மாப்ள” என குலசேகரன் சொல்லவும் பெருமூச்சை விட்டபடி டாக்டரை வழியனுப்பச் சென்றான்.
“பேத்திய கண்டதும் கெழவி தெம்பா எந்திருச்சு உக்காந்து போட்டுது இனி எமன் கிட்டக் கூட வரமாட்டானப்பா” என்று ஆளாளுக்கு பேசியபடி அங்கிருந்து கிளம்ப, சரோஜினியை அங்கிருந்து கிளப்பும் முயற்சியில் இறங்கினார் ரத்தினசாமி.
“செத்த இருங்க. நான் ஒன்னும் பழைய சரோஜினி இல்ல. என்ர அண்ணன்கிட்ட ஒரு வார்த்த பேசிட்டு வர்றேன்” என்றுவிட்டு வந்தவர் முத்துச்சாமியிடமும் மரகதத்திடமும் மனதார மன்னிப்பை யாசிக்க,
“எதுனாலும் என்ர மாப்ள கிட்ட பேசிக்கோ” என்றுவிட்டார் முத்துச்சாமி. குலசேகரனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அண்ணன் சொல்லை அடுத்து குலசேகரனிடமும் அரும்பிடமும் வந்த சரோஜினி,
“நாஞ் செஞ்சதெல்லாம் எனக்கே திரும்ப வருது கண்ணு. கல்யாணத்தன்னைக்கு கூட உங்கள மனசார வாழ்த்தல நானு. பெரிய தப்பு பண்ணிப்போட்டேன். நீ என்ர மவனா பொறந்திருக்கலாம் சேகரா” என அவன் கையை பற்றியவர்,
“நீங்க ரெண்டு பேரும் உங்க மனசு போல நல்லா இருக்கோணும்” என்று மனதார வாழ்த்திச் செல்ல, ரத்தினசாமிக்கும் மனையாளின் இச்செயல் நிம்மதி அளித்தது.
அனைவரும் சென்றிருக்க, குடும்பத்தினர் மட்டுமே உடனிருக்க
“அட மரகதா.. முத்துச்சாமி! இப்படி மசமசன்னு நிக்காம நம்மூட்டு மாப்ளைய கவனிங்க” என்று வேலாத்தாள் கூறவும் குலசேகரன் நெஞ்சை பிடித்துக் கொண்டான். அரும்பிற்கு ஆனந்தம் பொங்க சிரிப்பும் அழுகையும் போட்டியிட்டது.
இதை தான் அவள் பல வருடங்களாக எதிர்பார்த்தது. உறவுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒரே குடும்பமாய் வாழ வேண்டும் என்ற அவளது ஆசை வெறும் கனவாய் போய்விடவில்லை.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்தபடி பின்வாசல் கதவில் சாய்ந்து நின்றிருந்தான் விக்ரமன்.
அவன் தோளை அழுந்தப் பற்றிய கரத்தைக் கொண்டு அது யாரென்றறிந்து மெல்லத் திரும்ப, அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் நின்றிருந்தான் நன்மாறன்.
“ரொம்ப நன்றிங்க விக்ரமன். நீங்க செஞ்ச இந்த உதவிக்கு காலம்பூரா நான் கடமை பட்டிருக்கேன்” என்று சொல்ல, விக்ரமன் புரியாது பார்க்க உள்ளே அருந்தமிழோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஆறுச்சாமியை கண் காண்பித்தான்.
விக்ரமனும் அரசியும் பேசியதில் தன் பக்க தவறை உணர்ந்துகொண்ட ஆறுச்சாமி அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு அருந்தமிழைக் காண வந்திருந்தார்.
தந்தையை தன் வீட்டில் கண்டதும் திக்கு முக்காடிப் போனாள் அருந்தமிழ் தேவி. இருவருக்கும் சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றிருக்க இருவரது விழிகளிலும் கண்ணீர் பெருக்கு.
“என்னைய மன்னிச்சிருங் ப்பா” என்று தமிழே முன்வந்து அவரிடம் மன்னிப்பை வேண்டி அவர் பாதம் பணியச் செல்ல, அவளைத் தடுத்து மனதார ஆசிர்வதித்தார்.
எத்தனை நாளத்து ஏக்கம் இது. மன்னித்துவிட மாட்டாரா என்று தவித்துப் போயிருக்க, நேற்றைய நிகழ்வில் இனி மன்னிப்பே கிடைக்காதா என்றெல்லாம் வருந்திக் கொண்டிருக்க, இன்றைய நாளே தந்தையை தன் வீட்டில் பார்ப்போம் என்று நினைத்தும் பார்த்திருக்கவில்லை.
அருந்தமிழுக்கு அழுகை அதிகரித்தது. அவள் விசும்பலில் மாறன் பதற்றமாய் அவள் அருகே வர, தன் மகளின் தலையை வருடிக் கொடுத்த ஆறுச்சாமி
“அழக்கூடாது தேவி மா” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டார்.
“நம்மளே புள்ளையையும் கிள்ளிப்போட்டு நம்மளே தொட்டிலையும் ஆட்டுன கதையா இல்ல இருக்குது” என்றார் ரங்கநாயகி. நேற்று ஆறுச்சாமி தமிழிடம் அப்படிப் பேசியதில் உண்டான கோபம் அப்படியே இருந்தது அவருக்கு.
“அப்பா தப்பு பண்ணிப்போட்டனா தேவி?” என்று மகளிடம் கேட்க,
“இல்லைங் ப்பா. நாந்தேன் தப்பு பண்ணிட்டேன். சின்ன சின்ன விசயத்துல எல்லாம் உங்க கௌரவத்தை காப்பாத்திட்டு இப்படி பெரிய விசயத்துல உங்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்திட்டேன். என்னைய மன்னிச்சிட்டேன்னு மட்டும் சொல்லுங் ப்பா. நீங்க என்னைய வெறுத்தா என்ரனால தாங்கிக்க முடியாதுங் ப்பா” என, ஆறுச்சாமிக்கு நெஞ்சை அடைத்தது.
அருந்தமிழைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் தான் இப்படி செய்திருக்கக் கூடாது என்று வருந்தினார். அவள் முகத்தை கைகளில் ஏந்தி,
“நாந்தேஞ்சாமி இப்படி பண்ணியிருக்கக் கூடாது. அதுக்காக நீ என்னத்துக்கு அநாதை அது இதுன்னு எல்லாம் சொல்லுற. அப்பா நான் இருக்குறேன் தேவி மா உனக்கு” என விழிகளில் நீர் கோர்க்கக் கூற, தான் எப்போது அப்படிக் கூறினோம் என்று புரியாது பார்த்தாள் அருந்தமிழ்.
விக்ரமன் உடனே தன்னருகில் இருந்த அரசியை முறைக்க,
“நல்லதுக்கு பொய் சொல்லலாங் மச்சா தப்பில்ல” என்று கண்ணடித்தாள்.
“எங்க அந்த சாட்ட வாரு” என்றுவிட்டு சுற்றிலும் பார்க்க, வேகமாய் நாயகியின் அருகில் வந்து நின்றுகொண்டு விக்ரமனைப் பார்த்து சிரித்தாள்.
“மாப்ள” என தன் மூத்த மருமகனான நன்மாறனை அழைத்த ஆறுச்சாமி மனம் மகிழ்ந்து அவனுக்கு ஆசிவழங்கி, அவனோடு மனம் விட்டு பேசவும் தான் அருந்தமிழின் முகத்தில் புன்னகையே பூத்தது.
“இப்பதேங் கண்ணு எனக்கு நிம்மதியா இருக்குது. சந்தோசத்துல மனசு பூராம் நெறஞ்சிருக்குது” என்று மகனிடம் சொல்லிப் புன்னகைத்தார் நாயகி.
அனைவரது மனதிலும் நிம்மதியே வியாபித்திருந்தது. அருந்தமிழ் தந்தையை விடாது அவரோடு பேசிக் கொண்டிருக்க, நாயகியும் அரசியும் சமையலை கவனித்தனர். அனைத்தும் நல்லவிதமாய் முடிந்த மகிழ்ச்சியில் விக்ரமன் மேற்குத் தொடச்சி மலையைப் பார்த்தவாறு நின்றிருக்க, அவனைத் தேடி வந்து நன்றி உரைத்திருந்தான் நன்மாறன்.
அவன் நன்றி உரைத்ததில்,
“நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்குங் மாறன். நீங்களும் தமிழும் செஞ்ச உதவிக்கு முன்னால நானும் வேங்கையும் எதுவும் பெருசா செஞ்சிடலைங்” என விக்ரமன் அவன் தோளை அழுந்தப் பற்ற, இருவரிடமும் அழகிய புன்னகை.
வாசம் வீசும்..!