மண்வாசம் : 27
மாட்டுப் பண்ணை!
சேகரித்து வைத்திருக்கும் காளையின் விந்தணுவை பசுவின் கருப்பையில் ஊசியால் செலுத்தி செயற்கை கருவூட்டல் மூலம் கருவுற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் அரசி.
சீமை மாடுகளே பண்ணை முழுவதும் காணப்பட்டன.
“நாட்டு மாடுக வளக்குறது இல்லைங்களா?” என்று உரிமையாளர் பாலசாமியிடம் இயல்பாய் கேட்க,
“அதுக என்னங்க வெறும் ரெண்டு லிட்டர் கிட்ட தான் பால் கொடுக்கும். ஆனா இந்த மாடுக அஞ்சுல இருந்து பத்து லிட்டர் வரைக்கும் கொடுக்குது. முன்ன எல்லாம் எங்க பாத்தாலும் வக்கிப்பில்லும் சோளத்தட்டுமா கெடைக்கும். தீவனத்துக்கு பஞ்சமில்ல. இப்போ அப்படிங்களா? தீவனம் வாங்குற காசுக்கு லாபமும் பாக்கோணுமில்லைங்க” என்றார் அவர்.
“என்னங்க எல்லாரும் இப்படியே சொன்னா நாட்டு மாட்டு இனமே இல்லாம போயிடும் போல. நாட்டு மாட்டு பால்ல இருக்குற நோய் எதிர்ப்பு சத்து இதுகள்ள இல்லைங்களே. லாபத்தை பாக்குற அளவுக்கு உங்க குடும்பத்தோட ஆரோக்கியமும் முக்கியம் தானுங்க”
“எங்க குடும்பத்துக்கு அளவா தனியா ரெண்டு நாட்டு மாடு வெச்சு கறக்குறோம்ங். அந்த பாலை தான் நாங்க அல்லாரும் குடிக்குறோம். இதெல்லாம் வியாபாரத்துக்குங்க. இதைய கொண்டுபோய் சொசைட்டில ஊத்துனா அங்கயும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு காசு, வாங்குறவங்களுக்கு ஒரு காசுனு பாதிக்கு பாதி லாபம் எடுத்துக்குறாங்க. எங்களயோட்டம் சிறு விவசாயிக எல்லாம் எப்படித்தேன் பொழப்ப ஓட்டுறதோ” என்று புலம்ப, அரசிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவள் பணியை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பச் சென்ற வேளையில் மாறனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங் மாமா” என, மறுமுனையில் மாறன் கூறிய செய்தியில் அரசியின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டது.
“அக்காவை பாத்துக்கோங்க. நான் அங்க வந்து பேசிக்குறேன்” என்றுவிட்டு கைபேசியை வைத்தவள் வேகமாய் ஆறுச்சாமியின் இல்லம் நோக்கி வண்டியைக் கிளப்பினாள்.
அரும்பு தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க, பணி முடிய சொற்ப நேரங்களே இருந்தது.
அதற்குள் அவளைக் காண தென்னை விவசாயி ஒருவர் வருகை புரிய, அவரது சந்தேகங்களையும் அவருக்கு வேண்டிய உதவிகளையும் அவரோடு ஆலோசித்துக் கொண்டிருந்தாள்.
அவருக்கு இருக்கும் இரண்டு ஏக்கரில் கலப்பின தென்னை வகைகளை போட திட்டமிட்டிருந்தார்.
“பாரம்பரிய நெட்டை ரக மரங்களை போடலாங்களே. புயலே அடிச்சாலும் எந்த பாதிப்பும் வராம மரம் தாங்குங்க” என அரும்பு சொல்ல,
“ஹைப்ரிட்னா சீக்கிரம் காப்புக்கு வந்துரும்ங் நமக்கும் நல்ல வருமானம் கெடைக்கும். நாட்டு மரங்க காப்புக்கு வர்றதுக்குள்ள பல வருசம் ஓடி போயிருமுங். நெல்லையே எடுத்துக்கோங்க வெளஞ்சு வர எத்தனை நாளாகுது. மரபணு மாற்றம் செஞ்சதா இருந்தா சட்டுன்னு உற்பத்திய பெருக்கிப் போடலாம்” என்றார் பெரியசாமி.
“எல்லாரும் இப்படி நெனைக்குறதுனால தான் பல பாரம்பரிய வகைகளே இல்லாம போய்டுச்சுங்க”
“அதுக்கென்னங் பண்ணுறது காலத்துக்கேற்ப நம்மளும் மாறிக்கோணும்ங். இப்போ எங்க கைக்குத்தல் அரிசில சாப்பிடுறாங்க அல்லாம் ரைஸ் மில்லுக்கு போய் பாலிஷ் பண்ணித்தேன் வருது. வாய்க்கு வக்கணையா தானோ வேணும்னு பாக்குறாங்க. பழைய சித்திர சம்பா அரிசியெல்லாம் இப்போ ஆரு சாப்பிடுறா? இப்படித்தேன் விளைவிக்கோணும்னு விவசாயி ஒரு நிர்பந்தத்துக்கு தள்ளப்படுறாப்ல. ஆரும் வாங்காததை உற்பத்தி பண்ணி அது நட்டமாகுறதுக்கு இந்த வழில போறது தேவலை தானுங்க” தங்கள் பக்கம் நியாயம் பேசினார் அவர்.
“வேக வேகமா சம்பாரிக்கோணும்னு நெனச்சு எல்லாரும் ஆரோக்கியம் இல்லாம வேக வேகமா மேலயும் போய்ட்டு இருக்காங்க” நிதர்சனம் பேசினாள் அவள்.
“அதென்னமோ வாஸ்துவந்தேனுங்” என்று ஒப்புக்கொண்டார். அதற்குள் அரும்பின் அறைக்குள் வந்த அங்கு பணிபுரியும் நபர்,
“மேடம்! உங்களை பார்க்க முத்துச்சாமினு ஒருத்தர் வந்திருக்காருங்” என்று சொல்ல,
“உள்ள வரச்சொல்லுங்க” என்றவள்,
“இங்க ஆராய்ச்சி மையத்துலையே கூட நீங்க தென்னை வாங்கிக்கலாம். உங்களுக்கு எந்த உதவி தேவை பட்டாலும் தயங்காம கேளுங்க” என்று பெரியசாமியிடம் விரைந்து பேசி முடிக்க, அவரும் விடை பெற்றுக் கொண்டார்.
அவர் எழுந்து செல்ல, முத்துச்சாமி உள்ளே வராது வாயிலிலேயே நின்றிருக்க
“உள்ள வாங்க ப்பா” என்று இருக்கையில் இருந்து எழுந்தாள் அரும்பு.
அதில் ஓர் நொடி நின்று இருவரையும் பார்த்த பெரியசாமி,
“அடடே உம்மட மவளா முத்துச்சாமி. படிச்சு நல்ல உத்தியோகத்துல இருக்குது. நெம்ப சந்தோசமப்பா” என்று அவர் தோளில் தட்டிச்செல்ல, அரும்பையே பார்த்திருந்தார் முத்துச்சாமி.
ஆறுச்சாமியின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு ஹாரனை ஒலிக்க விட்டாள் அரசி.
“அட ஆருடா அது காது கிழியுற அளவுக்கு ஆரன் அடிக்குறது” என்று நாயகி வெளியே வந்து எட்டிப் பார்க்க,
“அட சின்னக் குட்டி நீயா?” என்றார்.
“வந்து வண்டில ஏறுங் ஆத்தா” என்று அரசி வெளியிருந்தே குரல் கொடுக்க, பதற்றமாய் வெளியே வந்தவர்
“என்னாச்சு கண்ணு” என்று வினவ
“இப்போ ஏறப் போறீங்களா இல்லையா” என்றதும் வேகமாய் ஏறி அமர்ந்தவர்,
“மாடசாமி! நம்மூட்ட சூதானமா பாத்துக்கோ. பெரியய்யா வந்து கேட்டா நான் முக்கியமான சோலியா வெளிய போயிருக்கேன்னு…” அவர் முடிக்கக் கூட இல்லை அரசி வண்டியைக் கிளப்பி இருந்தாள்.
சந்து பொந்துகளில் அவள் வண்டி வேகம் எடுக்க நாயகிக்கோ பயமேடுத்தது.
“மொல்லப் போ கண்ணு. வயசான காலத்துல என்னைய கொண்டுபோய் கீழ கீன தள்ளிப் போடாத” என்று நகர்ந்து அமர,
“ஆடாம வாங்க ஆத்தா. நீங்க என்னையும் உழக்காட்டி போடுவீங்கலோட்ருக்கு” என வண்டியின் வேகத்தைக் குறைத்தாள்.
“உங்கப்பனுக்கு தெரியாம என்னைய எங்க கூட்டிட்டு போற கண்ணு. ஆரைய பாக்க போறோம்?”
“வந்து தெரிஞ்சுக்கோங்க” என்றவள் சிறிது நேர பயணத்தின் இறுதியில் அருந்தமிழின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்த, ஒன்றும் புரியாது பார்த்திருந்தார் ரங்கநாயகி.
அரும்பையே பார்த்திருந்தார் முத்துச்சாமி.
அரும்பின் திருமணத்திற்குப் பிறகு வெளியிடத்தில் வைத்து அவளைப் பார்க்க நேர்ந்தாலும் எதுவும் பேசாது கடந்து செல்வதையே வழக்கமாய் வைத்திருந்தார்.
அவரது மாற்றம் குறித்து முன்னரே மரகதவள்ளி அரும்பிடம் தெரிவித்திருந்தாலும், அவளும் அவரோடு பேச முயற்சித்து இருக்கவில்லை.
இன்று தான் தந்தை மகளது நேருக்கு நேர் சந்திப்பானது நிகழ்ந்திருக்கிறது. அதுவும் மகளைத் தேடி அவள் பணிபுரியும் இடத்திற்கே வந்திருந்தார் முத்துச்சாமி.
“என்ன விசயமுங் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?” என்று அரும்பே அவரோடு பேச,
“அதுங்க..” என்று அவர் தயக்கமாய் மரியாதையோடு ஆரம்பிக்கவும், அவரையே பார்த்தவள்
“நான் என்னிக்கும் உங்க மக தானுங் ப்பா” என்றிருந்தாள்.
ஒரு நொடியில் மொத்தமாய் கண் கலங்கிப் போனார் முத்துச்சாமி. இதை விட வேறென்ன வேண்டும் ஒரு தந்தைக்கு.
இப்படிப்பட்ட மகளுக்கு கேட்பார் பேச்சைக் கேட்டு, தானே அநியாயம் இழைத்து விட்டதை எண்ண எண்ண வலியும் வேதனையும் தான் பெருகியது.
கலங்கிய கண்களுடன் தன் முன் நின்றிருப்பவரையே பார்த்திருந்தாள் அரும்பு.
என்றும் பணி முடிந்ததும் வாயிலில் வந்து காத்திருப்பவள் இன்று நேரம் சென்றதை உணராது நின்றிருக்க, அவளைத் தேடிக்கொண்டு உள்ளே வந்திருந்தான் குலசேகரன். அங்கு முத்துச்சாமியைக் கண்டதும் நம்ப முடியாது கண்களை ஒருமுறை தேய்த்துக் கொண்டு பார்க்க,
“உன்னையும் மாப்ளையும் நம்மூட்டுக்கு கூட்டிட்டு போலாம்னுதேன் வந்தேன் கண்ணு” என்றார். மாப்பிள்ளை என்று சொல்லியதில் குலசேகரனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.
“சொத்துபத்தோட நீ சவுரியமா வாழோணும்னுதேன் சரோஜினி ஊட்டுக்கு உன்னைய அனுப்ப நெனச்சேன் கண்ணு. உன்ரகிட்ட கேக்காம முடிவெடுத்தது தப்புத்தேன். உன்ர விருப்பம் தெரிஞ்சும் நான் அதைய நெறவேத்தி வைக்கல. நீ வெவரம் தெரியாத புள்ளைன்னு நெனச்சேன் ஆனா நாந்தேன் வெவரம் தெரியாமையே இருந்துபோட்டேன்” என்று அவரது செயல்களுக்காக மிகவும் வருந்தினார்.
அரும்பு அமைதியாகவே இருக்க, குலசேகரன் அறைக்குள் வந்தான்.
“இத்தனை நாளா உன்ரகிட்ட அன்பை காட்டாம அதிகாரத்தையே காட்டிப்போட்டேன். ஆரும் என்ர புள்ளைய ஒரு கொறை சொல்லிறக் கூடாதுனுதேன் நீ பண்ணுற சின்ன விசயத்துக்கு கூட நானே உன்ரகிட்ட கடுமையா நடந்துகிட்டேன். ஆனா உனக்கொன்னுனா என்ரனால தாங்கிக்க முடியாது கண்ணு. அப்பாவ வெறுத்துப் போடாத” என்று பரிதவிப்பாய் முத்துச்சாமி அவள் கை பற்றிக் கொள்ள, விம்மலோடு அவர் தோளில் சாய்ந்திருந்தாள் அரும்பு.
“நீங்க என்ர கிட்ட சிரிச்சு பேச மாட்டிங்களான்னு எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் தெரியுங்கலாங் ப்பா” என்று சொல்லி அழுக, அவள் தலையை ஆதுரமாய் வருடிக் கொடுத்தார்.
‘சிரிச்சாலும் முள்ளக் கட்டி வெச்சதோட்டந்தேன் இருக்கும் உங்கப்பன் மூஞ்சி’ என்று நினைத்துக் கொண்டு நின்றிருந்தான் குலசேகரன்.
அவன் நின்றிருப்பது கண்டு மகளை தன்னிடம் இருந்து விலக்கியவர்,
“அப்பத்தாளுக்கு மேலுக்கு முடியல கண்ணு. நீ மாப்ளயோட ஒரெட்டு வந்து பாத்துப்போட்டு போனா நெம்ப சந்தோசப்படும்” என்று சொல்ல, அதுவரை இருந்த அரும்பின் முகம் மொத்தமாய் மாறியது.
“நீங்க இத்தனை நாள் என்னைய பாக்க வராம இன்னிக்கு வரும்போதே நெனச்சேனுங் ப்பா. இப்பவும் நீங்க எனக்காக வரலை அப்பத்தாளுக்காகத்தேன் வந்திருக்கீங்க” என,
“இல்ல கண்ணு” என்று அவர் பதில் சொல்ல வர குறுக்கிட்டவள்,
“நான் அங்க வரமாட்டனுங் ப்பா” என்று முடிவாய் கூறிவிட்டு வேகமாய் வெளியே சென்றுகொள்ள செய்வதறியாது குலசேகரனைப் பார்த்திருந்தார் முத்துச்சாமி.
அருந்தமிழ் கண்கள் சிவந்துபோய் அமர்ந்திருந்தாள்.
அவளருகில் வந்த அரசி,
“இந்த நேரத்துல என்னத்துக்கு இப்படி அழுதுட்டு இருக்குற” என்று கோபமாய் வினவ, அவளை நிமிர்ந்து பார்த்தவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு
“சாய்ங்காலம் அப்பாவை பாத்தேன்” என்றாள் மூக்கு விடைக்க.
பள்ளி முடிந்ததும் அருந்தமிழ் மாறனுக்காக சிறார்களோடு காத்திருந்த வேளையில் மணியனோடு காரில் அவ்வழி வந்தார் ஆறுச்சாமி. அவருக்குத் தெரிந்தவர் ஒருவர் எதிரில் வரவும் வண்டியில் இருந்து இறங்கி சாலையில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருக்க, தந்தையைக் கண்டதும் தன்னை கட்டுப் படுத்த முடியாது மெல்ல அவரருகே சென்றாள் தமிழ்.
தெரிந்தவரோடு பேசிவிட்டு மீண்டும் வண்டியில் ஏறச்சென்ற வேளையில் தமிழ் நிற்பதைக் கண்டவர், அவளை கண்டுகொள்ளது கார் கதவைத் திறக்க, உள்ளுக்குள் பெரிதாய் வலித்தது அவளுக்கு.
“ஐயா நம்ம பெரிய அம்மணி” என்று மணியன் சொல்ல,
“எனக்கு வேங்கை ஒரே மவதேன். நீ வண்டிய எடு” என்றுவிட்டு காரில் ஏறிக்கொள்ள, அப்போது ஆரம்பித்தது அவள் கண்களில் கண்ணீர் வரத்து.
மாறன் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்காது,
“அப்பா என்னைய அடியோட வெறுத்துட்டாருங் மாறன். இனி என்னைய மன்னிக்கவே மாட்டாருங். நான் ரொம்ப கஷ்டப்படுத்திப் போட்டேன் அவரை. இந்த ஜென்மத்துல அப்பா என்னைய ஏத்துக்க மாட்டாருங்” என்று சொல்லியே புலம்பிக் கொண்டிருக்க, மாறனுக்கே என்ன செய்வதென்று புரியவில்லை.
கந்தசாமி சொல்லிவிட்டுச் சென்றதில் இருந்து அவனும் ஆறுச்சாமியோடு பேச முயற்சிக்கிறான். அவர் அவனிடம் முகம் கொடுத்து பேசக் கூட தயாராய் இல்லை. அவமதிக்காத போதிலும் அவனை பேச அனுமதிப்பதில்லை. மாறன் வந்தாலே அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்று விடுகிறார் ஆறுச்சாமி. இதை தமிழிடம் தெரிவித்தால் அவள் மேலும் வருந்துவாள் என்றே மறைத்தும் விட்டான். இப்போது அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாது அவள் வருந்துவதை காணச் சகியாது அரசியை அழைத்து விட்டான்.
அரசி தன் அக்காவை மென்மையாய் கட்டிக்கொண்டு அவள் உச்சியில் இதழ் பதித்து,
“அழுது முடிச்சிட்டைனா உன்னைய பாக்கறதுக்காக யாரு வந்திருக்காங்கன்னு பாரு” என, அவளை புரியாது பார்த்த அருந்தமிழ் வாசலைப் பார்க்க, கதவோரம் கண்களை துடைத்துக் கொண்டு நின்றிருந்தார் ரங்கநாயகி.
“ஆத்தா” என்று வேகமாய் எழ,
“மொல்ல கண்ணு. இப்படி வெடுக்குன்னு எந்திரிக்காத சாமி எங்காச்சும் புடிச்சுக்க போகுது” என்று வேகமாய் அவளருகே வந்திருந்தார் நாயகி.
“இதெல்லாம் ஆரம்பத்துலையே கூட மாட இருந்து சொல்லி கொடுக்கோணும். அதைய விட்டுப்போட்டு இப்ப வந்துட்டு அப்படி எந்திரிக்காத இப்படி எந்திரிக்காதன்னு பாசமா இருக்குறதோட்டம் நடிக்குறது” என்றாள் அரசி.
அதில் நாயகி அவளைப் பார்க்க,
“என்ன பாக்குறீங்க? உங்க மகந்தேன் ஒட்டும் இல்ல ஒறவும் இல்லைன்னு சொல்லி தமிழக்காள அங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டாருன்னா நீங்க பக்குவமா எடுத்து சொல்லுறதுதானோ. நாங்க ரெண்டு பேரும் அந்தூட்டு வாசலை மிதிக்கவே கூடாதுன்னு நெனைக்குறீங்களாங் ஆத்தா?” என்று கேட்க,
“என்ன சாமி எல்லாந் தெரிஞ்சிருந்தும் நீயே இப்படி பேசுற. இராப்பகலா எனக்கு உங்க நெனப்பேதேன். உங்க கலியாணத்துக்கு அப்பறம் உங்கப்பன் நெம்பவே ஒடஞ்சு போய்ட்டான் கண்ணு. நாஞ்சொல்லியுமே எதையும் கேக்கல. அவன் மனசு ஆறட்டும்னுதேன் நானும் பொறுத்திருந்தேன்” என்று நாயகி வருந்த,
“எடுத்தங் கவுத்தேன்னு பேசுறத நிறுத்து வேங்கை” என்ற குரலில் அனைவரும் திரும்ப, அங்கு விக்ரமன் நின்றிருந்தான். சற்றுமுன் அரசி தான் அவனையும் அங்கு வரச்சொல்லி அழைத்திருந்தாள்.
“இப்படியே எத்தனை நாளுக்குத்தேன் விடுறதுங் மச்சா. அப்பா மனசு மாறுறதோட்டம் தெரியலைங்களே. இந்த நேரத்துல அக்கா இப்படி அழுதுட்டு இருந்தா அது குழந்தைய பாதிக்காதுங்களா? அவ மட்டுமா தப்பு பண்ணுனா நம்மளும் தானே” என்று சொல்ல, உடனே நாயகி அரசியைப் பார்த்தார்.
சில நிமிடங்கள் பொறுமையாய் சிந்தித்த விக்ரமன்,
“நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு தெரியும்” என்றான் உறுதியாய். அரசி அவனை புரியாது பார்க்க, கண்களை அழுந்த மூடித் திறந்தான்.
நாயகியின் மடியில் தலைவைத்து சிறிது நேரம் படுத்திருந்தாள் அருந்தமிழ். அவள் தலையை நீவிக் கொடுத்தவருக்கு கண்களில் நில்லாமல் வழிந்தது கண்ணீர். தூரமாய் இருக்கும் வரை பெரிதாய் தெரியவில்லை. அவளைப் பற்றிய கவலை மட்டுமே இருந்தது. அதுவும் அவள் ஆசைப்பட்ட வாழ்வு என்பதால் மகிழ்ச்சியாய் தான் இருப்பாள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வரவில்லை என்றாலும் இப்போது அவளை கண்ணாரப் பார்த்துவிட்டு பிரிந்து செல்ல மனமே இல்லை.
சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பச் செல்ல, நாயகி பார்த்த பார்வையிலேயே அவரை விவரமாய் விக்ரமனோடு அனுப்பிவிட்டு தன் வண்டியில் தனித்துச் சென்றாள் அரசி.
அனைவரும் சென்றபின் கதவை சாற்றி வந்த மாறன் அருந்தமிழை முறைத்துப் பார்த்திருக்க, அவளோ தலையை கவிழ்த்துக் கொண்டு நின்றிருந்தாள். எதுவும் பேசாது சமையலறைக்குள் சென்றவன் ஜூஸ் எடுத்துவந்து கொடுக்க,
“வேண்டாங்க” என,
“ஒழுங்கா குடிச்சிடுங்க” என்ற கடினமான குரலில் வேகமாய் வங்கிப் பருகினாள். காலி டம்ளரை வாங்கிகொண்டு அவன் பாட்டிற்கு செல்ல,
“என்னங்க” என மெதுவாய் அழைத்தாள். அவள் புறம் திரும்பிய மாறன் ‘என்ன’ என்பதாய் பார்க்க,
“என்ரமேல கோவமா இருக்கீங்களா?” என்று கேட்க, அவன் ‘ஆமாம்’ என்று தலையசைத்தான்.
“அது ஒன்னும் இல்லங்க, உள்ளார குழந்தை அசையுது அதைய உங்களுக்கு காட்டலாம்னு நெனச்சேன். நீங்கதான் கோபமா இருக்கீங்களே” என, வேகமாய் அவளருகே வந்தவன்
“எங்கைங்க தமிழ்” என கண்கள் மின்ன பார்த்திருக்க, அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள் சிறிது நேரம் காத்திருக்க மீண்டும் குழந்தை அசையத் துவங்கியது.
மாறனின் அதரங்களில் அப்படி ஒரு புன்னகை. பூரித்துப் போய் நின்றிருந்தான்.
“இப்போவும் என்ரமேல கோபமா இருக்கீங்களா?” என்று தமிழ் கேட்கவும்
“குழந்தையால தப்பிச்சீங்க” என்றான்.
“இல்லைனா மட்டும் உங்களுக்கு என்ரமேல கோபம் வந்திருமாக்கும்” என்று புன்னகைதவள் அவள் தோளில் தஞ்சம் புக, அவளை அணைத்துக் கொண்டவன்
“எமோசனல் பேலன்ஸ் பத்த மாட்டீங்குதுங்க உங்களுக்கு. எது வந்தாலும் நான் உங்க கூடத்தானே இருக்குறேன். அப்பறம் எதுக்கு அழுகை வருது? இனி இப்படி அழுகாதீங்க தமிழ். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று வருத்தமாய் சொல்ல, நிமிர்ந்து அவன் முகம் கண்டவள் ‘இனி அழுக மாட்டேன்’ என்பதாய் தலையசைத்துவிட்டு அவனை அணைத்துக் கொள்ள, அவள் முன்நெற்றியில் இதழ் பதித்தான்.
வாசலில் வெள்ளச்சி வந்து நின்று குரல் கொடுக்க பாவமாய் சத்தமிட்டான் குலசேகரனின் பிடியில் இருந்த வெள்ளையன்.
“உன்னைய காவல் காக்க சொன்னா நீ காதல் பண்ணிக்கிட்டு இருக்குற. நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு கருப்பாத்தா ஊட்டு வெள்ளச்சி கேக்குதா” என்று திட்டியபடி கயிற்றில் கட்டிவைத்துவிட்டு திரும்ப, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அரும்பு.
அரும்பை கண்டதும் வெள்ளையன் தன் முன்னங்காலை தூக்கிக்கொண்டு சன்னமாய் கத்திக்கொண்டு வாலை ஆட்ட,
“நான் இருக்குற வரைக்கும் உன்ர காதலை தோத்துப் போக விடமாட்டேன். கெளம்பு டா வெள்ளையா” என்று கயிற்றை கழற்றி விட, நன்றியோடு வாலாட்டிக்கொண்டு ஓட்ட மேடுத்தான் வெள்ளையன்.
சில நொடிகள் நின்று பார்த்துவிட்டு அரும்பும் உள்ளே சென்றுகொள்ள,
‘உலகத்துலையே ஒரு நாய் காதல சேர்த்து வெச்சவ எங்கக்கா மகளாத்தான் இருப்பா’ என நினைத்தவாறு உள்ளே வந்தான் குலசேகரன்.
நேரம் நகர்ந்ததே தவிர, உறங்காது பெரிதாய் சிந்தனை வயப்பட்டிருந்தாள் அரும்பு. அவள் சிந்தனை எதைப் பற்றி என்று அறிந்தவன்,
“எலிக்குட்டி” என்று அவளிடை மேல் கை போட,
“ப்ச்.. போ மாமா” என்று கையை தட்டிவிட்டாள்.
“ஆனா அப்பனும் மகளும் நல்லா அலையவிடுறீங்க என்னையும் எங்கக்காளையும். உங்களுக்கு வாக்கப்பட்டு எங்க வாழ்க்கை இப்படியா வீணாப் போகணும்?” என்று புலம்ப,
“ஏன் உனக்கும் உங்கொக்காளுக்கும் என்ன கொறையாம இப்போ? அதெல்லாம் எங்கப்பா கோபக்காரரா இருந்தாலும் எங்கம்மாவ நல்லா பாத்துப்பாரு. அம்மா என்னிக்காவது கோவிச்சுக்கிட்டு அம்மத்தா வீட்டுக்கு வந்து பாத்திருக்கியா? அம்மா ஒருநாள் வீட்டுல இல்லைனாலும் அப்பாவால அங்க இருக்க முடியாது” என,
“ஆமாம்மா உங்கப்பன் ரொம்ப நல்லவரு வல்லவரு நாளுந் தெரிஞ்சவருதேன் போதுமா” என்றான்.
“ஏன் மாமா! இந்நேரம் எங்கப்பா என்ன பண்ணிட்டு இருப்பாரு?” என்று கேட்க,
“என்ன பண்ணுவாரு கம்பீரமா காஷ்மீர் பாடர்லையா நிப்பாரு? இந்நேரம் மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்தை பாத்துட்டு இருப்பாரு இல்லைனா அவரு முறுக்கு மீசையை முறுக்கி விட்டுட்டு இருப்பாரு” என,
“விளையாடாத மாமா. சின்ன வயசுல நான் அவரு மீசையை பிடிச்சி இழுத்து சிரிப்பனாம். நான் சிரிச்சு விளையாடனும்னே பெருசா மீசை வளத்தாராம். அவ்வளவு பாசம் என்ர மேல” என்றாள்.
“அர்த்தராத்திரில இப்போ உங்கப்பனை பத்தின ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா எலி” என, முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“உங்கப்பன் மேல இவ்வளவு பாசம் இருக்குறவ ஏன்டி அவரு அவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் உங்கப்பத்தாளை பாக்க போமாட்டேனுட்டு வந்த” என்று கேட்டான்.
“உன்னைய மதிக்காதவங்கள நான் என்னத்துக்கு போய் பாக்கோணும்? எப்படி எல்லாம் உன்னைய அவமானப்படுத்தி இருப்பாங்க. இந்நேரம் நம்ம நல்ல நெலமைல மட்டும் இல்லாம இருந்திருந்தா இன்னும் அவமானப்படுத்தி பாக்கத்தேன் நெனச்சிருப்பாங்க. நான் பழசை எல்லாம் மறக்க மாட்டேன் மாமா” என்றாள்.
அவள் அரசாங்கப் பணியில் அமர்ந்ததைக் காட்டிலும் குலசேகரனிற்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவி கிடைத்ததில் தான் அரும்பிற்கு அத்தனை ஆனந்தம். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாய் குலசேகரனை அடுத்த தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்திருந்தனர். தங்களை தூற்றிய சுற்றத்தார் முன்பு போற்றுதலுக்கு உரிய வாழ்வைத் தான் அவர்கள் இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்.
அரும்பின் பிடிவாதம் கண்டு,
“அப்படி இல்ல எலிக்குட்டி. ஒருத்தங்க ஒடம்புக்கு முடியாம கெடக்குறப்போ இதெல்லாம் வெச்சு பாத்துட்டு இருக்கக் கூடாது. நம்ம விட்டு கொடுத்து போறதால கெட்டுப் போயிட மாட்டோம். ஆயிரம் இருந்தாலும் அது உன்ர அப்பத்தா. உங்கூட்டு பெரியமனுசி. நாளைக்கு நம்ம போய் ஒரெட்டு பாத்துப்போட்டு வந்துறலாம்” என குலசேகரன் சொல்ல, அரும்புக்கு யோசனையாய் இருந்தது.
இன்று மாலை, அரும்பு அவள் அறையில் இருந்து சென்றதும் செய்வதறியாது நின்றிருந்த முத்துச்சாமியிடம் அவளை நாளை வேலாத்தாளைப் பார்க்க அழைத்து வருவதாய் சொல்லிவிட்டுத் தான் கிளம்பி இருந்தான் குலசேகரன்.
“சரின்னு சொல்லு” என அவள் நெற்றியில் படர்ந்திருந்த முடிகளை மெல்ல ஒதுக்கிவிட, சரியென மெல்ல தலையசைத்தாள் அரும்பு.
“என்ர கன்னுக்குட்டி டி நீ” என அவள் முன்நெற்றியில் செல்லமாய் முட்ட,
“என்ரனாலையே எங்கப்பத்தாள மன்னிக்க முடியல ஆனா நீ மட்டும் எப்படித்தான் இப்படி இருக்குறையோ” என்று புன்னகைத்தவள் அவன் கன்னத்தை பிடித்து செல்லமாய் கிள்ளிவிட்டு அவனை இறுக கட்டிக்கொண்டாள்.