அரசியின் வீட்டில்!
அவள் உள்ளே நுழைந்ததுமே சாட்டை வாரால் அரசியை வெளுக்க ஆரம்பித்திருந்தார் ஆறுச்சாமி. நாயகி ஆளாய் பறந்து கொண்டு வந்து தடுக்க,
“ஆம்பள பசங்களோட இவளுக்கு என்ன பஞ்சாயத்து வேண்டி கெடக்கு. அதுவும் இவள விட வயசுல பெரியவனுகள போய் கைநீட்டி இருக்கா. நம்ம தேவியுந்தானே அன்னாடும் வெளிய போய்ட்டு வாரா, என்னிக்காச்சும் அவ மேல ஒரு குத்தங்கொற வந்திருக்கா? அவ எனக்கு பெருமையா தேடித்தந்தா, இவ என்ர பெருமையத் தொலைக்குறதுக்குனே வந்து பொறந்திருக்கா” என்று சொல்லி ஒரு அடியை வைக்க,
அடிக்கு எல்லாம் அசராது, கண்கள் இரண்டும் கோவப்பழமாய் சிவந்திருக்க, விழிநீர் சிந்திவிடுவேனா நான் என்பதுபோல் நின்றிருந்தாள் அரசி.
“எவனோ எடுபட்டவன் சொன்னதக் கேட்டு புள்ளையை ஏன்டா போட்டு மாட்டடிக்குற மாறி அடிக்குற” என நாயகி குறுக்கே வர,
“அம்மா நீங் பேசமா அக்கட்டால போயிருங். வீணா குறுக்க வராதீங்” என்று தடுத்தார் ஆறுச்சாமி.
“குறுக்க வந்தா என்னையும் போட்டு அடிப்பியா? என்ர ஊட்டுக்காரரோடவே நானும் மேல போயிருக்க கூடாதா? இதெல்லாம் பாக்கோணும்னு எனக்கு விதி இருந்தா உடவா போகுது. எம்பேத்தியப் போட்டு இப்படி அடிக்குறானே” என்று புலம்ப,
[the_ad id=”6605″]
“நீங்க சும்மா இருங் ஆத்தா. அடிக்குற வரைக்கும் அடிக்கட்டும். அவருக்கு எதாவது காரணம் காட்டி என்னைய அடிக்கணும். என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு எல்லாம் விசாரிக்க மாட்டாரு” என்றாள் அரசி மூக்கு விடைக்க.
“என்ன விசாரிக்கணும். இல்ல என்ன விசாரிக்கணும் உன்ர கிட்ட? அந்த பையன கை நீட்டி அடிச்சிருக்க அது ஒன்னு போதாதா”
“அவன் கையோங்குனது மட்டும் ஒழுக்கமாங் ப்பா? நான் அடிவாங்கிட்டு வந்திருந்தா உங்களுக்கு பெருமையா இருந்திருக்கும் பாருங். நான் திருப்பி அடிச்சதுல தான் உங்களுக்கு அவமானம் வந்திருச்சு” என்று அவளும் பேச,
“சொன்னா சரிங்ன்னு கேட்டுட்டு போகாம பதிலுக்கு பதில் பேசுவியா” என இன்னும் இரண்டு வைக்க,
“ப்பா அரசிய அடிக்காதீங்” என்று தமிழின் குரல் அங்கு சன்னமாய் ஒலித்தது. அடிவாங்குபவள் அழவில்லை மாறாக இவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.
“அவன் என்ர ப்ரெண்ட அடிக்க வந்தா பார்த்துட்டு சும்மா இருக்கோணுமா. ஆராவது வேலுச்சாமி மாமானை இப்படி அடிக்க வந்தா நீங்க பாத்துட்டு சும்மா தான் இருப்பீங்களா?” என்று அரசி கேள்வி கேட்க, ஆறுச்சாமி வேறு புறம் திரும்பினார்.
வாலிபவயதில் தங்களது ரேக்ளாவின் போது, தன் நண்பன் வேலுச்சாமியிடம் ஒருவன் வம்படியாய் பேசியதற்கே அவனை அடித்து துவைத்து தொங்கவிட்டு அதற்காக பஞ்சாயத்தில் நின்று அபராதம் செலுத்தியவர் ஆறுச்சாமி.
“ஏன்டா! புள்ள சரியாத்தானே கேக்குது? பதில் சொல்லு” என்ற குரலில் திரும்பிப் பார்க்க, வேலுச்சாமி தான் நின்றிருந்தார். அவரோடு விக்ரமனும் இருக்க, ஆறுச்சாமி பதில் சொல்லாது தன் கையிலிருந்த சாட்டை வாரைத் தூக்கி எறிந்தார்.
“அரசி! நீ உள்ளார போ கண்ணு” என்று வேலுச்சாமி சொல்லவும், அரசி தன் தந்தையை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
“அவளை ஏன் அடிக்குறீங் மாமா? நல்லா படிக்குற பொண்ணு, அவ பொறுமையா சொன்னாலே கேட்டுக்குற விதம் தான். இப்படி அடிச்சா நீங்க சொல்லுறதுக்கு நேர்மாறா தான் நடந்துப்பா. உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலைங் மாமா” என்றான் விக்ரமன்.
“டேய்! இனி புள்ள மேல கைய வெச்சா நான் என்ர வூட்டுக்கே கூட்டிட்டு போயிருவேன் பாத்துக்கோ” என வேலுச்சாமியும் கூற, அப்போதும் ஆறுச்சாமி விரைப்பாய் நின்றிருந்தார்.
“இனி வேங்கையை கைநீட்ட மாட்டேன்னு வாக்கு கொடுங் மாமா” என்றான் விக்ரமன். அதில் ஆறுச்சாமி உடனே வேலுச்சாமியை முறைக்க,
“என்னை ஏனப்பா முறைக்குற? கேக்குறது உன்ர மருமகன். இனி நீயாச்சு அவனாச்சு” என்றுவிட்டு வந்து நாயகியின் அருகில் நின்றுகொண்டார்.
“இந்தப் பய அப்படியே அவன் அய்யன் மாதிரி. வாக்கு கொடுத்துட்டா அதைய காப்பாத்த உசுரக் கொடுக்குற ரகம். ஆனா லேசுல வாக்கு கொடுக்க மாட்டானப்பா. எப்படியோ உன்ர மவனால என்ர பேத்தி இனி அடி வாங்குறதுல இருந்து தப்பிச்சுக்குவா” என்று வேலுச்சாமியிடம் சொல்லிப் புன்னகைத்தார் நாயகி.
அடுத்து அரசியைப் பார்க்க பால்கனிக்குச் சென்றான் விக்ரமன். சுவரைப் பிடித்துக் கொண்டு வெளியே ரோட்டை வெறித்துப் பார்த்திருந்தாள்.
“அவனை ஏன் அடிச்ச?” என்று கேட்க,
“அப்படி நடந்துகிட்டா உங்களையும் தான் அடிப்பேன்” என்றாள் திரும்பாமலே.
[the_ad id=”6605″]
அவளது பதிலில் லேசாய் புன்னகை அரும்பியது அவனுக்கு.
“எங்ககிட்ட வந்து சொல்ல வேண்டியது தானே, நாங்க பாத்திருப்போம். எதையும் பொறுமையா தான் கையாளோனும் வேங்கை, அதைய விட்டுப்போட்டு பெருசு பண்ணக்கூடாது. நாளைக்கும் நீ அதே வழியில தானே ஸ்கூல்க்கு போகோணும், அவன் வந்து பிரச்சனை பண்ணுனா என்ன பண்ணுறது?” என பொறுமையாய் வினவ,
“அதுக்காக அவன் அடிக்க வந்தா பேசாம வாங்கிட்டு போக சொல்லுறீங்களா? என்ன மச்சா நீங்களும் அப்பாவோட்டமே பேசுறீங்க? அவனை ஏன் அப்படி வம்பு பண்ணுறான்னு விசாரிக்காம ஆளாளுக்கு என்ர கிட்ட வந்து நீ ஏன் அப்படி பண்ணுனைனு கேட்டுட்டு இருக்கீங்க. பசங்களுக்கு ஒரு நியாயம் பொண்ணுகளுக்கு ஒரு நியாயமா? ஆரு மேல தப்புன்னு எல்லாம் பாக்க மாட்டீங்களா?” எனப் பொங்கியவாறு திரும்ப, அவளையே தான் பார்த்திருந்தான்.
“அப்பா ஆருன்னு தெரிஞ்சும் அவன் என்ர கிட்டயே இப்படி நடந்துக்குறான்னா மத்த வீட்டு பொண்ணுக கிட்ட எல்லாம் எப்படி நடந்துப்பான்னு யோசிச்சீங்களா? அவங்க எல்லாம் இவனுக்கு பயந்துட்டு படிப்ப பாதிலயே விட்டுப் போடோணும். ஒரு விவரமும் புரியாம உங்க மாமன் என்னடானா சும்மா என்னையவே அடிக்குறாரு. இவரை ஆரு ஊர்த் தலைவரா தேர்ந்தெடுத்தது?” என கடுகாய் பொரிந்தாள்.
“சரி விடு வேங்கை. லோகநாதன் இதோட போக மாட்டான் நாளைக்கும் எதாவது பிரச்சனை பண்ணுனா என்ர கிட்ட வந்து சொல்லு. நான் பாத்துக்குறேன். நீ படிக்கற விசயத்தை மட்டும் பாரு. அப்பா எதோ கோபத்துல அப்படி நடந்துகிட்டாரு, அவரு அடிச்சதெல்லாம் மனசுல வெச்சுக்காத” என பொறுமையாய் சொல்ல, அவனுக்கு சரியென தலையசைத்தாள்.
இரண்டு நாட்கள் சென்றிருக்க, மீண்டும் லோகநாதனும் சேதுராமனும் அவர்களின் வழியில் குறுக்கிட்டனர். என்ன செய்வதென்று புரியாது அரும்பு பார்த்திருக்க, வீட்டில் வாங்கிய அடிகள் எல்லாம் இருவரின் கண்முன்னே வந்து போனது.
“வண்டியை வாய்க்கா மேட்டு வாக்குல விடு” என்றுவிட்டு பாதையை மாற்றிக்கொண்டாள் அரசி. நிறுத்தாமல் சைக்கிளில் பெல் அடித்தபடியே இருவரும் செல்ல,
“என்ன எலியும் புலியும் இந்த வேகத்துல போகுதுக” என குலசேகரன் சொல்ல, செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு விக்ரமனும் நிமிர்ந்து பார்த்தான்.
அதற்குள் அவர்களை முந்திக்கொண்டு வந்து வழிமறித்த லோகநாதன்,
“மாட்டுனீங்களாடி” என வண்டியை நிறுத்திவிட்டு சேதுராமனோடு கீழே இறங்கினான்.
அவர்களுக்கும் பின்னால் கேட்ட புல்லெட் சத்தத்தில் தோழிகள் இருவரும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டே,
“மாட்டுனது நாங்க இல்லடா. கொஞ்சம் திரும்பிப் பாருங்க” என, அவர்கள் திரும்ப, அங்கு விக்ரமனும் குலசேகரனும் நின்றிருந்தனர். பாண்டியர்கள் இந்நேரத்திற்கு இங்குதான் இருப்பார்கள் என்று தெரிந்ததால் தான் அரசி இவ்வழியில் வந்ததே.
“என்ன லோகநாதா பிரச்சனையை வளர்த்துட்டே போனா என்ன அர்த்தம்? ஆரு கிட்ட வம்பு பண்ணுறம்னு தெரிஞ்சு தான் பண்ணுறியா? இல்ல கேக்க ஆளில்லைன்னு நெனைப்பா” என்றான் விக்ரமன், வார்த்தைகளில் அனல் அடிக்க.
“மாமா இந்த கிளிமூக்கன் என்ர பின்னாடியே தொரத்திட்டு வாறான்” என குலசேகரனை பார்த்த அரும்பு பொங்கிக்கொண்டு சொல்ல, அவள் தன்னைக் கூறிய விதத்தில் மூக்குக்கு மூன்று பிளாஸ்டர் போட்டிருந்த சேதுராமன் அரும்பை முறையோ முறையென முறைத்தான்.
“எலி நீ கொஞ்சம் சும்மா இரு” என்று அரும்பை அடக்கிய குலசேகரன் சேதுராமனிடம் திரும்பி,
“அங்க என்ன மொறப்பு? இதுவே கடைசியா இருக்கோணும். இனி எங்கவீட்டு புள்ளைக மட்டும் இல்ல, ஊருல படிக்கப் போற எந்த புள்ளைக கிட்ட வம்பு வளத்தாலும் உன்ர தோல உரிச்சு தொங்கவிட்ருவேன் ஜாக்கிரத” என்று எச்சரித்தான்.
“ஆறுச்சாமி மாமாவுக்கு விஷயம் தெரிஞ்சும் அமைதியா இருக்காருனா அது உன்ர அப்பாவுக்காக மட்டும் தான். இதோட விட்டுட்டு உன்ர வேலைய பாத்துட்டு போனா உனக்கு நல்லது லோகநாதா” என்றான் விக்ரமன். இல்லை என்றால் நடப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றது அவன் உடல்மொழி.
“அதெல்லாம் லேசுல விட முடியாது விக்ரமா. நீ இதுல தலையிடாம ஒதுங்கிக்கோ. என்ன பிரச்சனை வந்தாலும் அதை நாங்க பார்த்துக்குறோம்” என்றான் லோகநாதன்.
“உனக்கு அப்படியே மோதனும்னா எங்ககிட்ட மோது. அதைய விட்டுப்புட்டு படிக்கப் போற வர்ற புள்ளைகளை வழிமறிச்சு கிண்டல் கேலி பண்ணுறதெல்லாம் வெச்சுகிட்டா பஞ்சாயத்துக்கு பதில் சொல்லவேண்டி வரும் பார்த்துக்கோ. இந்த ஊருல இருக்கோணுமா வேண்டாமானு நீயே முடிவு பண்ணிக்கோ” என்று மிரட்டினான் குலசேகரன்.
“ஆறுச்சாமி மாமா நெனைச்சா நீ இந்த ஊருக்குள்ளையே கால் வெய்க்க முடியாத மாதிரி பண்ணிடுவாரு லோகநாதா. நீ பண்ணுன காரியத்துக்கு உன்ரகிட்ட அமைதியா பேசுறதே பெருசு. என்ர பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு” என விக்ரமன் முடிந்த மட்டில் பொறுமையை கையாண்டான்.
தான் எதிர்க்கும் இடம் எப்படியானது என்று தெரிந்தும் ஒரு வேகத்தில் பேசிகொண்டிருந்த லோகநாதன் அப்போது தான் சிந்தித்தான். எது வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்று நின்றிருந்தவன் ஊரை விட்டு ஒதுக்கிவைத்தால் பெற்றோரோடு எங்கு செல்வதென்று யோசிக்க, அவன் புத்திக்கு வேறு வழி தென்பட்டது.
“பாத்தறலாம். இந்த தடவ ரேக்ளாவுல பாத்தறலாம். அங்க வெச்சு எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்” என ரேக்ளா போட்டியை அனைத்துக்குமாய் கையில் எடுத்துக் கொண்டான்.
“அப்படி சொல்லு மாப்ள” என சேதுராமனும் அவனுக்கு துணை நிற்க,
“ஒருவேள நீங்க தோத்துட்டா?” என்று குலசேகரன் புருவத்தை உயர்த்த,
“ஒருவேள நாங்க ஜெயிச்சிட்டா?” என்று பதிலுக்கு லோகநாதனும் புருவத்தை உயர்த்தினான்.
“ஓஹோ! அப்படி நீ ஜெயிச்சிட்டா என்னைய நீ கட்டிக்க. இந்தா நிக்குறாளே அரும்பு, இவள இந்த கிளிமூக்கன் கட்டிக்கட்டும். அப்படி இல்லையா நீங்க என்ன சொன்னாலும் அதை நாங்க நாலு பேரும் தட்டாம கேக்குறோம்” என்றாள் அரசி.
ஆண்கள் நால்வரும் அவளை அதிர்ச்சியாய் பார்த்திருக்க, அரும்போ ‘அடிப்பாவி’ என வாயைத் திறந்துகொண்டு பார்த்திருந்தாள்.
‘இந்த புலி அது போய் சிக்குறதும் இல்லாம எங்கக்கா மகா எலி வாழ்க்கையையும் கொண்டுபோய் சிக்கவைக்குது’ என்று எண்ணிய குலசேகரன் அருகிலிருந்த தன் நண்பனைப் பார்க்க,
“என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசோணும் இல்லைனா பொட்டோட்ட நிக்கோணும்” என அரசியை அடக்கினான் விக்ரமன்.
“ஏன்! நீங்க ஜெயிக்க மாட்டீங்களா? நான் எவ்வளவு நம்பிக்கையோட சொல்லுறேன். அந்த நம்பிக்கை கொஞ்சமும் உங்களுக்கு இல்லையா? எங்கமேல உங்களுக்கு நெஜமாவே அக்கறை இருந்தா ஜெயிச்சுட்டு வந்து பேசுங்க” என்று பாண்டியர்கள் இருவரையும் பார்த்து சொல்லிவிட்டு அரும்பை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
அதன்பின் சேதுராமனும், லோகநாதனும் இன்று வரையில் ரேக்ளாவில் வெற்றி கண்டதில்லை. ஒரு போட்டிக்கு தான் பந்தயம் கட்டினார்கள், ஆனால் ஐந்து ஆண்டுகளாய் பாண்டியரின் வெற்றியே தொடர்கிறது.
அதை எல்லாம் இன்றைய நாளில் நால்வரும் நினைத்துப் பார்த்திருக்க,
[the_ad id=”6605″]
“நேரம் ஆச்சு அரும்பு. அப்பத்தா காத்துகிட்டு இருப்பாங்க. வாய்க்கா மேட்டுக்கு வேற போய்ட்டு போகணும். இங்க நின்னு இவங்களோட என்ன வெட்டி நாயம் வேண்டி கெடக்கு” என்று விக்ரமனை பார்த்தபடி கூறிவிட்டு நகர,
“வர்றேன் மாமா” என அரும்பு இருவரிடமும் விடைபெற,
“வராத போ” என்றான் குலசேகரன்.
அவனை முறைத்தபடி அரசியின் பின்னால் வாய்க்கால் மேடு நோக்கி நடையைக் கட்டினாள் அரும்பு. செல்லும் அவர்களைப் பார்த்திருந்த குலசேகர பாண்டியன்,
“புலி போற வேகத்தை பாத்தயா மாப்ள? புல்ல தின்னாலும் புத்தி வராது போல. எங்கக்கா மகளும் கூடப் போறா, இன்னும் என்னென்ன செய்யக் காத்திருக்காளுகளோ! நம்ம இனி எத்தன ரேக்ளாவை பாக்கவேண்டி இருக்குமோ” எனப் புலம்ப,
“வா மச்சா அதையும் பாத்துடலாம்” என அவனை இழுத்துக் கொண்டு தன் வயலுக்குத் திரும்பினான் விக்ரம பாண்டியன்.
வாசம் வீசும்…!