மண்வாசம் 3 :
அந்த வீடு அரண்மனை தான், அதை ஆளும் அரசியினால் மட்டும் அல்ல. அதில் அதிகாரம் செலுத்தும் பிரம்மாண்டமும் பழைமையும் கூட அதற்குக் காரணம்.
இரண்டு மாடங்களைத் தன் மேல் தூக்கி நிற்கும் அலுக்காத ஒற்றைத் தூண்கள், மேல் கூரையைப் போர்த்தி நிற்கும் ஓடுகள், அணிலாடும் முன்றில்கள் என மனம் அள்ளும் அழகுடன் அமைந்திருக்கும்.
மேல் மாடத்தின் பலகணிகள் வழியே உள்ளே வரும் தென்றல் ஒவ்வொரு அறைகளிலும் சுதந்திரமாக உலா வந்து போகும். காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் அந்த வீட்டின் கடைக்குட்டிக்குத் தான் இல்லை!
வரவேற்பறையில் போடப்பட்டிருந்த நெடிய பிரம்பு நாற்காலியில் வெண்ணிற வேட்டி சட்டையில் கம்பீரமாய் வீற்றிருந்தார் ஆறுச்சாமி. அவர் முன் மிகவும் பவ்யமாய் நின்றிருந்தாள் அரசி.
“வந்தாச்சா?”
“ஆமாங் ப்பா” என்றாள் உடல்மொழியில் மட்டுமின்றி குரலிலும் பவ்யத்தைக் கூட்டி.
தந்தை முன் என்னதான் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாலும் அவள் கண்கள் என்னவோ வீட்டினுள் தான் மும்மரமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
உள்ளே என்னென்னவெல்லாம் மாற்றம் கண்டிருக்கிறதோ என்றொரு எண்ணத்தில் எட்டிப் பார்த்தாலும், தன் குரல் கேட்டும் இன்னும் வெளியே வராது என்ன செய்து கொண்டிருகிறாள் இந்த அக்கா என மறுபுறம் தன் சகோதரியையும் தேடினாள்.
அரசியையே தான் உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஆறுச்சாமி. போட்டி நடைபெறும் இடத்தில், அலைகடலென இருந்த கூட்டத்தின் மத்தியிலும் தன் மகளைக் கண்டுகொண்டவர், மேடையில் இருந்தபடி நொடிக்கொருமுறை அவளையே தான் பார்த்திருந்தார்.
‘எப்படி இருக்கிறாள்? மெலிந்துபோல் இருக்கிறாளா இல்லை கொஞ்சம் பூசி வந்திருக்கிறாளா? மீண்டும் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று சொல்லி விடுவாளோ’ என அப்போதிலிருந்து அவர் மனம் கிடந்து அடித்துக் கொண்டே இருந்தது.
ஒருபுறம் தன் அகத்தில் அவள் மீது அதீத பாசம் இருந்தும் மறுபுறம் அவளது பிடிவாத குணத்தினால் உண்டான கோபம் என்னவோ அப்படியே இருக்க, எப்போதும் போல் வெளியில் வீராப்புடன் தான் வீற்றிருந்தார்.
“சாக்கு படுதா மாதிரி இது என்ன துணி?” என முறைப்போடு அவர் கேட்க,
‘சாக்குப்படுதாவா?’ என நினைத்தவள் தன் உடையை ஒருமுறை பார்த்துவிட்டு,
“இது ஜீன்சுங் ப்பா” என்றாள்.
‘என்னக் கெரகமோ’ என்பதாய் தான் அரசிக்குப் பட்டது அவர் பார்த்து வைத்த அந்தப் பார்வை.
“என்ன தலை முடிய எதுவோ கொதறுனமாறி வெச்சிருக்க?”
‘அப்படியா இருக்கு?’ என உடனே தன் அப்பத்தா நாயகியைத் திரும்பிப் பார்த்தாள் அரசி.
தன் மகன் கூறியது புரியாமல் தான் பேத்தி தன்னைப் பார்க்கிறாள் என்று நினைத்த நாயகியோ,
“நாய் கொதறுனமாறி இருக்காமா கண்ணு” என்று அந்த எதுவோவிற்கான பொருளை விளக்க, தவறான நேரத்தில் சரியாகத் தன் அப்பத்தாவைப் பார்த்ததற்கு மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டாள் அரசி.
“இதெல்லாம் அந்த ஊரோட நிறுத்திக்கோணும். இங்க இப்படி எல்லாம் சுத்தக் கூடாது. ஊருக்குள்ள நம்மட குடும்பத்துக்குன்னு ஒரு மதிப்பு மரியாதை இருக்குது, எல்லாம் உன்ர அக்காளப் பார்த்து தெரிஞ்சு நடந்துக்கோ” என அரசிக்கும் பின்னால் வாசலைப் பார்த்தபடி கூற, தலையை பெரிதாய் ஆட்டிவைத்தவள் அவர் பார்வை அறிந்து பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
அரசியைக் கண்ட மாத்திரம் கண்களில் ஆனந்த மழை பொழிந்தபடி நின்றிருந்தாள் அருந்தமிழ் தேவி.
“அக்கா…!”
அகத்தின் அடியாழத்தில் இருந்து அழைத்த அரசிக்கோ உடனே ஓடிச்சென்று தன் உடன்பிறந்தவளைக் கட்டிக்கொள்ளும் வேகம். தந்தை தன் விசாரணையை முடித்தால் மட்டுமே அது சாத்தியம்.
“அப்பத்தாளுக்கும் பேத்திக்கும் ரேக்ளா போட்டி நடக்குற எடத்துல என்ன சோலி?” என்றார் இப்போது இருவரையும் பார்த்தபடி.
அவரது கேள்வியில் அரசி உடனே தன் அப்பத்தாவைப் பார்க்க, அப்பத்தா அரசியைப் பார்க்க, ஆறுச்சாமியோ அவ்விருவரையும் பார்க்க, என்னவென்று புரியாது அனைவரையும் மாற்றி மாற்றிப் பார்த்திருந்தாள் அருந்தமிழ்.
‘மனுஷன் வந்ததும் வராததுமா இப்படி நிக்கவெச்சு எத்தனை கேள்வி கேக்குறாரு’ என நினைத்து, நாயகியையே அவருக்கு பதில் சொல்லுமாறு கண்காண்பித்தாள் அரசி.
“அட ஆறுச்சாமி! புள்ள இப்பத்தானே ஊட்டுக்குள்ளையே வந்திருக்கு. வந்ததும் வராததுமா இங்கயே நிக்க வெச்சு எத்தன கேள்வி தான் கேப்ப? எல்லாம் பொறவு பேசிக்குவோம் கண்ணு. மொதல்ல அவ வயித்துக்கு எதாவது சாப்பிடட்டும்” என்று தன் மகனை பேசவிடாது செய்தார். பின்னே, அரசியை ரேக்ளா பார்க்க அழைத்துச் சென்றதற்கு அவருக்கும் அல்லவா பேச்சு விழும்.
“நீ உள்ளார போ சாமி” என்று அப்பத்தா சொல்ல அரசியோ அசையாது தன் அக்காவையே பார்த்திருக்க,
“அட மடாருனு போ கண்ணு” என அவள் கையை ஒரு இடி இடிக்கவும், அருந்தமிழை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அரசி.
கடந்து சென்ற ஐந்து ஆண்டுகளில் அக்கா தங்கை இருவருமே நல்ல வளர்ச்சி கண்டிருந்தனர். இருவரும் பெதும்பை நிலையில் இருந்து மங்கை பருவத்திற்குச் சென்றிருந்தனர். ஒருவரை ஒருவர் தலை முதல் கால் வரை பார்த்தபடி இருக்க, சில நொடிகள் இருவருக்குமே வார்த்தைகள் வெளியே வரத் தடைபட்டது.
“எப்படி இருக்க தமிழ்?” என்று அரசி கேட்க, பதிலுக்கு அவளை முறையோ முறையென முறைத்தபடி நின்றிருந்தாள் அருந்தமிழ். (Xanax)
தங்கை வந்துவிட்ட மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தாலும், உயிருக்கு உயிராக இருந்த தங்களுக்குள் கண் பட்டது போல் இடையில் விழுந்த ஐந்தாண்டு பிரிவானது பெரிய பாதிப்பைக் கொடுத்திருந்தது அருந்தமிழுக்கு. அந்த அழுத்தத்தில் பேச்சற்று இருந்தாள்.
“தமிழ்! நானே கஞ்சிக்கு செத்துப் போய் வந்திருக்கேன். படிக்கப் போனேன் அது முடிஞ்சதும் மொத்தமா மூட்டையைக் கட்டிக்கிட்டு வந்தாச்சு. அவ்வளவு தான். அதுக்காக நீ என்ர கூட பேசாம இருந்தா எனக்கு கெட்ட கோவம் வந்திரும் பார்த்துக்கோ. வேணும்னா ரெண்டு அடி கூடப் போடு. வாங்கிக்குறேன். இனி உன்னைய விட்டு எங்கயும் போற ஐடியா இல்லை” என்ற அரசியின் காதைப் பிடித்துத் திருகினாள் தமிழ்.
கண் முன் பார்க்கும் வரையில் தான் கோபத்திற்கு ஆயுள். அரசியிடம் குறைந்தது ஒரு மாதத்திற்காவது பேசக் கூடாது என்று தமிழ் நினைத்திருக்க, ஒரு நிமிடத்திற்கு மேல் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. கோபம் கண்ணை மறைக்கும் என்பர் இங்கு பாசம் கோபத்தை மறைக்க அவள் என்ன செய்வாள்?
“என்னைய விட்டுட்டு உன்ரனால இருக்க முடியாதுன்னு தான் நினைச்சேன். ஆனா உன்ரனால இருக்க முடியும்னு இத்தனை வருஷம் இருந்தும் காமிச்சிட்டயல்ல. கெட்டிக்காரி தான் நீ” என்று கண்கலங்க, அரசிக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“என்ன தமிழ் பொசுக்குனு இப்படி சொல்லிட்ட. என்ர நெனப்பெல்லாம் உன்னைய சுத்தியே தான். எப்போடா படிப்பு முடியும் நம்மூருக்கு வருவோம், உன்ர கூட இருப்போம்னு தான் அங்கயும் நாளை ஓட்டிட்டு இருந்தேன்” என்றாள்.
அரசியைப் பிரிந்து இருந்ததில் தங்களுக்கு வருத்தம் என்றால் அனைவரையும் பிரிந்து இருந்ததில் அவளுக்குத் தான் அதீத வருத்தம் இருந்திருக்கும் என்பது புரிந்து தான் இருந்தது அருந்தமிழுக்கும்.
“இனி லண்டன் கிண்டன்னு எங்காவது போய் பாரு” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“நானே சோத்துக்கு சிங்கி அடிச்சுப்போய் வந்திருக்கேன் நான் என்னத்துக்கு திரும்ப அங்க போகப் போறேன்” என்று அரசி சொல்ல, சரியாக அந்நேரம் உள்ளே வந்த நாயகிக்கு அரசியின் இந்தப் பேச்சு காதில் விழுந்தது. உடனே அவர் வந்த வேகத்தில் சமையல் கட்டை நோக்கிச் சென்றார்.
அடுத்த ஐந்தாம் நிமிடம் பெரிய தட்டு நிறைய அதிரசம், சீடை, கடலை உருண்டை, எள்ளு உருண்டை என அடுக்கி எடுத்து வந்தார்.
“உனக்கு டாக்டருக்குத் தான் படிக்கோணுமுன்னா அதைய இங்க இருந்தே படிச்சிருக்கலாம்ல, அப்படி என்னதான் பிடிவாதம் உனக்கு?” படிக்கச் சென்றவள் இப்படி மெலிந்துபோய் வந்திருக்கிறாளே என்ற வருத்தத்தில் தங்கையிடம் நொந்துகொண்டாள் தமிழ்.
‘இங்க இருந்திருந்தா என்னால படிச்சிருக்க முடியாது தமிழ்’ என்று நினைத்த அரசியோ பதிலேதும் சொல்லாது புன்னகையையே பதிலாகத் தர, அதற்கு மேலும் அப்பேச்சைத் தொடராது விடுத்து,
“அங்க லதாராணி அத்தை ராமசாமி மாமா எல்லாம் எப்படி இருக்காங்க?” என அவர்களது பெரிய அத்தை குறித்து விசாரித்தாள் அருந்தமிழ்.
ஆறுச்சாமியின் பெரியப்பா மகளான லதாராணி, தன் கணவர் ராமசாமியுடன் லண்டனில் வசிக்கிறார். அரசி பிடிவாதம் பிடித்து அங்கு படிக்கப் போக நினைக்க, அப்போது ஊருக்கு வந்திருந்த லதாராணியும் தன் தம்பியிடம் பேசி பாஸ்போர்ட் விசா எல்லாம் உடனிருந்து எடுத்துக் கொடுத்து அரசியை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அக்காவோடு தான் இருக்கப் போகிறாள் என்ற காரணத்தினால் மட்டுமே ஆறுச்சாமியும் ஒப்புக்கொண்டு அனுப்பி வைத்தார்.
“ஹ்ம்ம்.. நல்லா இருக்காங்க. கொஞ்ச நாள்ல இங்கயே வர்றதா சொல்லியிருக்காங்க” என்ற அரசி,
“தமிழ்! நான் உன்ர மேல கோபமா இருக்கேன். நான் வர்றேன்னு தெரிஞ்சிருந்தும் வீட்டுல இருக்காம எங்க போன நீ” என அவள் மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
“கோவில்ல சாயங்கால பூஜைக்கு சொல்லியிருந்தேன். நீ வந்ததும் ஒட்டுக்கா போலாம்னு பார்த்தா நீ வந்த பாட்டையே காணோம். நேரம் ஆனதும் பூசாரி நம்ம வீட்டுக்கே ஆள் அனுப்பி விட்டிருந்தாரு. அதான் நானே போய் உன்ர பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்” என விபூதியை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டு கைமறைத்து ஊதிவிட, அரசியோ விபூதியில் சிறிதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அழகாய் புன்னகைத்தாள்.
‘இந்த சின்னக் குட்டிக்கு இன்னும் தின்னீறு திங்குற பழக்கம் போகுதா பாரு’ என்று நினைத்தபடி தன் சின்னப் பேத்தியையே பார்த்திருந்தார் நாயகி.
“ஊருக்கு வந்ததும் முதல்ல என்னைய பார்க்க வராமா ரேக்ளா பார்க்க போன நீ எல்லாம் என்ர மேல கோபமா இருக்கியா?” என தமிழ் இப்போது அரசியின் இன்னொரு காதைத் திருக,
“ஆஆ.. வலிக்குது தமிழ்” என்றவள்,
“உனக்கே தெரியும், நான் இங்கிருக்கைல எத்தனை தடவ திருட்டுத் தனமா அலுங்காம மதிலேறிக் குதிச்சு ரேக்ளா பார்க்கப் போயிருக்கேன்னு. மிஸ்டர். ஆறுச்சாமி சாட்ட வாருலையே வெளுப்பாரு” என அவளது வீர சாகசங்களை எல்லாம் பேச,
“அதெல்லாம் வாங்கியும் அடங்குற ஆளா நீய்யு” என்ற குரலில் அக்கா தங்கை இருவரும் திரும்ப,
“ஏய் சின்னக் குட்டி! என்ர மகனையே மருவாதையில்லாம பேர் சொல்லிக் கூப்புடுறையா?” என்று அவர்களருகே வந்த நாயகியும் அரசியின் காதையே திருக,
“அப்பத்தோவ்! உங்க மகன் பேருக்கு முன்னாடி மிஸ்டர் போட்டு மரியாதையா தானே சொன்னேன். ஆளாளுக்கு என்ர காதையே திருகுறீங்க, பாத்து என்ர காது கையோட வந்திரப் போகுது” என்றவள் அவர் கையிலிருந்த தட்டைக் கண்டு கண்கள் மின்ன அதை வேகமாய் வாங்க,
“போகும்போது நல்லா நாட்டுக் கோழியாட்டம் போனா, வரும்போது நல்லி எலும்பாட்டம் வந்திருக்கா பாரு. புள்ள தெறமே இல்ல” என்று தமிழிடம் புலம்பிக் கொண்டிருந்தார் நாயகி.