அரசி எதையும் கண்டுகொள்ளாது அனைத்தையும் தன் வயிற்றுக்குள் அடுக்குவதிலேயே குறியாய் இருந்தாள். தட்டு காலி ஆனதும் தான் எழுந்து சென்று அவர்களுக்கென லண்டனில் இருந்து வாங்கி வந்த அனைத்தையும் ஒவ்வொன்றாய் எடுத்துக் காண்பித்தாள்.
“இந்தாங் ஆத்தா இதைய நல்லா காதுல மாட்டிக்கிட்டு பாட்டா கேளுங் போங்” என நாயகியின் கையில் ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போனைத் திணிக்க,
“இதைய காதுல மாட்டுனா பாட்டு வருமா? டி.எம் சௌந்தர்ராசு, எல்.ஆர் ஈஸ்வரி குரல் எல்லாம் வருமா” என்றார் கண்கள் மின்ன.
“எல்லாம் வரும். நான் பதிவு பண்ணி வெச்சிருக்கேன்” என்றுவிட்டு அடுத்து தன் அக்காவுக்கு வாங்கி வந்ததைக் காண்பிக்க, நாயகி தான் மலைத்துப்போய் பார்த்திருந்தார்.
அவர் கையில் ஒன்றே ஒன்றை மட்டும் வைத்துவிட்டு அருந்தமிழுக்கென ஒரு சூட் கேஸையே எடுத்து வைத்தாள் அரசி. பார்த்துப் பார்த்து அங்கிருந்து எக்கச்சக்கமாக வாங்கி வந்திருந்தாள். அதை எல்லாம் பிரித்துப் பார்க்கவே அருந்தமிழுக்கு நேரம் சரியாக இருந்தது.
அருந்தமிழ் ஆர்வமாய் அதைப் பார்த்திருக்க, அடுத்து தன் தந்தைக்கு வாங்கிய கைக்கடிகாரத்தை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தாள் அரசி. அதை வாங்கிப் பார்த்தவர் அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுகொள்ள,
‘மனுஷன் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லுறாரா பாரு’ என்றபடி அங்கிருந்து திரும்பியவள் வீட்டின் மூளை முடுக்கெல்லாம் சென்று ஆராய்ந்தாள்.
மாற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பின்வாசல், முன்வாசல் எல்லாம் சென்று பார்த்து வந்தாள். அவள் பின்னாலேயே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார் நாயகி.
இறுதியாக கட்டுத்தரைக்குச் சென்றவள் லட்சுமியைத் தேட, அனைத்து மாடுகளும் இருக்க அவள் தேடுவது மட்டும் தென்படவில்லை.
“லட்சுமி எங்க?” என மாடசாமியின் மனைவி மங்கம்மாளிடம் விசாரிக்க,
“நீங்க வெளிநாடு போன கொஞ்ச நாள்லயே லட்சுமியை விக்ரமன் தம்பி வீட்டுக்கு அனுப்பிட்டாருங் அம்மிணி நம்ம பெரியய்யா” என்று சொல்ல, அரசிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
அது கன்றில் இருந்து அவள் கைப்பட வளர்த்த நாட்டு மாடு. அது வீட்டில் இல்லை என்றதும், ‘என்ர லட்சுமியை போய் அந்த அத்தக்கருப்பனுக்கு கொடுத்திருக்காரே இந்த அப்பா’ என அனல் அடிக்க நின்றிருந்தாள்.
“உன்ர மாடும் உன்னையோட்டவே தான் கண்ணு. ஆருக்கும் அடங்க மாட்டேன்ட்றுச்சு” என்ற நாயகியின் குரலில் முறைப்போடே பின்னால் திரும்ப,
“என்னைய முறைக்காம உன்ர லட்சுமி பண்ணுன கூத்தக் கேளு. பால் கறக்கறதுக்குன்னு ஆரு அது கிட்டப் போனாலும் விடுறதில்லை. மடியை தொட்டாலே முட்ட வருது. விக்ரமனுக்கு மட்டுந்தேன் அடங்குது. அதேன் உங்கப்பன் அவனூட்டுக்கே அனுப்பி வெச்சுட்டான்” என்றார்.
நாளையே அதை அங்கிருந்து பிடித்துவர வேண்டும் என்ற எண்ணத்தில் எதுவும் பேசாமல் அமைதியாய் திரும்பிக் கொண்டாள் அரசி. நேரம் அப்படியே நகர்ந்திருக்க, சூரியன் மறைந்து சந்திரன் வந்திருந்தான்.
ஏழு மணி வாக்கிலேயே இரவு உணவானது தடபுடலாகப் பரிமாறப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் நாயகியின் கையால் சமைத்த உணவை உண்கிறாள் அரசி. ஒரு வாய் உண்டவுளுக்கு வயிறோடு சேர்த்து மனமும் நிறைந்திருந்தது.
“அப்பத்தா உங்களையும் உங்க சமையலையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணினேன்” என்றாள். அதில் கண்கலங்கியபடி நாயகி அவள் தலையை வாஞ்சையாய் வருட,
‘அப்பறம் என்னத்துக்கு அப்பத்தாளை விட்டுப்புட்டு அயல்நாடு போனாளாமா?’ எனப் பார்த்திருந்தார் ஆறுச்சாமி.
“அதான் வந்துட்டயல்லோ கண்ணு, இனி நாள்பூரா என்ர கையாலையும் உன்ர அக்கா கையாலையும் வயிறார சாப்பிடு சாமி” என்று நாயகி அவள் தட்டைப் பார்த்துப் பார்த்து நிரப்பினார்.
“உங்க கையாலையே நாள்பூராவும் சாப்டுட்டு இருந்தா அவ எப்போ சமைச்சு சாப்பிடுறதாமா?” என்றார் ஆறுச்சாமி.
பெரியவீடு என்றால் அனைத்திற்கும் ஆட்கள் வைத்திருப்பது வழக்கம். ஆனால் இன்று வரையில் அவ்வீட்டில் நாயகியின் சமையல் தான் தொடர்கிறது. வெளியே செல்வதற்கு வண்டியை எடுக்க டிரைவர் மணியனும், எதாவது வாங்கி வருவதற்கும் மாட்டுத் தொழுவத்தை கவனிக்கவும் மாடசாமியும் அவர் மனைவி மங்கம்மாளும் மட்டுமே உடனிருப்பார்கள்.
கல்லூரி செல்லும் போதிலிருந்தே அருந்தமிழும் நாயகியோடு இணைந்து அனைத்தையும் செய்யக் கற்றுக் கொண்டாள். முதலாளி தொழிலாளி என்றில்லாமல் அவரவர் வேலைகளை அவரவரே பார்க்கவேண்டும் என நினைப்பவர் ஆறுச்சாமி. அனைத்து வேலைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று அரசிக்கும் அதையே சொல்ல,
‘ஆரம்பிச்சுட்டாரு. என்னடா சத்தமில்லாம சாப்பிடுறாரேன்னு பார்த்தேன்’ என நினைத்தபடி அவள் தந்தையைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“அதெல்லாம் அவ பழகிக்குவா ஆறுச்சாமி. நானும் தமிழும் கூட மாட இருந்து இனி மொல்ல மொல்லப் பழக்கி விடுறோம்” என்றார் நாயகி.
“ஆமாங் ப்பா அதெல்லாம் அவ கத்துக்குவா” என அருந்தமிழும் சொல்ல,
“நீங்க தான் சொல்லுறீங்க அவ வாயில இருந்து ஒரு வார்த்தையாவது வருதா பாரு” என்று சொல்லிய மறுநொடி, புரை ஏறியதுபோல் பயங்கரமாய் தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டு இருமினாள் அரசி.
“செத்த நேரம் நீ பேசாம இரு ஆறுச்சாமி. பாவம் புள்ளைக்கு பொரை ஏறுது பாரு. அன்னாடும் உன்ர கூட ஒரே அக்கப்போரு தான்” என்று நாயகி குரல் உயர்த்தவும், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தண்ணீர் குடிக்கும் சாக்கில் சொம்பின் மறைவில் ஒரு கண்ணால் தன் தந்தையைப் பார்த்தாள் அரசி.
‘வந்ததும் அவ வேலைய நம்மட கிட்ட இருந்தே ஆரம்பிச்சுட்டா. இனி இவளையும் கையில புடிக்க முடியாது இவ அப்பத்தாளையும் கையில புடிக்க முடியாது’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாய் உண்டெழுந்தார். அவர் அறியவில்லை அவருக்கு முன்னரே பல பேரிடம் ஆரம்பித்துவிட்டாள் என.
அதன் பின் அருந்தமிழும் அரசியும் அவர்களுக்குள் வெகுநேரம் பேசிய பின்னரே உறங்கச் சென்றனர். அவர்களது அறையில் விளக்கு அணைக்கப்படும் வரையில் நாயகியும் ஆறுச்சாமியும் உறங்காது விழித்திருந்தனர்.
ஆறுச்சாமியின் பார்வை சுவரில் மாட்டப்பட்டிருந்த மனையாளின் படத்தில் நிலைத்தது. புகைப்படத்தில் இருந்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார் வள்ளியம்மாள்.
வள்ளியம்மாள் தன் இளையமகள் அரசியைப் பெற்றெடுத்த ஒரே வாரத்தில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறைநிலை அடைந்துவிட, அதன் பின் அவரது இடத்தை வேறு யாருக்கும் கொடுக்கவில்லை ஆறுச்சாமி. நாயகி தான் தன் மகனுக்குத் துணையாய் இருந்து தன் பேத்திகளை பொறுப்பாய் வளர்த்தெடுத்தார்.
அருந்தமிழ் அப்படியே அவள் அன்னையின் குணாதிசயங்களைக் கொண்டிருந்தாள். அவள் உருவத்திலும் குணத்திலும் பால் நிறத்திலும் அப்படியே வள்ளியம்மாள் தான். ஆறுச்சாமிக்கு அருந்தமிழ் ஒரு வரம். பொறுமையும், பக்குவமும், அமைதியும், அடக்கமும், சுறுசுறுப்பும் கொண்ட தன் மூத்த மகள் மீது என்றுமே அலாதிப் பிரியம் அவருக்கு. அவள் முகத்தைப் பார்த்து தான் அவரது வள்ளியின் இழப்பையும் தாண்டி வாழ்ந்து வருகிறார்.
அருந்தமிழ் தேவிக்கு ஒரு வயது இளையவள் வேங்கையரசி!
அப்படியே ஆறுச்சாமியின் மறுவுருவம். அவரைப் போலவே நல்ல உயரம், மாநிறம், எதையும் துணிந்து செய்யும் மனோதிடம், நினைத்ததை நடத்திக் காட்டும் குணம் என எல்லாம் அவரைப் போல் இருக்க, அவள் வயதில் அவர் அத்தனை பஞ்சாயத்துகளைப் பார்த்ததில்லை, ஆனால் அவருக்கும் ஒருபடி மேல் சென்று பல பஞ்சாயத்துகளைச் சந்தித்திருக்கிறாள் மகள்.
ஒரே கொடியில் மலர்ந்த இரு பூவில் அத்தனை வேறுபாடு. இருந்தும் ஒன்றுக்கொன்று அன்பைக் காட்டுவதில் மட்டும் அத்தனை ஒற்றுமை. அந்த சிந்தனையில் அவர் அமர்ந்திருக்க,
“என்னப்பா இன்னும் தூங்கலையா?” என்றபடி அவரருகில் வந்தார் நாயகி.
“தூக்கம் வரலைங்” என சோர்வாய் சொல்ல,
“காரணத்த நாஞ்சொல்லவா? அரசியை இங்கிருந்து அனுப்பி இருந்திருக்கக் கூடாதுன்னு தானே நினைக்குற” என்றார் சரியாக.
பிள்ளையின் மனம் தெரியாத பெற்றவளா? தன் அன்னையை எண்ணி அவருக்கு இன்றும் வியப்பு தான்.
“ஒன்னுக்கொன்னு எத்தன பாசமா இருக்குதுக பாரு. இன்னிக்கு தான் நம்ம தமிழு வாய்விட்டு சிரிக்குறா. அவளுக்கும் தங்கச்சியை பிரிஞ்சு இருந்ததுல வருத்தந்தேன். இதுவரைக்கும் உன்ர கிட்ட சொல்லியிருக்க மாட்டா ஆனா அன்னாடும் அரசியோட துணிமணிகளை, அவ போட்டோவை எடுத்து பார்த்துக்கிட்டே இருப்பா. அரசி வந்ததும் தான் வீடே நிறைஞ்சிருக்கு” என்றார்.
“எனக்கு மட்டும் அவளை அவ்வளவு தூரம் அனுப்பனும்னு ஆசையாங் ம்மா? போயே ஆகோணும்னு ஒத்தக் காலுல நின்னவளை என்ன பண்ணுறது? ஆனா உங்க பேத்தி லேசுபட்டவ இல்ல, அங்கயே உக்காந்துகிட்டு வரமாட்டேன்னு புடிவாதம் பண்ணி இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தானே வந்திருக்கா”
அவர் ‘உங்க பேத்தி’ என்பதில் சற்று அழுத்தம் கொடுத்ததும் அவரை குறுகுறுவென்று பார்த்த நாயகியோ,
“ஆனா பொட்டப் புள்ளைக்கு இத்தன வீம்பு ஆகாது. உன்ர வாரிசு உன்னைய மாறியே தானே இருக்கும்? அதென்னவோ நம்ம பரம்பரையில மட்டும் வாரிசுக்கு வாரிசு இப்படி ஒன்னு தப்பாம வந்து பொறந்திருது” என்று சொல்லியதில் ஆறுச்சாமிக்கு லேசான புன்னகை அரும்பியது.
அதைக் கண்டு தானும் புன்னகைத்த நாயகி,
“கண்டதையும் போட்டு யோசிக்காம போய் நிம்மதியா தூங்கு கண்ணு. இனி நம்ம புள்ள நம்மளோட தானே இருக்கப் போவுது” என, அன்னைக்கு தலையசைத்து நகர்ந்தார்.
“செல்லாண்டியம்மா! எம்புள்ளைகள நீதான் கூட இருந்து காப்பாத்தோணும்” என்று தன் குலதெய்வத்தை வேண்டியபடி நாயகியும் அவரறைக்குச் சென்றுகொண்டார்.
அனைவரும் உறங்கியிருக்க, நாழிகை நகர்ந்ததும் வேங்கையரசி என்னும் பெண்புலி மட்டும் மெல்லக் கண்விழித்து கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தது.
பின் மெல்ல எழுந்து, தன் கைபேசியை தேடி எடுத்து ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள். மறுமுனையில் பதில் வரவும், மெதுவாக பதுங்கிப் பதுங்கி யாரும் அறியாவண்ணம் பின்வாசல் வரை வந்துவிட்டாள்.
மதிற்சுவரின் மீது மெல்ல ஏணியைப் போட்டு சத்தமின்றி மதில் மேல் ஏறி, ஒரு காலை மதிலுக்கு வெளியேயும் ஒரு காலை மதிலுக்கு உள்ளேயும் போட்டு அமர்ந்தவள், யாராவது பார்க்கிறார்களா என சிலநொடிகள் சுற்றும் முற்றும் கூர்மையாய் கவனித்துக் கொண்டாள்.
‘ஆல் செட். ரெடி.. ஸ்டெடி.. குதிச்சிரு வேங்கை’ என அவள் குதிக்கத் தயாரான போது,
“ஏய் கட்டக்காரி!” என அவளுக்கு மிக அருகில் ஒலித்தது ஒரு கம்பீரமான குரல்.
விக்ரம பாண்டியனின் குரல்!
“அத்தக்கருப்பன்!” என இதழ்கள் தானாய் உச்சரிக்க, திருதிருத்தாள் வேங்கையரசி.
வாசம் வீசும்….