“ஏன் என்னை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்..
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே..”
அமல்ராஜிடம் ஜோசஃப் பேசி சென்ற அதே நேரம் லானின் சிட் அவுட்டில் அமர்ந்திருந்தனர் ஜோஷ்வாவும் ஜென்சியும்..
பேசவேண்டும் என வந்திருந்தாலும் இருவருமே மௌனமாய் இருக்க அந்த அமைதியும் கூட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்பமான மனநிலையில் இருந்தவன் தனக்குள்ளே இப்பாடலை முணுமுணுக்கவும்,
“இதோ பார்.. இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் கூட இருந்துக்கோ… ஆனால் பாட்டு மட்டும் பாடாத ஜோஷ்.. எழுந்து உள்ள ஓடிடுவேன்..”
என்று அவனை வாரிவிட கண்களை குறுக்கி முறைத்து,
“ஆனாலும்.. என்னை ரொம்ப டேமேஜ் பண்ற ஜென்சி.. இதெல்லாம் என் எதிர்கட்சிகாரன் கேட்டால் என்ன நினைப்பான்..” என்று போலியாய் மிரட்ட,
“ம்ம்ம்.. எங்க மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டியே மகராசினு நினைப்பாங்க..”
என கவுண்டர் கொடுக்கவும் முறைக்க முயன்று முடியாமல் சிரித்து விட்டான்.
“இந்த சிரிச்ச முகத்துக்கு பின்னால அப்படி என்ன இருக்கு ஜோஷ்.. உங்க அப்பாவை பார்த்தால் மட்டும் இந்த சிரிப்பு எங்க போகுது..? சின்ன வயசுல இருந்த இப்படி தானா..”
அன்று ஜோசஃப்பிடம் கேட்டதையே இன்று ஜோஷ்வாவிடம் நேரடியாய் கேட்க அதில் அவன் சிரிப்பு புன்னகையாய் மாற சாய்ந்து அமர்ந்த ஜோஷ்வா,
“சின்ன வயசுல இருந்து இப்படி தான்னு சொல்ல மாட்டேன்.. நான் கொஞ்சம் ஹைபர் அக்டிவ் கிட் தான்.. என்னை சமாளிக்க டாட்,மாம் ரெண்டு பேருக்குமே சிரமம்.. ஸோ கண்டிப்பு தான்.. ரூல்ஸ் தான்… அதனால எப்பவும் டாட்க்கும் எனக்கும் சண்டை வந்துட்டே இருக்கும்.. பட் ஐ நெவர் ஹேட் ஹிம்..”
என்றவன் வானை நோக்கிய விழியோடு தானே தொடர்ந்தான்.
“ஆனால் என்னால ஜோசஃப்போட வைக்கிற கம்பேரிசனை ஏத்துக்க முடில.. பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் நான் வேற.. அவன் வேற தானே..!! அவனை மாதிரி அவர் சொல்பேச்சு கேட்டு எப்பவும் என்னால இருக்க முடியாது.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அங்கிருந்து எங்கேயாவது ஓடிலலாம் போல.. அப்போ தான் தாத்தா ஞாபகம்.. ஏதேதோ பண்ணி தாத்தாவிடம் வந்து சேர்ந்துட்டேன்.. அது தான் ஜென்சி.. கோல்டன் பிரியட் ஆஃப் மை லைஃப்.. தாத்தா என் இஷ்டம் போல என்னை விட்டாலும் எனக்கு எது தேவையோ அந்த பாதைல வழி நடத்தினார்.. நான் நினைச்சதை எல்லாம் செய்யும் எனக்கு ஸ்பேஸ் கொடுத்தார்.. அப்பவும் டாட் எதாவது குறை சொல்லிட்டே இருப்பார்.. எனக்கு சப்போர்ட்டா என் பக்கம் பேச என் அம்மாவோ ஜோவோ யாருமே நிற்கமாட்டாங்க.. அதனாலே என்னை நான் எப்பவும் நிரூப்பிக்க முயற்சி பண்றதில்லை… அதுக்கு அவசியம் இல்லனு நினைச்சேன்.. ஆமா.. நான் இப்படி தான்..என்ன செய்வீங்கன்னு அழுத்தமா இருந்தேன்..
படிப்பு முடிஞ்சு நான் ரிஸர்ச்சில் இறங்கிய அப்புறம் என் உடல் பொருள் ஆவி என்னால் அதுக்காக மட்டுமே அர்பணிச்சேன்.. வேறு சிந்தனையே இல்லாமல் லேப் தான் கெதினு இருந்தேன்.. நிறைய பேப்பர் பப்ளிகேஷன்ஸ்.. புக்ஸ்.. ரிஸர்சஸ் அப்படியே போச்சு என் வாழ்க்கை.. ஒரு மாறுதல்காக தான் மறுபடியும் மும்பை வந்தேன்..
டாட்க்கு ஜோசஃப் மாதிரி நானும் பிஸ்னெஸை பார்க்கணும்னு ஆசை.. அந்த ஆசை தான் அவருக்கு ஆபத்தா வந்திருக்கும்னு அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்..”
என்றவனிடம் கேலியாய் ஒரு புன்னகை..
ஜோஷ்வாவின் படிப்பும் அதில் அவன் பெற்ற புகழும் கண்டு அமல்ராஜிற்கு பெருமை என்றாலும் அவர்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் தொழிலை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதனை வெளிபடையாக சொல்லும் அளவு அவர்கள் தந்தை – மகன் உறவுநிலை இல்லை. மீறி தான் சொன்னால் அவன் அதற்கு எதிராக தான் செய்வான் என்பதால் அவர் ரெமிஜியஸ் மூலம் அவனை அலுவலம் வரவைக்க நினைத்தார்.
அவனும் அவர் நினைத்தபடி எட்டீயில் கால் பதித்தான். ஆனால் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பகுதி..!!
அவனின் நோக்கம் அவர்கள் விளைபொருளில் ஏதேனும் புதுமையை கொண்டுவர வேண்டும் என்பது தான்.. வேகமாய் ஓடும் இந்த காலகட்டத்தில் வழக்கமான பொருட்களை காட்டிலும் வித்தியாசமாய் அதே சமயம் மக்களுக்கு மிகவும் அவசியமாய் கருதப்படும் வகையிலான விளைபொருட்களை உருவாக்கவும் சந்தையில் அறிமுகம் படுத்தும் எண்ணம் மட்டும் தான் அவனிடம் இருந்தது. எட்டீயில் ஏதோ ஒரு வகையில் தன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அது..!!
ஆனால் அவர்களின் பிரதானமான லாக்டோ பால் மற்றும் இதர குளிர்பானங்களின் தயாரிப்பு அட்டவணை அவனை யோசிக்க வைத்தது.அவற்றில் சேர்க்கபடும் அடிட்டிவ்ஸ் மற்றும் ப்ரிசெர்வேட்டிவ்ஸ் இதர மூல பொருட்கள் அவனுக்கு முரணாக தோன்ற அதில் தொடங்கியது தான் அவனுக்கும் அவன் தந்தைக்கும் ஆன பிரச்சனை.
இதனை நூல் பிடித்து அனைத்தையும் ஆராய தொடங்கி ஒரு மாதம் முழுதாக செலவழித்ததன் விளைவு விளைபொருட்களில் அவர்கள் செய்யும் கலப்படத்தையும் அதிக லாபத்தை எதிர்பார்த்து பொருட்களின் தரயிறக்கமும் கண்டுபிடித்தான்.
அப்பவும் அவன் சந்தேகத்திற்கு ஆளானது ஆராய்ச்சி குழு மட்டும் தான். ஆனால் உண்மையில் அனைத்தும் தந்தையின் அனுமதியோடு தான் நடக்கிறது என அறிந்த பின்பு அதிர்ந்து தான் போனான். எத்தனை சண்டைகள் தந்தையோடு இருந்தாலும் அவரிடம் இப்படி விஷயத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் கண்காணிப்பில் புலப்பட்ட மற்றொரு விஷயம் இவை எதுவும் ஜோசஃப் அறிந்திருக்கவில்லை. அவன் பார்வைக்கு வராமல் அமல்ராஜூம் இருதயராஜும் வைத்திருக்கின்றனர் என்பது புரிந்தது.
அனைத்தையும் கண்டுபிடித்து அவன் அமல்ராஜை அணுகும் முன் அவரே அவனை அழைத்து பேசலானார்.
“நீயும் நம்ம கம்பெனியை பார்க்கணும்னு நான் ஆசைப்பட்டேன் தான்.. முதலாளியா நின்னு நிர்வகிக்கும் வேலையை மட்டும் பார்க்காமல் ஏன் அனாவசியமான விஷயத்தை எல்லாம் தோண்டிட்டு இருக்க..”
கண்டிப்பாய் பேசிய தந்தையை நக்கலாய் பார்த்தவன்,
“ஹோ.. இன்பர்மேஷன் வந்திடுச்ச..?? முதலாளியானா எப்படி நீங்க ஆட்டி வைக்கும் திசைல ஆடும் பொம்மை மாதிரியா.. அதுக்கு நான் ஜோசஃப் இல்லை டாட்..”
என்றவன்,
“எது அனாவசியம்..??? அடுத்தவன் உயிருக்கு உலைவைக்கிற உங்கள் ஸோ கால்ட் ப்ராடெக்ஸ் பத்தி தெரிஞ்சுகிறதா..?
உண்மையான பாலை போலவே கலர் & கன்சிஸ்டென்ஸ் கொண்டுவர வெஜிடப்புள் ஆயில்,ஃபாட்,யூரியா,சேர்த்து.. அத்தோட தன்மை தெரியாமல் எமுல்ஸிஃபை பண்ண டிடெர்ஜெண்ட் சேர்த்து,அசிடிட்டியை டைலியூட் பண்ண சோடா சேர்த்து கடைசியா பேருக்கு பாலை சேர்க்குறீங்க.. பால்ல கொஞ்சமா விஷம் கலந்தாலே அது விஷம் தான்.. ஆனால் நீங்க செய்யிறது..!!! இதெல்லாம் கேட்கவே நாராசமா இல்ல.. கவர்மெண்டை ஏய்ச்சுகட்டி எப்படி இதை செய்றீங்க.. அதை எப்படி இவ்வளவு அசால்ட்டா சொல்றீங்க..”
தன் மனகுமுறலை கோபமாய் வெளிபடுத்த,
“ஒரு சின்ன விஷயத்தை உயிருக்கு ஆபத்து.. அது இதுனு நீ பெரிசாக்கி பேசாதே ஜோஷ்.. எங்களோட frimல இதெல்லாம் சகஜம் தான்.. யாரையும் ஏய்ச்சு கட்ட தேவையில்லை.. இதுல உள்ள அரசியல் எல்லாம் உனக்கு புரியாது… ப்ராடெக்ட்டோட டேஸ்ட் அண்ட் க்வாலிட்டியை அதிகமாக்க சில விஷயங்களை சேர்ப்பது தான்.. நான் ஒன்னும் புதுசா செய்யல.. எல்லாரும் அது தான் பண்றானுங்க.. மத்தவங்களை கம்பேர் பண்ணி பார்.. எட்டீ எவ்வளவோ தேவலாம்னு நீயே நினைப்ப..!”
என்று அலட்சியம் போல் சொன்னவரை தீவிரமாய் பார்த்தவன்,
“உலகமே அதை செஞ்சாலும் தப்பு.. தப்பு தான் டாட்.. இது உங்களுக்கு சின்னதா தெரியலாம்.. ஆனால் இத்தோட பின் விளைவுகளை தெரிஞ்ச எனக்கு இது சின்னது இல்ல.. கண்டிப்பா இதை என்னால அனுமதிக்க முடியாது டாட்..”
என உறுதியாக மொழிந்தான்.
“உன் அனுமதி யாருக்கு தேவை… உருபடியா ஒன்னும் பண்ண முடியாது.. ஒரு மாசம் ஜோசஃப்போட இருந்து பார்.. அப்போ தெரியும் இந்த பிஸ்னெஸ்ல உள்ள கஷ்டம்.. இன்டியாஸ் டாப் டேரக்ட் செல்லிங் கம்பெனிஸ்ல 1ஸ்ட் பொஸிஷன்.. மார்கெட் கேப் ரேங்கிங்ல டாப் ஃபை பொஸிஷனில் இத்தனை வருஷம் இருப்பதும் சும்மா இல்ல. எல்லாம் எங்க கடின உழைப்பு.. அதெல்லாம் உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.. இப்படி வியாக்கியானம் தான் பேச முடியும்..”
தன்னுடைய அனுபவத்தில் இதுபோல் எத்தனையோ தடைகளை பார்த்தவர் தான் அமல்ராஜ். ஆதலால் அவனின் இந்த கேள்விகள் எதுவும் அவரை துளியும் அசைக்கவில்லை. அதற்கு பதில் கொடுக்கவும் தயங்கவில்லை.
“முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு.. உனக்கு பிஸ்னெஸ் எல்லாம் செட் ஆகாது.. மறுபடியும் அந்த இன்ஸ்டிடியூட்ற்கோ இல்ல கெனடாவிற்கோ போ.. அங்க தான் உன் ஆராய்ச்சி எல்லாம் உபயோகமா இருக்கும்..”
என்று அத்தோடு பேச்சை முடித்து செல்ல பார்த்தவரை விடவில்லை அவன்.
“அப்படி எல்லாம் விடமுடியாது டாட்.. நேர்மையாவும் நியாயமாகவும் இருந்தால் எந்த உயரமும் போகலாம்.. அதீத லாபத்தின் மேல உள்ள மோகமும்.. பேராசையும் தான் தப்பு செய்ய வைக்கும்.. அதை தப்பே இல்லைனு பேச வைக்கும்.. அதை நீங்க இனியும் தொடர நான் விடுவேன்னு நினைக்காதீங்க..”
எச்சரிப்பது போல் அவன் சொன்ன தொனி அவருக்கு வேடிக்கையாக இருந்ததோ,
“என்ன பண்ணுவ… கம்ப்ளைன் பண்ணுவியா..?? இல்ல மீடியாவுக்கு இழுப்பியா..??? கோ ஹெட்.. என்ன வேணாலும் செய்.. எதுவும் என்னை அசைக்காது.. உன் ஸ்டேட்மெண்ட் கொஞ்ச நாள் சென்சேஷ்னலாக இருந்தாலும் மக்கள் அத்தோட மறந்துட்டு அடுத்த நியூஸ் தேடி போயிடுவாங்க.. அவ்வளவு தான் ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.. வேற ஒன்னும் கிழிக்க முடியாது.. ட்ரை பண்ணி பாரேன்.. நான் உன்னை சேலஞ் பண்றேன்..”
என்று நக்கலாய் பதில் கொடுக்க அது ஜோஷ்வாவை இன்னும் சீண்டியது.
“உங்களுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனை இருந்திருக்கலாம்.. ஆனால் இதுவரை உங்களை தப்பானவரா நான் நினைச்சது இல்ல டாட்.. இப்ப நீங்க செய்றது ரொம்ப பெரிய தப்பு.. கண்டிப்பா அதை நிறுத்த நான் எந்த எல்லைக்கும் போவேன்.. நான் நினைச்சால் நினைச்சதை செய்வேன்னு உங்களுக்கும் தெரியும்… நீங்க எதெல்லாம் இப்ப கர்வமா உங்களுட்ட இருக்குனு சொல்றீங்களோ அதெல்லாம் பறிக்கொடுக்க தயாரா இருங்க டாட்… எனக்கே சேலஞ் இல்லையா..!! பார்ப்போம்..”
குரலை உயர்த்தாமல் நிதானமாகவே தான் பேசி சென்றான். ஆனால் அதில் பொதிந்திருந்த அழுத்தமும் தீர்மானமும் அவன் பரம்பரை சொத்தில் தன் பங்கை பிரித்து கேட்டு வழக்கு பதித்த போதும்,மார்கெட்டில் சற்று நொடித்துபோன ஒரு நிர்வனத்தை வாங்கி ஃபீனிக்ஸ் என்ற புதிய நிர்வனமாய் கொண்டு வந்தபோதும் தான் அவருக்கு புரிய தொடங்கியது.
“ஸ்மோக்கிங்,லிக்கர், ட்ரக்ஸ் மூலமா தெரிஞ்சே உடம்பை கெடுத்துகிறது வேற.. ஆனா ஸ்லோ பாய்சன் மாதிரி எதனாலனே தெரியாமல் பாதிக்க படுறது எவ்வளவு கொடுமை.. அது எவ்வளவு தூரம் உயிருக்கு கேடுனு எனக்கு தெரியும் ஜென்சி.. கண்டிப்பா என்னால எனகென்னானு இருக்க முடியாது.. ஆனால்.. டாட் சொன்னதில் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுது.. ஆதாரமே இருந்தாலும் அவருக்கு எதிரா என்னால் கேஸ் நடத்தியோ மக்களிடம் அவேர்னெஸ் ஏற்படுத்தியோ பிரயோஜனம் இல்லைனு..”
என்று சொல்லும்போது இடையிட்ட ஜென்சி,
“அவேர்னெஸ் கிரியேட் பண்றது எப்படி பிரியோஜனம் இல்லாமல் போகும் ஜோஷ்.. ஷோஷியல் மிடியாவில் போட்டால் உலகம் முழுசும் ரீச் ஆகும்… ஹஸ்டேக் போட்டே எத்தனை மாற்றங்கள் வந்திருக்கு தெரியும் தானே..” என்று யோசனையாய் சொல்ல
“உண்மை தான்.. ஆனால் அது எல்லா விஷயத்திலும் சாத்தியம் இல்ல ஜென்சி.. சும்மா யூடியூப்ல சர்ச் பண்ணி பாரு ஒவ்வொரு ப்ராடெக்ட்டில் உள்ள அடல்டரேஷன் எல்லாம் வந்து கொட்டும்.. இங்க எத்தனை ப்ராடெக்ட்ஸ் பேன் ஆகியும் திருப்பி கொஞ்ச வருஷத்தில் புழக்கத்திற்கு வந்திருக்கு தெரியும் தானே? *** ட்ரிங்க்ஸ்ல இருந்து *** நூடூல்ஸ் வரை எல்லாம் ஊர் அறிந்த விஷயம் தான்..
அதை பத்தி எல்லாம் எவ்வளவு அவர்னெஸ் வீடியோ வந்திருக்கும்.. அதெல்லாம் பார்க்கும்போது எல்லாருக்கும் பக்குனு தான் இருக்கும்.. ஆனால் கொஞ்ச நாள் போனால் அதை அப்படியே மறந்துட்டு திரும்ப வாங்கி சாப்பிட தான் போறாங்க..”
என்று ஆதங்கமாய் அவன் சொன்ன விஷயத்தில் உள்ள உண்மை அவளுக்கும் புரிந்தது.
“இதில் யாரையும் தப்பு சொல்லவும் முடியாது.. ஏன்னா.. இந்த காலத்தில் விளையிற அரிசில இருந்து எல்லாத்திலும் கலப்படம் தான்.. எதை நம்புறது எதை அலட்சிய படுத்துறதுனு யாருக்குமே தெரியாத பட்சத்தில் என்ன தான் செய்வாங்க.. சாமானியனால முடியாதுனு புரிஞ்சுது.. எங்க இருந்து சொன்னால் நடக்குமோ அந்த இடத்தை அடையணும்..
மத்தவங்களை ஆட்டி படைக்க அதிகார வர்க்கத்திற்கு வரணும்னு நினைச்சேன்.. சிம்பிளா சொல்லணும்னா எங்க டாட் இருக்க இடத்திற்கு நானும் வரணும்னு நினைச்சேன். ரோஷம் பார்த்து என் பணத்தில் தான் முன்னேறி வருவேனு நினைச்சால்.. வரலாம் தான்.. ஆனால் அதுக்கு இன்னும் பல வருஷங்கள் ஆகும்.. அவ்வளவு நாள் என்னால காத்திருக்க முடியாது.. என் தாத்தா சொத்து எனக்கும் உரிமை இருக்கு.. நான் ஏன் கஷ்டபடணும்.. அதான் சொத்தை பிரிச்சு கேட்டேன்.. அதில் தான் ஃபீனிக்ஸ் ஆரம்பிச்சேன்.. ஆனால் இன்னைக்கு ஃபீனிக்ஸ் இத்தனை தூரம் வளர்ந்ததில் எந்த குறுக்கு வழியும் இல்ல.. உண்மையா நியாயமா தான் கொண்டு வந்தேன்.. அதனால எத்தனை அவ பெயர் வந்தாலும் எதுவும் என்னை பாதிக்காது..”
“உண்மையை எல்லாரிடமும் சொன்னால் ஏன் உன்னை தப்பா நினைக்க போறாங்க ஜோஷ்..”
“என் பக்கம் விளக்கம் யாரும் கேட்கவே தயாராயில்லையே ஜென்சி.. சின்ன வயசுல இருந்தே நான் அப்பா மேல உள்ள வெறுப்பால தான் இப்படி எல்லாம் பண்றேன்னு நினைச்சாங்க.. ரெமி தாத்தா உட்பட..!!! யாரும் என் பக்கம் எதாவது காரணம் இருக்குமோனு நம்பிக்கை வைக்கல.. அப்படி நினைக்கிறவங்க கிட்ட எல்லாம் நானா போய் விளக்கம் சொல்ல எனக்கு அவசியமா படலை.. ‘நீங்க என்ன நினைக்குறீங்களோ அது தான் நான்.. அப்படி தான் இருப்பேன்.. என்ன செஞ்சிட முடியும் உங்களால..’ என்ற அலட்சியமும் அகந்தையும் தான் எனக்கு அதிகமா இருந்தது..இப்ப வரையுமே..!!”
உணர்ச்சிகள் தொலைத்த முகத்தோடு சொன்னாலும் அவனின் காரணங்களை யாரும் ஆராய முயற்சிக்காதது அவனை நிறையவே காயப்படுத்தி உள்ளது என புரிய
அவள் கூட அப்படி தானே நினைத்திருந்தாள். அவனுக்காக மிகவும் தவித்தது அவளின் இதயம்..!!!
“இந்த இண்டஸ்டீ உள்ள வந்தது என்னமோ அப்பாவை குறிவைச்சு மட்டும் தான்.. ஆனால் வந்த அப்புறம் தான் எங்க அப்பாவை விட மோசமான முதலைங்க எல்லாம் எனக்கு தெரிய ஆரம்பிச்சுது.. எதாவது செய்யணும்னு எனக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு.. அப்புறம் தான் நானும் ராமகிருஷ்ணனும் டீம்அப் ஆணோம்.. அவன் ஒரு சோஷியல் அக்டிவிஸ்ட்.. இந்த விஷயத்தில் எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோச்சு..
பெரிய ப்ராண்ட்ல இருந்து சின்ன சின்ன ப்ராண்ட் வரை எங்கெல்லாம் அடெல்டரேஷன் நடக்குது ஸர்வே எடுத்தோம்.. எல்லாரையும் பாரபட்சம் பார்க்காமல் கார்னர் பண்ணோம்.. தப்பு பண்ற எல்லார் கையுமே கருமை படர்ந்தது தான் ஜென்சி.. ஒவ்வொருதனுக்கும் ஏதோ ஒரு வகைல வீக்னஸ் இருக்கும்.. அதை கண்டுபிடிச்சு அங்க அடிக்கிறது தான் எங்க யுக்தி..சட்டரீதியா முடியாத விஷயங்களை சகுனிதனமா நடத்துறதுல தப்பில்லையே.. டெத் த்ரெட்டனீங் வந்ததும் இதனால தான். பட் நத்திங் கேன் ஸ்டாப் மீ…”
எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் உள்ளதை அப்படியே அவன் பேச கேட்டிருந்தவளுக்கு தான் திகைப்பாய் இருந்தது. இவ்வளவு செய்ய எத்தகைய தீர்மானம் வேண்டும் இவன் மனதில்..!! நிச்சயம் ஜோஷ்வாவின் மேல் இன்னும் இன்னும் மரியாதை கூடியது. எங்கோ ஒரு ஓரத்தில் சற்று பெருமிதமும் தோன்றியது.
மேற்கொண்டு பேச்சுகள் எதுவும் இல்லாமல் அமைதியாய் ஒருவர் அருகில் மற்றவர் அமர்ந்திருந்தனர்.
பெருமையாய் சொல்லவேண்டியது இல்லை என்றாலும் அவனின் இயல்பான புன்னகையும் மறைந்து சோர்வாய் இருக்க அவன் தோளில் கைவைத்து,
“ஜோஷ்..”
என்று அவள் அழைக்கவும், “ம்ம்..”
என்றான் திரும்பாமலே..!!
“நீ ரொம்ப சாதாரணமா சொல்லிட்டே.. ஆனால் இது எவ்வளவு பெரிய விஷயம்.. இதை நீ காலரை தூக்கிவிட்டு கெத்தாவே சொல்லலாம்.. ஆனால் ஏன் என்னவோ மாதிரி இருக்க ஜோஷ்..”
தன்மையாக அவள் கேட்க அவளை பார்த்து திரும்பியமர்ந்தவன் தோளில் இருந்த அவள் கையை பற்றி தன் கைக்குள் பத்திரப்படுத்தி கொள்பவன் போல் பிடித்து,
“நீ நேத்தி கேட்ட தெரியுமா.. ஒரு ஐகானிக் சயிண்டிஸ்ட்.. ஏன் பிஸ்னெஸ்மேன் ஆகணும்னு..அந்த கேள்வி.. இத்தனை வருஷமும் என் மனசுல உறுத்திட்டு இருந்த ஒரு விஷயம்… என்னோட சுயம்.. என்னோட விருப்பம் எதுவோ அதை தொலைச்சுட்டோமோனு கஷ்டமா இருக்கும் ஜென்சி… அதனாலே இந்த firmல எவ்வளவு அச்சீவ் பண்ணாலும் ஏதோ இன்கம்ப்ளீட்டாவே இருக்கும்.. ஐ பேட்லீ மிஸ் மை ஃப்ரோஃபஷன்.. இது எல்லாத்தையும் உதறிட்டு மறுபடியும் போயிடலாம்னு அடிக்கடி தோணும்.. ஆனால் எடுத்த சவாலை முடிக்கணும்னு என்னை நானே இழுத்து தான் பிடிச்சு இருந்தேன்..
டாட் கர்வமா சொன்ன ரேங்கிங்.. கேப்பிடலிஷேசன் எல்லாத்திலும் அவரை மிஞ்சினும்.. எங்க அப்பவோட ஸ்ரென்த்.. லாக்டோவை ஒன்னும் இல்லாமல் ஆகணும்.. ரெண்டுமே ஆல்மோஸ்ட் டன்.. ஸோ அதுக்கு அப்புறம் ஒரு டேரிங் டெஷிசன் எடுத்து இருக்கேன்.. அது எந்த அளவு சரியா இருக்கும்னு ஒரு குழப்பம் எப்பவும் இருந்துட்டே இருக்கு ஜென்சி..”
என்றவனின் உணர்வுகளை துள்ளியாமாய் உள்வாங்க முடிந்தது அவளால்.. அவனின் பிடியில் இருந்த விரல்களால் அவன் கைகளை பற்றிக் கொண்டவள் ஆதரவான புன்னகையோடு,
இதுவரை உன் முடிவு எதுவும் தப்பா போனது இல்லையே.. கண்டிப்பா இதுவும் சரியா தான் இருக்கும்… டோண்ட் கெட் வொரிட் ஜோஷ்..”
என்று சொல்ல அதரங்கள் விரிய தன் வழக்கமான பாணியில் அழகாய் சிரித்தான் ஜோஷ்.
“பனி ரொம்ப கொட்டுது.. தூக்கமும் வருது.. கொஞ்சம் கைய விட்டால் நான் எழுந்து உள்ள போவேன்..”
புருவங்களை ஏற்றியிறக்கி அவள் கேலியாய் சொல்ல அவனோ அப்பவும் கையை விடாமல்,
“கொட்டுற பனியில நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா இப்படி உட்கார்ந்து பேசுறதை பார்த்தால் என்ன நினைப்பாங்க ஜென்சி..”
என்று காலையில் நடந்ததை வைத்து அவனும் கேலி செய்ய பட்டென அவனிடம் இருந்து கையை பிரித்து கொண்டு எழுந்தவள்,
“ம்ம்ம்.. முழுசா முத்திடுச்சுனு..”
என சொல்லி திரும்பி செல்ல சில அடிகள் கடந்த போது,
“ஜென்சி..” அவன் அழைக்க நின்று,
“என்ன..” என அவள் கேள்வியாய் ஏறிடவும்,
“நீ கொன்னாலும் பரவாயில்லை..” என்றவன்
அவள் என்னவென்று சுதாரிக்கும் முன் தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.