Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 1

அத்தியாயம் 1

அதிகாலைப் பனி உடலை ஊடுருவி செல்ல காரிலிருந்து இறங்கிய விவேக் விமான நிலையத்தின் உள்ளே செல்ல எத்தனித்தவன் திரும்பி காரினுள் இருந்தவனைப் பார்த்தான்.



Advertisement

அவன் பார்வை உணர்ந்து கார் ஜன்னலை திறந்தவனிடம்,

“வா அர்ஜுன்!” என்று விவேக் அழைக்க,

Advertisement

Advertisement

“நீங்க போய்ட்டு வாங்க மாமா!” என்று புன்னகைத்தான் அர்ஜுன்.

“ஹ்ம்ம் ஓகே!” என்ற விவேக் அவனை வற்புறுத்தாது உள்ளே சென்றான்.

Advertisement

விமானம் வந்ததற்கான அறிவிப்புக் கேட்டு தன் நடையை விவேக் வேகப்படுத்த,

“ண்ணா!” என்ற குரல் வெகுஅருகில். கூடவே அவளும்.

“விஜி!” என்றவன் தங்கையைக் கண்டதும் புன்னகைத்தவன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

“எப்படி டா இருக்க?” 

“ஹ்ம்ம் ண்ணா! நீங்க? அண்ணி எப்படி இருக்காங்க? அம்மா எங்க?அப்பா வர்ல?” 

“இல்ல டா. அம்மா உனக்காக காத்துட்டு இருக்காங்க. அப்பாக்கு இந்த கிளைமேட் ஒத்துக்காது இல்ல? அதான் அழைச்சிட்டு வர்ல!” என்றவன்,

“சரி வா! கார்ல போய்ட்டு பேசலாம்!” என்று சொல்லி கையில் லக்கேஜை எடுக்க, அவன் கையில் இருந்த காயத்தை கண்டு விட்டாள் விஜி என்ற விஜயலக்ஷ்மி. 

“என்ன ண்ணா இது? எப்படி பட்டுச்சு?” என்றவள் பதற,

“சின்ன காயம் தான் டா. ஆபீஸ்ல தான் கவனிக்காமல் டோர் லாக் பண்ற பிளேஸ்ல கையை வச்சு சாச்சுட்டேன்!”

“பார்த்து வர மாட்டியா ண்ணா? விடு நானே எடுத்துக்குறேன்!” என்றவள் விவேக் சொல்லியும் கேளாமல் தானே லக்கேஜை இழுத்துக் கொண்டு வந்தாள்.

“அண்ணி என்ன சொல்றாங்க ண்ணா?” என்றவள் சிரித்தபடி,

“குட்டி விவேக் வர போறாங்க இல்ல? நான் அத்தையாக போறேன்ல ண்ணா?” என்று மகிழ்ச்சியில் சத்தமிட, வாஞ்சையாய் அவள் தலையில் கைவைத்தான்.

“இப்பவாச்சும் இந்தியா வந்தியே!” என்று சொல்ல, புன்னகை குறைந்து மென்னகையானது விஜயலக்ஷ்மிக்கு.

“காபி குடிக்கிறியா விஜி?” விவேக் கேட்க,

“வேணாம் ண்ணா! வீட்டுல போய் அம்மா கையால குடிச்சிக்கிறேன்!” என்று பேசியபடி நடந்து கார் அருகே வந்தவள் கண்டுவிட்டாள் அவனை.

நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவனை இங்கே. அவளின் நடை தானாய் நின்றுவிட அர்ஜுன் கவனித்தாலும் கவனிக்காதவனாய் காரில் சாய்ந்து நின்றிருந்தான்.

“விஜி!” என்று விவேக் அவளின் கைகளைப் பற்ற,

“ஹான்! ண்ணா!” என்றவள் அவனோடு நடந்தாலும் மனம் முழுதும் அலறி துடித்தது. 

எதற்காக இங்கிருந்து சென்றாளோ அவனே தன்னை அழைக்க வருவான் என துளியும் நினைக்கவில்லை.

மூன்று வருடங்கள் கழித்து அவனை தான் இந்தியா வந்ததும் முதலில் காண்போம் என நினைக்கவும் இல்லை.

“போலாம் அர்ஜுன்!” என்ற விவேக்,

“என்னால டிரைவ் பண்ண முடியல விஜி! அதான் அர்ஜுனை டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போச்சு!” என்றான் தங்கையிடம்.

“டிஸ்டர்ப் எல்லாம் இல்ல மாமா!” என்ற அர்ஜுன் கார் டிக்கியை திறக்கவும் விஜயலக்ஷ்மி கொண்டு வந்தவற்றை மௌனமாய் எடுத்து வைக்க, அவளுக்கு உதவினான் அர்ஜுன்.

அர்ஜுன் அருகே விவேக் அமர்ந்து கொள்ள, பின்னால் அமர்ந்து கொண்டாள் விஜயலக்ஷ்மி.

“வீட்டுக்கு தானே மாமா?” அர்ஜுன் கேட்க,

“ஹ்ம் டா!” என்ற விவேக்,

“வேறெதாச்சும் வேணுமா விஜி?” என்றான் தங்கையிடம்.

“இல்லைனா போலாம்!” என்றவள் காரை ஓட்டத் துவங்கியவனின் பக்கவாட்டு தோற்றத்தை தான் பார்த்தபடி வந்தாள்.

மருந்திற்கு கூட தன்னைப் பார்த்து அவன் புன்னகைக்கவில்லை என்ற உண்மை சுட, உதட்டைக் கடித்து தன்னைத் தானே நிதானப்படுத்த முயன்றாள்.

“இப்பலாம் அனு ஆபீஸ் வர்றதில்ல விஜி! அவளுக்கு சுத்தமா முடியல!” விவேக் சொல்ல,

“ஏன் ண்ணா?” என்றாள்.

“பேபி வளர ஆரம்பிச்சுடுச்சாம்!” என்றவன் முகத்தில் பிரகாசமான புன்னகை. அதில் அர்ஜுன் மென்மையாய் சிரிப்பதும் அவளுக்கு தெரிந்தது.

“அனு அண்ணி ஹெல்த் ஓகே தானே ண்ணா?” 

“ஹ்ம் ஓகே தான் டா. அவ நார்மலா தான் இருக்குறா. பட் பேபி வளர வளர சரியா சாப்பிட தூங்கனு கஷ்டப்படுறா. ஆனா அது தான் நார்மல்னு டாக்டர் சொல்றாங்க!” என்றவன்,

“அவளே குழந்தை தான்!” என்று சொல்லி சிரிக்க,

“ஆமாமா! அது தான் நானும் நினச்சேன்!” என்றவள் பார்வை நொடிக்கொரு முறை அவனைத் தொட்டு சென்றது.

“நேத்தெல்லாம் நைட்டு ஒரு மணிக்கு எந்திச்சு பிரியாணி வேணும்னு அடம்!” விவேக் சொல்ல,

“அதிகமா சாப்பிட கூடாது தான். ஆனா கொஞ்சமா குடுத்துருக்கலாமே ண்ணா!”

“கொஞ்சமாவா? ஒரு பிளேட் ஃபுல்லா வச்சு, என்னை தூங்க விடாம பக்கத்துல உக்காந்து பாருன்னு பார்க்க வச்சு சாப்பிட்டா உன் அண்ணி!” என்று சிரித்தான் விவேக்.

“ஓஹ்! வாங்கிட்டு வந்து குடுத்தாச்சா?”

“நானெங்க? காலையில வாங்கித் தர்றேன்னு சொன்னேன். கேட்டா தானே? கோச்சிக்கிட்டு இதோ இந்த நல்லவனுக்கு போன் பண்ணிட்டா!” என்று அர்ஜுனைக் காட்ட, அவன் புன்னகைத்தான்.

“அடுத்த ஒரு மணி நேரத்துல சார் பிரியாணியோட வந்தாச்சு! அதுவும் ஹோம் மேட்! இப்படிலாம் செல்லம் குடுத்தா என் நிலைமை என்னனு புரியுதா டா உனக்கு?” என அர்ஜுனிடமே கேட்க,

“மாமா! போன் பண்ணி கேட்குறா! நான் என்ன பண்ண?” அர்ஜுன் சொல்லி சிரிக்க,

“எதுவும் பண்ணாதன்றேன்! நீ பண்றதுக்கெல்லாம் தான் டா எனக்கு ரெஃப்லக்ட் ஆகுது!” என்று சொல்ல அதற்கும் சின்ன புன்னகை தான் அர்ஜுனிடம்.

வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் தங்கையிடம் விவேக் சொல்லிக்கொண்டு வர, பாதி கவனம் அங்கேயும் மீதி கவனம் தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாதவனிடமும் என வீடு வந்து சேர்ந்தாள் விஜயலக்ஷ்மி.

விஜயலக்ஷ்மி பொதுமருத்துவம் படித்திருந்தவள் தற்போது எலும்புகள் தொடர்பான தனிப்பட்ட படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு அங்கேயே ஒருவருடம் அதற்கான ஆசிரியராகவும் பணியாற்றிவிட்டு தற்போது அன்னைக்காகவே இந்தியா திரும்பியிருக்கிறாள்.

பின்னால் இருந்த லக்கேஜை எடுக்க விவேக் வர, “நீங்க உள்ள போங்க மாமா! நான் எடுத்துட்டு வர்றேன்!” என்று சொல்லவும்,

“தேங்க்ஸ் டா!” என்று சொல்லி, “விஜி கம் கம்!” என்று அன்னையை காண விவேக் உள்ளே செல்ல, அர்ஜுனைக் கண்டு தேங்கி அங்கேயே நின்றாள் விஜயலக்ஷ்மி.

“நான் எடுத்துக்குறேன்!” விஜயலக்ஷ்மி அர்ஜுனிடம் சொல்ல,

“ஹ்ம்!” என்றவன் எடுத்து கீழே வைத்தான். 

என்னவோ போலானது விஜயலக்ஷ்மிக்கு அவனின் இந்த அமைதி. 

“எப்படி இருக்கீங்க?” தானாய் பேச, திரும்பி ஒரு நொடி நின்று அவளைக் கண்டவன், தலையை மட்டுமாய் அசைத்துவிட்டு லக்கேஜூடன் உள்ளே சென்றான்.

“விஜி!” என அன்னை கலையரசி ஓடிவர கூடவே தந்தை சந்தானமும்.

“அம்மா!” என அணைத்துக் கொண்டவளுக்கு மற்றதெல்லாம் பின்னுக்கு சென்றது.

எத்தனையோ விடுமுறை நாட்கள் கிடைத்தும் இதுவரை இந்த மூன்று வருடங்களில் இந்த பக்கம் வந்திருக்கவில்லை. விவேக் மட்டும் நான்கு முறை வெளிநாடு சென்றிருக்கிறான் தங்கையை காண.

“என்னனு டி இத்தனை நாள் அங்க இருந்த? அவ்வளவு திமிரா போச்சா உனக்கு?” கலையரசிக்கு கோபம் தாண்டிய ஆதங்கம்.

“சும்மா இருக்க மாட்டியா கலை. வந்த பொண்ணை வானு சொல்லாம என்ன இது?” என்ற சந்தானம்,

“நீ வா டா ம்மா!” என்று அழைக்க, தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள்.

வெளியில் இருந்த இன்னொரு பெட்டியை கொண்டு வந்து வைத்த அர்ஜுன், “கிளம்புறேன் மாமா! ஆபீஸ்ல பாக்கலாம்!” என்று சொல்ல,

“இரு டா காபி சாப்பிட்டு போகலாம். நான் போய் அனுவை எழுப்புறேன்!” விவேக் சொல்ல,

“இருக்கட்டும் மாமா! தீபக் வெயிட் பண்ணுவான். நான் போனா தான் அவன் கிளம்புவான்!” என்று சொல்ல,

“அவன் ஏன் டா என் கண்ணுல மாட்டாம சுத்துறான்?” என்று விவேக் கேட்க,

“மாட்டினா நீங்க சும்மா விடுவிங்களா என்ன?” என்றான் அர்ஜுன் சிரித்தபடி.

“இரேன் பா! பால் காய்ச்சுட்டேன்!” என்றார் கலையரசி கூட.

“பரவால்ல அத்த!” என்றவன் விஜயலக்ஷ்மியை தவிர்த்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

செல்பவனை வலியோடு காண தான் முடிந்ததை தவிர்த்து பெரியவர்களால் என்ன செய்திட முடியும்.

“நீ ப்ரெஷ் ஆகிட்டு வா விஜி! நான் அனுவை கூட்டிட்டு வர்றேன்!” என்று விவேக் அனைவரையும் கண்டு சொல்ல,

“சரி ண்ணா! ம்மா! எனக்கொரு காபி… அப்புறமா சமாதானம்!” என்று சொல்லி சென்றாள் விஜயலக்ஷ்மி.

யாரிடம் கேட்பது? அந்த ஒருநாளுக்கு பின் இத்தனை நாட்களில் அவனைப் பற்றி இவளிடம் யாரேனும் ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிஇராத நிலையில், தானும் இருந்த விரக்தியில் கிளம்பி சென்றிருக்க இப்பொழுது முள்ளாய் குத்தியது அர்ஜுனின் இந்த பாராமுகம்.

சட்டென மூளையில் மின்னல் உதிக்க, அதிர்ந்தவள் ‘கல்யாணம் ஆகிடுச்சா?’ என்ற எண்ணம் ஒருவளை நினைத்து மகிழ்ச்சி கொண்டாலும் அதற்கும் மேல் துக்கம் பொங்கி வந்தது அர்ஜுனை நினைத்து.

திருமணமே முடிந்திருக்கட்டுமே! சாதாரணமாய் இரண்டு வார்த்தை அவன் பேசி இருக்கலாம் தானே என்றும் நினைக்க, இத்தனை நாட்களில் அவன் திருமணம் பற்றி யாரும் கூறவில்லை என்பதோடு அந்த ஒருத்தியும் தனக்கு அழைத்து சொல்லவில்லையே என நினைக்கையில் மனம் இன்னும் துவண்டது.

பல எண்ணங்கள் அலைஅலையாய் மனதுள் எழ, நீண்ட நேரம் அமர்ந்திருந்தவள் கதவைத் தட்டும் அனன்யாவின் சத்தத்தில் கலைந்தாள்.

“ஏய் இருக்கியா இல்லையா டி!” என்ற உரிமையான குரலில் மனம் கொஞ்சம் இதமாக, முகம் கழுவியதில் ஈரமாய் இருந்த முகத்தை டவலில் துடைத்தபடி சென்று கதவை திறந்தாள் புன்னகை கலந்த முகத்தைக் காட்டி.

“அண்ணி!” என்று அழைத்து இரு கைகளையும் விஜயலக்ஷ்மி விரிக்க, முறைத்தபடி நின்றாள் அனன்யா.

“என் செல்லம்ல!” என்றபடி கைகளை விரித்துக் கொண்டு அனன்யா அருகே விஜயலக்ஷ்மி செல்ல,

“போ டி!” என்றவள் விறுவிறுவென்று ஹாலை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டாள்.

“அண்ணி!” என பின்னோடு சென்று அணைத்துக் கொண்டாள் விஜயலக்ஷ்மி.

“யார் நீ? எதுக்காக என் வீட்டுக்கு வந்திருக்க? திரும்ப எப்ப கிளம்புவ?” அனன்யா வரிசையாய் கேட்க,

“நான் அனன்யா பேபியோட லவ்! அவங்களுக்காக தான் வந்தேன். அவங்க கூடவே தான் இருக்க போறேன்!” என்றாள் அனன்யா வயிற்றை கிள்ளி முத்தம் கொடுத்து.

“நம்பமாட்டேன்! உன்னை மட்டும் நம்பவே மாட்டேன்!” என்ற அனன்யா சொல்லில் அமைதியாய் அவள் தோள்களில் விஜயலக்ஷ்மி சாய, தான் கூறிய வார்த்தைகள் அவளுக்கு எவ்வாறு சென்றடைந்திருக்கும் என சில நொடிகளுக்கு பின்பே புரிந்து வருத்தம் கொடுத்தது அனன்யாவிற்கு.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!