Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 6

அத்தியாயம் 6

“அண்ணி! பிரணித்தாக்கு இன்னும் கல்யாணம் ஆகல?” அதிர்ச்சியை மறைக்காமல் முகத்தில் காட்டி விஜயலக்ஷ்மி கேட்க,



Advertisement

“ப்ரணிக்கா? இல்லையே! யார் சொன்னா?” என்றாள் அனன்யா.

“இல்ல அண்ணி! அன்னைக்கு….” என்றவளுக்கு எப்படி என்னவென்று கூறிட என தெரியவில்லை.

Advertisement

Advertisement

‘தானாய் நினைத்து குழம்பிவிட்டோமோ!’ என்று தனக்குள் கூறிக் கொண்டவளுக்கு இன்னும் அதிர்ச்சி தான்.

அன்று அவ்வளவு பேசினாளே அவள். ‘அர்ஜுன் மாமாவை நான் ரொம்ப லவ் பண்றேன்! அவங்ககிட்ட சொல்லலாம்னு நான் நினச்ச நேரம் பார்த்து…’ என்று ஏங்கி ஏங்கி அழுதிருந்தாளே ப்ரணித்தா.

Advertisement

“ஏய்! உன்கிட்ட தான் டி!” என்று விஜயலக்ஷ்மி தோள்களில் ஒரு அடி விழ,

“ஹான்! சொல்லுங்க அண்ணி!” என்றவள் முகம் தெளிவில்லாமல் இருந்தது.

“கனவு எதுவும் கண்டுட்டு முழிக்குறியானு கேட்டேன்!” என்றாள் அனன்யா.

அப்பொழுதும் பதில் கூறாமல் என்னவோ சிந்தனையிலேயே விஜயலக்ஷ்மி இருக்க,

“விஜி! என்னாச்சு?” என்றாள் அனன்யாவும் அவள் முக மாற்றத்தை கவனித்து.

“ம்ம்! இப்படியே கொஞ்சிட்டு இரு! அவளும் வீம்புக்கு நிக்கட்டும்!” என்று வந்திருந்தார் கலையரசியும்.

“விவேக் சத்தம் கேட்டுச்சே!” என்று கலையரசி கேட்க,

“இப்ப தான் மேல போனாங்க த்த! வருவாங்க!” என்ற அனன்யா விஜயலக்ஷ்மியின் முகத்தை தான் பார்த்திருந்தாள் கவனித்து.

“இந்த மாப்பிள்ளை போட்டோலாம் இப்படி தூக்கிப் போடவா வாங்கி வச்சிருக்கு? இப்படி கலைச்சுப் போட்டது யாரு?” என்று எடுத்த கலையரசி,

“இதையெல்லாம் பாரு!” என மகளிடம் நீட்டினார்.

அந்த பக்கமே திரும்பவில்லை அவள். மனமெங்கும் ஒரு நடுக்கம். தான் தவறு செய்துவிட்டோமோ என்ற பயம். இத்தனை நாள் இல்லாமல் ஒரு தவிப்பு என மனம் ஒருநிலையில் இல்லை விஜயலக்ஷ்மியிடம்.

“அத்தை! இப்ப தான் வந்திருக்கா….” அனன்யா பேச வர,

“நீ பேசாம இரு! நீங்க எல்லாம் குடுக்குற இடம் தான் இவ இப்படி இருக்கா!” என்ற கலையரசி,

“இதை வாங்குறியா இல்லையா அனு!” என மிரட்ட,

“என்ன சத்தம் கலை!” என வந்த சந்தானத்திற்கு பார்த்ததும் புரிந்துவிட்டது.

“எவ்வளவு சொல்றது எப்பவும் அவளை மிரட்டிட்டே இருக்காதன்னு. இப்ப உடனே அவ பாத்தா தான் ஆச்சா? ரெண்டு நாள் கழிச்சு தான பார்த்துட்டு சொல்றோம்னு சொல்லிருக்க! விடு அவளே பார்த்துட்டு சொல்லட்டும்!” என்றார் சந்தானம்.

“உங்களுக்குமா என் ஆதங்கம் புரியல? ஊருக்கு மத்தில நம்மள நிக்க வச்சுட்டு போனா! எல்லாம் மறந்துட்டீங்களா? இப்ப வந்தவளுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சா தான் அவங்க முகத்துல நாம முழிக்கவாவது முடியும்! ஏற்கனவே தீராத பாவமா கயலு….” என்று சொல்ல வந்த கலையரசியை,

“அத்தை!” என்று சத்தமாய் அழைத்து நிறுத்தி இருந்தாள் அனன்யா.

அன்னை பேச பேசவே அசையாமல் நின்ற விஜயலக்ஷ்மி அவரின் கோபம் கவலை எல்லாம் புரிந்தாலும் பேசாமல் நின்றவள் அண்ணியின் சத்தத்திலும் இறுதியாய் அன்னை கூறிய பெயரிலும் என கண்கள் சுருங்க திரும்பி இருந்தாள்.

“ம்மா!” என்று முகத்தை துடைத்துக் கொண்டு வந்த விவேக் அனைவரும் அமைதியாய் நிற்கக் கண்டு, என்ன என மனைவியிடம் தலையசைக்க, கலையரசி கைகளில் இருந்த புகைப்படத்தைக் கண் காட்டினாள் அனன்யா.

“என்ன பேசிட்டு இருக்க கலை நீ? தெரிஞ்சு தான் பேசுறியா? கல்யாணம் பண்ணி வச்சுட்டா உன் கடமை முடிஞ்சிருமா? பேசுறவனுக்கு பயந்து பொண்ணை தள்ளிவிட பாக்குற நீ?” என்று சந்தானமும் சத்தமிட, ஏற்கனவே தான் கோபத்தில் கூறிவிட வந்த செய்தியில் அதிர்ந்தந்திருந்த கலையரசிக்கு கணவனின் கோபத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

“இல்லங்க! இவ இப்பவும் இப்படி…” என்று கலையரசி சொல்ல வர,

“பேசாத நீ!” என்ற சந்தானம்,

“அவ ஒண்ணும் சின்ன பொண்ணில்ல! புரியாத வயசும் இல்ல. கொஞ்சம் நேரம் குடு! அவளே சொல்லட்டும்!” என்று சொல்ல,

“என்னம்மா?” என்றான் அன்னையிடம் விவேக்.

“இல்ல விவேக்! நான் ஏதோ தெரியாம…” என்ற கலையரசி கணவனையும் மருமகளையும் என கவலையாய் பார்க்க,

“சரி விடுங்க! என்ன இப்ப? கல்யாணம் தானே? எல்லாம் நல்லபடியாவே நடக்கும். விஜி! நீ போ!” என்று அனன்யா கூற, தயங்கி நின்ற விஜயலக்ஷ்மிக்கு கயல் என்று அன்னை கூற வந்ததும் தான் அவரின் நியாபகமும் வந்ததே!

அன்னை கூற வந்ததும் அண்ணி சத்தமிட்டதும் என புரிந்தாலுமே இது கேட்கும் நேரமில்லையே! என மெதுவாய் நகர்ந்து அறைக்கு சென்றுவிட்டாள்.

“அம்மாடி!” என அனன்யாவிடம் கலையரசி வர,

“என்னத்த நீங்க! இதை இப்படி நினச்சுப் பேசாதீங்கனு எவ்வளவோ சொல்லிட்டேன். நீங்க ஏன் இப்படி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்குறீங்க?” என்ற அனன்யா,

“விஜிக்கு சீக்கிரமே நல்ல பையனா வருவான். நீங்க வேணா பாருங்க!” என்றவள் ஆறுதலாய் மாமியாரின் தோள்களைக் கட்டிக் கொண்டு விட்டு கலங்கி இருந்த கண்களைக் காட்டாமல் திரும்பி சென்றாள்.

அன்னையின் கலங்கிய முகம் மனைவியின் கலக்கத்தை மறைக்கும் முகம் என புரிந்த விவேக்கிற்கு கூறாமலே சில விஷயங்கள் புரிந்தாலும் மௌனமாய் நிற்க தான் முடிந்தது.

அறைக்கு வந்த விஜயலக்ஷ்மிக்கு அழ பல காரணங்கள் இருந்த போதும் மனம் அதிகம் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள, அழுகையை தாண்டி மனம் பல கேள்விகளுக்கு விடை கேட்டு நின்றது.

‘ஏன் கயல் அத்தை வீட்டுக்கு வரவே இல்லை?’ என நினைக்கும் நேரம்,

‘என்மேல கோவமா இருக்காங்களா? அதான் வரலையா?’ என்று தோன்ற, கூடவே, தான் வந்த இத்தனை நாட்களில் அண்ணியும் கயல் அத்தையை தேடி செல்லவில்லையே! என்னால் குடும்பத்திற்குள் பிரச்சனையா என கலங்கிவிட்டாள்.

கூடவே அந்த ப்ரணித்தாவின் நியாபகமும். ‘இதோ இப்போவே என் காதலை மாமாகிட்ட சொல்றேன்!’ என்று தன்னிடம் சொல்லிவிட்டு சென்ற பிரணித்தா இன்னமும் அவனை திருமணம் செய்யவில்லையா என்று அதிர்ச்சி ஒருபுறம் கூடவே சிறு அமைதி மனதுக்குள் உருவானதையும் மறுக்க முடியவில்லை.

அவனைப் பிடித்து தானே அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் கூறியது? விட்டுக் கொடுக்கும் எண்ணம் துளியும் அப்பொழுது இல்லையே!

‘மாமாக்கும் என்னை பிடிக்கும்.. நான் சொன்னா கண்டிப்பா ஏத்துப்பாங்க. அந்த நம்பிக்கைல தான் இருந்தேன். அவங்க அம்மாவோட இங்க வீட்டுல உன் அண்ணா பேச்சையும் மீற முடியாம தான் அவங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதே!’ ப்ரணித்தா கூறவும் விஜயலக்ஷ்மிக்கு அந்த நிமிடம் அர்ஜுனின் கேள்வி தான் நியாபகம் வந்தது.

‘ஸீ! உன்னோட விருப்பம் மட்டும் தான் இங்க ரொம்ப முக்கியம்!’ அவ்வளவு தெளிவாய் அர்ஜுன் விஜயலக்ஷ்மியிடம் கேட்ட பொழுது கூட அவன் தன் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறான் என முதலில் அவள் நினைத்திருக்க, தன்னால் மறுக்க முடியாது நீ மறுத்து விடு என சொல்ல முடியாமல் அர்ஜுன் கேட்டதாய் தோன்றியது ப்ரணித்தா கூறியதை கேட்டபின்பு.

பெற்றவர்கள் என யாருமில்லை. தனியாய் தன் தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் ஒரு பெண் ப்ரணித்தா. அவளுக்கென இருக்கும் ஒரே ஆசை என அர்ஜுனை அவள் கேட்ட பொழுது அந்த நிமிடம் வேறு எதுவும் பெரிதாய் தெரியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.

தனக்கென பெற்றவர்கள் பார்த்து தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை தான் அர்ஜுன் என்று விஜயலக்ஷ்மி சம்மதித்திருக்க, ப்ரணித்தா ஆசைப்பட்ட போதும் அவள் கேட்க கூட யாருமில்லாமல் தானே தன்னிடம் வந்து கேட்கிறாள் என நினைத்து தான் அவளுக்காக வருந்தி தான் விட்டுக் கொடுத்தது.

அப்படிப் பாவப்படும் அளவுக்கு ப்ரணித்தா பேசி இருந்ததை இன்னமுமே விஜயலக்ஷ்மி அறியவில்லை. பேசி முடித்து ஒரு வாரமும் அமைதியாய் இருந்து சரியாய் நிச்சயதார்த்தம் அன்று அவள் ஏன் தன்னிடம் வந்து புலம்ப வேண்டும் என்றும் நினைக்கவில்லை விஜயலக்ஷ்மி.

இப்பொழுது தவிக்கும் மனமும் அதில் துடிக்கும் ஓசைகளும் என அவனுக்காக அவன் பார்வை தவிர்ப்பிற்காக மனம் என்னவோ அதற்றியது.

இத்தனை வருடங்களாக ஏன் இன்னும் அவன் திருமணம் நடைபெறவில்லை? ப்ரணித்தா பேசவில்லையா? பேசி அவன் எர்க்கவில்லையா என யோசனைகள் மாறி,

விமான நிலையத்தில் அவனைப் பார்த்ததும் அதிர்வு கொண்டாலும் அவன் தன்னை தேடி வந்திருக்கிறானோ என மனம் மகிழ்ந்ததும், அந்த நிம்மதி எல்லாம் அவன் தன்னிடம் பேசாமல் சென்றதிலேயே நின்றுவிட்டதும் என தன்னை நினைத்தே இன்னும் குழப்பம்.

அடுத்தடுத்த அவன் பாராமுகம் கூறியது அவன் தன்னை தவிர்க்கிறான் என்று. திருமணம் முடிந்து அவன் வாழ்வில் அவன் தெளிவாய் இருக்கிறான் என்றல்லவா நினைத்திருந்தாள். நினைக்க நினைக்க முழுதாய் குழம்பியவள் தலையை உலுக்கிக் கொண்டவள் அதற்கு மேலும் அமைதி காக்க முடியாமல் அனன்யாவிடம் பேசிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

இவ்வளவும் நீ ஏன் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அவனை விரும்புகிறேன் என்பதை தவிர்த்து வேறு பதில் இல்லை அவள் மனதிற்கு.

“நிஜமாவா? டேய் உனக்கு கல்யாணமா?” என்று மகிழ்ச்சியை மறைத்து கிண்டலாய் கேட்டான் அர்ஜுன் தீபக்கிடம்.

“ஏன் டா? எனக்கெல்லாம் கல்யாணம் பண்ண கூடாதா? நாங்களும் அழகு தான் மேன்!” என்ற தீபக், அலைபேசியில் தீபக் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்க அதைப் பறித்தான்.

“சும்மாவே பேசுவ! இனி உன் ஆட்டம் அதிகமா இருக்குமே!” என்ற அர்ஜுன்,

“ஆனாலும் உனக்கு கல்யாணம்?” என்று சிரிக்க,

“சும்மா இர்றா! எவனோ எனக்குன்னு பொண்ணை பெத்து வளத்து வச்சிருக்கான். உனக்கு பொறுக்கலையா?”

“அதை தான் டா சொல்றேன்! மாப்பிள்ளை பாக்குறவன் மாப்பிள்ளையை விசாரிக்கணுமா இல்லையா?” 

“அதெல்லாம் விசாரிச்சிருப்பாங்க.. உனக்கென்ன கவலை?”

“டேய்! உன் கிளோஸ் பிரண்ட் நான்! என்கிட்ட கேட்காம அப்படி யார்கிட்ட விசாரிச்சு உன்னை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணினாங்க?”

“ஏன் டா! இப்போ நான் கல்யாணம் பண்ணனுமா வேண்டாமா? நானே விவேக் சார் கண்ல மாட்டாம சுத்திட்டு இருக்கேன்! ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துட்டா போதும் எனக்கு. அந்த பொண்ணுக்கு பாவம் பாத்தாவது என்னை சும்மா விடுவார்ல!” என்றதும் அர்ஜுன் இன்னும் சத்தமாய் சிரிக்க, முதலில் முறைத்த தீபக் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மாறினான்.

“ரொம்ப நாள் ஆச்சுல்ல அர்ஜுன் நீ இப்படி சிரிச்சு?” தீபக் கேட்க, அர்ஜுன் புன்னகை மென்னகையாய் மாறியது.

“என்ன டா அப்படி பாக்குற?” என்ற அர்ஜுன் தீபக் பார்க்கையிலேயே வாட்சைக் கழட்டி வைத்துவிட்டு முகம் கழுவ சென்றான்.

“எப்ப கல்யாணம்? ஊர்ல தானா?” என்ற அர்ஜுன்,

“ஊர்லன்னா உனக்காக நான் ரெண்டு நாள் லீவ் போடணுமா டா?” என கிண்டலை தொடர,

“நீ எப்ப டா கல்யாணம் பண்ண போற?” என்ற தீபக் கேள்வியில் அமைதியாகினான் அர்ஜுன்.

“இப்படி பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கே! அனன்யாக்கா பாவமில்லையா? அவங்களுக்காகவாது சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ டா!” என்று சொல்ல,

“பார்றா! குடும்பஸ்தன் ஆகப் போறன்னதும் அட்வைஸ் எல்லாம் வருது! ஆனாலும் ஓவர்!” என்று சிரித்தே தீபக்கை பேச விடாமல் செய்தான்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!