மாமியாரும் மருமகளும் விடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதே அரிதாகி போன நிலையில், விடிந்தும் விடியாத நேரத்தில் ஒன்றாக கிளம்ப ஆயத்தமாகும் வகையில் அப்படி என்ன விசேஷம் எனக் கேட்டால்,
பூரணி, ராதிகா இருவரும் சலிப்பான குரலில், “நிதினுக்கு பெண் பார்க்க போகிறோம்” என்பர்.
இச்செய்தியை வெளியாட்கள் யாரும் கேட்கும் போது, நெஞ்சில் கை வைத்துக்கொள்ள போவது உறுதி.
காரணம், பூரணி, நிதினின் மனைவி ஆவள். அவள், அவனுக்கு மனைவி ஆகி இரண்டாண்டுகள் ஆகிறது.
இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடங்கி ஆறு மாத காலம் ஆகிறது.
இன்னும் சில மாதங்களில் இருவரும் முழுதாக பிரிய போகின்றனர்.
அதனை கொண்டு நிதினுக்கு பெண் பார்க்க தொடங்கியிருந்தார், ராதிகா.
அதற்குள் நாலைந்து இடங்கள் பார்த்தாயிற்று!
ஏனோ எதுவும் அமையவில்லை. அதனாலே இம்முறை இருவருக்கும் சலிப்பு தட்டியிருக்க, ஆயினும் சளைக்காமல் சென்னையை அடுத்து இருக்கும் சிற்றூர் ஒன்றில் பெண் பார்க்க செல்ல வேண்டி தான் உறங்கியும் உறங்காமலும் இந்த கிளம்புதல் படலம்.
அடுத்த சில மணி நேரங்களில் நிதினின் மண்டையை உருட்ட அவன் மனைவியும், அன்னையும் பெண் வீட்டில் காபி அருந்தியபடி அமர்ந்திருக்க, பெண் வீட்டாரோ, பூரணியை கண்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
“நீங்க செண்பகவல்லி நாடகத்துல வர அனிதா தான…” என்ற பெண்ணோ,
பாதி சந்தேகம் மீதி வியப்பு என வாயெல்லாம் பல்லாக நிற்க, ஏனையோரும் அப்படியே காணப்பட்டனர்.
பூரணியோ வெகு சாதாரணமாக, “ஆமாங்க” என்கவே, ராதிகா “ம்க்கும்” என மனதிற்குள் நொடித்துக் கொண்டார்.
இதற்கு மேல் நாம் அமைதியாக இருக்க கூடாதென நினைத்த ராதிகாவோ, தன் பாட்டுக்கு நிதினின் பெருமை பொட்டலங்களை பிரித்து வைத்து கொண்டிருக்க, பூரணியோ இதழ் கடையில் உறைந்து நிற்கும் சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.
ஆனால் அங்கிருந்தவர்களோ, ராதிகாவை விட பூரணி பேசமாட்டாளா என்றே காத்திருந்தனர்.
*******
“அண்ணா…. நீ நாளைக்கு வரப்போறியா இல்லையா?
ஏற்கனவே உங்க வைப் வரமுடியாது ஷூட்டிங் போகணும் சொல்லியாச்சு… நீயும் வரலைனா, இங்க என்னால எல்லார்கிட்டடையும் பதில் சொல்லிட்டிருக்க முடியாது” வழக்கம் போல படபடவென பேசிய நிதினின் தங்கை நிவேதா,
“அண்ணி இங்க இல்லனா பரவால்ல… எப்படியும் எல்லாருக்கும் தெரிய தானே போகுதுனு நானே சொல்லிடுவேன்.
அவங்க இன்னும் இங்க இருக்கப்போய் தான் இத்தன சங்கடம்” என்றதும் அழைப்பு துண்டிக்க படும் சப்தம் கேக்க,
“ம்க்கும்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.
அடுத்த கல்யாணத்துக்கே பொண்ணு ரெடி ஆகிட்டாம்… இன்னும் நமக்கு படம் காட்றாங்க”
நிவேதா புலம்பியபடி அலைபேசியை தூக்கி வீச, முதலில் தரையில் விழ போகிறோமென வீல் என அலற நினைத்த அலைபேசியோ, விழுந்த இடம் மெத்தையென உணர்ந்த நிம்மதியில் சின்னதாக மயக்கம் மட்டும் போட்டது.
*******
“நிதின்… யார் இந்த பொண்ணு?” என்ற கேள்வியுடன் நிறுத்திய ராதிகாவின் பார்வை, ஒரு முறை பூரணியின் சலனமற்ற முகத்தை வெறித்து விட்டு புதியவளிடம் வந்து நிற்க,
“இவங்க ரேணு… ” என்று தொடங்கி அவளை அழைத்து வந்ததின் காரணத்தை கூறி முடித்த போது,
பூரணி, “ஹ்ம்ம் ஆல் செட்டில்ட்… என்ன ஒன்னு இத கொஞ்சம் முன்னாடி செய்திருக்கலாம்ல… எத்தனை வீட்டுக்கு…” என சலிப்புற்றவள்,
“உங்களுக்கு வேலை மிச்சம்” என்று ராதிகாவிடம் கூறி நிதினிடம் திரும்பினாள்.
அவனும் அவளையே பார்த்திருக்க, ” நான் வீட்ல சொல்லிட்டேன். கொஞ்சம் கோவமா தான் இருக்காங்க… கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவாங்க… என்னை நெனச்சு கவலை படாதீங்க” என்றவள், மீதமிருந்த தனது கடைசி பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.
“நிதின்…” என்ற ராதிகாவின் பரிதவிப்பை கண்டு கொள்ளாமல்,
“நீங்க கொஞ்ச நாள் மட்டும் அந்த கார்னர் ரூம் யூஸ் பண்ணிக்கோங்க ரேணு… அப்புறம் இந்த ரூமுக்கு ஷிபிட் ஆகிக்கலாம்” என்றவனின் வார்த்தைகள் கேபிற்கு காத்திருந்த பூரணியின் காதில் விழ, கண்களில் இருந்தும் எதுவோ விழுந்தது.