வரும் வரன்கள் எல்லாம் அவளுடைய குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி. அவளது தந்தையின் பொறுப்பற்ற தன்மையைக் காரணம் காட்டி, ஜாதகத்தைக் காட்டி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தால் அவள் என்ன செய்வாள்?
என்ன தான் அவளே மனதை தேற்றிக் கொண்டாலும் சில நேரம் தோள் சாய ஒரு துணையைத் தேடத் தான் செய்வாள். அது அப்பாவாக இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் தான் கிருஷ்ணன் மேல் கோபமாக உருமாறும். அவரை தந்தை என்று அழைக்கவே மாட்டாள். அவரும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார். அவருக்கு குடிப்பதற்கு பணம் வேண்டும். மற்ற படி குடும்ப கஷ்டம், பிள்ளைகள் பற்றி எல்லாம் அவருக்கு கவலை ஏது?
ஒரு நல்ல தந்தையாக அவர் இருந்திருந்தால் இந்நேரம் அவளை பஸ் ஏற்று விட்டுச் சென்றிருப்பார். ஆனால் தனக்கு எப்போதுமே அவள் மட்டும் தான் துணை.
எதை எதையோ எண்ணிய படியே அமர்ந்திருந்தவள் கண்டக்டர் சத்தத்தில் தான் நடப்புக்கு வந்து மணியைப் பார்த்தாள். ஒன்பது மணி என்பதால் ஒரு கேண்டீனில் பஸ் நின்றது. “சாப்பிடுறவாங்க சாப்பிடலாம், கால் மணி நேரம் பஸ் நிக்கும்”, என்று கண்டக்டர் சொல்ல சிலர் இறங்கி சாப்பிடச் சென்றார்கள். சிலர் பஸ்ஸில் அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த உணவுகளை பேசிய படியே உண்டார்கள்.
வினோதினி அருகில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி பின் சீட்டுக்கு சென்று அவருடைய உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க வினோதினியும் தேவி கொடுத்த சப்பாத்தியையும் முட்டைத் தொக்கையும் உண்ண ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்தவள் அதை அப்படியே மூடி வைத்து விட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து அங்கே யாரும் இல்லை என்றதும் கை கழுவி விட்டு அமர்ந்தாள்.
பின் வாட்டர் பாட்டிலில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மட்டும் தண்ணீர் அருந்தினாள். அவளுக்கு தனியே பயணம் செய்யும் போது பேகை வைத்து விட்டு பஸ்ஸில் இருந்து இறங்குவது பிடிக்காது.
அதனால் அதிக தண்ணீர் குடித்தால் யூரின் வரும் என்பதால் கொஞ்சமாக குடித்தாள்.
பின் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் மணியைப் பார்த்து விட்டு தேவிக்கு அழைத்து சிறிது நேரம் பேசினாள்.
“மாப்பிள்ளை உன்னை கூப்பிட வருவார் டி. அங்க கண்டு பிடிக்க முடியலைன்னா அவர் நம்பருக்கு போனைப் போடு”, என்று சொல்லி வைத்தாள் தேவி.
“அவன் கூப்பிட வரலைன்னு யார் அழுதா? எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சோ பஸ் பிடிச்சோ போக தெரியாதா? அவன் கூட எல்லாம் வண்டில போகனுமா? கருமம் கருமம்”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் பஸ் கிளம்பியது. இரவு நேரத் தென்றல் இதமாக அவள் முகத்தை வருடிச் சென்றாலும் விஜியின் வீட்டுக்குச் செல்வதை நினைத்து அவள் மனதில் பக் பக் என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூத்துக்குடியில் இறங்கினாள் வினோதினி. முதல் தடவை இந்த ஊருக்கு வந்திருப்பதால் அவள் கண்கள் சுற்றி முற்றி அலசியது.
“இந்த ரவி எங்க இருக்கான்னு தெரியலையே? இவனுக்கு வேற போன் போடணுமா?”, என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டவள் அவனை அழைத்தாள்.
“சொல்லுங்க மதினி பஸ் ஸ்டாண்ட் வந்துட்டீங்களா?”, என்று கேட்டான் ரவி.
ரவிக்கும் கிட்ட தட்ட வினோதினி வயது தான். அதனால் அவன் மதினி என்று அழைத்தது அவளுக்கு எரிச்சல் வந்தது. அவன் அழைக்கும் ‘மதினி’ என்ற சொல் மரியாதைக்குரியது தான். அவன் வார்த்தையில் இருக்கும் மரியாதை அவன் மனதில் இருக்கிறதா என்று தெரியாதே.
“ஆன் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?”, என்று வேண்டா வெறுப்பாக கேட்டாள்.
“நான் எங்க ஊர்ல தான் இருக்கேன் மதினி. நல்லா தூங்கிட்டேன். உங்க தங்கச்சி கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விட்டுருந்தா உங்களை தூத்துக்குடிக்கே கூப்பிட வந்துருப்பேன். இப்ப கிளம்பினா லேட்டா ஆகிரும். நீங்க நான் சொல்ற பஸ்ல ஏறி வந்துறீங்களா?”, என்று கேட்டான்.
“அப்பாடி சந்தோஷம், இவன் கூட வண்டில போக தேவையில்ளை”, என்று நிம்மதியாக மூச்சு விட்ட வினோதினி அவனை சீக்கிரம் எழுப்பி விடாமல் இருந்ததற்காக முதல் முறையாக தங்கைக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டாள்.
“சரி பஸ் சொல்லுங்க, நானே வந்துறேன்”, என்று சொன்னாள்.
“நீங்க இறங்கின இடத்துல இருந்து கொஞ்சம் கிழக்க பாத்து நடந்தீங்கன்னா….”, என்று ஆரம்பித்து பஸ் பற்றிச் சொன்னான்.
“ஆன் சரி”, என்று சொல்லி விட்டு குதூகலமாக போனை வைத்தவள் அவன் சொன்ன பஸ்ஸை தேடினாள்.
அங்கே மூன்று பஸ்கள் அந்த நேரம் இருக்க எது முதலில் கிளம்பும் என்று கேட்டு அதில் ஏறி அமர்ந்தாள்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பயணம் செய்தவள் ”இங்க தான் மா நீங்க இறங்கணும்’, என்று கண்டக்டர் சொன்னதும் அங்கே இறங்கினாள்.
அவள் இறங்கியதும் எங்கிருந்தோ ஓடி வந்த ரவி வாயெல்லாம் பல்லாக “வாங்க மதினி, முதல் முறையா எங்க ஊருக்கு வந்துருக்கீங்க? வாங்க வாங்க”, என்று அன்பாக அழைத்தான்.
“இவன் நல்லவனா கெட்டவனான்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டே “எப்படி இருக்கீங்க? அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டாள்.
“எல்லாரும் நல்லா இருக்கோம், வாங்க”, என்று சொல்லி நடந்தான். அவன் பின்னே நடந்தவள் “கடவுளே இவன் கூட வண்டில போற மாதிரி நிலைமை வரக் கூடாது”, என்று வேண்டிக் கொண்டாள்.
“நாலஞ்சு வீடு தள்ளி தான். அதான் வண்டி எடுத்துட்டு வரலை. பாத்து வாங்க”, என்று சொல்லி அவள் பேகை வாங்கிக் கொண்டு முன்னே சென்றான்.
“நன்றி தெய்வமே””, என்று எண்ணிக் கொண்டு புன்சிரிப்புடன் அவன் பின்னே சென்றாள்.
முப்பிலி என்ற கிராமம் பச்சை பசேல் என அழகாக தான் இருந்தது. அதுவும் அந்த கிராமிய மனம் வீசும் காலை நேரக் காற்று அவள் முகத்தில் வந்து மோத அவள் மனதுக்கு புதிதாக ஒரு வித உற்சாகம் வந்தது.
“அட யாருப்பா இது? ஊருக்கு புதுசா இருக்கு?”, என்று ஒரு பாட்டி ரவியிடம் கேட்க “என் பொண்டாட்டியோட அக்கா பாட்டி. நம்ம புதூர்ல கூட்டுறவு பேங்க்ல தான் வேலை கிடைச்சிருக்கு. நம்ம வீட்ல தான் தங்க போறாங்க”, என்று பெருமையாக சொன்னான் ரவி.
“அப்படியா ரொம்ப சந்தோஷம்? பாத்து கூட்டிட்டு போ”, என்று சொல்ல அந்த பாட்டியைப் பார்த்து சிறு புன்னகையை சிந்தி விட்டு அங்கிருந்து சென்றாள் வினோதினி.
வீட்டுக்கு சென்றதும் “வாக்கா, எப்படி இருக்க? அம்மா அணு எல்லாம் எப்படி இருக்காங்க?”, என்று பாசமாக விஜி கேட்க வினோதினிக்கு திகைப்பாக இருந்தது.
“என்ன டா இது? புருசனும் பொண்டாட்டியும் இப்படி பாசத்தை பொழியுறாங்க. இவங்க சென்னைக்கு நம்ம வீட்டுக்கு வரும் போது இப்படி எல்லாம் பேச மாட்டாங்களே?”, என்று எண்ணிய படியே அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க? குழந்தை எப்படி இருக்கான்? எங்க?”, என்று கேட்டாள் வினோதினி.
“தூங்கிட்டு இருக்கான்?”
‘உன் மாமனார் மாமியார் எல்லாம் எங்க?”
“அவங்க பக்கத்து தெருவுல பழைய வீட்ல இருக்காங்க. வரியா பாக்க போகலாமா?”
“நான் ஒன்பது மணிக்கு பேங்க் போகணும் விஜி. மணி இப்பவே ஏழரை ஆகிருச்சு. குளிச்சு கிளம்பனும். சாயங்காலம் பாக்க போகலாமா?”, என்று தங்கையிடம் கேட்ட வினோதினி ரவி புறம் திரும்பி “தப்பா எடுத்துக்காதீங்க”, என்று சொன்னாள்.
“சே சே முதல் நாளே வேலைக்கு லேட்டாவா போவாங்க. அம்மா அப்பாவை சாயங்காலம் பாத்துக்கலாம்”, என்று பெருந்தன்மையாக சொன்ன ரவி மனைவி புறம் திரும்பி “அவங்களுக்கு ரூமைக் காட்டு”, என்று சொன்னான்.
“நீ வா கா”, என்று சொன்ன விஜி அந்த வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே ஒரு அறை அட்டாச் பாத்ரூமுடன் இருக்க “அப்பாடி”, என்று இருந்தது வினோதினிக்கு.
“நீ குளிச்சு ரெடி ஆகுக்கா. நான் உனக்கு டிபன் செய்றேன்”, என்று சொல்லி விட்டு விஜி கீழே செல்ல அந்த அறையை இரண்டு முறை சுற்றி வந்தவள் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து ஒரு காட்டன் புடவை அணிந்து தயாராகி கீழே வந்தாள். அங்கே விஜியின் மூன்று வயது மகன் அவளைக் கண்டதும் வினும்மா என்று சொல்லி அவள் அருகே ஓடி வந்தான்.
“குட்டித் தங்கம் எழுந்துட்டீங்களா?”, என்று சொல்லிய படி அவனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டவள் “அதோ அந்த கவர்ல உனக்கு பிடிச்சது எல்லாம் இருக்கு. சாப்பிடு சரியா? நான் சாயங்காலம் வந்து உன்னை கொஞ்சுறேன். பெரியம்மாக்கு லேட் ஆச்சு டா”, என்று சொன்னாள்.
“சரி வினும்மா”, என்றவன் அந்த கவரில் மூழ்கி விட “அக்கா சாப்பிட வா”, என்று அழைத்த விஜி ஒரு தட்டில் மூன்று இட்லியை வைத்து இரண்டு வகை சட்னியை வைத்துக் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் விஜி”, என்று உண்மையான அன்புடன் சொல்லி விட்டு அதைச் சாப்பிட்ட வினோந்தினி ரவியிடம் “பேங்க்க்கு எப்படி போகணும்?”, என்று கேட்டாள்.
“இங்க பக்கத்துல தான். எப்படிப் போகணும்னு சொல்றேன். என் தங்கச்சியோட வண்டி இருக்கு. அவ ஹாஸ்டல்ல இருக்குறதுனால அதை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க”, என்று சொல்லி சாவியைக் கொடுத்தான். கூடவே பேங்க்க்கு எப்படி போக வேண்டும் என்று வழியும் சொன்னான்.
“தேங்க்ஸ் ரவி. நான் கிளம்புறேன். வரேன் விஜி. ரிஷி குட்டி வரேன்”, என்று மூவரிடமும் சொல்லி விட்டு அந்த வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
கல்லூரியில் படிக்கும் போது அவளது தோழி தான் அவளுக்கு வண்டி ஒட்டச் சொல்லிக் கொடுத்தது. அது இப்போது உபயோகமாக இருந்தது.
போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்க அங்கே நின்று வேண்டியவள் மீண்டும் வண்டியை எடுத்தாள்.
சிறிது தூரம் சென்று கொண்டிருக்க வயல் வெளிகள் எல்லாம் பசுமையாக இருந்தது. அதைப் பார்த்து கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அதை எல்லாம் பார்த்த படியே சென்று கொண்டிருந்தவளின் கண்கள் திடீரென்று கூர்மையானது.
காட்டுக்குள் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் ஒருவனைச் சுற்றி மூன்று ஆட்கள் அறிவாளுடன் நின்றிருந்தார்கள். நடுவில் நின்றிருந்தவனின் கண்களில் இருந்தது பயமா திகைப்பா எதுவென்று தெரிய வில்லை. அந்த சூழ்நிலையைக் கண்டு அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தி விட்டாள் வினோதினி.