இதழ் விரிந்த சிரிப்புடனேயே படித்தவன் அத்தனை மேசேஜ்களுக்கும் சேர்த்து வாய்விட்டு சிரிக்கும் ஒரேயொரு ஸ்மைலியை மட்டுமே அனுப்பி வைத்தான்.
ஸ்மைலியை பார்த்து கடுப்பான ராமோ “உன் பொண்டாட்டி இருக்காளேன்னு பார்க்கேன் இல்லை.. மவனே” முழுதாய் முடிக்காமல் விட
அதற்கு கொஞ்சமும் அசராமல் வெட்கப்படும் ஸ்மைலியை கிரி அனுப்பி வைக்க
பதிலுக்கு ராமோ செருப்பு ஸ்டிக்கரை அனுப்பி வைத்தான் பொறுமை இல்லாதவனாய்.
Advertisement
பொங்கி வரும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் கிரி.
“டேய் அண்ணா, எனக்கும் இதுக்கெல்லாம் பதில் தெரியாமல், நானே ஷாக்குல தான் இருக்கேன்”
“உங்கிட்ட கேட்காமல், இதோ பக்கத்தில் இருக்குற டிரைவர்கிட்ட கேட்கவா?”
Advertisement
“அவ்வளவு தைரியம் இருந்தா கமலிகிட்டயே கேளேன்”
Advertisement
“ஓஹோ..” என இடைவேளை விட்டவன் “முதல்ல உனக்கந்த தைரியம் இருக்காடா”
“அதெல்லாம் இருக்கு.. கூடவே மயக்கமும் இருக்கு, இப்போதைக்கு தெளியுற ஐடியாவே இல்லை. தெளிஞ்சதும் கேட்டு செல்றேன். இப்போதைக்கு எம்பொண்டாட்டிய சைட் அடிக்க விடு” என அனுப்பி வைத்தான் கிரி.
அவன் அனுப்பிய பெரிய மேசேஜை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து விட்டு “வெட்கமே இல்லைல” என ராம் கேட்டு வைக்க
Advertisement
“ப்ச், முத தடவைல்ல.. வெட்கமா தான் இருக்கு” கூடவே வெட்கப்படுகின்ற ஸ்மைலியை வேறு அனுப்பி வைத்தான்.
அதற்கு பதில் மேசேஜ் போடாத ராமோ, அமர்ந்த வாக்கில் அப்படியே முகத்தை மட்டும் திரும்பி கிரியை பார்த்து நமட்டு சிரிப்பொன்றை பறக்க விட, சிவந்த முகத்தை அண்ணனிடமிருந்து மறைக்க முடியாமல் கமலியின் மீதே பார்வை பதித்தான் கிரி.
அவன் முகத்தில் வந்து போன வெட்கத்தை பார்த்து இவனும் நமட்டு சிரிப்போடு திரும்பி கொண்டான்.
கமலியை பார்த்த வண்ணமே இருந்த கிரியின் முகத்தில் அழுத்தமாய் பதிந்தது ராமின் பார்வை. இது வரை கிரியின் முகத்தில் தெரியாத சந்தோஷமும், மகிழ்ச்சியும், பூரிப்பும் நீ் நான் என போட்டி போட்டுக்கொண்டு தாண்டவமாட, உணர்ச்சிகளால் நிரம்பி இருந்த கிரியை வெகு நேரமாய் ஆசை தீர பார்த்தபடி தான் வந்தான் ராம்.
ஆனால் கமலியோ மூடிய கார் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது போல் தோன்றினாலும், அவள் பார்வை எல்லாம் அந்த கண்ணாடியில் எதிரொலித்த கிரியின் உருவத்தின் மீது தான் என அவள் மட்டுமே அறிவாள்.
உச்சி முதல் பாதம் வரை வருடிய அவன் விழிகளும், பேச துடிக்கும் இதழ்களும், உணர்வுகளை கொட்டி கவிழ்கும் முகமும், புன்னகை எனக்கே சொந்தம் என உதடுகளை ஆக்ரமித்த சிரிப்பும் ஒன்று விடாமல் கண்ணாடி வழியாக அனைத்தையும் உள் வாங்கி கொண்டிருந்தாள் கமலி.
உள்வாங்க உள்வாங்க கமலியின் முகம் மிளகாயாய் சிவந்தது. சொல்லப்போனால் இதற்கெல்லாம் இவள் சந்தோஷம் தானே அடைய வேண்டும், ஆனால் முடியவில்லை அவளால், கோபம் தான் வந்தது.
கமலி ஏன் இந்த கோபம், கிரி இப்படி பார்க்கனும், கவனிக்கனும்னு தானே நீயும் வெயிட் லாஸ் பண்ணின? இப்போ எதுக்கு இந்த கோபம், கிரி கேட்க வேண்டியதை அவள் மனமே கேட்டது.
இதற்கு முன், கிரி தன் முன்னால் இப்படி ஒரு நாளாவது சிரித்திருக்கிறானா? உணர்வுகளை காட்டியிருக்கிறானா? விழியால் தொடர்ந்திருக்கிறானா? என எண்ணியது அவள் மனம். சட்டென அவளுள் கோபத்தை தீட்டி மூட்டியது அவள் மனம். அதை அடக்க முடியாமல் கடுங்கோபத்துடன் கண்ணாடியில் பார்த்திருந்தாள் அவன் சிரிப்பை.
காரணமே இன்றி, திருமணம் முடிந்த புதிதில் தன்னை கண்டாலே தூர ஓடுபவனும், இறுக கண் மூடி தூங்குவது போல் நடிப்பவனுமே கண் முன்னால் வந்து போனான். ஏன் இப்படி ஆறிய காயத்தை மனம் கிளறுகிறது என இவளுமே தவித்து போனாள். கோபத்தை காட்டவும் முடியாமல், கட்டி அணைத்து காதல் செய்யவும் முடியாமல் இரண்டுக்கு இடையில் தத்திளித்து கொண்டிருந்தாள் கமலி.
கமலியின் உருவத்தின் மயக்கத்தில் இருந்த கிரியும் அவளது முக மாற்றங்களை உணராது, இவளையே பார்த்தபடியே அவனும், இவனை ஏறெடுத்தும் பார்க்காமல் இவளும் என அமைதியாய் கழித்தனர் பயணத்தை.
சிறுது நேரம் தான் பயணம் செய்திருப்பார்கள், “ண்ணா.. டீ சாப்பிடனும், நல்ல கடையா பார்த்து நிப்பாட்டுங்க” கிரி டிரைவரிடம் நேரடியாக சொல்லிட, பெரிய கடையாகவே பார்த்து நிறுத்திவிட்டார்.
அழகான இயற்கை சுற்று சூழலுடன், ஒரு பக்கம் பேக்கரி, மறுபக்கம் ப்ரஸ் ஜூஸ், என்றிருந்த அந்த கடைக்குள் நுழைந்தது கார். காரை விட்டு இறங்கினர் நால்வரும்.
ராமின் அருகே சென்ற கிரி, “அவகிட்ட தனியா பேசனும், நானா கிளம்பி வர்ற வரை, என்னை கூப்பிட வராதே, போனும் அடிக்காத” என அடிக்குரலில் இவன் சொல்லிட
“சரிடா.. தம்பி.. எப்படி சாயங்காலத்துக்குள்ள வீட்டுக்கு போயிடலாமா? இல்லை இங்க இருந்து அப்படியே ஹனிமூன் டிரிப் ஏதும் பிளான் பண்ணிட்டியா?” என ராம் நக்கலாய் கேட்க “ப்போ.. ண்ணா” என வெட்கத்தோடு விலகி சென்றுவிட்டான் கிரி.
“சரி்தான்.. மந்திரிச்சு விட்டவனாட்டம் ஆயிட்டான்.. இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரி தான்” தலையசைத்தபடி ராம் டிரைவருடன் சென்றுவிட, கிரியும் கமலியும் தனி டேபிளில் எதிரெதிரே அமர்ந்தனர். ஆர்டர் கேட்டு சர்வர் வர,
சர்வர் சென்றிட, அவள் மேல் அழுத்தமாய் பார்வையை படரவிட்டு கொண்டே இருந்தான் கிரி, அவள் அவனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.
ஆனால் அவளோ அவனை தவிர்த்தபடி அருகில் இருக்கும் செடியை பார்ப்பது போல, போனை பார்ப்பது போல என விழிகள் அலைபாய்ந்திட
“என்னை பாருடி” ஹஸ்கி வாய்சில் பேசிய கிரியை பட்டென நிமிர்ந்து பார்த்துவிட்டாள் கமலி. முன்பே ஆண்மை ததும்பும் அந்த குரலின் மேல் அத்தனை காதல் உண்டு இவளுக்கு, இப்போது இந்த ஹஸ்கி வாய்ஸ்.. அவளை சுறாவளியாய் சுழற்றி அடிக்க துவங்கிவிட்டது.
பார்வையில் தான் அத்தனை நெருக்கம் காட்டினான் எனில், குரலிலும் இத்தனை நெருக்கத்தை காட்ட முடியுமா? என அயர்ந்து போனாள்.
விழிகளோடு விழிகள் பின்னிக்கொண்டது ஒரீரு நொடிகள் என்றாலுமே அவன் முகத்தின் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவள் கண்களிலிருந்து தப்பவே இல்லை. கார் கண்ணாடியில் சற்று தெளிவில்லாமல் பார்த்ததை விட எதிரில் இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கையில் தெள்ள தெளிவாய் தெரிந்த்து, அவனின் உணர்வுகள். இப்படி ஒரு பூரிப்பான கிரியின் முகத்தை இதுவரை அவள் பார்த்ததே இல்லை.
இவளையே பார்த்திருந்தவன் “ரொம்ப கஷ்டபட்டியா?” என கேட்டிட, ஹஸ்கி குரல் கனவோ எனும் படி வெகு சாதாரணமாய் மாறி இருந்தது.
கிரியின் வார்த்தைகளில், இவள் இமைகள் சுருக்கி பார்க்க “வெயிட்லாஸ் அவ்வளவு ஈசி இல்லைனு எனக்குமே தெரியும்” என்றதில், இவள் அமைதியாகிப்போனாள். அவளது அமைதியில், முக இறுகலில், கிரியின் புருவங்கள் முடிச்சிட்டு கொண்டது.
ஹாஸ்டலிலும் சரி, காரில் வரும் போதும் சரி கமலியின் தோற்றத்தில் அது உருவாக்கிய மாய வலையில் இருந்தவனுக்கு, இப்போது தான் கமலியின் இறுக முகம் எதையோ உணர்த்துவதை உணர முடிந்தது. அவள் அமைதி அதை விட எதையோ உணர்த்த “ஏன் என்கிட்ட சொல்லல கமலி” என கேட்டான்.