Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 22 2

இவள் பேசும் பேச்செல்லாம் கேட்க கேட்க பொறுமைக்கு அர்த்தமில்லாமல் போய் கொண்டிருந்தது கிரிக்கு, “கமலி அதெல்லாம் முடிஞ்சு போச்சு விட்ரு. ஏற்கனவே உன்னோட வாழனும்னு முடிவில் தான் கத்தாரில் இருந்து வந்திருக்கேன். தேவையில்லாததை பேசி…” என நிறுத்தி “ப்ச்.. இரண்டு பேருக்குமே நிம்மதி இல்லாமல் போய்டும் கமலி..  இனி ஆக வேண்டியதை பார்ப்போம். அடம்பிடிக்காதே” அளவை மீறிக்கொண்டிருக்கும் கோபம் அணை உடைக்க காத்திருந்தது.

“ம்.. அடம்பிடிக்காமல் போனது தான் என்னோட தப்பு, உங்க மேல கையை போட்டு, நெத்தில முத்தம் கொடுத்து.. பர்மிஷன் கேட்டு நின்றிருக்கவே கூடாது. என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு நீங்க பாரின் போன மாதிரி, எப்படியும் போங்கடான்னு நானும் என் அம்மா வீட்டுக்கு நடையை கட்டிருக்கனும்” என அன்றைய ஒரு நாளை கிரிக்கு இவள் நினைவு படுத்தினாள்.

போயே விட்டது பொறுமை.. “ஆமாண்டி நடையை கட்டியிருக்கலாமே? ஏன் கட்டலை? எதுக்கு என்னையவே சுத்தி சுத்தி வந்த! எங்கம்மா, அக்கா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டின, நகையை தூக்கி கொடுத்த, செந்தில் வந்தப்போலாம் வடிச்சு கொட்டின! ராஜிக்கும் பிள்ளைகளுக்கும் ஆயா வேலை பார்த்த, இதையெல்லாம் எதுக்குடி செஞ்ச? எதுக்குடி செஞ்ச?” கேட்டுகொண்டிருந்தவன், அருகில் அமர்ந்திருந்தவளின் பிடறியை எட்டி பிடித்திருந்தான் கிரி.

பதறி, திடுக்கிட்டு இவள் விலகும் முன், அவள் பிடறியை அழுந்தப்பற்றி இருந்தது அவனது வலது கை விரல்கள். அவன் முகத்தருகே மிக நெருக்கமாய் இருந்தது இவள் முகம்.



Advertisement

அவள் விழிகளை ஆழ பார்த்தவனின் விழிகள் கோபம் கொண்டு சிவக்க “எதுக்குடி செஞ்ச!” மீண்டும் அதே கேள்வியை எழுப்பியவன், மறுகையால் தன் நெஞ்சை சுட்டி காட்டி “எல்லாமே இந்த ‘கிரிக்காக’ செஞ்ச’ சொல்லி முடிக்கையிலேயே அத்தனை கர்வம் அவன் குரலில், அவ்வளவு தான் கமலிக்கு எங்கிருந்து வந்ததோ ஆத்திரம், முழு பலத்தோடு அவன் கையை தட்டிவிட,  முயற்சி புரிந்து அவனே விட்டான்.

ஆனால் வார்த்தைகளை விடவில்லை “ஏன்னு காரணம் கூட நான் சொல்வேன்.. சொல்லவா?” என்றவன் “என் குடும்பத்தை சந்தோஷபடுத்தினால், நான் உன்கிட்ட நெருங்குவேன்னு நினைச்சு தானே பண்ண!” என இவன் கேட்க, திகைத்து போய் நின்றாள் கமலி.

“அப்படின்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பில்ல.. நீங்க நினைக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது” என்றாள் முகத்தை வெடுக்கென திருப்பி கொண்டு எழுந்து நின்றாள். அதில் அவனும் எழுந்து நின்றாள்.

Advertisement

“அப்போ என்னை நீ தேடலை!” அவளை துளைத்தெடுத்தது அவன் பார்வை.

Advertisement

“இல்லை.. இல்ல நீங்க என்னை தேடீனிங்களா? இல்லைல.. பிறகு நான் ஏன் தேடனும்” என்றாள் பொய்யாய்.

அவளது அந்த முக திருப்பலில் ஏறிக்கொண்டிருந்த கோபத்தை அடக்கி, பொறுமைடா.. கிரி பொறுமை.. என தனக்கு தானே கூறியபடி “நான் எவ்வளவு தூரம் உன்னை தேடுறேன்னு எனக்கு மட்டும் தான்டி தெரியும்” இவனது ஆழ்ந்த குரலில், நம்பாத பார்வையை விட்டாள் கமலி.

ஆழ்ந்த அவன் குரல் எப்போதும் போல அவளை மயக்கத்திற்குள் தள்ளியது. ஆழ்ந்த குரல் ஹஸ்கி வாய்சாக மாற “நெருங்க விட்டா தானே தெரியும்.. நான் உன்னை எவ்வளவு தேடுறேன்னு.. இப்போ நான் நெருங்கி வந்தா கூட எட்டடி தள்ளி போயிடுற.. என் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட முடியல. நான் உன்னை தான் பார்க்குறேன்னு தெரிஞ்சுகிட்டு, வேணும்னே என்னை..” இத்தனை பேசியவன் ‘தவிக்க விடுற’ என்ற வார்த்தையை சொல்லாமலேயே “எதுக்குமே உரிமையில்லாதவனா பண்ணிட்ட..” என முடித்தான் கிரி.

Advertisement

அவன் மயக்க குரல், அவளை முழுதாய் மயக்கும் முன், சீறிவிட்டாள் கமலி “உரிமையை பத்தி பேசுறீங்க? இதே உரிமையை நான் என்பத.தெட்டு கிலோவில் இருக்கும் போது்தேடியிருக்கனும், ஐம்பத்தி மூனு கிலோவில் இருக்கும் போது வந்து தேட கூடாது. என்கிட்ட இருந்து அழகு மட்டும் தான் உங்களுக்கு வேணும்!, என் மனசு வேணாம் தானே?” மனதை அரித்து கொண்டிருந்த ரணம் வெளியே வந்தது.

இவள் கொடுத்த ரணத்திலே, இவனது ஹஸ்கி வாய்ஸ் எங்கே போனதோ, ருத்ர மூர்த்தி ஆனான் “அப்போ என்ன டேஷ்க்குடி நீ வெயிட் குறைச்ச? இவ்வளவு அழகா மாறி ஏன் என் முன்னாடி வந்து நிக்கிற? நான் அப்படியே தான் இருப்பேன்னு இருக்க வேண்டியது தான?” பொறுமை இழந்து.. வார்த்தைகளையும் விட்டான்.

“கிரி..” என அலறியவள் “எல்லாமே உங்களுக்காக தான் பண்ணனும்னு எதுவும் அக்ரிமெண்ட் இருக்கா? ஏன் என்னோட சந்தோஷதுக்காக, வெயிட்லாஸ் பண்ண கூடாதா?” கிரி ஏற்றி விட்டதில் கோபத்தின் உச்சாணிக்கு சென்றாள் கமலி.

பல்லை கடித்தவன் “அப்போ எனக்காக நீ வெயிட் குறைக்கலை? அப்படி தான?” என அழுத்தமாய் கேட்க

“ஆமாம் உங்களுக்காக இல்லை தான்..” என்ற அவளது உறுதியான பதிலில் இவன் உள்ளம் கொதிகலனானது. “ஆனால் உங்களால் தான் வெயிட் குறைச்சேன்” என புதிரும் போட்டாள்.

“என்னாலையா? புரியலை” இவனும் விழிகளை சுருக்கி கொண்டு கேட்க

‘ஆமாம்’ என மேலும் கீழுமாய் தலையசைத்து, “ஒரு நாள் கண்ணாடி முன்ன நிறுத்தி உயரத்தை தவிர என்ன பொருத்தம் இருக்குன்னு கேட்டீங்ல்ல! அதுக்காக தான்” எனவும், படபடவென இதயம் துடித்தது இவனுக்கு. ஆக இது தான் கமலின் கோபத்திற்கு, எடைகுறைப்பிற்கான காரணமா? பிரச்சனையின் முடிச்சில் வந்து நின்றது அவர்களின் சண்டை.

போகிற போக்கில், ஒரு வித விரக்தியில் அன்று சொன்ன வார்த்தைகளா, இவளில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? நினைக்க நினைக்க தாங்கவே முடியவில்லை கிரியால்.

“அ.. அப்போ நீ வெயிட் லாஸ் பண்ணதெல்லாம் அந்த ஈகோவுக்காக தானா, நிஜமா எனக்காக இல்லையா?” கோபத்தை விட்டு தவித்து போய் கேட்டவனை தவறாமல் ஏமாற்றினாள் கமலி.

“இல்லைவே இல்லை” என பொய்யாய் உறுதியாய் மறுத்து “உங்களுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திகிட்டு, நீங்க எப்படா வருவீங்கன்னு காத்திருந்து, அப்படியே என்னை உங்க கையில் குடுப்பேன்னு நினைச்சீங்களோ” கை கட்டி கொண்டு அவன் முன்  பேசிக்கொண்டிருந்தவளின் வார்த்தைகள் பெரிதாகி கொண்டிருந்தது.

புருவங்கள் சுருங்க இவன் யோசனையில் இருக்க, ஒற்றை விரலை எதிர்புறம் காட்டினாள். எதிரே அவர்கள் இருவரையும் பிரதிபலித்தது கண்ணாடி.. “எத்தனை நாள் இந்த கண்ணாடியை பார்க்க பயந்து போய் தனியா உக்கார்ந்து அழுதிருக்கேன் தெரியுமா? எத்தனை நாள் இதில் என் முகத்தை பார்க்க பயந்து ஓடியிருக்கேன்னு தெரியுமா? எல்லாம் உங்களால தான்” என கண்ணாடியை பார்த்தே பேசியவள், கண்ணாடியிலேயே பிரதிபலித்த அவனின் இறுகிய முகத்தை கண் குளிர பார்த்து

“இப்போ உங்களை விட நான் பெட்டரா இருக்கேன்.. எனக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் தானே” மனசாட்சியே இல்லாமல் அவனை வார்த்தைகளாலேயே குதறினாள்.

அதன் தாக்கம் அவன் கண்களில் அப்பட்டமாய் தெரிய, வலி அவன் முகத்தின் இறுக்கத்திலேயே தெரிந்தது.

எதிரில் நின்றிருந்தவளின் முகத்தை தீர்க்கமாய் பார்த்து “அப்போ என்னை பிடிக்கலைன்னு சொல்ற?” என கேட்க.

“அப்போ பிடிச்சிருந்தது, ஆனால் இப்போ..” என உதட்டை இவள் பிதுக்கி “இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன்” என்ற நொடி, இறுகி போனான் கிரி.

“எனக்கு தேவை தான், வெக்ஸ் ஆகி போய் நான் ஒரு முறை பண்ணதுக்கு, நீ பல முறை பண்ற. இது நீ கொடுக்குற நேரம், நான் வாங்குற நேரம்.. வாங்கி வச்சிக்கிறேன், வாழ்நாள் முழுக்க நினைச்சு நினைச்சு சந்தோஷ படனும்ல” பற்களை கடித்து கொண்டு மனம் வலியை மறைத்து பேசினான் கிரி.

அவன் சொல்கையில் பெரிதாக தெரியாதவையெல்லாம் இவள் வாய் வழியாய் கேட்கையில் பெரும் கோபத்தை, ஆத்திரத்தை கொடுத்தது.

அவள் சொன்ன அத்தனையையும் ஏற்று கொண்டவனால் ‘இப்போ பிடிக்கலை’ என உதடு பிதுக்கி நின்றதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

தாங்கவே முடியவில்லை அவனால், எட்டி அவள் கன்னத்தை பிடித்து இழுத்தான் தன் முகத்தருகே. “விடுங்க கிரி” என இவள் அவன் கைகளை தட்டி தட்டிவிட, அவன் பிடி இறுகியது. உதடுகள் குவிந்து, என்னையும் பாரேன் என அவளின் முத்து பற்கள்  பளிச்சிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!