அவன் பதிலேதும் கூறாமல்.. அவரை பார்த்த வண்ணமே அமர்ந்திருக்க.. “நீ முறைக்கிறத பார்த்தா, கால் கோடிக்கும் மேல கொடுத்திருப்ப போல.. ஏதுடா இவ்வளவு பணம்? ராஜிக்கு செய்ய சொன்னா மட்டும் கணக்கு பார்க்கிறதென்ன? செஞ்சதை எல்லாம் சொல்லி காட்டி, கேட்க கூடாததெல்லாம் கேட்குறதென்ன?” வசந்தாவின் பேச்சு எல்லையை கடந்து கொண்டிருந்தது.
ஆனால் கிரியோ நிதானமாய் “ம்மா.. நீ நிஜமாவே எனக்கு அம்மா தானா?” என கூர்மையாய் பார்த்து கேட்டு வைக்க
“நீ எனக்கு மகன் தானான்னு எனக்கே சந்தேகம் தான்டா. எதையாவது கேட்டு செய்றியா நீ.. உன் இஷ்டத்துக்கு வீட்டை விக்கிற! கேட்ட பணத்தை அனுப்ப மாட்டேன்னு, கணக்கு கேட்குற? ராஜிக்கு செஞ்சதையெல்லாம் புதுசா சொல்லி காட்டுற! என்ன உன் பொண்டாட்டி சாவி கொடுத்தாளா?” என கேட்டகவுமே
“ஆமாம்மா..” என சொல்லி, வசந்தாவின் முகத்தில் அதிர்ச்சியை பார்த்து “உன் மக சொல்றதையெல்லாம் செந்தில் கேட்கனும், அவ இஷ்டபடி செந்தில் ஆடனும்னு நீ் நினைக்கிற.. அதே மாதிரி கமலியும் அவ பேமிலியும் நினைப்பாங்க தானே!” என அசராது வெடிகுண்டை போட்டு விட்டு, போனை எடுத்து பாக்கெட்டில் வைத்தபடி எழுந்து அப்படியே வெளியே சென்றுவிட்டான் கிரி.
Advertisement
இவனது பைக்கை அவனது நண்பன் துரை வைத்திருக்க, அவனுக்கு அழைத்து பேச பிடித்தம் இன்றி மெயின் ரோடு வரை நடந்தே சென்றவன், தனக்கு ராம் அனுப்பி இருந்த லோகேஷனை ஆராய்ந்தான். பின் ஆட்டோ ஒன்றை பிடித்து கடைக்கு வந்து சேர்ந்தான்.
மெயின் ரோட்டின் மேலேயே இருந்தது கடை, அங்கேயிங்கே பார்வை போனாலும் கடையோ.. அதன் அமைப்போ அவன் பார்வையில் பதிந்தாலும் மனம் அதில் பதியவே இல்லை. நேராக உள்ளே வந்துவிட்டான்.
அங்கே ஒரு பெரிய டேபிளை சுற்றி, அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகளென அன்பும் பாசமும் புடைசூழ, ராம் அங்கே குடும்பமாய் நின்றிருந்தான். ராம் வெளி நாட்டில் இருந்து வந்துவிட்டான் என்றிதில் அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி தான். இனி இங்கே தான் இருக்க போகிறான் என்றதில் இன்னுமே மகிழ்ச்சி.
Advertisement
அவர்களின் முகத்தில் இருந்த பூரிப்பும், சந்தோஷமும் இவ்வுலகில் எதை கொடுத்தும் வாங்க முடியாததாய் இருந்தது.
Advertisement
‘இப்படி குடும்பத்தோடு நிற்பதெல்லாம், நமக்கு கானல் நீர் தான் போல’ அதிகமாய் வலித்தது அவன் மனம்.
ஒரு காலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தவன், இன்று அதை விட இரு மடங்கு பெரிதான சூப்பர் மார்க்கெட்டின் ஒன் ஆப் த பார்ட்னர். அவனை பொருத்தவரையில் மிக பெரும் சாதனை தான். ஆனால் அதை மார்த்தட்டி, மகிழ்ச்சியாய் சொல்லி கொள்ள ஒருவருமே இல்லை! பெற்றவளும் இல்லை கட்டியவளும் இல்லை.
‘ப்ச்.. என்னடா வாழ்க்கை இது! கடைசி வரை நான் ஒத்தை காட்டு மரம் தானா’ என நினைத்து கொண்டு சோர்வடையிலேயே “டேய்.. வாடா.. அங்கேயே நின்னுட்ட!” என்ற ராமின் ஆரவார குரலில் தலை உலுக்கிகொண்டு, அவர்களை நெருங்கினான் கிரி.
Advertisement
“ண்ணா.. எப்படி இருக்க?” என கௌரி ஆரம்பிக்க “நல்லாயிருகேன் கௌரி.. நீ எப்படி இருக்க? மச்சான் எங்க காணோம்” என விசாரிக்க, “வேலைன்னா.. நாளைக்கு வரேன்னு சொல்லி, என்னை மட்டும் அனுப்பி வச்சாரு” என்றாள் கௌரி.
அதன் பின் “எங்க கிரி, அம்மா, ராஜிலாம்.. நீ மட்டும் வந்திருக்க?” என மோகன் கேட்டிட
“கமலியை கூட்டிட்டு வரலியாடா?” என ராமும்
“கிரி.. பிரணவ், பிரணிதாவையாவது கூட்டிட்டி வந்திருக்கலாமே?” என ராமின் மனைவி சீதா..
“இவ்வளவு பெரிய கடையை அண்ணனும், தம்பியுமாய் ஆரம்பிக்கிறது வீட்டுக்கு தெரியுமா? தெரியாதா?” என அவன் சித்தி சுபா, என இப்படி ஆளாளுக்கு அவனிடம் கேள்விகேட்டு துளையிட
“ராஜி செந்திலோடு வெளியே போய்ட்டா சித்தப்பா” என மோகனிடமும் “அவள் வரவும், அம்மாவையும், பிள்ளைகளையும் சேர்ந்து கூட்டுட்டி வரேன் அண்ணி” என சீதாவிடமும் “கமலியோட அண்ணிக்கு வளைகாப்பு, சோ அவ இப்போதைக்கு பிசி அவளை இன்னொரு நாள் கூட்டிட்டு வரேன்ணே” என ராமிடமும் பதில் கூறிட
“ஏதாவது பதில் சொல்லிட்டே இருடா..” என திட்டிய சுபா.. “சீதா, கிரிக்கும் பால்கொழுக்கட்டை எடுத்துட்டு வா..” எனவும், காலி சேர் ஒன்றை தன் பக்கமாய் இழுத்து போட்ட ராம் “வாடா.. வந்து உக்காரு.. சாப்பிட்டுட்டு கடையை பார்க்கலாம்” என்றிட, அந்நேரம் சீதாவும் ஒரு கின்னத்தில் பால்கொழுக்கட்டை, ஸ்பூனோடு கொண்டு வந்து கொடுத்திட, அமைதியாய் உண்டு முடித்தான். “சித்தப்பா” என வந்த ராமின் மகளை “கண்ணம்மா..” என தூக்கி கொண்டான். அதன் பிறகும் ஒரு அரைமணி்நேரம் தொடர்ந்தது அவர்களது குசல விசரிப்புகளும், கத்தாரின் தற்போதைய நிலவரங்களும். ராம், ஆரம்பித்து வைக்க, முடித்து வைப்பதற்கு ஆள் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது இவர்களது பேச்சுகள். கிரி மட்டுமே ஆட் மேன் அவுட்டாக இருந்தான்.
“நேரம் போயிட்டே இருக்கு.. வாடா கடையை பார்க்கலாம்” என அதன் பின் கடையை சுற்றி காண்பித்தான் ராம், அவ்வளவு பெரிய இடத்தை கண்கள் பார்த்து கொண்டே வந்தாலும், நினைவுகள் எல்லாம் வேறெங்கோ இருந்தது.
‘கடையை பற்றி நான் இப்போ என்ன சொன்னேன், திரும்ப சொல்லு பார்ப்போம்’ என ராம், கிரியிடம் கேட்டால் முழிப்பானே தவிர பதில் இருக்காது, அப்படி ஒரு கவனிக்காத நிலையில் தான் இருந்தான் கிரி. ஒரு வழியாய் கடை சுற்றுலாவும் முடிந்தது.
கடையை சுற்றி பார்த்து வந்தவனிடம், ஒரு பெரிய நோட்டையே கொடுத்தார் மோகன். என்ன என விழித்தவனிடம், “இடம் பேச ஆரம்பிச்சதில் இருந்து இப்போ வரை வரவு செலவு கணக்கெல்லாம் இருக்கு கிரி.. இனி எடுக்க வேண்டிய ஸ்டாக் ஆர்டர், எடுக்க வேண்டிய டீலர்ஸ்னு பெரிய லிஸ்டே ரெடி பண்ணிட்டேன். நீயும் ஒருக்கா பாத்திடு கிரி” என மோகன் கூறவும்.
பெயருக்கு வாங்கினான், பேப்பரை திருப்பினானே தவிர கவனித்தார் போல் தெரியவில்லை. கவனம் பதிந்தார்ப்போல தெரியவில்லை. அதை ராம் கண்டறிந்து விட்டான், ஆனால் மோகனோ விளக்கம் கொடுத்து கொண்டே இருக்க, கிரியும் புரிந்தும் புரியாமலும் தலையாட்டி வைத்தான்.
ஒரு கட்டத்தில், தந்தையின் முழங்கையில் லேசாய் இடித்து, கிரியை கவனிக்கும் படி சிக்னல் கொடுத்தான் ராம். அதன் பின்னே தான், இவன் முகமும் சரி, அவனும் சரி இரண்டுமே சரியில்லை என்பதை உணர்ந்தார் மோகன்.
பின் அவன் கையில் இருந்த நோட்டை மெதுவாய் உருவ, அது மோகனின் கையோடு வந்தது. அப்போது தான் “சித்தப்பா” என நிமிர்ந்தான் கிரி.
“கவனம் எங்க இருக்கு கிரி..” என்றார் கண்டிப்புடன். “என்னாச்சு உனக்கு.. எதுவும் பிரச்சனையா! முகமே சரியில்லை” என அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு, “நீ முதலில் உக்காரு” என கைபிடித்து அமர்த்த, அவன் கைகளிலேயே தெரிந்தது உடல் சூடு. “என்னடா உடம்பு சுடுது, காய்ச்சலா!” என மோகன் பதறி கேட்க
“என்ன காச்சலா?” என ராமும் அவன் நெற்றி, கழுத்து என கை வைத்து பார்த்து “என்னடா இவ்வளவு சுடுது.. இதோடவா சுத்திட்டு இருக்க” என கண்டிக்க
“ராம், இவனை முதலில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.. மத்ததை அப்புறம் பேசலாம்” என இருவரையும் மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார் மோகன். பெண்களும் கிரியை நினைத்து கவலை கொண்டனர்.
பைக்கில் இருவரும் மருத்துவமணைக்கு செல்கையிலேயே “என்னடா உடம்பு இப்படி சுடுது, பிளைட் ஏறும் போது நல்லா தானே இருந்த” என ராம் கேட்க
“லேசா தான் சுடுதுண்ணே, தூங்கி எழுந்தா சரியாகிடும், நீ என்னை வீட்டில் விட்டுடேன்” என்றவனை
“கொதிக்குது.. லேசா தானன்னு அசால்ட்டா சொல்ற.. டாக்டரை பார்க்காமல் உன்னை வீட்டில் கொண்டு போய் விடமாட்டேன்” என மருத்துவமணைக்கே அழைத்து வந்து விட்டான் ராம்.