Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 32 4

அவனது ஆசையோ, கோபமோ, தாபமோ, அதிர்ச்சியோ எதுவாக இருந்தாலும் அந்த தேடல் முடிவுறும் இடம் கமலி மட்டும் தான் என்பதை இந்த ஒரு வாரத்திலேயே கண்டு கொண்டவளுக்கு கிரியை அப்படியே விட முடியவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தவளிடம்

“கமலி.. இன்னும் இங்க நின்னு என்ன செய்ய போற நம்ப வீட்டுக்கு போகலாம்” என செல்வம் அவளிடம் நெருங்க, மெதுவாய் அவரை திரும்பி பார்த்தவள் “நான் வரலைப்பா” என அருகில் கிடந்த சேரில், ஏதோ முடிவு செய்தவளாய் தீர்க்கமாய் அமர்ந்துவிட்டாள்.

“அப்போ என்ன செய்றதா உத்தேசம்?” கர்ணா அவளருகில் வந்து அமர

“கமலி உன்னை மதிக்காத இடத்துக்கு நீ போக போறியா! இதை விட அசிங்கம் வேறெதுவும் இல்லை கமலி” என நிதர்சனத்தை மல்லி பேச



Advertisement

“அவங்க உன்னை மரியாதை இல்லாமல், நாயை மாதிரி நடத்துறாங்க. அங்க போகனும்கிற..” செல்வம் கூட பேச

மூவரையும் வட்டமடித்த அவள் பார்வை, கர்ணாவிடம் வந்து நிற்க

“நம்ப வீட்டில் மட்டும் எனக்கு என்ன மரியாதை கிடைக்க போகுனுதுண்ணா” இவள் கேட்க

Advertisement

புருவம் சுருக்கியவன் “உனக்கென்ன கமலி.. ராணி மாதிரி நம்ப வீட்டில் இருக்கலாமே!”

Advertisement

“உன் வீட்டில் உன் பொண்டாட்டி தான் ராணி. நானில்லை. அம்மாவுக்கே அங்கே மரியாதை இல்லாதப்பபோ, எனக்கு என்ன மரியாதை கிடைச்சிட போகுதுண்ணா” இவள் பேச, மூவருக்குமே பேச்சு வரவில்லை.

“நீங்க சொல்ற மாதிரி நான் அங்கே வந்தால், என்ன நடக்கும்னு கொஞ்சம் கெஸ் பண்ணுங்க.

நினைச்சது நடந்த சந்தோஷத்தில் கிரியோட அம்மா இருப்பாங்க. உங்க பிரச்சனை நீங்க பார்த்துக்கோங்கனு ராஜி அண்ணி விலகிடுவாங்க.

Advertisement

கடைசியில் பாதிக்க பட போறது நானும் கிரியும் தான்” என்ற கமலியின் பேச்சில் கர்ணா புருவம் உயர்த்தி பார்க்க

“உன்னோட அருமை புரியல்லை கமலி அவங்களுக்கு. எதுவும் லேசா கிடைச்சிட்டா அதுக்கு மரியாதை இல்லை. நீ கொஞ்ச நாள் நம்ப வீட்டிலேயே இரு” மல்லிகா பேச

“ஓ..அந்த கொஞ்ச நாளில் அந்தம்மா திருந்தி, வருந்தி, அவங்க பண்ண தப்பையெல்லாம் உணர்ந்து, என்னை மன்னிச்சிடும்மானு சொல்லி, வாம்மானு கூட்டுட்டு போகனும், அதுக்கு பிறகு அவங்க போடுற பிச்சையில் நான் என் கிரிகூட நான் வாழனும், அப்படி தானே!” என்றவள்

 “நான் கிரியோட வாழனுமா வேண்டாமானு நான் தான் முடிவு பண்ணனும், அவங்க இல்லை” கமலியின் இந்த தீர்க்கமான பேச்சை செல்வமே எதிர்பார்க்கவில்லை. மல்லிகாவும், கர்ணாவும் நம்ப கமலியா இது என  வியந்து பார்த்திருக்க

“நான் சொன்ன எதுவுமே நடக்க போறதில்லை. வீட்டுக்கு வான்னு கிரியோட அம்மாவோ, அக்காவோ இப்போ இல்லை எப்பவுமே அழைக்க போறதில்லை. கிரியும் இவங்க கிட்ட மாட்டிகிட்டு வாழ்க்கையையே வெறுத்துடுவாரும்மா.

இவங்களை எல்லாம் நம்பி என் கிரியை நான் அனாதை மாதிரி விட முடியாதும்மா. உடம்பு சரியில்லாதப்போ கூட தனியா கிடந்தாரும்மா” இவளது பேச்சில் மல்லிகாவிற்கு கண்கள் கூட கலங்கியது.

“கிரி, என்னை நல்ல படியா பார்த்துகிறாரு, நல்லபடியா  நடத்துறாரு.. கெட்ட பழக்கம் ஒன்னு கிடையாது. இவர் அம்மா சரியில்லைன்னு இவரை என்னால ஒதுக்கி வைக்க முடியாதுப்பா. மத்தவங்களை பத்தி எனக்கு கவலை இல்லைப்பா, இப்போ நான் கிரிகிட்ட போயே ஆகனுப்பா நானில்லாமல் அவர்… அவர்..” என சொல்ல முடியாமல் தயங்கினாள்.

மொத்தத்தில் அவனின் மனம் அவளிடம், அவளின் மனம் அவனிடம் என்பதை புரிய வைத்துவிட்டாள் கமலி.

ஆழ மூச்செடுத்த செல்வம் “கமலியை அவ வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வா கர்ணா. எதுவும் பிரச்சனைன்னா சொல்லு, இரண்டில் ஒன்னு பார்த்தர்லாம்” என செல்வமும் முடிவோடு கூற,

“நீ சொன்ன மாதிரி உன் வாழ்க்கை நீ முடிவு பண்ணுடா..” என மல்லிகாவும் பச்சை கொடி காட்டிட, அதில்  கமலியின் முகம் தெளிந்திட, கர்ணாவும், கமலியும் ஒன்றாய் கிளம்பி விட்டனர்.

 *********

செந்தில், ராஜி, குழந்தைகள், வசந்தா என அனைவரையும் ஏற்றி வந்த ஆட்டோ கிரி வீட்டு வாசலில் நின்றது. ராஜியும், செந்திலும் எத்தனையோ பேசி விட்டார்கள்.

‘ஒரு வாரம் எங்க வீட்டில் இரும்மா.. பிரச்சனை தன்னால முடிஞ்சிடும். அப்புறமா கிரியே உன்னை அழைச்சிப்பான்மா’ என நிதர்சனத்தை ராஜி பேசினாலும், ‘எவ்ளோ கஷ்டபட்டு இரண்டு பேரையும் பிரிச்சு விட்ருக்கேன்’ என எகிறியவர் ‘நான் என் வீட்டுக்கு தான் போவேன், உன் வீட்டுக்கு வர முடியவே முடியாது’ என பிடித்த பிடியிலேயே நின்றிருந்தார் வசந்தா.

ஆத்திரத்தில் செந்திலும், “ராஜி ‘உங்கம்மாவை விடு போகட்டும்.. சொல்லி திருந்தலைன்னா, பட்டு திருந்துவாங்க” என்று விட்டான்.

வசந்தா ஆட்டோவை விட்டு இறங்கிட, இவனது பார்வையோ அவர்களுக்கு முன் வாசலில் வந்து நின்ற கிரியின் பைக்கில் படிந்து மீண்டது.

“டி ராஜி.. உந்தம்பி வண்டி வீட்டில் தான்டி நிக்கிது. இதுக்கு உன் தம்பியே உங்கம்மாவை அழைச்சிட்டு வந்திருக்கலாமே.. என்னை எதுக்குடி நடுவுல போட்டு பந்தாடுறான்” வாய் குறைவேனா என்றது செந்திலுக்கு.

“வீட்டுக்கு வாங்க, என் பங்குக்கு நானும் பந்தாடிடுறேன்” ராஜியும் பேச

“ஏண்டி, பிரச்சனைக்கு மூல காரணமே நீயும் உன் ஆத்தாளும் தான். இதுல நானும் கிரியும் என்னடி பண்ணினோம். கிரிய உங்கம்மா பந்தாடுது, இங்க நீ என்னை பந்தாடுவேன்ற.. ஆம்பளைங்கனாலே இளிச்சவாயனுங்களா” இவன் சொன்னதில் ஆட்டோ டிரைவர் சத்தமிட்டு சிரித்திட

“ண்ணே.. நீங்க வேற கால நேரம் தெரியாமல் சிரிச்சு வைக்காதீங்கண்ணே” என செந்தில் எரிச்சலுற

“இப்போ என்ன பண்ண. ஏதாவது சொல்லி தொலைங்க. அம்மா மட்டும்னா வீட்டில் விட்டுட்டு போயிடலாம். கிரியும் இருக்கானே! மண்டபத்தில் அமைதியா இருந்தான். வீட்டில் வாய்க்கு வந்தபடி பேசுவானே” ராஜி புலம்ப

“ஹ.. பண்றதெல்லாம் நீயும் உங்கம்மாவும். தீர்த்து வைக்க மட்டும் நான் வரணுமா” செந்தில் வியாக்கானம் பேச

“அதுக்காக பிரச்சனையை அப்படியே விட முடியாதே” என்றிட

“விட முடியாதுன்னா நீ கூடவே கூட்டிட்டு போடி..” என செந்தில் கூற, இவளோ பத்ரகாளி ஆனாள்.

“நீ முறைச்சாலும் அதுதான் உண்மை. உனக்கொரு நியாயம், கமலிக்கு ஒரு நியாயமா. ரொம்ப அநியாயம்டி. நான் எங்கம்மாவை விட்டுட்டு தானே வந்தேன். கிரியும் அவன் அம்மாவை விட்டுட சொல்லு. பிரச்சனையே வராது” உண்மையை இவன் பேச

“நீங்களே இப்படி சொன்னா எப்படிங்க” மறுத்து பேசாமல் சரண்டைந்தாள் ராஜி.

“ம்.. எனக்கு என் தம்பி இருக்கான். அம்மாவை அவன் பார்த்துப்பான்னு விட்டுட்டு வந்துட்டேன். இங்க கிரிக்கு நீ தானே இருக்க. நீ கொஞ்சநாள் வச்சு பாரு. அப்ப தான் உனக்கும் கஷ்டம் புரியும்” என்றான் எகத்தாளமாய்.

“ஏன் எனக்கென்ன கஷ்டம்.. நான் பார்த்துப்பேன்” என்றாள் வீம்பாக

“அப்போ கிரியும், கமலியும் ஏத்துகிற வரை, நீயே வச்சு பாரு. அவனுக்கு கொஞ்சம் நிம்மதிய கொடு” பிரச்சனைக்கு இவன் வழிகாட்டிட

“உங்களுக்கு எதுவும் பிரச்சனையில்லையே” இவள் செந்திலிடம் உறுதி கேட்க

“நான் நல்லா நல்லா கேட்பேன். உங்கம்மா பப்பெல்லாம் கிரிகிட்ட தான் வேகும். என்கிட்ட இல்லை. உங்கம்மா பேசினா, பதிலுக்கு நான் பேசுவேன். நீ என்னை திட்ட கூடாது” என இவன் டிஸ்கி போட

ராஜியோ முறைத்து பார்த்தாள், “பிள்ளைகளை உங்கம்மா பார்த்துகட்டும், நீ என்னை பார்த்துக்கோ” ராஜியின் காதோரமாய் குனிந்து இவன் சொல்ல அப்போதும் இவள் முறைத்து வைத்தாள்.

“சரி முறைக்காதடி, வா.. உள்ளே போகலாம்” என பிரணியை இவன் தூக்கி கொள்ள, ராஜி ப்ரணவை கையில் பிடித்து கொண்டு ஆட்டோவை விட்டு இறங்கினார்கள்.

ஆட்டோ காரனிடம் திரும்பி “வெயிட் பண்ணுங்க வந்திடுறோம்” என சொல்லிவிட்டு  கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!