Skip to content
Post Views: 6,221
உறக்கம் வராத காரணத்தால் புதுப்பெண் அதிகாலை எழவில்லை என்ற பேச்சுக்களை கேட்கவேண்டிய அவசியம் வரவில்லை கனகத்திற்கு ராக்காயிடம் அசைவு தெரிந்ததுமே அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்துகொண்டாள்.
Advertisement
“எழுந்துட்டியா நல்லதா போச்சு ஆளுங்க வர ஆரம்பிச்சுடுவாங்க நீ மொதல்ல போய்க் குளிச்சிட்டு கோலத்தைப் போடு” என்றவர் தலைமுடியை வாரிச் சுருட்டி கொண்டைபோட்டுக்கொண்டு பின்வாசல் சென்றார்.
Advertisement
Advertisement
அக்காவும் மாமாவும் இருக்கும் அறையை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள் கனகம் காலை முதல் வேண்டுதலே உடன்பிறப்புக்கானதே “ஆண்டவா அக்கா சந்தோஷமா இருக்கணும் எல்லாம் நல்லதா நடக்கணும்” என்ற வேண்டுதலோடு அவளின் நாள் தொடங்கியது.
Advertisement
தாலி கட்டிய முதல் நாளே மொட்டை மாடிக்குத் தனிக்குடித்தனம் போன கணவனைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் குளிக்கச் சென்றாள்.
குளித்து வந்தவள் வாசல் தெளித்து கோலமிட மேலே நின்று மனைவியைத்தான் பார்த்திருந்தான் ராஜகுமாரன் இன்று பூக்கோலம் அழகாய் போட்டு முடித்துவிட்டு அடுப்படிக்கு சென்றுவிட்டாள்.
நேரம் ஆறுமணியை நெருங்கத் தொடங்கியது மாமியாரின் விழிகள் மூத்தமகனின் அறையை நோட்டமிடுவதை பார்த்தவளுக்கு பதட்டம் கூடியது.
நேரத்தோடு எழவில்லையென்று காலையிலே ஏதேனும் சொல்லிவிடுவாரோ என்று கலக்கமாக அவரைப் பார்ப்பதும் அறை வாயிலைப் பார்ப்பதுவுமாக இருந்தவள் “அத்த காப்பியா டீயா என்ன போடட்டும்” என்று வந்து நின்றாள் ராக்காயி முன்.
“எல்லாருக்கும் டீதான் உன் புருஷனுக்கு மட்டும் டிகாஷன் கூட இருக்கணும், எல்லார்க்கும் போட்டு வெச்சுடு சொந்தகாரங்க வந்து போக இருப்பாங்க அவங்களுக்கு மட்டும் அப்போ போட்டுக்கலாம்” என்றவர் விழிகள் மீண்டும் அந்த அறையைப் பார்க்கக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள் செவ்வந்தி.
தலையை நிமிர்த்தவேயில்லை ஒருவித தயக்கத்தோடு அவள் தடுமாற “பொம்பள எழுந்திருக்கிற நேரமா இது யாரவது சொந்தகாரங்க வந்திருந்தா என்னயதான் கேவலமா பேசுவாங்க என்னதான் சொல்லிகுடுத்து வளத்தங்களோ” என்க அவள் விழிகள் நிறைந்தது.
அவசரமாக அக்காவின் அருகில் சென்ற கனகாம்பரம் “வாக்கா வந்து குளி” என்று அவளை அழைத்துச்சென்றாள், தனக்கு முன்னே தங்கை எழுந்துவிட்டாளே தான் இப்படி பொறுப்பு இல்லாமல் இருந்துவிட்டோமே என்ற வருத்தம் ஒருபுறம் அதோடு தங்கையின் முகத்தை ஆராய்ந்தாள் செவ்வந்தி தங்கைக்கு ஏதேனும் கஷ்டம் இருக்குமோ என்று.
செவ்வந்தியின் விழிகள் எல்லாம் சிவந்து என்னவோ போல் இருந்தாள் குளித்துவந்தும் அவள் முகத்தில் தெளிச்சமில்லை விழிநீர் வழிந்துகொண்டே இருக்க “என்னக்கா என்னாச்சு” என்றாள் கானகம்.
தங்கையின் தோளில் சாய்ந்து வெடித்து அழுதாள் செவ்வந்தி கனகம் பதறிவிட்டாள் “அக்கா… அக்கா இங்க பாரு என்ன? என்னாச்சு சொல்லு மனசு பதறுது” என்றாள் கனகம்.
“ரூமுக்குள்ள போனேன் புள்ள, ஒத்தவர்த்த பேசல கனகம் அவரு அப்படியே என்னை… எனக்குப் பிடிக்கல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அழுதும் விடல” என்று தேம்ப அவளை அப்படியே அணைத்துக்கொண்டாள் கனகம்.
தமக்கை அடுத்து கூறியவார்த்தை கனகத்தின் விழிகளை நிறைத்தது “அழுவாத சரியாயிடும்” என்றாள் வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை அவளுக்கு.
செவ்வந்தியை விடச் சின்னவள், அவளுக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது ஆறுதலாக என்ன சொல்ல என்றும் புரியவில்லை.
“ஏய்…” என்ற சத்தத்தில் இருவரும் பதறிப் பார்க்க “ஏண்டி எழுந்திருச்சு வந்ததும் லேட்டு இதுல ஆற அமர அக்காளும் தங்கச்சியும் கத பேசிட்டு நிக்குறீங்க சரியான விடியாமூஞ்சியா நீ”.
“தாலி கட்டி வந்த மறுநாளே இப்படி ஒப்பாரி வெக்குறயே என் வீடு வெளங்காம போகவா ஒரு விளக்கு வெக்கல சாமி கும்பிடல” என்றவர் கனகத்தை பார்த்து “நீயும் உன் அக்கால மாதிரி தானா இன்னும் புருஷன் கூட வாழ ஆரம்பிக்கல இல்லனா நீ ஏழு மணிக்குத்தான் வெளில வந்திருப்ப போல” என்க.
செவ்வந்தி அதிர்ச்சியாகத் தங்கையைப் பார்க்க அவள் கையை அழுத்திப் பிடித்த கனகம் “இல்லத்தை வீட்டு ஞாபகம் வேற ஒண்ணுமில்ல இதோ விளக்கு வெச்சிடுறோம்” என்றவள் தமக்கையை கையைப் பிடித்து இழுத்து சென்றாள்.
“விளக்கேத்துக்கா” என்றவள் அருகிலே நின்றுகொண்டாள் அது முடிந்ததும் அப்படியே அக்காவின் கையை விடாமல் அழைத்துக்கொண்டு அடுப்படிக்கு சென்றவள் வேகமாக டீ வைத்து மாமியாருக்கு எடுத்துச்செல்ல.
“என்ன பழக்கம் இது வீட்டு ஆம்பளைக்கு முதல்ல கொடுக்கணும்னு தெரியாது” என்று அதற்கும் அவர் தொடங்க “விடு ராக்காயி நான் எழுந்துரிச்சத மருமக பாத்திருக்காது” என்ற கனகசபை “குடும்மா” என்று வாங்கிக்கொண்டார்.
உள்ளே சென்றவள் கூடத்தை எட்டி பார்த்துவிட்டுச் செவ்வந்தியின் கையில் தேநீரை வைத்து “சீக்கிரம் குடி” என்று அவளை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி நிறுத்தினாள்.
“உனக்கு” என்ற செவ்வந்தியிடம் வாயில் ஒற்றை விரலை வைத்துப் பேசாதே என்றவள் “குடி” என்றதோடு மாமியாருக்கு எடுத்துச் சென்றாள்.
“உன் அக்காகிட்ட மூத்தவனுக்கு டீ கொண்டுபோய் குடுக்கச்சொல்லு, அப்படியே உன் புருஷன் மேலே தூங்குறான் அவனுக்கு நீயும் குடுத்துடு” என்றவர்.
“குடுத்துட்டு ரெண்டு பேரும் சட்டுனு வந்திரனும் சொந்தமெல்லாம் வர ஆரம்பிச்சிடும் காலைல சாப்பாடு நம்ம வீட்டுலதான், ஒரு இருவது பேரு சாப்பிடுற மாதிரி நீங்கதான் சமைக்கணும் ராஜி எழுந்திரிச்சதும் ஒத்தாசைக்கு வருவா” என்க.
“சரித்த” என்றவள் ஒரு கிளாஸை செவ்வந்தியின் கையில் கொடுத்து அவளை அனுப்பிவிட்டு ஒன்றை தான் எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.
மொட்டை மாடி வெறிச்சென்றிருந்தது அவனை அங்கே காணவில்லை மீண்டும் கீழே வந்தவள் “அவங்க அங்க இல்லத்த” என்க.
“அதுக்குள்ள எழுந்து போய்ட்டானா வயலுக்குத்தான் போயிருப்பான் இவனுக்கு இதே வேலை அதைக் கொண்டு போய் வை வந்ததும் சூடு பண்ணி குடுத்தா போதும்” என்க செவ்வந்தியும் வந்துவிட்டாள்.
“மாவு இருக்கு இட்லி பொங்கல் சாம்பார் சட்னி கூடவே இனிப்புக்குக் கேசரி பண்ணிடுங்க” என்றவர் “ஹ்ம்ம் ரெண்டு பேர் இருந்தும் காலைல சுடுதண்ணிக்கே ஆறு மணிக்கு மேல ஆயிடுச்சு நான் கல்யாணம் செஞ்சு வந்த மறுநாள் காலைல ஏழு மணிக்கெல்லாம் முப்பது பேருக்கு ஒத்த ஆளா சமச்சிட்டேன்” என்க.
“உங்க மவ எத்தனை பேருக்குச் சமைச்சாங்க” என்று மனதிற்குள் கேட்டுக்கொண்ட கனகம் அமைதியாகவே நின்றாள்.
வீட்டின் பின்னால் விறகடுப்பில் பெரிய குண்டானில் கொதித்துக்கொண்டிருந்த தண்ணீரில் பொங்கலுக்கு அரிசி பருப்பை கழுகி போட்டுவிட்டு இட்லியை ஊற்றி மற்றோரு அடுப்பில் இருந்த இட்லி குண்டானிலும் வைத்த கனகம் அடுப்படி வரச் செவ்வந்தி சிரமப்பட்டு சாம்பாருக்கு காய்களை நறுக்கிக்கொண்டிருந்தாள்.
முகம் முன்பை விட வீக்கம் கண்டு என்னமோ போல் இருக்க “என்னாச்சுக்கா” என்று அவள் அருகில் சென்ற கனகம் நெற்றியில் கை வைத்துப் பார்க்க நெருப்பாய் கொதித்தது.
“என்ன இப்படி காச்சல் அடிக்குது” என்று பதறியவளுக்கு யாரிடம் சொல்ல என்ன செய்ய என்ற பதட்டம்.
“நான் போய்ச் சொல்றேன் டாக்டர்கிட்ட போலாம்” என்றாள் கனகம்.
“அச்சோ… ஏய் சும்மா இரு இப்போ எதுவும் சொல்லாத” என்று அவளைப் பிடித்து நிறுத்தினாள் செவ்வந்தி.
“ஏதே சொல்ல வேண்டாமா உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா இப்படி கொதிக்குது சொல்லாம எப்படி ஆஸ்பத்திரி போறது” என்றாள்.
“சொன்னா புரிஞ்சிக்கோ கனகம், கல்யாணம் முடிஞ்ச மறுநாள் இப்படி காச்சல் சொன்னா வேற மாதிரி பேசுவாங்க புள்ள, மொத ராத்திரி நல்லா முடிஞ்சிச்சா, என்னாச்சு? எப்படி? என்னன்னு தெரிஞ்சிக்கவே ஊர்ல பொம்பளைங்க பொண்ணை பாக்க வந்தோம்னு வந்து நிப்பாங்க”.
“சொல்ல முடியாது ஏதாவது மனசு கஷ்டப்படுற மாதிரி கூடப் பேசிடுவாங்க வேண்டாம்” என்றாள் செவ்வந்தி சோர்வாகக் கனகத்திற்கு என்ன செய்ய என்று புரியவில்லை, இந்த நொடி தாயை வெகுவாகத் தேடியது மனது.
செல்லியம்மாவும் காலையிலே மகள்களுக்கு அழைத்துப் பேசினால் ராக்காயி எதுவும் சொல்லுவாரோ என்ற தயக்கத்தினாலே பல்லைக் கடித்துக்கொண்டு அங்கு அமர்ந்திருந்தார் காலைச் சாப்பாடு முடியட்டும் அழைக்கலாம் என்று.
“நீ சும்மா ஒக்காரு நான் பாத்துக்குறேன்” என்ற கனகம் வேகமாக வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள், இதெற்க்கெல்லாம் ஆள் வைத்துக்கொண்டால் போதும் அப்படி வைத்துக்கொண்டால் அவர் ராக்காயி இல்லையே.
எத்தனை பேர் வந்தாலும் என் மருமகள்களே பார்த்துக்கொள்வார்கள் என்று அனைவருக்கும் காண்பிக்கவேண்டுமே, இங்கு நடக்கும் எதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று அங்கு வந்து அமர்ந்தான் யோககுமாரன்.
பொங்கலுக்கு தாளித்து கொட்டி அடுத்த ஈடு இட்லியை வைத்துவிட்டு கனகம் வருவதற்குள் சாம்பாரை வைத்து முடிந்த்திருந்தாள் செவ்வந்தி, தேங்காயை துருவ அவள் தடுமாறிக்கொண்டிருக்க அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கிய கனகம் “பேசாம ஒக்காரு” என்றவளுக்கு விழிகள் நிறைந்தது.
உடன் பிறந்தவளுக்கு உடல் கொதிக்கிறது தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே அந்த இயலாமை கோபமாகவும் வெறுப்பாகவும் மாறிக்கொண்டிருந்தது.
பொண்டாட்டியை போட்டு இப்படி படுத்திட்டு எப்படி இப்படி மனசாட்சியே இல்லாம ஒக்காந்திருக்காரு இவரு என்று மனதில் அக்காள் கணவனைத் திட்டிக்கொண்டிருந்தவள், யாரிடம் சொல்லி மருந்து வாங்கிவரலாம் என்ற யோசனையோடு சட்டினிக்கு தயார் செய்தாள்.
ராஜலஷ்மியை இந்தப் பக்கமே காணும், அந்த நேரம் ராக்காயின் குரல் அவளை வந்தடைந்தது “ஏய் பொண்ணுங்களா உள்ளேயே என்ன பண்றீங்க டீ எடுத்துட்டு வாங்க” என்க.
வெளியில் எட்டி பார்த்தாள் கனகம் ஒரு நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர் ‘இது வேறா’ என்று எண்ணியவள் டீக்கு தண்ணீர் வைக்க “ஏண்டி சின்ன மருமகளே உன் புருஷன் வந்துட்டான் பாரு அதைச் சூடு செஞ்சு கொண்டுவா” என்று மீண்டும் கத்தினார்.
செவ்வந்திக்கு அவளைச் சுற்றி நடப்பது ஒன்றுமே புரியவில்லை இரவு அந்த அறைக்குள் நுழைந்த நொடிமுதல் அவள் அனுபவிப்பது வலி மட்டுமே எங்கேனும் சுருண்டுகொள்ள வேண்டும் என்றது உடல்.
மாமியாரின் குரலில் திடுக்கிட்டவளுக்கு அப்பொழுதுதான் அவர் காலையில் சொன்ன விஷயம் நினைவு வந்தது, தங்கையும் ராஜகுமாரனும் இரவு ஒன்றாக உறங்கவில்லை என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு கனகத்தை பார்த்தவள்.
“கனகா ராத்திரி ரெண்டு பெரும் தனி தனியாவை தூங்குனீங்க… ஏன்?” என்றாள் ஈனசுவரத்தில்.
error: Content is protected !!