வெற்றியையும், வர்ணிகாவையும் ஜோடியாய் பார்த்த வினிதாவின் நெஞ்சம் நிறைந்து போனது. வெற்றி நேராக அவளை அங்கு தான் அழைத்து சென்றிருந்தான்.
வர்ணிகாவைப் பார்த்ததும் முதலில் வினிதா தலை நிமிர்ந்து பேசவேயில்லை. அவளின் முகத்தைப் பார்த்து பேசவே அவரால் முடியவில்லை. ராஜேஷ் செய்து வைத்திருந்த காரியத்திற்கு வினிதா தான் தலை குனிய வேண்டியிருந்தது.
“உன்னை நேரா பார்த்து பேசுற தகுதி கூட எனக்கு இல்லை வர்ணி. எங்களுக்காக நீ இவ்வளவு யோசிச்சிருக்கும் போது, உனக்காக நான் எதையும் யோசிக்காம விட்டுட்டேனோன்னு மனசு அடிச்சுக்கிது. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் ஏதாவது பண்ணியிருப்பேன் வர்ணி. எதுவுமே தெரியாம ஒரு முட்டாள் மாதிரி இருந்துட்டேன்..” என்றார் வினிதா கண்ணீருடன்.
“அப்படி சொல்ல முடியாதும்மா..! உங்க கவனம் முழுசா எங்களை பார்த்துக்கிறதுல தான் இருந்தது. அதனால் தான் நீங்க வேற எதைப் பத்தியும் யோசிக்கலை. நீங்க ஒரு நாளும் உங்களுக்காக யோசிச்சதே இல்லைம்மா..எப்பவும் எங்களைப் பத்தின நினைப்பு தான் உங்களுக்கு. இதுல உங்க மேல தப்பு சொன்னா, அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டாரும்மா..” என்றாள் அவளும் கண்ணீருடன்.
“என்ன சொல்லு நிகா… காட்டுக்குப் போறேன்னு சொல்லி மாம்சை இப்படி கரெக்ட் பண்ணிட்டு வந்துட்டியே. நீ பலே கில்லாடி தான்…” என்றாள் ஸ்ருதி.
“அடி வாங்கப் போற ஸ்ருதி..” என்றாள் வர்ணி.
“மாமா, தயவு செய்து இவளை கூட்டிட்டு போய்டுங்க..கல்யாணம் ஆன பொண்ணு,மாப்பிள்ளை அப்படியே புதுசா இருக்கீங்க. ஆனா, உங்க கல்யாண ஆல்பம் அறுந்த பழசாகிடுச்சு. அதுக்குக் காரணம் வேற யாருமில்லை. உங்க பொண்டாட்டிதான். அந்த போட்டோவுக்கு வாயிருந்தாலும் அழுதிருக்கும்..” என்றாள் ஸ்ருதி சிரித்துக் கொண்டே.
“அப்படியா சொல்ற..? இனி அதுக்கெல்லாம் வேலை இல்லை. நிஜமே நேர்ல இருக்கும் போது, இனி போட்டோவுக்கு வேலையிருக்காதுன்னு நினைக்கிறேன்.. இல்லையா வர்ணி..” என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி.
“ஹி..ஹி..!” என்று இளித்து வைத்தாள் வர்ணிகா.
“இப்போ அவருக்கு எப்படி இருக்கு ஆன்ட்டி..” என்றான் வெற்றி.
“ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காரு தம்பி. எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகும் டிஸ்சார்ஜ் பண்ண..” என்றார் வினிதா.
“டாடியைப் பார்க்க போகலாம் வெற்றி..” என்றாள் வர்ணி.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! நீ போய் ஒழுங்கா மாப்பிள்ளை கூட குடும்பம் நடத்துற வழியைப் பாரு..” என்றார் வினிதா கோபமாக.
“அம்மா..! ப்ளீஸ்..! எனக்கு அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவள் வெற்றியை வற்புறுத்தி, ராஜேஷ் இருந்த மருத்துவமனைக்குச் சென்றாள். எப்போதும் டிப் டாப்பாக இருக்கும் ராஜேஷை அப்படி பார்த்தது அவளுக்கே ஒரு மாதிரி தான் இருந்தது. வெற்றிக்கு அப்படி ஒன்றும் மனதில் பெரிதாக கவலையெல்லாம் தோன்றவில்லை.
“எப்படி இருக்கீங்க டாடி..?” என்றாள் வர்ணிகா. அவளின் கேள்விக்கு ராஜேஷ் எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார். அவர்கள் இருவரும் பேசட்டும் என்று வெற்றி வெளியே வந்துவிட்டான்.
“என்னால உங்களை இப்படி பார்க்க முடியலை. என்ன இருந்தாலும், நீங்க என்ன பண்ணியிருந்தாலும், எனக்கு உங்கமேல கோபமெல்லாம் இல்லை. வருத்தம் மட்டும் தான். எனக்கு இந்த சொத்து எதுவுமே வேண்டாம் டாடி. நான் எல்லாத்தையும் உங்க பேருக்கோ, இல்லை ஸ்ருதி பேருக்கோ எழுதிக் குடுத்திடுறேன். எனக்கு வெற்றி மட்டும் போதும் டாடி. நீங்க என்ன நினைச்சு அவரை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னு தெரியாது. ஆனா, அதுக்காகவே இந்த சொத்து முழுசையும் நான் எழுதிக் குடுக்கத் தயாரா இருக்கேன். எனக்கு வினிதாம்மா நிம்மதியும், ஸ்ருதியோட சந்தோசம் மட்டும் தான் முக்கியம். என்னோட சந்தோசம் வெற்றி தான் டாடி. இனியாவது மனசுல வேற எண்ணங்களை வளர்த்துக்காதிங்க. ஸ்ருதிக்கு நீங்க தான் ஹீரோ. அந்த பிம்பம் உடைஞ்ச வரைக்கும் போதும். அது மொத்தமா இல்லைன்ற ஒரு நிலையை உருவாக்கிடாதிங்க…” என்றாள் கலங்கிய கண்களுடன்.
அவள் பேசுவதையெல்லாம் கேட்ட ராஜேஷிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனதில் ஏதோ ஒன்று சரிந்து கொண்டிருந்தது. அவர் பேசாமல் இருந்தாலும், கண்கள் லேசாக கலங்கியிருந்ததைப் போல் இருந்தது.
“எனக்கு அம்மா, அப்பா, தங்கைன்னு நீங்க வந்து நின்னா அதுவே போதும். மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான். உடம்பைப் பார்த்துக்கோங்க..” என்றவள், கலங்கிய கண்களுடன் வெளியே வந்துவிட்டாள்.
“என்ன? பேசி முடிச்சாச்சா..?” என்றான் வெற்றி கிண்டலுடன்.
“ம்ம்..” என்று அவள் தொண்டை கமர,
“சரி நானும் என் மாமனார்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வரேன்..” என்றவன் நேராக ராஜேஷிடம் சென்றான்.
“என்ன மாமா..? நலமா..?இனியாவது திருந்தர ஐடியா இருக்கா இல்லையா..? திருந்திட்டா நல்லது. திருந்தலைன்னா, இன்னைக்கு காரை லேசாதான் உரச சொன்னேன். மறுபடியும்ன்னா மொத்தமா ஜோலியை முடிக்க சொல்லிடுவேன். காசு குடுத்தா, யார் வேணும்ன்னாலும் யாரை வேணும்ன்னாலும் முடிப்பாங்க.. இதெல்லாம் உங்களுக்கு என்ன புதுசா..? நீங்க உங்க மாமனார் கதையை முடிச்சிங்க. தேவை ஏற்பட்டா, நான் என் மாமனார் கதையை முடிப்பேன். ஜாக்கிரதை. இனி நீங்க வர்ணிகா விஷயத்துல தலையிடக் கூடாது. தலையிட மாட்டிங்கன்னு நினைக்கிறேன்..உடம்பைப் பார்த்துக்கோங்க.. வரட்டுமா மாமனாரே..!” என்றவன், ராஜேஷை திரும்பியும் பார்க்காமல் வந்து விட்டான்.
“டாடி கிட்ட என்ன சொன்னிங்க..?” என்றாள் வர்ணி.
“டாடியா அவரு..சரியான கேடி..” என்றான்.
“ம்ம்ம்…” என்று வர்ணி அவனை முறைக்க,
“இந்த உலகத்துல உண்மைக்கே இடமில்லை..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே சென்றான்.
வெற்றியின் வீட்டில்…
அவர்கள் ஜோடியாக உள்ளே நுழைவதைப் பார்த்த பொன்னிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
“வெற்றி அப்படியே வெளியவே நில்லுங்க..!” என்றவர் வேகமாய் ஆரத்தியை கரைத்து எடுத்து வர, அவரின் அந்த ஒரு செயலிலேயே மொத்தமாக விழுந்து விட்டாள் வர்ணிகா. இருவருக்கும் ஆலம் சுற்றியவர்,
“வலது காலை எடுத்து வச்சு உள்ள வாம்மா..” என்றார்.
“வாம்மா..! வாடா..” என்றார் மேகநாதன்.
“அப்பா..!” என்று கண்கள் கலங்க அவரை அழைத்தவள், அவர் காலிலேயே விழுந்து விட்டாள்.
“என்னம்மா நீ..? இப்ப எதுக்கு இப்படி பண்ற..?” என்று பதறிப்போனார் மேகநாதன்.
“உங்களை நான் முன்ன பின்ன பார்த்ததில்லை. ஆனா, உங்க நண்பன் பொண்ணுன்ற ஒரு காரணத்துக்காக நீங்க இவ்வளவு தூரம் மெனக்கெட்டு என் வாழ்க்கையை காப்பாத்திக் குடுத்திருக்கிங்க. எனக்கு என்னோட அப்பாவையே நேர்ல பார்த்த மாதிரி இருக்கு..” என்றாள்.
“இப்ப என்ன..? அவன் இல்லைன்னா என்ன..? அதான் நான் இருக்கேன்லமா..” என்று மேகநாதனும் கண்கள் கலங்க…
“அம்மா..! சத்தியமா என்னால முடியலைம்மா..! உன் புருஷன் என்னைக்காவது என்கிட்டே இப்படி பாசமா பேசியிருப்பாரா..? இப்ப பாரு என்னவெல்லாம் நடக்குதுன்னு..? இவருக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியும்ன்னே எனக்கு இன்னைக்குத் தான தெரியும்..” என்று சிவாஜியைப் போல் பேசி வைக்க,
“உனக்கு என்னோட பாசமெல்லாம் எங்க தெரிய போகுது. உனக்கு இப்படி ஒரு அருமையான பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு.. எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்..” என்றார் மேகநாதன்.
“இந்த ஒரு விஷயத்தை பண்ணி தான், மத்த எல்லா விஷயத்துல இருந்தும் தப்பிச்சுட்டிங்க..” என்றான் வெற்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் அப்படி ஒரு மகிழ்ச்சி நிலவியது.
வர்ணிகா, வீட்டில் விளக்கேற்றி, பொன்னி சமைத்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சந்தோஷமாய் சாப்பிட்டு முடித்தனர்.
“அம்மா..! நாங்க நாளைக்குக் கிளம்பறோம்..” என்றான் வெற்றி மொட்டையாய்.
“என்ன வெற்றி சொல்ற..? ரெண்டு நாள் இருப்பேன்னு சொன்ன..?” என்றார் பொன்னி.
“இப்பவே ஒரு நாள் கணக்கு ஆகிடுச்சு. நாளைக்கு இங்கயே பாதி நாள் ஆகிடும். அப்போ ரெண்டு நாள் கணக்கு சரிதான..?” என்றான் வெற்றி.
“இப்ப எதுக்கு மருமகப் புள்ளைய மறுபடியும் காட்டுக்குள்ள கூட்டிட்டுப் போற. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வர்ணிகா இங்கயே இருக்கட்டும். வேணும்ன்னா நீ மட்டும் கிளம்பு..” என்றார் மேகநாதன்.
“அம்மா..! என்னையவே எப்பவும் குத்தம் சொல்லுவிங்களே..! உங்க புருஷனுக்கு கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருக்கா..? கல்யாணம் ஆகி இத்தனை மாசம் வரைக்கும் தான் தனியா குப்பை கொட்டுனேன். இப்பதான் என் பொண்டாட்டி வந்துட்டால்ல.. இப்பவும் இவரு எண்டு கார்டு போட்டா என்ன அர்த்தம்..?” என்றான் கோபமாய்.
“அங்க என்ன முனுமுனுப்பு..?” என்றார் மேகநாதன். வர்ணிகா சிரித்து வைக்க,
“நீ சிரிப்ப டி…என் பொழப்பு தான் இங்க சிரிப்பா சிரிக்குது..” என்று சிடுசிடுத்தவன்,
“இவர்கூட எப்படித்தான் இத்தனை வருஷம் குடும்பம் நடத்துனிங்கன்னு கேட்டுகிட்டு இருந்தேன்..” என்றான் வெற்றி.
“உன்னைய பெத்து வளர்த்ததுலையே தெரியலையா.. நான் குடும்பம் நடத்துன லட்சணம்..” என்றார் மேகநாதன்.
“விவஸ்தை கெட்டவன்… அந்த பிள்ள முன்னாடி எப்படி பேசி வைக்கிறான் பாரு. எல்லாம் உன்னையச் சொல்லனும், நீ பிள்ளை வளர்த்த லட்சணம் அப்படி..” என்ற மேகநாதன் எழுந்து உள்ளே சென்று விட்டார்.
“ஆமா, இவருக்கு ஒண்ணுமே தெரியாது. சரியான ஆள் தான்மா இவரு..” என்று வெற்றி சொல்லி சிரித்துக் கொண்டிருக்க, உள்ளே சென்ற மேகநாதனும் கூட சிரித்து தான் கொண்டிருந்தார். அவருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு சந்தோசம், மன நிறைவு.
அவர்கள் மூவரையும், அவர்கள் பேசிக் கொள்ளும் விதத்தையும் பார்த்த வர்ணிகாவிற்கு புதிதாக இருந்தாலும், அது அவளுக்கும் பிடித்து தான் இருந்தது.
“என்ன..?” என்றான் வெற்றி புருவத்தை உயர்த்தியபடி.
“ஒண்ணுமில்லை..” என்பதைப் போல் தலையை ஆட்டி வைத்தாள் வர்ணிகா.
“ஒன்னுமில்லையா..?” என்றான் மீண்டும்.
“ஒன்னுமேயில்லை..” என்றாள் லேசான சிரிப்புடன்.
அன்றைய நாள் அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாளாகத் தான் இருந்தது.
மறுநாள் வர்ணிகாவைக் கூப்பிட்டுக் கொண்டு கிளம்பியிருந்தான் வெற்றி. மேகநாதன் அவருக்கு ஆயிரம் புத்தி சொல்லி அனுப்ப,
“எல்லா மாமனாரும் மருமகளுக்கு புத்தி சொல்லி அனுப்புனா, இவரு மட்டும் தான் மகனுக்கு புத்தி சொல்லி அனுப்புறாரு. இவரு என்ன பீசுன்னே புரிஞ்சுக்க முடியலைம்மா..” என்றான் வெற்றி.
“அவரைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே வெற்றி..” என்றார் பொன்னி.
“எனக்குத் தெரியும். ஆனா, இவளுக்குத் தெரியாதுல்ல. பாரு எப்படி முழிச்சுகிட்டு இருக்கான்னு..” என்றவன் அடக்கமாட்டாமல் சிரிக்க, அசடு வழிந்து வைத்தாள் வர்ணி.
மீண்டும் காட்டை நோக்கிய அவர்களின் பயணம் தொடங்கியது. அது ஒரு இனிமையான பயணம்.
மீண்டும் அங்கே சென்றவளுக்கு பரவசமாக இருந்தது. தன்னுடைய இடத்திற்கே வந்து விட்டதைப் போன்ற ஒரு சந்தோஷம்.
“என்ன மேடம்..? ஹேப்பியா..?” என்றான்.
“ரொம்ப..” என்றவள்,
“என் பிரண்ட்ஸ் இருந்தப்ப இன்னும் நல்லா இருந்தது..” என்றாள்.
“அதுக்காக அவங்க காலம் புல்லா நம்ம கூட இருக்க முடியுமா..? நாம இப்படி காடு காடா சுத்தித் தான் ஆகணும். இது எனக்கு காட்டுக்குள்ள வந்தா தங்குறதுக்கு குடுத்த இடம். உன்னால இங்க இருக்க முடியலைன்னா, எனக்கு வெளிய பெரிய ஹவுசே இருக்கு. அங்க போய்டலாம். ஆனா, அது காட்டுக்கு வெளிய தான் இருக்கு..” என்றான் வெற்றி.
“நாம இங்கயே இருக்கலாம்ங்க..” என்றாள்.
“சார்..! வந்துட்டிங்களா..?” என்ற பிகாரிக்கு, அப்போது தான் மூச்சே வந்தது.
“என்ன பிகாரி..? நான் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருந்த போல..?” என்றான் கிண்டலாய்.
“இந்த கிண்டல் தான் வேணாம்ன்னு சொல்றது சார். இன்னும் ரெண்டு நாள் இப்படி தனியா இருந்திருந்தா, இந்த வேலையே வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிருப்பேன் சார்..” என்றான் பிகாரி.
“நீ இப்படி செய்வன்னு தெரிஞ்சு தான் சீக்கிரமே வந்துட்டேன். உனக்கு லீவ் வேணும்ன்னா நீ எடுத்துக்கோ..” என்றான் வெற்றி.
“நீங்க தெய்வம் சார்..! இந்த வார்த்தையை எப்ப சொல்லுவிங்கன்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..நான் கிளம்புற வழியை பார்க்கிறேன் சார். இந்த மாசம் புல்லா இப்படி மழை இருந்துகிட்டே தான் இருக்கும். இதைப் பார்த்திட்டு இருந்தா, நான் எப்ப பொண்ணுப் பார்க்க போறது..? எனக்கு எப்ப கல்யாணம் நடக்குறது..?” என்ற பிகாரி, கிளம்பி விட்டான்.
“காட்டுக்குள்ள சர்வே பண்றது அவ்வளவு கஷ்ட்டமா என்ன..?” என்றாள் வர்ணி.
“இதை நேசிக்கிறவங்களுக்கு இது கஷ்ட்டமா தெரியாது. அது மட்டுமில்லாம, இங்க எல்லாமே கிடைக்கும். மழை காலத்துல மட்டும் தான் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும். மத்தபடி, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடாது..” என்றான் ரசனையுடன்.
“எனக்கும் கூட ரொம்பப் பிடிச்சிருக்குங்க..” என்றாள்.
“எது..? இந்த காட்டையா..? இல்ல என்னையா?” என்றான்.
“ம்ம்ம்..! இந்த காட்டானை..” என்றாள் சிரிப்புடன்.
“அடிப்பாவி..! நான் உனக்கு காட்டானா..? நல்ல வருவடி..காட்டான் ரொம்ப கெட்டவன்..” என்றான்.
“சொல்லிகிட்டாங்க..!” என்றாள் நக்கலுடன்.
“ஏண்டி சொல்ல மாட்ட..!” என்றான்.
“என்னை அந்த பால்ஸ்கிட்ட கூட்டிட்டு போறிங்களா..?” என்றாள்.
“இப்போதைக்கு அங்க போறது டேஞ்சர். அன்னைக்கு காலையில போய்ட்டே, நீ அந்த பாடு பட்ட. இப்போ சாயந்திரம் ஆய்டுச்சு. சோ..நோ..” என்றான் வெற்றி.
“ஏங்க பிளீஸ்..” என்றாள் மீண்டும்.
“என்னைய சோதிக்காதடி..! அதுவும் இப்படி சேலையோட அவ்வளவு தூரம் உன்னால நடக்கவே முடியாது. நாளைக்கு போய்க்கலாம்..” என்றான் வெற்றி.
“ஒன்னும் தேவையில்லை..” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.
“கோபப்பட்டா பட்டுகட்டும்..இவளை கூட்டிட்டு போய், அவஸ்தை படுறது யாரு..?” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான்.
அதற்குள் அவனுக்கு இரண்டு மூன்று அழைப்புகள் வர பேசிக் கொண்டிருந்தான். அப்போது வரை அவள் வெளியே வரவேயில்லை. இருட்டிய பிறகும் கூட அவள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை.
“வர்ணி..! பசிக்கலையா..?” என்று வெற்றி பல முறை அழைத்தும் அவள் வரவேயில்லை.
“ஆரம்பமே அம்சமா இருக்குடா வெற்றி. மேகநாதன் இவளைக் கூட்டிட்டுப் போய் தனியா பேசுனப்பவே தெரியும். இப்படி ஏதாவது ஏடா கூடம் பண்ணுவான்னு..” என்று நொந்து கொண்டவன், அந்த அறையிலேயே அப்படியே படுத்து விட்டான்.
அவன் சத்தம் இல்லாததால், கொஞ்ச நேரம் கழித்து வெளியே எட்டிப் பார்த்த வர்ணி, அவன் தூங்குவதைப் பார்த்து மீண்டும் காண்டாகிவிட்டாள்.
‘ஒருத்தி கோபமா இருக்குறது கூட தெரியாம, எப்படி தூங்குறான் பாரு..’ என்று நடை பயின்றவள்.. ஒரு மணி நேரத்தை அப்படியே ஓட்டினாள். அவன் உண்மையாகவே தூங்கிவிட்டான் என்று தெரிந்தவளுக்கு எரிச்சல் தான் மிஞ்சியது.
“நானும் கொஞ்சம் ஓவரா போயிட்டேனோ..” என்று நினைத்தவள், ஒரு தலைகாணியை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்கு அருகில் பட்டென்று போட்டாள். அப்போதும் அவன் எழுந்தபாடில்லை.
ஒரு முடிவுக்கு வந்தவள், அவனை அணைத்துக் கொண்டு அவனுக்கு அருகிலேயே படுத்துக் கொண்டாள். அவள் அப்படி செய்வாள் என்று எதிர்பார்க்கதவனுக்கு தூக்கம் என்பது தொலைந்து போக, அவளை எதேச்சையாக அணைத்துக் கொண்டு தூங்குவதைப் போல் தூங்கினான்.
“வெற்றி..!” என்று அவனை மெதுவாக எழுப்பினாள்.
“ம்ம்!”
“வெற்றி..”
“ம்ம்ம்!..”
“எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. மனசுக்குள்ள தப்புத் தப்பா தோணுது..” என்றாள்.
“போடாங்..!” என்று கடுப்பில் அவள் எழுந்த அடுத்த நிமிடம், மீண்டும் அவன் மேல் கிடந்தாள்.
“விடுங்க..!” என்றாள் கடுப்புடன்.
“விடுறதுக்காடி, நான் இவ்வளவு கஷ்ட்டப்படேன்..!” என்றவன் அடுத்து அவளைப் பேசவே விடவில்லை. அந்த இரவு இருவருக்கும் தூங்கா இரவாக மாறிப் போனது. தன்னைத் தொலைத்த அவளிடத்தில் தேடலைத் தொடங்கியிருந்தான் வெற்றி.
இத்தனை நாள் மனக்காயங்களுக்கு இருவரும் மருந்தாகிப் போயினர்.
மழையவள், பூமியைத் தேடிய தன்னுடைய பயணத்தை மீண்டும் ஆரம்பித்து பொழிந்து கொண்டிருக்க, வெற்றியோ மீண்டும் மீண்டும் தன்னவளிடம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனின் திக்கு முக்கற்ற அன்பில் மூழ்கிப் போனாள் வர்ணிகா.
அவள் இப்போது… வெற்றியின் வர்ணிகா. இனி அவளுக்கு எல்லாமுமாய் அவன் இருப்பான்.
நம்பிக்கை என்ற வார்த்தையில் தான்… இங்கே பல திருமணங்கள் நடக்கிறது. அது சிலருக்கு அவ நம்பிக்கையாகலாம். சிலருக்கு துரோகமாகலாம்… இங்கே வர்ணிகாவிற்கு அவன் தன்னம்பிக்கையாகிப் போனான்.