Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினமே 6

அத்தியாயம் 6

பாறையில் விழுந்த மழைத்துளி போல அந்த ஒரு வாரம் எப்படி சென்றது என்றே தெரியாத நிலை தான் திருமண வீட்டினருக்கு… அதுவும் புதுமண தம்பதிகளை சொல்லவே வேண்டாம்..



Advertisement

முதல் நாள் கல்யாணம். மறுநாள் ரிசப்ஷன், அதற்கு பின்னான இரண்டு நாட்கள் மறுவீடு, முறை சீர் செய்தவர்களின் வீட்டில்  விருந்து என்று அந்த  வாரம் நில்லாமல் ஓடியது.

இதற்கிடையில் புதுமண தம்பதிகளுக்கு இடையிலிருந்த நெருக்கம் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி சொல்லிக் கொள்ளுமளவிற்கு இல்லை. உண்மையை சொல்லப்போனால் அந்த இடைவெளியை குறைக்க இருவருமே முயற்சிக்கவில்லை.

Advertisement

Advertisement

அன்று… ஒரு வாரத்திற்கு பிறகு சுதனும், இதயாவும் வீட்டில் தான் இருந்தனர். திருமணம் முடிந்து பத்து நாட்கள் கூட ஆகாமல் டிபார்ட்மெண்டிற்கு வர வேண்டாம் என்று ஈஸ்வர் கூறிவிட, வேறு வழியில்லாமல் வீட்டிலிருந்தே தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆம்! புதியதாக ஒரு புராஜக்ட்டில் இணைந்திருந்தான். ஆர்க்கிடெக்சர் ஒர்க் மட்டுமே இவனது… சிவில் ஒர்க் அனைத்தும் கோவையிலுள்ள பிரபல கான்ஸ்டிரக்ஷனிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை தான் பார்த்துக் கொண்டிருந்தான் சுதன்.

Advertisement

மும்மரமாக லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த கணவனைக் குறுகுறுவென பார்த்தவள் “மிஸ்டர் ஸ்டிரேஞ்சர் சார்…” என நீட்டி முழக்கி கணவனை அழைத்தாள்.

கணினியில் பார்வையை விலக்காமல் “சொல்லுங்க ஸ்டிரேஞ்சர் மேடம்…” என்றதும் மெல்லிய புன்னகை பெண்ணிடத்தில்…

அதே புன்னகையோடு அவனை மெளனமாக பார்த்தாள்…

நிமிடங்கள் கடக்க அவளது மெளனத்தில் “என்னமா…” எனக் கேட்டப்படி மடியிலிருந்த லேப்டாப்பை படுக்கையில் வைத்துவிட்டு மனைவியைப் பார்த்தான்.

“அதாவது ஸ்டிரேஞ்சர் சார் காலையில எழுந்ததுல இருந்து கடந்த ஒரு மணி நேரமா உங்களோட மூஞ்சியே பார்த்து பார்த்து ரொம்ப போர் அடிக்குது. நான் அத்தைகிட்ட போகவா?” என முகத்தை சுருக்கி ஏதோ போல் கூறியவளை முறைத்தான்.

கணவனின் முறைப்பில் ஈயென அனைத்து பற்களையும் காட்டி இளித்து வைத்தவள் “இல்லை, ஒரு வாரமா அங்க இங்கன்னு அலைஞ்சுட்டு இருந்தோமா அத்தை கிட்ட சரியா பேசவே இல்லை. இன்னைக்கு ஃப்ரீ தானே அதான்  அத்தைக்கிட்ட பேசிட்டே அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன்…” என்றாள் கதவை கண்களால் காட்டியப்படி….

“ம்ம்? என்ன நிலவுக்கு திடீருன்னு அத்தை மேல பாசம்?” என அவன் புருவத்தை உயர்த்தி கேலியாக கேட்டான்.

“திடீருன்னு எல்லாம் இல்லை, ஆரம்பத்தில இருந்தே அவங்களை எனக்கு பிடிக்கும். அண்ட் இந்த ஒரு வாரம் எதுவும் சரியா  பேச முடியல… அதான் வெளிய போகவான்னு கேட்கிறேன்…” என்று உதட்டை சுழித்து அழகு கட்டினாள்.

அக்கணம் சுதனின் நயனங்கள் இரண்டும் பாவையின் இதழ்களில் படிந்தது. அவளது இதழில் தன் இதழ்கள் கொண்டு கவியெழுத துடித்த மனதை அடக்க பெரும்பாடுபட்டு போனான்.

நிமிடம் மங்கையின்  சிவந்த இதழ்களை ஆழ்ந்து பார்த்தவன்  சட்டென  எழுந்து நின்று மனைவியின் முன் கை நீட்டி “வாங்க…” என்றான்.

அவனின் கைகளைப் பிடிக்காது அண்ணார்ந்து பார்த்தாள். இதுவரை இல்லாத ஓர் பார்வை மாற்றம் அவனிடத்தில்.  அவனையும், அவனது கையையும் மாறி மாறி பார்த்தாள். உண்மையாகவே அந்த பார்வையின் அர்த்தம் புரியாது விழித்தாள் பேதை.

அவளது பார்வையில் கண்களை சிமிட்டிக் கேசத்தைக் கோதிக் கொண்டே”ஜஸ்ட் நீ எழுந்துக்க ஹெல்ப் பண்றேன் நிலவே…” என்று அவள் முன் நீண்ட கரத்தை மடக்காது  கூறினான்.

பட்டென சுதனின் கைகளில் அடித்தவள் “வாங்க போவோம்…” என்று எழுந்து முன்னால் நடந்தாள்.

அவனோ அப்படியே நின்றான். அக்கணம் அவனது உணர்வுகள் பேயாட்டம் போட்டது. கைகளை இறுக மூடி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான்.

இரண்டடி முன்னால் எடுத்து வைத்தவள் திரும்பி ஆடவனை பார்த்தாள். அவன் அங்கையே நிற்கவும் மீண்டும் அவனிடம் வந்தவள் “மிஸ்டர் ஸ்டிரேஞ்சர் சார், வாங்க போவோம்…” என அழைக்க, அவன் அசைந்தான் இல்லை.

“ஸ்ஸப்பா, உங்களை வைச்சிட்டு…” என முனகி கொண்டே கட்டிலுக்கும், கணவனுக்கும் இடையிலிருந்த இடைவெளியில்  நின்று கணவனின் கண்களை பார்த்தபடி “போலாம்…” என்று அவள் கூற, அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

ஆனால் அவனின் பார்வை மங்கையின் இதழ்களில் மட்டுமே நிலைத்தது. கணவனின் பார்வை மொழி துளியும் புரியாமல் அவன் கோபமாக இருக்கிறான் என நினைத்தவள் அவனை சமாதானம் செய்யும் பொருட்டு “யோவ் மாமா போலாமா…” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் ‘ மாமா…” என்ற அழைப்பு இவன் அடக்கிக் கொண்டிருந்த உணர்வுகளை மொத்தமாய் கட்டவிழ்த்து விட, அவனுள் ஓர் உரிமை உணர்வும் எழுந்தது. அக்கணம் எதை பற்றியும் யோசிக்காமல் குனிந்து மங்கையின் செவ்விதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக வைத்தான்.

அவளின் இதழ்களின் மென்மையை தன் இதழ்கள் உணர்ந்தால் போதும் என நினைத்து விட்டானோ என்னவோ இதழோடு இதழ் பொருத்தி நின்றானே தவிர அதற்கு மேல் முன்னேறவில்லை. கணவனின் எதிர்பாராத முத்தம் இதயாவின் விழிகளை ஏகத்திற்கும் விரிய செய்தது.

மனைவியின் இதழ்களின் மென்மையில் மெல்ல மெல்ல அவன் உறுதி கரைந்தது. பாவையின் இதழ்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தாலே போதும் என்று நினைத்தான் தான் ஆனால் தற்பொழுது மொத்த இதழ் முத்தமும் வேண்டும் என்று தோன்றியது…

அச்சமயம் “எனக்கு மொத்தமா வேணும் நிலவே…” என்ற செய்தியை கண்களால் கூறியவன் அதிரடியாக அவளின் இதழ்களை தன் மீசை சூழ்ந்த இதழ்களுக்குள் அதக்கிக் கொண்டான். அவளோ கணவனின் செயலில் விழிகள் விரித்து கலங்கி போனவளாக திகைத்து நின்றாள்.

கணவனின் அதிரடி முத்தத்தில் இதுவரை அடிக்காத பெரும் பூகம்பம் ஒன்று அவளுள் வெடித்தது… உண்மையாகவே அவள் அந்த இதழ் தீண்டலை ரசித்தலா இல்லை  வெறுத்தாளா, இல்லை இரண்டிற்கும் இடையில் சிக்கி தவித்தாளா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இவள் இப்படியென்றால் சுதனின் நிலையோ படுமோசமாக இருந்தது.

வெறும் இதழ் தீண்டலே அவனுள் மொத்த உணர்வுகளையும் ஒரே நேரத்தில் வெளிக் கொண்டு வந்தது. இதழ் அணைப்பின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மனம் பரபரத்தது. ஆனால் அது அவளின் அனுமதி இல்லாமல் நடக்காதே என நினைத்தவன் அவளை பார்க்க அவளின் விழிகளின் விரிப்பும், திகைத்த முகமும் கண்களுக்குள் விழுந்தது.

பட்டென்று மொத்த உணர்வும் அறுபட, மங்கையின் இதழ்களை விட்டு பிரிந்தவன் “சாரி…. சாரி… சாரி இதயா, நான், நீ என்ன நிலையில இருக்கேன்னு தெரிஞ்சும் ப்ம்ச் சாரி…” என்றவன் அவளின் திகைத்த முகத்தை பார்க்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினான்.

அவளோ, அவன் விட்டு சென்ற அதே இடத்தில் தான் நின்றிருந்தாள். முதலில் திகைத்து நின்றது அவனின் இதழ் திண்டலில் என்றால் தற்போது திகைத்து நிற்பது அவனின் பேச்சில்.

ஆம் ‘நீ என்ன நிலையில இருக்கேன்னு தெரிஞ்சும்…’ என்ற வார்த்தை மனதில் ரீங்காரமாய் சுழற்றியடித்தது. உண்மையாகவே அவளுக்கு நடந்த கொடிய நிகழ்வை அந்நேரம் மறந்திருந்தாள்.  அதற்கு காரணம் அவளின் கணவனான சுதன் தான். ஆனால் தற்போது அதனை நினைவு படுத்தி சென்றதும் அவன் தான்.

தலையைப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்து விட்டாள். தலைவலி உயிரை வாங்கியது. அவன் தன்னை எப்படி நினைத்து வைத்திருக்கிறான் என்ற கேள்வி மனதில் அரும்பாக துளிர்க்க ஆரம்பித்தது.

மனதில் அரும்பாக துளிர்த்த கேள்வி அவளுக்கு மேலும் தலைவலியை கொடுத்தது. கண்களை சுழற்றியடிக்கும் தலைவலியின் தாக்கம் தாளாமல் கண்களை மூடி படுத்து விட்டாள்.

இங்கு வெளியில் சுதனின் மனமோ நிலைகொள்ளாமல் தவித்தது. மனைவியின் திகைத்த முகம் கண்முன்னே தோன்றி தவிக்க வைத்தது.

அவளிருக்கும் நிலையைப் பற்றி அறிந்தும் மங்கையை நெருங்கியது இவனை ஏதோ செய்தது.

உண்மையில் அனைத்தும் மறந்திருந்த இதயாவாக இருந்திருந்தால் நிச்சியம் ஹரியே அடுத்தடியை வைத்திருப்பான். ஆனால் இன்று அப்படியில்லையே!

தனக்கு நடந்த அனைத்து  கொடூரங்களையும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து அதை நினைத்து தன்னை தானே வருத்தி கொண்டிருப்பவள் அல்லவா… அதனால் தானே இவனையே வேண்டாம் என்று கூறினாள்.  அவள் எதற்கு பயந்தாலோ தற்பொழுது அதுவே நடந்து விட, மனம் முழுக்க அத்தனை அலைபுறுதல் சுதனுக்கு.

 ****

அதே நேரம் இங்கு சேலத்தில்..

ஒரு வாரமாக வீட்டில் சரியாக சமைக்கவில்லை என்பதாலோ என்னவோ இன்று வாசுவிற்கு பிடித்த  உணவுகளை சமைத்து கொண்டிருந்தார் ஜானகி.

இன்னும் மகன் உறங்கி கொண்டிருக்க அவன் எழுவதற்குள் சமையல் வேலைகளை முடிக்க வேண்டி அனைத்தும் அவசரமாக செய்து கொண்டிருந்தாள் பெரியவள்.

அக்கணம் “அத்தை…” என்று பெரியதான குரலில் அழைத்தாள் பெண். சமையலறையில் வேலைகளை செய்து கொண்டிருந்தவர் பெண்ணின் அத்தை என்ற குரல் கேட்டதும் முகம் முழுக்க புன்னகையோடு  வெளியில் வந்தார்.

வாசலில் நின்றவளைக் கண்டு பெரியதாக புன்னகை பூத்தவர்

“குட்டி மா… வாடா…ஏன் வெளியவே நின்னுட்ட உள்ள வா…” என்றவர் வந்தவளுக்கு நீரைக் கொடுத்தார்.

மெல்லிய புன்னகையோடு நீரை வாங்கி பருகியவளிடம் சொம்பை  வாங்கியபடி “அம்மா, அப்பா உன்னை விட்டதும் கிளம்பி போயிட்டாங்களா?…” எனக் கேட்டார்.

“ஆமாம் அத்தை… வெளியவே விட்டுட்டு போயிட்டாங்க… நீங்க இரண்டு பேரும் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கி இருக்கீங்கன்னு அம்மா சொல்லி விட்டாங்க… அங்க போனேன் வாட்ச் மேன் அண்ணா தான் நீங்க இங்க இருக்கிறதா சொன்னாங்க…” என்றாள்.

லேசாக தலையில் தட்டி “அச்சோ…  சொல்ல மறந்துட்டேன் டா. அன்னைக்கு இதைப்பத்தி தான் பேசிட்டு இருந்தோம் அதுக்குள்ள  வாசு வந்துட்டான்னு அப்படியே பேச்சு திசை மாறி போயிடுச்சு…” என்றவர் “நாங்க இந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆயிட்டோம் டா…” என்றார்.

சரியென்பதைப் போல் தலையாட்டியவள் சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.  தரைத் தளத்தில் பெரிய ஹாலும், இரண்டு அறைகளும், சமையல் அறையும் இருந்தது. சமையலறை ஒட்டி டைனிங் ரூமும் இருந்தது… ஹாலிற்கும், சமையலறைக்கும் இடையில் மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இருந்தன…

முற்றம் முழுக்க ஹை ரூப் சீலிங் என்பதால் மேல் இரண்டு தளங்களும் ஹாலில் நின்று இருந்தவளுக்கு நன்றாகவே தெரிந்தது…

” ஃபர்ஸ்ட் புளோர் முழுக்க இதயாக்கும், செகண்ட் பிளோர் முழுக்க வாசுக்கும் செட் பண்ணிட்டு தான் இதயா குட்டி கல்யாணமே பண்ணுச்சு… வாசு  தான் இங்க வர லேட் பண்ணிட்டான்…” பார்வை முழுக்க மேல் தளத்தின் மீது பதித்தப்படி நின்ற பெண்ணிடம் கூறினார்  ஜானகி.

பெரியவளின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் நினைவு வந்தவளாக  “அங்கிள், ஆன்டியை காணோம் அத்தை…” இதயாவின் பெற்றோர்களை கேட்டாள்.

“பிஸ்னஸ் விஷயமா வெளிநாடு போயிருக்காங்க மா. இன்னைக்கு காலையில தான் கிளம்பினாங்க…” என்றார்..

“சரிங்க அத்தை…” என்றவள் நொடி நேர மெளனத்திற்கு பிறகு  “நானும் கம்பெட்டிட்வ் எக்ஸாம் எழுதறேன் அத்தை. உங்க பையனோட  நோட்ஸ் எதாவது கிடைக்குமா? அம்மா, அப்பா வர வரைக்கும் பார்த்துட்டு இருப்பேன்…”  தயங்கியபடியே கேட்டாள் பெண்.

“இதை கேட்கிறதுக்கு எதுக்கு இத்தனை தயக்கம்…”என்றவர் மகனுக்கு அழைத்தார். அவன் அழைப்பை ஏற்காது போகவும்,

“அவன் இன்னும் தூங்கிட்டு இருக்கான் நினைக்கிறேன் மா. மேல தான் அவனோட ஸ்டடி ரூம் இருக்கு போயி பார்க்குறயா?…” எனக் கேட்டதும் மறுமொழி பேசாது சரியென்று தலையாட்டினாள்.

“செகண்ட். ஃப்லோர் ரைட் சைட் ரூம்…” என்றதும் மாடிப் படியை நோக்கி நடந்தாள்.

“ஹான் குட்டி ஒரு நிமிசம்…” என்றவர் கையிலிருந்த போனை மங்கையிடம் நீட்டியபடி “எனக்கு  அடுப்புல கொஞ்சம் வேலை இருக்கு. வாசு கூப்பிடுவான். அவன்ட நீயே பேசிடு…” என்றார்.

“ம்ம். சரிங்க அத்தை..” என்று அலைபேசியை வாங்கியவளின் மனமோ குத்தாட்டம் போட்டது…

மனதின் எண்ணத்தை நடையில் காட்டியப்படி மேல் தளம் நோக்கி நடந்தாள். இடையில் அவனது அலைபேசி எண்ணை தனது அலைபேசியில் குறித்து கொண்டாள்.

சுதனிடம் இவனது அலைபேசி எண் இருக்கிறது தான் என்றாலும் அவனிடம் கேட்டால் கலாய்த்தே ஒருவழி செய்து விடுவான்  என்றே கேட்கவில்லை. அது மட்டுமல்ல வாசு தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இடையிட்டால் நன்றாக இருக்காது என்றும் நினைத்தாள்.

*****

அந்த கொடூரனின் கண்கள் கஞ்சா போதையின் விளைவாக சிவந்திருந்தது. அவனின் நடையில் இருந்த மாற்றமே கூறியது அவன் இதற்கு புதிதல்ல என்று. அரக்கன் நெருங்கி வர வர “என்னை விடு…” என்ற அலறலில் பட்டென கண்களை திறந்தான் வாசுதேவன்.

“உப்ப்…” என மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிட்டவன்

முகத்தை அழுத்தி துடைத்த போதும் கனவின் மிச்சம் இன்னும் இருந்தது. மனதில் இருப்பது தானே கனவாய் வரும். அது தான் தினம் தினம் நேரம் தவறாமல் வந்து கொண்டிருந்தது. கண்ட கனவின் மிச்சம் நிஜத்தில் இவனுக்கு நடந்த கொடூரத்தின் நிஜம் அல்லவா!

அந்நேரம் பார்த்து அவனின் அலைபேசி ஒலித்தது…

‘ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்

ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்

இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே

இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே…’

என முழுவதுமாக அடித்து ஓய்ந்தது அந்த பாடல். அழைப்பை ஏற்க மனமே இல்லை அவனுக்கு. பாடலின் தாக்கமா? இல்லை அன்றைய நாளின் தாக்கமா? இல்லை அவளின் பார்வையின் வீரியத்தின் தாக்கமா? ஏதோ ஒன்று அந்த நிமிசம் அந்த கொடூர கனவிலிருந்து அவனை மீட்டிருந்தது.

மனம் முழுவதும் அந்த மாயக்காரியின் நினைவுகள் தாக்கியது. இன்றும் அந்த காந்த கண்களின் வீச்சு இவனுள் ஏதோ ஓர் மின்சாரத்தை பாய்ச்சியது. அந்த பார்வையின் வீரியம் தன்னை முழுவதுமாக அடித்து வீழ்த்திய அன்று தான் இந்த பாடலை ரிங்க் டோனாக  வைத்தான்.

அலைபேசி சத்தமிடும் ஒவ்வொரு முறையும் அவளின் காந்த கண்கள் இவனின் மனக்கண்ணில் தோன்றி மறையும். அந்த பார்வை இவனை வெட்கம் கொள்ள வைத்தது.அந்த பார்வை இவனை ஓர் ஆண் மகனென்று உணர வைத்தது.

ஆணின் பார்வையில் தான் ஒரு பெண் தன்னை முழுவதுமாக உணர்வாளாம். ஆனால் இவன் விசயத்தில் அப்படியே மாறி அமைந்தது. ஆண் என்ற கர்வத்தை அவள் தான் இவனுக்கு கொடுத்தாள்.

கண்களில் அவளின் முகம் பசை போல் ஒட்டிக் கொண்டது. அவளின் பொசக்கெட்ட பொசசிவ் பார்வை கூட மனதினுள் மென் சாராலாய் வீசியது…

“பார்வையை பாரு ராட்சசி…” என்று தலையை அழுத்தி கோதி விடுவித்துக் கொண்டவன் அலைபேசியைக் கையில் எடுத்தான். ஜானகி தான் அழைத்திருந்தார். அவருக்கு திரும்ப அழைக்க அவன் அறைக்கு வெளியில் கேட்டது தாயின் அலைபேசியின் சத்தம்.

மெல்லிய புன்னகையுடன் அழைப்பை துண்டித்தவன் “வாங்க ம்மா…” என்றழைத்தான் வெளியில் நிற்பது அன்னை தான் என்று நினைத்து.

கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறே அறைக் கதவை பார்த்தவன், அன்னை வருவார் என்று  நினைத்திருக்க உள்ளே  நுழைந்தவளை கண்டதும் நிமிடம் ஆடித்தான் போனான் வாசுதேவன்.

கண்கள் இரண்டும் கீழே விழுந்து விடும் அளவிற்கு விரிய “ஏய்… நீ நீ எங்க இங்க…” எனக் கத்தியபடி  அவசரமாக படுக்கையிலிருந்த பெட்சீட்டை எடுத்து  தன் வெற்று உடலை மூடிக் கொண்டான்.

சாட்ஸ் மட்டுமே அணிந்து இருந்ததால் இத்தனை பதட்டம். ஆடவனின் கத்தலில் அவசரமாக கீழிருந்து மேலே வந்தார் ஜானகி.

“அச்சோ குட்டி, இங்க வந்துட்டியா? இது வாசு ரூம்மா. நான்  பக்கத்து ரூமை சொன்னேன்…” என்றதும் குனிந்த தலை நிமராமல்

“சாரி அத்தை, எனக்கு தெரியல, ஸ்டடி ரூம்ன்னு நினைச்சுட்டு உள்ள வந்துட்டேன்..” என மெல்லிய குரலில் கூறினாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்லடா குட்டி. அந்த ரூம் பக்கத்துல இருக்கு…” என்றவர் வாசுவிடம் திரும்பி

“குட்டியும் கவர்மென்ட் எக்சாமுக்கு படிக்கிறாளாம் தம்பி,  உன்னோட நோட்ஸ் ஏதாவது இருந்தா வேணும்னு கேட்டா. அதான் உனக்கு கூப்பிட்டேன். நீ எடுக்கலன்னதும் உன்னோட ஸ்டடி ரூமுக்கு அனுப்பி வைச்சேன்…” என்றதும் வாசுவின் கண்கள் பெண்ணின் கையிலிருந்த  தாயின் அலைபேசியைப் பார்த்தது.

அதனை புரிந்து கொண்ட ஜானகியும் “அதுவா ப்பா, எனக்கு அடுப்புல வேலை இருந்தது… ‘வாசு கூப்டா  பேசிடு_ன்னு’ நான் தான் என் போனை குடுத்தேன்… ” என்றதும்  பெண்ணைப்  பார்த்தான்.

அவளோ குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்.  “சரிப்பா நீ பார்த்துக்க. நான் உங்களுக்கு  டீ போட்டுட்டு இருந்தேன். உன் வாய்ஸ் கேட்டதும் அப்படியே விட்டுட்டு வந்துட்டேன்…” என்றவர் முன்னால் நடக்க, வந்தவளோ ஆடவனின் முறைப்பை கண்டுகொள்ளாமல் ஜானகியின் பின்னாலேயே சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!