Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மெய்யெனக் கொள்வாய்

மெய்யெனக் கொள்வாய் – 11.2

அத்தியாயம் – 11 (2)

சந்திரன் பணிக்குத் திரும்பும் முன் மீண்டும் ஊருக்குச் சென்றாலும், காமாட்சியிடம் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கேட்பதற்கு பதில் என்பதோடு நிறுத்திக் கொண்டான். மற்றபடி எப்போதும் போல தங்கள் கடன் கணக்கு வழக்குகள், வாடகை வசூல் விவரங்கள் என நேரம் செலவழித்தான். அநேகமாக கடன் எல்லாம் முடியும் நிலையில் இருக்க, இந்த முறை சேமிப்பாக எதில் முதலீடு செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

சந்திரன் மற்றும் அவன் அப்பா இருவரும் சேமிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, அங்கே வந்து அமர்ந்த காமாட்சி “நம்ம ஊரிலே நிலமோ, வீடோ சரவணன் பேரில் வாங்கிப் போடுங்க. அவனுக்கும் ஒரு சொத்துன்னு ஆகும்லே” என்றார்.

சந்திரன் தந்தை “சரவணன் அவன் சம்பாதிச்சு வாங்கிக்கட்டும். இவன் பணத்தில் அவன் பேர்ல எதுக்கு சொத்து வாங்கணும்” எனக் கேட்டார்.



Advertisement

“இது என்ன வம்பா இருக்கு? சந்திரனா நிதம் வந்து பார்க்கப் போறான்ன்னு தானே இந்த வீடு, நிலம், கடை எல்லாம் நம்ம பேரில்  வாங்கிப் போட்டான். சின்னவன் இத்தனை நாள் மைனர். இனிமேல் அவன் பேரில் இருந்தால், நாளப் பின்ன அவனுக்குக் கல்யாணம் பேச தோதா இருக்கும்ல” என காமாட்சிக் கூற, சந்திரன் திடுக்கிட்டுப் பார்த்தான்.

சந்திரனின் தந்தையோ அதற்கு மேல் அதிர்ந்து விட்டார்.

“ஏய், காமாட்சி அறிவோட தான் பேசறியா? சந்திரன் மூத்த பிள்ளையாப் பிறந்து எல்லாரையும் கரையேத்தி, தம்பியப் படிக்க வச்சான். நாமளும் யார் கிட்டேயும் நிக்கக் கூடாதுன்னு மாசம் வருமானம் வர வழி செஞ்சுருக்கான். இனிமே அவன் குடும்பத்தை அவன் பார்க்கட்டும். சந்திரா நீ என்ன செய்யணும்னு நினைக்கறியோ  அதை உன் பொண்டாட்டி பேர்லே செய்” என்றார்.

Advertisement

சந்திரனுக்கு தந்தை சொல்லும் முன்பே மெலிதாக அந்த எண்ணம் இருந்தது தான். மனைவி பெயரில் தனியாக என்று கூட நினைக்கவில்லை. அப்பா, சத்யா இருவர் பெயரிலும் சேர்த்து வாங்கிப் போட்டால் நல்லது தானே என்று தான் சிந்தித்தான். ஆனால் காமாட்சி தம்பியின் பெயரில் வாங்க வேண்டும் என்றதும் வெறுத்துப் போய் விட்டது.

Advertisement

காமாட்சி உடனே “அவ பேரிலே எதுக்கு சொத்து வாங்கணும். இப்போ வாங்கப் போற சொத்துக்கு சந்திரன் கொடுக்கும் பணம் மட்டும் போடப் போறது இல்லை. நம்ம பேரில் இருக்கிற சொத்து வருமானமும் சேர்த்துத் தான். அப்போ அதில் சரவணனுக்கும் தானே பங்கு உண்டு. அதோட அண்ணன்காரன் சொத்தும், சுகமுமா இருந்து, இவன் சாதாரணமா இருந்தா தம்பியை ஊரில் யாரு மதிப்பா?” என்றார்.  

இன்றைக்கு இத்தனை வசதிக்கும் காரணம் சந்திரனின் சம்பாத்தியம்தான். அவன் அனுப்பும் பணத்தில் காமாட்சி மிச்சம் பிடித்து சேர்த்தார் தான். ஆனால் அந்தப் பணத்தை சரியான வகையில் தோப்பு, கடைகள் என்று வாங்கிப் போட்டது சந்திரன் தான். முதல் முறை போட்ட முதலீடில் வரும் லாபத்தில் இருந்து அடுத்ததற்கு முதலாகச் சேர்த்தான்.

இதற்காக அவன் அதிக நேரம் வேலைப் பார்த்துத் தனியாகப் பணம் எடுத்து வருவான். காமாட்சிக்கு சந்திரன் அனுப்பும் பணம் தெரியும் என்றாலும், அதில் அவனின் உழைப்பின் அளவு, கடினம் எல்லாம் தெரியாது.

Advertisement

தன் தம்பிக்குச் செய்யக் கூடாது என்றில்லை. தந்தைக்குப் பதில் தம்பியைச் சேர்த்துக் கூட வாங்கலாம் என்ற யோசனை சந்திரனுக்கும் வந்தது. ஆனால் காமாட்சி பேசிய முறையில் நாம் ஏன் செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது.

அன்றொரு நாள் சத்யா சொன்னது போல தன் அன்னையாலே மற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து விடுவோமோ என்ற பயம் வந்தது.

காமாட்சியிடம் சந்திரனின் தந்தை இன்னமும் பேசிக் கொண்டிருக்க, காமாட்சியோ சரவணன் பெயரிலும் சொத்து வாங்கவேண்டும் என்பதில் நிலையாக நின்றார்.

சற்று நேரம் பொறுமையாக இருந்த சந்திரன் “அப்பா, நான் எடுத்து வந்த பணத்தோட கூட கொஞ்சம் லோன் போட்டுக்கறேன். அங்கே சென்னையில் ஏதும் வீடோ, வேறே என்னவோ பார்த்துக்கறேன். இங்கே இந்த வருஷ லாபத்தோட நீங்களும் தம்பி பேரில் பாங்க்லே கடன் வாங்கி கடையோ, நிலமோ அவன் விருப்பப்படி வாங்கிடுங்க” என்றான்.

அதில் சந்திரனின் தந்தையே திடுக்கிட்டுப் பார்க்க, காமாட்சி கேட்கவே வேண்டாம்.

“இது என்ன சொத்துப் பிரிக்கிற மாதிரிலே இருக்கு. எல்லாம் உன் பொண்டாட்டிக் கொடுத்த யோசனையா? மெட்ராஸ்லே வீடு வாங்கிட்டா, இங்ஙன வரவே வேண்டாம்னு முடிவு ஆகிடுச்சா? இது எல்லாம் நல்ல குடும்பத்துப் பொம்பளை செய்யற வேலையா?”“ என சத்தமாகப் பேச, அக்கம் பக்கம் மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

சந்திரன் “அம்மா, எதுக்கு இப்படிக் கத்தறீங்க? இங்கேயே ரெண்டு சொத்து அதும் தனித்தனியா வாங்கினா நம்ம குடும்பத்துக்குள்ளே பிரச்சினைனு வெளியாட்களுக்குத் தோணும். இந்த நேரம் வரைக்கும் என் பொண்டாட்டிக்கு இது எல்லாம் தெரியாது. இப்படி ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினா, நம்ம ஊர்க்காரங்களே நீங்க பேசினதை எல்லாம் சொல்லிக் கொடுத்துருவாங்க. அப்புறம் மறுபடி பஞ்சாயத்து தான் நடக்கும். இது எல்லாம் தேவையா?” என்றான்.

காமாட்சி “மொத்தமா தம்பி பேரில் வாங்கிட்டா, யார் பேசுவான்னு பார்க்கலாம்” எனவும்,

“இனிமேல் அது சரியா வராதுமா. என் கல்யாணம் நடக்கும்போது சத்யா வீட்டில் என் பேர்ல என்ன சொத்து இருக்குன்னு எல்லாம் விசாரிச்ச மாதிரி எனக்குத் தெரியலை. உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, இந்த கல்யாணமே நடந்துருக்காது. ஆனால் சரவணனுக்கு அப்படி பேச்சு வரும்னு நீங்க சொல்லும்போது, நாளைக்கு என் மாமனார் வீட்டில் நானும் மதிப்பா இருக்கணும்னா, தனியா சொத்து வாங்கறது தான் சரி வரும்.“ என்றான் சந்திரன்.

இதை காமாட்சி எதிர்பார்க்கவில்லை. காமாட்சிக்கு சந்திரன் மீது பாசம் உண்டு தான். இன்றைக்கு சொந்தங்களுக்கு நடுவில் காமாட்சி என்றால் சற்று பயம் வருவதற்கு காரணம் சந்திரன். அவன் அன்னை மீது வைத்துள்ள பாசமும், அவனின் மிலிட்டரி மிடுக்கும் எதிரில் உள்ளவர்களை கொஞ்சம் பயம் கொள்ள வைக்கும்.

சந்திரன் மட்டுமே அவரின் பலம். அவனைக் கை நழுவ விட்டு விடக் கூடாது என்ற தன்னலம் காமாட்சிக்கு அதிகம். அதற்காகவே அவன் வந்து செல்லும் நாட்களில் சந்திரன் அந்த வீட்டிற்கு முக்கியானமாவன் என காண்பித்துக் கொள்வார். அது நடிப்பு என்றும் சொல்ல முடியாது. காமாட்சியின் இயல்பே அதுதான்.

ஆனால் சரவணன் அவரோடே இருப்பவன் மற்றும் கடைக்குட்டியும் கூட என்பதால் அவனின் மீதான பாசமும் அதிகமே. சந்திரன் அளவு கஷ்டம் உணர்ந்து வளர்ந்தவன் அல்ல சரவணன். கொஞ்சம் மேம்போக்கானவனே. சந்திரன் இராணுவத்தில் இருக்க, அடுத்த மகனாவது தங்களோடு உள்ளூரில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு சொந்தத்தில் பெண்ணைக் கூட தனக்குள் முடிவு செய்து விட்டார். அதனால் தான் சரவணன் பேரில் சொத்து, நிலம், கடை என்று காட்டி விட்டால் பிரச்சினை இருக்காது என்பதே காமாட்சியின் எண்ணம்.

சந்திரன் குடும்பமாக வாழ வேண்டும் தான். ஆனால் அவனோடு அவன் குடும்பமும் தனக்குக் கீழ் தான் இருக்க வேண்டும் என்ற அகங்காரமே காமாட்சிக்கு அதிகமிருந்தது.

மற்றவர்கள் நினைப்பது போல சத்யாவின் நடிப்பு பிடிக்கவில்லை என்பது மட்டும் காமாட்சியின் செயல்களுக்குக் காரணமல்ல. மற்ற விஷயங்களிலும் சத்யா கெட்டிக்காரி என காமாட்சிக்கு நன்றாகவே தெரியும். சந்திரன் சத்யாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால் குடும்பமே அவளின் கைக்குள்ளே போகும் வாய்ப்புகள் அதிகமே. அதைத் தடுக்கத் தான் அவர் எல்லா முட்டுக்கட்டையும் போடுகிறார்.

இப்போதோ முதலுக்கே மோசமாகி விடுமோ என்று யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் காலம்தான் கடந்து விட்டது.

சந்திரனால் தன் அன்னையின் எண்ணத்தை ஓரளவு யூகிக்க முடிந்தது. இதற்கு மேல் அவரிடம் பேசுவதிலோ, விளக்குவதிலோ எந்த பயனுமில்லை என்று உணர்ந்தான்.

மீண்டும் தன் தந்தையிடம் பேசியவன், குடும்பத்திற்கு என ஒதுக்கிய லாபத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பங்கை தம்பி பெயரில் செலுத்தினான். அடுத்த பங்கை தந்தையிடம் கொடுத்து என்ன செய்யலாம் என பார்க்கக் கூறினான்.

இந்த முறை தன்னுடைய பங்காக செலுத்தும் பணத்தை தன்னோடே வைத்துக் கொண்டான். எல்லாம் முடித்து இரண்டு நாளில் பணிக்கும் திரும்பி விட்டான். செல்லும் முன் சென்னை சென்று தன் மகளை கொஞ்சிவிட்டு, மனைவியோடும் நேரம் செலவளித்து விட்டேக் கிளம்பினான்.

-தொடரும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!