Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 14(b)

மைவிழி – 14(b)

அடுத்த நாள் சுமுகமாகவே வேதவியின் பிறந்தகம் செல்ல இருவரும் தயாராகி நின்றனர்.



Advertisement

காலையிலையே மகளுக்கு ஃபோனில் அழைத்து விட்டார் சரஸ்வதி, அங்கு வருகிறீர்களா எனக் கேட்டு.

இவளும் வருவதாக சொல்ல, மருமகனுக்கு என்ன உணவுவகைகள் பிடிக்கும் எனக் கேட்டு மகளை ஒரு வழியாக்கியிருந்தார் அவர்.

Advertisement

Advertisement

தன் வீட்டினரின் இவ் எதிர்பார்ப்பின் அளவைக் கண்டு கொண்டவனாகத் தானே நேற்றிரவு தன்னோடு அந்தளவு மல்லுக்கட்டினான் அவன். ஹ்ம்ம்..! கொஞ்சமும் புரியாமல் போனேனே!

என்னதான் வேதவிக்கு, நேற்று கணவன் தன்னைப் பேசியதில் சுணக்கம் இருப்பினும் தனக்காகத் தானே பேசினான் என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.

Advertisement

திருமணத்தின் போது எடுத்த அனார்கலி சல்வாரை உடுத்தியவள், வாசன் முதன் முதலில் வாங்கிக் கொடுத்திருந்த பரிசான ஜிமிக்கியையும் அணிந்து கொள்ள, அறையினுள் நுழைந்தான் அவன்.

விசிலடித்தப்படி வந்தவன் நேரே சென்று கட்டிலில் அமர்ந்து மனைவி ஆயத்தமாவதை சாவகாசமாய் பார்த்திருந்தான்(?).

இவள் கண்ணாடி வழியே பின்னிருப்பவனிடம் என்னவென்று புருவம் உயர்த்த,

“பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ”

எனப் பாடினான் வாசன்.

இருவரும் நன்றாக ஃபோன் பேச ஆரம்பித்ததிலிருந்தே அடிக்கடி பாடுவான் இவன். நல்ல குரல் அவனுக்கு. ‘சுமாராகப் பாடுவேன்’ என்று சொன்னானே, எத்தனை பொய்யென இவள் நினைத்ததுண்டு.. அவன் பாடுவதை கேட்கும் சமயங்களில் எல்லாம்.

அவன் பாடலில் கன்னங்கள் குறு குறுக்கச் செல்லமாக கணவனை முறைத்தாள் வேதவி.

அழகாய் சிரித்தவன், மனைவியின் மையிட்ட விழிகளில் மயங்கி,

“சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ”

அம் மைவிழி ஜாடைகள் அவள் அகத்தின் மொழிகளுக்கு நேச சாயங்கள் பூசின!

கண்டு கொண்டவன்.. கண்கள் மின்னப் புன்னகைக்க, வெட்கப் பூக்கள் பெண்ணிடத்தில்.

அடுத்த வரிகளைப் பாட வாயெடுத்தவனை,

“போதும் போதும்! விட்டா ஃபுல் பாட்டையும் பாடிடுவீங்க. போய் ரெடியாகற வழியப் பாருங்க! மிஸ்டர்.வாசன்!” என்றாள் கண்ணாடி வழியே பார்த்து.

“ஹ்ம்ம்ம்…”என்று ராகம் இழுத்தவன்,

“யாரோ ரெண்டு நாளா என் பாட்ட மிஸ் செய்த மாதிரி இருந்ததே..! அது யார்னு உங்களுக்கு தெரியுமா மிஸஸ்.வேதவி கீர்த்தி வாசன்?” என குறும்புச் சிரிப்புடன் மனைவியின் பின் வந்து நின்றான்.

“ஹ்க்கும்! ஏங்குறாங்க. சண்டைன்னா மட்டும் மியூட் ஆகிட வேண்டியது” என முறைப்பாய் முணுமுணுத்தவளின் வார்த்தைகளில் உண்மை விளங்கினாலும்,

கணவனை கண்ணாடியினூடே கடுப்பாய் நோக்கியவள்,

“அப்படியா?! அச்சோ..! அப்படியெல்லாம் யாரும் இங்க மிஸ் பண்ணதா தெரியலையே வாசன் ஸார்!”எனக் கேலி பேச,

“பொய்க்காரி”என அவளை தன்னைப் பார்க்கச் செய்தவன், அவள் வலது கண் புறம் ஈசியிருந்த மையை தன் சுண்டு விரலால் துடைத்து விட்டான்.

கணவனின் இந் நெருக்கத்தில் மூச்சடைத்துப் போனாள் வேதவி. படபடவென வர கைகளை அழுந்தப் பொத்திக் கொண்டாள்.

அவனோ,

“தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ்நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்” என மீதிப் பாடலைத் தொடர்ந்த படி தன் வேலையில் கவனமாயிருந்தான்.

அவள் உறைந்த நிலையைப் பொருட்படுத்தாது, அவளின் கன்னங்களைப் ஒற்றைக் கையால் பிடித்தவன் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்து,

“பேர்ஃபக்ட்!” எனத் திருப்திப்பட்டுக் கொண்டான்.

‘என்னடா செய்ற?’ அவஸ்தைத் அவளிடம்.

“ஏன் இந்த ஜிமிக்கி போட்டுருக்க வேதா? கோல்டா எதுவும் போட்டுக்கோயேன்” என ஜிமிக்கியை சுண்டி விட்டு இன்னும் அவள் அவஸ்தையைக் கூட்ட,

“வா..வாசு!” காற்றுத் தான் வந்தது.

“????”

“…..” அமைதியாய் விலகியவளின் செயலில் மனைவி முகம் ஆழ்ந்து நோக்கினான்.

அவள் திணறலைக் கண்டு புரியத் தொடங்கிய விடயத்தில் கண்கள் சுருங்கப் புன்னகைத்து..சில்லிட்டுப் போயிருந்த அவள் கரத்தோடு தன் கரத்தை இணைத்துக் கொண்டான் வாசன்.

“ரிலேக்ஸ் வேதாஜி!”

“ஹ்ம்ம்” என்றவள் இயல்பாகிய நொடிகளில் தண்ணீரைப் பருக வைத்தான்.

“இதுக்கே இப்படியா?!”என கோர்த்திருந்த கரங்களினுள் வியர்வை அரும்பியதை உணர்ந்து புன்னகைத்தான்.

முறைத்தாள் வேதவி.

“ஃபார்ம்க்கு வந்தாச்சு போல?” கேலியாய் கண் சிமிட்டியவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள்,

“போங்க பாஸ்! போய் ரெடியாகுங்க” என்றவாறு அவன் கைகளில் சிக்காமல் வெளியில் ஓடி விட்டாள்.

சிரித்தபடியே ஆயத்தமாகினான் வாசன்.

வெளியில் வந்த வேதவி, மாமியாரிடம் பிறந்தகம் செல்வது பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

“டிபன் முடிச்சிட்டே போங்களேன் மா!” என மருமகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மேகலை.

“காபி மட்டும் போதும்த்த!அவரும் போகும் போது ஷாப்பிங் போகனும்னாரு. அம்மா வீட்டையே டிபன் சாப்பிட்டுக்கறோம்!”என்றாள்.

“சரிமா, ஆனா போற வழில ரெண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டே போங்க”

சரியென கேட்டுக் கொண்டவள்,

“நானே காபி போட்டுக்கறேன் அத்த!”என அடுக்களை நுழைய,

“வேதவி!” வாசன் அறையில் இருந்தவாறே அழைத்தான், இவளை.

“அவன் கூப்பிடுறான்! நீ அங்க பாருமா. நான் காபி போடறேன்” என மேகலை சொல்லவும்,

சரியென தலையசைத்து தங்கள் அறை நுழைந்தவள், அங்கிருந்தவனைப் பாராமலே,

“அப்படியென்ன சத்தமா கூப்பிடறீங்க? எல்லாம் எடுத்து வெச்சுட்டுத் தானே போனேன். அத்த எதுவும் நினைச்சுக்க மாட்டாங்களா?!” எனப் பொரிய, கணவனின் அமைதியில் அவனை ஏறிட்டாள் வேதவி.

சின்னமன் நிற கால்சாராயும், அடர் நீலநிற லெனின் ஷர்ட்டும்,வலது கையில் வாட்சும் என அசத்தலாக நின்றிருந்தவனின் வசீகரித்தில் கண்களை விரித்தவள்,

“உங்களை பொண்ணுங்கக் கிட்டந்து காப்பாத்துறது தான் என் வேலையா இருக்கும் போலையே!” என நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.

இப்படியொரு காம்ப்ளிமெண்டை எதிர்பார்த்திராதவன்,

“டே, வேதா!” என்று சத்தமாக சிரித்து விட்டான்.

முகம் சுருக்கியவள்,

“ஹெண்ட்ஸமா இருக்கிறதுக்கும் ஒரு அளவில்லையா?” என முனக,

“அழகா பொறந்தது என் தப்பா..!? ஐயகோ..!” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா! நம்பிடறதா பாஸ்” என கிண்டல் செய்தாள் அவள்.

இவன் முறைக்கவும், கலகலவென சிரித்தவளை தன் அருகில் இழுத்து நிறுத்தியவன் இருவரையும் சுயமி எடுத்துக் கொண்டான்.

கணவனின் திடீர் இழுவையில் முகம் முழுவதும் தேங்கி விட்ட சிரிப்புடன், திகைப்புமாய் வேதவி அண்ணார்ந்து அவனைப் பார்த்து நிற்க, கண்ணோரம் சுருங்கப் புன்னகைத்தவாறு அவளைத் தானும் நோக்கியபடி வாசன். அழகாய் வந்திருந்தது புகைப்படம்.

ஒரு படத்தோடே மாட்டேன் என்றவளை விடாமல் நிற்க வைத்து நாலைந்து கிளிக்கிக் கொண்டான் இவன்.

‘போகலாம்’ என வேதவி கெஞ்சவுமே அவளை விட்டவன், மேகலையிடம் சொல்லிக் கொண்டே கிளம்ப எத்தணிக்க இருவருக்கும் திருஷ்டி எடுத்து விட்டே அனுப்பி வைத்தார் அவர்.

வீட்டிலிருந்து நேரே கோவிலுக்குச் சென்றவர்கள் தரிசித்து விட்டு அங்கிருந்து ஜவுளிக்கடைக்குச் சென்றனர். மனைவியின் வீட்டினர் ஒவ்வருவருக்கும் ஆடை எடுத்தான் வாசன். அவள் வேண்டாமென தடுத்தாலும் கேட்கவில்லை அவன்.

அதோடு போகும் வழியில் பழங்கள், சாப்பிடும் ஸ்னேக்ஸ் வகையும் வாங்கிக் கொள்ள,

“எதுக்குங்க இவ்ளோ?”என அவள் பதறியபடி கேட்டதற்கு,

“என்ன இவ்ளோ! இதுவே கம்மியோன்னு இருக்கு” என்றவனை முறைத்தாள் வேதவி.

“நம்ம கல்யாணம் பதினைஞ்சு நாளைக்குள்ள அவசர அவசரமா நடந்துடிச்சு வேதா. அன்னைக்கு உன்னை பார்க்க வரும்போது உனக்கு மட்டும் தான் கிப்ட்ஸ் வாங்கிட்டு வந்தேன். உன்னைப் பார்க்கணும்னு அவசரத்துலேயே உங்க வீட்டுக்கு வாங்க மறந்துட்டேன்.”

“அதுக்காக இவ்ளோவா.?புதுத் துணியெல்லாம் ஏதாவது ஃபெஸ்டிவல்ஸ்க்கு எடுக்கலாமேப்பா!”

“அதெல்லாம் இல்லடிம்மா. எதையும் முறையா செய்யணும்! இப்படி கொடுக்கறதே ஒரு ஹேப்பினஸ். என்ன கொடுக்கறோம்னு முக்கியம் இல்ல,யார் கொடுக்கறான்னு இருக்கு!”

“ஓஹோ அப்படி!” என ஜிமிக்கி ஆடக் கூறியவளை பைக் கண்ணாடி வழியே கண்டவன்,

“ஜிமிக்கிய மாத்தலையா நீ?” எனக் கேட்க,

“இதுக்கென்ன குறைச்சலாம்.!”

“இதுவும் நல்லாத்தான் இருக்கு! ஆனா கோல்ட்டா போட்டுக்க சொன்னேனே. நீ செஞ்ச சேட்டைல கேட்டதையே மறந்துட்டேன் பாரு”

“நான்..சேட்டை..செஞ்சேன்??” என முறைத்தவள்,

“உங்க சேட்டைக்குத் தான் அளவில்லாம போச்சு” நறுக்கென அவன் தொடையில் கிள்ளி வைத்தாள்.

“அடியே..!” என அலறியவன் தடுமாறிய பைக்கை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான்.

“ஸாரி,ஸாரி வாசன்!” என்றவளின் மன்னிப்பில் கடிய வந்தவன் பின் அதைக் கைவிட்டான்.

கணவன் அமைதியில் மீண்டும் மன்னிப்புக் கேட்க, இருக்கும் நல்ல மனநிலையைக் கெடுக்க வேண்டாமென இயல்பாகி விட்டான் வாசன்.

வீடும் வரும் வரை இவள் தான் பேசிக் கொண்டு வந்தாள். கணவன் இடைக்கிடை ‘ம்ம்’ போட்டுக் கொண்டான்.

வேதவியின் வீடு வர, இறங்கிக் கொண்டவளிடம் ஹேண்டில் பாரில் இருந்த பைகளை கழட்டிக் கொடுத்த வாசன், தானும் இறங்கி கொண்டான்.

இவர்களின் பைக் சத்தம் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்த சங்கவி,

“ம்மா! வேதா வந்துட்டாம்மா” என சரஸ்வதிக்கு குரல் கொடுத்தாள்.

இளைய மகளை என்னவோ சொல்லிப் புலம்பிக் கொண்டு வந்த சரஸ்வதி புது மண தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

“உட்காருங்க மாப்பிள்ளை. நீயும் உக்காரு வேதா!” என்றவர் வாசனைக் கண்டு வெட்கத்தில் ஓடி ஒளிந்த சின்ன மகள்களை அழைத்தார்.

அமைதியாய் அன்னையின் பக்கத்தில் வந்து நின்ற தங்கைகளைக் கண்டு வேதவிக்கு அப்படியொரு சிரிப்பு.

“ஏண்டி.. வந்தவங்களை வரவேற்காம இப்படியா ஓடி ஒழியறது? மாமா எதுவும் நினைச்சிக்கிட்டா?” என மகள்களைக் சின்னக் குரலில் கடிந்து கொண்டார் சரஸ்வதி.

அமர்ந்திருந்த இருவருக்குமே கேட்கத் தான் செய்தது. வேதா கணவனைப் பார்த்தவள் அவன் மூவரையும் சுவாரஷ்யப் புன்னகையோடு பார்த்திருக்கவும், முறுவளித்தாள்.

“அப்பா எங்கம்மா?”வேதவி தான் கேட்டாள்.

“முக்கியமான கேஸாம்னு காலைலயே கோர்ட் போயிட்டார் வேதா! லஞ்ச்கு வரேன்னு சொன்னாரு” என்றார் தயக்கமாய்.

இன்றென்று கனியனும் இல்லை. நேற்று அவன் மேலிடத்திலிருந்து அழைப்பு வரவும்,அதுநாள் வரையும் work from home-இல் இருந்தவன் இன்றதிகாலையே சென்னை பயணமாகி விட்டான்.

தான் வரும் சமயம் வீட்டு ஆண்கள் இல்லாததை வைத்து வாசன் எதுவும் நினைத்துக் கொள்வானோ எனத் தயக்கமாக இருந்தது சரவஸ்வதிக்கு.

“மாப்பிள்ளை நீங்க ஒன்னும்..”என சங்கடமாய் அவர் சொல்ல ஆரம்பிக்கவுமே,

“பரவால்ல த்தை! இப்போ வீக் டேய்ஸ் இல்ல, வேலை இருக்கத்தான் செய்யும். கனியன் சென்னை போறதா எனக்கு மெஸேஜ் பண்ணிருந்தான்” என்றவன்,

“அதான் இவங்க இருக்காங்களே த்தை. என்ன எங்கூட பேசுவீங்கல்ல?” மாமியாரிடம் சொல்லி மச்சினிகளிடம் கேட்க, திருதிருவென முழித்தார்கள், அவர்கள்.

இவன் புன்னகைக்க,

“உக்காருங்க டி!” என தங்கைகளை அமர வைத்தாள் வேதா.

“நீங்க பேசிட்டிருங்க.நான் இதோ வரேன்” என சொல்லி சரஸ்வதி நகரப் போக, காலை உணவை மறுத்து ஜுஸ் போதுமென்றான் வாசன்.

இளைய மச்சினியான சங்கவியிடம்,

“நீ ஏன் ஸ்கூல் போகல?”என கேட்டடான்.

“நீங்களும் வேதாவும்.. ஸ்ஸ்ஸ்!! வேதாக்காவும் வரீங்கன்னு தான்!”என்றவளின் தடுமாற்றத்தில் இவன் புன்னகைக்க, வேதவி தலையில் அடித்துக் கொண்டாள்.

அசடு வழிந்த சங்கவி,

“அம்மா தான் மாமாக்கு முன்னாடி உன்ன அக்கா சொல்லி கூப்பிட சொல்லிச்சு! நைட்டெல்லாம் அக்கா சொல்லு, அக்கா சொல்லுன்னு ஒரே ட்ரைனிங் இந்த சரஸு!” என்றாள் முகம் சுருங்க. 

பெரிதாய் நகைத்தான் வாசன்.

“உன் அக்காவ எப்டி கூப்பிடணும்னு தோணுதோ அப்டியே கூப்பிடு! நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றவன்,

“உன் ஸ்டேடீஸ் எல்லாம் எப்டி போகுது?” என சைந்தவியிடம் விசாரித்தான்.

அவள் பதில் சொல்ல, இயல்பாக உரையாடினான், அவர்களிடம். மூவரையும் சிரிப்புடன் பார்த்திருந்தாள் வேதவி.

இடையில் சங்கரியோடு சுஜியும், ரதியும் இவர்களை பார்க்க வந்தனர். சங்கரி இரவுணவிற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்தார். 

நாதன் மதியம் வந்தவர் மருமகனோடு பேசினார். வாசன் மாப்பிள்ளை முறுக்கெல்லாம் காண்பிக்கவில்லை. தானும் வக்கீலுக்கு படிப்பதாக சொல்லி அவரிடமே டிப்ஸ் எல்லாம் கேட்டுக் கொண்டான்.

“AIBE எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா போதும் மாப்ள. அப்பறம் இன்டென்ட்கு எண்ட்ரோல்மென்ட் பண்ணிட்டு law பிராக்ட்டிஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்!” சத்யன் சொல்ல,

“ஓகே மாமா! என் பிரென்ட் சிவா கூட உங்க ஜுனியர் தான்”என்றான்.

“அப்டியா மாப்ள?!”எனக் கேட்டுக் கொள்ள மட்டும் செய்தவர், மருமகனை அவர் கீழ் வேலை பார்க்க அழைக்கவில்லை.

கௌவரக் குறைச்சல் என்று நினைத்து விட்டால் என. ஆனால் இவனே அவருடன் சேர்ந்து வேலை செய்வதாக சொல்ல, நாதனுக்கு மன நிறைவு.

இவர் ஒரு பக்கமெனின், தாங்கள் வாங்கிக் கொடுத்த சட்டை, கைக்கடிகாரம் என வாசன் அணிந்து வந்ததில் அத்தனை சந்தோஷம் சரஸ்வதிக்கு.

மகள் அடுக்களை நுழைந்த சமயம் அதைச் சொல்லி மகிழ்ந்தார். வேதவியுமே அப்போது தான் கணவனைக் கவனிக்க,அவள் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் வலது கரத்தில் ரவி திருமணத்தின் போது பரிசளித்த கைக்கடிகாரம்.

தன் வீட்டு ஆட்களுடன் பொருந்திச் செல்பவனை ஆசையும், நேசமுமாய்ப் பார்த்தாள் பெண்.

பின்,மதிய உணவை முடித்தவர்கள் மாலை ஓய்வெடுத்து விட்டு இரவு விருந்திற்கு, சங்கரி வீட்டுக்குச் சென்றனர்.

அவ் வீட்டு ஆண்கள் வாசனுடன் பேச சுஜியும், ரதியும் வேதவியை பிடித்துக் கொண்டனர்.

“அங்க, உன் புகுந்த வீட்ல எதுவும் ப்ராப்ளமா வேதா?” எனக் கேட்டனர் எடுத்த உடனே.

“இ.. இல்லையே!”என்றாள் அவள்.

“பொய் சொல்லாதேடி. நாங்க உன் அண்ணியாக்கும்!” என்றவர்கள்,

“முந்தாநாள் ராத்திரி நம்ம மூனு பேர் இருக்கிற குரூப்ல எதுக்கு அப்டி ஒரு மெசேஜ் போட்ட.?அந்த வாணி எதுவும் பிரச்சனை பண்ணிச்சா ”என துருவித் துருவி விசாரிக்க, எவ்வளவோ மழுப்பி பார்த்தவள் இவர்கள், விடமாட்டார்கள் எனப் புரிய, மேலோட்டமாக விடயத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

தங்கள் பங்கிற்கு வாணியை காய்ச்சி எடுத்துவர்கள்,

“பார்த்தியா அந்த குடும்பத்து மருமகளான ஒடனே.. எங்ககிட்ட மறைக்கற!”என இவளையும் வைத்து செய்தனர்.

ஒரு வழியாக அவர்களிடமிருந்து நழுவி வந்த வேதவியைத் தனியே அழைத்தார் சங்கரி.

“என்ன பெரியம்மா?”என வந்தவளிடம்,

“இது என்னடி சுடியோட இருக்க? கல்யாணமானப் புதுப் பொண்ணு நீ! சேலை கட்டறதுக்கு என்ன? நான் பகலே உன்கிட்ட சொல்லத் தான் இருந்தேன். அங்குட்டு மாப்ள இருக்கவும் பேசல. உங்கம்மாக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்கத் தெரியல பாரு. இந்தா சேலையைக் கட்டு!” எனக் கடிந்தவர், புது புடவையொன்றைக் கொடுத்தார்.

“ப்ச், போ பெரியம்மா! எங்க மாமியாரே சுடிக்கு ஒன்னும் சொல்லல. நீ சேரிய நீட்டுற..! எனக்குக் கட்ட வேற தெரியாது” என சலித்தவளுக்கு வம்படியாக கட்டி விட்டார் சங்கரி.

முறைத்த வேதவியைக் கண்டு கொள்ளாது தலை நிறைய மல்லிகைப் பூவை வைக்க,

“ப்ச், இந்த ராத்திரிலே சேலை பூவுன்னு என்ன பெரியம்மா இது? அத்த வீட்டுக்கு போற வழில மல்லிகை வாசத்துக்கு பேய் தான் புடிக்கப் போகுது பாருங்க!” 

“சரியான கூறு கெட்டவடி நீயி! இதெல்லாம் ராத்திரி ஸ்பெஷல் வேதா! பேய் புடிக்காது,உன் புருஷன் தான் புடிச்சுக்குவார்!” என சிரித்தார்.

“பெரிம்மா..!!!!”

“போடி வேதா! நான்லாம் நாலு புள்ள பெத்தவ. எனக்குத் தெரியாது பாரு!” என்றவர் இவளை அழைத்து விட்டு வெளி நடப்பு செய்திட, கடுகடுத்தவாறே வெளியில் வந்தவளைக் கண்ட வாசனுக்கு மூச்சு நின்று போனது.

கண்கள் விரிய, இமைக்க மறந்து மனைவியைப் பார்த்திருந்தவனை பூலோகம் கொண்டு வந்ததென்னவோ ரவி தான்.

பின் அங்கும் நன்றாகவே நேரம் சென்றது.

இவர்களிடமும் சொல்லி விட்டு மீண்டும் வேதவியின் வீட்டிற்கு வந்தவர்கள்,அவளின் அம்மா, அப்பா, தங்கைகள் என ஒவ்வொருவரிடமும் சொல்லி விட்டே அங்கிருந்து விடை பெற்றனர்.

இருவரும் மகிழ்ச்சியும், மயக்கமுமாக தங்கள் வீட்டை அடையும் போது மணி பத்தாகிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!