Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 7(a)

மைவிழி – 7(a)

“சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது கண்ணீர் இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம்” –



Advertisement

என்ற பாடலை ஏந்திக் கொண்ட வந்த அழைப்பில் ‘வாசன்’ எனும் பெயரும் திரையில் ஒளிர வேதவியின் இதழ்களில் மென்னகை.

“கல்யாணப் பொண்ணு முகம் இப்படி டாலடிக்குதுன்னா, நம்ம அண்ணா தான் காரணமா இருப்பாரு” என்ற யமுனாவின் குரலில் தான் சுற்றுப் புரம் உரைத்தது, வேதவிக்கு.

Advertisement

Advertisement

அப்போது தான் தரம் 10த்திற்கு பாடத்தை எடுத்து விட்டு அடுத்த வேளை ஃப்ரீ பீரியடாக இருக்கவும், ஸ்டாப் ரூம் வந்திருந்தாள். இங்கு வந்து நகர்ந்த பதினைந்து நிமிடங்களிலும் எவரையும் நிமிர்ந்து பார்த்திருக்கவில்லை.

ரிசர்ச் வேலைகளில் மூழ்கிருந்தவளை அலைபேசி களைத்திருக்க, யமுனாவின் கேலியில் தோழியை முறைத்தாள் வேதவி. இதற்கிடையில் வந்த அழைப்பும் நின்றிருந்தது.

Advertisement

“எதுக்குடி முறைக்கற?”என கேட்ட யமுனாவும் அவளைப் போலவே முறைக்க,

“நம்ம அண்ணன் இல்ல, உனக்கு அண்ணன்னு சொல்லு”என புருவம் தூக்கினாள்.

“அது சரி” என நொடித்துக் கொண்ட யமுனா,

“அவரை பாத்து அண்ணானு கூப்பிட மனசு வரலன்னு சொன்ன என்னயவே அண்ணானு கூப்பிட வெச்சிட்டியேடி வேதா” என்றாள், கண்ணீர் வராத குறையாக.

பின்னே, வாசனை பார்த்த முதல் பார்வையிலே ‘க்ரெஷ்’ லிஸ்டில் சேர்த்திருந்தவளிடம் வந்து தனக்கு திருமணம் நிச்சயத்திருப்பதாக கூறிய வேதவி, கீர்த்தி வாசனின் புகைப்படத்தையும் காட்டிருக்க, யமுனாவின் குட்டி இதயம் அவளது இதய நொறுக்கியாலே (crush-தமிழாக்கம்) நொறுக்கப்பட்டிருந்தது.

“நானா போட்டோ காட்டினேன். வம்படியா கேட்டது நீதானடி” என அலட்டிக் கொள்ளாமல் சொன்ன வேதவி, பிறகு அழைப்பதாக வாசனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நிமிர, பாவமான முக பாவத்துடன் யமுனா.

கிளம்ப பார்த்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் இவள்.

“சிரிக்கற நீ!”என கடுகடுத்தவள்,

“எங்கயோ உனக்கு பெரிய மச்சம் இருக்குடி” என கண் சிமிட்டினாள்.

“ச்சீ பேஹ்!”என்றவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

“ஹூக்கும்,என் க்ரஷ்ஷூ” என யமுனா பெரு மூச்சு விட,

“யமுனா!” அதட்டினாள் வேதவி. பொண்ணுக்கு பொஸஸ்ஸிவ்நெஸ்ஸாம்!

“அம்மா தாயே சண்டைக்கு நிக்காத! உன் வாசனை நீயே வெச்சுக்கோ. எங்களுக்குனு ஒரு நேசன் வராமலா இருப்பான்” என்றவள், தலையை வெட்டிக் கொண்டு நகர்ந்து விட, புன்னகைத்துக் கொண்டாள் வேதவி.

முதலில் நிச்சயத்திருந்ததை மட்டுமே சொன்னவளிடம், யமுனா தான் மாப்பிள்ளை போட்டோவை பார்க்க கேட்டிருந்தாள். இவளும் காட்ட யமுனாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“இவர் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல மீட் பண்ணோமே, அவர் தானேடி?” என கேட்க,

“எப்போ, எந்த ஹாஸ்பிடல்?” என்ற வேதவிக்கு சத்தியமாய் நினைவிலில்லை.

யமுனா அன்று மருத்துவமனையில் நடந்ததை சொல்ல,

“ஓஹ்”என்றாள் இவள்.

“அடியே! சத்தியமா உனக்கு இவரை நியாபகம் இல்ல?” யமுனா நம்பாமல் கேட்க, உதட்டை பிதுக்கி தோளைக் குலுக்கிக் கொண்டாள் வேதவி.

“உனக்கு மாப்ளைய பிடிச்சிருக்கா?” என கேட்க,

“நீ எதுக்கு கேட்கற?” என்றாள், சந்தேகமாய் வேதா.

“உனக்கு பிடிக்கலைன்னா நான் ட்ரை பண்ணலாம்னு தான்!” என்று நகைச்சுவையாக  சொல்லிருக்க, முறைத்து வைத்திருந்தாள் இவள்.

அன்றைய நினைவில், நெற்றியில் தட்டிக் கொண்டாள் வேதவி.

முன்பு என்னவோ இந்த திருமணம் பிடிக்காது, கட்டாயப்படுத்துவதாக தோன்றிருக்க சம்மதமும் அரை(!) மனதாகத் தான் சொல்லிருந்தாள். கட்டாயத்திற்காக தலையாட்டும் ரகம் இல்லை இவள். வெளியே தன்னை கட்டுப்படுபவளாக காட்ட முயற்சித்திருக்கிறாள் என்பது தான் பொருந்தும்.

அன்று வாசனுடன் பேசிய பிறகு அப்படி இல்லையென தோன்றியது உண்மை. அவனைப் பிடித்திருந்தது; அதனால் சம்மதித்தாள்.

அன்றைக்கு பிறகான கடந்து சென்ற நாட்களில் இருவரும் நிறையவே பேசிக் கொண்டனர். வீடியோ காலில் முகம் பார்த்து பேசும் அளவிற்கு முன்னேறிந்தனர்.

தங்கள் விருப்பு வெறுப்புக்களை பகிர்ந்து கொண்டனர். இருவருக்குமே நிறைய வேற்றுமைகள் இருப்பினும் அதையும் தாண்டி கீர்த்தி வாசனை அதிகம் பிடித்துப் போனது; அதிகமாய் ஈர்த்தான் பெண்ணவளை.

திருமணம் நாளும் நெருங்க, இருவருக்கான நெருக்கங்களும் கூடின.

அதோ இதோ என்றதில், நாளை பூவைத்தல் வைபவம். வேதவியை அதற்காக தான் அழைத்திருந்தான் வாசன்.

பள்ளி முடிந்ததும் மீண்டும் அழைக்கலாம் என இவள் நினைத்திருக்க,அடுத்த நாள் வரையிலும் அது முடியாமல் போனது.

நாளைக்கான நிச்சய வேலைகள் இவளை பிடித்துக் கொண்டதுடன் வாசனும் சென்னை செல்வதாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தும் காரணமாகிப் போக, அன்றிரவு சற்று சோர்வாகவே உறங்கச் சென்றாள் வேதவி.

ஆனால்,அதிகாலையிலே மகளை எழுப்பி விட்டார் சரஸ்வதி.

காலை பத்து மணியை தாண்டி சுப நேரமாக இருக்க,மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒன்பதுக்கெல்லாம் கிளம்பி விட்டனர் எனும் செய்தி சரஸ்வதியை எட்டியவுடன் பரபரப்பாகி விட்டார் அவர்.

பதட்டப்பட வேண்டியவளோ புத்தகமும் கையுமாக, வருபவர்களுக்கு செய்து வைத்திருந்த இனிப்பு பண்டங்களை வாய்க்குள் தள்ளியபடி சாவகாசமாக உட்கார்ந்து இருக்க,இவருக்கு இன்னும் டென்ஷன் அதிகமாகியது.

“இந்த நேரமும் என்னத்த படிக்கிறியோ? போய் ரெடியாகற வழிய பாருடி வேதா!” எனும் படபடத்தலுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தார் அவர்.

இவள் அமைதியாக தன் பாட்டிலிருக்க,கடுப்பாகியவராய் அவள் உண்டு கொண்டிருந்த தட்டை பறித்து வைத்தவர்,

“வர வர ரொம்ப சாப்பிடற. கல்யாணத்தப்ப இன்னும் வெயிட் போட்ருவடி”என்றார், மகள் முறைப்பில்.

“பசிக்கிறதுன்னு சாப்பிட்டது ஒரு குத்தமாமா?”என புத்தகத்துடன் எழுந்தவள்,

“கல்யாணத்துக்கு அப்பறம் மட்டும் குண்டாக மாட்டேனா?” என கேட்டாள், சற்றே காரமாய்.

ஏற்கனவே இன்று நிச்சயம் என்பது வேறு ஒரு வித பய(?) உணர்வை கொடுத்திருக்க, வெளியில் தன்னை சாதாரணமாய் காட்டிக் கொண்டிருந்தாள் வேதவி.

தாய் வேறு இப்படி சொன்னதில் மனது கலங்கினாலும் எரிச்சல் முக மூடியை அணிந்து கொண்டாள்.

“அப்படி சொல்ல வரலடி வேதா! இந்த கொஞ்ச நாளா ரொம்பவே சாப்பிடுற. ஸ்வீட்ஸ் நல்லதுல்லடி” என்றார், என்னை புரிந்து கொள்ளேன் எனும் விதமாக.

“…”- வேதவி.

அவளுக்கே தெரியும் இந்த சில நாட்களாய் சாப்பிடுவதின் அளவு அதிகரித்து விட்டது என. கீர்த்தி வாசனுடன் திருமணம் பேசியதிலிருந்து தான் இந்த மாற்றம் பெண்ணுக்குள். சொல்லப் போனால், அன்று அவனுடன் பேசியதிலிருந்து. திருமணம் எனும் பதட்டமோ என்னவோ அவளுக்கே தெரியவில்லை, எதனால் என்று.

யாரிடம் கேட்பது எனத் தெரியாது சைந்தவி மருத்துவப் படிப்பு படிப்பதனால் அவளுக்கு அழைத்து கேட்க,

“ஹோர்மோன் சேஞ்சஸா இருக்கும்கா”என்றிருந்தாள் அவள்.

“வேதா, இன்னும் என்ன யோசனை?”சரஸ்வதி மகளை உலுக்க,

“சையா இன்னைக்கு மட்டும் வந்திருக்கலாமே மா!”என்றாள் வேதவி.

“அவளுக்கு படிப்பு கெட்டுடும்டி. கல்யாணத்துக்கு மொத நாள் வரேன்னு சொல்லிருக்கா”என்றார்.

வீட்டில் விஷேசம் என்பதால், எப்போதும் ஆட்களாக இருக்க நீட் தேர்வுக்கு படிக்க முடியவில்லை என போர்டிங் அனுப்பி வைத்திருந்தனர், சைந்தவியை.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் ரவி மனைவி சுஜித்ராவும், கிஷோரின் மனைவி ரதியும் உள்ளே நுழைந்தனர்.

“என்ன நீ இன்னும் ரெடியாகலையா வேதா?” என ஒன்று போல் கேட்டவர்கள்,

“என்ன சின்னத்தை நீங்களும் பார்த்துட்டு இருக்கீங்க?” என்றனர்.

“ஐயோ, ஆமால்ல! டைமாகுதே!”என்றவர்,

“நீங்க வாங்க. அவளைப் பாருங்க”என பரபரப்பாகி விட்டார்.

“வேதா, மச மசன்னு நிக்காம வாப்பா” என அழைத்து விட்டு,வேதவியின் அறைக்குள் அவளோடு நுழைந்தனர்.

“வேதா நீ போய் பாடி வாஷ் மட்டும் எடுத்துட்டு வா” என்றாள் சுஜித்ரா.

இவள் தலையசைத்து விட்டு குளியலறை செல்ல, இருவரும் அவளுக்கான உடைகளை ஒழுங்கு படுத்த தொடங்கினர்.

வேதவி குளித்து விட்டு வந்தவுடன் ரதி புடவை உடுத்த உதவி செய்தாள்.

சுஜித்ரா நிற்பதை பார்த்து,

“சுஜி அண்ணி, உங்களுக்கு சேலை கட்ட தெரியாதா?” எனக் கேட்டாள் வேதவி. 

அவள் உதட்டை பிதுக்கவும்,

“அதெல்லாம் உங்கண்ணா தான் ஹெல்ப்பு சித்ராக்காக்கு” என கிண்டல் செய்தாள் ரதி.

சுஜித்ரா எழும் வெட்கத்தை மறைத்தவளாக,

“என் கொழுந்தன் அங்க காலு புடிச்சி விடற கதை தெரியுமா உனக்கு வேதா? உன் சின்ன அண்ணன் பாவம் போ” என ரதியை வாரினாள்.

மாறி மாறி இருவரும் வேதவியை வைத்துக் கொண்டு ‘திருமணம் ரகசியங்கள்’ பேச அவளுக்கோ ‘அச்சோ’ என்றிருந்தது. நெளிந்தாள் பெண்.

“என்ன ரதி..? நம்ம பேசுனதுக்கே இந்த நெளி நெளியறா இவ. வாசன் பாடு திண்டாட்டம் போலயே” என சுஜி சொல்ல,

“ண்ணி!” என அதட்டலாய் வெளிவர வேண்டியவளின் குரல் சிணுங்களாய் வெளிப்பட்டது.

சிரித்த ரதி ஃப்ளீட்ஸ் எடுத்து சொருகி விட முனைய,

“அண்ணி கூசுதண்ணி” என கை பிடித்து தடுத்தாள் வேதவி.

“ஆஹா! எங்க தம்பி நிலமை அப்போ பாவம்னு சொல்லு” என அதற்கும் கிண்டல் செய்து அவளை ஒரு வழியாக்கினர் பெண்கள் இருவரும்.

வேதவிக்கு வெட்கத்தில் கன்னங்கள் குறுகுறுத்தது.

ஒரு வழியாய் புடவை கட்டி முடிய, அக்காடவென உட்கார்ந்தவள் படிப்பதற்கு புத்தகத்தை கையில் எடுக்கவும்,

“ஐயையே! சித்ராக்கா இங்க பாருங்களேன் இவளை. ஃபர்ஸ்ட் நைட்லயும் போய் படிப்பா போலவே! கீர்த்தி வாசன் தம்பி வசமா சிக்கிட்டாரு! கடவுளே அவரைக் காப்பாத்தி விடு!” என்றாள் ரதி.

சுஜித்ரா பெரிதாய் நகைக்க, முறைப்பது போல் பாவனை செய்திருந்த வேதவியின் கன்னங்களில் ஓய்வெடுக்க சென்ற வெட்கமும் வந்தொட்டிக் கொண்டதுடன், கீர்த்தி வாசனும் அழைப்பில் வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!