… 12. நட்பின் சுவடுகள்…
வரலாறு. யாழினி பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அவள் மருத்துவர், பொறியாளர் என தொழில்முறை படிப்பிற்கு விருப்பம் தெரிவிப்பாள் என சத்யவர்தன் நினைத்திருந்தார். ஆனால் அவளோ மேல்நிலைக்கல்வியில் வரலாறு பாடப்பிரிவினை எடுக்கப்போவதாக தெரிவித்த போது சத்யவர்தன் உட்பட மித்ராவும் அதிர்ந்துபோனார்கள்.
நேர்த்தியாக தன் எதிர்காலத்தை திட்டமிட்டிருப்பாள் என்று நினைத்தவருக்கு யாழினியின் முடிவு ஏமாற்றத்தை தந்தது. ஒரு மருத்துவராக அவள் அவளது பயணத்தை தொடர வேண்டும் என்று நினைத்தவருக்கு நிச்சயம் யாழினியின் முடிவு ஏமாற்றமாகத் தான் இருக்கும்.
அந்த அளவுக்கு யாழினி வரலாறு பாடத்தில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு காரணம் நூலகம் தான். ஆம், அவளது ஆறாம் வகுப்பில் ஆரம்பித்த அவளது நூலகப் பயணம் இன்று வரை அவளை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.
நூலகத்திற்கும், வரலாறு பாடத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று சத்யவர்தன் கேட்ட போது,
“எனது எண்ண ஓட்டங்கள் சற்று மாறுபட்டவை. சமுதாயத்தை நான் நோக்கும் விதமும், நீங்கள் அனைவரும் நோக்கும் விதமும் வெவ்வேறானது. நூலகத்திற்கும் வரலாறு பாடத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வரலாறு பாடத்தை ஆதி மனிதன் கற்காலம்…… என்று தொடங்குவதில் இருந்து இன்று வரை உள்ள நடப்பு நிகழ்வுகளை சிந்திக்கும் போது பிரபஞ்சம் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. பிரபஞ்சம் பற்றி அறிய புவியியல் தேடல் தொடங்னேன். சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற புரிதலுக்காக வேதியியலை தேடினேன்…. தேடல் என்னுள் இருந்துக்கொண்டிருக்கிறது……. இன்னும் பல!
ப்ளீஸ் அப்பா, வரலாறு என் தேடலின் தொடக்கம். அதை படிக்கும் போது ஏற்படும் ஒருவித மனஒலியை விவரிக்க இயலவில்லை…..” என்று யாழினி சொல்லிமுடிப்பதற்குள் சத்யவர்தன் புன்னகையை உதிர்த்திருந்தார்.
“வகுப்பில் ஒன்றாக இல்லாவிட்டாலும் எனக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து எனது பள்ளியில் நீ சேர்ந்திருக்கிறாய் என்றால் நீ என்னை உன் வாழ்வில் எவ்வளவு முக்கியமாக நினைத்துக்கொண்டிருக்கிறாய்..” என்று யாழினி சிந்தியாவிடம் நட்பின் சுவாரஸ்யங்ளை பேசிக்கொண்டிருந்தாள்.
திடீரென்று தன் புத்தகப்பையில் இருந்த பொத்தானுடன் கூடிய பின்பக்கம் சிறிய கேமரா வைத்திருந்த கைபேசியை எடுத்தபோது யாழினி சிறிது அதிர்ச்சி அடைந்திருந்தாள்.
“பள்ளிக்கு கைபேசி அனுமதி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் எதற்காக நீ எடுத்து வந்திருக்க?….. என்றாள் யாழினி.
“இது நேத்து வாங்கினது புதுசு… உன் கூட போட்டோ எடுக்கலாம்னு கொண்டு வந்தேன்” என்று சிந்தியா முடிப்பதற்குள்,
“அதற்கு நீ வீட்டிற்கு வந்திருக்கலாமே!…” என்று யாழினி கூறிய போது தடுமாற்றத்துடன் எனக்கு கணினி வகுப்பிற்கு நேரம் ஆகிவிட்டது என்று பள்ளி மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தாள் சிந்தியா.
அன்று மாலை பள்ளிமுடிந்து வீட்டிற்கு சென்றவளுக்கு சத்யவர்தன் இன்பஅதிர்ச்சி கொடுத்திருந்தார். அலுவலகத்திலிருந்து ரயில் பயணம் முடிந்து எட்டு மணியளவில் வீடு திரும்பும் சத்யவர்தன் இன்று யாழினி பள்ளி முடியும் முன்பே வீட்டினுள் இருந்தார்.
“அப்பாஆஆ”… என்று ஆசையுடன் சத்யவர்தன் நோக்கி வந்தவளிடம், சற்று இறுகிய முகத்துடன்…
“இனி சிந்தியாவுடன் பேசுவதை நிறுத்தி விடு யாழினி. உனக்கு அதுதான் நல்லது. ஒவ்வொரு முறையும் உன்னிடம் சொல்லிட்டு இருக்க முடியாது…” என்று கூறிவிட்டு சென்றிருந்தார்.
“என்ன நடக்கின்றது. சிந்தியா மேல ஏன் அப்பா இப்படி சொல்றாரு…” என்று சிந்தித்துக்கொண்டே பன்னிரெண்டாம் வகுப்பின் காலாண்டுத் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தாள் யாழினி. காலாண்டுத்தேர்வும் கடந்தாகிவிட்டது. காலாண்டுத்தேர்வின் விடுமுறையை நூலகத்தில் புத்தகங்களுடன் புரட்டிக்கொண்டிருந்தாள் யாழினி.
அப்போது தான் யாழினிக்கு சிந்தியாவின் பிறந்தநாள் என்று நினைவுக்கு வந்தது. நூலகத்திலிருந்து வெளியே வந்தவள் நூலகம் இருந்த வீதியின் அந்தத்தில் இருந்த பரிசுப்பொருள் கடைக்கு வந்தவள் நட்பின் இலக்கணத்திற்கு அடையாளமாக ஒரு பரிசையும், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தொடர்பான நுழைவுத்தேர்வு புத்தகங்களையும், சிந்தியாவுக்கு பிடித்தவாறு பேனா, பொம்மை பென்சில், மிக்கி மவுஸ் ரப்பர் என்று மொத்தம் 18 பரிசுப்பொருள்களை வாங்கிவந்திருந்தாள்.
என் சிந்தனையுள் சிந்தியா…
என்ற கவிதையுடன் 18 வயது பூர்த்தியடைந்ததற்கான குறிப்பாக பரிசுப்பொருள்களை அடங்கிய தொகுப்பினை தயார்செய்திருந்தாள் யாழினி.
சிந்தியாவின் பிறந்தநாள் அன்று மாலை பரிசுடன் அவளது வீட்டை நோக்கி கிளம்பிக்கொண்டிருந்த யாழினிக்கு சிந்தியாவின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.
“சொல்லுங்க அம்மா!” என்ற யாழினியிடம், “சிந்தியாவை சீக்கிரம் வீட்டிற்கு வரச்சொல்” என்று சாந்தா மறுமுனையில் கூறிக்கொண்டிருந்தார்.
யாழினி சற்று குழப்பத்துடன் “சரிங்க அம்மா” என்று கூறி அழைப்பை துண்டித்திருந்தாள்.
இப்போது சிந்தியா வீட்டிற்கு சென்றால் ஏதேனும் பிரச்சனைகள் எழக்கூடும் என்ற குழப்பத்துடன் தனது வீட்டின் படிகளில் இருந்து சிந்தியா பற்றிய சிந்தனையுடனே இறங்கிக் கொண்டிருந்தாள்.
ஆம், சிந்தியா யாழினியின் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். சாந்தா அம்மா போன் செய்தது பற்றி யாழினி எதையும் சிந்தியாவிடம் காட்டிக்கொள்ளவில்லை என்பதை சிந்தியா புரிந்துக்கொண்டாள். எதுவும் அறியாதவளாய் முகபாவனை செய்துக்கொண்டு “எடுத்துக்கோ யாழினி” என்று தனது கையில் இருந்த “ஸ்வீட் மில்கி சாக்கி” என்று எழுதப்பட்டிருந்த இளஞ்சிவப்பு, வெண்மை கலந்து கவரிடப்பட்டிருந்த விலைமதிப்புடைய சாக்லேட்டை யாழினியின் கையில் திணித்துக்கொண்டிருந்தாள் சிந்தியா.
“பை யாழினி, கோவிலுக்கு போக வேண்டும்… நாளைக்கு ஸ்கூல்ல பாப்போம்..” என்று நிற்காமல் பேசியாவாறே தன் மிதிவண்டியில் புறப்பட்டிருந்தாள் சிந்தியா. சிந்தியாவின் அனைத்து செயல்களும் யாழினிக்குள் சிறிது அச்சமுடன் சந்தேகத்தை வரவழைத்திருந்தாலும் நட்பு அதனை ஈடுசெய்துக்கொண்டிருந்தது.
பள்ளியில் காலாண்டுத்தேர்வின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. யாழினியின் மதிப்பெண் போல் அவளது ஆசிரியர்களுக்கும், அவளைச் சுற்றி இருந்த வகுப்பறை தோழிகளுக்கும் அவள்மீது இருந்த மதிப்பான எண்ணங்களும் குறைந்துவிட்டது.
யாழினியின் வீட்டிலோ அவளது மதிப்பெண் குறைவிற்கு காரணம் சிந்தியா தான் என்று சத்யவர்தன் நிரூபித்துவிட்டதாக பெருமிதம் கொண்டிருந்தார். யாழினிக்கோ மதிப்பெண் குறைவை விட சிந்தியா பற்றிய சிந்தனை தான் அதிகமாகிக் கொண்டிருந்தது.
சிந்தியாவுடன் இருந்த நட்பில் ஏற்பட்ட சிறு சிறு விரிசல்களே மதிப்பெண் குறைவிற்கு காரணம் என்று அலாதி நம்பிக்கைக் கொண்டிருந்தாள் யாழினி. “நான் மதிப்பெண் பெறுவதை வைத்து நீங்கள் புகழ் அடையலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சத்யவர்தனிடம் யாழினி கேட்பாள் என்பதை சற்றும் எதிர்பார்க்காத மித்ரா, யாழினியின் கன்னத்தில் ஒரு அறையுடன் “ஒழுங்கா படி” என்றுக் கூறி சத்யவர்தனுக்கு ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தார்.
அம்மா அடித்தார் என்பதைக் கூட பொருட்படுத்தாமல் சிந்தியாவை இன்று பள்ளியில் பார்க்க முடியவில்லை என்பதை மட்டும் சிந்தித்துக் கொண்டு தன் வீட்டின் மாடிப்படிகளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தாள் யாழினி. இப்போது தான் (முதல் அத்தியாயத்தில்) மழைத்துளிகளின் இடையில் யாழினியை இனியன் சந்தித்த தருணமும் நிகழ்ந்திருந்தது.
(விழிகளுள் விழுந்தவளாக மழைத்துளிகள் இடையே யாழினி இசைந்திருந்தாள் மண்வாசணையாய் இனியன் வாழ்வில்)
– இசைக்கும்